அத்தியாயம் - 1
பூமி வருடம் - 4000
ஒழுகும் நிலவு!
வழியும் இரவு!
இமைக்கும் விண்மீன்!
அலையும் காற்று!
மருகும் தனிமை!
மிரளும் நான்!
பால்நிலவு ஒழுகிக் கொண்டிருந்தது. அதற்கு நேரெதிராக இரவு வழிந்து கொண்டிருந்தது. மைத் தொட்டு இருள் வரைந்த தூரிகை, திருஷ்டி கழிக்க, நிலாப் பொட்டொட்டி அழகு பார்த்ததாம். நான்காயிரம் வருடங்களாக இந்த உலகத்தில் மாறாத சில விடயங்கள் உண்டென்றால் அது திரண்ட இருளும், உருண்ட நிலவும்தான். மற்றவையெல்லாம் மருகித் தவித்து, மருவி, புள்ளிகளாய் மறைந்துவிட்டது. உலகத்தில் மாற்றம் காணாத மாண்புகளைச், சொக்கும் விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
விழிகளில் களைப்புத் தட்டியதுபோல. அவளறியாமலே அது சுருங்கி மூடிக்கொண்டது. விழாக்கோலம் பூண்டு, அல்லி ராணியாய் உலாச் சென்ற ஒற்றை நிலவையும், கற்றை நட்சத்திரங்களையும் அடக்கம் செய்தது பகல். புலரும் வேளையில் உடலில் ஏற்பட்ட அசௌகரியத்தால் முகம்சுழித்து விழிகள் திறந்தாள் அவள்.
வண்ணப் பாறைகளால் கட்டப்பட்ட சிறிய வீடு அவளது வீடு. அனலைக் கக்கும் சூரியனின் வெட்பம் உள்நுழையாதபடி வீட்டின் வெளிப்புறத்தில் சாந்துகள் பூசப்பட்டிருந்தது. அந்தப் பூச்சுகளில்லாமல் வீடுகள் கட்டுவது வீண். பாலைவனத்தில் வாழ்வதற்குச் சமம். ஏனெனில் வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிடுமளவு வெட்பத்தைக் கக்கிக்கொண்டிருக்கிறான் சூரியன். அளவான இடைவெளியில் ஒன்றுபோல் வீடுகள் கட்டப்பட்டிருந்தது. சற்று தூரத்தில் மாபெரும் ஏரியொன்று இருந்தது.
"அதோ அங்க பார் அனிச்சம்" என்று சட்டத்தில் மாட்டி வைக்கப்பட்டிருந்த ஓவியத்தை காட்டினாள் அன்னை. மாநிறத்தில் கொழுகொழு கன்னங்களுடன், மிழிகளை திரட்டி உருட்டி அந்த ஓவியத்தைக் கண்டாள் சிறுமி. அவள் மனம் ஏனோ படபடத்து அடங்கியது ஒருமுறை.
"அது நம்ம பூமி. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி இப்படிதான் இருந்துச்சு" என்ற தன் அன்னையின் குரலில் ஆச்சரியம் பொங்கப் பார்த்தாள். அழகாய் இருந்தது அந்தக் கோள். உருண்டையாய் நீலமும், பச்சையும் கலந்த கலவையில் கொள்ளை கொண்டது.
அன்னையின் குரல் அசரீரியாக ஒலித்துக் கொண்டிருந்தது மனதில். அந்த பசுமையான நினைவுகள் எப்பொழுது மனதில் தோன்றினாலும், மனம் சஞ்சலப்பட்டு, அடுத்த வேலை செய்யமாட்டேன் என சத்தியாகிரகம் செய்துவிடும். சண்டித்தனம் செய்து, எங்கோ அலைந்து கொண்டிருந்த மனதை இழுத்துப் பிடித்து வைத்தாள். அவள் அனிச்சம். இருபது வயது நிரம்பியவள்.
கல் மேசையின் மேலேயிருக்கும் தொடுதிரையை உயிர்ப்பித்து, பூமியின் நுணுக்கங்களைக் கண்டாள் அவள். அது அவள் உருவாக்கியது. அன்னையின் ஓவியங்களை உயிர்ப்பித்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் செய்தது. ஆயிரம் முறை அதைப் பார்த்திருந்தாலும், ஒவ்வொருமுறை காணும் பொழுதும் உயிர்ப் பூ ஒன்று பூத்துவிடும் அவளது மனதில். ஓவியத்தில் தீட்டப்பட்டிருக்கும் புவி உண்மையில் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து நினைத்து சிலாகித்துக் கொள்வாள். ஆனால் நினைக்க மட்டுமே முடியும். அதுவே நிதர்சனம்.
அவள் கிளம்பும் நேரம் என்று அறிவுறுத்தியது கூண்டுக் கடிகாரம். எழுந்து அவசரமாகத் தயாரானாள்.
வீட்டிற்கு வெளியில் வந்தவள் அன்றைய தட்பவெட்பநிலை கண்டு அலுத்துக் கொண்டாள். வெய்யோனின் வெந்தழல் உயிரை உறிஞ்சிக் குடித்துவிடும்போல. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த வெட்பத்தைக் கட்டுப்படுத்தும் வழியறியாது திகைத்திருந்தது பூமி. அவள் உடையின் மேல் ஒரு வெளியங்கி அணிந்திருந்தாள். அது உயிர்வளியை(ஆக்சிஜன்) அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
சிறிய மகிழுந்தில் ஏறி அதை இயக்கினாள் அவள். அதை மகிழுந்து என்று சொல்லவும் இயலாது. இருசக்கர வாகனம்போல் தோற்றம் உடைய உந்துவண்டி. கண்ணாடிக் கூரையுடன் அழகாய் இருந்தது அந்த வாகனம். அதில் ஏறி உள்ளே அமர்ந்தவள் அதை இயக்க ஆரம்பித்தாள். அதன் உருளை சக்கரம் சாலையில் உரசி மேலெழும்பியது. வண்டி இறக்கைகளின்றி பறக்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் வாகனத்தை தரையிறக்கி, சாலையில் இயக்க ஆரம்பித்தாள். வானில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தால் தரையிலும் வாகனத்தை இயக்கும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது. அவள் விரைவாக நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. அவள் ஒரு வழக்கறிஞர்.
உலகத்தில் கோவிலாகப் போற்றப்படுவது நீதிமன்றம் மட்டும்தான். அங்கு யாரும் பொய் கூறிட இயலாது. நீதிபதி ஆதிபகவனிடமிருந்து குற்றவாளிகள் தப்பிக்க இயலாது. உண்மையைத் திரித்துக் கூறினாலோ, இல்லை பொய்யுரைத்தாலோ தண்டனை நிச்சயம். அதேபோல் நேரம் தவறாமை மிக முக்கியமான ஒன்று. தாமதமாக நீதிமன்றத்திற்குள் நுழைந்தால் அதற்கும் சிறை தண்டனை விதித்து விடுவார் ஆதிபகவன். அவர் அழிவில்லாதவர்.
எப்படியோ அனிச்சம் சரியான நேரத்திற்கு அங்கு வந்துவிட்டாள். உள் நுழைந்ததும் அவளது வாதி அவளிடம் வந்து உரையாடினார்.
"திரு. திரவியம். கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க சொல்றது எல்லாம் உண்மைதானே?. மிகைப்படுத்தல் ஏதும் இல்லையே?" என்று அவனுடைய கூற்றுகளை உறுதி செய்தாள்.
"வழக்கு உங்க பக்கம் இருந்தாலும், தீர்ப்பு எளிதா வரணும்னு சில விஷயங்களை மிகைப்படுத்தி சொன்னாக்கூட உங்களுக்கும் தண்டனை. அதை மனசுல வச்சுக்கோங்க" என்று அவள் கூற, எதிரில் இருந்தவனோ, தான் உண்மையாக இருப்பதாக நூறு சதவிகிதம் வாக்களித்தான்.
பிறகு ஆதிபகவன் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார் அவரது இருக்கையில் சென்று அமர்ந்தார். ஆதிபகவன் என்பது மனிதன் அல்ல, கடவுளும் அல்ல. ஒரு எந்திரம். அனைத்தும் அறிந்த எந்திரம்.
(சுருக்கமாக புரியும்படி சொல்ல வேண்டுமானால் எந்திரன் படத்தில் வரும் எந்திரன் போல். அதைவிட அறிவு அதிகம் உள்ளவன்.")
உணர்வுகள் அற்றவன். ஆனால் உணர்வுகளைக் கணிப்பதில் வல்லவன். அவன் ஆராய்ந்த வழக்குகள் அனைத்தும் வெற்றிதான். வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்ட சரித்திரங்கள் இல்லை எனலாம். சொன்ன தேதிக்கு நீதிமன்றம் வரவேண்டும். இல்லை கடுமையான அபராதம் விதிக்கப்படும்.
வாதி, பிரதிவாதி இருவரின் தலையிலும் சில உபகரணங்கள் மாட்டப்படும். அதன் கட்டுப்பாடுகள் ஆதிபகவனிடம் இருக்கும். வழக்கின் தகவல்கள் உள்ள கோப்பு அளிக்கப்படும். அதைப் படித்து, சில வினாக்கள் எழுப்பப்படும் ஆதிபகவனால். இருவரும் விடையளிக்க வேண்டும். விடைகளின் உண்மைத்தன்மையை அவர்களின் மூளை தோற்றுவிக்கும் உணர்வுகள் விளக்கிவிடும். உண்மை மட்டுமே பேசுபவர்கள் பயம் கொள்ளத் தேவையில்லை. பொய்யுரைப்பவர்கள் ஏதாவது ஒரு வினாவில் மாட்டிக்கொள்வார்கள். பொதுவாக முகத்தில் எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் மூளைக்கு நன்றாகவே தெரியும். பொய்யுரைக்கிறோமா இல்லையா என்று. விடையின் காலதாமதம், குழப்பம், குரலில் தோன்றும் பிசிறு என்று அனைத்தையும் துல்லியமாக கணித்துவிடும். ஆதிபகவனை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது. யாராவது ஊடுருவல் செய்ய முற்பட்டால் அதுவே அதன் தன்மையை மாற்றியமைத்துக் கொள்ளும்படி நிரலாக்கம் செய்யப்பட்டிருந்தது. அடுத்த நிரலாக்கம் இயங்க ஆரம்பித்த பின்னர் முதல் வேலையே, ஊடுருவ முற்பட்டவனை கண்டறிந்து தண்டனை நிறைவேற்றுவதுதான். அதன் வயது 200. அவர்களை ஆண்ட புரட்சியாளர் ஒருவரின் திட்டம் இது. அவரது பெயர் ஆதிபகவன். அதையே இதற்கும் வைத்துவிட்டனர். பல சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைத்துவிட்டது ஆதிபகவன்.
இன்று ஒரு கொலை வழக்கு. அதில் இரண்டு நபரின் மேல் சந்தேகம். அதன் பொருட்டு விசாரணை தொடங்கியது. ஆதிபகவன் கேட்ட வினாக்களுக்கு இருவரும் விடையளித்தனர்.
வெகு நேரம் கேள்வி கேட்ட பின்னும் ஆதிபகவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஏனெனில் இருவரும் தெளிவாக பயமின்றி பதிலுரைத்தனர்.
இது எப்படி சாத்தியம்?. அங்கிருந்த அனைவருமே குழம்பி தவித்தனர். இவர்கள் இருவரும் கொலை செய்யவில்லை என்றால் கொலை செய்தது யார்?. அந்த மூன்றாம் நபர் யாராய் இருக்கும்?. தொடக்கத்தில் இருந்தே இந்த வழக்கில் இவர்கள் இருவர் மட்டுமே சம்மந்தப்பட்டிருக்கின்றனர்.
நல்லாட்சியில் முதல்முறையாக ஒரு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்னும் போதிய தரவுகள் இல்லாததால் இந்த வழக்கை இன்னும் சில நாட்கள் ஒத்தி வைக்கிறேன் என்று ஆதிபகவன் கம்பீரமான குரலில் கூறிவிட்டு சென்றது.
அனிச்சம் இன்னும் நினைவு உலகத்திற்கு திரும்பவில்லை. அவள் இந்த தொழிலுக்கு வந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஒருமுறை கூட இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்ததில்லை. இவ்வளவு ஏன்? ஒரு வழக்கு கூட நிலுவையில் இல்லை. எங்கு தவறு நிகழ்ந்தது. தவறுதான் நிகழ்ந்ததா இல்லை யாரேனும் பின்னிருந்து இந்த சூழ்நிலைகளை இயக்குகிறார்களா என்ற பெரியதொரு ஐயம் அவளது மனதில் எழுந்தது. சிந்தனையினூடே தன் பயணத்தையும் தொடர்ந்தாள்.
வீட்டிற்கு வந்தவள் குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தாள். யோசனையாக அவளுடைய படிக்கும் மேசையின் முன் சென்று அமர்ந்தாள். நினைவுகள் சில வருடங்கள் பின்னோக்கி சென்றது. அவளது அன்னை அவளுக்கு பூமியைப் பற்றி கூறிய கதைகள் எல்லாம் நினைவில் வந்தது. என்றுமே அது ஒரு பெரிய ஆச்சரியம்தான். அவள் நினைத்து நினைத்து வியந்து வியந்து மனதில் சேமித்து வைத்திருக்கும் பொன்னான தருணங்கள் அவை. தருணங்கள் மட்டுமல்ல அவள் தாயின் கதைகளும் கூடத்தான். அவள் தாயின் கதைகள் உண்மையா என்று கூட தெரியாது. அவையெல்லாம் கட்டுக்கதைகள் என்று கூறுவோர் அநேகம் பேர்.
மீண்டும் அதே வார்த்தைகள். அதே உணர்வுகள்.
"அதோ அங்க பார். அது நம்ம பூமி. இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி இப்படிதான் இருந்துச்சு" என்ற தன் அன்னையின் குரலில் ஆச்சரியம் பொங்க பார்த்தாள்.
"அம்மா... பூமியில் இவ்வளவு தண்ணீர் இருந்துச்சா அம்மா?"
"ஆமாமா. பூமி முழுக்க நீரால் சூழப்பட்டிருந்தது. ஆழிசூழ் அவனின்னு சொல்லுவாங்க பூமியை."
"ரொம்ப அழகா இருக்குமா. எனக்கு அந்த பூமிக்குப் போய் வாழணும் போல ஆசையா இருக்கு."
"அங்கதான் செல்லம் நீ இருக்க."
"இல்லமா... எனக்கு இது பிடிக்கல. இந்த படத்தில் உள்ள மாதிரியா பூமி இருக்கு?. இப்போ வெறும் கருப்பும், வெள்ளையும் மட்டும்தானே இருக்கு பூமியில."
"பூமி இப்படி மாறணும்னு விதி இருந்திருக்கு. இது ஒரு சாபம்தான். நம்ம கற்பனைக்கு எட்டாத விஷயங்கள் எல்லாம் பூமியில் இருந்திருக்கு."
"அப்பறம் ஏன் மா இந்த பூமி இப்படி ஆச்சு?."
"கோடி வருஷத்துக்கு முன்னாடியே இந்த பூமிப்பந்து உருவாகிருச்சு. அப்பறம் சில வேதியியல் மாற்றங்களால் நீர் உருவாச்சு. அப்பறம் உயிரினம். காலம் காலமாக நம்மைப் போல் மக்கள் வாழ ஆரம்பிச்சாங்க. நாகரிகம் வளர்ந்து, செழிப்பான வாழ்க்கை வாழ ஆரம்பிச்சாங்க. ஏதோ ஒரு அழுத்தம் பூமியில் உருவாகியிருக்கணும். ஒரு கட்டத்துக்கு மேல பூமியால் தாங்க முடியல. வெடிக்க ஆரம்பிச்சிருச்சு."
"எப்படிமா? வெடிச்சுச்சா?.. வெடிச்சா சின்ன சின்ன பாகமா சிதறி போயிருக்காதா?"
தன் ஐந்து வயது பிள்ளையின் அறிவாற்றலை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள் அன்னை.
"பூமி சின்ன பொருள் இல்லமா.. நீ கற்பனை செய்ய முடியாத அளவு பெரியது. பூமிக்கு நடுவில் பாறைக் குழம்பு இருக்கு. வெப்பம் ஏற ஏற, அங்க அழுத்தம் கூடியிருக்க வேண்டும். அதனால் அது பல இடங்களில் ரொம்ப பெரிய அளவுல வெடிச்சுதாம்" என்று கூறியவள், ஓவியத்தொடர் ஒன்றை எடுத்து கடைபரப்பினாள். அதில் பூமியின் முப்பரிமாண தோற்றம் தோன்றி அதன் அடுக்குகள் தெரியுமாறு விளக்கப்பட்டிருந்து முதல் படம். அதன்பிறகு பூமியில் நீர் தோன்றியதில் தொடங்கி தொழில்நுட்ப வளர்ச்சி வரை மேல்தளத்தில் நிகழும் மாற்றங்களையும், அந்த மாற்றங்களால் பூமிக்கு அடியில் நிகழும் மாற்றங்களையும் ஒன்றாக எடுத்துரைக்கும் படி அடுத்தடுத்த ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. அதை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் அனிச்சம். திடீரென, பூமியின் மையப்பகுதியில் கொதித்துக் கொண்டிருந்த பாறைக் குழம்பு அழுத்தம் தாளாமல் அங்குமிங்கும் கலங்கி தவித்தது. அதைப் பார்க்கவே படுபயங்கரமான காட்சியாய் இருந்தது. ஒரு கட்டத்தில் அது உருண்டையாய் இருந்த பூமிக்கோளத்தில் ஒரு வெடிப்பை உருவாக்க, மருகித் தவித்த செந்தழல் குழம்பு அதிலிருந்து ஒழுக ஆரம்பித்தது. பசும் பூமிக்கோளம் சில நிமிடங்கள் குருதி வடித்தது. ஆனால் சில நொடிகளில் அந்த சிறுவெடிப்பு போதாமல் பல பெருவெடிப்புகள் உருவாக, பாறைக்குழம்புகள் பெருமளவு பூமியின் மேல்பரப்பில் ஒழுகி, பசுமைகளை கரியாக்கி, நீர்நிலைகளை ஆவியாக்கியது. சற்று நேரத்திற்கெல்லாம் பூமியின் ஒரு பாகம் முழுக்க கருமையும் மறுபாகம் முழுக்க வெண்மையும் மட்டுமே மிச்சமிருந்தது. பூமித்தட்டுகள் இடம்பெயர்ந்திருந்தது. வெடிப்புகள் ஒரு பக்கமாக உருவாக, ஒரு பக்கம் முழுக்க கருப்பு மற்றும் சாம்பல் தவிற வேறு நிறமில்லை. பூமித்தட்டு நகர்ந்ததில் வடதுருவமும் தென்துருவமும் ஒரு பக்கமாக இணைந்தது. அதில் மற்றொரு பக்கம் மட்டும் குளுமையைத் தக்க வைக்க, அது வெள்ளையாக காட்சியளித்தது. வெள்ளையும், கருப்புமாய் ஒரு பந்து. அதுவே பூமிப்பந்தானது என்று முடிந்தது அந்த ஓவியத் தொடர்.
இந்த ஓவியங்களை வைத்துதான் அவள் ஒரு காணொளி தயார் செய்திருந்தாள்.
அது அப்படியே அவளது மூளையில் பதிந்துபோனது.
அவளின் எண்ணங்களை கலைக்கும் வண்ணம் அழைப்பு மணியடிக்க, எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
அவளுடைய வருங்கால கணவன் நளந்தன் நின்று கொண்டிருந்தான்.
அவன் அவளுக்கு உற்சாகமாக வணக்கம் வைக்க, அவளோ இன்னும் வேற்றுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள்.
"அனி! என்ன ஆச்சு?. என்ன குழப்பத்துல இருக்க?"
"உள்ள வா நளன். அப்புறம் பேசலாம். குடிக்கத் தண்ணி வேணுமா?"
"ம்ம்ம்.. குடு.." என்றுவிட்டு அமர்ந்தான்.
அவள் நீர் எடுக்க உள்ளே சென்றாள்.
நளன் அவளின் மேசையின் முன் அமர்ந்து, சற்றுமுன் அவள் கண்ட அசைவூட்டியினை இயக்கினான்.
அவள் நீர் எடுத்து வந்ததும் அதை வாங்கி பருகியவன், "இன்னும் எத்தனை முறை இதை பாத்துட்டே இருப்ப? இதெல்லாம் நம்பறியா என்ன?" என்றான்.
"நளன்.. உங்களுக்கு வேணா இதெல்லாம் வெறும் கட்டுக்கதையா இருக்கலாம். ஆனா என்னோட மண்டைக்குள்ள சதா சர்வகாலமும் ஓடிட்டே இருக்க விஷயம்."
"ஆயிரம் வருஷம் முன்னாடி உலகம் இப்படி இருந்திருக்கலாம் என்று ஒரு அனுமானம்தான் இது. அதாவது யாரோ எழுதி வச்ச சில தரவுகளை வச்சு இப்படி ஒரு காணொளி தயார் செய்துருக்க. இது இப்படித்தான் இருந்ததுன்னு இன்னும் நிரூபிக்கப்படல. அப்புறம் எப்படி நம்பற?.."
"நெருப்பில்லாம புகையாது. மனிதர்கள் கொஞ்சம் மிகைப்படுத்தி எழுதி வச்சிருக்கலாம். ஆனால் கொஞ்சமேணும் உண்மையில்லாம இருக்க வாய்ப்பு இல்லை. இந்த காணொளில வர்ற மாதிரி உலகம் அழிஞ்சு போயிருந்துச்சுன்னா, துருவத்தில் இருந்த சொற்ப நபர்கள் மட்டும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பிருக்கு. அவங்களுக்குத் தெரிஞ்சதை எழுதி வச்சிட்டு போயிருக்கணும். நிச்சயம் இதற்கான தரவுகள் கிடைக்கும். நீ வேணா பாரேன்" என்றாள் அவள்.
"இத்தனை வருஷமா கிடைக்காத ஆதாரம் இனி கிடைக்கும்னு சொல்றியா?"
"நிச்சயமா!! எனக்கு நம்பிக்கை இருக்கு."
"நீ தேவையில்லாம கற்பனைகளை மனதில் வளர்க்கறயோன்னு தோணுது. அதீத கற்பனைகளும் கனவுகளும் நல்லதில்ல. இது உன் மனநிலையை பாதிக்குமோன்னு எனக்கு பயமா இருக்கு."
"ப்ப்ச்... உனக்கு புரியாது விடு."
"புரியற மாதிரி நீ எதுவும் சொல்லல அனி. எப்போ உன்னைப் பார்க்க வந்தாலும் இதை மட்டுமே பேசி என்னை எரிச்சலாக்குற" என்றே அவன் எரிச்சலுடன் மொழிய, அவள் கோபம் கொண்டாள்.
"உங்களுக்கு நான் சொல்ற விஷயத்தில் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இல்லாத விஷயம் எப்படி புரியும்?."
"இந்த உருப்படாத பேச்சு வேண்டாம். உலகம் ஒண்ணுதான். அது கருப்பும் வெள்ளையும் கலந்த உருண்டை. அவ்ளோதான். உயிரே இல்லாத கதைக்கு இவ்ளோ முக்கியத்துவம் கொடுக்கிற. உன்னோட மனசுல நான் எங்க இருக்கேன்னு எனக்குத் தெரியல. உன் கூட வாழப்போற நாட்கள் எப்படி இருக்குமோன்னு பயமா இருக்கு" என்றான் கோபமாக.
அனிச்சம் எதுவும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்துவிட்டாள் அங்கிருந்த கல் நாற்காலியில். பூமியில் இருக்கும் 80 சதவீதம் பொருட்கள் கல்லினால் ஆனவை. அவளின் அமைதி அவனை ஏதோ செய்ய, அருகில் சென்று அமர்ந்தான்.
அதீத உணர்ச்சிகளின் பிடியில் இருக்கும்பொழுது, அவள் இப்படித்தான். உரையாடமாட்டாள். அவள் அன்னையின் மரணம் நிகழ்ந்த பொழுதும் இப்படித்தான். அமைதியாக ஓரிடம் சென்று அமர்ந்துவிட்டாள். அரசு தகனம் செய்யும் ஏற்பாடுகள் அனைத்தும் செய்து, அவளது அன்னையின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட பொழுதும், விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். மனிதன் உயிர் வாழும் சராசரி வருடங்கள் நாற்பத்தி ஐந்து. அதுவரைதான் உயிர் வாழ முடியும். அதன் பின்னர் சொற்ப நபர்களே வாழ்வதுண்டு. யாரும் ஐம்பதைக் கடந்ததாக சரித்திரம் இல்லை.
இரண்டு வருடங்களாக அனியைத் தெரியும் அவனுக்கு. அவள் அன்னை இருந்த பொழுது மகிழ்ச்சியாக இருந்தாள். ஆனால் இப்பொழுது தனிமையை உணர்கிறாள் என்பதை நன்கு அறிந்திருந்தான். அதனால் விரைவில் அவளைத் திருமணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும், அவனின் பணி அதற்கு ஒத்துழைக்கவில்லை. அவனுடைய விடுப்பு கோரிக்கை நிலுவையிலேயே இருந்தது. அதனால் அவனுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வந்து பார்த்துவிட்டு செல்வான். என்ன பேசிக்கொண்டிருந்தாலும், இறுதியில் அன்னையின் ஓவியங்களிலும், கதைகளிலும் வந்து நிற்பாள். அவனிடம் ஏன் இப்படி இருக்கக் கூடாது என்று தர்க்கம் செய்வாள். எப்பொழுதும் பொறுமையாக கையாளும் அவன் இன்று சற்று அதிகப்படியாக கோபம் கொண்டுவிட்டான்.
அவள் அருகில் அமர்ந்தவன், அவளின் கைகளில் விரல் கோர்த்தான். அவள் விழிகள் ஊறிக் கொண்டிருக்கும் ஊற்றாய், கண்ணீர் உகுக்க ஆரம்பித்தது.
"அனி, உங்க அம்மாவ ரொம்ப தேடுறியா? எனக்கு என்ன செய்யணும்னு தெரியல. இன்னும் ஒரு மாசம் பொறுத்துக்கோ. நாம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று அவன் கூற, அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.
"பதில் சொல்ல மாட்டியா? நீ என்னைத் தேடலையா? ஆனா நான் உன்னை ரொம்பவே தேடுறேன்" என்றான் வருத்தத்துடன்.
"மன்னிச்சிடுங்க நளன். நான்... நான்..." என்று திணறினாள் அவள்.
"வேண்டாம் விடு. சிரமப்படாத. உன்கூட நிறைய வருஷம் வாழணும். உனக்கே தெரியும் நம்ம மனசு நல்லா இல்லைன்னா வாழ்நாள் குறையும்னு. எனக்கு பயமா இருக்கு" என்றான் அவன்.
அவன் பயத்தில் உள்ள நிதர்சனம் உணர்ந்திருந்தாலும், அவளால் அந்த நினைவுகளைவிட்டு வெளியே வரமுடியவில்லை.
சற்று நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது. அவள் எழுந்து சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்தாள்.
"யாரு வந்தா?"
"தெரியலை. உயிர்காற்று தீர்ந்து போச்சாம். அதான் குடுத்துட்டு வரேன்" என்றாள்.
யார் வந்து உயிர்க்காற்று கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் வழங்குவது உலகத்தின் மரபு. ஒவ்வொரு வீட்டிலும் உயிர்க்காற்று சேமிக்கும் கொள்கலன்கள் இருக்கும். அவற்றை வீட்டினர் உபயோகப்படுத்திக்கொள்வர். இப்படி யாராவது வந்து உயிர்க்காற்று வேண்டும் என்று வினவினாலும், அதைக் கொடுப்பது அவர்களின் வழக்கம். குடிநீர் கூட இப்படித்தான். இரண்டுமே அரசின் மேற்பார்வையில் இருக்கும். பெரிய பெரிய தொழிற்சாலைகளில் இருந்து காற்றும் நீரும் உற்பத்தி செய்யப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் நிரப்பப்படும். அதை அவர்கள் விரயமாக்காமல் உபயோகம் செய்கிறார்களா என்றும் கண்காணிக்கப்படும். வீடுகளே இல்லாத இடங்களில், இதற்கென்று அரசு சில ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தது. அவர்களைப் பொறுத்தளவு, ஒவ்வொரு துளி நீரும், காற்றும், அவர்களின் உயிருக்குச் சமமானவை. அப்படி ஒருவருக்குதான் அவள் உயிர்க்காற்று வழங்கிவிட்டு வருகிறாள்.
அதன்பிறகு அவள் மனம் இலகுவானது. இயல்பை மீட்டிருந்தாள். நளனுடன் சிறிது நேரம் உரையாடினாள்.
"பேசாம என்னோட வேலையை நீ செய்யலாம்."
"பூமியை அகழ்ந்தெடுத்து, அதன் தொன்மையை ஆராய்வது உண்மையாவே எனக்கு மனசுக்கு பிடிச்ச வேலைதான். ஆனால் என்ன செய்றது?. எனக்கு அதுக்கு படிக்க கொடுப்பினை இல்லையே. என்னோட நரம்பியல் மண்டலம், நான் இதைப் படிக்கத்தான் லாயக்குன்னு சொல்லிருச்சே. அரசாங்கத்தை மீறி நாம என்ன செய்ய முடியும்" என்று வருத்தப்பட்டாள் அவள்.
"அதுக்கென்ன?.. நம்ம கல்யாணம் நடந்த அப்புறம் என் கூடவே எல்லா இடத்துக்கும் வா. என்னைவிட நல்லாவே அந்த வேலையை செய்வ."
"அது சட்டப்படி குற்றமாச்சே."
"அட ரொம்ப யோசிக்காத.. எப்படியும் கல்யாணம் முடிஞ்சு ரெண்டு வருஷம் நீ வேலைக்கு போகப் போறதில்ல. அதுக்குள்ள குழந்தை பெத்துக்கணுமே. அதனால வீட்ல இருக்க நேரத்தில், நான் என்னோட அகழ்வு பணியைப் பத்தி சொல்றேன். நீ எனக்கு உதவி செய்" என்றான்.
அது உலகத்தின் வழக்கம். திருமணம் முடிந்த பெண்கள் முதல் இரண்டு வருடத்திற்கு வேலைக்கு செல்ல முடியாது. இரண்டு மாதங்களுக்கு பிறகு, சோதனைக் குழாயில் தம்பதியரின் கரு உருவாக்கப்படும். அதன்பிறகு அந்த கருவின் மரபணுக்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, கருவில் உள்ள தவறுகளைக் களைந்துவிட்ட பின், அது பெண்ணின் கருப்பைக்குள் செலுத்தப்படும். ஒவ்வொரு கருவுக்குள்ளும் சில பிரத்யேகமான மரபணுக்கள் செலுத்தப்படும். அது மிக முக்கியமான ஒரு செயல். ஏனெனில் அந்த செலுத்தப்பட்ட மரபணுவே, கருவின் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறது. அவர்களுக்கு தெரிந்து உலகின் வெட்பம் அதிகரித்துக் கொண்டே செல்வதால், பாதிக்கும் மேல் கரு தங்குவதில்லை.
அப்படியே கரு தங்கினாலும் குழந்தை இறந்து பிறக்கும். இதனால் மனித இனம் பேரழிவை சந்தித்துக் கொண்டே இருந்தது.
இரண்டாயிரம் வருடத்திற்கு முன் உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்ததால் , மனித இனம் வாழ்வதற்கு தகுதியற்ற பூமியாக இது மாறிவிட்டது. ஆனாலும் மாற்றங்களை நூல் பிடித்து செல்லும் உயிர்கள் மட்டுமே இங்கு வாழமுடியும். அதாவது பரிணமிக்க வேண்டும். இயற்கையாக பரிணமிக்க இன்னும் சில நூற்றாண்டுகள் தேவைபோல. அதனால் செயற்கையாக பரிணமித்தனர் மனிதர்கள். அவர்களின் மூளை அவர்களுக்கு பேராயுதம். தொன்று தொட்டு வந்த கற்காலத்தில் இருந்து மனிதனின் அறிவாற்றலே அதிசயம் நிகழ்த்தியிருக்கிறது.
இருவரும் யோசனையில் இருக்க, வெளியில் அறிவிப்பு ஒன்று கேட்டது. அதுவும் ஆபத்துக் கால அறிவிப்பு. இவ்வகை அறிவிப்புகளுக்கு முன் ஒலிக்கவிடும் மனதை பிசையும் ஒலியே கிலியை ஏற்படுத்தும்.
இருவரின் முகங்களும் பேரச்சத்தை தத்தெடுத்திருந்தது.