அருவிக்கரைக் கோயில்
1 - அன்று…
அரண்மனையெங்கும் விளக்குகள் மின்ன, நிலமகள் அணிந்திருந்த தங்க நெற்றிப்பட்டம் போல் ஒளிர்ந்தது மதுரை மாநகரின் அரண்மனை.
"உனக்கு நான் சளைத்தவளா? நீ மண்ணில் மின்னினால் நான் வானில் மின்னுவேன்" என்று சவால்விட்டுத் தாரைகள் புடைசூழத் தங்கவொளி வீசியது முழுநிலா.
வைகைக்கரையெங்கும் ஜனத்திரள். குழந்தைகள், குடும்பத்தினர். காதலர்கள். முதியோர்கள். வயது வேறுபாடின்றி எல்லோரும் நிலவை ரசிக்க ஆற்றங்கரைக்கு வந்திருந்தார்கள்.
இருளைத் தோற்கடித்துக் கொண்டு மதுரை மாநகர் ஜகஜ்ஜோதியாகத் தெரிய, மக்கள் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சியின் ஒளி தெரிந்தது.
இருளில்லாத அந்த இரவின் இருள் முழுவதும் ஒரே ஒரு முகத்தில் குடியேறியிருந்தது.
ஆம், அரண்மனை மேலுப்பரிகையில் நடைபோட்டுக் கொண்டிருந்த பாண்டிய மன்னனின் முகத்திலும் மனத்திலும்தான் இருள் நிரம்பியிருந்தது.
நிம்மதியின்றி நடையிட்டுக் கொண்டிருந்த மன்னன் வேறு ஒருவர் அங்கு வேகவேகமாய் வரும் அரவம் கேட்டு நின்றான்.
"பாண்டியர் புகழ் வாழ்க! பாண்டிய மன்னர் அறமும் புகழும் ஓங்குக! வணக்கம் மன்னவா!" என்றவாறே அருகில் வந்து வணங்கி நின்றார் தலைமை அமைச்சர் ஸ்ரீவல்லபர்.
"வணக்கம். வாருங்கள் அமைச்சரே!" என்று வரவேற்ற பாண்டிய மன்னன் மீண்டும் நடையிடத் தொடங்கினான்.
அமைச்சர் பொறுமையாக அமைதியாக நின்றிருந்தார்.
சிறிதுநேரத்தில் "அமைச்சரே! ஒரு முக்கியக் காரணத்திற்காகத்தான் உம்மை அழைத்தேன்" என்றான் பாண்டியன்.
அமைச்சர் புன்சிரித்தார். "பௌர்ணமி இரவு. பாண்டிய மன்னர் தன் மனைவிகளோடு களிக்காமல், கலை நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டு, மேல் உப்பரிகையில் நிம்மதியின்றி நடந்துகொண்டு, தன் அமைச்சரையும் அழைக்கிறார் என்றால் விஷயம் முக்கியமானது என்றே கருதுகிறேன், அது என்னவென்று தெரியாதபோதும்" என்றார்.
பாண்டியனின் கண்கள் இந்தக் கேலியில் சிவந்தன. பிறகு மெதுவே அமைதியாயின.
"சிவபாத சித்தரை இன்று சென்று கண்டிருந்தேன். அவர் கூறிய விஷயங்கள் என்னைக் கலக்கிவிட்டன. அதனலேயே தெளிவின்றி வார்த்தைகளை உரைக்கிறேன். அமைச்சர் மன்னிக்க வேண்டும்" என்றான் பாண்டிய மன்னன்.
அமைச்சர் நடுநடுங்கிக் கைகூப்பினார். "மன்னவா! இளம் வயதில் தங்களை எடுத்து வளர்த்தவன் என்ற உரிமையைச் சில நேரம் என்னை அறியாது பாராட்டிவிடுகிறேன். மன்னர் அதற்காக என்மீது கோபப்படுதலும் தண்டித்தலும் எது செய்தாலும் நியாயமே. ஆயின் மன்னவரின் பொறுமையே என்னைக் காயப்படுத்திவிடுகிறது. 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்' என்ற பொய்யாமொழியின் உருவமே மன்னர்தாம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.
பாண்டிய மன்னனும் நெகிழ்ந்தான். இறுகியிருந்த கட்டுறுதியான அவன் தேகம் சற்றுத் தளர்ந்தது. "அமைச்சர் குற்றம் செய்திருந்தாலன்றோ தண்டிப்பதும் மன்னிப்பதும்? என் தந்தைக்குச் சமானர் – அறிவுரைப்பதற்கும் இடித்துரைப்பதற்கும் தங்களுக்குச் சகல உரிமையும் உள்ளது" என்றவன் "அமைச்சரே! இந்தப் பேச்சுகளெல்லாம் இருக்கட்டும். நான் உங்களை அழைத்த காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். நேரங்கடத்துவது நல்லதல்ல. தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்து அதிகரிக்கிறது" என்றான்.
"மன்னர் இவ்வளவு கவலைப்படுவதைக் கண்டால்… தேசத்திற்கு ஏதோ பெரிய ஆபத்து வரப் போவதாகச் சிவபாத சித்தர் கூறினார் என்று ஊகிக்கிறேன்…"
பாண்டியன் சிறிதுநேரம் மௌனமாகவிருந்தான். அமைச்சர் அவன் பேசுவதற்காகக் காத்திருந்தார்.
ஒரு பெருமூச்சு விட்டு, மன்னன் பேசத் தொடங்கினான்.
"அமைச்சரே! இந்த ஜடாவர்மப் பாண்டியன் மகுடம் தரிக்கையில் எத்தனைப் பிரச்சனைகள் இருந்தது என்பதைத் தாங்கள் நன்கறிவீர்கள். அவைகள் யாவும் ஈசனுடைய அருளாலும் சிவபாத சித்தரின் ஆசியாலும் தங்களைப் போன்ற பெரியோர்களின் வழிகாட்டுதலாலும் விலகிவிட்டன. அன்றிலிருந்து இன்றுவரை என் செங்கோல் வளையாதிருக்க வேண்டும், பாண்டிய தேசத்திற்கு நலமும் வளமும் மிக்கதான ஆட்சியை நல்க வேண்டும், சைவ நெறி சிறக்க ஆள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்…"
"இவையெல்லாம் நான் நன்கறிந்தவைதானே, அரசே! ஏன், பாண்டியநாட்டின் சிறு குழந்தையைக் கேட்டாலும் இந்த உண்மைகளை எடுத்தியம்புமே?" என்றார் ஸ்ரீவல்லபர் குழம்பியவராக.
"சில நாட்களில் புதிய ஆண்டு பிறக்கிறது. வருகின்ற சார்வரி ஆண்டு மிகப் பெரிய சோதனை ஒன்றைக் கூடவே கொண்டு வருகிறது என்றார் சித்தர் சுவாமிகள்…" என்று ஸ்ரீவல்லபர் கூறியதை கவனிக்காதவனாய் நிலவை வெறித்தவாறே உரைத்தான் ஜடாவர்மப் பாண்டியன்.
"என்ன சோதனையோ? படையெடுப்புகள் ஏதேனும்…" என்று இழுத்தார் அமைச்சர்.
"ஆம், படையெடுப்புதான். இந்த நானிலமே இதுவரை கண்டும் கேட்டுமிராத பயங்கரமான படையெடுப்பு!"
"என்ன சொல்கிறீர்கள் மன்னவா? வடநாடு ஏதேனும் தென்னகத்தை நோக்கிப் படையெடுத்து வரப் போகிறதா? அல்லது கிழக்கிலிருந்து தட்டைமூக்குச் சாதியர் போருக்கு வரப் போகிறார்களா?..."
ஜடாவர்மப் பாண்டியன் மென்மையாகச் சிரித்தான்.
"இவர்களுடைய படையெடுப்புகள் கண்ணுக்குத் தெரியுமே, அமைச்சர் பெருமானே! கண்களுக்குப் புலப்படாத ஒரு படையெடுப்பு நிகழப் போகிறது! இது பல்லாண்டுகளுக்கு நீடிக்கலாம் என்றும் அறிகிறேன்! மகாபாரதப் போரைவிடக் கொடுமையாகவும் வேகமாகவும் இந்தப் படையெடுப்பு அழிவினை ஏற்படுத்தலாம்!" மெலிதாக ஆரம்பித்த மன்னனின் குரல் ஆவேசத்தில் உயர்ந்துகொண்டே போனது.
"இச்சிறுமதியேனுக்குப் புரிய வேண்டி மன்னர் சற்று விளக்கமாகப் பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார் ஸ்ரீவல்லபர்.
"வருகிற ஆண்டில் ஒரு புதுவகை நோய்க்கிருமி இந்தப் பூமியைத் தாக்கவிருக்கிறதாம். அதன் தாக்கம் பாரதத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டாலும், முக்கியமாகப் பாண்டிய நாட்டில்தான் அதிகமாகக் காணப்படுமாம்!"
"என்ன சொல்கிறீர்கள் மன்னா? ஏன் நோய்த்தாக்கம் பாண்டிய நாட்டில் அதிகமாக இருக்க வேண்டும்?"
"அமைச்சர் பெருமானே! பாரதத்தின் மிக அதிகமான போக்குவரத்துடைய துறைமுகம் நம் கொற்கைத் துறைமுகம். மிக அதிகமாக வடநாடுகளிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் வணிகர்கள் புழங்கும் தலைநகர் நம் மதுரை. தினந்தோறும் சேர, சோழ, நடு நாடுகளிலிருந்தும், வட நாடுகளிலிருந்தும், ஏன் அயல் நாடுகளிலிருந்தும்கூட, அரசாங்கத் தூதர்களும், பக்தர்களும், உல்லாசப் பயணிகளும் நம் பாண்டிய நாட்டிற்கு வந்துகொண்டேயிருக்கிறார்கள்…"
"அப்படியானால் இந்த நோய், தொற்று வகையைச் சேர்ந்ததா? வெளிநாடுகளிலிருந்து இங்கே பரவப் போகிறதா?"
ஜடாவர்மப் பாண்டியன் பெருமூச்செறிந்தான்.
"கலங்காதீர்கள் மன்னவா! நம் மருத்துவக் குழுக்களைத் தயார்நிலையில் வைப்போம். ஆதுரசாலைகளில் எல்லாம் மருந்துகளைச் சேமித்து வைத்துக் கொள்வோம். எப்போதுமே ஆபத்துகளைக் கண்டு அஞ்சுவதைவிட, தைரியமாக எதிர்கொள்வதே நல்லது. சிவபாத சித்தருக்கு நன்றி! வரப்போகும் ஆபத்து முன்பே தெரிந்துவிட்டது. இனி நாம் தயாராக இருக்கவேண்டியதே அவசியம்" என்றார் அமைச்சர் ஆறுதலாக.
ஜடாவர்மனிடமிருந்து மற்றொரு பெருமூச்சே பிறந்தது. நிலவை வெறித்தவாறே யோசனையில் ஆழ்ந்திருந்தான் அவன்.
"அரசே…" என்ற ஸ்ரீவல்லபரின் அழைப்பில் கலைந்த பாண்டியன் "அமைச்சரே! தாங்கள் உண்மை நிலையை அறிய மாட்டீர்கள். இப்போது வரவிருக்கும் நோய்த்தொற்று மருத்துவர்களுக்கு அடங்கக்கூடியதல்ல! தற்போதிருக்கும் நம் மருத்துவ ஞானத்தில் இவ்வகைத் தொற்றைக் குணப்படுத்த மருந்துகளே இல்லை!" என்று கூறினான்.
"மன்னவா!" என்று அலறினார் அமைச்சர். "தாங்கள் கூறுவதைக் கேட்டால்… உலகம் அழியும் யுகப்ரளயம் போன்ற ஆபத்தாகவன்றோ காணுகிறது!"
ஜடாவர்மன் சோகத்துடன் புன்னகைத்தான். "பௌர்ணமி நாளன்று நான் மனைவியரோடு களிக்காமல், கலைகளில் ரமிக்காமல் இங்கே நடைபோட்டுக் கொண்டு, என் அமைச்சரையும் அழைத்ததற்கான காரணம் இப்போதாவது முக்கியமென்று தோன்றுகிறதா அமைச்சரே? என்ன விஷயம் என்று தெரிகிறதா?" என்றான். அவன் குரலில் கேலியில்லை, குத்திக்காட்டுதலுமில்லை. வருத்தமே நிறைந்திருந்தது.
அமைச்சர் ஜடாவர்மனை நெருங்கினார். "ஜடாவர்மா! நீ வீரன். இந்தப் பெருமைமிகு தேசத்தின் தலைவன். துன்பங்கள் வரும்போது துவண்டுவிடக் கூடாது. அவற்றை எதிர்கொண்டு வெல்ல என்ன வழி என்று பார்க்கக் வேண்டும்" என்றார் ஆதரவாக.
"தாங்கள் கற்றுத்தந்த முக்கியப் பாடமாயிற்றே இது, மாமா! என் கவலையெல்லாம் வரப்போகும் ஆபத்தைக் குறித்தல்ல, அதனை வெல்லும் வழியைக் குறித்துத்தான்" என்றான் ஜடாவர்மன்.
"என்ன சொல்கிறாய் குழந்தாய்?"
"ஆம் மாமா. சிவபாத சித்தரிடம் இந்த ஆபத்தை வெல்லும் வழியுண்டா என்று கேட்கவே செய்தேன். அவர் கூறியது என்னை கவலைப்பட வைத்தது ஒருபுறமிருந்தாலும், அதீத வியப்பிலாழ்த்திவிட்டதும் உண்மை!"
"அது என்ன அத்தகைய வியப்பைத் தரும் வழி?"
ஜடாவர்மன் கூறிய பதிலைக் கேட்டதும் ஸ்ரீவல்லபரும் பெரும் அதிர்ச்சியடைந்து "வேந்தே!" என்று கூவினார்.
(தொடரும்)