Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Regular-Update உயிர் துடிப்பாய் நீ! கதை திரி

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
உயிர் துடிப்பாய் நீ !


அத்தியாயம் 18


வாழ்க்கையில் சில நிகழ்வுகளை நாம் எதிர் கொண்டு தான் ஆக வேண்டும்.நம் மனம் விரும்புகிறதோ! இல்லையோ! சூழ்நிலை கைதியாக சில நேரங்களில் நாம் மாற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவோம்.


திகழொளியும் அப்படி ஒரு நிலையில் தான் இருந்தாள்.மணியரசி பால் சொம்பை கையில் கொடுத்து மிகன் அறைக்குப் போகச் சொன்னதும், அவளுள் சிறு பயம் தொற்றிக் கொண்டது.


அவளொன்றும் இந்த நிகழ்வைப் பற்றி அறியாத சிறு குழந்தை இல்லை தான்.ஆனாலும், மனதின் குழப்பமும், மிகனின் கோவமும் அவன் அறைக்குச் செல்ல அவளுள் பெரும் தயக்கத்தை உண்டாக்கியது.



மணியரசி முன்பு எதையும் காட்டிக் கொள்ள முடியாமல் தயக்கத்துடனேயே தங்கள் அறைக்குச் சென்றாள்.இனி அவள் இருப்பிடமும் அது தானே..!



மெல்ல அடிமேல் அடி வைத்து சென்றவளின் மனதிற்குள் காலையில் அவன் பேசிய வார்த்தைகள் நினைவு வந்து தீயாக காந்தியது.



இப்போது இன்னும் சுட்டெரிக்கும் ஆதவனாய் காத்திருப்பான் என்று மனம் கூப்பாடு போட்டாலும், வேறு வழி அறியாது அவனை எதிர்கொள்ளும் மனநிலையுடன் அவனின் அறையை நோக்கிச் சென்றாள்.



நாகரீகம் கருதி திறந்திருந்த அறைக் கதவை மெல்லமாக தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.



மிகனோ, சாளரத்தின் அருகில் நின்று இறுகிய முகத்துடன் ஆகாயத்தை அளந்து கொண்டிருந்தான்.



மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கணவனின் அருகில் சென்றாள்.


மனைவியின் வரவை அறிந்தாலும் கண்டு கொள்ளாமல் தன் நிலையிலேயே நின்றிருந்தான்.



கணவனின் செயல் வலியைக் கொடுத்தாலும், அதை பொருட்படுத்தாமல் " மணியம்மா பால் கொடுத்து விட்டாங்க .. இந்தாங்க .."என்று பால் சொம்பை அவன் புறம் நீட்டினாள்.



"எனக்கு வேண்டாம்.." என்று மிகன் அவள் புறம் திரும்பாமலேயே பதில் சொன்னான்.



அவளோ, என்ன சொல்வது என்று புரியாமல் அப்படியே நின்றிருந்தாள். சில நொடி கழித்து அருகில் இருந்த மேஜை மீது பால் சொம்பை வைத்தவிட்டு, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக நேரத்தைக் கடத்தினாள்.



மிகனோ, அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் கற்சிலையாக சாளரத்தின் அருகிலேயே நின்றிருந்தான்.



சில நிமிடங்கள் அந்த அறையில் மின் விசிறியின் சத்தம் மட்டுமே கேட்டது.



கணவனை எப்படி அணுகுவது என்று அறியாமல் நெருப்பின் மீது நிற்பது போல் நின்றிருந்தாள். ஒருவாறு மனதிற்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, தன் மெளனத்தைக் கை விட்டு , " மிகன் நான் உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.." என்றாள்.



"எனக்கு இப்போது பேசும் மனநிலை இல்லை.." என்று இறுகி போய் பதில் உரைத்தான்.



"ப்ளீஸ் மிகன் நம் வாழ்க்கை பற்றி பேசியே ஆகனும்.."என்றவளிடம்..



கண்கள் சிவக்க திரும்பி அவளை தீர்க்கமாக பார்த்தபடி "என்னடீ பேசனும்? பேச என்ன இருக்கிறது! எத்தனை அழகாக நமக்குள் இருந்திருக்க வேண்டிய இரவு. ஆனால், அத்தனையும் உன்னால் வீணாய் போனது.."



"மிகன் எல்லா செயலுக்கும் இன்னொரு பக்கம் நியாயம் இருக்கும். அதை அறியாமலும் ,தெரிந்து கொள்ளாமலும் நீங்களே என் மீது தவறு என்று முடிவு செய்துவிட்டால் எப்படி..?"



"எல்லா குற்றவாளிகளும் தான் குற்றம் செய்ய வில்லை என்று தான் சொல்லுவார்கள்.."


"குற்றம் செய்யவில்லை என்றால் செய்யவில்லைன்னு தானே சொல்ல முடியும். ஒரே ஒரு நிமிடம் நான் சொல்வதை கேளுங்க மிகன்.எனக்கொரு வாய்ப்பு கொடுங்களே.."


"வாய்ப்பு கொடுத்தால் நடந்தது எல்லாம் சரியாகிடுமா..?இல்லை உன்னால் ஒவ்வொரு நொடியும் சாகவும் முடியாமல், வாழவும் முடியாமல் புழுவா துடித்துட்டு இருக்கேனே அது தான் சரியாகிடுமா?"என்று அடங்காத கோவத்துடன் கத்தினான்.



அவளோ"மிகன் !" என்று கலங்கிய குரலில் அழைத்தாள்.



அவனின் அழைப்பை கண்டு கொள்ளாமல் " நான் என்று உன்னை நேசிக்க தொடங்கினேனோ ! நீ என் மனசுக்குள் என்று வந்தாயோ! அன்றிலிருந்து நான் உன்னுடன் எப்படி எல்லாம் வாழ வேண்டுமென்று கோட்டை கட்டி வைத்திருந்தேனோ ! அதை எல்லாம் சுக்கு நூறாக உடைத்தது நீ தான் டீ.." என்றவன் அவள் புறம் வேகமாக வந்து அவளின் தோள்களைப் பற்றி அழுத்தினான்.


அவளோ, கண்களில் உயிரே இல்லாமல் அவனை வெறித்துப் பார்த்தாள்.


அவளின் பார்வையயை தாங்கியபடியே "மாசு மருவற்ற இந்த முகம் பெளர்ணமியைப் போல் என் வாழ்வில் ஒளி வீசும் என்று நினைத்தேன். ஆனால், என் வாழ்வை இருளாக்கிவிட்டதே .."என்று வார்த்தைகளில் அமிலத்தைக் கொட்டினான்.



அவளோ, கண்களில் நீர் கோர்க்க மெளனமாக நின்றாள்.



மனைவியின் மனதைக் காயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்று உணராமல் மேலும் மேலும் வார்த்தைகளை விஷமாக கக்கினான்.



"என்னை நினைத்தால் எனக்கே அருவருப்பாக இருக்கிறது. உன் குணமும், புத்தியும் தெரிந்தே உன்னை விலக முடியாமல், உன்னையே கல்யாணம் பண்ணி இருக்கேனே நான் எவ்வளவு பெரிய முட்டாள்.." என்றவன் அவளின் முகவாயைப் பற்றி , உன்னைக் கல்யாணம் செய்ததது உன் கூட வாழ இல்லை.. நீ வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாக வாழக்கூடாது என்று தான். வாழ் நாள் முழுவதும் ஏன் டா இவனுக்கு துரோகம் செய்தோம்ன்னு நீ நினைத்து நினைத்து கதறனும். உன்னை காதலித்த பாவத்திற்கு நானும் உன்னை அருகில் வைத்துக் கொண்டே சாவனும்.." என்று வார்த்தைகளில் அனலை அள்ளி வீசயவன் அவளை விட்டு சென்று படுக்கையில் படுத்தான்.


கணவனின் சுடு சொற்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் வேரறுந்த கொடியாக அப்படியே தொய்ந்து அமர்ந்தவள், முகத்தை முழங்காலில் மறைத்துக் கொண்டு சத்தம் இல்லாமல் அழுதாள்.


தேற்றுவாரற்று அழுது கரைந்தவள் மனமும் உடலும் சோர்ந்து போய் அப்படியே தரையில் சுருண்டு படுத்தவள் தன்னை அறியாமல் உறங்கிப் போனாள்.


மிகனோ, பலதையும் யோசித்தபடியே உறங்கிப் போனான். நடு இரவில் விழிப்பு வர விழித்தவன் அருகில் மனைவியைக் காணாமல் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவன், அறையை கண்களாலேயே வலம் வந்தான்.


மனைவி சிறுகுழந்தை போல் தரையில் படுத்திருப்பதைக் கண்டவனுக்கு மனதிற்குள் ஏதோ செய்தது.மெதுவாக எழுந்து சென்று அவள் அருகில் சத்தம் இல்லாமல் அமர்ந்து, அவளின் முகத்தை சில நிமிடங்கள் தன்னை அறியாமலேயே பார்த்துக் கொண்டு இருந்தான்.


குழந்தை போல் உறங்கி கொண்டிருந்தவளைப் பூப் போல் தூக்கிச் சென்று படுக்கையில் படுக்க வைத்தான்.அவனும் மனைவி அருகில் சென்று படுத்தபடியே அவளின் முழு நிலவாக மின்னிய முகத்தைப் பார்த்துக் கொண்டே நெடுநேரம் விழித்திருந்தவன் விடியற்காலையில் தான் கண் அயர்ந்தான்.


பகலவனின் வருகையும்,பறவைகளின் இன்னிசையும் திகழொளியின் உறக்கத்தை மெல்ல கலைத்தது.


உறக்க கலக்கத்திலேயே கண் விழித்தவளுக்கு படுக்கையின் மென்மை குழப்பியது. அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவளுக்கு சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை.



தரையில் தானே படுத்து இருந்தோம்! எப்படி கட்டில் மேல் வந்தோம் என்று யோசித்தவளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை.



பலத்த யோசனையுடன் அருகில் கணவனின் முகத்தைக் கண்டதும் அவளின் முகம் ரோசா மொட்டாக விரிந்தது.



ஒருக் கழித்துப் படுத்து இருந்தவனின் முகத்தில் தெரிந்த மென்மையும்,அவனைப் போலவே சிலிர்த்துக் கொண்டிருந்த சிகை முடியும் அவள் கவனத்தை ஈர்த்தது.


இரவு அவன் பேசியது எல்லாம் மண்டைக்குள் ஓடினாலும், அவன் மீது அவளுக்குள் இருந்த நேசம் அவளை மீறி கணவனை ரசித்துக்க வைத்தது.


முகத்தில் மலர்ச்சியுடன் தயங்கி, தயங்கி கணவனின் தலையை பட்டும் படாமல் தடவினாள்.


மனதிற்குள் கணவனின் செயல்களைப் பற்றி யோசித்தாலும்,அவளின் விரல்கள் தன் வேலையை செவ்வனே செய்தது.கண்களும் அவன் முகத்திலேயே நிலைத்து இருந்தது.


சில நிமிடங்களில் அவனிடம் அசைவு தெரிந்ததும், சட்டென்று மிகினின் தலையிலிருந்து விரல்களை எடுத்தவள், படுக்கையில் இருந்து, எழுந்து சென்று குளியலறையில் தஞ்சம் புகுந்தாள்.


மிகன் எழுதுவதற்கு முன் குளித்து முடித்து அழகான மாம்பழக் கலரில் இளஞ்சிவப்பு கரை வந்த சில்க் காட்டன் புடவையும் .அதற்கு பொருத்தமாக சிவப்பு ரவிக்கையும் அணிந்து ,ஈரத்தலையில் காதோரம் இருபக்க முடி எடுத்து நடுவில் கிளிப் மாட்டினாள்.



முகத்திற்கு லேசான ஒப்பனை உடன் தலைவகிடுக்கு குங்கமமும் வைத்துக் கொண்டு தன் அலங்காரத்தை முடித்துக் கொண்டாள்.



அதுவே அவளை பேராழகியாக காட்டியது.மிகனின் உறக்கம் கலையாமல் அவர்களின் அறைக் கதவை சாத்தி விட்டு மணியரசியை தேடிச் சென்றாள்.



மணியரசியோ திகழொளியைக் கண்டதும் முகத்தில் புன்னகையுடன் "வாம்மா திகழி குளித்து விட்டாயா ? காஃபி கலந்து தரவா ..?என்று கேட்டபடி நெருக்கமா தொடுத்து இருந்த மல்லிகை பூவைக் அவளிடம் கொடுத்து தலையில் வைத்துக் கொள்ளச் சொன்னார்.


திகழொளியும் மறுக்காமல் வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள்.


மணியரசியோ ,மணக்க மணக்க இரண்டு கோப்பையில் காபி கலந்து அவள் கையில் கொடுத்து, " திகழி மிகனுக்கு கொடுத்துட்டு நீயும் குடிம்மா.." என்றார்.


"அம்மா இன்னும் அவர் விழிக்கவில்லை.." என்றவளிடம்..


"பரவாயில்லை எழுப்பி விடும் மா..இன்னைக்கு குலதெய்வ கோவிலுக்கு போகனும்.சீக்கிரம் மிகனை குளித்து விட்டு கிளம்பி வரச் சொல்லுமா.." என்று அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்தார்.



தயங்கிய படியே தங்கள் அறைக்குச் சென்றவளை மிகனின் கோவமான முகம் தான் வரவேற்றது.



இவளைப் பார்த்தவுடன் "எங்க டீ போனே, உன் தம்பி ஏழு வாட்டி போன் பண்ணிட்டான்.மனுசனை நிம்மதியா அக்காளும் தம்பியும் தூங்க கூட விட மாட்டீங்களா..? ஏன் ஒரு நாள் கூட உன் தம்பிக்கு உன் கூட பேசாம இருக்க முடியாதா? விடிந்தும் விடியாதற்குள்ளே நூறு போன்.."என்று கடுப்பாக கத்தியவனிடம் பதிலே பேசாமல் காஃபியை நீட்டினாள்.



காப்பியை வாங்காமல் அவளையே முறைத்தவனை "சீக்கிரம் பல் தேய்த்துட்டு வந்து காஃபியை குடிங்க! சூடு ஆறிடப் போகுது.." என்றாள் அதிகாரமாக.


"என்ன அதிகாரம் எல்லாம் தூள் பறக்குது.." என்று நக்கலாக கேட்டவனிடம்..


"ம்.. இனி அப்படித் தான்.."


"ஓ! எது கொடுத்த தைரியம்.."


"ம்ம்..இது கொடுத்த தைரியம்.." என்று தன் கழுத்தில் மஞ்சள் மனம் மாறாமல் புத்தம் புது பொலிவுடன் தொங்கிய தாலிக் கயிற்றைக் எடுத்துக் காட்டீனாள்.



அவனே அதை வெறித்துப் பார்த்தபடி அவள் அருகில் வந்து, அதை தன் கையில் ஏந்திக் கொண்டே அவளின் கண்களைப் பார்த்தபடி "இது எனக்கும் முழு அதிகாரத்தையும், உரிமையும் கொடுத்து இருக்கு.." என்றான் விழிகள் பளபளக்க..


கணவனின் பதிலில் மனம் பதை பதைக்க அசையாமல் நின்றாள் திகழொளி.


தொடரும்

அடுத்த யூடி சனிக்கிழமை
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
331
Reaction score
610
Points
93
உயிர் துடிப்பாய் நீ !

அத்தியாயம் 19

மிகன் சொன்னதைக் கேட்டதும் அசையாமல் நின்றிருந்தவளின் முன் விரல்களால் சொடுக்கிட்டு "ஹலோ மேடம் என்ன அப்பப்ப பீரீஸ் ஆகிறே.." என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான்.


அவளோ ,அவனின் செய்கையில் விழி எடுக்காது அவனையே பார்த்தவளிடம் "என்னமா நான் ஒரு வார்த்தை சொன்னதற்கே இப்படி பேந்த பேந்த விழிக்கிறே! இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லே அதுக்குள்ளேயே வியந்தால் எப்படிங்க மேடம்.." என்று கூறியவனிடம் பதிலேதும் சொல்லாமல் நகர்ந்தாள்.


அவனோ, தன்னிடமிருந்த விலகியவளை ஒரே எட்டில் பற்றி நிறுத்தியவன். " திகழி நான் இன்னும் பேசி முடிக்கலே ..பேசப் பேச பாதியில் போனால் என்ன அர்த்தம்! இனி இப்படி செய்யாதே ..!"என்று எச்சரித்தவனை சலனமே இல்லாமல் பார்த்து வைத்தாள்.


அவனோ, அவளின் செய்கையில் மேலும் எரிசலுற்று" என்ன டீ ஒண்ணும் செய்ய மாட்டேன்னு நினைக்கிறீயா ? எப்போதும் அமைதியா இருப்பேன்னு நினைச்சுக்காதே..என்னை கோவப்படுத்தி பார்த்தால் சேதாரம் உனக்கு தான் ஞாபகம் வச்சுக்கோ..!" என்றவனை மனதிற்குள்' எப்படா நீ எங்கிட்ட கோவப்படாம இருந்திருக்கே..இப்ப மட்டும் கோவப்படுவதற்கு' என்று நினைத்தவள் அதைக் காட்டிக் கொள்ளாமல்..


"அத்தை சீக்கிரம் ரெடியாகி வரச் சொன்னாங்க..குலதெய்வ கோவிலுக்கு போகனுமாம்..நான் கீழே இருக்கேன் ..நீங்க ரெடியாய் வாங்க..!" என்றவள் அவன் பேசுவதற்கு இடமே கொடுக்காமல் தப்பித்தால் போதும் என்று தன் கைபேசியை எடுத்துக் கொண்டு அறையை விட்டு ஓடினாள்.


மிகனோ, மனதிற்குள்' போடி போ.. எத்தனை நாள் இப்படி ஓடுவேன்னு நானும் பார்க்கிறேன்.எங்க போனாலும் எங்கிட்ட தானே வந்தாகனும் !' என்று கடிந்தபடி கோவத்தில் அவள் கொடுத்த காபியை குடிக்காமல் குளியலறைக்குள் புகுந்தான்.


திகழொளியோ, ஏழு எட்டு முறை அலைபேசியில் அழைத்திருந்த தம்பியை அழைத்துப் பேசினாள்.


அந்தப் பக்கம் அமுதனின் குரலைக் கேட்டதும் அவளை அறியாமல் கண்களில் நீர் கோர்த்தது. ஆனால் தம்பியிடம் தன் மனதைக் காட்டிக் கொள்ளாமல் நலம் விசாரித்தவள், தம்பியின் கேள்விக்கும் மகிழ்ச்சியாகவே பதில் சொன்னாள்.


அமுதனுக்கோ, என்ன தான் திகழொளி மகிழ்ச்சியாக பேசினாலும் அவனால் ஏனோ நிம்மதி அடையமுடியவில்லை.. மனதிற்குள் ஒரு சிறு சந்தேகம் அவனை ஆட்டி வைத்தது.


தனக்காகத் தான் அக்கா மகிழ்ச்சியாக இருப்பது போல் நடிக்கிறாளோ? என்று எண்ணினான். தமக்கை இடம் பேசி முடித்த பின் அதே சிந்தனையுடனேயே இருந்தான்.


திகழொளியோ, தம்பியிடம் பேசிவிட்டு சமையலறை சென்று மணியரசிக்கு சமையலில் உதவினாள்.


மணியரசி சொல்லச் சொல்ல கேட்காமல் மகிழினியையும் தங்களுடன் அழைத்துச் செல்ல குழந்தையை கிளப்பிக் கொண்டிருந்தாள்.


மணியரசியோ, "குழந்தை எதற்கு? நீங்க இரண்டு பேர் மட்டும் போய்ட்டு வாங்க.." என்று சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் மகிழினையை தயார் செய்தாள்.


திகழொளிக்கு மிகன் கூட தனியாக வெளியே செல்ல பயம். மகிழினி கூட இருந்தால் அவன் கொஞ்சம் தன்னிடம் கோவப்படாமல் அமைதியாக இருப்பான் என்று நினைத்தாள்.


ஆனால், அவளின் கணவன் அப்படி எல்லாம் அமைதியாக போகும் ஆள் இல்லை என்று அப்போது அவள் அறியவில்லை.


மிகன் கிளம்பி வந்ததும் இருவரும் சேர்ந்தே காலை உணவை உண்டனர். மணியரசி கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்து மகிழினியை தூக்கிச் சென்றார்.


உண்டு முடித்ததும் மகிழினியை தூக்கிக் கொண்டு பெரியவர்களிடமும் சொல்லிக் கொண்டு, குலதெய்வக் கோவிலுக்கு சென்றனர்.


காரில் திகழொளி மகிழினியை மடியில் வைத்துக் கொண்டு முன் இருக்கையில் மெளனமாக அமர்ந்து வந்தாள்.


மிகனோ, கோவில் செல்லும் வரை அவளிடம் எதுவும் பேசாமல் வழியில் கவனம் வைத்தபடியே காரை ஓட்டீனான்.


கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாததால் சீக்கிரமாகவே தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பினார்கள்.


திகழொளியோ, மனதிற்குள் அப்பாடா பயந்தபடி இல்லாமல் மிகன் அமைதியாக இருக்கானே ! என்று அவள் நினைத்து நிம்மதி அடைந்தாள்.


ஆனால், அவள் அப்படி எல்லாம் நிம்மதி அடைய அவளுடைய ஆரூயிர் கணவன் விட்டு விடுவானா ?


மடியில் தூங்கிய மகிழினியை தன் நெஞ்சோடு வாகாக சாய்த்துக் கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தவளிடம் "என்னங்க மேடம் வாயே திறக்காமல் வரீங்க..?"என்றான் நக்கலாக..


அவளோ, என்ன பதில் சொன்னாலும் ஏதாவது சொல்லுவான் என்று நினைத்து மெளனமாகவே இருந்தாள்.


அவனுக்கோ ,அது இன்னும் எரிச்சலை உண்டாக்கியது. "கேட்டால் பதில் சொல்லமாட்டீயா ?உன் தம்பி கிட்ட மட்டும் வாய் ஓயாமல் பேசத் தெரியுது ! எங்கிட்ட பேசனும்ன்னா மட்டும் வாய்லே பசை போட்டு அடைச்சு வச்சுக்குவே.." என்றான் கடுப்பாக..


அவளோ , 'அச்சோ ஆரம்பிச்சுட்டான்' என்று மனதிற்குள் எண்ணியவள் "இரண்டு நாளாக சரியா தூக்கம் இல்லை அது தான் தலைவலிக்குதுன்னு பேசாமல் இருந்தேன்.."


"ஓ..! ரொம்ப வலிச்சா சொல் டாக்டர் கிட்ட போலாம்.."


"இல்ல இல்லே.. அந்தளவு இல்லே .. லேசாகத்தான் வலிக்குது கொஞ்ச நேரம் தூங்கினா சரியாகிடும்.."


"ம்! நான் காரை ஓரமா நிறுத்துறேன் .நீ பாப்பாவே பின்னாடி சீட்லே படுக்க வச்சுட்டு நீ நல்லா சாய்ந்து தூங்கு! "


"இல்லை வேண்டாம் இப்படியே வசதியாகத்தான் இருக்கு .அவ என் மடியிலேயே தூங்கட்டும்.."


" நான் என்ன சொன்னாலும் கேட்க மாட்டே .. என்னமோ பண்ணு..!" என்று கடிந்து கொண்டவனிடம் சமாதானமாக " இல்லை மிகன் பாப்பாவே அசைச்சா எழுந்துக்குவா ! அப்புறம் அரை தூக்கத்தில் அழுதுட்டே இருப்பா அது தான்.."என்றவளிடம் பதில் எதுவும் சொல்லாமல் முகத்தை கடுப்பாரையை விழுங்கியவன் போல் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.


அவளோ, அவனின் மனநிலையை மாற்றும் பொருட்டு "மிகன் லீவு முடிந்த பின் நான் மீண்டும் வேலைக்கு வரட்டும் தானே.."என்று மெல்ல கேட்டாள்.


அவனோ, திரும்பி அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சாலையில் கவனம் வைத்துக் கொண்டே "வேலைக்கு வராமல் வீட்டில் என்ன செய்வதாக உத்தேசம்.."


"இல்லை உங்களுக்கு நான் வேலைக்கு போவது பிடிக்குமோன்னு தான் கேட்டேன்.."


"ஆமாம் ! இதுவரை எல்லாம் எனக்கு பிடிச்ச மாதிரி தான் நடந்துக்குறே இதுக்கு மட்டும் பர்மிஷன் கேட்கிறா..?" என்றான் பற்களை கடித்தபடி..


திகழொளியோ, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுச்சு! இனி ஏதாவது பேசுனா வீண் வம்பு தான் ! என்று நினைத்து வாயை இறுக மூடிக் கொண்டு வெளியே தலையை திருப்பிக் கொண்டாள்.


அவனுக்கு அவளின் செயல் மேலும் எரிச்சலைக் கூட்ட" என்ன பதிலே காணோம் ? இவனை எல்லாம் மதித்து பேசனுமான்னு முகத்தை அந்தப்பக்கம் திருப்பீட்டீயா..?" என்றவனிடம்..


"இங்க பாருங்க நான் உங்க கூட இப்ப சண்டை போடற மனநிலையில் இல்லை..அது தான் பேசாமல் இருந்தேன்.."


"அப்ப எனக்கு மட்டும் சண்டை போட ஆசையா..?"

"அது எனக்கு எப்படி தெரியும்.. அது தான் எப்ப பார்த்தாலும் சண்டை போடற மாதிரி தானே பேசறீங்க..!"


"அப்படி பேச வைப்பதே நீ தான் டீ.. "

"நான் என்ன செய்தேன்? நான் அமைதியா வந்தாலும் பேசறீங்க! ஏதாவது கேட்டாலும் குத்தலா பேசறீங்க! நின்னா குத்தம் ! உட்கார்ந்தா குத்தம்ன்னா நான் என்ன தான் செய்யட்டும்..?"


"அது தான் செய்யறது எல்லாம் செஞ்சுட்டே ! இப்ப எங்கிட்டயே தைரியமா கேள்வி கேட்கிறே .."


"இங்க பாருங்க நான் எதுவும் செய்யலே..நீங்க நம்புனாலும் சரி ! நம்பாட்டீயும் சரி ! .என்னால் இனி உங்க கூட போராட முடியலே.."என்று அவள் சொல்லும் போதே வீடு வந்துவிட மகிழினியை தூக்கிக் கொண்டு காரிலிருந்து இறங்கி வீட்டீற்குள் சென்றாள்.


மிகனோ, அவள் செல்வதையே பார்த்தபடி சில நொடிகள் இருந்தவன் மனதிற்குள்' நீ சொல்வது எல்லாம் உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.' என்று நினைத்து பெருமூச்சு விட்டபடி அவனும் இறங்கி வீட்டிற்குள் சென்றான்.

கடுப்புடனே வீட்டிற்குள் சென்றவனின் கண்களின் அமுதனும், திகழொளியும் சிரித்து பேசிக்கொண்டு இருந்தத காட்சி தான் முதலில் பட்டது.


ஏற்கனவே கோவத்தில் இருந்தவனுக்கு அந்த காட்சி தூபம் போட்டது போல இருக்கவும் " திகழி தலைவலி உயிர் போகுது, கொஞ்சம் காஃபி எடுத்துட்டு வா ..!" என்று அதிகாரமாக சொன்னபடி தங்கள் அறைக்குச் சென்றான்.


திகழொளியோ ,கணவனின் சொல்லை நிராகரிக்கவும் முடியாமல், தம்பியுடன் நின்று பேசவும் முடியாமல் தவித்தாள்..


சரியாக அந்த நேரம் இரண்டு கப் காஃபி கோப்பையுடன் வந்த மணியரசி ஒன்றை அமுதனிடமும், மற்றொன்றை திகழொளியிடம் கொடுத்து மிகனிடம் அனுப்பி வைத்தார்.


திகழொளியோ, வேறு வழியே இல்லாமல் காஃபியை வங்கிக் கொண்டு தம்பியிடம் " நீ காஃபி குடித்துட்டு இரு ! நான் இதை மாமாவுக்கு கொடுத்துட்டு வந்துடறேன்.." என்று கூறிவிட்டு தங்கள் அறைக்குச் சென்றாள்.


அமுதனுக்கோ, காலையில் எழுந்ததில் இருந்தே அக்கா எப்படி இருக்காளோ? என்ற எண்ணம் தான் அவனை படாய்ப்படுத்தியது. அதுவும் அக்காவிடம் அலைபேசியில் பேசிய பின்பு நேரில் அக்காவை பார்த்தே ஆகவேண்டும் என்று வீட்டிற்கு வந்து விட்டான்.


இப்போது தான் அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.இருந்தாலும் மிகன் ஒரு வார்த்தை கூட பேசாமல் போனது மனதிற்குள் நெருடலாகவே இருந்தது.


சம்பிரதாயத்திற்கு கூட அவனை 'வா! ' என்று அழைக்காதது அவனுக்கு வருத்தமாக இருந்தது.


திகழொளிக்கும் மிகன் தன் தம்பியிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் போனது கோவத்தையும், வருத்தத்தையும் கொடுத்தது.


கோவமாக தங்கள் அறைக்குச் சென்றவளின் கண்களில் பட்டது நெற்றியை பிடித்த பிடி அமர்ந்திருந்த மிகனின் முகம் தான்.


மெல்ல அவன் அருகில் சென்று "இந்தாங்க காஃபி..!" என்று காஃபி கப்பை நீட்டினாள்.


ஆனால் அவனோ, அதை வாங்காமல் அவளை முறைத்து பார்த்தபடி " ஒரு நாள் கூட அக்காவும், தம்பியும் பார்க்காமல் இருக்க மாட்டீங்களா? அதற்குள் எதுக்கு டீ அவனை வரச் சொல்லி இருக்கே? அப்படி என்ன டீ நான் உன்னை கொடுமை படுத்துனேன்.."


" நான் ஒன்றும் வரச் சொல்லலே .. அவனே தான் பார்க்க வந்து இருக்கான்.இப்ப வந்தா என்ன? வீட்டுக்கு வந்தவனை வான்னு ஒரு வார்த்தை கூப்பிடாமல் எங்கிட்ட சண்டை போடுங்க.."


"நானா சண்டை போடறேன்..நீ தான் தலைவலியோட இருக்கிற எங்கிட்ட வம்புக்கு வரே.."


"நான் எந்த வம்புக்கும் வரலே.. இந்த காஃபியை குடிச்சுட்டு வந்து தம்பியை வான்னு கூப்பிடுங்க !அவன் என்ன நினைப்பான்! மாமா பேசலைன்னு வருதப்படுவான்.."


"எனக்கும் சேர்த்து நீ தான் ! நல்லா பல்லு சூளுக்கும் வரை சிரிச்சு சிரிச்சு பேசறீயா அப்புறம் என்ன..?"


"இங்க பாருங்க ! நம்ம சண்டையை அப்புறம் வச்சுக்கலாம். இப்ப வந்து நீங்க அவங்கூட பேசறீங்க.."


"என்ன டீ கொஞ்சம் விட்டா ஓவரா போறே.."

"நான் என்ன ஓவரா போறேன்.. வீட்டுக்கு வந்தவர்களை மரியாதைக்கு வாங்கன்னு கூப்பிடச் சொன்னா அதுக்கு இத்தனை பேச்சா..?"என்றவள் காஃபியை அவன் கையில் திணித்து விட்டு அறையை விட்டு வெளியில் வந்தாள்.


திகழொளியோ ,மனதிற்குள் 'இவனுடன் ஒரு நொடி கழிப்பது கூட ஒரு யுகம் போல் இருக்கே! எப்படி இவன் கூட காலம் முழுவதும் நான் வாழ்வேன். நான் விரும்பிய மிகன் எங்கே?அன்பையும், அக்கறையும் கொட்டிக் கொடுத்த அந்த மிகன் இவன் இல்லையே..'


எப்போதும் கண்களில் கருணை மட்டுமே பொங்கி வழியும் அந்த மிகன் இப்போது எங்கே..?ஏன் இப்படி மாறினான்.?அன்றிலிருந்து இன்று வரை என்னை நம்பவே இல்லையே ? என்னை எப்போது தான் புரிந்து கொள்வான்..!' என்று அவள் மனம் கூப்பாடு போட்டது.


தொடரும்..
உங்கள் கருத்துகளை கீழே உள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துக்கள் மட்டுமே எனக்கு வேகமாக எழுதும் ஆற்றலைத் தரும்..கதை எப்படி போகுது என்று சொல்லுங்கள்.
(அடுத்த யூடி புதன்கிழமை மாலை)
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Latest Episodes

New Threads

Top Bottom