.
5.வெப்பமாய் நீ! தட்பமாய் நான்!
அத்தியாயம் - 5
இங்கே மும்பையில் ரிஷிகேஷ், “மேடம்…!’ என்றதும் திரும்பிய மிதுனா,
“என்ன ரிஷி?”
“கர்நாடகாவில் இருந்து, உங்க டேட் கேட்டு கால் பண்ணி இருக்காங்க மேடம்! புது படத்தில் நடிக்கும் அனைவருமே புதுமுகம். இன்னும் பெயர் வைக்கல…”
தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் பெயர் கேட்டு ஒக்கே என்றதும், “எப்போ சூட்டிங்?”
“நீங்க எப்போ ப்ரீ என்று சொன்னால் அந்த தேதியில் சூட்டிங் வச்சுக்களாம்னு சொன்னாங்க.”
“நான் எப்போ ப்ரி? வரும் வாரம் மட்டும் தான் ப்ரி. அடுத்து வரும் நாட்களெல்லாம் பிஸிதான்.”
ஏனோ கண்களை மூடி அமர்ந்தவளின் மனமெல்லாம், ‘அடுத்த வாரம் கர்நாடகாவில் சூட்டிங். பக்கத்தில் தானே நம்ம ஊர். சென்னைக்கு ஒரு எட்டு போய் வரலாமா...? வேண்டாமா…?’ என்ற சிந்தனையிலே நேரம் கழிந்தது.
அவளின் முகத்தை வைத்து, அவள் ஏதோ ஒரு யோசனையில் இருப்பதை அறிந்த ரிஷி, “மேடம், ஓகேவா? நாட் ஓகேவா?”
அப்போதுதான், அவன் அங்கே நிற்பது நினைவிற்கு வந்து “போலாம்.” என்றாள்.
…….
இங்கே சென்னையில் விடிந்ததும் எழுந்து குளித்த தியாழினி, “பாட்டி இன்னைக்கு நான் காலேஜ் போகலை. மாமாவைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போறேன்.”
வினோதினி, “நான் ஹாஸ்பிட்டல் போறேன். நீ காலேஜ் போ! நீயும் வந்து அங்கே சும்மா தானே இருக்கப் போற. அதற்கு நீ காலேஜுக்கே போ…!”
இரவெல்லாம் மருத்துவமனையில் சிவராஜுக்கு துணையாக இருந்த சேனா, அதிகாலையில் வினோதினி வரவும் விட்டுவிட்டு, அவர் இரவில் அணிந்த ஆடைகளை வாங்கி வந்து பாட்டியிடம் கொடுக்க,
“தியாமா, தம்பிக்கு காஃபி எடுத்துட்டுவாம்மா!” சொல்லி விட்டு அவனிடம்,
“தம்பி, நீங்க எங்களுக்கு எம்புட்டு பெரிய உதவி செய்றீங்க தெரியுமா? அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் பாட்டி. வீட்டிற்குப் போய் குளித்து, கல்லூரிக்குக் கிளம்பனும்.”
அந்த நேரம் தியாழினி ஒரு டம்ளரில் காஃபி கொண்டு வந்து நீட்டவும், அதை வாங்கியவன், “நம்பிக் குடிக்கலாமா...?”
அவள் முறைக்க, பாட்டி, “அது கொஞ்சம் கஷ்டம் தான் தம்பி. இருந்தாலும் மருந்து மாதிரி நினைச்சு குடித்து விடுங்கள்.”
“பாட்டி உங்களை…” என்ற போது சேனா காஃபியை ஒரு மிடறு அருந்திவிட்டு அவளைப் பார்த்தான்.
அவன் முகத்தைக் கண்டவர், “தம்பி நல்லா இல்லைன்னா சொல்லிடு. பாட்டி உனக்கு நல்ல காஃபி போட்டுத் தர்றேன். மனசு கஷ்டப்படும்னு நினைத்து குடிக்க வேண்டாம்.”
“நோ பாட்டி. காஃபி சூப்பர். வாவ்...!” என்றவன், அவளிடம் “நீதான் போட்டியா...?”
“சார்... இதெல்லாம் ஓவர்.”
“ஹேய் சும்மா ஃபன். ரியலி சூப்பர்.”
பாட்டி சிரித்துக் கொண்டே, “தியாழினி, நல்லா சமைப்பா, தம்பி.”
“பரவாயில்லையே! எல்லா விஷயமும் கத்து வச்சிருக்க.”
பின், “சரிங்க பாட்டி, நேரமாச்சு.” என்று அவன் வெளியேரவும்,
கிளம்பிய தியாழினி “ஆமாம் பாட்டி, நான் எப்படி காலேஜ் போறது?”
“ஆமாம். உன்னைத் தனியா எப்படி அனுப்புறது?”
யோசனையில் அமர்ந்தபடி, தன் மகனுக்கு அழைத்து, “உனக்குத் தெரிந்த ஆட்டோ இருந்தால் சொல்லுடா!”
“அம்மா, யாரென்று தெரியாதவரோடு எப்படி வயதுப் பெண்ணை அனுப்புவது? கொஞ்சம் பொறுங்கள்!” என்று அவன் தனது செல்போன் மூலம் ஸ்ரீதர் சேனாவிற்கு அழைத்து, “சார், தொந்தரவுக்கு மன்னித்துவிடுங்கள்!”
“என்னன்னு சொல்லாமலே தொந்தரவுன்னு சொன்னால் எப்படி? என்னன்னு சொல்லுங்க!”
“எனக்கு, ஒரு உதவி செய்ய முடியுமா...?”
“சொல்லுங்கள். கண்டிப்பாக... என்னால் முடிந்தால் செய்வேன்.”
“தியாவை, நாங்கள் யாரை நம்பியும் இதுநாள் வரை வெளியே எங்கும் அனுப்பியதில்லை. அவளைக் கொஞ்ச நாள் உங்களுடன் காலேஜுக்கு அழைத்து போக முடியுமா...?”
“நான் வீட்டிற்கு வந்ததற்கு பின், மாற்று ஏற்பாடு ஏதாவது பண்ணிக்கிறேன்.”
சேனா தயங்கி தயங்கி, “சார்! நான் தியாழினியை தினமும் என்னுடன் காலேஜ் கூட்டிப் போனால் பிள்ளைங்க கிண்டல் பண்ண மாட்டாங்களா...?”
“யாரோ கிண்டல் பண்ணுவாங்கன்னு பயந்தால், யாரையோ நம்பி அனுப்பி, நாளைக்கு என் பொண்ணுக்கு ஏதாவது ஆகிவிட்டால், என்ன பண்றது தம்பி?”
தேவகி, “யாரு கண்ணா ஃபோனில்?”
“சிவராஜ் சார்மா!”
“என்னவாம்?”
“அந்தப் பொண்ணை காலேஜில் விடச் சொல்றார்.”
“தாராளமாய் கூட்டிட்டு போ...!”
தன் அம்மா சொன்னதும் தலையாட்டியவன், “கூட்டிட்டு போறேன், சார்.” என்று சொல்லி, அவன் அழைப்பைத் துண்டித்தான்.
தேவகி, “இந்த ஊர்ல யாரையும் நமக்குத் தெரியாது. இப்போ, உறவென்று சொல்லிக்க பக்கத்தில் ஒரு வீடு இருக்குன்னு நினைச்சு, சந்தோஷமா இருக்கு.”
கிளம்பிய தியாழினியை அழைத்துக் கொண்டு வந்த சுமித்திரை பாட்டி, காலிங்பெல் அடிக்க திறந்த தேவகியைப் பார்த்ததும் புரிந்து கொண்டு, “வாங்கம்மா!” என்று வரவேற்றார்.
தேவகியைப் பார்த்ததும் ஏனோ அவருக்குப் பிடிக்க, “உங்க பையன் இவ்வளவு நல்ல குணத்தோடு இருப்பதற்கு காரணம், உங்க வளர்ப்புதான். யார் என்றே தெரியாத எங்களுக்கு உதவி செய்கிறான் என்றால், அந்த குணம் எல்லாம் பிறப்பிலே வந்திருந்தால் மட்டும் தான் சாத்தியம்!”
“பாட்டி, நீங்க நேத்துல இருந்து என்னைப் புகழ்ந்திட்டே இருக்கீங்க. எனக்கு அதுல காய்ச்சலே வந்துடும்.”
“அதெல்லாம், உனக்கு ஒண்னும் வராது. நீ நல்லா இருப்ப.”
பாட்டியின் பேச்சில் சிரித்த தியாழினி , “ஆமாம் சார், காய்ச்சல் என் பாட்டியின் கூடப் பிறந்த தங்கச்சி. பாட்டி வா என்று சொன்னால் வரும். வராதே என்றால் வராது.” வீட்டில் அனைவருக்கும் சிரிப்பு வந்தது.
சேனா, “சரி லேட்டாயிடுச்சு. ஈவினிங் வந்து பேசுறேன்.” என்றவன், தியாவிடம் “போலாமா?” என்றதும், விழிகளாலே சரி என்றாள்.
அவளின் விழிகளைப் பார்த்ததும் தான் பரத நாட்டியம் நினைவு வர, பாட்டியின் அருகில் சென்றவன், “உங்களுக்கு பரதநாட்டியம் என்றால் பிடிக்காதா...?”
சுமித்திரையின் கண்கள் கலங்கி, “அது எப்படி தம்பி எனக்கு பிடிக்காமல் போகும்? நானே ஒரு பரதநாட்டியக் கலைஞர் தான்.”
தேவகி கண்கள் விரிந்து, “நானும் தான்மா.”
தியாவிற்கு இந்த செய்தி புதிது என்பதால், தனது பாட்டியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்போ, உங்களுக்கு தியா அரங்கேற்றம் செய்வதில் விருப்பம் இல்லையா...?”
“நான் எந்தளவுக்கு பரதத்தை நேசித்தேனோ, அந்தளவுக்கு இப்ப வெறுக்கவும் செய்கிறேன், தம்பி. என் மகளின் அரங்கேற்றத்தில் தான், அவளின் வாழ்க்கையே கேள்விக் குறியாகிப் போனது.
அவள் ஒட்டு மொத்த வாழ்க்கையும் தொலைந்து, இன்று அனாதை மாதிரி அமெரிக்காவில் வேலை பார்க்கிறாள்.”
ஏனோ அதற்குப் பின் பேச விருப்பம் இல்லாமல், “ஓகே பாட்டி, கிளம்புறோம்.” என்று பெண்ணவளை அழைத்து வந்தான்.
காருக்குள் ஏறியதும் ஆட்டோ மேட்டிக்காக ஆடவனின் கைகள் மியூசிக் சிஸ்டத்தில் கை வைக்க, பாடல் ஒலிபரப்பானது.
“நீ என்பதே நான் தாண்டி
நான் என்பதே நாம் தாணடி...
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்.”
அவன் பாடலை நிறுத்தவும், “ஏன் சார் பாட்டை நிறுத்திட்டீங்க...? போடுங்க! இந்த மாதிரி பாட்டு கேட்டால் தான் உண்டு.”
“இதுவரைக்கும் நீ பாட்டே கேட்டதில்லையா...?”
அழகிய தன் சிறு இதழை பிதுக்கி, “இல்லை!” என்றதும்,
சட்டென்று காரை நிறுத்தி விட்டான்.
பயந்தவள், “ஏன் சார்? என்ன ஆச்சு?” என்று கண்களை விரித்துக் கேட்கவும்,
இந்த ஒரு வாரம், இவளுடன் எப்படி கடக்கப் போகிறோம் என்பது போல் ஆனது. அவளின் செய்கை எல்லாம் சித்திரம் போல் தன் மனத்திற்குள் பதியத் தொடங்கியதை அவன் உணர்ந்தான்.
“ஒன்றுமில்லை!” என்றவன், வாகனத்தை ஓட்டி, கல்லூரியை அடைவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்னமே இறக்கிவிட்டு, “நீ முன்னே நடந்து போ! நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன்.” என்றதும்,
“ஏன் சார்?”
“நீயும் நானும் சேர்ந்து போனால், சேர்த்து வைத்து கிண்டல் பண்ணுவாங்க. நம்ம ஏன் அடுத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கணும்? அப்புறம், அது உனக்கு மனசு கஷ்டமாய் இருக்கும். நீ முன்னால் போ!” என்றதும் அவளும் தலையாட்டிவிட்டு முன்னே சென்று விட்டாள்.
அவள் கல்லூரிக்குள் நுழையும் வரை அவளையே பார்த்தவன், அவள் போனதற்குப் பின், தனது வாகனத்தை எடுத்து உள்ளே வந்தான்.
அன்றும் சசி வராததால் சோர்ந்து போனவன், “யாருக்காவது பரத நாட்டியமும் தெரிந்தால், ஸ்டாஃப் ரூமில் வந்து என்னைப் பாருங்கள். இன்று ஒரு நாள் தான் இருக்கிறது. நாளை கல்ச்சுரல் ப்ரோகிராம் ஸ்டார்ட்.”
அந்த நேரம் அங்கே வந்த ஹெச்.ஓ.டி, “என்ன சேனா? ஸ்டூடன்ட்ஸ் எல்லாம் நாளைக்கு நடக்கும் கல்ச்சுரல் ப்ரோக்ராம் தயாராகிட்டாங்களா...?”
“இன்னும் கிளாசிக்கல் டான்ஸ் மட்டும் தயாராக வில்லை. மத்த எல்லாம் ஓகே சார்.”
“நாளைக்கு நமது கல்லூரி நிர்வாகத்தின் தலைவரும் அவரின் நண்பரும், சினிமா நடிகருமான புகழேந்தியும், நம்ம கல்லூரியைப் பார்க்க வருகிறார்கள். அவர்கள் ஒரு அரைமணி நேரம் தான் இருப்பார்கள். அதனால், முதலில் ஆடும் மூன்று நடனம் சிறப்பாக அமைவது போல் பார்த்துக்கோங்க.
உங்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டால் நான் கேள்வி கேட்கக்கூடாது. அதற்கும், நீங்கள் ஏதாவது ஏற்பாடு செய்து இருப்பீர்கள். ஓகே! நாளை பார்க்கலாம்.” என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட,
சேனா மேஜையில் இரு கைகளை வைத்து சாய்ந்து, எதோ யோசனையாய் நின்றிருந்தான்.
முதலாமாண்டு மாணவிகளில் யாருக்கும் பரதம் தெரியாது. விருப்பமுள்ளவர்கள் ஒரு இரவில் கற்றுக் கொள்ளவும் முடியாது. ஏனோ, அவன் முகம் சோர்ந்து போகவும், தியாழினிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
அவன் அருகே வந்தவள், “உங்கள் செல்போனில், மாமாவுக்கு ஒரு முறை கால் பண்ணித் தர்றீங்களா?”
உடல்நிலை பற்றி கேட்கத்தான் என்பதால், அவன் செல்போன் தரவும், அவள் தனியாக வந்து அதில் தனது மாமாவின் எண்களை அழுத்தி காதில் வைக்க, “பரதநாட்டியம் ஆடுவதாய் பெயர் கொடுத்த பெண், இப்போ வரை வரலை. கலை நிகழ்ச்சிகள் சேனா சாரின் பொறுப்பில் இருப்பதால், பரதம் ஆடுவதற்கு ஆளில்லாமல் சோர்ந்து போய் விட்டார், மாமா. நான் வேண்டுமென்றால் கலந்து கொள்ளவா..? இந்த ஒரு முறை மட்டும் தான், பிறகு பண்ண மாட்டேன்.”
பெற்றவரிடம் மறைத்துச் செய்யும், எந்தச் செயலும் அது வினையாய் முடியும் என்பதால், அவர் அம்மாவிடம் ஒரு தரம் கேட்கவும், இந்த ஒரு முறை மட்டும் தான், அதுவும் சேனா தம்பிக்காக என்று பாட்டியின் சம்மதம் கிடைத்ததும், 2 நிமிடம் கழித்து அவரே அழைத்து,
“குட்டிமா! பாட்டி சரின்னு சொல்லிட்டாங்க!” என்றதும் பெண்ணவளுக்கு அத்தனை சந்தோஷம்.
சேனாவிடம் வந்தவள், “சார், நானே நாளைக்கு நடனம் ஆடுறேன்.”
அவன் அவளைப் பார்த்து, “எனக்காக, நீ இதைத் தான் வீட்டில் பேசினியா...?”
தலையாட்டி, பின் சோகமாய் முகத்தை வைத்து, “ஆனால், எனக்கு சினிமா பாடல் எதுவும் தெரியாது.”
அதுவரை தலையில் உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயம் பட்டென்று விலகவும், “நான் உனக்கு சொல்லித் தர்றேன்.” என்றான்.
போனவன், தனது செல்போனில் நடனம் ஆடுவதற்கான பாடலைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்து விட்டு, “இந்தப் பாட்டைக் கேளு. இதுதான் நீ ஆடும் பாடல்.”
நின்னையே ரதியென்று
நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று
சரணம் எய்தினேன்... ஆஆ...
முதல் முதலில் ஒரு சினிமா பாடலைப் பார்த்தவள், அதில் மெய் மறக்க, “இந்த வரிகள் எல்லாம் நான் ஏற்கனவே கேட்டு இருக்கிறேன். இது பாரதியாரின் பாடல் தானே?” என்றதும்,
ஐஸ்வர்யா “ஆமாம்.” என்றாள்.
நாளை ப்ரோக்ராம் என்பதால், அனைவரையும் ஆடிட்டோரியத்திற்கு அழைத்துச் சென்று, “மேடையில் நாளை செய்வதை இன்றே என் முன் ஒத்திகை செய்து காட்டுங்கள்” என்றதும்,
அனைவரும் தங்களின் திறமைகளைக் காட்ட, அனைத்தும் சரியாகப்பட சற்று ஆசுவாச மூச்சு விட்டு, “சரி அனைவரும் கிளம்புங்கள். நாளை அனைவரும் சீக்கிரம் வந்திடுங்க. யாரும் விடுமுறை எடுக்க வேண்டாம்.” என்று சொல்லி அனுப்பினான்.
பின், “தியாழினி, நீயும் ஐஸ்வர்யாவும் மட்டும் இருங்கள்.”
மதுரா தியாழினியிடம், “அது என்ன எல்லோரும் போன பின், நீங்க ரெண்டுபேர் மட்டும் ஸ்பெஷல்?”
அவள் புதிது என்பதால், தியா நடந்தவற்றை விளக்கமாய்ச் சொல்ல, ஐஸ்வர்யா அவளின் திமிரான பேச்சில் கடுப்பாகி, “சார்!” என்று அழைக்க, அவன் வந்தான்.
“என்ன ஐஸ்வர்யா?”
“சார், மதுரா நக்கலாய் பேசுறாங்க. நீங்க ரெண்டுபேர் மட்டும், சாருக்கு அப்படி என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறாள்.”
‘அக்காவைப் போல் தான் இவளும்.’ அவளை முறைத்து விட்டு,
“ஆமா, அவங்க ரெண்டு பேரும் எனக்கு ஸ்பெஷல் தான். அதனால் உனக்கு என்ன பிரச்சனை? உனக்கும் இஷ்டம் இருந்தால், இவர்களுடன் உட்காரு!” என்று சொல்லிவிட்டு மேலே ஏறினான்.
அவளின் மூக்கு உடைபட்டதில் ஐஸ்வர்யாவுக்கு சொல்ல முடியாத ஆனந்தம். மதுரா, அவளை முறைத்து விட்டு, “உன்னை ஒரு நாள் வச்சிக்கிறேன்.”
ஐஸ்வர்யா வேகமாக அவளின் அருகே சென்று, “ஏன் இப்ப கூட வெச்சுக்கோ...! எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை.”
“எனக்குன்னு ஒரு டைம் வரும். அன்னைக்கு உன்னை எப்படி கதற வைக்கிறேன் பார்?” என்று சொன்னவள் தள்ளிப் போய் அமர்ந்துகொண்டாள்.
மேடையில் பாடலுக்கு சேனா ஒரு முறை ஆடிக் காட்டவும், தியாழினி மட்டுமல்ல, ஐஸ்வர்யாவும் மதுராவும் கூட அவனை மெய்மறந்து விழி விரிந்துப் பார்த்தனர்.
மதுரா தனது செல்ஃபோனை எடுத்து, “அக்கா! நீ உடனே கிளம்பி ஆடிட்டோரியத்திற்கு வா!” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
சேனா, தியாவின் பார்வையில் கொஞ்சம் கூச்சம் ஆகி, பின் தன்னை சமன்படுத்தி, “தியா! இப்படிப் பார்த்தால் நாளைக்கு எப்படி டான்ஸ் ஆடுவ? கமான். க்விக்!” என்றான்.
ஒவ்வொரு ஜதியாய் சொல்லிக் கொடுக்க, அவள் கற்றுக் கொள்ளும் போது, மணி ஐந்து ஆகி விட்டது. நேரம் ஆனாலும் கிளம்பாத மதுராவைக் கண்டவன்,
“ஐஸ்வர்யா! இங்கே வா!” என்றதும்,
“சார், நீங்க அழகா பரதம் ஆடுறீங்க. நான் உங்க விசிறியாகிட்டேன்.” என்றதும் சிரித்தவன்,
“நன்றி!” என்று சொல்லிவிட்டு,
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?”
“என்ன ஹெல்ப் சார்?”
“திவ்யாவின் மாமாவிற்கு ஆக்சிடென்ட் ஆனதால், இப்போ அவள் வீட்டுக்குப் போகணும். அவளை கொண்டு வந்து, வீட்டில் விட்டு விட முடியுமா?”
அவள் தலை ஆட்டவும், “ஓகே தியாழினி! மீதியை வீட்டில் சொல்லித் தர்றேன். இன்று பாட்டியிடம் சொல்லி விட்டு, நீ நம்ம வீட்டிற்கு வந்திடு. நைட் பிராக்டிஸ் வைத்துக் கொள்ளலாம்.” என்று அவளிடம் சொல்லவும், தலையாட்டிவிட்டு அவளும் கிளம்பினாள்.
அந்த நேரம் அங்கு வந்த மகிமா மதுராவிடம், “நீ ஏண்டி இங்க இருக்க?”
“உன் உயிரை யாரும் திருடிட்டுப் போயிடக் கூடாதுன்னு காவல் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்று மேடையைக் காட்டவும்,
“இவளுங்க ரெண்டு பேர் மட்டும் இங்க என்ன செய்றாங்கடி!”
“பயப்படாதே அக்கா! வெறும் டான்ஸ் பிராக்டிஸ் மட்டும் தான்! அதுவும் நாளையோடு முடிந்திடும்.” என்று இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது, அவர்களை கடந்து மூவரும் சென்றனர்.
“பாருடி இந்த ஆளுக்குக் கொழுப்பை. நான் நிற்கிறேன். ஒரு வார்த்தை கூட பேசாமல் போகிறார்.”
“அவர் போனால் என்ன? நீ போய் பேசு!”
“சேனா சார், கொஞ்சம் நில்லுங்கள்!” என்றதும்,
நின்றவன், என்ன என்பது போல் பார்த்தான்.
“உங்களுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத ரிஸ்க். வேறு யாரையாவது இன்சார்ஜாய்ப் போட்டால், அவங்க இதெல்லாம் பார்த்துக் கொள்ள மாட்டார்களா...?
என் அப்பாவின் கல்லூரியில், அவரின் வருங்கால மருமகன், இந்த மாதிரி சாதாரண வேலைகள் எல்லாம் பார்த்தால், அவருக்குத் தானே சங்கடம்!”
“அதை, நீங்கள் உங்கள் அப்பாவின் வருங்கால மருமகனிடம் போய்ச் சொல்லுங்கள். அப்புறம், இந்த காலேஜில் உங்க அப்பா மட்டும் இன்சார்ஜ் இல்லை. இன்னும் இருவர் இருக்கிறார்கள். இந்த மாதிரி தேவையில்லாத பேச்செல்லாம் பேசாதீங்க, மகிமா. வந்த வேலையை மட்டும் பார்த்துட்டுப் போங்க!” என்று சொல்லி விட்டு, அவன் சென்று விட்டான்.
அவன் பேச்சில் முகம் சோர்ந்து போய் நின்ற தனது அக்காவின் அருகில் வந்து, “விடு விடு. உன் கழுத்தில் தாலி கட்டிய அடுத்த நாளிலிருந்து, ஒரு ரெண்டு வருடமாவது அவரை நல்லா டார்ச்சர் பண்ணு. எந்த அளவுக்கு உன்னை அவாய்ட் பண்றாரோ, அந்த அளவுக்கு உன் காலில் விழுந்து கெஞ்சனும்.”
“முதலில் சிக்கட்டும்டி! அதுக்கப்புறம் கல்யாணம் முடிஞ்ச நாளில் இருந்து என்னைப் படுத்துற பாட்டிற்கெல்லாம் கொஞ்சமாச்சும் பழி தீர்ப்பேன்.”
“அது என்ன கொஞ்சம்?” என்றதும்,
“ஹா ஹா, என்னவோ அதிகமாய் காதலிக்கிறேன்டி. ஆனால், கொஞ்சம் மட்டும் கஷ்டப்படுத்தினால் போதும்.”
“ஆனால், சும்மா சொல்லக் கூடாது. செமயா ஆடுறார். உன் ஆளாய் மட்டும் இல்லாமல் இருந்தால், இந்நேரம் நான் ப்ரப்போஸ் பண்ணியிருப்பேன்.”
அதில் சிரித்தவள், தன் தங்கையின் முதுகில் ரெண்டு போடு போட்டு இழுத்துச் சென்றாள்.
………..
தீயாழினி தனது பாட்டியிடம் சொல்லிவிட்டு சேனாவின் வீட்டிற்கு வரவும், தேவகி அவளை வரவேற்று உபசரிக்க, புன்னகையாய் ஏற்றுக் கொண்டதும், சேனா மேலே இருந்து கீழே வந்தான்.
இருவரும் அந்தப் பாடலுக்கு ஆடும் போது, தேவகி மெய்மறந்து பார்த்தார். அந்தக் கண்ணனும் ராதையும் ஆடுவது போல தோன்றியது. இருவரும் அருகருகே நின்று ஆடும் போது, தனது செல்போனை எடுத்து படம் பிடித்தார்.
இரவு 9 மணி ஆனதும், “சரி கிளம்பு! நாளைக்கு காலையில் சீக்கிரம் வா! நான் இப்போ ஹாஸ்பிட்டல் போறேன்.”
“சார், எனக்கு பயங்கரமா கால் வலிக்குது. உங்களுக்கு வலிக்கலையா...?”
ஸ்ப்ரே எடுத்து வந்து அவளிடம் கொடுத்து, “வலிக்கும் இடத்தில் அடித்துக்கோ. கொஞ்சம் சரியாகிடும். எனக்கும் வலிக்குது. ஆனால் நமக்கு கடமை ஒன்று இருக்கே...!”
“என்ன கடமை?”
“ஒரு வாரம், நான் உன் மாமாவை பார்த்துக்கிறேன் என்ற பொறுப்பை எடுத்துவிட்டேன். அதை முடிக்கும் வரை, நமக்கு வலி பிரச்சனை என்ன இருந்தாலும், பொறுப்பிலிருந்து விலகக் கூடாது.” என்று அவன் கிளம்ப, அந்த ஒரு நொடி இமைக்க மறந்து அவனையே பார்த்தாள்.
தனது வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டு நடந்து வந்தவனின் முதுகை துளைக்கும் பார்வை பார்ப்பதை உணர்ந்தவன், திரும்பிப் பார்த்தான்.
அந்த நேரம் இருவரின் விழிகளும் ஒரு நேர் கோட்டில் சந்தித்தது.
பெண்ணவள் உடலெல்லாம் ஒரு மின்வெட்டு தாக்கியது போல ஒரு தாக்கம் ஏற்பட்டு, உடலில் ஒரு சிலிர்ப்பு தென்பட்டு, பின் பார்வையைத் தாழ்த்தினாள். அவளின் சிலிர்ப்பைக் கண்டு கொண்டவன், அதற்கு மேல் அங்கு நின்று அவளை இம்சிக்க விரும்பாமல், வாகனத்தில் ஏறிச் சென்று விட்டான்.
இருவரின் மூளை, ஒரு நொடி செயலிழந்துபோனது நிஜம். மனமென்னும் மேகத்திற்குள் சட்டென்று ஒரு மின்னல் ஒளிர்ந்தது. ஒரே ஒரு நொடிப் பார்வையில், சட்டென்று ஒரு தடுமாற்றம்.
வண்டி ஓட்டியவன், ஓரிடத்தில் நிறுத்தி விட்டான். மூச்சு முட்டுவது போல் தோன்ற, காரின் கதவைத் திறந்து வெளியே வந்து, சற்று நேரம் வெளிக்காற்றை முகத்தில் வாங்கி, தன்னை ஆசுவாசப்படுத்தினான்.
‘இந்த மாதிரி உணர்வுக்கு எல்லாம் இடம் கொடுக்காதே’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன் தன்னை சமன் படுத்தி வாகனத்தை எடுத்தான்.
வீட்டிற்கு வந்த தியாழினி, தன் வீட்டிலிருக்கும் தூணில் ஒரு நிமிடம் சாய்ந்து நின்றாள்.
பள்ளியில், வரும் வழியில் பல ஆண்களைப் பார்த்து இருக்கும்போது தோன்றாத ஒரு சிலிர்ப்பு, ஏன் இவரிடம் வந்தது? நேற்று அவரின் அருகில் அமர்ந்து வந்தபோது கூட வராத ஒன்று, இந்த நிமிடம் தனக்குள் எதையோ சொல்லவும்,
‘இது வேண்டாம். நம் வீட்டிற்கு பிடிக்காது. முதன் முதல் அந்நியர் ஒருவரை வீட்டுக்குள் அனுமதித்து இருப்பது அவரின் மேல் கொண்ட நம்பிக்கையால் தான். நாம் அதை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.’ என்று நினைத்தவள், விட்டுக்குள் சென்று பெரிய டம்ளரில் தண்ணீரைக் குடித்துவிட்டு வந்து படுத்தாள்.
சுடும் ...
இந்தலிங்கில் Comments podunga.
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com