Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கல்கியின் அலை ஒசை

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்தொன்றாம் அத்தியாயம்

கண்கண்ட தெய்வம்

சீதாவின் கண்களில் ததும்பி நின்ற கண்ணீர்த் துளிகள் உலர்ந்து போயின. அவளுடைய மனதில் குடிகொண்டிருந்த பெரும் பாரம் இறங்கி விட்டது. கலக்கம் தீர்ந்து மனதில் தெளிவு ஏற்பட்டிருந்தது. தான் இனி கடைப்பிடிக்க வேண்டிய பாதைதான் என்ன என்பதைப்பற்றி அவள் ஒரு தீர்மான முடிவுக்கு வந்திருந்தாள். லலிதா தன்னுடைய கூரிய சொல்லம்புகளை எய்து கொண்டிருந்த அதே சமயத்தில் சீதாவின் மனதில் அந்த உறுதியான தீர்மானம் ஏற்பட்டு விட்டது. ஆகவே சமீப காலத்தில் அவள் அறிந்திராத மனச் சாந்தியும் ஏற்பட்டிருந்தது. கைப்பெட்டியில் மாற்றி உடுத்திக் கொள்வதற்கு வேண்டிய இரண்டொரு சேலைகளை எடுத்து வைத்துக் கொண்டாள். கைவசம் இருந்த பணத்தையெல்லாம் திரட்டி எடுத்து வைத்துக் கொண்டாள். மேஜை டிராயரைத் திறந்து அதிலிருந்த கடிதங்களையெல்லாம் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டாள். அன்று தபாலில் வந்த பத்திரிகைத் துண்டை அணு அணுவாகப் போகும் வரையில் கிழித்து எறிந்தாள். பிறகு புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கீழ் வீட்டில் சந்தடி அடங்கட்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் வரையில் கீழே ஏக ரகளையாகத்தானிருந்தது பட்டாபிராமனுடைய அதட்டல், சரஸ்வதி அம்மாளின் கோபக் குரல் - இவற்றுடன் குழந்தைகள் பட்டு, பாலுவின் அழுகைச் சத்தமும் கலந்து கேட்டது. பாவம்! அந்த அர்த்த ராத்திரிச் சந்தடியில் குழந்தைகள் விழித்தெழுந்து அம்மா மூர்ச்சையாகிக் கிடந்ததைப் பார்த்துவிட்டு அழத்தொடங்கின. சிறிது நேரத்துக்கெல்லாம் லலிதாவின் தீனக்குரல் கேட்டது. கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தடி அடங்கியது, விளக்குகள் அணைக்கப்பட்டன. பின்னர் அந்த வீட்டில் நிசப்தம் குடிகொண்டது. மேலும் சிறிது நேரம் சீதா காத்திருந்தாள். வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல் போகலாமா என்ற எண்ணம் எழுந்து தொந்தரவு செய்தது. ஆனால் நேரம் ஆக ஆக அவளுடைய பொறுமை குறைந்து வந்தது. அந்த அறையின் நாலு பக்கத்துச் சுவர்களும் அவளை நோக்கி நெருங்கி நெருங்கி வருவதாகத் தோன்றியது. இன்னும் சற்றுநேரம் அறையில் இருந்தால் அந்தச் சுவர்கள் அவளை நெருங்கி வந்து நாலாபுறமும் அமுக்கி மூச்சுத் திணற அடித்துக் கொன்றுவிடும் என்ற பீதி உண்டாயிற்று.

அந்தப் பீதியிலிருந்து விடுவித்துக் கொள்ளச் சீதா விரைந்து எழுந்தாள். மேஜையிலிருந்து ஒரு காகிதம் எடுத்து அதில் லலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினாள். ஒரு வரி, இரண்டு வரி எழுதிக் கிழித்துப் போட்டாள். கடிதம் எழுதுவது சாத்தியமில்லை என்று தீர்மானித் தாள். கைப்பெட்டியையும் மணிபர்சையும் எடுத்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் புறப்பட்டாள். அடிமேல் அடிவைத்துச் சத்தமின்றி மெதுவாக நடந்து மச்சுப் படிகளில் இறங்கினாள். கீழ்க்கட்டுத் தாழ்வாரத்தில் நீலவர்ண மின்சார தீபம் எரிந்து கொண்டிருந்தது. அந்த மங்கிய வெளிச்சத்தில் அவளுக்கு எதிரே இருந்த சுவரில் ஒரு படம் தென்பட்டது. அந்தப் படத்தில் காந்தி மகாத்மாவின் திருஉருவம் இருந்தது. சாந்தி நிறைந்து புன்னகை தவழ்ந்த மகாத்மாவின் திருமுகமும் கருணை ததும்பிய கண்களும் காந்திஜி உண்மையிலே அங்கு வீற்றிருந்து அவளை ஆசீர்வதிப்பது போன்ற தெய்வீக உணர்ச்சியைச் சீதாவுக்கு உண்டாக்கிற்று. அது ஒரு நல்ல சகுனம் என்றும் அவளுக்குத் தோன்றியது. "கலியுகத்திலே கண்கண்ட தெய்வம் காந்திமகான்தான்" என்று சீதாவின் தாயார் அவளுடைய இளம்பிராயத்தில் அடிக்கடி சொல்லியிருந்தது அவளுடைய மனதில் நன்கு பதிந்து நிலை பெற்றிருந்தது. பெட்டியைத் தரையில் வைத்துவிட்டுச் சீதா மகாத்மாவின் திருவுருவத்தின் முன்னால் நமஸ்கரித்தாள். எழுந்ததும் ஒரு நிமிஷம் கைகூப்பி நின்று, "எந்தையே! என்னை ஆசீர்வதியுங்கள். வாழ்க்கையில் நான் புதியதாக மேற்கொள்ளப் போகும் பாதையில் என்றும் உறுதி தவறாமல் நடப்பதற்கு வேண்டிய மனோபாவத்தை எனக்கு அளியுங்கள்!" என்று வேண்டிக் கொண்டாள். அப்படி வேண்டிக்கொண்டதோடு மட்டும் அவளுடைய மனம் திருப்தி அடைந்துவிடவில்லை. இன்னும் ஏதோ மனக் குறை இருந்தது, சிறிது நேரம் சிந்தனை செய்தாள். உடனே தன் மனக்குறையைத் தீர்க்கும் மருந்து இன்னதென்று புலப்பட்டது.

"காந்தி என்னும் கருணைத் தெய்வமே! 'தங்களுடைய ஆசியை நம்பியே இன்று நான் இந்த வீட்டைவிட்டுத் தன்னந்தனியாக வெளிக் கிளம்புகிறேன். இனி நான் நடக்கப் போகும் பாதையில் எனக்கு எத்தகைய இன்னல்கள் நேர்ந்தாலும் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் தங்களுடைய மனதுக்கு உகந்திருக்க முடியாத காரியம் எதையும் செய்யமாட்டேன். எப்படிப்பட்ட நிலைமையிலும் எந்தக் காரியத்தையும் 'இதை காந்தி மகாத்மா ஒப்புக்கொள்வாரா?' என்று எனக்கு நானே கேட்டு நிச்சயப்படுத்திக் கொண்டுதான் செய்வேன். இவ்விதம் தங்கள் சந்நிதியில் இதோ சத்தியம் செய்கிறேன். இந்தப் பிரதிக்ஞையை நிறைவேற்றும் சக்தியையும் தாங்கள்தான் எனக்கு அருளவேண்டும்!" இவ்விதம் சீதா மனதிற்குள் தெளிவாகச் சிந்தித்து பிரதிக்ஞை எடுத்துக்கொண்டு மகாத்மாவின் படத்துக்கு ஒரு கும்பிடு போட்டு விட்டுத் தரையிலிருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு மறுபடி புறப்பட்டாள். வாசற்கதவைச் சத்தமின்றித் திறந்துகொண்டு வெளியேறினாள். வெளியேறும்போது அவளுடைய மனம், "இந்த வீட்டில் நான் புகுவதற்கு முன்னால் அன்பும் சாந்தமும் நிலவின. என்னால் விளைந்த குழப்பம் என்னோடு போகட்டும். இனி முன்போலவே அமைதி நிலவட்டும். இந்த வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் என்பேரில் எவ்வளவோ பிரியமாயிருந்தார்கள்: அதற்கெல்லாம் பதிலாக நான் பெரும் அபசாரம் செய்துவிட்டேன். கடவுள் என்னை மன்னிப்பாராக!" என்று எண்ணமிட்டது.

பட்டாபிராமனுடைய வீட்டிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் அரை மைல் தூரத்தில் இருந்தது. சீதா அந்தத் தேவபட்டணத்துக்கு வந்த புதிதில் வெள்ள நிவாரண வேலை செய்ததிலும் பிறகு தேர்தல் வேலை செய்ததிலும் அந்நகரின் தெருக்கள், சந்துபொந்துகள், மூலைமுடுக்குகள் எல்லாம் அவளுக்கு நன்றாகத் தெரிந்து போயிருந்தன. ரயில்வே ஸ்டேஷனை நோக்கி நேராகச் சென்ற குறுக்குப் பாதையில் அவள் இப்போது நடந்தாள். வீதிகளிலும் சந்துகளிலும் ஜன நடமாட்டமே இல்லை. காலை மூன்று மணிதான் உலகமே நன்றாய்த் தூங்கும் நேரம் என்று தோன்றியது. திருடர்கள் தங்களுடைய திருவிளையாடல்களை நடத்துவதற்கு அதுவே சரியான நேரம். யாராவது தன்னை அடித்துப் பிடுங்குவதற்கு வந்து சேர்ந்தால்?... சேச்சே! அப்படியெல்லாம் எதற்காகத் தனக்கு நேரப்போகிறது? அப்படியெல்லாம் நேராதா? ஏன் நேராது? தான் துரதிருஷ்டத்துக்கும் துன்பத்துக்குமே பெண்ணாய் பிறந்தவள் ஆயிற்றே? யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் போலிருக்கிறதே? நெருங்குவதற்குத் தயங்கிக் கொஞ்ச தூரத்திலேயே வருகிறது போல் காணப்படுகிறதே? வருகிறவர் ஒருவரா அதிகம் பேரா? எதற்காகத் தன்னை அவர்கள் தொடர்ந்து வரவேண்டும்? ஒருவேளை அவர்களும் தன்னைப் போல் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகலாம் அல்லவா? தான் அநாவசியமாக ஏன் பீதிக்கொள்ள வேண்டும்?

பீதி அநாவசியந்தான்! யார் தன்னை என்ன செய்துவிட முடியும்? ஒன்றும் முடியாதுதான்! ஆயினும் நெஞ்சம் படக் படக், என்று அடித்துக் கொள்வதில் குறைவில்லை. காலடிச் சத்தத்துக்கு மேல் இதயம் அடித்துக் கொள்ளும் சத்தம் அதிகமாகக் கேட்கிறதே! கடவுளே! காந்தி மகாத்மா! இந்தப் பேதையைக் காப்பாற்றுங்கள்! இது என்ன பைத்தியம்? யாரிடமிருந்து எதற்காகக் கடவுளும் காந்திஜியும் தன்னை இப்போது காப்பாற்ற வேண்டும்? தனக்கு என்ன பயம்? தனக்குக் கெடுதல் செய்வதில் யாருக்கு என்ன அக்கறை இருக்க முடியும்? அப்படியும் நினைப்பதற்கில்லை, இந்த ஊரில் தனக்கு யாரோ விரோதிகள் இருக்கிறார்கள். இருக்கிறதினாலேதான் தன்னைப் பற்றி அப்படித் துண்டுப் பிரசுரம் போட்டார்கள். பிற்பாடு பத்திரிகையில் தன்னையும் பட்டாபிராமனையும் பற்றி அவ்வளவு கேவலமாக எழுதினார்கள். அப்படிப்பட்ட பரம விரோதிகள் என்னதான் செய்யமாட்டார்கள்? ஒற்றர்களை வைத்திருந்து தான் தனியாக வெளிக் கிளம்புவதைக் கவனித்துப் பின்தொடர்ந்து வருகிறார்களா என்ன? பின்தொடர்ந்து வந்து ஒருவேளை தன்னை வெட்டிப் போட்டு விடுவார்களோ? அப்படிச் செய்துவிட்டால் ரொம்ப நல்லதாகப் போய்விடும்! இந்த வாழ்க்கையாகிற பாரத்தை மேலும் சுமக்க வேண்டியிராது? ஆனால் அந்தக் கிராதகர்கள் அப்படிச் செய்வார்களா? அல்லது தான் தனியாகக் கிளம்பிச் சென்றதைக் கவனித்து வைத்துக் கொண்டிருந்து இல்லாததையும் பொல்லாததையும் சேர்த்து மறுபடியும் பத்திரிகையில் ஏதாவது பயங்கரமாக எழுதுவார்களா? அப்படியெல்லாம் எழுதித் தன்னை அவமானப்படுத்துவதைக் காட்டிலும் ஒரு வழியாகக் கொன்று போட்டு விட்டால் நிம்மதியாகப் போய்விடும்.

ரயில்வே ஸ்டேஷனுக்கு இன்னும் பாதி தூரம் இருக்கும் போது பின்னால் யாரோ தன்னைத் தொடர்ந்து வருவதாகச் சீதா சந்தேகித்தாள். ரயில்வே ஸ்டேஷனைக் கிட்டத்தட்ட நெருங்கியபோது அவளுடைய பீதி ஒருவாறு குறைந்து தைரியம் மிகுந்தது. வருகிறது யார் என்று தெரிந்துகொள்ளும் எண்ணத்தோடு முனிசிபல் விளக்கு மரம் ஒன்றின் அடியில் நின்றாள். நின்று பரபரப்புடன் தான் வந்த வழியே பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தின் திருப்பத்தில் திரும்பி ஒரு ஆசாமி வந்தான். அவன் வேறு யாரும் இல்லை; சூரியாவின் தம்பி சுண்டுதான்! சீதாவின் மனத்திலிருந்த பயம் என்கிற பாரம் விலகியது. பயம் இருந்த இடத்தில் கோபம் குடிபுகுந்தது. இவன் எப்படி திடீரென்று இங்கே வந்து முளைத்தான்? தன்னை எதற்குப் பின்தொடர்ந்து வந்தான்? வந்ததுதான் வந்தானே, சட்டென்று வந்து தனக்குத் துணையாகச் சேர்ந்து கொள்ளக் கூடாதா? பின்னாலேயே வந்து தன்னை இப்படிப் பயமுறுத்துவானேன்? அசட்டுப் பிள்ளை! கிட்டா மாமாவின் பிள்ளைகளில் சூரியா ஒருவன்தான் கொஞ்சம் சமர்த்து; மற்றவர்கள் எல்லாரும் மோசந்தான். அசட்டுச் சிரிப்புடன் அருகில் நெருங்கி வந்த சுண்டுவைப் பார்த்துச் சீதா, "எதற்காக அப்பா, என்னைப் பின்தொடர்ந்து வருகிறாய்? உனக்கு வேலை இல்லையா அல்லது உன் அம்மா நான் திரும்பி வந்து விடாதபடி ரயிலில் ஏற்றி விட்டு வருவதற்கு உன்னை அனுப்பி வைத்தாளா? யாரோ திருடன் தொடர்ந்து வருகிறானாக்கும் என்று எண்ணியல்லவா பயந்து போய் விட்டேன்?" என்றாள். "இப்படித்தான் உலகத்தில் பல தவறுகள் ஏற்படுகின்றன. ஏதோ சூரியா எழுதியிருக்கிறானே என்பதற்காக நான் உன்னுடைய துணைக்கு வந்தேன். நீ என்னைத் திருடன் என்று எண்ணிப் பயந்து கொண்டாய்! அநாவசியமாக என் அம்மாவையும் வைகிறாய்!" என்றான் சுண்டு. "அது போனால் போகட்டும், சுண்டு! சூரியா கடிதம் எழுதியிருக்கிறானா?" என்று சீதா ஆவலுடன் கேட்டாள். சூரியா ஒருவனாவது தன்னுடைய நன்மையில் உண்மையான கவலை கொண்டவனாயிருக்கிறானே என்று எண்ணிச் சீதா அத்தனை துயரத்துக்கிடையிலும் சிறிது ஆறுதல் பெற்றாள்.

"சூரியா டில்லியிலேயிருந்து எழுதியிருந்தான். ஒருவேளை நீ கல்கத்தாவுக்குப் புறப்படலாம் என்றும், அப்படியானால் நான் சென்னை வரையிலாவது போய்க் கல்கத்தா ரயிலில் உன்னை ஏற்றி விடும்படியும் எழுதியிருந்தான். நீ விரும்பினால் கல்கத்தா வரையிலே கூடப்போகும்படி எழுதியிருந்தான். ஆனால் நீ இப்படி அர்த்தராத்திரியில் ஒருவருக்கும் தெரியாமல் வீட்டுக் கதவைத் திறந்து போட்டு விட்டுப் புறப்படுவாய் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை....." இத்தனை நாளும் நீ எங்கே இருந்தாய் சுண்டு! உன்னை நான் பார்க்கவே இல்லையே? திடீரென்று இன்றைக்கு எப்படி வந்து முளைத்தாய்?" "உனக்கு எங்கே எலெக்ஷன் தடபுடலில் என்னைப்பற்றிக் கவனிக்க நேரம் கிடைக்கப் போகிறது? இத்தனை நாளும் நான் ராஜம்பேட்டையில் இருந்தேன். இந்த மார்ச்சு பரீட்சையில் தவறிவிட்டேன். அம்மா, சூரியா இரண்டு பேரும் ஊரிலிருந்து வந்து விட்டார்கள் அல்லவா? அதற்காக என்னைப் போய் அங்கே இருக்கச் சொன்னார்கள். சூரியாவின் கடிதம் வந்ததும் புறப்பட்டு வந்தேன். அதோடு சேர்மன் தேர்தலின்போது இங்கே இருந்து அத்திம்பேர் வெற்றி பெற்றால் வாழ்த்துக் கூற விரும்பினேன். ஆனால் வாழ்த்துக் கூற அவசியமில்லாமலே போய் விட்டது. சேர்மன் வேலை ஆனதற்காக அத்திம்பேருக்கு அனுதாபம் தான் சொல்லவேண்டும்." "வா ஸ்டேஷன் பக்கம் நடந்து கொண்டே பேசலாம்" என்று சொல்லிச் சீதா நடக்கத் தொடங்கினாள். ரயில்வே ஸ்டேஷன் கிட்ட இருந்தது, ரயிலோ நாலரை மணிக்குத்தான். ஆகையால் மெள்ள மெள்ளப் பேசிக் கொண்டே அவர்கள் நடந்தார்கள். "ராத்திரி நடந்ததெல்லாம் உனக்குத் தெரியுமா, என்ன? எங்கேயிருந்தாய் நீ?" என்று சீதா கேட்டாள். வெட்கத்தோடு முழுவதும் அவனுக்குத் தெரிந்திருக்க முடியாது என்று எண்ணினாள். "எதிர் வீட்டுத் தாமோதரம் பிள்ளை வீட்டில் படுத்திருந்தேன். பிள்ளையும் நானும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். ரகளையில் பெரும் பாகம் எங்களுக்குக் கேட்டது. மிச்சத்தை இட்டு நிரப்பிக் கொண்டோ ம். சந்தடி ஓய்ந்து சிறிது நேரத்திற்குப் பிறகு நான் தூங்கிவிட்டேன். ஆனால், பாவம் தாமோதரம் பிள்ளை தூங்கவேயில்லை அவருக்கு ரொம்ப வருத்தம். நீ வெளிக் கிளம்புவதை அவர்தான் பார்த்துக் கொண்டிருந்து என்னை எழுப்பி விட்டார்....."

"பாவம்! தாமோதரம் பிள்ளை ரொம்ப நல்ல மனிதர். அவர் அப்போது சொன்னதைக் கேட்காமற் போனோம்; அவர் சொன்னதைக் கேட்டு இந்த எலெக்ஷன் தொல்லையில் இறங்காமலிருந்தால் இப்படியெல்லாம் ஏற்பட்டிராது. என்ன தவறு செய்து விட்டேன்!" "அத்தங்கா! இதெல்லாம் ஒரு தவறு ஆகாது. நீ செய்த அடிப்படையான தவறு பன்னிரண்டு வருஷத்துக்கு முன் ராஜம்பேட்டையில் நடந்தது. ஏதோ அந்தச் சௌந்தரராகவன் திடீரென்று சொன்னதற்காக நீ அவனைக் கலியாணம் செய்து கொண்டிருக்கக் கூடாது. நியாயமாக நீ சூரியாவைக் கலியாணம் செய்து கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தாயானால் இரண்டு பேரும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருந்திருப்பீர்கள். இப்போது நீங்கள் இரண்டு பேருமே சந்தோஷமின்றிக் கஷ்டப்படுகிறீர்கள்." "நீ சொல்வது தப்பு, சுண்டு! நானும் சூரியாவும் கலியாணம் செய்து கொண்டிருந்தால் ஒரு நாளும் எங்கள் வாழ்க்கை சந்தோஷமாயிருந்திராது." "ஏன் அப்படிச் சொல்கிறாய் அத்தங்கா! சூரியாவுக்கு உன்பேரில் உள்ள அபிமானம் உனக்குத் தெரியாதா, என்ன? நீ நடந்த பூமியை அவன் பூஜை செய்கிறவன் ஆயிற்றே! உன்னுடைய கஷ்டங்களை நினைத்து இரவு பகல் இப்போதுகூட உருகிக் கொண்டிருக்கிறானே? இல்லாவிட்டால் பரீட்சைக்குப் படிக்கும் எனக்கு உன்னைப் பற்றிக் கடிதம் எழுதுவானா?" "சூரியாவுக்கு என் பேரில் அபிமானம் அதிகம் என்பது எனக்குத் தெரியும், சுண்டு! ஆனால் அபிமானம் வேறு விஷயம்,

கலியாணம் வேறு விஷயம். வாழ்க்கையில் அவனுடைய இலட்சியங்களுக்கும் என்னுடைய இலட்சியங்களுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு. அவனுக்கு யாருக்காவது உபகாரம் செய்து கொண்டிருந்தால் போதும்; தேசத்துக்கு ஏதேனும் தொண்டு செய்து கொண்டிருந்தால் போதும். புகழிலும் பெயரிலும் அவனுக்கு ஆசையே கிடையாது.எனக்கோ, யாராவது நாலுபேர் என்னை எதற்காவது மெச்சிக்கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் எனக்குச் சந்தோஷமாயிருக்கிறது நான் இருக்கும்போது வேறு யாரையாவது பாராட்டினால் எனக்குப் பிடிப்பதில்லை. நான் பிரசங்க மேடையில் ஏறிப் பேசும்போது நாலுபேர் என்னைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் நின்றால், என்னுடைய பேச்சை மெச்சிக் கை தட்டினால் எனக்கு என்னமோ பட்டாபிஷேகம் பண்ணியது போலிருக்கும். சூரியாவுக்கோ இதிலெல்லாம் ஆசையே கிடையாது. எங்களுடைய வாழ்க்கை எப்படிச் சந்தோஷமாயிருக்க முடியும்?" "நீ சொல்வதில் ஓரளவு உண்மை இருக்கிறது, அத்தங்கா! ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அப்படி உலகத்தில் ஒத்த மனத்தோடு தம்பதிகள் எங்கே அமைகிறார்கள்!" "புது டில்லியில் ஒருத்தி இருக்கிறாள், சுண்டு! அவள் பெயர் தாரிணி. சூரியாவுக்கும் அவளுக்கும் ரொம்பப் பொருத்தம் எனப் பல சமயம் நான் எண்ணியதுண்டு."

"சூரியாகூட என்னிடம் சொல்லியிருக்கிறான், அந்தத் தாரிணியைப் பற்றி! ஆனால் அவளுக்கு இந்த ஜன்மத்தில் கலியாணம் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடனே அவர்கள் கலியாணம் செய்து கொள்ளப் போகிறார்களாம்! எப்படி இருக்கிறது கதை! இந்தியாவாவது சுதந்திரம் அடையவாவது? இந்த ஜன்மத்தில் இல்லை! உன்னிடம் சொன்னால் என்ன, அத்தங்கா! இந்தச் சூரியாவுக்குக் கலியாணம் ஆகாத காரணத்தினால், என்னுடைய கலியாணமும் தடைப்பட்டுக் கொண்டே வருகிறது....!" சீதாவுக்கு அவளை அறியாமல் சிரிப்பு வந்தது. "நாங்கள் எல்லாரும் கலியாணம் செய்து கொண்டு கஷ்டப்படுவது போதாதா சுண்டு! எல்லாக் கூத்தையும் நீ பார்த்துக் கொண்டுதானேயிருக்கிறாய்?" என்று கேட்டாள். "நீங்கள் செய்த தவறையே நானும் செய்வேனா, என்ன? முன்னால் போகிறவன் குழியில் விழுந்தால் பின்னால் வருகிறவனுக்குத் தீவர்த்தி பிடித்த மாதிரி அல்லவா? எனக்குக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமே கிடையாது. விளையாட்டுக்காகச் சொன்னேன்?" என்றான் சுண்டு.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்திரண்டாம் அத்தியாயம்

டைரக்டர் சியாம சுந்தர்

எப்போதும் கலகலவென்று பற்பல குரல்களும் விதவித சத்தங்களும் கேட்டுக் கொண்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் கூட அந்த இரவு மூன்றரை மணிக்கு நிசப்தமாயிருந்தது. ஜனங்கள் அங்குமிங்கும் அலங்கோலமாகப் படுத்துத் தூங்கினார்கள். சுண்டுவும் சீதாவும் பிளாட்பாரத்துக்குள் சென்று அங்கே கிடந்த ஒரு மர பெஞ்சியில் உட்கார்ந்தார்கள். "வெகு நாளாக உன்னிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்று எனக்கு எண்ணம். அதற்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை; இப்போது சொல்லட்டுமா?" என்று சுண்டு கேட்டான். "பேஷாகச் சொல், கேட்கிறேன் பொழுதும் போக வேண்டும் அல்லவா?" என்றாள் சீதா. "அத்தங்கா! ஒவ்வொருத்தருக்கும் இந்த உலகத்தில் பெயரும் புகழும் அடைவதற்கு என்று கடவுள் ஒரு வழியை வகுத்திருக்கிறார். அதை விட்டு விட்டு வெளியே போனால்தான் இல்லாத கஷ்டங்கள் எல்லாம் வந்து சேருகின்றன. இங்கிலீஷில் ஒரு பழமொழி உண்டு. 'சதுரத்தில் வட்டத்தைத் திணிக்க முயல்வதைப் போல' என்பார்கள். அது முடியாத காரியம். அதைச் செய்ய முயற்சிப்பதால் வீண் உபத்திரங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொருவரும் கடவுள் தங்களுக்கு வகுத்திருக்கும் வழி இன்னதென்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதிலே தான் ஒருவனுடைய சாமர்த்தியம் இருக்கிறது. அத்தங்கா! நீ எதற்காக இந்தப் பூவுலகில் பிறந்தாயோ அதை நீ இன்னும் தெரிந்து கொள்ளவில்லையென்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்...."

"ரொம்ப உண்மை, சுண்டு! நான் இந்த உலகில் ஏன் பிறந்தேன் என்பது எனக்கு இன்னும் தெரியவில்லைதான்!" "நீ உன் கஷ்டங்களினால் மனங்கசந்து இவ்விதம் சொல்கிறாய். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. வாழ்க்கையில் உன்னுடைய துறை இன்னது என்பதை நீ இன்னமும் அறிந்து கொள்ளவில்லையென்றுதான் சொல்கிறேன். நான் கூறப் போவதில் உனக்கு ஒருவேளை நம்பிக்கை இல்லாமலிருக்கலாம். அல்லது நான் சொல்லுவதை ஒருவேளை நீ விளையாட்டாக எடுத்துக் கொண்டு கேலிப் பேச்சுப் பேசலாம். அதனாலெல்லாம் என்னுடைய முடிவில் மாறுதல் ஏற்படப் போவதில்லை. உனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என்பதாகத் தீர்மானித்துக் கொள்வேன்...." "நான் கேலி ஒன்றும் செய்யவில்லை, சுண்டு! நான் கெட்ட கேட்டுக்குக் கேலி வேறேயா? உன் கருத்தைச் சொல்லு!" "அத்தங்கா! நீ நடிப்புக் கலைக்காகப் பிறந்தவள் என்பது என் தீர்ந்த அபிப்பிராயம். நாடக மேடையில் ஏறி நீ நடித்தாயானால் உனக்கு இணை இந்தியாவிலே யாரும் இல்லையென்று புகழ்பெறுவாய். சினிமாத் துறையில் பிரவேசித்தாயானால் கிரேடா கார்போவையும், ரீடா ஹேவொர்த்தையும், நர்மாஷியரையும் போல உலகப் பிரசித்தியே அடைந்துவிடுவாய். உன்னுடைய முகத்தைக் கடவுள் சினிமாத் திரைக்கு என்றே அமைத்திருக்கிறார்." சீதாவின் உள்ளத்தில் பழையபடி சபலம் முளைவிட்டு எழுந்தது. சுண்டுவின் சமத்காரமான பேச்சு அவளுடைய தற்பெருமை உணர்ச்சியைத் தூண்டி விட்டது. "இது வரையில் என்னை அழகானவள் என்று யாருமே சொல்லவில்லை. எனக்கும் வயது இருபத்தெட்டு ஆகப் போகிறது. நீதான் முதன் முதலாகச் சொல்கிறாய்!" என்றாள்.

"நானும் உன்னை அழகி என்று சொல்லவில்லை. அழகு யாருக்கு வேண்டும், அத்தங்கா! பெரும்பாலும் அசடுகள்தான் அழகாயிருப்பார்கள். அழகு வேறு; முகத்தில் ஜொலிக்கும் அறிவின் களை வேறு. நாடக மேடைக்கும் சினிமாத் திரைக்கும் வேண்டியது அழகு அல்ல; முகவெட்டுத்தான் வேண்டும் அது உன்னிடம் இருக்கிறது." "என் முகத்தில் ஒரு வெட்டுக் காயம் கூட இல்லையே, சுண்டு!" "பார்த்தாயா? கேலி செய்கிறாயல்லவா? அதனால்தான் உன்னிடம் சொல்லத் தயங்கினேன்." "கோபித்துக் கொள்ளாதே சுண்டு! நான் கேலி செய்தது தப்புத்தான். மேலே நீ சொல்ல உத்தேசித்திருந்ததைச் சொல்லு." "வெள்ளித் திரைக்கு மிகவும் பொருத்தமான முகவெட்டு உனக்கிருக்கிறது. இந்த முகவெட்டைக் கொண்டு நீ உலகத்தையே வென்று விடலாம். முகவெட்டு மாத்திரம் அல்ல; உள்ளத்தின் உணர்ச்சிகளையெல்லாம் தெள்ளத் தெளிய முகத்தில் வெளியிடும் சக்தியும் உனக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. நீ சம்பாஷணை செய்யும் போதும், மேடையில் பிரசங்கம் செய்யும் போதும் நான் கவனித்துப் பார்த்திருக்கிறேன். ஆத்திரமோ, கோபமோ, சோகமோ, மகிழ்ச்சியோ - எந்த உணர்ச்சியானாலும் உன் முகத்திலே பளிச்சென்று தெரிகிறது. நீ வாய் திறந்து பேசவேண்டிய அவசியமில்லை. உன்னுடைய கண்கள் பேசுகின்றன; உன் புருவங்கள் பேசுகின்றன; உன் நெற்றியின் சுளிப்புப் பேசுகிறது; உன் உதடுகளின் துடிப்புப் பேசுகிறது.

இது மாத்திரந்தானா? உன்னுடைய நடையின் அழகைப் பற்றி யாராவது உனக்குச் சொல்லியிருக்கிறார்களோ, என்னவோ தெரியவில்லை. உன் நடையின் அழகோடு எந்த ஹாலிவுட் சினிமா நட்சத்திரத்தின் நடை அழகையும் ஒப்பிட முடியாது. அன்னப்பட்சி தண்ணீரில் 'கிளைட்' பண்ணுவது போல நீ நடக்கிறாய். நம்முடைய நாட்டுப் பழங்காலக் கவிகள் 'அன்ன நடை' யைப் பெண்களின் நடையோடு ஒப்பிட்டிருப்பதின் பொருத்தம் உன்னுடைய நடையைப் பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. இன்றைக்குக்கூட நான் உனக்குக் கொஞ்சம் பின்னாலேயே வந்து கொண்டிருந்ததின் காரணம் அதுதான். உன் நடையின் அழகைப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டே வந்தேன். இந்த மாதிரி நடையுள்ளவள் ஒருத்தியை ஹாலிவுட் டைரக்டர்கள் கண்டால் விடவே மாட்டார்கள். தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுவார்கள்!" "சுண்டு! நீ மட்டும் என்னைவிட நாலு வயது பெரியவனாயிருந்து என்னைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் எனக்கு இந்த மாதிரி கஷ்டம் எல்லாம் ஒன்றும் வந்திராது." "அத்தங்கா! முதலிலேயே நான் சொல்லிவிட்டேனே! காதல், கலியாணம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று.

உண்மையில் எனக்குக் கலியாணம் ஆகிவிட்டது. கலைத்தேவியை நான் மணந்து கொண்டு விட்டேன். வேறு மானிடப் பெண்ணைக் கலியாணம் செய்து கொள்ளும் உத்தேசமே எனக்குக் கிடையாது. நீ எதற்காகப் பிறந்தாய் என்பதை நான் தெரிந்து கொண்டிருப்பது போலவே நான் பிறந்த காரணத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்தியாவில் சினிமாக் கதையை உதாரணம் செய்வதற்காக நான் பிறந்தவன். தென்னிந்தியாவில் அறிவாளிகள் எத்தனையோ பேர் உண்டு. ஆனால் அவர்களில் யாரும் இதுவரையில் சினிமாக் கலையில் கவனம் செலுத்தவில்லை. அசடர்களும் துர்த்தர்களும் பிழைப்புக்கு வழியில்லாதவர்களுந்தான் சினிமாவுக்கு வந்திருக்கிறார்கள். ஏதோ பி.ஏ. பரீட்சையை முடித்துத் தொலைக்க வேண்டுமென்பதற்காகப் படிக்கிறேன். பி.ஏ. பாஸ் செய்ததும் சினிமாத் துறையில் இறங்குவேன். நீயும் என்னோடு ஒத்துழைத்தால் தென் இந்தியாவை மட்டுமல்ல. இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே நாம் வெற்றி கொள்ளலாம். நான் இன்றைக்குச் சொல்லுகிறேன், கேள்! டைரக்டர் சியாம சுந்தர் எடுக்கப் போகும் முதல் படம் உலகப் பிரசித்தி அடையப் போகிறது. ஹாலிவுட் அகாடமி பரிசு அதற்கு நிச்சயம் கிடைத்தே ஆகவேண்டும்...." "சுண்டு! டைரக்டர் சியாம சுந்தர் என்பது யார்?" "யாரா! நான்தான்! என்னுடைய முதல் படத்தில் நீ கதாநாயகியாக நடிக்க ஒப்புக் கொண்டால் நான் சொல்ல முடியாத சந்தோஷம் அடைவேன், என்னால் நீ எவ்வளவு பெயரும் புகழும் அடையப் போகிறாய் என்பதை நீயே பார்க்கப் போகிறாய்!"

சீதாவின் உள்ளத்தில் முதலிலேயே சபலம் ஏற்பட்டிருந்தது. இப்போது அது கொழுந்துவிட்டு எரிந்தது. எதற்காக நம்மை மதிக்காத அன்பில்லாத புருஷனிடம் போய்க் கஷ்டப்பட வேண்டும்? வாழ்க்கையை ஏன் நரகமாக்கிக் கொள்ள வேண்டும்? இப்படி நம்மிடம் தேவதா விசுவாசம் வைத்திருப்பவனுடைய முயற்சியில் ஏன் சேர்ந்து உதவி செய்யக் கூடாது? இப்படி எண்ணமிட்ட போது பட்டாபிராமனுடைய வீட்டுச் சுவரில் கண்ட காந்தி மகாத்மாவின் முகம் சீதாவின் மனதின் முன்னிலையில் வந்தது. காந்திஜியின் கருணை ததும்பும் கண்கள் அவளை உற்று நோக்கின. "பேதைப் பெண்ணே! பிரதிக்ஞை எடுத்துக் கொண்டு அரைமணி நேரங்கூட ஆகவில்லையே? அதற்குள் இந்தச் சஞ்சலமா? என் முன்னிலையில் கடவுள் சாட்சியாக எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையைக் காற்றில் விடப் போகிறாயா?" என்று கேட்பதுபோல இருந்தது. சீதா ஆகாசத்தை நோக்கினாள்; வானமெங்கும் ஒரு அங்குல இடம் காலியின்றிச் சிதறிக்கிடந்த நட்சத்திரச் சுடர் மணிகள் அவ்வளவும் கண்ணைச் சிமிட்டிச் சீதாவை எச்சரித்தன. அடுத்த ஸ்டேஷனில் ரயில் வண்டி கிளம்பி விட்டது என்பதற்கு, அறிகுறியாக டிங் டிங் என்று ஸ்டேஷன் மணி அடித்தது. சீதா கூறினாள்: "சியாம சுந்தர், உன்னுடைய அபிமானத்தையும் நீ என்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையையும் பெரிதும் பாராட்டுகிறேன். ஆனால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் நான் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டேன். என்னுடைய கணவருக்கும் எனக்கும் ஒத்துக் கொள்ளவில்லையென்றும், அதனாலேதான் எனக்கு இந்தக் கஷ்டம் எல்லாம் வந்தன என்றும் உனக்குத் தெரியுமல்லவா? இன்னும் ஒரு தடவை அவருடன் குடும்ப வாழ்க்கை நடத்திப் பார்ப்பது என்றும், கூடிய வரையில் ஒத்துப்போகப் பார்ப்பது என்றும், பிரதிக்ஞை செய்தேன். மகாத்மா காந்தியின் உருவப் படத்தில் முன்னால் அவ்வாறு சபதம் செய்தேன். அதை இவ்வளவு சீக்கிரத்தில் கைவிட மனம் வரவில்லை. கல்கத்தாவுக்குப் போய் அவரைப் பார்த்து இன்னொரு தடவை அவருடன் வாழ்க்கை நடத்த முயற்சிப்பேன். ஆனால் இதுதான் கடைசித் தடவை. இதிலும் ஒன்றும் சரிக்கட்டி வராவிட்டால் உன்னிடம் வந்து சேருகிறேன்" என்றாள் சீதா.

"அத்தங்கா! நான் சொல்கிறேன், கேள்! உன் கணவன் சௌந்தரராகவன் மட்டும் அறிவுடையவனாயிருந்தால் உன்னைக் குடும்ப வேலை செய்வதற்கு வைத்துக்கொள்ளமாட்டான். சினிமாக் கலைக்கு உன்னை அர்ப்பணம் செய்வான். குடும்ப வேலை பார்க்க லட்சம் கோடி ஸ்திரீகள் இருக்கிறார்கள். ஆனால் வெள்ளித் திரையில் நடித்துப் பெயர் வாங்கக் கோடியில் ஒருவராலேதான் முடியும். அது போனால் போகட்டும்; உன் தலைவிதியின்படி நடக்கிறது. இப்போது என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? உன்னோடு கல்கத்தாவுக்கு வரட்டுமா? மதராஸ் வரையிலாவது வரட்டுமா?" "வேண்டாம் சியாம சுந்தர்! உன்னோடு பேசிக்கொண்டே போனால் என்னுடைய சஞ்சல மனது மாறிப் போய்விடும். இங்கேயே டிக்கட் வாங்கிக் கொடுத்துப் பெண் பிள்ளைகள் வண்டியில் என்னை ஏற்றி விட்டுவிடு; அதுவே போதும்!" என்றாள் சீதா. "சூரியா என் பேரில் நிச்சயம் கோபித்துக் கொள்ளப் போகிறான்" என்றான் சுண்டு. "எதற்காகக் கோபித்துக்கொள்ள வேண்டும்? சூரியா ராஜம்பேட்டைக்குத் திரும்பி வந்ததும் அவன் என் விஷயத்தில் எடுத்துக் கொண்ட சிரத்தைக்காக என்னுடைய வந்தனத்தை அவனுக்குத் தெரியப்படுத்து." "ராஜம்பேட்டைக்கு அவன் திரும்பி வருவானா என்பதே சந்தேகமாயிருக்கிறது."

"ஏன் அப்படிச் சொல்கிறாய்? ராஜம்பேட்டைக் கிராமத்தைச் சொர்க்கமாக்கிவிடப் போகிறேன் என்று சூரியா சொன்னானே?" "அந்த முயற்சியில் சூரியாவுக்குத் தோல்விதான் உனக்குத் தெரியுமா அத்தங்கா! தபால்கார பாலகிருஷ்ணன் வேலையை விட்டுவிட்டு இப்போது கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டான். நம்ம பக்கத்தில் வேலை செய்து வருகிறான். சூரியாவின் முயற்சியை உருப்படாமல் அடிப்பதே அவனுடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது. சூரியா எங்கள் ஆட்களுக்கெல்லாம் முன்னைப்போல் ஒட்டிக்கு இரட்டி கொடுத்தும் பயனில்லை; அவர்களுக்குத் திருப்தி இல்லை. 'நிலம் உழுகிறவனுக்குச் சொந்தம்' என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். ஊரில் எல்லோருடைய நிலமும் சாகுபடியாகி விட்டது. நம்முடைய நிலம் மட்டும் பாதிக்குமேல் தரிசாகக் கிடக்கிறது. சூரியாவின் மனது ரொம்பவும் ஓடிந்து போய் விட்டது." "அந்தப் பாலகிருஷ்ணன் பேரில் எனக்கு எப்போதும் சந்தேகந்தான். அவன் ரொம்பப் பொல்லாதவன் எங்களைப் பற்றி ஒரு குப்பைப் பத்திரிகையில் கன்னா பின்னாவென்று எழுதியிருந்ததல்லவா? அதெல்லாம்கூடப் பாலகிருஷ்ணனுடைய வேலையோ என்னமோ?" "இல்லவே இல்லை, அத்தங்கா! வீண் பழி சுமத்தாதே! பாலகிருஷ்ணனிடம் வேறு என்ன குற்றம் இருந்தாலும் உன்னைப் பற்றிய அவதூறு அவன் எழுதவில்லை. உன்னிடம் அவனுக்குள்ள மதிப்பையும் அபிமானத்தையும் பலமுறை என்னிடம் தெரிவித்திருக்கிறான். உன்னைக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவனுக்கு ரொம்ப ஆசை." "அந்த மட்டில் சந்தோஷந்தான்."

"உன்னைப்பற்றித் துண்டு பிரசுரம் போட்டதும் மஞ்சள் பத்திரிகையில் எழுதியதும் யார் என்று எனக்குத் தெரியும். எல்லாம் நம்ம ஊர் சீமாச்சுவய்யர் செய்யும் வேலை!" "ஐயையோ! நம்ம சீமா மாமாவா அப்படியெல்லாம் எழுதுகிறார்? நம்ப முடியவில்லையே." "நம்பத்தான் வேண்டும். வேறு என்ன செய்வது? எனக்கு நிச்சயம் தெரியும். பிளாக்மார்க்கெட்டில் இவ்வளவு நாள் சம்பாதித்தது சீமா மாமாவுக்குப் போதவில்லை. அவருக்கு வேண்டிய ஆசாமி சேர்மனாக வர வேண்டும் என்று ரொம்பவும் பாடுபட்டார். அப்படி வருவதற்கு நீ தடையாயிருந்தாய். அதனாலேதான் அவ்விதமெல்லாம் எழுதப் பண்ணினார். ஒரு நாளைக்கு என்னிடம் சீமா மாமா சிக்கிக்கொள்ளப் போகிறார். அப்போது செம்மையாக அவருக்குப் புத்தி கற்பிக்கப் போகிறேன்!" "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், சுண்டு! ஏதாவது எழுதி விட்டுப் போகட்டும்! அவர் மேல் எனக்கு இல்லாத கோபம் உனக்கு என்னத்திற்கு?" "உனக்குக் கோபம் இல்லையென்றால் நான் விட்டு விடுவேனா? ஒரு கை பார்க்கத்தான் போகிறேன். அத்தங்கா! நீ மட்டும் இங்கு இருந்திராவிட்டால் அத்திம்பேருக்கு ஒரு நாளும் சேர்மன் வேலை ஆகியிராது. அதை என் அம்மாவும் அக்காவும் எண்ணிப் பாராததை நினைத்தால் எனக்கு வருத்தமாயிருக்கிறது. அம்மா எப்போதும் ஒரு மாதிரி என்பது தெரிந்த விஷயம். லலிதா எதனால் இவ்வளவு கொடுமையுள்ளவளாகி விட்டாள் என்பதுதான் தெரியவில்லை. உன்னை அர்த்த ராத்திரியில் வீட்டை விட்டுக் கிளம்பும்படி செய்து விட்டாளே!" "லலிதாவைப் பற்றி ஒன்றும் சொல்லாதே, சுண்டு! அவளைப் போல் உத்தமி உலகத்திலேயே கிடைக்கமாட்டாள். என்னுடைய காலத்தின் கோளாறு, நான் இப்படிக் கிளம்ப வேண்டி ஏற்பட்டது." தூரத்தில் ரயில் வரும் சத்தம் கேட்டது. சில நிமிஷத்துக்கெல்லாம் 'புஃப் புஃப்' என்று புகை விட்டுக் கொண்டும், 'கிறீச்' என்று கத்திக் கொண்டும் ரயில் வந்தது. பெண்பிள்ளை வண்டியில் சீதா ஏறி உட்கார்ந்து சுண்டுவிடம் விடை பெற்றுக் கொண்டாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்து மூன்றாம் அத்தியாயம்

சீதாவின் பிரார்த்தனை

கல்கத்தா மெயிலில் இரண்டு தினங்கள் சீதா பிரயாணம் செய்தாள். அந்த இரண்டு நாளும் இரண்டு யுகங்களாகத் தோன்றின. சீதா ஏறியிருந்த அதே மாதர் வண்டியில் கல்கத்தாவுக்குச் செல்லும் இன்னும் சில மதராஸி ஸ்திரீகளும் ஏறியிருந்தார்கள். அந்த ஸ்திரீகளில் ஒருத்தி ஹாவ்ராவில் ஜாகை உடையவள்; சீதாவுக்கு அவள் சிநேகமானாள். பொழுது போவதற்கு அவளுடைய பேச்சுத் துணை கொஞ்சம் உதவியாயிருந்தது. வண்டி ஹாவ்ரா ஸ்டேஷனை அடைவதற்கு வழக்கத்தைக் காட்டிலும் தாமதமாயிற்று. அன்று காலையிலிருந்து ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஜனங்கள் கூடிக்கூடி ஏதோ கசமுசாவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த வண்டியிலிருந்த பிரயாணிகளிடையிலும் ஏதோ கிளர்ச்சி ஏற்பட்டி ருப்பதாகத் தெரிந்தது. ஆனால் ஸ்திரீகளின் வண்டிக்குத் தகவல் ஒன்றும் எட்டவில்லை. ஹாவ்ராவுக்கு முதல் ஸ்டேஷனில் வேறு வண்டியிலிருந்த தென்னிந்தியர் ஒருவர் இறங்கி வந்து மாதர் வண்டியிலிருந்தவர்களைப் பார்த்து, "உங்களுக்கெல்லாம் புருஷத்துணை இருக்கிறதா? அல்லது ஹாவ்ரா ஸ்டேஷனுக்காவது புருஷர்கள் வருவார்களா? தனியாகப் போகிறவர்கள் ஜாக்கிரதையாகப் போகவேண்டும். கல்கத்தாவிலே ஏதோ கலாட்டாவாம்!" என்று சொன்னார். இது சீதாவின் மனதில் எந்த விதமான கலக்கத்தையும் உண்டு பண்ணவில்லை. வாழ்க்கையில் எத்தனையோ கலாட்டாக்களை அவள் பார்த்தாகிவிட்டது. கல்கத்தாவுக்குப் புதிதாகப் போய் இறங்கிய அன்றைக்கே பெரும் அபாயத்துக்கு அவள் உட்பட நேர்ந்தது. அதையெல்லாம் விட இப்போது என்ன அதிகம் இருந்துவிடப் போகிறது?

ஆனால் ஹாவ்ரா ஸ்டேஷனில் போய் இறங்கியவுடனே தான் நினைத்தது எவ்வளவு தவறு என்று சீதாவுக்குத் தெரிந்துவிட்டது. அன்று 1946- ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி நரகத்தில் வாழும் பேய்கள் அன்றைக்குக் கல்கத்தாவுக்கு விஜயம் செய்து தங்களுடைய நாச வேலைகளை நடத்திக் கொண்டிருந்தன. குழந்தைகள் என்றும், வயோதிகர்கள் என்றும், ஸ்திரீகள் என்றும் பாராமல் அந்தப் பேய்கள் கொன்று தின்றுவிட்டுப் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்தன. அந்த ஊளைச் சத்தங்களுக்கிடையே `பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்னும் கோஷம் சில சமயம் கேட்டது. கிரேதாயுகத்திலே வாழ்ந்த இரணியன், இரணியாட்சன் ஆகிய அரக்கர்களும், திரேதா யுகத்தில் இருந்த இராவணன், கும்பகர்ணன், மகோதரன், விருபாட்சன் முதலிய ராட்சதர்களும், துவாபர யுகத்திலே பிறந்த கம்ஸன், சிசுபாலன், தந்தவக்கிரன், பகாசுரன், ஜராசந்தன் ஆகிய மனிதப் பேய்களும் ஒரே சமயத்தில் கல்கத்தாவில் வந்து பிறந்து ஆயிரம் பதினாயிரம், லட்சம் எனப் பெருகித் தங்களுடைய கோர கிருத்தியங்களை நடத்தியதாகத் தோன்றியது. ஸ்திரீகளின் வயிற்றில் கத்தியை செலுத்திக் குடலை வெளியில் எடுத்தல், குழந்தைகளைக் காலைப் பிடித்து வீசி எறிந்து கொல்லுதல். உயிரோடு மனிதர்களைப் பிடித்து எரியும் நெருப்பிலே போடுதல், முதலிய அசுரச் செயல்கள் அன்று கல்கத்தாவில் சர்வசாதாரணமாயிருந்தன.

ஹாவ்ரா ஸ்டேஷனில் சீதா இறங்கியபோது கல்கத்தா நகரத்துக்குள்ளேயிருந்து ஆயிரம் நகரங்களிலிருந்து வருவது போன்ற கோர சத்தம் வருவது கேட்டது. லட்சக்கணக்கான மனிதர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளும் ஓலமிடும் குரலும், ஆயிரக்கணக்கான பேய் பிசாசுகள் ஊளையிடும் குரலும், வீடுகள் தீயிட்டு எரியும் சத்தமும், எரிந்து விழும்போது எழும் சத்தமும், மக்கள் இங்குமங்கும் ஓடும் சத்தமும், துப்பாக்கி வேட்டுச் சத்தமும், துருப்புக்களின் ஆர்ப்பாட்டச் சத்தமும் சேர்ந்து வந்து ரயிலிலிருந்து இறங்கியவர்களின் உடம்பையும் உடம்புக்குள் எலும்பையும் நடுநடுங்கச் செய்தன. சீதாவுக்கு ரயிலில் சிநேகமான ஸ்திரீயை அழைத்துப் போவதற்காக மனுஷர்கள் வந்திருந்தார்கள். கல்கத்தாவில் பயங்கரமான கலகம் நடப்பதாகவும் ஆகையால் யாரும் ஹாவ்ரா பாலத்தைத் தாண்டி அப்பாலே போக முடியாது என்றும் சொன்னார்கள். அந்த ஸ்திரீ தனியாக வந்திருந்த சீதாவைப் பற்றி அவர்களிடம் சொன்னாள். சீதாவும் ஹாவ்ராவுக்கு வந்து இருக்கலாம் என்றும், கலகம் அடங்கிய பிறகு அவளுடைய மனுஷர்கள் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு போகலாம் என்றும் சொன்னார்கள். இதைக் கேட்ட சீதாவுக்கு உள்ளம் கலங்கி உலகம் சுற்றியது. சிறிது நிதானித்துக் கொண்டு, "இல்லை; நான் எப்படியும் இன்றைக்குப் போக வேண்டும், எனக்கு ஒன்றும் வராது" என்றாள். "அப்படியானால் போய்ப் பாருங்கள்!" என்றனர் ஹாவ்ராக்காரர்கள். சீதா தட்டுத் தடுமாறி ஹாவ்ரா ஸ்டேஷனிலிருந்து கொஞ்ச தூரத்திலிருந்து பாலம் வரையில் சென்றாள். அங்கிருந்து ஸ்டேஷன் பக்கத்தில் ஓடிவந்த ஒரு பெரும் கூட்டம் அவளைத் தள்ளிக் கொண்டு வந்து ஸ்டேஷன் வாசலில் சேர்த்தது. அதுவரை காத்திருந்த ஹாவ்ராக்காரர்கள் அவளையும் சேர்த்துத் தங்களுடன் அழைத்துக் கொண்டு போனார்கள்.

ஹாவ்ராவில் தங்கியிருந்த நாலு தினங்களும் சீதா அநுபவித்த மன வேதனையைச் சொல்லி முடியாது. இன்னும் ஒரு நாள் முன்னால் வராமற் போனோமே, வந்திருந்தால் இத்தகைய பயங்கரமான அபாய காலத்தில் கணவனோடும் குழந்தையோடும் சேர்ந்திருக்கலாமே என்று எண்ணி ஏங்கினாள். ஒவ்வொரு நிமிஷமும் கணவனுக்கு என்ன நேர்ந்ததோ குழந்தைக்கு என்ன நேர்ந்ததோ என்று நினைத்து விம்மினாள். இவ்வளவு தூரம் வந்த பிறகு கடைசியில் அவர்களைப் பார்க்க முடியாமலே போய்விடுமோ என்று எண்ணியபோது அவளுடைய நெஞ்சை வாளால் அறுப்பது போலிருந்தது. கல்கத்தாவில் நடக்கும் சம்பவங்களைப்பற்றிக் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை வந்துகொண்டிருந்த செய்திகள் அவளுடைய மனப் புண்ணில் அடிக்கடி கொள்ளிக் கட்டையால் சுடுவது போன்ற துன்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. முக்கியமாகப் பச்சிளங் குழந்தைகளைத் தூக்கி எறிந்து கொல்லுகிறார்கள் என்றும், தீயிலே போட்டு வதைக்கிறார்கள் என்றும் வந்த செய்திகள் அவளுக்கு எல்லையில்லாத துன்பத்தை உண்டுபண்ணின. அந்த மாதிரி கதி தன் அருமைக் குழந்தைக்கு ஒருவேளை நேர்ந்திருக்குமோ, நேர்ந்து விடுமோ என்று எண்ணி எண்ணி அவளுடைய மண்டை வெடித்து விடும் போலிருந்தது. இந்தக் கண்டத்துக்குத் தப்பிப் பிழைத்தால் இனி என்றைக்கும் எந்தக் காரணத்தைக் கொண்டும் குழந்தையை விட்டுப் பிரிவதில்லையென்று மனதிற்குள் ஆயிரந்தடவை சபதம் செய்து கொண்டாள். இந்தத் தடவை தன் கணவன் உயிர் பிழைத்திருந்து தனக்கும் அவருக்கும் சமாதானமாகி விட்டால் அப்புறம் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவருடன் சண்டையிடுவதில்லையென்றும் பிரதிக்ஞை செய்துகொண்டாள்.

ஆனால் அவர் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமே? தன்னைக் கண்டதும் "எங்கே வந்தாய்? ஏன் வந்தாய்?" என்று கேட்காமலிருக்க வேண்டுமே? அப்படி அவர் கேட்டாலும் கேட்கட்டும். அதற்காக இவள் இனிமேல் பின்வாங்கப் போவதில்லை. ஏதாவது எப்படியாவது சொல்லிச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான். ஆனால் அவர் பிழைத்திருக்க வேண்டுமே? அவருக்கும் குழந்தைக்கும் அபாயம் ஒன்றும் நேராமல் இருக்கவேண்டுமே? இந்தப் பாவியின் அதிர்ஷ்டம் எப்படியிருக்குமோ தெரியவில்லையே? மூன்று நாள் பகலும் இரவும் சீதா தூங்கவேயில்லை. தப்பித்தவறிச் சிறிது கண்ணயர்ந்தாலும் பயங்கரச் சொப்பனங்கள் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள். அவள் படும் துன்பத்தைப் பார்த்து அந்த வீட்டுக்காரர்கள் அவளிடம் மிகவும் அநுதாபம் காட்டி ஆறுதல் கூறினார்கள். ஹாவ்ராவில் வசித்த தென்னிந்தியர்களுக்குக் கவலையில்லாமற் போகவில்லை. கல்கத்தாவில் நடக்கும் பயங்கரக் கலகம் பாலத்தைத் தாண்டி ஹாவ்ராவுக்குள்ளும் வராது என்பது என்ன நிச்சயம்? இது மட்டுமல்ல, அவர்களிலே பலர் உத்தியோகம் பார்த்த ஆபீஸுகள் கல்கத்தாவிலேதான் இருந்தன. அந்த ஆபீஸுகளின் கதி என்ன ஆகிறதோ? கலகம் அடங்கிய பிறகாவது ஆபீஸைத் திறப்பார்களோ என்னமோ? அப்படித் திறந்தால்தான் என்ன? ஷுஹரவர்த்தி ஆட்சி புரியும் நகரத்தில் இனி நிம்மதியாக வாழ முடியுமா?

இவ்வாறெல்லாம் முதல் இரண்டு நாளும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் கலகம் ஆரம்பித்த மூன்றாம் நாளிலிருந்து கொஞ்சம் உற்சாகம் காட்ட ஆரம்பித்தார்கள். ஏனெனில் கலகத்தின் போக்கு மூன்றாம் நாளிலிருந்து கொஞ்சம் மாறத் தொடங்கியது. முதல் இரண்டு நாளும் ஹிந்துக்களின் படுகொலையாகவே நடந்தது. மூன்றாம் நாள் பீஹாரிலிருந்து கல்கத்தாவுக்கு வந்து குடியேறியிருந்த பால்கார முண்டர்களும் சீக்கியர்களும் தங்கள் கைவரிசையைக் காட்ட ஆரம்பித்தார்கள். பழிக்குப்பழி வாங்கும் கோஷம் எங்கெங்கும் கிளம்பியது. முதல் இரண்டு நாளும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஷுஹரவர்த்தியும், அவருடைய சகாக்களும் இப்போது கலவரத்தை அடக்கவும் கல்கத்தாவின் நல்ல பெயரை நிலைநாட்டவும் பெருமுயற்சி செய்தார்கள். ஐந்தாம் நாள் அவர்களுடைய முயற்சி பலன் தந்தது; கலவரம் அடங்கியது. சீதா ஹாவ்ரா ஸ்டேஷனில் வந்திறங்கி ஒரு வாரம் சொல்ல முடியாத மன வேதனைகளை அநுபவித்த பிறகு எட்டாம் நாள் அமரநாத்தின் வீட்டை அடைந்தாள். அமரநாத்தின் வீட்டுக்கு எதிர் வீட்டில்தான் அவளுடைய கணவனும் குழந்தையும் வசித்தார்கள் என்று சித்ராவின் கடிதத்திலிருந்து அவளுக்குத் தெரிந்திருந்ததல்லவா? ஆனால் இப்போது ராகவனும் வஸந்தியும் எதிர் வீட்டில் இல்லை. அமரநாத்தின் வீட்டிலேயே மேல் மச்சில் இருந்தார்கள் என்று தெரிந்தது. அவர்கள் மட்டுமா? புருஷர்களும் ஸ்திரீகளும் குழந்தைகளுமாகத் தென்னிந்தியர்கள் சுமார் நூறு பேர் அந்த வீட்டில் இருந்தார்கள். கலகம் நடந்த பிரதேசங்களிலிருந்து தப்பிப் பிழைத்து வந்தவர்கள்தான் அத்தனை பேரும். அவர்களில் பெரும்பாலோரை அபாயங்களிலிருந்து தப்புவித்து அழைத்துக் கொண்டுவந்து சேர்த்தது தன் கணவன் சௌந்தரராகவன்தான் என்பதை அறிந்தபோது சீதாவின் உள்ளம் பூரித்தது. அப்போது தான் பக்கத்திலிருந்து அவருக்கு உதவி செய்யக் கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கமும் கூட ஏற்பட்டது.

சௌந்தரராகவன் செய்த சேவையைப் பற்றியும் அமரநாத்தின் வீடு தென்னிந்தியர்களின் அடைக்கலம் ஆனது பற்றியும் ஹாவ்ராவிலேயே சீதா தெரிந்து கொண்டிருந்தாள். ஆகையால் நேரே அமரநாத் வீட்டுக்குச் சென்று சித்ராவை தேடிப் பிடித்தாள். சித்ரா சீதாவைப் பார்த்ததும், "வந்தாயா, மகராஜி! ஏதோ இந்த மட்டும் இப்போதாவது வந்து சேர்ந்தாயே? உன் புருஷனாச்சு, நீயாச்சு! மேல் மாடியில் படுத்துக் கிடக்கிறார்! போய்க் கவனித்துக் கொள்!" என்றாள். சீதா நெஞ்சு படபடவென்று அடித்துக் கொள்ள, "அவருக்கு என்ன? ஏன் படுத்திருக்கிறார்?" என்று கேட்டாள். "அவருக்கு என்னவா? 105 டிகிரி காய்ச்சல், ஜன்னி, பிதற்றல் எல்லாந்தான்! இந்த ஏழு நாளும் அவர் செய்திருக்கிற வேலைக்கு சுரம் வந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சுரம் தெளியாமல் அவர் செத்துப் போனாற்கூடப் பரவாயில்லை. நூறு பேரைக் காப்பாற்றிய மனுஷன் அப்புறம் இருந்தால் என்ன? போனால் என்ன?" என்றாள் சித்ரா. கல்கத்தா படுகொலையின்போது அந்த நகரில் வசித்தவர்கள் சாவைப்பற்றி இப்படி அலட்சியமாய்ப் பேசுவது இயற்கையேயல்லவா? ஆனால் சீதா அப்படி நினைக்கவில்லை, "சித்ரா! உனக்குப் புண்ணியம் உண்டு, இப்படியெல்லாம் பேசாதே. நிஜமாக அவருக்கு அபாயம் ஒன்றும் இல்லையல்லவா? பிழைத்துக் கொள்ளுவார் அல்லவா?" என்றும் கேட்டாள். "அது உன்னுடைய சமர்த்து; உன் பெண்ணின் சமர்த்து. நீங்கள் இரண்டு பேரும் செய்கிற சிசுருஷையில் இருக்கிறது அவர் பிழைக்கிறது. டாக்டர் அப்படித்தான் சொல்கிறார். உன் பெண் வஸந்தி இருக்கிறாளே? மகா சமர்த்து. இந்த ஏழு நாளும் எப்படி எனக்கு ஒத்தாசையாயிருந்தாள் என்று நினைக்கிறாய்? கொஞ்சமாவது பயப்படவேண்டுமே? கிடையாது!

எல்லாரும் குலைநடுங்கிக் கொண்டிருந்தபோது அவள் மட்டும் கொஞ்சம் கூடப் பயமில்லாமல் உற்சாகமாகப் பேசிக் கொண்டும் குஷிப்படுத்திக் கொண்டும் இருந்தாள். இப்பேர்ப்பட்ட புருஷனையும் பெண்ணையும் விட்டுவிட்டுத் தேவபட்ட ணத்தில் உனக்கு என்னடி வைத்திருந்தது? போனால் போகட்டும், உடனே இப்போதாவது போய்க் கவனி. வஸந்திக்குக் கை வலித்துப் போயிருக்கும் ஐஸ் வைத்து வைத்து! ஆனாலும் குழந்தை அலுக்காமல் சலிக்காமல் முணுமுணுக்காமல் அப்பாவுக்குச் சிசுருஷை செய்துகொண்டிருக்கிறாள். இந்த வீட்டுக்கு வந்திருக்கும் நூறு பேரைப் பார்த்துக் கொள்வதும் சரி, உன் புருஷன் ஒருவருக்குச் சிசுருஷை செய்வதும் சரி. வேலை செய்தாலும் அப்படி வேலை செய்கிறார்; சுரமாய்ப் படுத்தாலும் அப்படிப் படுத்துகிறார். போ மச்சுக்கு!..." என்று இன்னும் ஏதோ சொல்லிக்கொண்டே சித்ரா விரைந்து போய்விட்டாள். சீதா கவலையும் ஆவலும் முன்னால் தள்ளவும் கூச்சமும் தயக்கமும் பின்னால் இழுக்கவும் தட்டுத் தடுமாறி மச்சுக்குப் போய்ச் சேர்ந்தாள். அங்கேயும் ஒரே ஜனக் கூட்டமும் சந்தடியுமாக இருந்தது. ஆனால் ஒருவரும் சீதாவைக் கவனிக்கவில்லை. அவரவர்கள் தங்கள் தங்களுடைய சொந்த விசாரத்தில் மூழ்கிக் கிடந்தார்கள்.

மேல் மாடியில் சந்தடியில்லாத அறை ஒன்றே ஒன்று இருந்தது. அதில்தான் ராகவன் இருக்க வேண்டும் என்று எண்ணிச் சீதா வெறுமனே சாத்தியிருந்த கதவை மெதுவாகத் திறந்தாள். அவள் நினைத்தபடிதான் இருந்தது. அந்த அறையில் போட்டிருந்த கட்டிலில் ராகவன் படுத்திருந்தான். அவனுடைய கண்கள் மூடியிருந்தன; உணர்ச்சி இல்லாத நிலையில் ஏதோ முனகிக் கொண்டிருந்தான். தலைமாட்டில் வஸந்தி உட்கார்ந்து அப்பாவின் தலையிலும் நெற்றியிலும் ஐஸ் வைத்துக் கொண்டி ருந்தாள். கதவைத் திறந்துகொண்டு சீதா உள்ளே நுழைந்ததும் வஸந்தி குனிந்திருந்த முகத்தைத் தூக்கி அவளை நிமிர்ந்து பார்த்தாள். சொல்லமுடியாத ஆவலும் வியப்பும் அன்பும் ஆத்திரமும் இரக்கமும் கோபமும் அவளுடைய கண்ணின் பார்வையில் கலந்திருந்தன. அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட வரவில்லை. சீதாவுக்குப் பேச நா எழவில்லை; தயங்கித் தயங்கிக் கட்டிலண்டை போனாள். ராகவனுடைய உள்ளங்காலை இலேசாகத் தொட்டாள்; ஜில்லென்று இருந்தது, பிறகு இன்னும் சிறிது நகர்ந்து உள்ளங் கைகளைத் தொட்டுப் பார்த்தாள்; கைகளும் ஜில்லென்று இருந்தன. மேலும் சிறிது நெருங்கிக் கழுத்தின் கீழே மார்பில் கையை வைத்துத் தொட்டுப் பார்த்தாள். அடுப்பில் போட்ட இரும்புச் சட்டியைப் போல் கொதிக்கிறது. ஜுரம் ரொம்ப அதிகமாக இருக்கிறது என்று ஐயமின்றித் தெரிந்தது. இதற்கிடையில் வஸந்தி அம்மா முகத்தையும் அப்பா முகத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சீதா வஸந்தியைச் சந்தித்ததும் என்னவெல்லாமோ சொல்லவேணும் என்று நினைத்திருந்தாள். "என்னைப் பார்க்க வராமல் உன் அப்பாவுடன் போய்விட்டாய் அல்லவா? நீ எனக்குப் பெண் இல்லை!" என்று சொல்வதாகக்கூட உத்தேசித்திருந்தாள். அதற்கெல்லாம் இப்போது சந்தர்ப்பமில்லாமல் போயிற்று.

"வஸந்தி! ஐஸ் பையைச் சற்று என்னிடம் கொடு! உனக்குக் கையை வலிக்குமே?" என்றாள் சீதா. "வேண்டாம், அம்மா! எனக்குக் கை வலிக்கவில்லை. உனக்கு ஐஸ் பை சரியாக வைக்கத் தெரியாது. நெற்றி முழுதும் படும்படி வைக்க வேண்டும்" என்றாள் வஸந்தி. "எனக்குத் தெரியுமடி கண்ணே! தெரியாமற் போனால் நீதான் பக்கத்தில் இருக்கிறாயே, சொல்லிக் கொடு!" என்றாள் சீதா. அவ்வாறே வஸந்தி தன் பக்கத்தில் இருக்க, சீதா ஐஸ் பையை ராகவனுடைய நெற்றியில் வைத்துக் கொண்டிருந்தாள். தாயாரும் பெண்ணும் கொஞ்ச நேரம் ஒருவரையொருவர் பார்ப்பதோடு இருந்தார்கள். வஸந்தியின் முகத்தில் சிறிது நேரத்துக்குப் பிறகு புன்னகை மலர்ந்தது. "அம்மா! நீ இனிமேல் என்னையும் அப்பாவையும் விட்டு விட்டுப் போகவே மாட்டாயே?" என்றாள். சீதாவின் முகமும் சிறிது மலர்ச்சி அடைந்தது. "போகமாட்டேனடி, கண்ணே! முன்னேகூட நான் வேண்டுமென்றா போனேன்? வேறு வழியில்லாமல் போனேன். அப்பாவும் நீயும் என்னை அழைத்துக் கொள்ளாமல் இங்கே வந்துவிட்டீர்கள்!" "அது போனால் போகட்டும், அம்மா! இனிமேல் நீ எங்களை விட்டுவிட்டுப் போகமாட்டாயே!" "போகமாட் டேன்." "ஐந்தாறு நாளாக இந்த ஊரிலே கலகம் பலமாக நடந்தது. கல்கத்தா பட்டணத்திலே உள்ளவர்கள் அவ்வளவு பேரும் கூண்டோ டு கைலாசமாய்ச் செத்துப்போக வேண்டியதுதான் என்று சொல்லிக் கொண்டார்கள், அப்போது எனக்கு என்ன தோன்றிற்று தெரியுமா? சொல், பார்க்கலாம்!"

"தெரியவில்லை, கண்ணே! நீதான் சொல்ல வேண்டும்." "சாகிறதுக்கு முன்னால் உன்னை ஒரு தடவை பார்க்காமல் செத்துப்போக வேண்டியிருக்கிறதே என்று தோன்றியது. அப்படிச் செத்துப் போய்விட்டால்கூட ஆவி ரூபத்தில் நீ இருக்கு மிடம் வந்து உன்னை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போக வேண்டும் என்று தோன்றியது" என்றாள் குழந்தை. "அப்படியெல்லாம் சொல்லாதே வஸந்தி! நல்ல பேச்சாகப் பேசு!" என்றாள் சீதா. "சாவு என்றால் உனக்கு என்னமோ போல் இருக்கிறதாக்கும். இங்கே ஏழு எட்டு நாளாய் ஓயாமல் சாவைப் பற்றித்தான் பேச்சு. அது எங்களுக்குச் சகஜமாய்ப் போச்சு, அம்மா!" "அது இருக்கட்டும், குழந்தை! அப்பாவின் உடம்பைப் பற்றி டாக்டர்கள் என்ன சொன்னார்கள்? என்ன சுரம் என்றார்கள்?" "ஷாக்'கினால் வந்த ஜுரம் என்றுதான் சொன்னார்கள். ரொம்பக் கடுமையாய்த்தான் வந்திருக்கிறது; ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்கள். ஆனால் எனக்கென்னமோ ஒரு அசட்டுத் தைரியம். அப்பா கட்டாயம் பிழைத்துவிடுவார் என்று. ஏழு நாளாக எத்தனை கண்டத்துக்கு அவர் தப்பிப் பிழைத்திருக்கிறார் தெரியுமா?"

"அப்பா செய்ததைப் பற்றி எல்லாரும் சொல்கிறார்களே! அப்படி என்ன செய்தார், வஸந்தி!" "அப்பா செய்ததை யெல்லாம் சொல்வதாயிருந்தால் ஒரு ராமாயணமும் பாரதமும் எழுத வேண்டும் அம்மா! அவ்வளவு செய்திருக்கிறார். ஒன்று சொல்கிறேன் கேள்; ஒரு வீட்டைக் கலகக்காரர்கள் சூழ்ந்து கொண்டு கதவைத் திறக்காவிட்டால் வீட்டுக்கு நெருப்பு வைத்து விடுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். இது தெரிந்ததும் அப்பா என்ன செய்தார் தெரியுமா? கவர்ன்மெண்ட் ஆபீஸரை டெலிபோனில் கூப்பிட்டு ஒரு முஸ்லீமின் வீட்டை ஹிந்துக்கள் தாக்குவதாகச் சொன்னார் - அப்படிச் சொன்னால்தான் கவர்ன்மெண்டார் போலீஸை அனுப்புவார்கள் என்று; போலீஸும் வந்தது. அவர்களை அழைத்துக் கொண்டு அப்பாவே நேரில் போய் அந்த வீட்டிலிருந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தார். இது தெரிந்தவுடனேயே கலகக்காரர்கள் அப்பாவை அடையாளம் வைத்துக் கொண்டு அவரைக் கொன்றுவிடப் பார்த்தார்கள். ஆனால் அவர்களுடைய ஜம்பம் சாயவில்லை....." இந்தச் சமயத்தில் சௌந்தரராகவன் வெறி வந்தவன் போல் பிதற்றத் தொடங்கினான். "ஓகோ! என்னை யார் என்று நினைத்தீர்கள்! கிட்ட வந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவேன். கத்திக்குக் கத்தி, துப்பாக்கிக்குத் துப்பாக்கி, கொலைக்குக் கொலை, பழிக்குப் பழி - தெரியுமா? என்னையும் மகாத்மா காந்தி என்று எண்ணிவிடாதீர்கள்!" என்று கூச்சல் போட்டுக் கொண்டே எழுந்து உட்கார முயன்றான்.

சீதாவும் வஸந்தியும் அவனை மெதுவாகப் பிடித்து மறுபடியும் படுக்கவைத்தார்கள். அப்போது ராகவன் சீதாவை விழித்துப் பார்த்தான். ஆனால் அவள் யார் என்று கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.படுக்கையில் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டு விட்டான். அப்போது சீதா தன் மனதிற்குள் வேண்டிக் கொண்டாள்:- "சுவாமி பகவானே! இவர் ஒருவேளை இந்தச் சுரத்தில் இறந்து போவதாயிருந்தாலும் ஒரே ஒரு தடவையாவது என்னைப் பார்த்து இன்னார் என்று தெரிந்து கொள்ளட்டும். நான் வந்துவிட்டேன், இவருக்கு சிசுருஷை செய்கிறேன் என்பதை அறிந்து கொள்ளட்டும். கடவுளே! இந்த ஒரு வரமாவது எனக்குத் தரவேண்டும்!" இவ்விதம் மனப்பூர்வமாக மன்றாடிப் பிரார்த்தித்தாள் சீதா. ஆனால் அவள் பயந்தது போல் ஒன்றும் நடந்துவிடவில்லை. ராகவனுக்கு நாளுக்கு நாள் உடம்பு குணமாகி வந்தது. நாளுக்கு நாள் அறிவும் தெளிவடைந்து வந்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்து நான்காம் அத்தியாயம்

என் சொர்க்கம்

சீதாவின் வரவினால் ராகவனுடைய சுரம் குணம் அடைந்து வந்ததாகத் தோன்றியது. சுரத்தின் வேகத்தில் அவன் எவ்வளவு முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் எப்படியெல்லாம் சத்தம் போட்டுப் பிதற்றினாலும் சீதாவின் கை பட்டவுடனேயே அவன் உடம்பும் மனமும் சிறிது அமைதி அடைந்தது. இதைக் கவனித்த சித்ரா, "அடியே! இதற்கு முன்னால் நீ என்னவெல்லாம் தவறாக நடந்திருந்தாலும் இப்போது நல்ல சமயத்தில் வந்து உன் புருஷனுடைய உயிரைக் காப்பாற்றினாய். நீ செய்த பாவத்துக்கெல்லாம் பிராயசித்தம் செய்து கொண்டுவிட்டாய்!" என்று சொன்னாள். இதைக் கேட்ட சீதாவின் கண்களில் நீ ததும்பிற்று. சீதா வந்த புதிதில் ராகவனுடைய கண்கள் அவளைப் பார்த்தாலும் அவள் யார் என்று அவன் தெரிந்து கொண்டதற்கு அடையாளம் காணப்படவில்லை. ஆனால் இரண்டு மூன்று நாளைக்குப் பிறகு ஒரு தடவை சீதாவைப் பார்த்தபோது ராகவனுடைய கண்களில் வியப்பும் முகத்தில் மலர்ச்சியும் தோன்றின. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சீதாவுடன் அவன் பேச ஆரம்பித்தான். அவள் கல்கத்தாவுக்கு என்றைக்கு வந்தாள், எங்கே தங்கியிருந்தாள் என்பதைப் பற்றியெல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். ஹாவ்ராவில் அவளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரித்தவர்களைப் பற்றி ரொம்பவும் சிலாகித்தும் பேசினான்.

குழந்தை வஸந்தி கேட்ட கேள்வியையே ஒரு நாள் சௌந்தரராகவனும் சீதாவிடம் கேட்டான். "உன் பிரயாண மெல்லாம் முடிந்து விட்டதல்லவா? இனிமேல் எங்கேயும் போக வேண்டாம் அல்லவா?" என்றான். "முன்னேயும் எனக்குப் போக வேண்டியிருக்கவில்லை. இனிமேலும் எனக்கு எங்கும் போல வேண்டியிராது!" என்றாள் சீதா. "அப்படிப் போவதாயிருந்தாலும் வஸந்தியை விட்டு விட்டுப் போகாதே! எங்கே போனாலும் அவளையும் கூட அழைத்துக் கொண்டு போய் விடு!" என்றான் ராகவன். "வஸந்தியையும் விட்டுப் போகவில்லை; உங்களையும் விட்டுப் போக உத்தேசமில்லை" என்றாள் சீதா. "என்னைப் பற்றிக் கவலை என்னத்திற்கு!" என்றான் ராகவன். சீதா பதில் சொல்லாமல் ராகவனுடைய முகத்தைத் துயரம் ததும்பிய கண்களினால் ஏறிட்டுப் பார்த்தாள். மற்றொரு நாள் ராகவன், "சீதா! உனக்கு இந்தக் கல்கத்தா நகரம் ரொம்பப் பிடித்திருக்கிறது என்று சித்ரா சொன்னாள், அது வாஸ்தவந்தானே?" என்று கேட்டான். சீதா சிறிது முக மலர்ச்சியுடன், "ஆமாம்; கல்கத்தா எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. இங்கேயே நான் இருந்து விடுவதில் எனக்குப் பூரண சம்மதந்தான்!" என்றாள். "ரொம்ப சந்தோஷம்; நீயும் வஸந்தியும் இங்கேயே இருந்து விடலாம். உங்களுக்கு நல்ல துணையும் இருக்கிறது. சித்ராவையும் அவளுடைய கணவனையும் போல் நல்லவர்கள் எங்கும் கிடைக்கமாட்டார்கள்!" என்று சொன்னான் ராகவன். சீதா சந்தேகக் குரலில், "நானும் வஸந்தியும் மட்டும் இங்கே இருக்கிறதோ? நீங்கள்?" என்றாள்.

"எனக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை, அதிலும் இங்கே நடந்த கோர கிருத்யங்களையெல்லாம் பார்த்த பிறகு அடியோடு பிடிக்காமற் போய் விட்டது. இங்கே இருந்தேனானால் என்னுடைய மூளை சரியாகவே ஆகாது. உடம்பு கொஞ்சம் சரியானதும் இங்கிருந்து கிளம்பிப் போய் விடவேண்டும் என்று உத்தேசித்திருக்கிறேன்." "தயவு செய்து இப்படிப் பிரித்துப் பேச வேண்டாம். உங்களுக்கு இந்த ஊர் பிடிக்கவில்லை என்றால், எனக்கும் பிடிக்கவில்லை. உங்களுக்கு எந்த ஊர் பிடிக்கிறதோ, அந்த ஊர்தான் எனக்கும் பிடிக்கும். நீங்கள் எங்கே போகிறதாக உத்தேசம்?" "நான் பஞ்சாப் மாகாணத்துக்குப் போகிறதாக இருக்கிறேன்." "நீங்கள் பஞ்சாபுக்குப் போகிறதாயிருந்தால், நானும் அந்த பஞ்சாபுக்கே வருகிறேன்." "ஒரு வேளை பஞ்சாப் தேசம் உனக்குப் பிடிக்காது!" "பிடிக்காமல் என்ன? டில்லியில் நாம் இருக்கும்போதே பஞ்சாபுக்குப் போய்ப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது. அமிர்தசரஸில் சீக்கியர்களின் அற்புதமான பொற்கோயில் இருக்கிறதாம். இந்தியாவிலேயே பெரிய மசூதி அங்கே இருக்கிறதாம், அதையெல்லாம் பார்க்கலாம் அல்லவா?" ராகவனுடைய முகம் சுருங்கியது. "சீதா! உன்னை ஒன்று கேட்டுக் கொள்கிறேன். வேறு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசு, ஆனால் மசூதி என்கிற பேச்சை மட்டும் நான் இருக்கும் போது எடுக்காதே! என் உடம்பு பதறுகிறது!" என்றான். சீதாவுக்குப் பழைய நினைவுகள் எல்லாம் குமுறிக்கொண்டு வந்தன. தாஜ்மகாலைப் பார்க்கவேண்டும், அக்பர் சமாதியைப் பார்க்க வேண்டும் என்பது போன்ற ஆசைகளினால் தனக்கு நேர்ந்த இன்னல்களையெல்லாம் நினைத்துக் கொண்டாள்.

"ஏதோ யோசியாமல் சொல்லிவிட்டேன். எனக்கு இனிமேல் ஒரு இடத்தையும் பார்க்கவேண்டாம், உங்களையும் வஸந்தியையும் பார்த்துக்கொண்டேயிருந்தால் அதுவே போதும்!" என்றாள். சீதாவின் இந்த வார்த்தைகள் சௌந்தர ராகவனுக்குச் சொல்ல முடியாத இன்பத்தை, வெகுகாலமாக அவன் அநுபவித்திராத அபூர்வ மகிழ்ச்சியை அளித்தன. இன்னொரு நாள் ராகவன், "சீதா! எதற்காக நான் இங்கிருந்து பஞ்சாபுக்குப் போகத் தீர்மானித்தேன் தெரியுமா?" என்று கேட்டான். "தெரியாது; எனக்குக் காரணம் தெரிய வேண்டியதுமில்லை! பஞ்சாபுக்கு நீங்கள் போக விரும்புவது ஒன்றே போதும்." "இல்லை; உனக்குக் காரணம் தெரிந்திருக்கவேண்டும். நான் சீமையிலிருந்து திரும்பி வந்தவுடனேயே நான் வேலை செய்யும் கம்பெனிக்காரர்கள் `பஞ்சாபுக்குப் போகிறாயா? அங்கே லாகூரில் ஷாலியார் தோட்டம் இருக்கிறதாம். மானேஜர் உத்தியோகம் தருகிறோம்' என்று கேட்டார்கள். நான் அதற்கு உடனே பதில் சொல்லவில்லை. பஞ்சாப் டில்லிக்குப் பக்கத்தில் இருப்பதால் அங்கே போக எனக்கு அச்சமயம் விருப்பமாக இல்லை. ஆனால் இங்கே ஆகஸ்டு 16ம் தேதி ஆரம்பித்து நடந்த சம்பவங்களைப் பார்த்த பிறகு `வசித்தால் பஞ்சாபிலேதான் வசிக்க வேண்டும்' என்று முடிவு செய்துவிட்டேன். உலகத்தில் எத்தனையோ மகான்கள் எவ்வளவோ மதங்களை ஸ்தாபிக்கிறார்கள். அவர்களுக்குள்ளே சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குருநானக் என்பவரையே நான் மிகப்பெரிய மகான் என்று கருதுகிறேன். அவர்தான் ஒரு மதத்தை ஸ்தாபித்ததோடு ஒரு வீர சமூகத்தையும் படைத்தார்.

உலகத்திலே வீரர்கள் என்று சொன்னால் சீக்கியர்களைத்தான் சொல்லவேண்டும். கேள், சீதா! இந்த ஊரில் கலகம் ஆரம்பித்த முதல் இரண்டு நாள் நான் என்ன நினைத்தேன், தெரியுமா? கல்கத்தாவிலும் வங்காளத்திலும் ஹிந்து என்று சொல்லிக்கொள்ள ஒரு ஆணோ, பெண்ணோ, குழந்தையோ இல்லாமற் போய்விடும் என்று நினைத்தேன். மூன்றாம் நாள் என்ன ஆயிற்று தெரியுமா? கிளம்பினார்கள், சீக்கியர்கள்! இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலோர் டாக்ஸி கார் ஓட்டிய டிரைவர்கள். அவர்கள் கையில் கிர்பானை எடுத்துக்கொண்டு புறப்பட்ட பிறகுதான் கல்கத்தாவிலும் வீர புருஷர்கள் இருக்கிறார்கள் என்று ஏற்பட்டது! கல்கத்தாவில் உள்ள முப்பது லட்சம் ஹிந்துக்களும் உயிர் பிழைத்தார்கள்! இப்படிப்பட்ட வீரர்களின் தாய்நாடு பஞ்சாப் தேசம். அத்தகைய நாட்டில் போய் இருப்பதே புண்ணியம் என்று எனக்குத் தோன்றுகிறது. ஒருவேளை என்னுடைய மனோ நிலையை உன்னால் புரிந்துகொள்ள முடியாமலிருக்கலாம்!" என்று தயங்கிச் சொன்னான் ராகவன். உண்மையில் ராகவனுடைய மனோநிலையை சீதாவினால் புரிந்துகொள்ள முடியவில்லைதான். பஞ்சாபியர்களைப்பற்றி அவளுடைய நினைவுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. டில்லியில் அவள் பஞ்சாபியருடன் பழகியிருக்கிறாள். சுத்த முரடர்கள்; நாகரிகமில்லாதவர்கள். வங்காளிகளின் நாகரிகம் என்ன, படிப்பு என்ன, மரியாதை என்ன? கல்கத்தாவில் வங்காளிகளுடன் அவளுக்கு ஏற்பட்டிருந்த சொற்பப் பழக்கம் அவர்களைப் பற்றி மிக நல்ல அபிப்பிராயத்தை அளித்திருந்தது. அமர்நாத் ஆகியவர்களின் அபிப்பிராயமும் அதற்கு ஒத்தேயிருந்தது.

பழைய காலமாயிருந்தால் ராகவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் மறுத்து ஒன்பது வார்த்தை சீதா சொல்லி யிருப்பாள். ஆனால் இப்போது இந்த இயல்பு அவளிடம் மாறிப் போயிருந்தது. ராகவனுடைய உடல்நிலையும் அவனுடன் மாறுபட்டுப் பேசக் கூடாது என்று வற்புறுத்தியது. ஆகையால் ராகவன் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சீதா கூறினாள்: "என்னத்திற்காக இவ்வளவு தூரம் வளைத்து வளைத்துப் பேசுகிறீர்கள்? நான்தான் முன்னமேயே சொல்லி விட்டேனே? எனக்குக் காரணம் ஒன்றுமே தெரியவேண்டியதில்லை. உங்களுக்குப் பிடித்த இடம் எதுவோ அதுதான் எனக்குப் பிடித்த இடம் அந்த நாளிலும் அப்படித்தான் நினைத்திருந்தேன். இப்போதும் அவ்விதமே எண்ணியிருக்கிறேன். நடுவில் தலைவிதியின் காரணமாக அங்குமிங்கும் சுற்றியலைய நேர்ந்தது. அதெல்லாம் பழைய கதை, இனிமேல் உங்களை நான் பிரியப் போவதில்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அதுதான் என்னுடைய சொர்க்கம்...." இந்தக் கடைசி வார்த்தை களைக் கேட்டுக் கொண்டு சித்ராவும் அமரநாத்தும் உள்ளே வந்தார்கள். "இப்போதுதான் எனக்கு உண்மையில் சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஊரில் கலகம் வந்தாலும் வந்தது உங்கள் இரண்டு பேரையும் ஒன்று சேர்த்து வைத்தது. எப்படிப்பட்ட கெட்டதிலும் ஒரு நல்லது இருக்கும் என்று இதனாலேதான் நம் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்!" என்றாள் சித்ரா. "எங்களை ஒன்று சேர்த்து வைப்பதற்காக இவ்வளவு பயங்கரமான கலகம் நடக்க வேண்டுமா? அதற்காகப் பத்தாயிரம் பேர் செத்துப் போகவேண்டுமா" என்றாள் சீதா. "இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்தக் கலகத்தை ஆரம்பித்ததே நான்தான் என்று சொன்னாலும் சொல்லுவீர்கள் போலிருக்கிறது!" என்று சௌந்தரராகவன் தமாஷ் செய்தான். "கலகத்தை நீங்கள் ஆரம்பித்து வைக்கவில்லை; உங்கள் மனைவி ஸ்ரீமதி சீதாதேவிதான் ஆரம்பித்து வைத்தார்! அவர் ஹாவ்ரா ரயில்வே ஸ்டேஷனில் வந்து இறங்கிய அன்றைக்குத் தானே கலகம் ஆரம்பித்தது?" என்றான் அமரநாத்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்து ஐந்தாம் அத்தியாயம்

அடுத்த ஆண்டு

நமது கதையின் முடிவு நெருங்கி வரும் சமயத்தில் நாமும் கொஞ்சம் அவசரமாகப் போகவேண்டியிருக்கிறது. காலண்டரில் ஏறக்குறைய ஒரு வருஷத்தை அப்படியே புரட்டித் தள்ளிவிட்டு, அடுத்த 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதிக்கு வருவோம். அன்றைய தினம் சுதந்திர பாரத தேசத்தின் ஜகஜ் ஜோதியான தலைநகரமாய் விளங்கிய டில்லி மாநகரத்துக்குச் செல்வோம். 1942 -ம் வருஷத்திலிருந்து இந்தியா தேசத்துக்கு ஆகஸ்டு மாதம் முக்கியமான மாதமாயிற்று. அந்த வருஷம் ஆகஸ்டு மாதத்திலேதான் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் அதன் உச்ச நிலையை அடைந்தது. பிற்பாடு, 1946-ம் வருஷம் ஆகஸ்டில் முஸ்லிம் லீக் கொண்டாட விரும்பிய நேர் நடவடிக்கை (டைரக்ட் ஆக்ஷன்) தினம் இந்தியத் தாயின் திருமேனியைப் புண்படுத்தி, அதன் மூலம் ஆகஸ்டு மாதத்துக்கு முக்கியம் அளித்தது. 1947-ம் வருஷம் ஆகஸ்டு மாதமோ இந்திய சரித்திரத்திலேயே இணையற்ற முக்கியம் பெற்றது. ஆயிரம் வருஷத்துக்கு மேல் அடிமையாக வாழ்ந்திருந்த பாரத தேசம் அந்த வருஷம் ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி சுதந்திர தேசம் ஆயிற்று. நாற்பது கோடி இந்திய மக்கள் விடுதலைப் பேறு அடைந்தார்கள். அதே சமயத்தில் அவர்களில் முப்பத்திநாலு கோடிப் பேர் இந்திய யூனியன் என்னும் தனிச் சுதந்திர நாட்டினராகவும், பாக்கி ஆறு கோடிப் பேர் சுதந்திர பாகிஸ்தான் பிரஜைகளாகவும் பிரிந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த வைபவத்தைத் தேசமெங்கும் மகத்தான உற்சாகத்துடனே கொண்டாடினார்கள். இந்திய சுதந்திர அரசாங்கத்தின் தலைநகரமான டில்லியிலே கொண்டாடினார்கள் என்று சொல்லவும் வேண்டுமா? அன்று காலையிலிருந்து டில்லியும் புதுடில்லியும் ஒரே கோலாகலமாயிருந்தன. சுதந்திரத் திருநாளன்று மாலை டில்லி மாநகரம் அளித்த அலங்காரக் காட்சியைப் போல் அதற்கு முன்னால் அக்பர், ஜஹாங்கீர், ஷாஜஹான் காலத்திலே கூடப் பார்த்திருக்க முடியாது. அந்த நாளில் மின்சார விளக்கு ஏது? அல்லது இவ்வளவு பொதுஜன உற்சாகத்துக்குத்தான் இடம் ஏது? முக்கியமாக, சரித்திரப் பிரசித்தமான 'சாந்தனி சவுக்' என்னும் வெள்ளி வீதியும், அந்த வீதியிலுள்ள மணிக்கூண்டும், டவுன் ஹாலும், இன்னும் சுற்றுப்புறங்களும், அற்புதமான தீபாலங்காரங்களும் ஜகஜ்ஜோதியாகப் பிரகாசித்துக் கண்கொள்ளாக் காட்சியளித்தன!

சூரியாவும் தாரிணியும் அன்று சாயங்காலம் டில்லியின் குதூகலக் கொண்டாட்டங்களையும் தீபாலங்காரங்களையும் பார்த்துக் கொண்டு வெள்ளி வீதியில் நடந்து கொண்டிருந்தார்கள். டில்லி நகரம் தீபங்களினால் ஜொலித்ததுபோல் அவ்விருவருடைய முகங்களும் பிரகாசமாயிருந்தன. இதே வெள்ளி வீதியில் சூரியாவும் தாரிணியும் போலீஸாரின் கையில் அகப்படாமல் இருப்பதற்காக வேஷந்தரித்துக் கொண்டும், வெளிச்சம் மேலே படாமல் ஒளிந்து மறைந்து கொண்டும் எத்தனையோ தடவை நடந்ததுண்டு. ஆனால் இப்போது அம்மாதிரியான பயமுமில்லை; தயக்கமு மில்லை, ஒளிவு மறைவுக்கு அவசியமும் இல்லை. சூரியா கதர்க்குல்லா அணிந்து கொண்டும், தாரிணி ஆரஞ்சு வர்ணப்புடவை அணிந்து கொண்டும், பகிரங்கமாகக் கைகோத்துக் கொண்டும் பேசிக் கொண்டும் நடந்தார்கள். பதினாயிரக்கணக்கான ஜனக் கூட்டத்துக்கு மத்தியில் நடந்தபோதிலும் அவர்களுக்குத் தங்களைத் தவிர வேறு யாரும் அக்கம்பக்கத்தில் இருப்பதாகவே ஞாபகமில்லை. அவ்வளவு மெய்மறந்த உற்சாகத்துடன் அவர்கள் உல்லாசமாகப் பேசிக் கொண்டு சென்றார்கள். "இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்து கொண்டாட்டமும் நடத்துவதை நம்முடைய ஜீவிய காலத்தில் பார்ப்பதற்குக் கொடுத்து வைத்திருந்ததே! இதைக் காட்டிலும் நமக்குக் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் வேறு என்ன இருக்கிறது?" என்றாள் தாரிணி. "நம்மைப் பொறுத்த வரைக்கும் இதைவிட மேலான அதிர்ஷ்டம் ஒன்று இருக்கத்தான் இருக்கிறது. அது நம்முடைய கலியாண வைபவந்தான்!" என்று சொன்னான் சூரியா. "இன்று டில்லி நகரின் அலங்கார தீபங்கள் வானத்து நட்சத்திரங்களுடன் போட்டி போடுகின்றன என்று சொன்னால் பொருத்தமாகவே இருக்கும். வானத்து நட்சத்திரங்களை எண்ணினாலும் எண்ணலாம். இந்தத் தீபங்களை எண்ண முடியாது போலிருக்கிறதே?" என்றாள் தாரிணி. "நான் ஒன்று சொன்னால் நீங்கள் வேறொன்று சொல்கிறீர்களே? நம்முடைய வரப்போகும் கலியாணத்தைப் பற்றி நான் குறிப்பிட்டேன். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நாம் திருமணம் செய்து கொள்கிறது என்று பேசி முடிவு செய்திருந்தோமல்லவா? அதைப்பற்றி இப்போது உங்கள் அபிப்பிராயம் என்ன? தயவுசெய்து சொல்லவேணும்?" என்றான் சூரியா.

"இதே வெள்ளி வீதியில் முன்னே நாம் எத்தனை தடவை போலீஸுக்குப் பயந்து தயங்கிப் பதுங்கி நடந்திருக்கிறோம். அதையெல்லாம் நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. அப்போது நாம் பேசிக் கொண்டதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது. காந்திஜியினாலும் மற்ற மிதவாத காங்கிரஸ் தலைவர்களினாலும் இந்தியாவுக்குச் சுதந்திரம் வரப்போவதில்லை - அவர்களையெல்லாம் தலைமைப் பதவியிலிருந்து துரத்தி விட்டுப் பொதுஜனப் புரட்சி இயக்கத்தை நடத்த வேண்டும் - சோசலிஸ்ட் கட்சியினால்தான் அந்த மகா இயக்கத்தை நடத்தமுடியும் என்றெல்லாம் பேசிக் கொண்டோ மல்லவா? கடைசியாகப் பார்த்தால் அந்த மகாத்மா கிழவரும் மிதவாதக் காங்கிரஸ் தலைவர்களுமே இந்தியாவின் சுதந்திரத்தை நிலைநாட்டி விட்டார்களே?" என்றாள் தாரிணி. "அதைப்பற்றி இப்போது என்ன விவாதம்? எந்தச் சட்டியில் சுட்டாலும் பணியாரம் வேகவேண்டியதுதானே முக்கியம்? பணியாரம் வெந்து விட்டது! சுதந்திரம் வந்து விட்டது! நாம் கலியாணம் செய்து கொள்வதற்கிருந்த இதர தடையும் நீங்கிவிட்டது!" என்றான் சூரியா. "இந்தியா உண்மையில் சுதந்திரம் அடைந்து விட்டதென்றா சொல்கிறீர்கள்? எனக்குச் சந்தேகமா யிருக்கிறது!" என்றாள் தாரிணி. "அதிலேகூடச் சந்தேகம் வந்துவிட்டதா? 'காந்திஜியின் ஆத்ம சக்தி வென்று விட்டது!' 'இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது!' 'பண்டிட் மவுண்ட் பேட்டனுக்கு ஜே!' என்று தேசமெல்லாம் ஒரே கோஷமாயிருக்கிறதே! அதில் சந்தேகம் என்ன இருக்க முடியும்? ஆகையால் நம் முன்னால் உள்ள அடுத்த முக்கியமான புரோகிராம் நம்முடைய திருமணந்தான்!" என்றான் சூரியா. "சூரியா! ஒரே பல்லவியைத் திருப்பித் திருப்பிப் பாடுகிறீர்களே?" "வேறு என்ன பல்லவியை இன்று பாடுவது? 'ஜனகணமன' 'வந்தே மாதர' கீதங்களைத்தான் ரேடியோவில் விடாமல் கொலை செய்து கொண்டிருக்கிறார்களே! ஆகையால் நம்முடைய கலியாணத் தேதியை இந்த நல்ல நாளில் நிச்சயம் செய்யலாம்."

"இந்தியா தேசம் சுதந்திரம் அடைந்தது உண்மையானால் எதற்காகத் தேசம் இரண்டாகப் பிளக்கப்பட வேண்டும்? சுதந்திர இந்தியா சுதந்திரமாகச் செய்த காரியமா இது?" "இந்தியா இரண்டாகப் பிரிந்ததினால் இப்போது என்ன மோசம் போய்விட்டது? இரண்டு பிரிவுகளும் தனித்தனியாகச் சுதந்திரம் அனுபவித்துப் போகட்டுமே! மேலும், இந்தியா பிரிந்தது என்றால் கோடரியைப் போட்டுப் பிளந்துவிட்டார்களா? அல்லது பீகார் பூகம்பத்தைப் போல் பூகம்பம் வந்து பிளந்துவிட்டதா? அப்படி ஒன்றும் இல்லையே? பாரதபூமி இன்னும் ஒரே பூமியாகத்தானே இருக்கிறது?" என்றான் சூரியா. "அதைப் பற்றித்தான் சந்தேகப்படுகிறேன். தாயின் இரண்டு கைகளையும் வெட்டித் துண்டித்துத் தனியாகப் போட்டுவிட்டது மாதிரி எனக்குத் தோன்றுகிறது!" "அதெல்லாம் ஒன்றுமில்லை, ஆதிகாலத்திலிருந்து நம் இந்தியா தேசம் பல ராஜ்யங்களாகப் பிளவுபட்டே இருந்திருக்கிறது." "அந்தப் பிளவுகள் அரசியல் காரணம் பற்றியவை. இது மதத்தின் பெயரால் ஏற்பட்ட பிரிவினை அல்லவா?" "அதை நான் ஒப்புக் கொள்ளவில்லை, மதத்திற்காக ஏற்பட்ட பிரிவினை என்று எப்படிச் சொல்லலாம்? இந்தியாவில் முஸ்லிம்களும் பாகிஸ்தானில் ஹிந்துக்களும் வாழ்ந்திருக்கத்தானே போகிறார்கள்?" "அதுதான் சந்தேகம், சூரியா! 'டான்' பத்திரிகையை இன்று பார்க்க வில்லையா? அமிருதசரஸ் கடைவீதி தீப்பிடித்து எரிகிறதாமே!" "'டான்' பத்திரிகையில் வந்தது வெறும் புளுகாயிருக்கும்.அப்படியே இருந்தாலும் இருக்கட்டும். தேசத்துக்காக நாம் கவலைப்பட்டதெல்லாம் போதும்! எது எப்படியாவது போகட்டும். இப்போது நம் கலியாணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்!" "நமக்குள் கலியாணம் எப்படிச் சாத்தியம்? மத வித்தியாசம் ஒன்று இருக்கிறதே! நீங்கள் ஹிந்து; நான் முஸ்லிம்." "இது என்ன புதிய தடை புறப்படுகிறது! நான் ஹிந்துவுமல்ல; நீங்கள் முஸ்லிமும் அல்ல. நமக்கு மதம் என்பதே கிடையாது.

மனித தர்மந்தான் நம்முடைய மதம். இதைப்பற்றிப் பல தடவை பேசி முடிவு கட்டியிருக்கிறோம்! மேலும் நீங்கள் முஸ்லிம் மதத்தினர் என்பதாக நான் என்றைக்கும் நம்பவேயில்லை. சில சமயம் முஸ்லிம் ஸ்திரீயைப்போல் உடை தரித்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் முஸ்லிம் ஆகிவிட முடியாது." "ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமா யிருந்தால்....?" "ஒருவருடைய தாயும் தகப்பனும் முஸ்லிமாயிருந்தால் அதைப் பற்றி ரஜினிபூர் ராஜகுமாரிக்கு என்ன கவலை?" என்றான் சூரியா. தாரிணி கலகலவென்று சிரித்தாள். "முஸ்லிம் ஸ்திரீயைப் போன்ற வேஷம் சில காரியங்களுக்கு ரொம்பவும் சௌகரியமாயிருக்கிறது. இல்லாவிட்டால் ரஜினிபூர் அரண்மனையை விட்டு நான் வெளிக் கிளம்பியிருக்கவே முடியாது. ரஜினிபூர் ராஜாவும் அவருடைய தாயாரும் என்னை எப்படியாவது அங்கே இருக்கப் பண்ண வேண்டும் என்று பார்த்தார்கள். பாதி ராஜ்யம் கேட்டால்கூடக் கொடுத்திருப்பார்கள். ஆனால் நான் முஸ்லிம் ஸ்திரீ என்பதை அவர்களால் சகிக்க முடியவில்லை! அதனாலேயே நான் அங்கிருந்து புறப்படச் சம்மதித்தார்கள். இப்போது கூட நான் உண்மையில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்துவிடவில்லையென்று சொன்னால் போதும்; ரஜினிபூர் அரண்மனைக்கு நான்தான் ராணி!" "கூடவே கூடாது; என் இதய ராஜ்யத்துக்குத் தாங்கள் ராணியாயிருந்தால் போதும்; நமக்குக் கலியாணம் ஆனவுடனே...." "சூரியா! உங்களுக்குக் கூச்சம் என்பதே கிடையாதா? ஆயிரம் பதினாயிரம் ஜனங்களுக்கு மத்தியிலேதானா காதலையும் கலியாணத்தையும் பற்றிப் பேசுவது? கொஞ்சம் தனி இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டு பேசக் கூடாதா?" என்றாள் தாரிணி.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்து ஆறாம் அத்தியாயம்

தந்தியின் மர்மம்

தாரிணியும் சூரியாவும் டில்லி டவுன்ஹாலுக்குப் பின்னால் உள்ள பூந்தோட்டத்துக்குச் சென்று அங்கே போட்டிருந்த சலவைக்கல் பெஞ்சி ஒன்றில் உட்கார்ந்து கொண்டார்கள். டவுன் ஹாலின் தீபாலங்கார ஒளி நிலா வெளிச்சத்தைப் போல் நாலாபுறமும் கவிந்து பரந்திருந்தது. நகரத்தின் பல பகுதிகளிலும் நடந்த சுதந்திரக் கொண்டாட்டங்களின் கோலாகல சத்தம் சில சமயம் குறைவாகவும் சில சமயம் அதிகமாகவும் கேட்டது. அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்த இடத்தை ஒட்டிச் சென்ற நடைபாதைகளில் குறுக்கும் நெடுக்கும் ஜனங்கள் கும்பல் கும்பலாகப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் குதூகலமாகப் பேசிக்கொண்டும் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டும் சென்றார்கள். அவர்களுடைய கவனமெல்லாம் அன்று நடந்த சுதந்திர விழா வைபவங்களிலே ஈடுபட்டிருந்தபடியால் சூரியாவும் தாரிணியும் அங்கே தனித்து உட்கார்ந்திருப்பதை அவர்களில் யாரும் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை. சூரியா ஆர்வத்துடன் கூறினான்:- "தாரிணி! இங்கே அக்கம்பக்கத்தில் நம்முடைய பேச்சை ஒட்டுக் கேட்கக் கூடியவர்கள் யாரையும் காணோம். நாம் தாராளமாக மனம் விட்டுப் பேசலாம் அல்லவா? உண்மையில் நம்முடைய கலியாண விஷயத்தை ஆயிரம் பேருக்கு மத்தியில் சாட்சி வைத்துக்கொண்டு பேசி முடிவு செய்வதே விசேஷமாயிருக்கும் என்று நினைத்தேன். ஏனெனில் முன்னொரு சமயம் நாம் இப்படித்தான் தனிமையாக உட்கார்ந்து பேசினோம். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நம்முடைய கலியாணத்தை முடித்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தோம்...." தாரிணி குறுக்கிட்டு, "கொஞ்சம் தவறாகச் சொல்கிறீர்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நம்முடைய கலியாணத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று முடிவு செய்தோம்!" என்றாள். "அப்படியே இருக்கட்டும், இப்போது அதைப் பற்றி நாம் யோசிப்பதற்கு வேறு தடை ஏதாவது இருக்கிறதா?" என்று கேட்டான் சூரியா.

அந்தச் சமயத்தில் வெள்ளி வீதியிலிருந்து, "மகாத்மா காந்திக்கும் ஜே!" "பண்டிட் மவுண்ட்பேட்டனுக்கு ஜே!" என்று ஜனங்கள் பலத்த குரலில் கோஷமிடும் சத்தம் கேட்டது. "கோஷத்தைக் கேட்டீர்களா? இத்தனை ஜனங்கள் இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது என்று நம்பிக் குதூகலப்படுகிறார்கள். ஆனால் உங்களுக்கு மட்டும் இந்தியா சுதந்திரம் பெற்றதில் நம்பிக்கை உண்டாகவில்லை!" என்று சூரியா சுட்டிக் காட்டினான். "எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கத்தான் இருக்கிறது. ஆனால் என் மனது மட்டும் எதனாலோ நிம்மதி அடையவில்லை என்று தோன்றுகிறது." "அப்படியானால் அது என்னுடைய தவறில்லை; காந்தி மகாத்மாவின் தவறு. அந்தத் தவறைத் திருத்துவதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை. தாரிணி! நம்முடைய கலியாணத்துக்குத் தடையாக இருப்பது வேறு ஏதாவது உண்டா?" என்று சூரியா கேட்டான். "இன்னும் ஒரு தடை இருக்கிறது. என்னுடைய தாயார் தகப்பனாரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் நான் கலியாணம் செய்து கொள்ள விரும்பவில்லை! என் தாயார் தகப்பனார் யார் என்று தெரியாவிட்டால் எந்தச் சம்பிரதாயப்படி நாம் கலியாணம் செய்து கொள்வது?" "இது என்ன, சீர்திருத்த ஆவேசமுள்ள புரட்சித் தலைவியான தாரிணி திடீரென்று வைதிகச் சம்பிரதாயத்தில் பற்று கொண்ட அதிசயம்! குருட்டு நம்பிக்கைகளையும் அர்த்தமற்ற பழைய ஆசாரங்களையும் தகர்த்தெறிந்து காதல் தெய்வத்தின் சந்நிதியில் கலியாணம் செய்து கொள்வது என்று நாம் எத்தனையோ தடவை பேசி முடிவு செய்யவில்லையா?"

"பேசும்போது அதெல்லாம் சரியாகத் தோன்றியது. காரியத்தில் வரும்போது தயக்கமாயிருக்கிறது. சூரியா! என் பெற்றோர்கள் யார் என்று தெரியாத வரையில் என் மனம் நிம்மதி அடையாது. இதுவரையில் இந்தியா தேசத்தின் சுதந்திர இயக்கத்தில் கவனம் சென்று கொண்டிருந்தது, இனிமேல் அதுவும் இல்லை. என் தாய் தகப்பனார் யார் என்ற விசாரம் என் மனதை ஓயாமல் வாட்டிக் கொண்டிருக்கும். இந்த விசாரம் தீரும்வரை இல்வாழ்க்கையில் என்னால் உங்களுக்குச் சுகமும் நிம்மதியும் ஏற்படாது." "அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நீ படுகிற விசாரத்தை நானும் பகிர்ந்துகொண்டு அநுபவிப்பேன். உன் காரணமாக எனக்கு ஏற்படுகிற கஷ்டம் எல்லாம் உண்மையில் சுகமென்றே தோன்றும். ஆனாலும் உன்னுடைய மன நிம்மதி மிகவும் முக்கியமானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக வேண்டிய பிரயத்தனம் செய்யத் தயாராயிருக்கிறேன். தாரிணி! உன்னுடைய பெற்றோர்கள் யார் என்பதைப்பற்றி உன் மனதில் எந்தவிதமான சந்தேகமோ, ஊகமோ தோன்றியதில்லையா?" "தோன்றாமல் என்ன? பல தடவை தோன்றித்தானிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு தடவையும் என் ஊகம் பொய்யாய்ப் போயிருக்கிறது. முதலில் ரஸியா பேகத்தை என் தாயார் என்றும் சீதாவின் தகப்பனார்தான் எனக்கும் தகப்பனார் என்றும் எண்ணியிருந்தேன் அது பிசகு என்று ஏற்பட்டது. ரஸியா பேகம் உண்மைத் தாயார் அல்லவென்றும் வளர்ப்புத் தாயார் என்றும் வெளியாயிற்று. பிறகு என் உண்மைத் தாயார் யார் என்று கண்டுபிடிக்க முயன்றேன். ரஸியா பேகத்தின் சகோதரி கங்காபாய் என் தாயார் என்றும், அவள் அபாக்கியவதியாக அற்பாயுளில் இறந்தாள் என்றும் தெரிந்தது. அதற்குப் பிறகு என் தகப்பனார் யார் என்று கண்டுபிடிக்க முயன்று வருகிறேன் இன்றுவரை அது தெரிந்தபாடில்லை." "தாரிணி! நிச்சயமாக நீ ரஜினிபூர் ராஜாவின் புதல்வி அல்லவா?"

"நான் எப்படிச் சொல்ல முடியும்? ரஜினிபூர் பெரிய ராணி நான் ராஜகுமாரிதான் என்று சொல்லுகிறாள். முதலில் அதை மறுதளித்த ரஸியா பேகமும் இப்போது அதுதான் உண்மையென்று சொல்லுகிறாள். காலஞ்சென்ற ராஜாவின் சொந்த சொத்தில் நான் பங்கு கேட்கவேண்டும் என்றுகூட ரஸியாபேகம் விரும்புகிறாள். ஆனால் என் மனத்திற்குள் மட்டும் ஏதோ ஒன்று நிச்சயமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது; நான் ஒரு சுதேச ராஜாவின் குமாரியாக இருக்க முடியாது என்று." "தாரிணி! என் மனத்திலிருந்து ஒரு பெரிய பாரம் இறங்கியது போலிருக்கிறது. உன் உள் உணர்ச்சி எப்போதும் சரியாயிருப்பது வழக்கம். இது விஷயத்திலும் அது சரியாகத்தானிருக்க வேண்டும்." "ஆனாலும் என்ன உண்மை என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். சூரியா! சில சமயம் ஒரு விசித்திரமான எண்ணம் என் மனதில் உண்டாகிறது. சீதாவை நான் என்று எண்ணிக் கொண்டு ரஜினிபூர் ஆட்கள் பிடித்துக்கொண்டு போனார்கள் அல்லவா? இது ஏன் என்று சில சமயம் தான் சிந்தனை செய்வதுண்டு. நீங்கள் போலீஸ் பாதுகாப்பிலிருந்து தப்பித்துக் கொண்டு போன பிறகு நான் சீதாவின் கதியை அறிந்து கொள்வதற்காக ரஜினிபூருக்குப் போனேன். ராஜமாதாவும் ராஜகுமாரரும் வற்புறுத்தியதின் பேரில் சில நாள் அங்கேயே தங்கியிருந்தேன். அப்போது அவர்கள் பல தடவை சீதாவின் முகஜாடை என் முக ஜாடையைப் போல் இருந்ததாகவும் அதனால்தான் அந்தப் பிசகு நேர்ந்ததாகவும் சொன்னார்கள். இது உண்மையா? அப்படியானால் இதன் காரணம் என்னவாயிருக்கக்கூடும்? உங்களால் ஊகித்துச் சொல்ல முடியுமா?" என்று தாரிணி கேட்டாள்.

சூரியா சிந்தனையில் ஆழ்ந்தாள். ரஜினிபூர் ஆட்கள் அத்தகைய தவறு ஏன் செய்தார்கள்? ஒருவேளை அவர்கள் செய்த தவறில் தாரிணியின் பிறப்பைக் குறித்த இரகசியம் இருக்குமோ? அது என்னவாயிருக்ககூடும்? - சூரியாவுக்கு விளங்கவில்லை. "எனக்கு அத்தகைய காரணம் ஒன்றும் தோன்றவில்லை. இந்தப் புதிரை அவிழ்க்கக் கூடியவர்கள் வேறு யாரும் இல்லையா, தாரிணி!" "இல்லாமல் என்ன? ரஸியா பேகத்துக்கும் மௌல்வி சாகிபுக்கும் அது நிச்சயம் தெரியும். ஒரு நாளைக்கு அவர்கள் இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. மௌல்வி சாகிபு என்னிடம் உண்மையைச் சொல்லிவிடவேண்டும் என்று வற்புறுத்தினார். ரஸியா பேகம் கூடாது என்று சொன்னாள். இருவருக்கும் இது விஷயமாகப் பெரிய சண்டையே நடந்தது. அது ஒன்றும் என் காதில் விழாதது போல் நான் நடந்துகொண்டேன். ஏனெனில் வற்புறுத்திக் கேட்டால் உண்மை வெளி வராது. சந்தர்ப்பம் பார்த்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்." "மௌல்வி சாகிபு என்று யாரைச் சொல்லுகிறாய்? ஜும்மா மசூதிக்கு எதிரில் நீ சில காலம் வசித்த சந்து வீட்டில் குரான் வாசித்துக் கொண்டிருந்தாரே, அவரையா?" "ஆமாம், சூரியா! அவரைத்தான் சொல்கிறேன்." "அவர் யார், தாரிணி? அந்த மௌல்வி சாகிபு யார்?" "இது என்ன கேள்வி? மௌல்வி சாகிபு ரஸியா பேகத்தின் கணவர்!" என்றாள் தாரிணி. "அது தெரியும், மௌல்வி சாகிபு ரஸியா பேகத்தின் கணவராவதற்கு முன்னால் அவருடைய பெயர் என்ன என்று கேட்டேன்."

தாரிணி சிறிது நேரம் யோசனை செய்துவிட்டுக் கூறினாள்: "உங்களுக்கு அது தெரிந்திருக்க வேண்டியதுதான். நீங்களே ஊகித்துத் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். அதை மறைத்து வைப்பதில் இனி உபயோகமும் இல்லை சூரியா! அந்த மௌல்வி சாகிபு, சீதாவின் தகப்பனார் துரைசாமி ஐயர்தான்." சூரியா மௌனமாக இருந்தான்; தாரிணி கூறியதை அவன் மனம் ஜீரணம் செய்து கொண்டிருந்தது. "என்ன? ஒரே ஆச்சரியக் கடலில் மூழ்கிவிட்டீர்கள் போலக் காணப்படுகிறது!" என்றாள் தாரிணி. "அப்படி ஒன்றும் இல்லை, சில விஷயங்களை ஞாபகப்படுத்திக் கொண்டேன். சீதா தன்னை ஆக்ரா கோர்ட்டில் ஒரு முஸ்லிம் வந்து சாட்சி கூறிக் காப்பாற்றியதாகச் சொன்னாள். எனக்கு உடனே உங்கள் வீட்டில் பார்த்த மௌல்வியின் ஞாபகம் வந்தது. இரண்டையும் இரண்டையும் கூட்டி நாலு என்று ஊகம் செய்து கொண்டேன். தாரிணி! அந்தச் சாகிபுவை நான் உடனே பார்க்க விரும்புகிறேன்." "எதற்காக? அவரிடம் சண்டை பிடிப்பதற்காகவா?" "ஆமாம்." "ரஸியா பேகத்தைக் கலியாணம் செய்து கொண்டதற்காகவா? அல்லது அவர் ஹிந்து மதத்துக்குத் துரோகம் செய்ததற்காகவா?" "அதற்கெல்லாம் இல்லை, அவர் எங்களையெல்லாம் மறந்துவிட்டிருப்பதற்காக ஒரு முக்கிய விஷயம் அவரைக் கேட்டு நான் தெரிந்து கொள்ள வண்டும். சீதாவின் கலியாணத்தன்று அவர் 'கலியாணத்தை நிறுத்தவும்' என்று தந்தி கொடுத்திருந்தார். அதன் காரணத்தை இன்னொரு சமயம் சொல்கிறேன் என்றார். பிறகு அவரைக் கேட்பதற்குச் சந்தர்ப்பம் ஏற்படவேயில்லை. தாரிணி! இப்போது உடனே போய் நான் அவரைப் பார்த்தாக வேண்டும்."

"அது முடியாத காரியம், மௌல்வி சாகிபும் ரஸியா பேகமும் கொஞ்ச நாளாக இந்த ஊரில் இல்லை. போகிற இடமும் என்னிடம் சொல்லவில்லை. ஆனால் அந்தத் தந்தியின் காரணத்தை நானே சொல்லிவிடக்கூடும், சூரியா! கஷ்டமான விஷயந்தான்; ஆனால் சொல்லி விடுகிறேன். அந்தச் சமயம் வரையில் உங்கள் மாமாவை நான் என் தகப்பனார் என்றும், ரஸியா பேகத்தைத் தாயார் என்றும் எண்ணிக் கொண்டிருந்தேன். சௌந்தரராகவனுக்கும் எனக்கும் இருந்த நட்பைக் குறித்து ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன் அல்லவா? அந்த நட்பில் ஏமாற்றமும் வெறுப்பும் அடைந்து பீகார் பூகம்ப விபத்தில் சேவை செய்வதற்காக நான் புறப்பட்டுப் போனேன். அந்தச் சமயத்தில் ரஸியா பேகம் ரஜினிபூர் ராஜாவைக் குத்த முயன்று சிறை சென்றாள். இந்தச் செய்தியை எனக்குக் கூறி ஆறுதல் சொல்லுவதற்காகத் துரைசாமி ஐயர் என்னைத் தேடிக்கொண்டு வந்தார். செய்தியைச் சொல்லிவிட்டு எனக்கு ஆறுதலாக ரஸியா பேகம் உண்மையில் என் தாய் அல்ல என்றும் சொன்னார். கலியாணம் செய்துகொண்டு சுகமாய் வாழும்படி எனக்கு போதித்தார். அப்போதுதான் நான் வரித்திருந்த புருஷனுக்கே சீதாவை மணம் செய்யப் பேசியிருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரிந்தது. பாவம்! என்னிடம் அவருக்கு ரொம்பவும் அபிமானம் உண்டு. ஆகையினாலேதான் 'கலியாணத்தை நிறுத்திவிடவும்' என்று அவர் தந்தி கொடுத்தார். அவர் தந்தி கொடுத்தது அப்போது எனக்குத் தெரியாது. வெகுகாலத்துக்குப் பிற்பாடுதான் தெரிந்தது."

"தாரிணி! அந்தத் தந்தியின் மர்மம் இன்னதென்பது வெகுகாலமாக என் உள்ளத்தை வருத்தி வந்தது; அதை இன்று வெளியிட்டதற்காக வந்தனம். அந்தத் தந்தி விஷயமாக நான் மிக்க மூடத்தனமாக நடந்து கொண்டேன். அதை யாரிடமும் காட்டாமல் மறைத்து வைத்தேன்; தந்தியில் கண்டிருந்தபடி கலியாணத்தை மட்டும் நிறுத்தி விட்டிருந்தால்?.... அடாடா! சீதாவின் வாழ்க்கை இவ்வளவு துன்பமயமாகியிராதல்லவா? நாம் நல்லது என்று நினைத்துக் கொண்டு செய்கிற காரியம் சில சமயம் எவ்வளவு கெடுதலாய் முடிந்துவிடுகிறது!" "நல்ல எண்ணத்துடன் செய்கிற காரியம் ஒரு நாளும் கெடுதலாய் முடியாது. இப்போது சீதாவும் சௌந்தரராகவனும் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்தால் பரவசமடை வீர்கள்." "அவர்கள் சந்தோஷமாயிருப்பது உனக்கு எப்படித் தெரியும், தாரிணி? நேரில் பார்த்ததைப் போலச் சொல்லு கிறாயே?" "ஆமாம்; பஞ்சாபுக்குப் போய் நேரில் அவர்களைப் பார்த்தபடியினால்தான் சொல்லுகிறேன்." "ஆகா! அது எப்போது? பஞ்சாபுக்கு எப்போது போயிருந்தாய்? சீதா நிஜமாகவே சந்தோஷமாகவே இருக்கிறாளா?" என்று சூரியா அடங்காத ஆர்வத்துடன் கேட்டான். "அத்தங்காளைப்பற்றிச் சொன்னதும் வருகிற ஆத்திரத்தைப் பார்!" என்றாள் தாரிணி. "என்னைவிடச் சீதாவின் விஷயத்தில் உனக்கு அக்கறை அதிகமாயிருப்பது நன்றாய்த் தெரிகிறதே? நான் போய் அவர்களைப் பார்க்கவில்லையே? நீதானே பார்த்திருக்கிறாய்? இத்தனைக்கும் நாம் அவர்களுடைய வாழ்க்கையில் தலையிடுவதினால் அவர்களுக்குத் தொல்லைதான் ஏற்படுகிறது என்று நாம் இருவரும் சேர்ந்து தீர்மானம் செய்திருந்தோமே!...."

"சீதாவின் விஷயத்தில் எனக்கு ஏன் இத்தனை பாசம் என்பது எனக்கே விளங்கவில்லைதான்....." "தாரிணி! நிஜமாகச் சீதாவின் மேல் உள்ள பாசத்தினாலே தான் நீ பஞ்சாபுக்குப் போனாயா?" "இல்லை! பஞ்சாபுக்குப் புறப்பட்டபோது அவர்களைப் பார்க்கும் உத்தேசம் எனக்கில்லை. இந்த வருஷ ஆரம்பத்தில் மறுபடியும் என்னுடைய சரித்திர ஆராய்ச்சி வேலையை நான் ஆரம்பித்தேன். ராவல்பிண்டிக்கு அருகிலுள்ள தட்சசீலத்துக்கு நானும் என் தோழி நிர்மலாவும் போனோம். அங்கே நாங்கள் பார்த்த அற்புதங்களைப் பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டும். திரும்பி வரும்போது சீதா வசிக்கும் ஹௌஷங்காபாத் வழியாக வரவேண்டியிருந்தது. இறங்கி அவளைப் பார்க்காமல் வருவதற்கு என் மனம் கேட்கவில்லை. இறங்கியதும் நல்லதாய்ப் போயிற்று. சீதாவும் சௌந்தரராகவனும் குழந்தை வஸந்தியும் எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறார்கள் தெரியுமா? வஸந்தியின் கன்னங்கள் காஷ்மீர் ரோஜாப் புஷ்பங்களைப் போல இருக்கின்றன. அந்தக் குழந்தையின் முகம் என் மனதைவிட்டுப் போகவேயில்லை. சீதாவும் உடம்பு நன்றாய்த் தேறியிருக்கிறாள்...." "சௌந்தரராகவனும் நன்றாய்த்தானிருக்கிறார்! போன வருஷம் இந்த நாளில் யமலோகத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் என்று காட்டுவதற்கு யாதொரு அடையாளமும் இல்லை!" என்று சூரியா சொன்னதும் தாரிணி வியப்படைந்தாள். "நீங்கள் அவரைப் பார்த்தீர்களா, என்ன? எப்போது எங்கே?" என்று கேட்டாள். "சௌந்தரராகவன் பெயரைச் சொன்னதும் வருகிற ஆத்திரத்தைப் பார்" என்றான் சூரியா. "எங்கள் பழைய சரித்திரத்தை நானும் மறந்துவிட்டேன். அவரும் அடியோடு மறந்துவிட்டார்; சீதாவுங்கூட மறந்து விட்டாள். நீங்கள் மட்டும் மறக்கவில்லை போலிருக்கிறது!" என்றாள் தாரிணி. "மன்னிக்க வேண்டும், நானும் அந்தப் பழைய கதையையெல்லாம் மறந்துதான் இருந்தேன்.

ஆனால் இன்று காலையில் ராகவனைப் பார்த்தபடியால் பழைய கதை நினைவு வந்தது...." இத்தனை நேரமும் சாவதானமாக உட்கார்ந்திருந்த தாரிணி சட்டென்று எழுந்து நின்றாள். "இன்று காலையில் பார்த்தீர்கள் என்றால் இந்த டில்லியில் தான் பார்த்திருக்க வேண்டும். அவரை மட்டுமா? சீதாவும்கூட இருந்தாளா?" "அவரை மட்டும்தான் பார்த்தேன், சீதாவை அழைத்து வரவில்லையாம். உத்தியோக சபலம் அவரை மறுபடியும் பிடித்துக் கொண்டிருக்கிறது. இப்போதுதான் புதுடில்லியில் சுதந்திர அரசாங்கம் ஏற்படப் போகிறதே? தம்முடைய உத்தியோகத்தை திருப்பிக் கொடுக்கமாட்டார்களா என்று பார்ப்பதற்காக வந்தாராம். டில்லிக்கு வந்து ஒரு வாரம் ஆயிற்றாம்." "ஐயோ! இது என்ன விபரீதம்? இரண்டு நாளாக அடிக்கடி எனக்குச் சீதாவின் ஞாபகம் வந்து கொண்டிருக்கிறது. அதன் காரணம் இப்போதுதான் தெரிகிறது. சூரியா! சௌந்தரராகவன் எங்கே தங்கியிருக்கிறார்? அவரை நான் உடனே பார்க்க வேண்டும்." "அவரை உடனே பார்க்க முடியாது, இன்று காலையிலேயே அவர் கல்கத்தாவுக்கு ரயில் ஏறிவிட்டார். அவருடைய உத்தியோக சம்பந்தமான பழைய ரிகார்டுகள் கல்கத்தாவில் தங்கிவிட்டனவாம். அவற்றை எடுத்து வருவதற்காகப் போகிறாராம். தமக்கு மறுபடி உத்தியோகம் வந்துவிடும் என்றும் டில்லிக்கே திரும்பி வந்துவிடப் போவதாகவும் எக்களிப்புடன் சொன்னார். அதைக் குறித்து நீ ஏன் இவ்வளவு பதட்டமடைய வேண்டும், தாரிணி!" "ஏன் என்று எனக்கே தெரியவில்லை. சூரியா! என்னுடைய உள் உணர்ச்சியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று சொன்னீர்கள். சீதாவுக்கு ஏதோ ஆபத்து வரப் போகிறது என்று என் உள் உணர்ச்சி சொல்லுகிறது. அவளைக் காப்பாற்றுவதற்கு நாம் உடனே கிளம்பியாக வேண்டும்." "இது என்ன பைத்தியம்?" "எனக்கு பைத்தியம் இல்லை; ராவல்பிண்டி கலவரத்தின் போது நான் பஞ்சாப்பில் இருந்தேன்.

அந்தப் பயங்கரங்களைப் பற்றி இப்போது நினைத்தாலும் குலை நடுங்குகிறது. ராவல்பிண்டியைப்போல் ஆயிரம் ராவல்பிண்டிகள் பஞ்சாப் முழுதும் நடக்கலாம் என்று அங்கிருந்து வந்தவர்கள் சொல்லுகிறார்கள். நம்முடைய கட்சியைச் சேர்ந்த சிநேகிதர்கள் பலர் பஞ்சாபில் இருக்க விரும்பாமல் இங்கே வந்துவிட்டார்கள்." "அப்படியிருந்தால் சௌந்தர ராகவனுக்குத் தெரிந்திராதா? அவர் ஏன் சீதாவை விட்டுவிட்டு வருகிறார்?" எனக்குப் பைத்தியம் என்று சொன்னீர்கள் அல்லவா? பைத்தியம் எனக்கில்லை; அவருக்குத்தான். பஞ்சாப் சீக்கியர்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று அவர் ஒரே திட நம்பிக்கையில் இருக்கிறார். அதனாலேயே சீக்கியர் வசிக்கும் பகுதியில் அவர் வீடு எடுத்துக் கொண்டு வசிக்கிறார். ஆனால் அவருடைய நம்பிக்கை பைத்தியக்கார நம்பிக்கை. சூரியா! நீங்கள் என்னுடன் வரப்போகிறீர்களா? இல்லையா? வரா விட்டால் நான் தனியாகவே போகப் போகிறேன். ஒருவேளை நீங்கள் இங்கே இருப்பதே நலமாயிருக்கும்." "ஒரு நாளும் இல்லை தாரிணி! உன்னுடன் நரகத்துக்கு வேண்டுமானாலும் வரத் தயார் என்று பல தடவை நான் சொல்லி யதுண்டு. அவசியமானால் அதைக் கட்டாயம் நிறைவேற்றுவேன். ஆனால் இது அவசியமா, உசிதமா என்று மறுபடியும் யோசிக்க வேண்டும். நாம் சீதாவின் விஷயத்தில் தலையிட்ட போதெல்லாம் அவளுக்குக் கஷ்டந்தான் நேர்ந்திருக்கிறது....." "அதெல்லாம் பிராயசித்தம் செய்யும்படியான சந்தர்ப்பம் இப்போது ஒருவேளை ஏற்படுமோ, என்னமோ? யார் கண்டது?" என்று சொல்லிக்கொண்டே தாரிணி விரைவாக நடக்கத் தொடங்கினாள். சூரியா அவளைத் தொடர்ந்து சென்றான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்து ஏழாம் அத்தியாயம்

இருளில் ஒரு குரல்

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது; கடிகாரத்தின் முட்கள் பன்னிரண்டு எண்ணிக்கையைச் சமீபித்துக் கொண்டிருந்தன. சீதா கையில் 'டிரிப்யூன்' பத்திரிகை வைத்திருந்தாள். கொஞ்சம் பத்திரிகை படிப்பதும் பிறகு ஏதோ யோசிப்பதும் கடிகாரத்தைப் பார்ப்பதும் மறுபடி படிப்பதுமாயிருந்தாள். தூக்கம் வராத இரவுகளில் சீதா ஏதாவது புத்தகமோ பத்திரிகையோ படிப்பது வழக்கம். சிறிது நேரத்துக்கெல்லாம் தூக்கம் வந்துவிடும். ஆனால் அன்றைக்கு வெகுநேரம் படித்தும் தூக்கம் வரவில்லை. பல காரணங்களால் அவளுடைய மனம் ஏற்கனவே கலக்கமுற்றிருந்தது. பத்திரிகையில் படித்த செய்திகள் அந்தக் கலக்கத்தை அதிகப்படுத்தின. ஹௌஷங்காபாத் நகரத்தின் கோடியில் அது ஒரு தனி வீடு. சுற்றிலும் சிறு தோட்டமும் காம்பவுண்டு சுவரும் இருந்தன. வீட்டின் மச்சு அறையில் சீதா தன்னந் தனியாக இருந்தாள். இல்லை, 'தன்னந்தனியாக' என்று சொல்வது தவறு. பக்கத்துக் கட்டிலில் குழந்தை வஸந்தி படுத்துத் தூங்கினாள். ஆனால் குழந்தை வஸந்தியைத் துணை என்று சொல்ல முடியாதல்லவா? சீக்கிய காவற்காரன் தினம் தினம் இராத்திரி எட்டு மணிக்கு வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு ஒன்பதரை மணிக்குள் திரும்பி வந்து விடுவது வழக்கம். அன்றைக்கு எதனாலோ அவன் திரும்பவில்லை. இந்தப் பத்திரிகையில் வந்திருக்கும் செய்திகளுக்கும் அவன் வராததற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த வஸந்தியின் மீது சீதாவின் பார்வை சென்றது. குழந்தையின் கன்னங்கள் உப்பி இரண்டு அழகிய ஆப்பிள் பழங்களைப்போலக் காணப்பட்டன. மூடிய கண்களுடன் தூங்கிய குழந்தையின் முகத்தில் களை சொட்டிற்று. பஞ்சாபுக்கு வந்த பிறகு குழந்தைக்கு உடம்பு நன்றாய் ஆகியிருக்கிறது. ஒரு வருஷத்தில் எவ்வளவு நல்ல வளர்த்தி! நம்முடைய ஊர்ப் பக்கமாயிருந்தால், குழந்தைக்கு இப்போது மேலாக்குப் போட வேண்டும் அல்லது சித்தாடை உடுத்த வேண்டும் என்பார்கள். ஆனால் இந்தப் பக்கத்திலேதான் பெரிய பெரிய ஸ்திரீகள் எல்லாரும் கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்து கொண்டு ஒரு அங்கவஸ்திரத்தையும் தரித்துக் கொண்டு வெளியில் புறப்பட்டு விடுகிறார்களே? இங்கே தேச ஆசாரம் அப்படி! குழந்தைக்கு மேலாக்கு, சித்தாடை வாங்குவது பற்றி என்ன கவலை?

சுவரிலே மாட்டியிருந்த வஸந்தியின் போட்டோ படத்தைச் சீதா பார்த்தாள். பஞ்சாப் பெண்களைப் போல் கால் சட்டை, மேல் சட்டை, அங்கவஸ்திரத்துடன் விளங்கிய வஸந்தியின் படம் அது, அந்த உடை குழந்தைக்கு அழகாய்த் தானிருக்கிறது. ஆனால் சில வருஷம் போன பிறகு நன்றாயிருக்குமா? ஒருவேளை இந்தப் பக்கத்திலேயே நாம் நெடு நாள் இருந்துவிட்டால் வஸந்தி வயதான பின்னரும் இப்படித்தான் உடை தரிப்பாளோ, என்னமோ? இந்த ஊரிலேயே இருப்பதற்கு ஆட்சேபம் என்ன? ஒன்றுமேயில்லை, பஞ்சாபைப் போன்ற தேசமே கிடையாது. எந்த விதத்தில் பார்த்தாலும் சரிதான். கள்ளிச் சொட்டைப் போலக் கனமான பால், ரூபாய்க்கு இரண்டரைப் படி. ஆப்பிளும் ஆரஞ்சும் திராட்சையும் வாதாமியும் கொள்ளை கொள்ளையாய்க் கிடைக்கின்றன; மற்ற சாமான்களும் அப்படித்தான். ஏன் எல்லாருக்கும் உடம்பு நன்றாய் ஆகாது? இந்தத் தேசத்து ஜனங்கள் எல்லாரும் நல்ல ஆஜானுபாகுவாக வளர்ந்திருப்பதற்குக் கேட்பானேன்? ஆகா! இந்தப் பக்கத்தின் இயற்கை அழகைத்தான் என்னவென்று சொல்ல? ஏதோ நம்முடைய பக்கங்களிலும் 'வஸந்த காலம்' என்று சொல்கிறார்கள். அங்கேயெல்லாம் வசந்த காலத்தைக் கண்டது யார்? புத்தகங்களிலே படிப்பதுதான். இங்கேயோ சரியாகப் பிப்ரவரி மாதம் 15-ம் தேதி வஸந்த காலம் பிறப்பதைக் கண்ணாலே காணலாம். முதல் நாள் வரையில் மரங்கள் எல்லாம் மொட்டை மொட்டையாய் நிற்கும். பிப்ரவரி மாதம் 15-ந் தேதியன்று பார்த்தால் மரங்களில் எல்லாம் சின்னஞ்சிறு சிவந்த மொட்டுக்களைக் காணலாம். முதலில் மொட்டுக்கள் மலரும்; பிறகு இலைகள் தளிர்க்கும். பிப்ரவரி 14-ந் தேதி வரையில் வாசற் பக்கமெல்லாம் வெறுங் கட்டாந் தரையாகக் காணப்படும். சரியாக 15-ந் தேதியன்று எங்கே பார்த்தாலும் தரையில் சிறு சிறு மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்கும். பூமாதேவி திடீரென்று குதூகலித்துச் சிரிப்பது போன்ற அக்காட்சியை எப்படி வர்ணிப்பது? இவ்வளவு அழகான நாட்டை விட்டு ஏன் போகவேண்டும்? கோடைகாலத்தில் இங்கே வெயில் என்னமோ கடுமைதான்; சந்தேகம் இல்லை; ஆனால் பக்கத்தில் காஷ்மீர் இருக்கிறது; சிம்லா இருக்கிறது; இன்னும் பல மலை வாசங்களும் இருக்கின்றன.

மே, ஜுன் மாதங்களில் மலைக்குப் போய்விட்டு வந்தால் மற்ற மாதங்களைப் பற்றிக் கவலையே இல்லை. பஞ்சாபுக்கு வந்தபிறகு, ஏறக்குறைய இந்தப் பத்து மாத காலமும் சீதாவின் வாழ்க்கை ஒரே ஆனந்தமயமாக இருந்தது, வம்பு இல்லை, தும்பு இல்லை, அசூயை இல்லை, ஆத்திரம் இல்லை, பொறாமை இல்லை, புழுங்குவதும் இல்லை, சிநேகிதர்கள் இல்லை, விரோதிகளுமில்லை. தான் உண்டு, தன் கணவனின் அன்பு உண்டு, தன் குழந்தையின் மழலை உண்டு, வேறு என்ன வேண்டும் இந்த உலகத்தில்? இத்தகைய ஆனந்தமயமான வாழ்வு இன்னும் எத்தனை காலம் நிலைத்து நிற்குமோ தெரியவில்லையே? மறுபடியும் அந்தப் பாழும் டில்லிக்குப் போக வேண்டிவருமோ, என்னமோ, தெரியவில்லையே? இவருக்கு என்னத்துக்காகத் திடீரென்று சர்க்கார் உத்தியோக மோகம் மறுபடியும் பிடித்துக் கொண்டது? என்ன இருந்தாலும் புருஷர்களுடைய போக்கே விசித்திரமானதுதான். வீட்டில் அமைதியும் இன்பமும் குடிகொண்டிருந்தால் அவர்களுக்குப் போதுவதில்லை. கூட்டமும் கூச்சலும் அதிகாரமும் ஆர்ப்பாட்டமும் தடபுடலும் இருந்தால்தான் புருஷர்களுக்கு வாழ்க்கை ரஸிக்கும் போலும். கிளப்புகள், பார்ட்டிகள், விருந்துகள் இல்லாமல் அவர்களால் அதிக காலம் உற்சாகமாக இருக்க முடியாது போலும்! இல்லாமற் போனால், பஞ்சாபுக்கும் வந்த புதிதில் இருந்த உற்சாகம் அவருக்கு இப்போது ஏன் இல்லாமற் போயிற்று? சிரிப்பும் குதூகலமும் களிப்பும் விளையாட்டும் ஏன் வர வர குறைந்து போய்விட்டன?

பத்து நாளைக்கு முன்புதான் திடீரென்று அவர் இந்த வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். "சீதா! ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் வரப் போகிறது. நம்முடைய சொந்த சர்க்கார் ஏற்படப் போகிறது. புரட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நான் வீட்டில் இடம் கொடுத்தேன் என்பதற்காகத்தானே எனக்கு உத்தியோகம் போயிற்று? போன உத்தியோகம் ஆகஸ்டு 15-ந் தேதி எனக்குத் திரும்பி வந்துவிடும்!" என்றார். "அப்படியானால் இந்த ஊரைவிட்டு டில்லிக்குப் போக வேண்டியிருக்குமோ?" என்று சீதா கேட்டாள். அவளுடைய குரலில் தொனித்த கவலையைத் தெரிந்து கொண்டு ராகவன், "டில்லிக்குப் போய்த்தான் தீரவேண்டும் என்று அவசியம் இல்லை. இஷ்டமிருந்தால் டில்லிக்குப் போகலாம். இஷ்டம் இல்லாவிட்டால் பாகிஸ்தானுக்கு 'ஆப்ட்' செய்து கொண்டு பஞ்சாபிலேயே உத்தியோகம் பார்க்கலாம். சீதா! உன்னிடம் உண்மையைச் சொல்லி விடுகிறேனே! என்னதான் இருந்தாலும் சர்க்கார் உத்தியோகத்தைப் போல கம்பெனி உத்தியோகம் ஆகாது. ஆயிரம் ரூபாய் சம்பளம் குறைவாயிருந்தாலும் சரி, சர்க்கார் உத்தியோகத்தின் மவுஸே வேறுதான்" என்றான் சௌந்தரராகவன். இதற்குப் பிறகு சீதா ஆட்சேபம் சொல்ல விரும்பவில்லை. "அதற்கென்ன சந்தேகம்? சர்க்கார் உத்தியோகம் திரும்பி வந்தால் வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா?" என்றாள். "ஆனால் சர்க்கார் உத்தியோகம் நம்மைத் தேடிக் கொண்டு வராது. நாம் அதைத் தேடிக் கொண்டு போகவேண்டும். டில்லிக்குப் போய் அதற்காகக் கொஞ்சம் வேலை செய்தாக வேண்டும். உடனே புறப்பட்டுப் போனால்தான் கைகூடும். திரும்பி வரப் பத்துப் பதினைந்து நாள் பிடிக்கலாம். நீ இங்கேயே இருக்கிறாயா, சீதா? அல்லது என்கூட நீயும் வருகிறாயா?" என்று கேட்டான் ராகவன். "நான் உங்களுடன் வந்தால் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்குமா?" என்று சீதா கேட்டாள். "அப்படிப் பிரமாத இடைஞ் சலாயிராது. கொஞ்சம் இடைஞ்சலாயிருந்தாலும் பொறுத்துக் கொள்ள வேண்டியது தான்!"

இதன் பிறகு சீதா டில்லிக்கு ராகவனுடன் போகும் எண்ணத்தை விட்டு விட்டாள். அடிக்கடி ராகவன் வெளியூர் களுக்குக் கம்பெனி காரியமாகப் போவதுண்டு. அதுபோல இப்போது போய்விட்டு வருகிறார். தான் எதற்காகப் பரபரப்பு அடைய வேண்டும்? டில்லிக்குத் தானும் போனால் அதிக நாள் அங்கே தங்கும்படி நேர்ந்தாலும் நேர்ந்துவிடும். அவர் மட்டும் தனியாகப் போனால் சீக்கிரம் திரும்பி வந்துவிடுவார்! இவ்விதம் மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு ராகவனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள். ராகவன் போய் இரண்டு நாளைக்குப் பிறகு சிறிதும் எதிர்பாராத விதமாகப் பாமா என்பவள் வந்து சேர்ந்தாள். முன்னொரு காலத்தில் அவள்பேரில் சீதாவுக்கு ரொம்பவும் கோபம் இருந்தது. ஆனால் இப்போது சீதாவின் மனதில் கோபத்துக்கோ ஆங்காரத்துக்கோ அசூயைக்கோ சிறிதும் இடம் இருக்கவில்லை. அப்படி எப்போதேனும் சிறிது ஆங்காரம் தோன்றினாலும் தேவபட்டணத்திலிருந்து தான் நள்ளிரவில் புறப்பட்ட அன்று காந்தி மகாத்மாவின் படத்தின் முன்னிலையில் செய்த பிரதிக்ஞையை நினைவுபடுத்திக் கொள்வாள். உடனே ஆங்காரம் அடங்கிச் சாந்தம் குடி கொள்ளும். எனவே, பாமாவைச் சீதா அன்புடன் வரவேற்றாள். அவளுடைய குணமும் இப்போது நல்ல விதத்தில் மாறியிருந்தது கண்டு மகிழ்ந்தாள். ராகவன் டில்லிக்குப் போக நேர்ந்தது பற்றி இன்னொரு காரணத்தை பாமாவிடமிருந்து சீதா அறிந்தாள். ராகவன் எந்தக் கம்பெனியில் உத்தியோகம் பார்த்தானோ அந்தக் கம்பெனியார் பஞ்சாபில் தங்களுடைய கடையைக் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்களாம். பஞ்சாப் பாகிஸ்தானில் சேரப் போவதுதான் அதற்குக் காரணமாம். ஆகையால், "இனி பஞ்சாப்பில் உனக்கு வேலை இல்லை! மதராஸுக்குப் போகிறாயா?" என்று ராகவனைக் கேட்டிருந்தார்களாம். இதனால் வெறுப்படைந்துதான் ராகவன் திரும்பவும் சர்க்கார் உத்தியோகத்தைத் தேடிப்போயிருக்க வேண்டும் என்று பாமா சொன்னாள்.

லாகூரில் கம்பெனியின் காரியங்களை முடிவு செய்வதற்காகப் பாமாவின் தகப்பனார் லாகூருக்கு வந்திருந்தாராம். அவருடன் வந்திருந்த பாமா, ராகவன் என்ன செய்யப் போகிறார் என்று தெரிந்து கொண்டு போவதற்காக ஹொஷங்காபாத்துக்கு வந்தாளாம். இதையெல்லாம் கேட்ட சீதாவுக்கு கொஞ்சம் மனக் கலக்கம் அதிகமாயிற்று. பஞ்சாப் பாகிஸ்தானில் சேர்வதற் காகக் கம்பெனியை எதற்காக மூடவேண்டும் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் ராகவன் மதராஸுக்குப் போக விரும்பாதது இயற்கைதான் என்பதை உணர்ந்திருந்தாள். ஆகையால் டில்லியிலே உத்தியோகம் பார்க்க வேண்டியிருந்தாலும் நான் தடை சொல்லுவதில்லையென்று எண்ணிக் கொண்டாள். பாமா மேலும் சில தினங்கள் சீதாவுடன் அங்கே இருந்தாள். பஞ்சாபின் நிலைமைகளைப் பற்றி ஏதேதோ பயங்கரமான விஷயங்களைக் கூறினாள். அந்த நிலைமையில் ராகவன் சீதாவைத் தனியாக விட்டுவிட்டுப் போனது பற்றிக் குறை கூறினாள். சீதா அதை மறுக்கவே, "அப்படியானால் நானும் ராகவன் வரும் வரையில் இங்கே இருக்கின்றேன்!" என்றாள். ஆனால் ஆகஸ்டு மாதம் 12-ம் தேதியன்று "அப்பா என்னைப் பற்றிக் கவலைப் படுவார்; நான் இனி இருக்க முடியாது" என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டாள். பாமா போன பிறகு சீதா தன்னுடைய தனிமையை அதிகமாக உணர ஆரம்பித்தாள். மனதில் கலக்கம் மணிக்கு மணி அதிகமாகிக் கொண்டு வந்தது. ஆயினும் தைரியத்தை அடியோடு இழந்துவிடவில்லை. 'உலகத்தில் பார்க்க வேண்டிய பயங்கரங்களையெல்லாம் பார்த்தாகிவிட்டது. அநுபவிக்க வேண்டிய கஷ்டங்களையெல்லாம் அநுபவித்தாகிவிட்டது. புதிதாக இனிமேல் எனக்கு என்ன கஷ்டம் வந்துவிடப் போகிறது?' என்று அடிக்கடி தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மனதைத் திடப்படுத்திக் கொள்ள முயன்றாள்.

பாமா சென்று இன்றைக்கு நாலு தினம் ஆகிவிட்டது. ராகவனிடம் இருந்தோ கடிதம் ஒன்றும் வரவில்லை. ஏன் பிடிவாதம் பிடித்து ராகவனுடன் தானும் போகவில்லையென்று தோன்றியது. பாமாவை வற்புறுத்தித் தன்னுடன் இருக்கும்படி சொல்லாமற் போனதும் பிசகுதான். பத்திரிகையிலே போட்டிருக்கும் செய்திகளையெல்லாம் பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது! எங்கே, எப்போது, என்ன நடக்கும் என்று குமுறிக் கொண்டிருக்கிறதாமே? இப்படியெல்லாம் பத்திரிகையில் எழுதியிருப்பதில் அர்த்தந்தான் என்ன? விளக்கை அணைத்துவிட்டுச் சீதா படுத்துக்கொண்டாள். கடிகாரத்தில் மணி பன்னிரண்டு அடித்தது பன்னிரண்டாவது தடவை மணி அடித்ததும், நிசப்தம் குடிகொண்டது, ஒரு நிமிஷ நேரத்துக்குத்தான். அப்புறம் எங்கேயோ வெகு தூரத்தில் ஏதோ ஒரு சத்தம் கேட்டது. வர வர அது பெருகி கொண்டும் அருகில் நெருங்கிக் கொண்டும் வந்தது. சமுத்திரத்தில் அடிக்கும் அலைகளின் ஓசை மாதிரி இருந்தது. சீச்சீ! இது என்ன பிரமை? அந்தப் பழைய உபத்திரவம் மறுபடியும் திரும்பி வருகிறது போலிருக்கிறதே! ஐந்தாறு மாதமாகவே இவ்விதம் அடிக்கடி காதில் ஓசை மாதிரி கேட்கிறது. ஆரம்பிக்கும்போது மெதுவாயிருக்கிறது; வர வர சத்தம் அதிகமாகிறது. காதிலே ஏதோ கோளாறு என்று ராகவன் சொன்னது சரியாகத்தான் இருக்க வேண்டும்! அடுத்த தடவை லாகூருக்குப் போகும்போது நல்ல காது வைத்தியரைக் கொண்டு பரிசோதித்துப் பார்க்க வேண்டும். இருக்கிற இடைஞ்சல் எல்லாம் போதாது என்று காது வேறே செவிடாகித் தொலைந்துவிட்டால் என்னத்தைச் செய்கிறது?

காதிலே கேட்ட அலை ஓசை வர வர அதிகமாகி வரவே அந்தப் பிரமையைப் போக்கிக் கொள்வதற்காகப் படுக்கையிலிருந்து எழுந்தாள். அவள் படுத்திருந்த மச்சு ஹாலின் ஒரு பக்கத்துக்குப் போய் அங்கிருந்த ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். இராத்திரியில் எந்த நேரத்திலும் ஹௌஷங்காபாத் நகரத்தில் மின்சார விளக்குகள் எரிந்து கொண்டிருப்பது வழக்கம். ஆனால் இன்றைக்கு ஒரு விளக்கையும் காணோமே? இது என்ன அதிசயம்! ஒருவேளை 'கரண்ட்' தடைப்பட்டு விட்டதா என்ன? ஆனால் இந்த வீட்டில் விளக்கு 12 மணி வரையில் எரிந்ததே! அப்புறம் கரண்ட் நின்று போயிருக்குமோ? ஸ்விட்சைப் போட்டுப் பார்க்கலாமா? எங்கேயோ ஒரு விஸில் அடிக்கும் சத்தம் கேட்டது. அதற்குப் பதிலாக இன்னொரு விஸில் சத்தம் கேட்டது. நாய் ஒன்று ஊளையிட்டது. 'தம்' 'தம்' என்று எங்கேயோ ஒரு முரசு பயங்கரமாகத் தொனி செய்தது. சீதாவுக்கு உடம்பு சிலிர்த்தது, சீ! இது என்ன பைத்தியக்காரப் பயம்? போலீஸார் விஸில் ஊதினால் அது ஒரு ஆச்சரியமா? நாய் ஊளையிடாமல் வேறு என்ன செய்யும்? எங்கேயோ சீக்கியரின் குருத்வாரத்தில் முரசு முழங்குகிறது. இன்று ஏதாவது உற்சவமாயிருக்கலாம். இதற்காக நாம் ஏன் பயப்பட வேண்டும்? திடீரென்று அர்த்தமில்லாத ஒரு புது பயங்கரமான எண்ணம் சீதாவின் மனதில் தோன்றியது. இரண்டு கண்கள் தன்னை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவை எங்கிருந்து பார்க்கின்றன என்று தெரியவில்லை. அறைக்குள்ளிருந்தா, வெளியிலிருந்தா என்று தெரியவில்லை. மனிதருடைய கண்ணா, காட்டு மிருகத்தினுடைய கண்ணா, கோட்டானுடைய கண்ணா, கொள்ளிவாய்ப் பிசாசின் கண்ணா என்றும் தெரியவில்லை.

ஒரு சமயம் அந்தக் கண்கள் பின்னாலிருந்து பார்ப்பது போலிருந்தது. இன்னொரு சமயம் அந்தக் கண்கள் பக்கவாட்டிலிருந்து பார்ப்பதாகத் தோன்றியது. ஜன்னலுக்கு எதிரே கொஞ்ச தூரத்தில் ஒரு மரம் இருந்தது. இருட்டில் அந்த மரம் நெடிதுயர்ந்த ஒரு கரிய பூதம் எனக் காணப்பட்டது. அதிலிருந்து இரண்டு கண்கள் சீதாவை உற்று நோக்கின. முதலில் சாதாரணக் கண்களாக அவை தோன்றின. பிறகு நெருப்புத் தணலைப்போல் அக்கண்கள் பிரகாசித்தன. சீதா தலையை ஒரு ஆட்டம் ஆட்டி அந்த மரத்திலிருந்து பார்வையைத் திருப்பி அடுத்த வீட்டின் பக்கம் நோக்கினாள். அடுத்த வீட்டுக் கூரை மேலிருந்து இரண்டு கண்கள் அவளை நோக்கின. வெளியிலிருந்து தன் பார்வையைத் திருப்பி அறைக்குள்ளே செலுத்தினாள். அறையின் சுவரிலிருந்து அவளை இரு கண்கள் நோக்கின, மறுபடியும் வெளியில் பார்த்தாள். வீட்டைச் சுற்றிலுமிருந்து நூற்றுக்கணக்கான கண்களின் ஜோடிகள் அக்னிமயமாக ஜொலித்துக் கொண்டு அவளை உற்று நோக்கின. "நம்முடைய மூளை குழம்பி வருகிறது! சீக்கிரத்தில் பைத்தியம் பிடித்துவிடுமோ, என்னமோ! அவர் எப்போது வருவாரோ, தெரிய வில்லையே! அவர் வரும் வரையிலாவது நாம் பைத்தியமாகாமல் இருக்க வேண்டும்" என்று எண்ணிக் கொண்டே ஜன்னல் பக்கமிருந்து திரும்பி வந்து படுக்கையில் படுத்துக்கொண்டாள். தலையணைக்கு அப்பால் கையினால் துளாவினாள். டார்ச் லைட்டும், ரிவால்வரும் கையில் தட்டுப்பட்டன. "இருங்கள் ஜாக்கிரதையாக!" என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டாள். ராகவன் இந்த பத்து மாத காலமாகத் தினந்தோறும் டார்ச் விளக்கும் கைத்துப்பாக்கியும் பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் படுப்பது வழக்கம். அவன் வெளியில் போகும்போது சீதாவும் அந்தமாதிரியே செய்யவேண்டும் என்று சொல்லியிருந்தான்.

சீதா அந்தக் கட்டளையை நிறைவேற்றி வந்தாள். ஆனால் கைத்துப்பாக்கியினால் தனக்கு என்ன பிரயோஜனம்? தன்னுடைய சத்துரு வெளியிலே இல்லையே? கைத்துப்பாக்கியினால் தன்னுடைய மூளை குழம்பாமல் தடுத்துக் கொள்ள முடியுமா? தற்கொலை வேண்டுமானால் செய்து கொள்ளலாம். அப்படித் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்து போவதில் என்ன பயன்? குழந்தை வஸந்தியின் கதி என்ன ஆவது? முன்னொரு தடவை இதே மாதிரி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாகும் எண்ணம் தனக்கு உதித்திருந்ததும் அதைச் சூரியா வந்து தடுத்ததும் சீதாவுக்கு நினைவு வந்தன. சூரியா இப்போது எங்கே என்ன செய்து கொண்டிருக்கிறானோ? அவனுக்கும் தாரிணிக்கும் கலியாணம் எப்போது நடக்கும்? தனக்குக் கலியாண அழைப்பு வருமா?.... ஆஹா! இது என்ன சத்தம்? வீட்டுக்குப் பக்கத்திலுள்ள மரத்தில் கரகரவென்று சத்தம் கேட்கிறது. யாரோ மரத்தில் ஏறும் சத்தந்தான்; சந்தேகமில்லை, அது யாராயிருக்கும்? திருடனா கொலைகாரனா? அல்லது ஒருவேளை காவல்காரச் சீக்கியனா? காவல்காரன் வாசலில் வந்து படுத்துக்கொள்ளாமல் பக்கத்து மரத்தின்மேல் எதற்காக ஏறி வருகிறான்? மரத்தில் ஏறியவன் யாராயிருந்தாலும் அவன் மாடி வராந்தாவில் குதித்துவிட்டான்! குதித்த சத்தம் நன்றாய்க் கேட்டது. அடுத்தபடி என்ன செய்வான்? ஹாலுக்குள் எப்படி நுழைந்து வருவான்? வராந்தா ஜன்னலுக்குப் பக்கத்தில் ஒரு நிழல் தோன்றியது. ஒரு கரிய பயங்கர உருவம் நின்றது. அந்த உருவத்தின் அங்க அடையாளம் ஒன்றும் தெரியவில்லை. ஆகா! ஸ்திரீகள் புருஷர்களைப் பிரிந்து தனியாக இருக்கிறதென்பது எவ்வளவு அபாயகரமான விஷயம்? இந்தத் தடவை பிழைத்தால் இனி இத்தகைய பிசகை என்றைக்கும் செய்யக் கூடாது! ஆனால் இன்றைக்குத் தப்பிப் பிழைப்பது எப்படி? சீதாவின் நெஞ்சு அடித்துக்கொண்ட வேகத்தைச் சொல்ல முடியாது. காதில் அலை ஓசை கேட்பது நின்று தன்னுடைய இருதய அடிப்பின் ஓசை கேட்கலாயிற்று. கடிகாரத்தின் டிக், டிக்கோடு இருதயத்தின் அடிப்பும் துடிப்பும் சேர்ந்து கொண்டன.

அவளுடைய உடம்பும் வியர்த்து, கால் முதல் தலை வரையில் நடுநடுங்கிற்று. நடுங்கிய கையினால் துளாவிச் சீதா கைத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டாள். துப்பாக்கியைத் தொட்டதும் கைநடுக்கமும் நின்றது. ஒரே வினாடி ரிவால்வரை ஜன்னல் பக்கம் குறிபார்த்துச் சுடவேண்டியதுதான்; வந்திருப்பவன் செத்து விழுவான்! ஆனால் அந்தச் சமயத்தில், சீதா ரிவால்வரைக் கையில் பற்றிக்கொண்ட அடுத்த நிமிஷத்தில், அவள் மனக் கண்ணின் முன்னால் காந்தி மகாத்மாவின் திரு உருவம் தோன்றியது. சுவரில் மாட்டிய படத்திலிருந்து அவர் திருமுகம் தனியாக வெளிக்கிளம்பிக் கருணை ததும்பும் கண்களால் சீதாவைப் பார்ப்பது போல இருந்தது. "சீதா இதை நான் ஒப்பவில்லை, இது ஜீவஹிம்சை! சுடாதே! உன்னால் உயிரை வாங்கமுடியும்; உயிரைக் கொடுக்க முடியுமா?" என்று மகாத்மாவின் கருணைக் கண்கள் கேட்டன. இவன் எதற்காக வந்திருக்கிறானோ என்னமோ? ஒருவேளை ஏழைப்பட்ட மனிதனாயிருக்கலாம். சாப்பாட்டுக்கு இல்லாமல் வயிற்றுப் பசியின் கொடுமை காரணமாகத் திருட வந்திருக்கலாம் பாவம்! அவனை ஏன் கொல்ல வேண்டும்? ஜீன்வால்ஜீன் கதையில் என்ன வருகிறது? திருடனைக் காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுகிறாரே, அந்தப் பிஷப்? நாம் மட்டும் எதற்காக இந்தப் பாதகத்தைச் செய்ய வேண்டும்? எப்படியும் ஜன்னல் வழியாக அவன் உள்ளே நுழைந்து வர முடியாது. என்னதான் செய்யப் போகிறான், பார்க்கலாமே? இவ்வளவு எண்ணங்களும் ஒரே நிமிஷ நேரத்துக்குள் சீதாவின் மனதில் குமுறிப் பாய்ந்தன. அந்தக் குமுறலுக்கு மத்தியில் சீதாவின் காதில் ஒரு குரல் கேட்டது. "சீதா! சீதா! எழுந்திரு! சத்தம் போடாமல் எழுந்திரு!" என்று அந்தக் குரல் சொல்லிற்று. ஆகா! அது யாருடைய குரல்! அந்தக் குரலைக் கேட்டதும் உடம்பு ஏன் இப்படிச் சிலிர்க்கிறது? இருளில் வந்த அந்தக் குரல் யாருடையது? ரிவால்வரை வைத்துவிட்டு, டார்ச் லைட்டை எடுத்துச் சீதா ஸ்விட்சை அமுக்கினாள். ஜன்னலுக்கு வெளியே வராந்தாவில் நின்ற உருவத்தின் மீது அதன் வெளிச்சம் விழுந்தது!
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்து எட்டாம் அத்தியாயம்

நரக வாசல் திறந்தது!

டார்ச் லைட்டின் வெளிச்சத்தில் தெரிந்த உருவம் சீதாவின் மனதில் பயத்தை உண்டாக்கவில்லை; ஆனால் வியப்பை உண்டாக்கியது. அந்த தாடிக்கார முஸ்லிமை அவள் ஏற்கெனவே இரண்டொரு தடவை பார்த்ததுண்டு. ஆக்ரா கோர்ட்டில் வந்து அவளைக் காப்பாற்றிய மனிதர் அவர்தான். முன்பின் தெரியாத அந்த மனிதர் எதற்காகத் தனக்கு அவ்வளவு பெரிய உதவியைச் செய்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவள் மனதில் அமுங்கிக் கிடந்தது. இப்போது அது பொங்கி எழுந்தது. "சீதா! விளக்கை அணை! கதவைத் திற! நேரம் அதிகம் இல்லை! சீக்கிரம்!" என்று உருவம் சொல்லிற்று. சீதா டார்ச் லைட்டை அணைத்தாள். வெளிச்சமின்றி இருள் சூழ்ந்ததும் அவளுடைய நெஞ்சில் மீண்டும் பதை பதைப்பு உண்டாயிற்று. அதைப் பொருட்படுத்தாமல் ஜன்னல் பக்கம் சென்றாள். "கதவைத் திற, சீதா, கதவைத் திற!" என்றது இருளில் வந்த குரல். அவ்வளவு அவசரமாகக் கதவைத் திறக்கச் சீதா தயாராயில்லை. "நீங்கள் யார்? எதற்காகக் கதவைத் திறக்க வேண்டும்?" என்று கூறி, "இங்கே புருஷர் யாருமில்லை!" என்று சேர்த்துக் கொண்டாள். "எனக்குத் தெரியும், அதனாலேதான் வந்தேன். என்னைத் தெரியவில்லையா, உனக்கு?" "ஆக்ரா கோர்ட்டில்..." "ஆமாம்; அது நான்தான், வேறு நினைவு ஒன்றும் உனக்கு வரவில்லையா? என்னுடைய குரல்...." "அப்பா!...." "ஆமாம்! நான்தான், சீதா! உன் அப்பாதான்!" "இந்த வேஷம்..." "அதையெல்லாம் பற்றிக் கேட்க இதுதானா சமயம்? சீதா! இன்னும் அரைமணி நேரத்தில் இந்த ஊரில் நரகத்தின் வாசல் திறக்கப் போகிறது. இரத்த வெறி கொண்ட பேய்களும் பிசாசுகளும் வந்து பயங்கரத் தாண்டவம் புரியப் போகின்றன.

"ஐயோ! அது யார்?" என்று அலறினாள் சீதா. பக்கத்துச் சுவர் மறைவிலிருந்து ஒரு பெண் உருவம் வெளிப்பட்டு வந்தது. "சத்தம் போடாதே! காரியம் கெட்டுவிடும். இவள் உன் சித்தி உன்னைக் காப்பாற்றத்தான் இவளும் வந்திருக்கிறாள்." இதற்குள் அந்த ஸ்திரீ, "இல்லை! இவளைக் காப்பாற்ற நான் வரவில்லை. இவள் நன்றி கெட்ட நிர்மூடம். என் பேத்தியை! வஸந்தி கண்மணியைக் காப்பாற்ற நான் வந்தேன். உங்கள் புத்தியற்ற பெண்ணைக் கட்டிக் கொண்டு நீங்களே அழுங்கள்! அடி பெண்ணே, உடனே கதவைத் திறக்கிறாயா! இந்தக் கத்தியால் உன்னைக் குத்திக் கொன்று விடட்டுமா?' என்றாள். அவள் யார் என்பது சீதாவுக்கு உடனே தெரிந்து போய்விட்டது. இனிமேல் கதவைத் திறக்கத் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை. ஏதோ பெரிய விபத்து வரப்போகிறது என்றும் அதிலிருந்து தன்னைக் காப்பாற்றவே இவர்கள் வந்திருக்கிறார்கள் என்றும் சீதாவின் உள் மனதுக்கு நன்றாய்த் தெரிந்துவிட்டது. நடுங்கிய கைகளினால் கதவின் தாளைத் திறந்தாள். மறுகணம் கதவைத் தள்ளிக் கொண்டு இருவரும் உள்ளே வந்தார்கள். "அப்பா! உங்களை இந்த நிலைமையில் இந்த வேஷத்திலா நான் பார்க்க வேண்டும்?" என்றாள் சீதா. அப்போது ரஸியா பேகம் குறுக்கிட்டுக் கூறினாள்:- "பின் எப்போது பார்க்க வேண்டும்? உலகத்தில் எல்லாத் தகப்பன்மார்களும் பெண் நல்ல நிலைமையில் இருக்கும்போது வந்து பாராட்டுவார்கள், சீராட்டுவார்கள் அதில் ஒன்றும் அதிசயம் இல்லை. உன் அப்பா உன்னிடம் வைத்திருக்கும் அன்பை இன்றைக்குத்தான் பார்க்கப்போகிறாய்! அடி பெண்ணே! உன்னைப்பற்றிய கவலையினால் இந்தக் கிழவர் எத்தனை நாளாகத் தூங்கவில்லை தெரியுமா? டில்லியிலிருந்து என்னையும் கட்டி இழுத்துக்கொண்டு வந்து இந்தப் பாழாய்ப் போன ஊரில் ஒரு மாதமாக உட்கார்ந்திருக்கிறார்!" "இவள் சொல்வதை நீ நம்பாதே, சீதா! என்னைக் கட்டி இழுத்துக்கொண்டு வந்தவள் இவள்தான்!" என்றார் மௌல்வி. "நம்முடைய சண்டையை அப்புறம் தீர்த்துக்கொள்ளலாம். இவளிடம் சொல்ல வேண்டியதை உடனே சொல்லுங்கள்!" என்றாள் ரஸியா பேகம்.

சீதாவின் தந்தை கூறினார்: "ஆமாம்; வீண்பொழுதுதான் போக்கிக் கொண்டிருக்கிறோம். ஒரு மாதமாக வீண் பொழுது போக்கி விட்டோ ம். ஆனால் நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று நேற்று வரையில் நான்கூட எதிர்பார்க்கவில்லை. சீதா! நேற்றுமுதல் பஞ்சாப் முழுவதும் பயங்கரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. மனுஷ்யர்கள் செய்வார்கள் என்று எண்ணக்கூடாத காரியங்களையெல்லாம் செய்கிறார்கள். இந்த ஊரில் இன்னும் அரைமணி நேரத்தில் நரகத்தைத் திறந்துவிடப் போகிறார்கள். ஆயிரம் பதினாயிரம் பிசாசுகள் வந்து கூத்தாடப் போகின்றன. அந்தப் பிசாசுகள் இன்னது செய்யும், இன்னது செய்யாது என்று சொல்ல முடியாது. இந்த ஊரிலுள்ள ஹிந்துக்கள் - சீக்கியர்களில் ஒரு குஞ்சு, குழந்தையாவது தப்பிப் பிழைக்குமா என்பது சந்தேகந்தான். நீயும் உன் குழந்தையும் தப்புவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. எங்களை நம்பி உடனே புறப்பட வேண்டும். முதலில் உன் குழந்தையை இவளோடு அனுப்பிவிட வேண்டும்; பிறகு நீ என்னோடு...." "அப்பா! நான் வரமுடியாது; குழந்தையை வேண்டுமானால் உங்களுடன் அனுப்பிவிடுகிறேன். அவர் இங்கே என்னைத் தேடினால்?..." "பைத்தியக்காரப் பெண்ணே! 'அவர்' என்று உன் புருஷனைத்தானே சொல்லுகிறாய்? அவன் பரம முட்டாள்! இப்பேர்ப்பட்ட சமயத்தில் உன்னைத் தனியாக விட்டுப் போயிருக்கிறான் பார்!" "அம்மா! நீங்கள் எனக்கு உதவி செய்ய வந்ததற்காகச் சந்தோஷம். ஆனால் என் புருஷனைப் பற்றி யாரும் குறைவாகச் சொல்வதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது...." "சரி, சரி! நீ ஆச்சு, உன் புருஷன் ஆச்சு, உன் அப்பா ஆச்சு! எப்படியாவது போய்த் தொலையுங்கள், உன் குழந்தையை அனுப்புவதாகச் சொன்னாயே? அதையாவது செய்! சீக்கிரம் அவளை எழுப்பு!...அதோ...!" "ஆகா நரக வாசல் திறந்தாகி விட்டது!" என்றார் மௌல்வி. தூரத்தில் திடீரென்று பயங்கரமான கூச்சல்... ஊளைச் சத்தங்கள் கேட்டன.

கரிய உருவங்கள் கையில் தீவர்த்திகளைப் பிடித்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடுவது தெரிந்தது. "சீதா! இனி ஒரு நிமிஷமும் தாமதிப்பதற்கில்லை; வஸந்தியை உடனே எழுப்பு!" என்றார் மௌல்வி. சீதா தயங்கித் தத்தளித்து நின்றாள். "குழந்தையை எப்படிக் கொடுப்பேன்? அவர் வந்து கேட்டால்...." என்றாள். "சீதா நான் உன்னைப் பெற்று வளர்த்த தகப்பன். என்னைக் காட்டிலும் உன்னிடம் அதிக அன்புள்ளவள் இந்த ரஸியா பேகம். இவளை நம்பி உன் குழந்தையைக் கொடு! ஒன்றும் கெடுதல் வராது!" "நீயும் இவரும் இந்த ஊரிலேயே இருந்து அழிந்துபோய் விட்டால்கூட நான் எப்படியாவது உன் புருஷனைத் தேடிப் பிடித்துக் குழந்தையைப் பத்திரமாய் அவனிடம் ஒப்புவித்து விடுகிறேன்" என்றாள் ரஸியா பேகம். சீதாவின் பார்வை சுவரில் மாட்டியிருந்த காந்தி மகான் படத்தின்மீது விழுந்தது. ஜன்னல் வழியாக வந்த மங்கலான வெளிச்சத்தில் காந்திஜியின் முகத் தோற்றம், "நம்பிக் கொடு உனக்கு அதனால் கெடுதல் வராது!" என்று சொல்லுவது போலிருந்தது. சீதா, கால், கைகள் பதற ஓடிச் சென்று, கட்டிலில் நிம்மதியாகப் படுத்துத் தூங்கிய குழந்தையைத் தட்டி எழுப்பினாள். வஸந்தி எழுந்து உட்கார்ந்துகொண்டு மிரண்ட கண்களால் தனக்கு முன்னால் நின்றவர்களை விழித்துப் பார்த்தாள். குழந்தையைத் தட்டி எழுப்பிய அதே நிமிஷத்தில் சீதா அவளிடம் என்ன சொல்லவேண்டும் என்பது பற்றித் தீர்மானித் திருந்தாள். "வஸந்தி! டில்லியில் அப்பாவுக்கு உடம்பு சரிப்படவில்லையாம். நாம் உடனே டில்லிக்குப் புறப்பட்டுப் போகவேண்டும்!" என்றாள்.

"சரி, அம்மா! இதோ நான் தயார்!" என்று சொல்லிக் கொண்டே கட்டிலிலிருந்து வஸந்தி குதித்து வந்தாள். ரஸியா பேகம், "என் கண்ணே!" என்று அவளைக் கட்டித் தழுவிக் கொண்டாள். "ஓகோ! இந்த மாமியை எனக்குத் தெரியும், அன்றைக்கு மார்க்கெட்டில் ஆப்பிள் பழம் வாங்கிக் கொடுத்துவிட்டு முத்தம் இட்டீர்களே?" என்றாள் வஸந்தி. "ஆமாண்டி கண்ணே! உனக்கு ஞாபகம் இருக்கிறதே!" "நீங்களும் டில்லிக்கு வரப் போகிறீர்களா?" என்று கேட்டாள் வஸந்தி. "ஆமாம்; நானும் டில்லிக்குத்தான் போகிறேன்!" என்று சொன்னாள் ரஸியா பேகம். "வஸந்தி! நீ அம்மா சொல்லுகிறபடி கேட்கிற சமர்த்துக் குழந்தைதானே? நீ இந்தப் பாட்டியுடன் இப்போதே புறப்பட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகவேண்டும். நான் வீட்டுக் கதவுகளையெல்லாம் பூட்டிக்கொண்டு இந்தத் தாத்தாவுடன் பின்னால் வந்து சேருகிறேன்!" என்றாள் சீதா. "நான் அம்மா சொல்லுகிறபடி கேட்கிற சமர்த்துக் குழந்தைதான். ஆனால் நீ மட்டும் இனிமேல் பொய் சொல்லாதே!" என்றாள் வஸந்தி. மூவரும் திகைத்து நின்றார்கள். "நான் முன்னாடியே விழித்துக்கொண்டு விட்டேன். நீங்கள் பேசிக் கொண்டி ருந்ததையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். தூங்குவதுபோல் பாசாங்கு செய்தேன்" என்றாள் வஸந்தி. சீதாவுக்கு ஒரு பக்கம் கோபம் வந்தது; ஒரு பக்கம் சிரிப்பும் வந்தது. "சரி; இப்போது என்ன சொல்கிறாய்? இந்தப் பாட்டியுடன் போகிறாயா, மாட்டாயா?" "நான் போகிறேன், அம்மா! கட்டாயம் போகிறேன். நீயும் வந்துவிடு என்றுதான் சொல்லுகிறேன். அப்பா நம்மை இங்கே விட்டுவிட்டுப் போனது பெரிய பிசகு! நீ இங்கே இருக்கிறேன் என்று சொல்வது அதைவிடப் பெரிய பிசகு!" என்றாள் வஸந்தி. "அப்படிச் சொல்லடி, என் கண்ணே!" என்று ரஸியாபேகம் குழந்தையை முத்தமிட்டாள்.

"சீதா! நாங்கள் சொன்னதைத்தான் கேட்கவில்லை; குழந்தை சொல்வதையாவது கேட்கிறாயா?" என்றாள். "அம்மா வராவிட்டால் நானும் வரமாட்டேன்!" என்றாள் வஸந்தி. "சரி! வேறு வழியில்லை, கடவுள் விட்ட வழியாகட்டும்! நானும் வருகிறேன்" என்றாள் சீதா. தூரத்தில் கேட்டுக் கொண்டிருந்த பயங்கரமான குழப்பச் சத்தங்கள் நெருங்கி வந்து கொண்டிருந்தன. அப்போது மௌல்வி சாகிபு வஸந்தியைப் பார்த்து, "நீ ரொம்ப சமர்த்துக் குழந்தை, வஸந்தி! நாம் எல்லோரும் சேர்ந்து தப்பித்துச் செல்லப் பார்ப்பது அபாயம். நீயும் இந்தப் பாட்டியும் முதலில் போங்கள்; கால் மணி நேரத்துக்கெல்லாம் உன் அம்மாவை அழைத்துக்கொண்டு நான் வருகிறேன்" என்றார். "சரி" என்றாள் வஸந்தி. அடுத்த நிமிஷம் ரஸியா பேகமும் வஸந்தியும் மச்சுப் படியில் இறங்கித் துரிதமாகச் சென்றார்கள். "அப்பா!" "சீதா!" "சற்று முன்னால் ஒரு பெரிய பாதகத்தி லிருந்து தப்பிப் பிழைத்தேன். நீங்கள் வந்து மாடித் தாழ்வாரத்தில் ஜன்னல் ஓரத்தில் நின்றபோது கைத்துப்பாக்கியால் உங்களைச் சுட்டுவிட நினைத்தேன். அவர் எனக்குக் குறிபார்த்துச் சுடுவதற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்..." "ஏன் சுடவில்லை, அம்மா!" "காந்தி மகானுடைய திருமுகம் என் மனக்கண் முன்னால் தோன்றிச் சுடாமல் தடுத்தது. சுட்டிருந்தால் எப்படிப்பட்ட பாதகத்தைச் செய்திருப்பேன்! பெற்ற தகப்பனாரை...." "பெற்ற தகப்பனாயிருந்தாலும் நான் செய்திருக்கும் பாவங்களுக்கு அது தகுந்த தண்டனையாயிருந்திருக்கும். ஆனால் அத்துடன் அது போயிராது. இந்த வீட்டின் பேரில் சிலர் கண் வைத்திருக்கிறார்கள். துப்பாக்கி சத்தம் கேட்டதும் அவர்கள் ஓடிவந்திருப்பார்கள், நீயும் குழந்தையும்...." "அப்பா! இப்போது நாம் என்ன செய்யலாம்? நாமும் புறப்பட வேண்டியதுதானே?"

"இல்லை, சீதா! நாம் உடனே புறப்படுவதற்கில்லை. கொஞ்ச நேரம் இங்கே இருந்தாக வேண்டும். யாரும் தப்பித்துப் போகாதபடி இந்த ஊரைச் சுற்றிக் காவல் போட்டிருக்கிறார்கள். காவல் வேலை ஒப்புக்கொண்டிருப்பவர்களில் நான் ஒருவன். என்னுடைய இடத்துக்குப் போய் நான் காவல் இருக்கிறேன். துவேஷப்பிசாசுகள் இந்த வீட்டையும் தாக்குவதற்கு வருவார்கள். அவர்களுக்கெல்லாம் முதலில் நான் வருவேன். அந்தச் சமயத்தில் நான் எப்படி நடந்துகொண்டலும் நீ அதிசயப்படக் கூடாது; பயப்படவும் கூடாது. நான் கத்தியினால் உன்னைக் குத்துவதற்கு வந்தால்கூடப் பயப்பட வேண்டாம். முடியுமானால் கீழே விழுந்து மூர்ச்சை அடைந்துவிட்டதுபோல் பாசாங்கு செய்! இதெல்லாம் எதற்காக என்று என்னை இப்போது கேட்காதே! தப்பிப் பிழைத்த பிற்பாடு எல்லாம் விவரமாகச் சொல்லுகிறேன். இந்தச் சமயம் நம்முடைய யுக்தி புத்திகளினால்தான் பிழைக்கவேண்டும்...." குழப்பமும் கூச்சலும் மேலும் நெருங்கி வந்து விட்டன. ஆங்காங்கே வீடுகள் தீப்பற்றி எரியத் தொடங்கின. எரியும் வீடுகளிலிருந்து உண்டான கோரமான வெளிச்சத்தில் கையில் கத்தி, கோடாரி, அரிவாள் முதலிய ஆயுதங்களுடன் கரிய உருவங்கள் பயங்கரமாக ஊளையிட்டுக் கொண்டு ஓடிய காட்சி தென்பட்டது. "சீதா! நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். கடவுள் உன்னை நிச்சயமாகக் காப்பாற்றுவார்!" என்று சொல்லி விட்டு மௌல்வி சாகிபு விரைந்து கீழே சென்றார். சீதா காத்துக் கொண்டிருந்தாள். காத்திருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக நீண்டு அவளை வேதனைப்படுத்தியது. குழப்பமும் கூச்சலும் தீயும் புகையும் அழுகையும் பிரலாபமும் நெருங்கி வந்து கொண்டிருந்தன. சீதாவுக்குத் தான் குழந்தைப் பிராயத்தில் பம்பாயில் ஆனந்தமாகக் கழித்த நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன. அம்மாவும் அப்பாவும் தன்னை மடியில் வைத்துக் கொஞ்சிய நாட்கள் நினைவு வந்தன. அந்தத் துரைசாமி ஐயர்தானா இப்போது இப்படி இருக்கிறார்? நம்ப முடியவில்லையே! ஆயினும் நம்பித்தான் ஆகவேண்டும்.

திடீரென்று ராஜம்பேட்டை ஞாபகம் வந்தது. சாலையில் வண்டி குடை கவிழ்ந்து தான் ஓடையில் விழுந்ததும் சூரியா தன்னைக் காப்பாற்றுவதற்காக ஓடி வந்து கரையில் நின்ற தோற்றமும் மனக் கண்முன் தோன்றின. அந்தச் சூரியா இப்போது எங்கே இருக்கிறான்? தாரிணியின் காதலில் மதிமயங்கிக் கிடக்கிறானா? ஆகா! காதல் என்ற ஒரு வார்த்தை! எந்த மூடனோ சிருஷ்டி செய்தது! அதை வைத்துக்கொண்டு கதை எழுதுகிறவர்கள் புத்தகம் புத்தகமாய் எழுதித் தள்ளுகிறார்கள். என்ன பொய்! என்ன ஏமாற்றம்! ஆனால் அடியோடு பொய் என்றும் ஏமாற்றம் என்றும் சொல்லிவிட முடியுமா? ராஜம்பேட்டையில் லலிதாவைப் பார்க்க வந்த சௌந்தரராகவனைத் தான் பார்த்ததும் காதல் கொண்டதும் பொய்யாகுமா?- இருந்தாலும் லலிதாவுக்கு அப்படி ஒரு துரோகம் தான் செய்திருக்கக் கூடாது. அந்தத் துரோகத்தின் பலன்தான் பிற்பாடு வாழ்க்கை முழுதும் தான் கஷ்டங்களுக்கு உள்ளாகும்படி ஆயிற்று! வாழ்க்கை முழுதும் எத்தனை கஷ்டப்பட்டால்தான் என்ன? சென்ற ஒரு வருஷ காலம் இந்த அழகான பாஞ்சால நாட்டில் தான் வாழ்ந்த இன்ப வாழ்வுக்கு உலகத்தில் வேறு என்ன இன்பம் இணையாக முடியும்? அத்தகைய இன்ப வாழ்வுக்கு இப்போது இறுதி வந்துவிட்டது போலிருக்கிறதே!... இதோ சமீபத்தில், வீட்டண்டை யில் நெருங்கி வந்துவிட்டார்கள் போலிருக்கிறதே!...அப்புறம் நடந்த சம்பவங்கள் வெகு துரிதமாக நடந்தன. அவையெல்லாம் சீதாவுக்குத் தன்னுடைய சொந்த அநுபவங்களாகவே தோன்றவில்லை. அதிதுரிதமான 'டெம்போ'வுடன் எடுக்கப்பட்ட சினிமாவில் பார்க்கும் காட்சிகளைப் போலவே தோன்றின. ஒரு நிமிஷம் அந்த வீட்டு வாசலில் பயங்கரமான கூச்சல் கேட்டது. மறு நிமிஷமே வாசற் கதவைக் கோடரிகளால் பிளக்கும் சத்தம் கேட்டது. திடு திடுவென்று பலர் உள்ளே நுழைந்தார்கள். மச்சுப்படிகளின் பேரில் தடதடவென்று ஏறி வந்தார்கள்.

அவர்களுக்கெல்லாம் முதலில் மௌல்வி சாகிபு வந்தார். அவர் கையில் ஒரு கூரிய கத்தி பளபளவென்று மின்னியது. ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவள் பக்கத்தில் வந்து கழுத்தைப் பிடித்துத் தள்ளினார். பிறகு அவளை ஒரு காலால் மிதித்துக் கொண்டு திரும்பி நின்றார். பின்னால் வந்தவர்களைப் பார்த்து "இவள் என்னுடையவள்" "இவள் என்னுடையவள்" என்று கூச்சலிட்டார். பின்னால் வந்த பயங்கர ராட்சஸர்கள் சிறிது தயங்கி நின்றார்கள். ஒருவன் சிரித்தான்; இன்னொருவன் "கிழவனுக்கு வந்த கேட்டைப் பார்!" என்றான். மற்றொருவன் அருகில் பாய்ந்து வந்து கிழவனைக் குத்திப் போடுவதாகச் சொல்லிக்கொண்டு கத்தியை ஓங்கினான். அவனைத் தடுப்பதற்காக வந்த இன்னொருவன் காலால் சீதாவை ஒரு மிதி மிதித்தான். ஆயினும் சீதாவின் தகப்பனார் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. இதற்குள்ளே ஒருவன் "நெருப்பு! நெருப்பு!" என்றான். "ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்று மௌல்வி சாகிபு கத்தினார். வெளியிலிருந்து அதே சமயத்தில் புகை திரள் திரளாகக் கிளம்பி மேலே சுழன்று வரத் தொடங்கியது. அறைக்குள் வந்த மனிதர்கள் திரும்பி ஓடத் தொடங்கினார்கள். அவர்களில் ஒருவருடைய கண்ணில் சுவரில் மாட்டியிருந்த மகாத்மாவின் படம் தென்பட்டது. அதை அவன் எட்டி எடுத்துத் தரையில் ஓங்கி எறிந்தான். படத்தின் கண்ணாடி உடைந்த சத்தம் படார் என்று கேட்டது. ஒரு கண்ணாடித் துண்டு மௌல்வி சாகிபுவின் முழங்காலுக்குக் கீழே சதையில் பாய்ந்தது. அந்த இடத்திலிருந்து குபு குபுவென்று இரத்தம் பெருகியது. மனிதர்கள் தடதடவென்று மச்சுப்படியில் இறங்கி ஓடினார்கள். வெளியே புகைத்திரளுக்கு மத்தியில் தீயின் ஜீவாலை தென்பட்டது. இந்தச் சமயத்தில் சீதா தன் பிரக்ஞையை இழக்கத் தொடங்கினாள். 'ஓ' என்ற ஓசை மட்டும் சிறிது நேரம் கேட்டுக் கொண்டிருந்தது. இது கடலின் அலை ஓசையை நினைவூட்டியது. அந்தக் கடைசி நினைவோடு சீதா மூர்ச்சையடைந்தாள்.

நரகத்தில் எல்லாத் திசையும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. திரள் திரளாகப் புகை கிளம்பி நாலா பக்கமும் பரவிக் கொண்டிருந்தது. பேய்களும் பூதங்களும் யம கிங்கரர்களும் ஊளையிட்டுக் கொண்டு அங்குமிங்கும் ஓடித் திரிந்தார்கள். வயது சென்ற ஸ்திரீகளையும் பச்சைக் குழந்தைகளையும் அவர்கள் பிடித்துக் கொண்டு வந்து எரிகிற தீயில் தள்ளினார்கள். இந்த நரகத்தில் உள்ள போலீஸ்காரர்கள் வெகு விசித்திரமானவர்கள்! அவர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்தார்கள். நெருப்பில் விழாமல் தப்பி ஓடுகிறவர்களைக் குறி பார்த்து அவர்கள் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளினார்கள். இப்படிப்பட்ட நரகத்தில் நல்ல பூதம் ஒன்று சீதாவைத் தூக்கிக் கொண்டு இருண்ட சந்துகள் - பொந்துகள் வழியாகப் போய்க்கொண்டிருந்தது. அது ஆங்காங்கு நின்று அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டு ஜாக்கிரதையாகச் சென்றது. சில சமயம் மிக மெள்ள மெள்ள நடந்தது; சில சமயம் ஒரே தாண்டாகத் தாண்டி ஓடிற்று. சில சமயம் சுவரில் ஒட்டிக்கொண்டு சென்றது; சில சமயம் மரங்களின் பின்னால் ஒளிந்து மறைந்து பாய்ந்து சென்றது. இவ்விதம் அந்த பூதம் நீண்ட நேரம் பாய்க்கொண்டேயிருந்தது. நரக லோகத்தில் உள்ள இருண்ட சந்துகளுக்கு முடிவே கிடையாதோ என்று தோன்றும்படியாக அந்த நல்ல பூதம் சீதாவைத் தோளில் போட்டுக் கொண்டு நெடுநேரம் நடந்தது. ஆகா! கடைசியில் நரகத்தைத் தாண்டியாயிற்று போலும்! வெப்பமான புகையும் தீயின் அனலும் இப்போது முகத்தில் வீசி எரிச்சல் உண்டாக்கவில்லை. குளிர்ந்த காற்று முகத்தில் பட்டு இதம் தருகிறது. நரகத்தின் கோர சத்தங்களும் இப்போது வெகுதூரத்திலேதான் கேட்கின்றன! நரக வாசலைக் கடந்து சொர்க்கத்துக்குள் புகுந்தாயிற்று போலும்!

சீதாவுக்கு நினைவு வரத் தொடங்கியது. மூடியிருந்த கண் இமைகளைக் கஷ்டப்பட்டுத் திறந்தாள். எண்ணிறந்த வெள்ளி நட்சத்திரங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டிருப்பது கண்ணில் பட்டது. ஆகா! வான வெளியில் சொர்க்க பூமியை நெருங்கி இப்போது போய்க்கொண்டிருக்கிறோம் போலும்! புஷ்பக விமானத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம் போலும் தன் நெற்றியை மிருதுவாகத் தடவிக் கொடுக்கும் கை, தன்னை நரகத்திலிருந்து காப்பாற்றிய தேவதூதனின் திருக்கரமாகவே இருக்க வேண்டும்! இதெல்லாம் வீண் பிரமை என்று சீக்கிரத்திலே சீதாவுக்குத் தெரிந்து போயிற்று. கடகடவென்று கட்டை வண்டியின் சத்தமும் வண்டி ஆட்டத்தினால் உடம்பு ஆடி உண்டான வலியும் பூமியிலேதான் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வைச் சீதாவுக்கு உண்டாக்கின. நெற்றியைத் தடவிக் கொண்டிருக்கும் கை மௌல்வி சாகிபுவின் கை; அதாவது தன் தந்தையின் கை. "அப்பா!" "சீதா! விழித்துக் கொண்டாயா?" "ரொம்ப நேரம் தூங்கி விட்டேனா?" "பொழுது விடியப் போகிறது" "குழந்தை வஸந்தி...?" "குழந்தை பத்திரமாக இருப்பாள்; கவலைப்படாதே; உன் சித்தி ரொம்பக் கெட்டிக்காரி. இதைப்போல எத்தனையோ சமாளித்தவள்." சீதா சிறிது நேரம் மௌனமாயிருந்து விட்டு, "அப்பா இது என்ன வண்டி?" என்று கேட்டாள். "இது பாஞ்சால நாட்டின் புராதன வண்டி, சீதா! கோவேறு கழுதை பூட்டிய வண்டி!" "வண்டி ஓட்டுகிறவன் யார்?" "ஒரு மாதமாக என்னிடம் வேலை செய்த பையன்." "அவனை நம்பலாமா?" "இந்தக் காலத்தில் யாரை நம்பலாம், யாரை நம்பக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்!" "இந்த வண்டி ஏது?" "விலைக்கு வாங்கினேன், இந்த மாதிரி சந்தர்ப்பத்துக்கு உபயோகமாயிருக்கட்டும் என்றுதான்!" "இந்த மாதிரியெல்லாம் நடக்கும் என்று உங்களுக்கு முன்னாடியே தெரியுமா என்ன?" "ஒரு மாதிரி தெரியும், ஆனால் இவ்வளவு பயங்கரமாயிருக்குமென்று எதிர்பார்க்கவில்லை."

சற்றுப் பொறுத்துச் சீதா, "இந்த வண்டியில் இன்னும் ரொம்ப நேரம் போக வேண்டுமா?" என்று கேட்டாள். "ஏன் உடம்பு வலிக்கிறதா?" "ஆமாம்; உடம்பு வலிக்கிறது." "வலிக்காமல் என்ன செய்யும்? அந்த ராட்சஸர்களும் நானும் உன்னை எப்படி மிதித்து விட்டோ ம்? கொஞ்சம் பொறுத்துக்கொள், சீதா! சீக்கிரத்தில் வண்டியை நிறுத்தச் சொல்கிறேன். அதோ தெரிகிறதே, அந்தப் பாறை மறைவில் வண்டியை நிறுத்தலாம்!" என்றார் மௌல்வி சாகிபு. சீதா எழுந்து உட்கார்ந்தாள், அது மேலே கூண்டு இல்லாத திறந்த வண்டி. ஆனால் நாலு பக்கமும் ஒரு முழ உயரம் அடைப்பு இருந்தது. அடைப்புக்கு மேலாகப் பார்த்தாள். சாலையின் இரு புறமும் குட்டையான ஈச்ச மரங்கள் நெருங்கி வளர்ந்திருந்தன. சற்று தூரத்தில் ஒரு மொட்டைப் பாறை பிரம்ம ராட்சதனைப் போல் நின்றது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுச் சீதா தன் தந்தையை ஏறிட்டுப் பார்த்தாள். அவள் மனத்திற்குள் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கேள்வி அப்போது வெளியில் வந்தது. "அப்பா! நீங்கள் எதற்காக முஸ்லிம் மதத்தில் சேர்ந்தீர்கள்?" என்று கேட்டாள், தந்தை மௌனமாயிருந்தார். "நான் கேட்டது தவறாயிருந்தால் மன்னியுங்கள். எதற்காகக் கேட்டேன் என்றால், உங்களுக்குக் கடவுளிடத்தில் நம்பிக்கை உண்டா என்று தெரிந்து கொள்வதற்காகத்தான். கடவுள் ஒருவர் இருந்தால் இந்த மாதிரி கஷ்டங்களையெல்லாம் ஜனங்களுக்கு எதற்காகக் கொடுக்கிறார்?" என்றாள் சீதா! "இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் கடவுள் உண்டா என்ற சந்தேகம் யாருக்கும் தோன்றக் கூடியதுதான். அந்த விஷயத்தைப் பற்றி நீ ஞானிகளிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் முதலில் நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லப் போகிறேன். எப்படி ஆரம்பிப்பது என்றுதான் யோசித்தேன். முதலிலிருந்து ஆரம்பித்து எல்லாவற்றையும் சொல்லிவிடப் போகிறேன். சீதா! என் கதையைத் தவிர முக்கியமான இரகசியம் ஒன்றையும் சொல்லப் போகிறேன். எப்போதாவது தாரிணியைச் சந்திக்கும்படி நேர்ந்தால்...." "அப்பா! தாரிணிக்கும் எனக்கும் ஏதாவது உறவு உண்டா?" என்று சீதா ஆவலுடன் கேட்டாள். "அதைத்தான் சொல்லப் போகிறேன்" என்றார் சீதாவின் தந்தை.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
இருபத்து ஒன்பதாம் அத்தியாயம்

சீமந்த புத்திரி

சாலைக்கு இருபுறத்திலும் குட்டையான ஈச்ச மரங்கள் காடாக மண்டி வளர்ந்திருந்தன. ஒரு பக்கத்தில் செங்குத்தான பாறை ஒன்று இருந்தது. வண்டியை ஓட்டிய பையனிடம் மௌல்வி சாகிபு என்னமோ சொன்னார். பையன் வண்டியைச் சாலையை விட்டுக் காட்டுக்குள் ஓட்டினான். ஈச்ச மரங்களுக்கு மத்தியில் இடங்கிடைத்த வழியாக ஓட்டிச் சென்று பாறைக்குப் பின்புறத்தில் கொண்டு போய் வண்டியை நிறுத்தினான். தந்தையும் மகளும் வண்டியிலிருந்து இறங்கினார்கள். மௌல்வி சாகிபு வண்டியிலிருந்து ஒரு கம்பளத்தை எடுத்து விரித்தார். "அம்மா! இதில் உட்கார்! பகலெல்லாம் நாம் இங்கேதான் கழிக்க வேண்டியிருக்கும்!" என்றார். சீதா உட்கார்ந்து, "ஏன், அப்பா! பகலில் பிரயாணம் செய்யக்கூடாதா?" என்று கேட்டாள். "பகலில் பிரயாணம் செய்தால் இரண்டு வகையில் ஆபத்து வரலாம். சீக்கியர்களாவது ஹிந்துக்களாவது நம்மைப் பார்த்தால் ஒரு ஹிந்துப் பெண்ணை முஸ்லிம் கிழவன் அடித்துக்கொண்டு போகிறான் என்று எண்ணி என்னைக் கொல்லப் பார்ப்பார்கள். முஸ்லிம்கள் நம்மைப் பார்த்தால் உன்னை என்ன பண்ணுவார்களோ தெரியாது" என்றார். இப்படி சொல்லிவிட்டு மௌல்வி சாகிபு வண்டியிலிருந்து தண்ணீர்ப் பையையும் ஒரு சிறு பெட்டியையும் எடுத்து வைத்துக் கொண்டு உட்கார்ந்தார். "சீதா! இந்தப் பையில் தண்ணீர் இருக்கிறது. இந்தப் பெட்டியில் கொஞ்சம் பிஸ்கோத்து இருக்கிறது. இவற்றைக் கொண்டு எத்தனை நாள் நாம் காலம் தள்ள வேண்டுமோ தெரியாது. இந்தப் பஞ்சாப் நரகத்திலிருந்து என்றைக்கு வெளியில் போகப் போகிறோமோ, அதையும் சொல்வதற்கில்லை!" என்றார். "பஞ்சாபை நரகம் என்கிறீர்களே? ஒரு வருஷத்துக்கு முன்னால் நான் இங்கே வந்தபோது இது எவ்வளவு நல்ல தேசமாயிருந்தது? ஜனங்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு பிரியமாயிருந்தார்கள்? கல்கத்தா பயங்கரத்தைப் பார்த்துவிட்டு நானும் உங்களுடைய மாப்பிள்ளையும் பஞ்சாபுக்கு வந்தபோது இது சொர்க்கலோகமாக எங்களுக்குத் தோன்றியது. இந்த ஒரு வருஷத்துக்குள் இங்கே என்ன நேர்ந்துவிட்டது?"

"ஒரு வருஷத்துக்குள் ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. ஜனங்கள் பைத்தியமாகிவிட்டார்கள்; அவ்வளவுதான். கல்கத்தாவுக்கு நவகாளியில் பழி வாங்கினார்கள். நவகாளிக்குப் பீஹாரில் பழி வாங்கினார்கள். பீஹாருக்கு இப்போது மேற்கு பஞ்சாபில் பழி வாங்குகிறார்கள். இதன் பலன் என்ன ஆகுமோ கடவுளுக்குத் தான் தெரியும். இத்தனை பைத்தியங்களுக்கு மத்தியில் அந்த மகான் ஒருவர் இருந்து அன்பு மதத்தைப் போதித்து வருகிறார்; அவர் உண்மையில் மகாத்மாதான்!" "உங்களுக்கு காந்திஜியிடம் பக்தி உண்டா அப்பா?" "செய்யக்கூடிய பாபங்களையெல்லாம் செய்த பிறகு இப்போது காந்திஜியிடம் பக்தி உண்டாகியிருக்கிறது. இந்த பக்தியினால் என்ன பயன்? உன் தாயாருக்கு ஆதிமுதல் மகாத்மா காந்தியிடம் பக்தி உண்டு 'மகாத்மாதான் தெய்வம்' என்று சொல்லிக்கொண்டிருப்பாள். அப்போதே அவளுடைய பேச்சைக் கேட்டு நடந்திருந்தேனானால் என் வாழ்க்கை இப்படி ஆகியிராது." "அப்பா! நான் கேட்கிறேனே என்று கோபித்துக்கொள்ளக் கூடாது. ரொம்ப நாளாக என் மனதில் இருந்து உறுத்திக் கொண்டிருக்கும் கேள்வியைத்தான் கேட்கிறேன். அம்மாவிடம் நீங்கள் எப்போதாவது பிரியமாக இருந்ததுண்டா?" என்றாள் சீதா. "நீ இந்தக் கேள்வியைக் கேட்டதற்காக எனக்கு உன் பேரில் கோபம் இல்லை சீதா! இந்த மட்டும் கேட்டாயே என்று சந்தோஷப்படுகிறேன். என் மனதில் கிட்டத்தட்ட முப்பது வருஷ காலமாக இருந்து வரும் பாரத்தை இன்று நீக்கிக் கொள்ளப் பாகிறேன். யாரிடமாவது சொன்னாலன்றி என் மனத்தின் சுமை தீராது. உன் அக்காவிடம் சொல்லும் தைரியம் எனக்கு ஏற்படவே இல்லை. இந்தப் பழிகாரி ரஸியா பேகமும் அதற்குக் குறுக்கே நின்றாள். நல்ல வேளையாக அவளும் இப்போது இங்கு இல்லை. எல்லாவற்றையும் உன்னிடம் சொல்லிவிடப் போகிறேன்! தான் செய்த குற்றங்களைத் தான் பெற்ற பெண்ணிடம் சொல்லுவதென்பது கஷ்டமான காரியம் தான்.

ஆனாலும் இந்தச் சந்தர்ப்பம் தவறினால் மறுபடியும் கிடைக்குமோ என்னமோ!"- இந்தப் பூர்வ பீடிகையுடன் மௌல்வி சாகிபு முப்பது வருஷத்துக்கு முந்தைய சம்பவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அவை அதிசயமான சம்பவங்கள்தான். அதிசயமில்லாவிட்டால் அவற்றைக் குறித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இராதல்லவா? துரைசாமி ராஜம்மாளைக் கலியாணம் செய்து கொண்டு பம்பாயில் புதுக்குடித்தனம் தொடங்கிய சில காலம் அவர்களுடைய வாழ்க்கை இன்ப மயமாயிருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு ஆனந்தத் திருநாளாயிருந்தது. ராஜம்மாள் முதல் தடவை கர்ப்பமானாள். தம்பதிகள் களிப்புக் கடலில் மூழ்கித் திளைத்தார்கள். வாழ்க்கைச் சக்கரம் ஒரு முறை சுழன்று வந்தது. இன்பக் கிரஹம் பெயர்ந்து துன்பக்கிரஹம் தோன்றியது. 'மூன்று சீட்டு' என்னும் சூதாட்டத்தில் துன்பத்தின் சிறிய வித்து துரைசாமி அறியாமலே விதைக்கப்பட்டு முளைத்து எழுந்தது. சொற்ப சம்பளக்காரரான துரைசாமி ரங்காட்டத்தில் தோற்ற பணத்தைத் திரும்ப எப்படியாவது எடுத்துவிட விரும்பினார். இதற்காகக் கடன் வாங்கிக்கொண்டு குதிரைப் பந்தயத்துக்குப் போனார். ஒரு தடவை போன பிறகு மனதைத் தடுக்க முடியவில்லை. லாபமும் நஷ்டமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. தம்முடைய யுத்தி சாமர்த்தியத்தால் இழந்த பணத்தையெல்லாம் எடுத்து மேலும் லாபமும் சம்பாதித்துவிடலாம் என்றும் ஒரு நல்ல தொகை கிடைத்ததும் பந்தயத்தை விட்டொழித்து விடலாம் என்றும் எண்ணினார். ஏதோ பொய்க் காரணங்களைச் சொல்லி ராஜம்மாள் அணிந்திருந்த சில நகைகளையும் வாங்கிக் கொண்டுபோய் அடகு வைத்துப் பணம் கடன் வாங்கினார். மேலும் மேலும் சேற்றில் அமுங்கிக் கொண்டிருந்தார், கடைசியில் அடியோடு அமுங்கிப்போக வேண்டியதுதான் என்ற நிலைமை ஏற்பட்டிருந்த சமயத்தில் ராஜம்மாளின் பிரசவ காலமும் நெருங்கியிருந்தது. வீட்டில் வசதியில்லாமல் ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார். வண்டி வைத்து ஆஸ்பத்திரியில் கொண்டு விடுவதற்குக்கூட கையில் பணம் இல்லாமலிருந்தது. இந்த நிலைமையை நினைத்து மனம் புழுங்கிக்கொண்டே ரயில்வே ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் ரமாமணிபாய் தன் சகோதரியுடன் வந்து சேர்ந்தாள்.

அவளுடைய கண்ணில் துளித்திருந்த கண்ணீரும் அவள் தன் தங்கையைப்பற்றிச் சொன்ன வரலாறும் துரைசாமியின் உள்ளத்தை இளக்கிவிட்டன. அதோடு அவர்களுக்கு உதவி செய்வதால் தன்னுடைய தரித்திரம் தீரலாம் என்ற ஆசையும் கூடச் சேர்ந்து கொண்டது. தன் மனைவியைப் பிரசவத்துக்காக விட்டிருந்த அதே பிரசவ ஆஸ்பத்திரியில் கங்காபாயையும் சேர்த்தார். துரைசாமி பிரசவ ஆஸ்பத்திரிக்குத் தமது மனைவியைப் பார்ப்பதற்காகப் போனபோதெல்லாம் ரமாமணிபாயையும் பார்க்கும்படி நேர்ந்தது. வறுமை வலையில் சிக்கியிருந்த அம்மனிதர் மீது ரமாமணிபாய் தன் மோகவலையையும் விரித்தாள். துரைசாமியின் மனம் தத்தளித்தது. நல்லபடியாகத் தன் மனைவிக்குப் பிரசவம் ஆகி வீடு திரும்பிய பிறகு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஊருக்கே திரும்பிப் போய்விடுவது என்று ஒரு சமயம் எண்ணுவார். அடுத்த நிமிஷம் அவருடைய மன உறுதி பறந்து போய்விடும். ரமாமணியுடன் காதல் வாழ்க்கை நடத்துவதுபற்றி அவருடைய உள்ளம் ஆகாசக் கோட்டைகள் கட்டத் தொடங்கிவிடும். ஒருவேளை ராஜம்மாள் பிரசவத்தின் போது இறந்து போய்விட்டால் ரமாமணியைத் தாம் கலியாணம் செய்துகொண்டு ஏன் சுகமாக இருக்கக்கூடாது, என்னும் படுபாதக எண்ணங்கூடத் துரைசாமியின் மனதில் ஒவ்வொரு சமயம் எழுந்து அவரையே திடுக்கிடச் செய்யும். ராஜம்மாளும் கங்காபாயும் ஒரே நாள் இரவில் குழந்தை பெற்றெடுத்தார்கள். அன்றிரவு துரைசாமிக்கு ஸ்டேஷனில் 'டியூடி' இருந்தது. ஆகையால் ஆஸ்பத்திரிக்குப் போகமுடியவில்லை. இராத்திரி ஒரு தடவை டெலிபோன் பண்ணி விசாரித்தார். ராஜம்மாளுக்குச் சுகப்பிரசவம் ஆனதாகவும் பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் பதில் வந்தது. காலையில் 'டியூடி' முடிந்ததும் துரைசாமி பரபரப்புடன் மருத்துவச் சாலைக்குப் போனார். நர்ஸின் அனுமதி பெற்று ராஜம்மாளைப் போய்ப் பார்த்தார். அளவில்லா வேதனையும் வலியும் அனுபவித்துச் சோர்ந்து போயிருந்த ராஜம்மாளின் முகத்தில் புன்னகை மலர்ந்து பெருமிதம் குடிகொண்டிருந்தது. "நான் சொன்னதுதான் பலித்தது!" என்றாள் ராஜம்மாள்.

"என் வாக்குப் பொய்யாகுமா? பாரத்வாஜ மகரிஷியின் வம்சத்தில் பிறந்தவனாயிற்றே நான்!" என்றார் துரைசாமி. "பொய்யாகிவிட்டதே!" என்றாள் ராஜம்மாள். "முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கலாம்! பெண்ணை ஆணாக்க முடியுமா!" என்றார் துரைசாமி. ராஜம்மாள் பரிகாசத்துக்காகவே அவ்விதம் பிடிவாதமாய்ச் சொல்கிறாள் என்று அவர் நம்பினார். "நீங்கள் வேணுமானால் பாருங்களேன்!" என்றாள் ராஜம்மாள். துரைசாமி கொசுவலை மூடியைத் தூக்கிவிட்டுக் குழந்தையைப் பார்த்தார். ஆண் குழந்தை என்பதைக் கண்டு சிறிது திடுக்கிட்டார். இராத்திரி டெலிபோனில் செய்தி சொன்னவர்கள் தவறாகச் சொல்லியிருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார். ஆயினும் அவருடைய மனம் பூரண நிம்மதியடையவில்லை. உருவமில்லாத சந்தேகங்கள் தோன்றித் தொல்லை கொடுத்தன. நர்ஸைத் தனியாகச் சந்தித்து, 'டெலிபோனில் பெண் குழந்தை என்று ஏன் சொன்னாய்?" என்று கேட்டார். நர்ஸ் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "நான் சொல்லவில்லை வேறு யாரும் சொல்லியிருக்கவும் மாட்டார்கள்; உங்களுக்கு ஏதோ பிரமை!" என்றாள். மறுபடியும் வற்புறுத்திக் கேட்டபோது, "ஒருவேளை கங்காபாயைப் பற்றி விசாரிக்கிறீர்கள் என்று எண்ணிக்கொண்டு யாராவது சொல்லியிருக்கலாம்" என்றாள். "கங்காபாய்க்கும் பிரசவம் ஆகிவிட்டதா?" என்று துரைசாமி கேட்டதற்கு, "ஆமாம் பெண் பிறந்திருக்கிறது!" என்றாள் நர்ஸ். உடனே துரைசாமி ரமாமணியைப் போய்ப் பார்த்து அந்தச் செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டார். இத்துடன் ஒருவாறு அவர் மனம் ஆறுதல் அடைந்தது. கங்காபாயையும் அவரே ஆஸ்பத்திரியில் சேர்த்தபடியால் அவளுடைய பெண் குழந்தையைப் பற்றித் தமக்குத் தெரியப்படுத்தியது இயற்கையே என்று தோன்றியது.

ராஜம்மாளையும் குழந்தையையும் துரைசாமி வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். சில காலத்துக்கெல்லாம் அந்தக் குழந்தை இறந்து விட்டது. ராஜம்மாளுக்கும் துரைசாமிக்கும் இதனால் ஏற்பட்ட துன்பத்திற்கு அளவேயில்லை. தன்னுடைய குழந்தை இறந்த துயரத்தை மறப்பதற்காகத் துரைசாமி கங்காபாயின் குழந்தையை அடிக்கடி போய்ப் பார்த்து வந்தார். கங்காபாய் இறந்து போய்விட்டாள். அவளுடைய குழந்தையை ரமாமணிபாய் வளர்த்து வந்தாள். துரைசாமி ஏற்படுத்திக்கொடுத்த ஜாகையில்தான் அவள் வசித்தாள். ஒரு நாள் ரமாமணியின் ஜாகைக்குத் துரைசாமி போனபோது உள்ளே யாருடனோ அவள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. அந்தப் பேச்சில் தன்னுடைய பெயர் அடிபடவே துரைசாமி கவனமாகக் கேட்டார். அதிலிருந்து ஒரு விபரீதமான மோசடி வேலையைப்பற்றி அறிந்து கொண்டார். பிரசவங்கள் நிகழ்ந்த அன்று இரவில் ராஜம்மாளின் குழந்தை கங்காபாயின் குழந்தையாகவும், கங்காபாயின் குழந்தை ராஜம்மாளின் குழந்தையாகவும் மாற்றப்பட்டன என்று தெரிந்து கொண்டார். உடனே கதவை இடித்துத் திறந்து கொண்டு போய் நர்ஸையும் ரமாமணியையும் சண்டை பிடிக்கவேண்டும் என்று முதலில் தோன்றியது. அப்புறம் அதனால் என்ன பலன்கள் நிகழுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. மனக் குழப்பம் மாறிய பிறகு நன்றாக யோசித்துத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தார். நர்ஸ் வெளியில் போகும்போது அவளுடைய கண்ணில் படாமல் மறைந்திருந்து விட்டுப் பிறகு அறைக்குள் போனார். ரமாமணியைப் பார்த்ததும் அவருடைய பொறுமையெல்லாம் பறந்து விட்டது. அவளைத் திட்டிச் சண்டை பிடித்தார். ரமாமணி ஓவென்று அழுது விட்டாள். ஒரு கத்தியை எடுத்து நீட்டி "இதனால் என்னைக் குத்திக் கொன்றுவிட்டு இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போங்கள்!" என்றாள். "என் தங்கை மேல் என் அன்பையெல்லாம் வைத்திருந்தேன், அவளும் போய்விட்டாள். இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்துக்கொண்டு உயிர் வாழலாம் என்று எண்ணியிருந்தேன்.

குழந்தையை நீங்கள் எடுத்துக் கொண்டு போனால் எனக்கு அப்புறம் இந்த உலகத்தில் வேலை ஒன்றுமில்லை" என்று கத்தினாள். முடிவில் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டாள். அதாவது "குழந்தையை எடுத்துக் கொண்டு போவதில்லை" என்று துரைசாமியிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டாள். குழந்தைகளை மாற்றும் காரியத்தை எதற்காகச் செய்தாள் என்று துரைசாமி விசாரித்துத் தெரிந்து கொண்டார். தன் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தால் ரஜினிபூர் ராஜ்யத்துக்கு அந்தக் குழந்தை வாரிசு ஆகும் என்று ரமாமணிபாய் நம்பினாள். அக்காரணத்தாலேயே ரஜினிபூர் ராஜாவின் துர்மந்திரிகள் குழந்தையைக் கண்டுபிடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று பயந்தாள். குழந்தை வேறிடத்தில் வளர்ந்தால் அந்த அபாயம் இல்லை என்றும், பின்னால் தக்க சமயத்தில் வெளிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நினைத்தாள். ஆனால் கங்காபாய் இறந்து போவாள் அவளுடைய குழந்தையும் செத்துப் போய்விடும் என்று ரமாமணிபாய் எதிர்பார்க்கவில்லை. அதைக் காட்டிலும் முக்கியமாக, மாற்றி எடுத்து வந்து வளர்த்த ராஜம்மாளின் குழந்தை தன்னுடைய உள்ளத்தை இவ்வளவு தூரம் கவர்ந்து விடும் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. எல்லா விஷயங்களையும் யோசித்துப் பார்த்தபோது துரைசாமிக்கும் குழந்தையை ரமாமணியிடம் அப்போதைக்கு விட்டுவைப்பதே நலம் என்று தோன்றியது. இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டுபோய் ராஜம்மாளிடம், "இதுதான் உன் குழந்தை!" என்று சொன்னால் ராஜம்மாள் நம்பவேண்டுமே? ஏற்கனவே அவள் கொஞ்சம் சந்தேகப் பிரகிருதி.

இதைப்பற்றி ஏதாவது விபரீதமான சந்தேகம் அவள் மனதில் தோன்றிவிட்டால் துரைசாமிக்கு வேறொரு காதலியிடம் பிறந்த குழந்தை என்று அவள் எண்ணிவிட்டால் என்ன செய்வது? வாழ்க்கையே நாசமாகிவிடுமே? - இம்மாதிரி மனக்குழப்பத்துடன் துரைசாமி வீடு திரும்பினார். "பம்பாயில் எத்தனையோ லட்சம் ஜனங்கள் இருக்கிறார்களே? இந்த மாதிரி ஒரு ஆச்சரியமான, விபரீதமான அநுபவம் என் வாழ்க்கையிலேதானா ஏற்படவேண்டும்?" என்று எண்ணிக்கொண்டே சென்றார். அந்த ஒரு ஆச்சரியமான விபரீத சம்பவம் மேலும் பல ஆச்சரிய - விபரீதங்கள் ஏற்படுவதற்குக் காரணமாயிருந்தது. ரமாமணியிடம் வளர்ந்து வந்த தன் குழந்தையிடம் துரைசாமியின் பாசம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. அதன் காரணமாகவே துரைசாமி ரமாமணிபாயிடம் நீடித்த தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆளாகவும் நேர்ந்தது. தன்னுடைய போக்கு வரவுகளைப் பற்றித் தன் மனைவி ராஜம்மாளிடம் பொய் சொல்லி மறைக்க வேண்டியதாயிற்று. அதனால் அந்தப் பேதைக்கு எல்லையற்ற மனத்துன்பத்தையும் அளிக்கவேண்டியதாயிற்று. "சீதா! ராஜம்மாளுக்குப் பிறந்து ரமாமணியிடம் வளர்ந்த அந்தப் பெண்மணியின் பெயர்தான் தாரிணி. அவள்தான் என்னுடைய சீமந்த புத்திரி, நீ அவளுடைய தங்கை. நீங்கள் இரண்டு பேரும் குழந்தை களாயிருந்தபோது நான் பட்ட சங்கடத்தை உன்னால் கற்பனை செய்துகூட அறிய முடியாது. உலகத்தில் யாரும் அத்தகைய சங்கடத்தை அநுபவித்திருக்க மாட்டார்கள். முற்காலங்களில் கொடுமையான அரசர்கள் ஒருவித தண்டனை அளிப்பார்களாம்.

ஒரு மனிதனை நடுவில் நிறுத்தி இரண்டு பக்கமும் இரண்டு யானையை நிறுத்தி வலது கையை ஒரு யானையும் இடது கையை ஒரு யானையும் பிடித்து இழுக்கும்படி செய்வார்களாம். அதே மாதிரியாக ஒரு பக்கத்தில் தாரிணியின் மேல் உள்ள பாசமும் இன்னொரு பக்கத்தில் உன்மேல் உள்ள பாசமும் என்னைப் பற்றி இழுத்துக்கொண்டிருந்தன. நடுவில் அகப்பட்டுக் கொண்டு நான் திண்டாடினேன்! ஆனால் இந்தத் திண்டாட்டத்திலெல்லாம் ஒரு சந்தோஷமும் இருந்தது!" என்றார் மௌல்வி சாகிபுவாக விளங்கிய துரைசாமி ஐயர். சீதாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையில் அதுவரையில் அர்த்தமாகாதிருந்த பல விஷயங்கள் அப்போது விளங்கின. மர்மமாயிருந்த பல சம்பவங்கள் தெளிவு பெற்றன. தாரிணியென்று தன்னை எண்ணிக்கொண்டு ரஜினிபூர் ஆட்கள் கொண்டு போனதற்குக் காரணம் தெரிந்தது. அதைக் காட்டிலும் முக்கியமாக ராஜம்பேட்டையில் சௌந்தரராகவன் தன்னை முதன் முதலில் பார்த்ததும் அன்பு கொண்டதின் காரணம் விளங்கிற்று. தாரிணியின் சாயலைத் தன்னிடம் கண்டதுதான் அதற்குக் காரணமாயிருக்க வேண்டும்; சந்தேகமில்லை. தாரிணி தன்னிடம் அவ்வளவு அன்பாயிருந்ததின் காரணமும் சீதாவுக்கு அப்போது நன்கு புலனாயிற்று. ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரத்த பாசந்தான்; சந்தேகம் என்ன? தன்னுடைய மனதிலும் தாரிணியிடம் வாஞ்சை பொங்கிக்கொண்டுதான் இருந்தது. ஆனால் பாழும் அசூயை அடிக்கடி அந்த வாஞ்சையை அமுக்கி விட்டது. எவ்வளவு கீழான மனது தன்னுடைய மனது; தாரிணியின் தயாள குணம் என்ன? விசால இருதயம் என்ன? தன்னுடைய ஈருஷை நிறைந்த சின்ன மனது என்ன? கடவுள் புண்ணியத்தில் இந்த இக்கட்டிலிருந்து தப்பி மறுபடியும் அந்தப் புண்ணியவதியைப் பார்க்கும் பாக்கியம் தனக்குக் கொடுத்து வைத்திருந்தால்?...

"அப்பா! தாரிணி அக்காவுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா?" என்று கேட்டாள். "இந்த விஷயமெல்லாம் என்று எதைப் பற்றிக் கேட்கிறாய்? நான் இப்போது சொன்னவற்றில் சில தெரியும்; சில தெரியாது." "நான் அவள் கூடப் பிறந்த தங்கை என்று தெரியுமா?" "தெரியாது, என்னுடைய நெஞ்சு மிகவும் கோழை நெஞ்சு, சீதா! பல தடவை அவளிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கடைசியில் தைரியம் வராமல் விட்டுவிட்டேன். ரஸியா பேகம் அவளிடம் சொல்லக்கூடாது என்று பிடிவாதம் பிடித்தாள்." "எதற்காக அப்பா?" "பைத்தியக்காரத்தனந்தான்! உண்மையைச் சொல்லி விட்டால் அவள் பேரில் தாரிணிக்குப் பாசம் இல்லாமல் போய்விடும் என்று பயம். அது மட்டுமல்ல; ரஜினிபூர் ராஜ்யத்தில் ஒரு பாதியாவது தாரிணிக்கு வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்ற சபலம் உன் சித்தியின் மனதிலிருந்து இன்னும் போகவில்லை. உலகம் தலைகீழாகப் போகிறது என்பதையும் சுதேச ராஜ்யங்கள் எல்லாம் இன்னும் சில காலத்தில் இருந்த இடந்தெரியாமல் போய்விடும் என்பதையும் அவள் உணரவில்லை!" சீதா சிறிது நேரம் யோசித்துக் கொண்டிருந்த பிறகு, "அப்பா! எனக்குக் கலியாணம் ஆனபிறகு வெகுகாலம் வரையில் என்னை வந்து பார்க்காமலேயே இருந்து விட்டீர்களே, ஏன்?" என்றாள். மௌல்வி சாகிபு தயங்கினார், "உண்மையைச் சொல்ல வேண்டும் என்கிறாயா?" என்று கேட்டார். "உங்கள் இஷ்டம்! சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்!" "உண்மையைச் சொல்ல வேண்டியதுதான், சீதா! இப்போது சொல்லாவிட்டால் பிறகு சந்தர்ப்பம் வருமோ என்னமோ யார் கண்டது? சொல்லுகிறேன் கேள்! உனக்குக் கலியாணம் ஆன புதிதில் உன் பேரில் எனக்குக் கோபமாகவேயிருந்தது. உன் தமக்கை இஷ்டப்பட்டுக் கலியாணம் செய்து கொள்ள விரும்பிய புருஷனை நீ கலியாணம் செய்து கொண்டாய். தாரிணிக்கு நீ பெரிய துரோகம் செய்து விட்டதாக நினைத்தேன்.

ஆனால் உண்மையில் நீ அவளுக்குப் பெரிய உபகாரம் செய்திருக்கிறாய் என்று பின்னால் தெரிந்து கொண்டேன். அம்மா! சௌந்தர ராகவனைக் கலியாணம் செய்து கொண்டு நீ பட்ட கஷ்டங்களை நினைத்து நினைத்து நான் எத்தனையோ நாள் கண்ணீர் வடித்திருக்கிறேன். இவ்வளவு கஷ்டங்களையும் தாரிணி பட்டிருக்க வேண்டியவள்தானே? நீ அந்தத் தூர்த்தனைக் கலியாணம் செய்து கொண்டதனால் தாரிணிக்கு எவ்வளவு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய்?" என்றார் மௌல்வி சாகிபு. "அப்பா! அவரைப் பற்றி நீங்கள் ஒன்றும் அவதூறாகப் பேச வேண்டாம், என்னால் பொறுக்க முடியாது!" என்றாள் சீதா. "இல்லை, பேசவில்லை, மன்னித்துக்கொள்!" என்றார் மௌல்வி. "நீங்கள் சற்று முன் கூறியது உண்மையும் இல்லை. அக்கா இவரைக் கலியாணம் செய்து கொண்டிருந்தால் என்னைப் போல் கஷ்டப்பட்டிருக்க மாட்டாள். இரண்டு பேரும் எவ்வளவோ சந்தோஷமாக வாழ்க்கை நடத்தியிருப்பார்கள். இந்தத் துக்கிரி, - அதிர்ஷ்டமற்ற பாவி அவர்களுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு நாசமாக்கினேன்!" "அப்படிச் சொல்லாதே, சீதா! இந்த உலகில் எல்லாம் அவரவர்களுடைய தலைவிதியின்படி நடக்கிறது. ஒருவர் வாழ்க்கையை இன்னொருவர் நாசமாக்க முடியாது." "தலைவிதியில் எனக்கு நம்பிக்கையில்லை அப்பா! தலைவிதியும் இல்லை, கால் விதியும் இல்லை. எல்லாம் நம்முடைய கர்மத்தின் பயன்தான். அக்காவுக்கு நான் முதலில் துரோகம் செய்தேன்; பிறகு என் அருமைத் தோழி லலிதாவுக்குத் துரோகம் செய்தேன். அதற்கெல்லாம் பிராயசித்தம் நான் செய்து கொள்ளாவிட்டால் எனக்கு நல்ல கதி எப்படிக் கிடைக்கும்!" "நீ மனதறிந்து ஒரு குற்றமும் செய்யவில்லை, சீதா! எல்லாம் விதி வசமாக நேர்ந்ததுதான். வீணாக மனதை, அலட்டிக் கொள்ளாதே!" "அப்பா! எனக்கு நீங்கள் ஒரு வரம் கொடுக்க வேண்டும்." "நான் என்ன கடவுளா, உனக்கு வரம் கொடுப்பதற்கு?" "கடவுளைப் போலத்தான் வந்திருக்கிறீர்கள். 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' அல்லவா? அன்னை போய் விட்டாள். நீங்கள்தான் பாக்கியிருக்கும் கடவுள்.

இந்தப் பிரயாணத்தில் எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ஏதாவது ஆபத்து ஏற்பட்டு நான் இறந்துவிட்டால், நீங்கள் கட்டாயம் தாரிணி அக்காவைப் பார்த்து நான் சொல்லும் செய்தியைச் சொல்ல வேண்டும். நான் அக்காவுக்குச் செய்த துரோகத்துக்காக மனப்பூர்வமாய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகச் சொல்ல வேண்டும்!..." "இது என்ன பேச்சு?" "ஒருவேளை நான் வழியில் இறந்து போய் விட்டால் நீங்கள் எப்படியாவது தாரிணி அக்காவைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இவருடைய மனதிலிருந்து இன்னும் அக்காவின் ஞாபகம் போகவில்லை என்றும், இவரை அக்கா கட்டாயம் கலியாணம் செய்து கொண்டே தீர வேண்டும் என்றும் சொல்ல வேண்டும். நான் இறந்த பிறகு தாரிணி அக்காவும் இவரும் கலியாணம் செய்து கொண்டு சந்தோஷமாயிருந்தால்தான் என் ஆத்மா சாந்தமடையும்!" "இது என்ன பைத்தியம்? என்னுடைய தவறுதான்! உன்னிடம் நான் ஒன்றுமே சொல்லியிருக்கக் கூடாது." "நான் இப்போது சொன்னதை நீங்கள் தாரிணி அக்காவிடம் சொல்வதாக வாக்களித்தால்தான் நான் இங்கிருந்து புறப்படுவேன்? இல்லாவிட்டால் புறப்பட்டு வரமாட்டேன்." "உன் இஷ்டப்படியே வாக்களிக்கிறேன், அம்மா! ஆனால் அதற்கு அவசியம் ஏற்படப் போவதில்லை." "எதற்கு?" "தாரிணியிடம் நான் செய்தி சொல்வதற்கு. வழியிலேயே நாம் உன் தமக்கையைப் பார்ப்போம். அப்போது நீயே சொல்லிவிடலாம்." "வழியில் பார்ப்போம் என்று எதைக்கொண்டு சொல்லுகிறீர்கள்?" "எனக்கு ஜோஸியம் தெரியும், இப்போது உனக்கு ஒரு உதாரணம் சொல்லி நிரூபிக்கிறேன், பார்! நம்முடைய வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த பையன் இருக்கிறான் அல்லவா?" "ஆமாம், அவனுக்கு என்ன?" "அதோ பாடுகிறான், கேள்? என்ன பாடுகிறான் என்று தெரிகிறதா உனக்கு?"

சற்றுத் தூரத்திலிருந்து 'சல் சல் நவ் ஜவான்!' என்ற டாக்கிப் பாட்டு லேசாகக் கேட்டுக் கொண்டிருந்தது. பையன் பாறை மறைவில் உட்கார்ந்து பாடிக் கொண்டிருந்தான். "பையன் ஏதோ பழைய பாட்டை முணுமுணுக்கிறது கேட்கிறது! அதனால் என்ன?" "அந்தப் பையன் நம்மை ஏமாற்றிவிட்டு ஓடிவிட உத்தேசித்திருக்கிறான். கவனித்துக்கொண்டிரு." இரண்டு நிமிஷத்துக்குப் பிறகு கோவேறு கழுதையை வண்டியிலே பூட்டும் சத்தம் கேட்டது. "நீங்கள் சொல்வது உண்மைதான், வண்டியைப் பூட்டிக் கொண்டு பையன் ஓடிவிடப் பார்க்கிறான் போலிருக்கிறது. அப்புறம் நம்முடைய கதி என்ன ஆகிறது?" "கவலைப்படாதே, சீதா! அவனுடைய நோக்கம் நிறைவேறாது!" "அது எப்படிச் சொல்கிறீர்கள்?" "ஜோசியந்தான் சொல்கிறேன். பார்த்துக் கொண்டே இரு!" சில நிமிஷத்துக்கெல்லாம் வண்டிச் சக்கரம் உருளும் சத்தம் கேட்டது. வண்டியும் கோவேறு கழுதையும் அதை ஓட்டிய பையனும் கண்ணுக்குத் தென்பட்டார்கள். மௌல்வி சாகிபு சட்டென்று தன் மடியிலிருந்து கைத் துப்பாக்கியை எடுத்துச் சுட்டார். 'டுமீர்' என்ற சத்தத்துடன் குண்டு பாய்ந்து சென்றது. சீதாவின் காதில் இலேசாக அலை ஓசை கேட்டது. அது, "மரணமே! வா!" மரணமே! வா!" என்று சீதாவின் காதில் ஒலித்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,070
Reaction score
85
Points
48
முப்பதாம் அத்தியாயம்

"மரணமே! வா!"

மௌல்வி சாகிபு சுட்ட துப்பாக்கி குண்டு குறி தவறி தப்பிப் போயிருக்க வேண்டும். ஏனெனில் வண்டி போவது அதனால் தடைப்படவில்லை. கோவேறு கழுதை மிரண்டு வேகமாக வண்டியை இழுத்துக் கொண்டு ஓடியது. ஓடிய வண்டியிலிருந்து பையன் ஏதோ உரத்த சத்தமிட்டுத் திட்டிக் கொண்டு போனது காதில் விழுந்தது. "சீதா! என்னுடைய ஜோசியம் தவறிவிட்டது. சகுனம் கெட்டுவிட்டது, இந்த இடத்தில் இனித் தங்குவதற்கு இல்லை; புறப்படு உடனே!" என்றார் மௌல்வி சாகிபு. அடுத்த ஏழெட்டு தினங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் எல்லாம் சீதாவுக்குத் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களாகவே தோன்றவில்லை. சில சமயம் பல பூர்வ ஜன்மங்களிலே நடந்த சம்பவங்களாகத் தோன்றின. சில சமயம் கனவிலே காணும் தெளிவில்லாச் சம்பவங்களைப் போலத் தோன்றின. பற்பல கதைகளிலும் இதிகாச புராணங்களிலும் படித்த நிகழ்ச்சிகளாகத் தோன்றின. எப்பொழுதோ யாரோ சொல்லிக் கேட்ட சம்பவங்களைப் போலிருந்தன. அந்தச் சம்பவங்களி லெல்லாம் அவளும் ஒரு பாத்திரமாக இருந்த போதிலும், அவளுடைய உடம்பிலிருந்து ஆவியானது தனியே பிரிந்து போய் நின்று அந்த பயங்கர நிகழ்ச்சிகளையெல்லாம் காண்பது போலிருந்தது. வெளியிலே நிகழ்ந்த காரியங்களையும் காட்சி களையும் தவிர சீதாவின் மனதிலும் பல காட்சிகள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. லலிதாவின் காலில் விழுந்து அவள் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். சௌந்தரராகவனிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டாள். வஸந்தியைக் கட்டித் தழுவி ஆசி கூறினாள். மாமனாரையும் மாமியாரையும் வணங்கினாள். தாரிணியைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள். சூரியாவிடம் கோபித்துக் கொண்டு திட்டினாள். தந்தையின் கையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கொஞ்சினாள். ரஸியா பேகத்தின் முகவாய்க் கட்டையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினாள். காந்திமகானைத் தன் இதய பீடத்தில் அமர்த்திக் கும்பிட்டாள். இடையிடையே அவளுடைய பேதை உள்ளம், "மரணமே! வா!" என்று கூவிக்கொண்டிருந்தது. அவளுடைய காதில் அடிக்கடி அலை ஓசை முழங்கிற்று.

பகல் வேளைகளில் சீதாவும் அவளுடைய தந்தையும் மலை குகைகளிலும் காட்டுப் புதர்களிலும் பாழடைந்த மசூதிகளிலும் மறைந்து கொண்டிருந்தார்கள். இருட்டிய பிறகு பீதி நிறைந்த உள்ளத்துடன் முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டு பிரயாணம் செய்தார்கள். வழியிலே அவர்கள் தீப்பிடித்து எரிந்த கிராமங்களையும் பட்டணங்களையும் தாண்டிப் போகவேண்டியிருந்தது. எரிந்த வீடுகளிலிருந்து எழுந்த ஜுவாலைகள் சுற்றிலும் நெடுந்தூரத்துக்கு இரவைப் பகலாக்கின. அந்த ஜுவாலைகளின் வெளிச்சத்தில் கரிய பயங்கர உருவங்கள் யமகிங்கரர்களைப் போல் கையில்கொடிய ஆயுதங்களுடனே ஊளையிட்டுக் கொண்டு அலைந்தன. அம்மாதிரி இடங்களுக்கு அருகிலும் நெருங்காமல் தந்தையும் மகளும் நெடுந்தூரம் சுற்றி வளைத்துக் கொண்டு போனார்கள். இரவு நேரங்களில் சாலையோடு போய்க் கொண்டிருக்கும் போது முன்னால் காலடிச் சத்தம் கேட்டாலும் அவர்கள் நெஞ்சு திடுக்கிடும்; பின்னால் காலடிச் சத்தம் கேட்டால் உள்ளம் பதைக்கும். சில சமயம் திடுதிடுவென்று ஜனங்கள் பெரும் கூட்டமாக ஓடி வரும் சத்தம் கேட்கும். இருவரும் பக்கத்துக் காட்டுக்குள் சென்று ஒளிந்து கொள்வார்கள். பயந்து ஓடும் ஜனங்களைத் துரத்திக்கொண்டு பின்னால் ராட்சதக் கூட்டத்தினர் ஓடி வருவார்கள். அவர்கள் போடும் பயங்கரமான சத்தத்துடன் ஸ்திரீகள் குழந்தைகளின் பரிதாப ஓலக் குரலும் சேர்ந்து ஒலிக்கும். ஓலக் குரல் அடங்கி வெகு நேரமான பிறகும் சீதாவின் காதில் அலை ஓசை கேட்டுக் கொண்டிருக்கும். அவளுடைய நெஞ்சம் "மரணமே! வா!" என்று அழைக்கும். நடந்து நடந்து சீதாவின் கால்களில் வலி எடுத்து இரத்தம் கட்டியது பின்னர் வீக்கமும் கண்டது. "இனி நடக்க முடியாது" என்று அவளுடைய கால்கள் கெஞ்சின. "அப்பா! என்னைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் போய்விடுங்கள்!" என்று சீதா தந்தையிடம் கெஞ்சினாள். "முடியாது, தாயே முடியாது!" என்று மௌல்வி சாகிபு தலையை அசைத்தார். "எப்படியும் நான் சாகப்போகிறேன்; உங்கள் கையினால் சாகிறேனே? எதற்காகச் சித்திரவதை?" என்றாள் சீதா.

அதற்கும் மௌல்வி சாகிபு இணக்கம் காட்டவில்லை. தந்தையின் தோளைப் பிடித்துக்கொண்டு சீதா மெள்ள மெள்ளத் தடுமாறி நடந்தாள். அவளுடைய உள்ளம் "மரணமே! வா!" என்று அழைத்தது. அவளுடைய காதில் அலை ஓசை அதிகமாகிக் கொண்டிருந்தது. சாலையில் அவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய புழுதிப் படலம் கிளம்பி ஆகாசத்தை மறைத்தது. ஒரு பெரும் இரைச்சல் கேட்டது. அது என்னவென்று தெரிந்து கொள்வதற்காகச் சீதாவும் அவள் தந்தையும் சாலையைவிட்டு ஒதுங்கி ஒரு பாழடைந்த 'குருத்வார'த்துக்குள் ஒளிந்து கொண்டார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒரு மாபெருங் கூட்டம் வந்தது. அந்தக் கூட்டத்தாரைக் காப்பதற்குத் துப்பாக்கிப் பிடித்த சீக்கிய சோல்ஜர்கள் உடன் சென்றார்கள். வயோதிகர்கள், குழந்தைகள், ஸ்திரீகள், புருஷர்கள், நோயாளிகள், கர்ப்ப ஸ்திரீகள், ஒட்டகை வண்டிகள், கழுதை வண்டிகள், மாட்டு வண்டிகள், இரண்டொரு லாரிகள், மூட்டை முடிச்சுக்கள், பெட்டி பேழைகள் இவை அடங்கிய நீண்ட ஊர்வலம் போய்க் கொண்டே இருந்தது. சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள் ஒரு மைல் நீளமுள்ள ஊர்வலம். "இந்தக் கூட்டத்தோடு நாமும் போய்விடலாமா?" என்று மௌல்வி சாகிபு கேட்டார். "வேண்டாம் அப்பா! இந்தப் புழுதியையும் நாற்றத்தையும் கூச்சலையும் என்னால் தாங்க முடியாது! பைத்தியம் பிடித்துவிடும்?" என்றாள் சீதா. ஊர்வலம் சென்ற வழியில் பயங்கரமான துர்நாற்றம் கிளம்பி வான வெளியின் காற்றையெல்லாம் விஷமாக்கி விட்டது. சீதாவும் அவளுடைய தந்தையும் வேறொரு குறுக்குச் சாலையைப் பிடித்துக்கொண்டு சென்றார்கள்.

ஒரு சின்ன ரயில்வே ஸ்டேஷனை அவர்கள் அடைந்தார்கள். வெயிட்டிங் ரூமில் உட்கார்ந்து ரயிலுக்காகக் காத்திருந்தார்கள். யாராவது வந்து வெயிட்டிங் ரூமுக்குள் எட்டிப் பார்க்கும் போதெல்லாம் சீதாவுக்குப் 'பகீர்' என்னும். ரயிலுக்காகக் காத்திருந்த நேரம் முடிவில்லாமல் நீண்டு கொண்டேயிருந்தது. சீதா உட்கார்ந்தபடியே சிறிது கண்ணயர்ந்தாள். பெரும் அலை ஓசை கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள். கேட்டது ரயில் வரும் சத்தம் என்று தெரிந்து கொண்டாள். இருவரும் பிளாட்பாரத்துக்குள் போனார்கள். ரயிலில் கூட்டம் சொல்லமுடியாது. எல்லா வண்டிகளும் உட்புறம் பூட்டப்பட்டிருந்தன. சீதாவுக்கு அந்த ரயிலில் ஏறுவதற்கே பிடிக்கவில்லை. ஆனால் மௌல்வி சாகிபு வற்புறுத்தினார். வண்டி வண்டியாகச் சென்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டு கடைசியில் ஒரு வண்டிக் கதவைத் திறக்கச் செய்தார். இரண்டு பேரும் ஏறிக் கொண்டார்கள். வண்டியிலிருந்தவர்கள் தாங்கள் வந்த வழியில் பார்த்த பயங்கரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். ரயில் மெள்ள மெள்ளப் போய்க்கொண்டிருந்தது. ரயிலில் சக்கரங்கள் சுழன்ற சத்தம் சீதாவின் காதில் அலை ஓசையைப் போல் கேட்டுக் கொண்டிருந்தது. "மரணமே! வா!" என்று அவளுடைய உள்ளம் கூவிக் கொண்டிருந்தது. ஒரு ரயில்வே ஜங்ஷனில் ரயில் நின்றது, நின்ற ரயில் மறுபடி லேசில் கிளம்புகிற வழியாக இல்லை. நேரமாக ஆக ரயிலிலிருந்தவர்களின் கவலை அதிகமாயிற்று. ரயில்வே ஸ்டேஷனிலும் வெளியிலும் ஏகக் கூச்சலும் குழப்பமுமாயிருந்தன.

மௌல்வி சாகிபு திடீரென்று "அதோ தாரிணி" என்றார். சீதா ஆவலுடன் அவர் காட்டிய திசையைப் பார்த்தாள். ஆம்; கொஞ்ச தூரத்தில் கூட்டத்துக்கு நடுவில் சூரியாவும் தாரிணியும் போய்க்கொண்டிருந்தார்கள். ஒருகணம் அவர்களுடைய முகங்கள் தெரிந்தன. மறுகணம் கூட்டத்தில் மறைந்து விட்டன. "சீதா, கொஞ்சம் பொறு! அவர்களைப் பார்த்துக் கொண்டு வருகிறேன்!" என்று அப்பா சொல்லிவிட்டு வண்டியிலிருந்து இறங்கி ஓடினார். அடுத்த நிமிஷம் அவரும் ஜனக் கூட்டத்தில் மறைந்து விட்டார். பிறகு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாக இருந்தது. சீதாவுக்கு அந்தமாதிரி பல யுகங்களுக்குப் பிறகு ஒரு பயங்கரமான கூச்சல் கேட்டது. அதைக் காட்டிலும் கோரமான காட்சி கண் முன்னால் தென்பட்டது. நூற்றுக்கணக்கான முரட்டு மனிதர்கள் கையில் கத்திகளுடன் பாய்ந்து வந்தார்கள். பிளாட்பாரத்தில் நின்றவர்கள் பலரைக் கொன்றார்கள். எங்கே பார்த்தாலும் இரத்தக்களறி ஆயிற்று. அந்த மனிதர்கள் ரயிலுக்குள்ளும் பாய்ந்து ஏறினார்கள். சீதா இருந்த வண்டியை நோக்கி ஐந்தாறு பேர் ஓடி வந்தார்கள். சீதா பீதியினாலும் அருவருப்பினாலும் கண்களை மூடிக் கொண்டாள். அவளுடைய மனதில், "கடைசியாக நம்முடைய பிரார்த்தனை நிறைவேறிவிட்டது! மரணம் வந்து விட்டது!" என்ற நினைவு தோன்றியது. தடதடவென்று ரயிலுக்குள் நாலைந்து பேர் ஏறினார்கள். மூடிய கண்களுடனே அடுத்த கணத்தில் தன்னுடைய மார்பில் கத்தி பாயும் என்று சீதா எதிர் பார்த்தாள். ஆனால் கத்தி பாயவில்லை; கண்ணும் திறக்கவில்லை. மறுபடியும் வண்டிக்குள் தனக்கருகில் ஏதோ கலவரம் நடக்கிறதென்பதை உணர்ந்தாள். யாரோ அவளைப் பிடித்துத் தள்ளினார்கள். தொப்பென்று கீழே விழுந்தாள். அவள் மேல் ஏறி மிதித்துக் கொண்டு யாரோ ஓடினார்கள்.

"சீதா! சீதா!" என்ற இனிய குரலுடன் மெல்லிய மிருதுவான கரங்கள் அவளை எடுத்துத் தூக்கின. கண்ணை விழித்துப் பார்த்து அவை தாரிணியின் கரங்கள் என்பதை அறிந்தாள். தன்னைத் தூக்கிய கரங்களில் ஒன்றிலிருந்து இரத்தம் சொட்டிக் கொண்டிருப்பதையும் கண்டாள், "அக்கா" என்று அலறினாள். அந்த மூன்று தினங்கள் சீதாவின் வாழ்க்கையில் மிகவும் ஆனந்தமான நாட்கள். ஏதோ ஒரு ஊரில் யாரோ ஒருவருடைய வீட்டின் மேல் மச்சில் ஜன்னல் கதவுகளையெல்லாம் அடைத்துக்கொண்டு ஒளிந்திருந்த நாட்கள்தான். சாலையிலாவது வெளிச்சம் உண்டு; காற்று உண்டு இங்கே அது கூடக் கிடைக்காது. எனினும் தன்னுடன் பிறந்தவள் என்று தெரியாதபோதே தன் உள்ளத்தின் அன்பையெல்லாம் கவர்ந்து விட்ட தாரிணியுடன் வசித்தபடியால் அந்த நாட்கள் ஆனந்தமாயிருந்தன. ரயிலில் கொலை செய்யப்படாமல் சீதாவைக் காப்பாற்றிய தாரிணி அவளை இந்த இடத்தில் கொண்டுவந்து சேர்த்திருந்தாள். சீதா தனக்கும் தாரிணிக்கும் உள்ள உறவைப் பற்றிப் பிரஸ்தாபித்தாள். "இதெல்லாம் உனக்கு முன்னமே தெரியாதா அக்கா?" என்று கேட்டாள். "இந்தச் சந்தேகம் எனக்கு வெகுகாலமாகவே இருந்து வந்தது. ஆனால் நான் எவ்வளவு கேட்டும் அந்தக் கிழவரும் கிழவியும் உண்மையைச் சொல்ல மறுத்து விட்டார்கள்?" என்றாள் தாரிணி. "என்ன அநியாயம்? எதற்காக அப்படிச் செய்தார்கள்? அக்கா என்று தெரியாமலேயே உன்னிடம் என் பிராணனை வைத்திருந்தேனே! தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவு பிரியமாயிருந்திருப்பேன்? நாம் எவ்வளவு சந்தோஷமாயிருந்திருக்கலாம்." என்றாள் சீதா.

தன்னிடம் பொறாமை கொண்டு சீதா படுத்திய பாடெல்லாம் தாரிணிக்கு நினைவு வந்தது. ஆனால் அதை இப்போது சீதாவுக்கு ஞாபகப்படுத்தவில்லை. "போனதைப் பற்றிக் கவலைப்பட்டுப் பயன் என்ன? அதற்கெல்லாம் சேர்த்து இப்போது வட்டி போட்டு நாம் சந்தோஷமாயிருக்கலாம்!" என்றாள் தாரிணி. "அதற்கென்ன சந்தேகம்? என் துன்பங்கள் எல்லாம் தீர்ந்து விட்டன. இனிமேல் எனக்கு சந்தோஷத்துக்கு என்ன குறைவு?" என்றாள் சீதா. எனினும் இருவருடைய இதய அந்தரங்கத்திலும் சந்தேகமும் பயமும் இல்லாமற் போகவில்லை. விழித்துக் கொண்டிருந்தபோதெல்லாம் தாரிணியின் கழுத்தைச் சீதா கட்டிக்கொண்டு அந்தரங்கம் பேசினாள். தூங்கும்போது தாரிணியின் மேலே கையைப் போட்டுக் கொண்டு தூங்கினாள். எங்கே தன்னை விட்டு விட்டுத் தாரிணி போய்விடப் போகிறாளோ என்ற பயம் அவளுடைய மனதின் ஆழத்தில் குடி கொண்டிருந்தது. சீதாவின் பயம் சீக்கிரத்திலேயே உண்மையாயிற்று. தாரிணியிடமிருந்து அவள் பிரிய வேண்டிய சமயம் வந்தது. இதைப்பற்றி அறிந்ததும் சீதா முரண்டு பிடித்தாள். "நான் உன்னைவிட்டுப் போக மாட்டேன். நீ என்னை விட்டுப் போனால் குத்திக் கொண்டு சாவேன்!" என்றாள். தாரிணி பலவிதமாக அவளுக்குச் சமாதானம் கூறினாள். "நான் டில்லியில் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன் அதுவரையில் பொறுத்திரு, பெஷாவரில் என்னுடைய சிநேகிதி நிரூபமா இருக்கிறாள். அவளைப் பார்த்து அழைத்துக்கொண்டு வரவேண்டும்!" என்றாள். அந்தச் சகோதரிகளுக்குள் நெடுநேரம் விவாதம் நடந்தது. கடைசியாகச் சீதா, "அக்கா! நீ ஒரு வாக்குறுதி கொடுத்தால் நான் உன்னைப் பிரிந்து போகச் சம்மதிப்பேன்!" என்றாள். "கேள்! அம்மா!" என்றாள் தாரிணி.

"டில்லிக்குப் போகும் வழியில் நான் இறந்துவிட்டால் நீ அவரைக் கலியாணம் செய்துகொள்ள வேண்டும். அப்படி நீ சத்தியம் செய்து கொடுத்தால் நான் உன்னைப் பிரிவேன்!" என்றாள் சீதா. "இது என்னப் பைத்தியக்காரத்தனம்!" என்று தாரிணி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சீதா கேட்கிறதாக இல்லை. தாரிணி மறுக்க மறுக்க சீதாவின் வெறி அதிகமாகி வந்தது! கடைசியில் தாரிணி, "அடியே! நீ செத்து நான் உயிரோடிருந்து உன் புருஷனும் என்னைக் கலியாணம் செய்து கொள்வதற்குச் சம்மதித்தால் நான் கலியாணம் பண்ணிக் கொள்கிறேன்" என்றாள். முஸ்லிம் ஸ்திரீகள் பர்தா அணிந்து கொள்வது போன்ற புர்க்கா ஒன்றைச் சீதாவுக்குத் தாரிணி அளித்தாள். அந்த உடையில் கண்களால் பார்ப்பதற்கு மட்டும் துவாரம் இருந்தது. மற்றபடி தலையிலிருந்து கால்வரையில் சீதாவை அந்த அங்கி மூடிவிட்டது. நள்ளிரவில் மௌல்வி சாகிபும் சீதாவும் அந்த வீட்டு மெத்தை அறையிலிருந்து கீழே இறங்கி வந்தார்கள். வாசலில் தயாராக ஜீப் வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. அதை ஓட்டுவதற்கு ஒரு போலீஸ் டிரைவர் காத்திருந்தான். சீதா தாரிணியைக் கட்டிக் கொண்டு, "அக்கா வாக்குறுதியை மறந்துவிடாதே!" என்றாள். அவளுடைய தந்தை தாரிணியின் தலை உச்சியை முகந்து பார்த்துவிட்டு, "அம்மா! என்னுடைய குற்றங்களை மன்னித்துக் கொள்!" என்று சொன்னார். மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் தாரிணியின் கண்களில் கண்ணீர்த் துளிகள் பிரகாசித்தன. "அப்பா! தங்களுக்கு நான் கொடுத்த தொந்திரவுகளையெல்லாம் மன்னியுங்கள்!அதற்கெல்லாம் பிராயச்சித்தமாகத் தங்களுக்கு வாழ்நாளெல்லாம் பணிவிடை செய்ய வேண்டும். அதற்கு எனக்கு கொடுத்து வைத்திருக்குமோ, என்னமோ?" என்றாள்.

போலீஸ் கான்ஸ்டபிள் ஓட்டிய ஜீப் வண்டி அதிவேகமாகப் போய்க் கொண்டிருந்தது. வழியில் நேர்ந்த பல தடங்கல்களையும் தாண்டிக் கொண்டு சென்றது. சாலைகளில் சில இடங்களில் கூட்டமாக ஜனங்கள் போய்க்கொண்டி ருந்தார்கள். அந்த இடங்களில் ஜனக் கூட்டத்தைப் பிளந்து கொண்டு ஜீப் சென்றது. சில இடங்களில் சாலைகளில் மரங்களை வெட்டித் தள்ளியிருந்தார்கள். அந்த இடங்களில் சாலையிலிருந்து பக்கத்தில் இறங்கிக் கடந்து சென்றது. சில இடங்களில், ஐயோ! என்ன பயங்கரம்; சாலைகளில் கிடந்த மனித உடல்களின்மீது ஏறிச் சென்றது! அந்த உடல்களிலிருந்த உயிர்கள் எப்போதோ போய்விட்டன! இனி அவற்றின் பேரில் ஜீப் வண்டி ஏறினால் என்ன? ரோட் என்ஜின் ஏறினால்தான் என்ன? சாலையில் ஜீப் வண்டி வேகமாகப் போக ஆரம்பித்த புதிதில் சீதாவுக்குத் தான் அபாயங்களையெல்லாம் ஒருவாறு கடந்து விட்டதாகத் தோன்றியது. ஆனால் சீக்கிரத்திலேயே அது பொய் நம்பிக்கை என்று ஏற்பட்டது.ஏனெனில் அவர்களைத் தொடர்ந்து இன்னொரு ஜீப் வண்டி கொஞ்ச தூரத்தில் வந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. ஆனால் அது இந்த வண்டியைத் தொடர்ந்து வருகிறது என்று ஏன் நினைக்க வேண்டும்? தங்களைப் போலவே அபாயத்துக்குத் தப்பித்துச் செல்லும் மனிதர் களாயிருக்கலாமல்லவா? இருக்கலாம். என்றாலும் தங்களைப் பிடிப்பதற்காகவே அந்த வண்டி வருகிறது என்னும் எண்ணத்தைச் சீதாவினால் போக்கிக் கொள்ள முடியவில்லை. அந்த வண்டியில் யமன் தன்னைத் தொடர்ந்து ஓடி வருகிறான் என்றே எண்ணினாள். யார் கண்டது? முதலில் நினைத்தபடியே இந்தப் பிரயாணத்தில் தனக்கு மரணம் நேரிடலாமோ, என்னமோ? "மரணமே! வா, சீக்கிரம் வா!" என்று அவள் உள்ளம் ஜபித்து அவளுடைய காதில் அலை ஓசையின் இரைச்சல் அதிகமாயிற்று.

ஒரு நதிக்கரையில் வந்து ஜீப் வண்டி நின்றது. நல்ல வேளை! கொஞ்ச நேரமாகப் பின் தொடர்ந்து வந்த வண்டியின் சத்தம் கேட்க வில்லை அது வெறும் பிரமைதான். என்ன அதிசயம்? இங்கே சூரியா வந்து நிற்கிறானே? நமக்கு முன்னால் எப்படி வந்தான்? அதோடு ஒரு படகையும் அமர்த்தி வைத்துக் கொண்டு தயாராயிருக்கிறானே? சூரியா சூரியாதான்! அம்மாஞ்சிக்கு இணை யாரும் இல்லை. தந்தையையும் மகளையும் சூரியாவிடம் ஒப்படைத்து விட்டுப் போலீஸ்காரன் ஜீப் வண்டியைத் திருப்பினான். அவனும் சூரியாவும் ஏதோ சமிக்ஞை பாஷையில் பேசிக் கொண்டார்கள். அதைப்பற்றியெல்லாம் விசாரிக்க அப்போது நேரம் இல்லை. பிற்பாடு கேட்டுக் கொண்டால் போகிறது. சூரியா அவர்களுடைய கையைப் பிடித்துப் படகிலே ஏற்றி விட்டான், தானும் ஏறிக்கொண்டான். படகுக்காரன் படகை நதியில் செலுத்தினான். படகு நகர்ந்ததும் சீதாவின் பயம் அடியோடு நீங்கிற்று. உள்ளத்தில் உற்சாகமே உண்டாகிவிட்டது. அது பாஞ்சால நாட்டின் பஞ்ச நதிகளின் ஒன்றான 'சேனாப்' என்று அறிந்தாள். பிரவாகம் அலை மோதிக் கொண்டு சென்றது; காற்று விர்ரென்று அடித்தது. சீதா தன்னுடைய பர்தா உடையைக் கழற்றிப் படகில் வைத்தாள். மௌல்வி சாகிபுவைப் பார்த்து, "அப்பா! நீங்களும் உங்களுடைய வேஷத்தைக் கலைத்துவிட்டுப் பழையபடி ஆகிவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்றாள். "சீதா! இந்த வேஷத்தைப் பற்றிக் குறை சொல்லாதே! இதன் மூலமாய்த்தானே உன்னைக் காப்பாற்ற முடிந்தது?" என்றார் மௌல்வி சாகிபு. "அதுதான் காப்பாற்றியாகிவிட்டதே? இனிமேல் அபாயம் ஒன்றுமில்லையே?" என்றாள் சீதா. "அவசரப்படாதே, அம்மா; டில்லி போய்ச் சேர்ந்ததும் வேஷத்தை மாற்றி விடுகிறேன்!" என்றார் மௌல்வி சாகிபு. ஆனால் உலகத்தில் மனிதர்கள் நினைக்கிறபடியோ, விரும்புகிறபடியோ, என்னதான் நடக்கிறது? அபாயத்துக்குப் பயப்பட்டுக் கொண்டிருக்கிற சமயத்தில் அது வராமல் போய் விடுகிறது. "இனி ஒரு பயமும் இல்லை" என்று எண்ணியிருக்கும் சமயத்தில் திடீரென்று எங்கிருந்தோ பேரிடி வந்து விழுகிறது.

நதியில் மூன்றில் ஒரு பங்கு தூரம் படகு சென்றிருக்கும். அப்போது அவர்கள் வந்த சாலையில் சற்றுத் தூரத்தில் ஒரு புழுதிப்படலம் தெரிந்தது. புழுதியைக் கிளப்பிய மற்றொரு ஜீப் வண்டி அடுத்த நிமிஷம் நதிக்கரையில் வந்து நின்றது. ஜீப்பிலிருந்து மனிதன் கீழே குதித்ததைச் சீதா பார்த்தாள். அவன் கையில் ஒரு துப்பாக்கி இருந்தது. நதியில் சென்று கொண்டிருந்த படகை அவன் உற்றுப் பார்த்தான். அடுத்த நிமிஷம் கையிலிருந்த துப்பாக்கியைத் தூக்கிக் குறிபார்த்துச் சுட்டான். இதையெல்லாம் பார்த்தவண்ணம் பிரமித்துப் போயிருந்த சீதாவின் காதில், "ஐயோ! செத்தேன்!" என்ற கூச்சல் பக்கத்திலிருந்து கேட்டது. சீதா திரும்பிப் பார்த்தாள், தன் தந்தையின் கன்னத்தில் இரத்தம் சொட்டுவதையும் அவர் படகின் ஓரமாகச் சாய்வதையும் பார்த்தாள். ஆற்றில் விழாமல் அவரைப் பிடித்துக் கொள்வதற்காகப் பாய்ந்து ஓடினாள். படகு ஆடிச் சாய்ந்தது; சீதா நதியின் பெருவெள்ளத்தில் விழுந்தாள். முடிவில்லாத நேரம் சீதா தண்ணீருக்குள் கீழே கீழே கீழே போய்க்கொண்டிருந்தாள். பிறகு தன்னுடைய பிரயாசையின்றியே மேலே வருவதை உணர்ந்தாள். முகம் தண்ணீருக்கு மேலே வந்தது, கண்கள் ஒருகணம் திறந்தன. சற்றுத் தூரத்தில் தன் தந்தை கன்னத்தில் இரத்தக் காயத்துடன் தத்தளித்து நீந்திக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச தூரத்தில் சூரியா அதே மாதிரி நீந்திக் கொண்டிருந்தான். ஆனால் அவர்களில் யாரும் சீதா தலை தூக்கிய பக்கம் பார்க்கவில்லை. படகோ வெகு தூரத்தில் இருந்தது.

அலை ஒன்று சீதாவை நோக்கி வந்தது. அது ஒரு அடி உயர அலைதான். ஆனால் படகையும் மற்ற இருவரையும் மறைத்தபடியால் அது மலை அளவு உயரமாகச் சீதாவுக்குத் தோன்றியது. பொங்கும் கடலைப்போல் ஓசை செய்து கொண்டு அந்த அலை விரைந்து வந்து சீதாவை மோதியது. சீதா பயத்தினால் கண்ணை மூடிக்கொண்டாள். மறுபடியும் தண்ணீரில் முழுகப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றியது. இந்தத் தடவை முழுகினால் முழுகியதுதான்; மறுபடி எழுந்திருக்கப் போவதில்லை. "மரணமே! வா!" என்று அவள் அடிக்கடி ஜபம் செய்து கொண்டிருந்தது பலித்துவிட்டது. இந்தத் தடவை நிச்ச யமான மரணந்தான். அலை வந்து தாக்கியது, நீரில் முழுகும் தறுவாயில் சீதாவின் மனக்கண்ணின் முன்னால் ஒரு காட்சி புலப்பட்டது. தாரிணியும் சௌந்தரராகவனும் கைபிடித்துக் கலியாணம் செய்து கொள்ளும் காட்சிதான் அது. சீதாவின் மனதில் அந்த கண நேரக் காட்சி ஆனந்தத்தையும் அமைதியையும் உண்டு பண்ணியது. "ஆகா! அவர்கள் சந்தோஷமாயிருப்பார்கள்!" என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் முழுகினாள். குழந்தை வஸந்தியின் பால் வடியும் முகமும், சூரியாவின் ஆர்வம் ததும்பிய முகமும், மௌல்வி சாகிபுவின் முகமும் வரிசையாகப் பவனி வந்தன. சுவரிலிருந்த படத்திலிருந்து காந்தி மகாத்மா வின் முகம் தனியாகத் தோன்றிப் புன்னகை செய்து மறைந்தது. பின்னர் சிறிது நேரம் காதில் 'ஹோ' என்ற அலை ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகு எல்லா நினைவும் அழிந்தது. ஆழங்காணாத அமைதி; எல்லைகாணாத இருள்; நிசப்தம்.
 

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom