ஹாய் டியர்ஸ்,
தொடர்கதைக்கான முதல் அத்தியாயத்தை பதித்து விட்டேன் படித்துப் பார்த்து தங்களுடைய கருத்துகளை தளத்தில் பதிவு செய்யவும்....
கனவு கை சேரும் நாள் வருமோ!
அத்தியாயம் : 1
"ஐந்தான முகம் எதிரில் அருள் பொழியுதே
அணலான மலை காண மனம்
குளிருதே
சிவமயமாக
தெரிகிறதே… சிந்தையில் சிவயோகம் வருகிறதே..
சிவமயமாக
தெரிகிறதே.. சிந்தையில் சிவயோகம் வருகிறதே..
புவணங்கள் ஆளும் அண்ணாமலையே .....
புவணங்கள் ஆளும்
அண்ணாமலையே ….
எனது விழிகளில் காணும்
பொழுதிலே... மாறிடுதே..
மணம் ஊறிடுதே….
அண்ணாமலையானே எங்கள் அன்பில் கலந்தோனே….....!!"
அதிகாலையில் ஆலயத்தில் ஒலித்த தெய்வீக கானத்தில் உறக்கம் கலைந்த பொன்னம்மா இறைவனை நினைத்துக் கொண்டு மெதுவாக எழுந்து திரும்பி படுத்தார். அப்போது அவருடைய ஒன்பது மாத நிறைமாத வயிறு லேசாக வலிக்க ஆரம்பித்தது.
பிரசவத்திற்கு இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருப்பதால் வாயு பிடிப்பாக இருக்கும் என்று நினைத்து பேசாமல் படுத்திருந்தார். பத்து நிமிடம் கழித்து மறுபடியும் வலித்தது உடனே மெதுவாக எழுந்து குளியலறைக்கு சென்று விட்டு கட்டிலில் வந்து அமர்ந்தார்.
அவரது அசைவுகளை அத்தனை நேரம் கவனித்து வந்த கணவர் பொன்னுசாமி " என்ன பொன்னு, தூங்காமல் என்ன செய்ற?" என்று அக்கறையுடன் விசாரித்தார்
"இல்லை வயிறு லேசா வலிச்சது போலிருந்தது. அதான் எழும்பி…!" எனும்போது மறுபடியும் வலி வந்துவிட பல்லைக் கடித்து அடக்கினார்.
" வயிறு ரொம்ப வலிக்குதா?"
கணவரைப் பார்த்து ஆம் எனும் விதமாக தலையசைத்தார். உடனே எழுந்து தாயாரிடம் விவரத்தை தெரிவித்து விட்டு , சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு டாக்ஸி பிடிக்க வெளியேறினார்.
அவளது தாயார் மற்றும் அத்தை இருவரும் பொன்னம்மாவை பார்த்து பேசிவிட்டு மருத்துவமனைக்குச் செல்ல வேகமாக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது லேசாக வலித்த பொன்னம்மாவின் வயிறு நேரமாக நேரமாக அதிகமாக வலிக்க ஆரம்பித்தது. கட்டிலில் இருந்தார் சாய்ந்தார் எழுந்தார் நடந்தார் சுவரை பற்றிக்கொண்டு நின்றார் அவரால் வலியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
பொன்னம்மாவின் முனகல் மற்றும் அசைவில் உறக்கம் கலைந்த மூன்று வயது மகள் அனன்யாவை அழைத்து மடியில் வைத்துக்கொண்டு வலியை அடக்க முயன்றார். முடியாமல் போகவும் மகளை கீழே இறக்கி விட்டு விட்டு கட்டிலில் அப்படியே படுத்து விட்டார்.
" அம்மா!" என்ற கதறலில் ஓடி வந்த அத்தையும் அம்மாவும் என்ன என்று கேட்கும் முன்பு அவரது இரு கால்களுக்கு இடையில் மகவு வந்து விழுந்திருந்தது.
உடனே குழந்தையை தூக்கி அவளது அத்தையிடம் கொடுத்த தாயார் அச்சத்துடன் மகளைப் பார்த்தார். பின் தாயும் சேயும் இணைக்கும் தொப்புள் கொடியை வெட்டி நீக்கி விட்டு மகவை பொன்னம்மாவிடம் காட்டிக் கொண்டிருந்தார்.
"பொன்னம்மா!, காலை நேரத்தில் மகாலட்சுமி வீட்டில் பிறப்பெடுத்திருக்கா பாரு!" மகளைப் பார்த்த தாயாரின் விழிகளில் சோர்வை மீறி மகிழ்ச்சி தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில் மறுபடியும் கதறினார். உடனே மகவை வேறு இடத்தில் கிடத்தி விட்டு அவளைப் பார்த்தார், பொன்னம்மாவுக்கு மறுபடியும் பெண் குழந்தை பிறந்திருந்தது.
"அடடா பொன்னம்மா!, நீ ரொம்ப ராசிக்காரி மகாலட்சுமியும் அஷ்டலட்சுமியும் ஒரே நேரத்தில் உனக்கு மகளாக பிறந்திருக்காங்க. இனி உன் வாழ்வில் எல்லா நலன்களும் வளங்களும் கேட்காமலே கிடைக்கப் போகுது. நீ எப்போதும் சந்தோஷமா இருக்கணும் ஆத்தா!" என்று மனதார தன்னுடைய மருமகளை ஆசிர்வதித்து, இரண்டு குழந்தைகளையும் குளிப்பாட்டி துடைத்து தாயிடம் காட்டி உச்சி முகர செய்தார்.
மனையாளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல டாக்சி தேடி சென்றவர், வீட்டுக்கு வந்து சேர்ந்து போது தனக்கு வாரிசு பிறந்து விட்ட சேதி அறிந்து எல்லையில்லா மகிழ்ச்சியுடன் ஓடிச்சென்று மனைவி மற்றும் மகள்களை பார்த்தார்.
சேற்றில் முளைத்த செந்தாமரை மலர் போல ஜொலித்துக் கொண்டு இருந்தார்கள் அவரது இரட்டை வாரிசுகள். மகள்களை பார்த்த பெற்றவரின் உள்ளம் பூரித்து மகிழ்ந்தது.
அடுத்த நிமிடம் அதே டாக்ஸியில் ஏறி வீட்டில் பிரசவம் பார்க்கும் மருத்துவப் பெண்மணியை அழைத்து வந்து மனைவி மகளை பார்க்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்.
உள்ளே நுழைந்த பெண்மணி பொன்னம்மாவிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே, அவரை சுத்தம் செய்து, மருந்து கொடுத்து, குளுக்கோஸ் ஏற்றி அவரை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றார்.
"பொன்னம்மா நீ எப்படி இருக்க புள்ள?, உனக்கு இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு?, நமக்கு இரண்டு மகளுக பிறந்திருங்காங்க பார்த்தியா!"
மனைவியிடம் பேசிக்கொண்டே மகளை வாரி அணைத்து உச்சி முகர்ந்தார்.
கணவரின் பேச்சில் மகிழ்ந்தாலும் ஏற்கனவே முதல் பிரசவத்தில் பெண் குழந்தை பெற்றிருந்தவருக்கு தற்சமயம் இரட்டை குழந்தை அதுவும் பெண்ணாக பிறந்து விட்டது சற்று கலக்கத்தை கொடுத்தது. விழிகள் அவரையும் மீறி கலங்கி வழிந்தது.
அவரது கணவர் பொன்னுசாமி அதிகம் படித்தவர் அல்ல. ரைஸ்மில்லில் சொற்ப சம்பளத்திற்கு பணிபுரிபவர். பத்து சென்டுக்கு சொந்தமாக ஓட்டு வீடும் ஒரு முப்பத்தி நான்கு சென்டில் வயக்காடு மட்டுமே உள்ளது. அவரது மனையாள் ஓலை முனைவார், ஈக்கு கீறி விற்பனை செய்வார். வீட்டின் பின்பகுதியில் கீரை, முருங்கை, தக்காளி, அவரை, கத்தரி, மிளகு போன்றவற்றை பயிரிட்டு விற்பனை செய்வார்.
ஒரு கறவை மாடு உள்ளது அதிலிருந்து தினமும் இரண்டு நேரமும் பால் கறந்து, வீட்டின் அருகில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்வார். ஏதோ அவர்கள் இருவரது அத்தனை நாளைய உழைப்பு வயிற்றுப் பாட்டுக்கு கணவன், அத்தை, மகள் என நால்வருக்கும் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்போது….. நினைக்கும் போதே நெஞ்சமெல்லாம் அடைத்தது.
எப்படி மூன்று மகள்களை வளர்த்து படிக்க வைப்பது, ஆபரணம் விற்கும் விலைக்கு எப்படி வாங்கி திருமணம் செய்து கொடுப்பது … என்று நினைக்கும் போது சற்று திணறலாக இருந்தது.
அப்போது தான் முன்பு அக்காவிடம் பேசியது நினைவுக்கு வந்தது. உடனடியாக அவருக்கு தகவல் தெரிவிக்க சொல்லிவிட்டு விழிகளை மூடிக்கொண்டார்.
தான் நினைப்பது சரிதானா…? இதற்கு தன்னுடைய கணவர் சம்மதிப்பாரா…? அத்தை …? அவர்களை மீறி எப்படி துணிந்து செய்ய முடியும் என்று தடுமாறி தன்னுடைய குலதெய்வத்திடம் கோரிக்கை விடுத்து அப்படியே உறங்கிப் போனார்.
அப்போது "மாமா!" என்று அழைத்துக்கொண்டே ஓடி வந்த மணிமாறனைப் பார்த்து தெறித்த புன்னகையுடன் எதிர்கொண்டார் பொன்னுசாமி.
"டேய் மாப்பிள்ளை!, உனக்கு பொஞ்சாதி பிறந்திருக்காடா? சீக்கிரம் வந்து பாரு!"
தாய்மாமன் குரலில் விரைந்து சென்று பார்த்தான் அங்கு இரட்டை சிசுக்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்த கோரைப் பாயில் கை கால் அசைத்து விழிகளை உருட்டி கொண்டிருந்தது.
மெதுவாக அவர்கள் அருகில் சென்று அமர்ந்து வியப்பாக விழிகளை விரித்தான் " என்ன மாமா இது?, ரெண்டு குழந்தைங்க அதுவும் ஒரே மாதிரி இருக்குதுங்க. பார்க்க ரொம்ப அழகா இருக்காங்க மாமா!" சிரித்தான் ரசித்தான் துள்ளி குதித்தான்.
"டேய்!, டேய்!, மாப்பிள்ளை பையா இங்கே வா, குழந்தைய கையில் எடுக்குறியா?"
"அச்சச்சோ!!, வேணாம் மாமா, எனக்கு பயமா இருக்கு!"
"ஏண்டா மாப்பிள்ளை!, உனக்கு என்ன பயம். என் பொண்ணுங்கள பாரு எவ்வளவு அழகா இருக்குதுங்க!"
"ஆமாம் மாமா. ஆனால் ரொம்ப சின்ன குழந்தையா இருக்குல்ல, அதான் எடுக்க பயமா இருக்கு கொஞ்சம் பெருசாகட்டும் பிறகு எடுக்கிறனே!" என்றான் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு
" ஆனால் இத்தனை பயப்படுறவனை நம்பி எப்படி என் மகளை கட்டிக் கொடுப்பது?" அவனைப் பார்த்து யோசனை செய்வது போல நடித்தார்.
அதை புரிந்து கொள்ளாத ஏழு வயது மாறன் " கட்டிக்கொடுக்காட்டி என் அம்மணியை அப்படியே தூக்கிட்டு போயிடுவேன் !"
எழுந்து நின்று வீர வசனம் பேசினான். அதைக்கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தார் அவனது மாமா.
"அவ்வளவு தைரியம் இருக்காடா மாப்பிள்ளை. என்கிட்டயே எம் பொண்ணை தூக்கிட்டு போயிடுவேன்னு சொல்ற?"
"உங்க கிட்ட என்ன மாமா, இந்த உலகத்தில் யாரு கேட்டாலும் நிமிர்ந்து நின்னு கம்பீரமாக சொல்வேன் என் அம்மணி எனக்கு தான் எனக்கு மட்டும் தான்!" என்றான் அழுத்தமாக
"சரி சரி இப்படி உட்காரு. ஆமாம் ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க உனக்கு அதில் யாரு வேணும் பாரு… பார்த்து சொல்லு?" விளையாட்டாகச் சொன்னாரோ, நிஜமாக சொன்னரோ ஆனால் சிறு நெஞ்சில் அழிக்க முடியாத பந்தத்தை விளைவிக்கப் போகிறார்….
இரண்டு பெண் குழந்தைகளையும் கூர்ந்து பார்த்துக்கொண்டு நின்றான் மாறன். அப்போது ஜன்னல் புறம் சில்லென்று வீசியடித்த காற்றில் சடாரென்று விழிகளை சுழித்த சிறு மொட்டுக்கள் மாறனை பார்த்தது. அதில் ஒரு குழந்தை அவனை முறைத்து அழ ஆரம்பித்தது. அடுத்தது அவனைப் பார்த்து தன்னுடைய இதழை விரித்து சிரித்தது.
உடனே தன்னை அறியாமல் அருகில் சென்று விரலை எடுத்து அவளது கையில் வைத்தான் குழந்தையும் உடனடியாக இறுகப் பற்றிக்கொண்டது.
"மாமா இந்த பொண்ணை நான் கட்டிக்கிறேன்… இவதான் என்னோட அம்மணி. என் அம்மணிய தவிர யாரையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன்!" சிரித்தான் சிலிர்த்தான் அவளது மேனியை தொட்டு ரசித்தான்.
மாறனின் செயல்களை பார்த்துக்கொண்டு வந்த அவனது அம்மா செண்பகம் மகன் அருகில் சென்று அமர்ந்தார்.
"அம்மா!, அம்மா!, மாமா இந்த அம்மணிய எனக்கு கொடுத்திருக்காங்க. இவதான் என் பொஞ்சாதி!" என்றான் அப்படி என்றால் என்னவென்று தெரியாத பருவத்தில்...
மகனின் பேச்சு புரியாத செண்பகம் கேள்வியாக அண்ணனைப் பார்த்தார். அவரும் சம்மதமாகத் தலையசைத்தார்.
"அம்மா!, என் அம்மணிக்கு நான்தான் பெயர் வைக்கப் போறேன் ம்….என்று யோசனை செய்து விட்டு கனிஷ்கா மாறன் !" என்று அவளது கன்னத்தை தட்டி சிரித்தான். அதைப் பார்த்த குழந்தையும் சிரித்தது. மற்ற இருவரும் ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்தார்கள்.
"அப்போ அவ தங்கச்சிக்கு?"
"அவந்திகா!"
"டேய் மாப்பிள்ளை!, ஒரே நேரத்தில் பிறந்திருப்பதால் ஒரே போல வைக்கலாம் சரியா? கனிஷ்கா, கன்னிகா இது நல்லா இருக்கு பாரு?"
"மாமா!, என் அம்மணிய தவிர்த்து வேறு யாருக்கும் அவள் பெயரை உச்சரிக்க மாட்டேன். சின்ன குட்டி பெயர் அவந்திகா தான்…!" அந்த வயதிலும் அவனிடம் தெரிந்த முதிர்ச்சியான பேச்சு மற்றவர்களை வாயடைக்க செய்தது…
தாயாரிடம் கேட்டு அம்மணியை மடியில் வாங்கி கொஞ்சினான், பேசினான், கட்டளையிட்டான், சிரித்து மகிழ்ந்தான். அதை புரிந்து கொள்ளாத கனிஷ்கா அவனது விரலை பற்றி முகத்தையே பார்த்திருந்தாள். ஆனால் அவளது தங்கை அழுது கொண்டிருந்தாள்.
"மாமா!, சின்ன குட்டி சரியான அழுமுஞ்சி. சதா அழுதுகிட்டு இருக்கு. தூக்கிட்டுப் போய் அத்தை கிட்ட கொடுத்திட்டு வாங்க!"
உடனே அழுத குழந்தையை தூக்கிக்கொண்டு அண்ணியை பார்க்க சென்று விட்டார் செண்பகம்.
இங்கே மாறனின் கொஞ்சல் அதிகரித்து போனது. அவளும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
சில மணி நேரங்களில் வாசலில் வந்து நின்ற வாகனத்தில் இருந்து இறங்கிய பொன்னம்மாவின் அக்கா வேதவல்லி மற்றும் கணவர் முருகேசன் இருவரும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
தன்னுடைய வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியான மனைவியின் உடன்பிறப்பு மற்றும் கணவரைப் பார்த்து வியந்தாலும் அவர்களை அமர செய்து நலம் விசாரித்தார்.
ஹாலில் அமர்ந்து அனைவரிடமும் சில நிமிடம் பேசியவர்கள் நேராக சென்று தங்கையை பார்த்து பேசிவிட்டு வெளியே வந்தார்கள். அப்போது மாறனை நோக்கிச் சென்ற வேதவல்லி அவனது கரத்தில் இருந்த குழந்தையை வாங்கினார்.
" நாங்க இந்த குழந்தையை கொண்டு போறோம் எதுவாக இருந்தாலும் தங்கச்சி கிட்ட பேசிக்கோங்க!" என்று சொல்லி விட்டு கிளம்பினார். அதைப் பார்த்த அனைவரும் திகைத்து போனார்கள்.
"என்ன சொல்ற வேதவல்லி?, என் மகளை எங்கே கொண்டு போற? அது இப்போது தான் பிறந்த மொட்டு, அதை தாயிடம் இருந்து பிரிக்க உனக்கு எப்படி மனசு வந்தது. என் மகளை கொண்டுபோக ஒரு போதும் சம்மதிக்க மாட்டேன்!" என்றார் அழுத்தமாக
"அதான் பொன்னம்மா சொல்லுவானு சொன்னேன் இல்லையா பிறகென்ன? எங்களுக்கு நேரமாகுது கிளம்பணும்!" என்று அவசரப்பட்டார். ஆனால் பொன்னுசாமி அவரை விடுபவராகத் தெரியவில்லை.
சில நிமிட சத்தம் கோபம் விரக்தி இயலாமை ஏக்கம் வருத்தம் மேலிட காலில் விழுந்து விட்டார் மனையாள் என்றும் பாராமல் "வேணாண்டி, நான் கஷ்டப்பட்டு உழைச்சு உங்க அத்தனை பேருக்கும் சாப்பாடு போடுறேன் என் பொண்ணை அனாதை ஆக்கிறாதடி, அவ எனக்கு வேணும்!" என்று கதறினார்
"வெறும் சாப்பாடு மட்டும் தின்னுட்டு என்ன பண்றது? அவங்க மூணு பேரை வளர்க்கணும், துணி எடுத்து கொடுக்கணும், சாப்பாடு போடணும், படிக்க வைக்கணும், நகை நட்டு போட்டு கல்யாணம் பண்ணிக் கொடுக்கணும். பிறகு சீர் செய்யணும், பிரசவம் பார்க்கணும், குழந்தைக்கு நகை போடணும் இத்தனை செய்ய உன்னால எப்படி முடியும்.?"
மனைவியிடம் இருந்து சீறி விழுந்த வார்த்தைகள் பாவம் அவரை வாயடைக்கச் செய்து விட்டது.
"எத்தனையோ வீடுகளில் அக்கா, தங்கைகளுக்கு குழந்தை இல்லைன்னா தத்து கொடுப்பது இல்லையா அது போல தான் இதுவும்….!" என்றார் அழுத்தமாக
"நீ சொல்றது சரிதான். ஆனால் அதற்காக பிறந்தவுடனே யார் வீட்டில் தூக்கி கொடுத்தாங்க. நீ என்ன வாடகை தாயாகவா வேலை பார்க்குற? நான் எப்படியாவது கஷ்டப்பட்டு என் பிள்ளைகளை கரை சேர்க்கிறேன் நீ பேசாமல் இரு!" ஏழ்மையிலும் தெரித்து விழுந்தது அவரது கம்பீரமான பேச்சு…...
"ஏன்யா!, இப்படி அடம் பிடிக்குற? நீ இப்போ வேலைக்கு போய் சம்பாதிச்சு என்ன சுகப்பட்டுட்டோம்னு இப்படி பேசுற?. ஒவ்வொரு பொம்பளைகளும் பட்டு, நகை, வசதியான வீடு, கார், தோப்பு துறவுன்னு எவ்வளவு வசதியா வாழ்ந்துட்டு இருக்காங்க. உன்னை கட்டிக்கிட்டு வந்த நான் என்ன சுகத்தை அனுபவிச்சிட்டேன். நாம கஷ்டப்பட்டாலும் அவ ஒருத்தியாவது நல்ல வசதியான வாழ்க்கை வாழட்டும் ,நிறைய படிச்சு பெரிய வேலைக்கு போய் கௌரவமா இருக்கட்டும்னு நினைக்காம ஏன் அவ வாழ்க்கையும் அழிக்கப் பார்க்கிற?"
தன்னுடைய மனைவியா இப்படி பேசியது?… நம்பத்தான் முடியவில்லை அவரால்.,. ஏழ்மையிலும் தன்னுடன் நிறைவோடு வாழ்ந்து வந்தாள் என்று எத்தனை நாள் நினைத்து மகிழ்ந்திருப்பார். ஆனால் அவளோ இன்று அதையே குறைவாகப் பேசி விட்டாள்.
இவளது பேச்சை ஏற்று என் மகளை கொடுத்து விட்டால் இனிமேல் என்று அவளை காண்பேன், எப்போது கையால் எடுத்து ரசிப்பேன், அவளது உச்சி முகர்ந்து அணைப்பேன். கேவலம் பணம் இல்லாத காரணத்திற்காக பெற்ற மகளையே அக்காவுக்கு கொடுக்க துணிந்து விட்டாளே என்று அதிர்ந்து நெஞ்சை பிடித்து அப்படியே அமர்ந்து விட்டார். பேச முடியவில்லை அவரால் …. பேச முடியாமல் செய்து விட்டார் அவரது மனையாள்.
"மாமா!, அம்மணிய காருக்கு தூக்கிட்டு போறாங்க என் அம்மணி எனக்கு வேணும். உங்களுக்கு வளர்க்க முடியாட்டி என்கிட்ட கொடுத்துடுங்க நான் கொண்டுபோய் வளர்த்து படிக்க வைக்கிறேன்!" மாமனாரை கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டான். அவனால் அவளை பிரிய முடியவில்லை, ஆனால் மாமாவிடம் கொஞ்சமும் அசைவில்லை.
காரின் ஓசை வெளியில் கேட்க பதறி ஓடிச் சென்று முன்னே நின்றான்.
" இப்போது நான் சின்ன பையன் என்னால் எதுவும் செய்ய முடியாதுனு தானே என் அம்மணிய தூக்கிட்டு போறீங்க. நான் பெரியவனா வளர்ந்ததும் நீங்க எங்கே இருந்தாலும் என் அம்மணிய தேடி வருவேன். அப்படியே தூக்கிட்டு வந்துருவேன் உங்க யாருக்கும் அவளை விட்டுக் கொடுக்க மாட்டேன். அவள் பெயர் கனிஷ்கா மாறன் அதில் எந்த மாற்றமும் இல்லை!" ஆவேசமாக முழங்கிக் கொண்டு அவளையே பார்த்தான்.
"அம்மணி!, என்னை மன்னிச்சிருடா. என்னால் எதுவும் செய்ய முடியல. உன் அம்மா வேண்டுமானால் உன்னை வேண்டாதவளாக நினைத்து கொடுத்திருக்கலாம். ஆனால் இந்த மாறனின் நெஞ்சம் உன்னை என்றும் மறவாது வருடங்கள் பல கடந்தாலும் காத்திருப்பேன் உனது வரவிற்காக….!" கரம்பற்றி முத்தமிட்டு கண்ணீர் வடித்தான். குழந்தையும் அவர்களை பிரிவது கண்டு அழுததோ….
திடீரென்று ஓங்கி உரத்துக் கேட்டது டமார் என்ற இடியோசை. அதை தொடர்ந்து பளீச் என்ற மின்னல் வெட்ட கரு மேக மூட்டங்கள் சூழ்ந்த வானில் அடித்து பொழிந்தது பெருமழை ..
அவர்களின் விழி நீரை பார்த்த வானமும் விடாமல் அழுதது….
கனவு கை சேருமோ…??
தொடர்கதைக்கான கருத்துகளை கீழே உள்ள திரியில்
பதிவு செய்யவும்
https://www.sahaptham.com/community/threads/கனவு-கைசேரும்-நாள்-வருமோ-comments.623/