3,வெப்பமாய் நீ! தட்பமாய் நான்!
அத்தியாயம் - 3
அன்று சசி கல்லூரிக்கு தாமதமாய் வரவும், “ஏன்டி லேட்டு?”
“அதுவா, காலையில குளிச்சிட்டு வந்து நின்னப்போ, என் அக்கா அவளின் குழந்தையை கொஞ்ச நேரம் பார்த்துக்கச் சொன்னா. நானும் தூக்கி வச்சிருந்தேன். நான் தூக்கின நொடியிலிருந்து ஒரே கத்துடி. அழுது கத்தி படாதபாடு படுத்திடுச்சு.”
தியா, “அச்சோ, பாவம் குழந்தை. உன்னை யாருடீ மேக்கப் இல்லாமல் தூக்கச் சொன்னாங்க. பாவம், ஒரிஜினல் முகத்தை பார்த்ததும் பயந்து இருக்கும். அதான் கத்திடுச்சு.”
சசி, “ஹேய் நீயாடி பேசின?” என்று மண்டையில் கொட்ட, சேனா வகுப்பிற்குள் நுழைந்தான்.
வந்தவன் “ஹாய் ஸ்டூடெண்ட்ஸ்! முதல் வருடத்தில் பயிலும் மாணவர்களிடம் இருக்கும் திறமையை தெரிந்து கொள்வதற்காக, ஒவ்வொரு வருடமும் கல்ச்சுரல் ப்ரோக்ராமிற்கு ஏற்பாடு பண்ணுவோம்.
விருப்பம் இருக்கிறவங்க பெயர் கொடுங்க. வகுப்பில் அனைவரும் ஒவ்வொன்றிலும் கலந்து கொள்ள, தியாழினி மற்றும் ஐஸ்வர்யா எதிலும் விருப்பம் தெரிவிக்காமல் இருக்க,
சசி இருவரிடத்திலும், “நீங்கள் எதிலும் கலந்து கொள்ள வில்லையா?”
இருவருமே “விருப்பமில்லை!” என்று ஒரு சேரச் சொல்லிக் கொண்டு முகம் பார்த்தனர்.
சசி தலையில் கைவைத்து, “இதில் கூட, உங்க ரெண்டு பேருக்கும் ஒற்றுமைதான். சரி, நான் போய் கலந்து கொள்கிறேன்.” என்று சொல்லி அவள் நடனத்தில் பெயர் கொடுத்தாள்.
ஒருவன் எழுந்து, “சார், நான் கிரண். ஜோக் சொல்வேன். சொல்லவா?”
பக்கத்திலிருப்பவனோ, “சார்! அத்தனையும் மொக்கையும், அட்ட பழசும்.”
சேனா அவன் அருகே சென்று, “அந்தப் பழசை சொல்லக்கூட அவன் தைரியமாய் எழுந்து நிற்கிறான். நீ வரலையே...! யாரையும் மட்டம் தட்டக் கூடாது. ஓகே.”
அவனை தட்டிக்கொடுத்து, “கிரண், நீ சொல்லு.”
“டாக்டர் ஒருத்தனிடம் நீ தினமும் பச்சை முட்டை சாப்பிடனும் என்று சொல்ல, அதற்கு அவனோ, முடியாது டாக்டர் என்றான். ஏன் டா அப்படிச் சொல்ற? என்றவுடன் எங்க வீட்டுக் கோழி, வெள்ளை முட்டைதான் போடுமென்றானாம்.”
“நல்லாயிருக்கு கிரண். பழசாய் இருந்தாலும், நீங்கள் சொல்லும் விதம் நல்லாயிருக்கு.”
“சார், இன்னொன்னு சொல்லட்டுமா?”
“ஹ்ம்ம் சொல்லுங்கள்!”
“ஒருவன் சென்னைக்கு புதுசாய் வந்தவன், வீடு தேடுவதற்காய் புரோக்கரிடம் சென்று, இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா என்று கேட்க, அவரோ கிடைக்காது தம்பி. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்! தங்கம் விக்கிற விலையில் நீ வேற...! என்றான்.
சேவகன் இருவர்கள் பேசிக்கொண்டார்கள். அதில் ஒருவன், "நமது மன்னருக்கு மகாராணி மீது எப்படிச் சந்தேகம் வந்தது?"
மற்றொரு சேவகன் "குட்டி இளவரசரிடம் 'நீ (good)'குட்' பாயா.. (Bad)'பேட் 'பாயா?'னு கேட்க, 'சிப்பாய்'னு பதில் சொன்னாராம்!"
“ஒகே சூப்பர். கல்ச்சுரலுக்கு இன்னும் புதுசா, வித விதமாய் ட்ரை பண்னுங்க!”
மதியம் சாப்பிட்டு முடிந்ததும், இரண்டு மணிநேரம் ஒவ்வொரு வரும், தங்கள் பயிற்சிக்கு என்று நேரம் ஒதுக்கி, தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தனர்.
அந்த நேரம் உள்ளே நுழைந்த சேனா, “போட்டியில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் இப்போது வந்து என் முன் ட்ரையல் காட்டுங்க!” என்றதும்,
ஒவ்வொருவராய் செய்து காண்பிக்கும் போது, அதில் தென்பட்ட நிறை குறைகளை அவன் சரி செய்வதை பார்த்த அனைவருக்குமே ஆச்சரியம் தான். கோபமே இல்லாமல் எத்தனை முறை கேட்டாலும், அத்தனை முறையும் அவர்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொண்டிருந்தான்.
பின் “போட்டியில் கலந்து கொள்பவர்கள், மூன்று நாளைக்கு விடுமுறை எடுக்கக் கூடாது.” என்றான்.
ஏனோ, அவனின் செய்கை கண்டு, சசிரேகாவிற்கு அவனின் மேல் ஒரு எண்ணமும் ஈர்ப்பும் வந்தது.
அன்று, சசி, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற பாடலுக்காக ஆடிக் கொண்டிருக்க,
தியாழினி “இது என்ன சாமிபாட்டு?”
ஐஸ்வர்யா, அவளையே பார்த்து, “என்ன சாமி பாட்டா? நீ சினிமா எல்லாம் பார்த்ததில்லையா...?”
“எங்க வீட்டில் நாங்க யாருமே டிவியே பார்க்க மாட்டோம். டிவியில் கண்டதையும் காட்டுவார்கள் என்பதால் என் பாட்டிக்கு பார்ப்பதே பிடிக்காது. பாட்டிக்கு பிடிக்காத எதையும், என் மாமா, சித்தி, அம்மா யாரும் பண்ண மாட்டாங்க. நானும் பண்ண மாட்டேன்.”
“எந்தக் காலத்திலடி இருக்க. டிவியே பார்க்காத நீ தகவல் தொழில் நுட்பம் படிக்கப் போறயா? சூப்பர். அப்போ, உன் பொழுதுபோக்கு தான் என்னடி?”
“பொழுதுபோக்கு, சாயந்திரம் பரதநாட்டியம். அது என் வீட்டிலே வந்து சொல்லிக் கொடுப்பாங்க. அப்புறம், நானும் சித்தி மாமா உட்கார்ந்து பேசுவோம். அதிகமாய் படிப்பேன். நைட்டு எல்லாரும் சேர்ந்து, ஒரு, ஒரு மணி நேரம் ஒவ்வொரு வேலையாய் செய்வோம். இதில் என் நேரம் போய்விடும்.”
“உனக்குத்தான் பரதநாட்டியம் தெரியுமே? அப்போ, நீ ஏன் பெயர் கொடுக்கலை. ஐயோ! அப்படியெல்லாம் எல்லோர் முன்னாடியும் நான் டான்ஸ் ஆடுறது, என் அம்மாவுக்கும் பாட்டிக்கும் சுத்தமாய் பிடிக்காது. பரதநாட்டியம் எனக்குப் பிடிக்கும். ஒருநாள் கோவிலுக்குப் போகும்போது மத்தவங்க ஆடுவதைப் பார்த்து, விருப்பப்பட்டு நான் அம்மா கிட்ட கேட்கவும், எனக்காக பல கண்டிஷன் போட்டு, என்னை சேர்த்து விட்டிருக்காங்க.”
“இந்தக் காலத்தில் இவ்வளவு கட்டுப்பாடாய் இருக்காங்களே. நீ எப்படித்தான் இருக்கியோ...?”
“எனக்கு அது பழகிருச்சு. ரொம்பவும் பிடிச்ச விஷயம் தான்.”
“உனக்கு, உன் அப்பா இல்லைன்னு பீலிங்கா இல்லையா...?”
“அப்பா எப்படி இருப்பார்ன்னு தெரியாதுடி. அம்மாவும் எப்பவாச்சும் தான் வருவாங்க. எனக்காகத்தான், என் அம்மா, மாமா, சித்தின்னு இத்தனைபேர் இருக்காங்களே. அதுவும் என் மாமா எனக்கு உயிர். எங்க மாமா என்னைப் பார்த்துக்கிறதுக்காக கல்யாணமே பண்ணிக்கல. சித்தப்பா பாரினில் இருக்காரு. அவருடன் சித்தியை கூப்பிட்டும் கூட, என்னை விட்டுட்டு போக மனசு இல்லாமல், இங்கதான் இருக்காங்க.
என் குடும்பம் தான் எனக்கு உசுரு. அவங்களுக்கு நான் தான் உசுரு. எங்க வாழ்க்கையில் கஷ்டம் கவலை வருத்தமே கிடையாது.” என்று புன்னகைத்தாள்.
அவள் சிரிப்பில், ஐஸ்வர்யாவும் தொலைந்து தான் போனாள்.
கல்லூரி தொடங்கி இன்றோடு நான்காவது நாள். அனைவரும் வகுப்பறையில் அமர்ந்திருக்க, இன்றும் நாளையும் வகுப்புகள் எதுவும் நடைபெறாது. அனைவரும் போட்டிக்குத் தயாராகுங்கள் என்ற தகவல் வந்தது .
ஸ்ரீதர் சேனா தனது பொறுப்பில் இருக்கும் கலைநிகழ்ச்சிகளில், ஒன்றில் கூட குறை வரக்கூடாது என்று ஒவ்வொருவரையும் தனித் தனியாக சீனியர் மாணவர்களை வைத்து கவனித்துக் கொண்டிருந்தான்.
பரத நாட்டியம் ஆடுபவள் சசி என்பதால், அவளது பெயர் சொல்லி அழைக்க, அவளோ விடுமுறை.
“ரிகர்சலுக்கு இன்னும் ரெண்டு நாள் தான் டைம் இருக்கு. இன்னிக்கு எதுக்கு லீவ் எடுத்தாள்?” என்று கோபம் அவனுள் எழுந்தது. அதை மறைத்துக் கொண்டு, “ஓகே நாளை பார்த்துக் கொள்ளலாம்.” என்று விட்டான்.
சிவசேனா கல்லூரி முடிந்து அன்று வீட்டிற்குள் நுழையும் பொழுதே, தனது அம்மாவின் கைமணம் வாசல் வரை வரவும், உள்ளே வந்தவன், “என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?”
“நீ வீட்டுக்கு வந்தாலே ஸ்பெஷல் தான், கண்ணா. போய் கை கால் அலம்பிட்டு வா!” என்றதும்,
அவன் போய் குளித்துவிட்டு வந்து அமர்ந்ததும், ஒரு தட்டில் உளுந்து வடையும், ஒரு கோப்பையில் காஃபியும் வைத்தார்.
காஃபியோடு வந்து வராண்டாவில் அமரும் போது, சலங்கைச் சத்தம் ஆடவன் மனதைத் துளைத்தது.
புது வீடு வாங்கி ஒரு வாரம் தான் ஆன் நிலையில், தன் தாயுடன் குடியேறி இருக்கிறவனுக்கு, மாலையில் கடந்த ஒரு வாரமாய் கேட்கும் சலங்கை சத்தம், ஆடவன் மனதிற்கு இதமாக இருந்தது.
அம்மா பரதநாட்டிய கலைஞர் என்பதால், அந்த சத்தம் மனதிற்கு இதமான சத்தம். வெளியே போய் எட்டிப் பார்த்தான். யாரும் இல்லை. சலங்கைகளின் சப்தம் அவன் மனதைத் தூண்ட, எட்டு வைத்து பால்கனி வழியே ஏறி, மேலே வந்து பார்க்கும்போது,
இடை வளைத்து, தாம் தீம், தக்க திமி, தக்க திமி, என்று விரல்களையும் கால்களையும் நளினமாய் ஆட்டி திரும்பும் போது, ‘இவளா…’ என்று பார்த்தான்.
வகுப்பறையில் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில், அதைத் தவிர்த்து வாய் திறவா மடந்தையவள். ‘இவ்வளவு அழகாய் ஆடுபவள், ஏன் பெயர் கொடுக்கவில்லை என்று நினைத்தவன், சரி நாளை கல்லூரிகள் பார்த்துக்கொள்ளலாம். திறமை இருந்தும், அதை ஏன் வெளிக்காட்டிக்கவில்லை’ என்று நினைத்தான்.
அவள் ஆடி முடித்து குருவிற்கு வணக்கம் சொல்லி உள்ளே சென்றுவிட, நடனத்தில் லயித்திருந்தவனின் கவனத்தை தனது பாக்கெட்டில் இருக்கும் கைபேசி விடாமல் ஒலித்துக் கலைத்தது. பெயர் பார்க்காமல் எடுத்து காதில் வைத்தான்.
“ஹலோ! சாருக்கு என் நினைப்பெல்லாம் வரவே இல்லையா...? என்கிட்ட சொல்லாமலே வீட்டுக்குப் போயிட்டீங்க?”
அந்தக் கேள்வியில் எரிச்சலுற்றவன், “தினமும் நான் உன்கிட்ட சொல்லிட்டு தான் கிளம்புறேனா...?”
“எனக்கு வேலை இருக்கு மகிமா. நான் கிளம்பிட்டேன்.” என்று முடித்தான்.
அவளோ “ஹலோ! கால் மஹி ஒன்லி. அப்புறம் எனக்கும் தான் வேலை இருக்கு. அதற்காக உங்களைப் பார்க்காமல் பேசாமல் இருக்கிறேனா என்ன?”
அன்பு என்ற பெயரில் கடந்த மூன்று வருடமாக தொல்லை செய்யும் இவளை என்ன செய்வது?
“எனக்கு வேலை இருக்கு. நான் அப்புறம் கூப்பிடுறேன்.” என்று அழைப்பைத் துண்டித்தான்.
மகிமா கோபமாய் தன் செல்போனைத் தூக்கி, மெத்தையில் போட்டாள்.
“அக்கா, என்ன இன்னிக்கும் அந்த வாத்தியார் உன்னை கண்டுக்காமல் போய் விட்டாரா?”
கண்கலங்கிய மஹியை சமாதானப்படுத்திய மதுரா, “அக்கா அழாதே! நம்மகிட்ட இருக்கிற பணத்திற்கு, நீ ஏன் அவர் படிக்கிற காலேஜில் போய் வேலை செஞ்சு, நம் ஸ்டேட்டசைக் கெடுத்துக்கிற? அதுவும் நம்ம காலேஜில் போய்!
மூணு வருஷமாய் லவ் பண்ற? ஏதாவது ஒரு இம்ப்ரூவ்மென்ட் இருக்கா...? இல்லையே...! அப்புறம் ஏன்? விட்டுத் தொலைய வேண்டியதுதானே!”
தேவகி தனது மகனிடம், “யாரு சேனா ஃபோனில்? இவ்வளவு டென்ஷனாய் பேசுற?”
“மகிமா தான்மா. பிடிக்கலைன்னு சொன்னாலும், டார்ச்சர் பண்றாம்மா...! எனக்குனு கல்லூரியில் நல்ல பேரு இருக்குமா. அதை இவள் கெடுத்து விடுவாளோன்னு கொஞ்சம் பயமா இருக்குமா! பிடிக்கலைன்னு, சட்டென்று வேலையை விடவும் முடியாதும்மா. இந்த சம்பளம் வேறு பக்கம் கிடைக்குமான்னு தெரியாது. நினைச்சாலும் விட முடியாது. வீடு வேற லோன் போட்டு வாங்கி இருக்கேன். கொசுவிற்கு பயந்து, யாராவது வீட்டைக் கொளுத்து வாங்கலா...?”
அந்த நேரம் வீட்டின் கதவு தட்டப்பட, போய் திறந்த தேவகி, அங்கே ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் நின்றிருக்க, “யார் நீங்கள்?”
“சேனாவின் வீடுதானே!” என்றதும்,
வெளியே வந்த சேனாதிபதி கைகூப்பி, “வாங்க!” என்று வரவேற்றான்.
தன் மகனுக்கு தெரிந்தவர் என்று தேவகி போய் காஃபி கொண்டு வந்து கொடுத்து உபசரித்தார். அதை ஏற்றுக் கொண்டவர் சிறிது நேர மௌனத்திற்குப் பின், தேவகியிடம் “நான் பாண்டியன். என் காலேஜில் தான் உங்க பையன் ஒர்க் பண்றார். என் மகளுக்கு உங்க பையனை பிடித்திருக்கிறது. மேற்கொண்டு பேசலாமா?” என்றார்.
தன் மகனுக்குப் பிடிக்காத ஒன்றை ஒருபோதும் செய்யாதவர், “இப்போதைக்கு அவனுக்கு கல்யாணம் பண்றதா இல்லை. சேனாவின் இருபத்தொன்பது வயதில்தான் திருமணம் செய்யணும்னு ஜாதகத்தில் இருக்கு.
இந்தவீடு லோனில் வாங்கியது. நாங்கள் மிடில் கிளாஸ். உங்கள் வசதிக்கும், எங்கள் வசதிக்கும் ஒத்துப்போகாது. நீங்கள் வேறு இடம் பார்த்துக் கொள்வதுதான், செல்வச் செழிப்பில் வாழ்ந்த உங்க மகளுக்கு நல்லது. நீங்கள் உங்கள் மகளின் விருப்பத்தை எல்லாம் நிறை வேற்றலாம். ஆனால், என் மகனால் அது முடியாதே...!”
“எனக்கு ரெண்டு பொண்ணுங்க. அவங்களின் எண்ணங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதுதான் என் பொறுப்பு. என் பொண்ணு உங்க பையனுக்னுக்காகத்தான் படிச்சு முடிச்சுட்டு, என் காலேஜில் வேலை பார்க்கிறாள்.
நீங்க என்னைக்கு இருந்தாலும் சேனாவிற்கு ஒரு பொண்ணு பார்க்கப் போறீங்க. அது ஏன், என் மகளாக இருக்கக் கூடாது. கொஞ்சம் யோசியுங்கள்!” என்று சொல்லிவிட்டு, அவர் எழுந்து சென்றுவிட்டார்.
“என்னம்மா, மகளுக்கு மேல அப்பா இருக்கிறார். விலகிப் போனாலும் புரிந்து கொள்ளவே மாட்டேங்கிறாங்க.”
பெற்றவர், தனது மகளிடம் சென்று நடந்ததைச் சொல்லவும்,
அவளோ “அவருக்கு என்னதான் பிரச்சனை?”
“மகிமா, அவனுக்கு பிடிக்கலைன்னா விட்டுடலாம். நீ கொஞ்சம் யோசி! உன் விருப்பத்தை நிறைவேற்றத்தான் நான் பேசினேன். ஒருத்தனை வற்புறுத்தி திருமணம் செய்தால், வாழ்க்கை நல்லா இருக்காதுடா..! பெண் பிள்ளைக்கு காலாகாலத்தில் திருமணம் செய்வது பெற்றோரின் கடமை. உனக்கு மூணு மாசம் டைம். அதற்குள் உன் முடிவைச் சொல்லு!” என்று சொல்லிவிட்டார்.
சுடும் ...
Comment pls...
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com