அத்தியாயம் – 9
மித்ரா கொடுத்துவிட்டு சென்ற ஃபைலை வாங்கிப் பிரித்துப் பார்த்த மிருதுளா, எரிச்சலுடன் அதை டேபிளில் தூக்கி வீசினாள். பிறகு கோபத்துடன் கேமிராவை திரும்பிப் பார்த்தாள். அந்த பக்கத்திலிருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யுவின் முரட்டு இதழ்களில் சின்ன புன்னகை. கண்களில் சுவாரஸ்யம்.
'அதெப்படி! கரெக்ட்டா இந்த கேமிராவை பார்க்கறா!' என்று ஆச்சரியப்பட்டான். பிறகு, 'தப்ப தப்புன்னு சொன்னா எவ்வளவு கோபம் வருது உனக்கு! ம்ம்ம்! வரட்டும் வரட்டும்.. இன்னும் எவ்வளவு கோபம் வருதுன்னு பார்த்துடலாம்' என்று தனக்குள் சொன்னபடி அவளை பார்வையால் விழுங்கினான்.
கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றி சிரமப்பட்டு கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த மிருதுளா, தூக்கி எறிந்த ஃபைலை மீண்டும் கையில் எடுத்தாள்.
பத்து நாட்களாக இந்த ஒரே ஃபைலில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறாள். இவள் என்ன கவனமாக திட்டமிட்டு ஒர்க் பிளானை கோட் செய்து அனுப்பினாலும் அதில் குற்றம் குறை கண்டு பிடித்து மீண்டும் மீண்டும் அந்த ஃபைல் அவள் கைக்கே வந்தது.
ஒவ்வொரு நாளும் இதைவிட சிறப்பாக செய்ய இதில் ஒன்றும் இல்லை என்று எண்ணித்தான் அவள் மித்ராவிடம் ஃபைலை கொடுப்பாள். ஆனால் மறுநாள் வந்து பார்த்தல் குறைந்தது பத்து கரெக்ஷன்ஸ் இருக்கும். அதை சரி செய்து கொடுத்தால் மீண்டும் அதில் ஒரு பத்து கரெக்ஷன். இப்படியே பத்து நாட்கள் ஓடிவிட்டது.
வேலை திட்டம் மெருகேறி இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அவளை ஒரு செல்லா காசு போல், எதற்கும் உபயோகம் இல்லாதவள் போல், அவள் என்ன செய்தாலும் தவறு கண்டு பிடித்தால் எப்படி! அது மட்டும் இல்லாமல் ஒரே வேலையை எத்தனை நாள் தான் திரும்ப திரும்ப செய்வது! நினைக்க நினைக்க பிரஷர் கூடியது அவளுக்கு. நரேன் இப்படியெல்லாம் செய்வான் என்று அவளுக்கு தோன்றவில்லை. அப்படியென்றால் அந்த கேமிராவுக்கு பின்னால் இருந்து அவளை நோட்டமிடுவது யார்! - மீண்டும் ஒரு முறை கேமிராவை திரும்பிப் பார்த்தாள்.
அந்த அழகிய கண்களில் பயம், சிரிப்பு, குறும்பு, காதல் என்று அத்தனை உணர்வுகளையும் அவன் பார்த்து ரசித்திருக்கிறான். இன்று அதே கண்கள் ஒளியிழந்து வெறுமையாய் தன்னை நோக்குவதை காணும் போது மனதை பிழிந்தது அவனுக்கு. அங்கே அவர்களுக்கு குறுக்கே ஒரே சுவர் தான். அதை உடைத்து நொறுக்கி தள்ளிவிட்டு அவளிடம் பாய்ந்து சென்று, அவளை இறுக்கி கட்டிக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
'ஓ காட்… மேன்! ஐ மிஸ் ஹர் சோ மச்!!' - உள்ளே ஒருவன் புலம்பினான். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அத்தனை நரம்புகளிலும் தசைகளிலும் அவளுக்கான ஏக்கம் ஊடுருவி அவனை புரட்டிப்போட்டது.
அவள் இல்லாமல் எத்தனை நாட்கள் ஏங்கியிருப்பான்! எத்தனை இரவுகள் தூங்க முடியாமல் தவித்திருப்பான்! தனிமையை தாங்க முடியாமல் எத்தனை முறை ஓவர் டோஸ் ஆகும் அளவுக்கு போதை ஏற்றி கொண்டிருப்பான்! இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. இதோ... ஒரே கூரையின் கீழ்... அவன் கண்களுக்கு எதிரில்... அவனுடைய தேவதை... அவனுடைய மிருதுளா! வேறு என்ன வேண்டும்? முயன்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
திரையில் தெரியும் அவள் முகத்தை தொட்டு வருடினான். நெஞ்சுக்குள் சில்லென்று ஒரு உணர்வு... .அவளையே தொடுவது போல்... அவள் கன்னத்தை வருடுவது போல்... 'மிருது!!!' - அவன் உதடுகள் முணுமுணுத்தது.
அந்த பக்கம் மிருதுளா தலையை ஒருபக்கம் சாய்த்து நெற்றியை நீவினாள். உடனே இவன் பார்வை கூர்மையானது. அவள் புருவ சுருக்கத்தையும், முக வாட்டத்தையும் கண்டதும், சட்டென்று இண்டர்காமை எடுத்தான்.
சற்று நேரத்தில் மிருதுளா அமர்ந்திருக்கும் அறைக்குள் வெள்ளை சீருடை அணிந்த ஒருவன் கையில் ட்ரேயுடன் நுழைந்தான். அதில் அவளுக்கு விருப்பமான பிளேவர் டீயும், ஸ்நாக்ஸும் இருந்தது.
"தேங்க்ஸ்" என்று அவனுக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு டீயை எடுத்து ஒரு மிரடு அருந்தியவள் சட்டென்று நிறுத்தினாள். பிறகு கப்பை முகத்துக்கு அருகில் கொண்டு வந்து வாசம் பிடித்தாள். அவளுக்கு விருப்பமான பிளேவர்... தன்னை மறந்து கண்களை மூடி ரசித்தாள். மனதிற்குள் இதமான ஒரு உணர்வு!
'எத்தனை நாட்களாகிவிட்டது! இப்போது! இங்கே! எப்படி!' - மனதிற்குள் கேள்விகள் எழ மீண்டும் அவள் பார்வை கேமராவின் பக்கம் திரும்பியது.
அவள் கண்களில் தெரிந்த கேள்வி... சந்தேகம்... ஆர்வம்... அனைத்தையும் பார்த்த அபிமன்யுவின் முகத்தில் புன்னகை தோன்றியது. தன்னுடைய இருப்பை அவள் உணர்கிறாளோ என்று தோன்ற உள்ளம் துள்ளியது அவனுக்கு.
அன்று மாலை வேலையை முடித்து பைலை மித்ராவிடம் ஒப்படைத்த போது, "இதுக்கு மேல என்னால இந்த பைல்ல வேலை செய்ய முடியாது. இவ்வளவு தான் என்னோட கெப்பாசிட்டி. சாட்டிஸ்பாக்ஷன் இல்லனா, மிஸ்டர் நரேன்கிட்ட வேற யாரையாவது ஹயர் பண்ணிக்க சொல்லுங்க" என்று கூறிவிட்டு சென்றாள் மிருதுளா. உண்மையில் அவள் மெண்டலி சோர்வாகிவிட்டாள்.
**********
பினு தாமஸ் - அபிமன்யுவின் பிரைவேட் இன்வஸ்டிகேட்டர். அவன் சம்பளம் வாங்கியது என்னவோ அரசாங்கத்திடம் தான். ஆனால் வேலை பார்த்தது அபிமன்யுவிற்கு. ஆம், அவன் அண்டர்கவரில் ஏழு ஆண்டுகள் தாக்குப்பிடித்ததில் பினு தாமஸுக்கும் ஒரு பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. நெருக்கடியான நேரங்களில், சரியான தகவலை சேகரித்து, ரகசியமாக அவனிடம் கொண்டு சேர்த்து பல முக்கியமான காரியங்களை கச்சிதமாக நடத்தி முடிக்க உதவியிருக்கிறான். மிகவும் நம்பிக்கையானவன்... விசுவாசமானவன்… நண்பன்… அதனால் தான் அவனை அந்தமானுக்கு வரவழைத்திருந்தான் அபிமன்யு.
"நீ கேட்ட எல்லாம் இந்த ஃபைல்ல இருக்கு" - மிருதுளாவின் கடந்த ஐந்து ஆண்டு கால வாழ்க்கையை அலசி ஆராய்ந்து டாகுமெண்ட் செய்து அபிமன்யுவின் அலுவலகத்திற்கே வந்து அவனுடைய டேபிளில் வைத்தான்.
"ரெண்டு வாரம் கொஞ்சம் ஜாஸ்தி இல்ல இந்த வேலைக்கு?" - அவன் கொடுத்த கோப்பை தன் பக்கம் இழுத்த அபிமன்யுவின் பார்வை பினு தாமஸின் முகத்தை படிக்க முயன்றது.
அவனிடம் எந்த சலனமும் இல்லை. கைகளை பின்னால் கட்டிக் கொண்டு இறுக்கமாக நின்றான்.
"பினு, டூ ஐ ஹேவ் டு ஒர்ரி அபௌட் சம்திங்?" - இனம்புரியாத பதட்டம் அவனை ஆட்கொண்டது.
ஒரு நொடி யோசித்தவன், "இல்ல... எனக்கு அப்படி ஒன்னும் தோணல. ஆனா நீ ஒரு தரம் இந்த பேப்பர்ஸ ரீட் பண்ணிட்டு முடிவு பண்ணு” என்றான்.
அவனுடைய அந்த ஒரு நொடி தயக்கம் அபிமன்யுவின் நெஞ்சுக்குள் சுருக்கென்று குத்த, பார்வை அந்த கோப்பில் விழுந்தது.
அந்த ரிப்போர்ட்டை அவன் தனியாக படிக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டு, “வேற ஏதாவது வேணுன்னா கூப்பிடு. ஐ ஆம் அட் யுவர் சர்வீஸ்" என்று கூறி விடைபெற்றான் பினு.
அதன் பிறகு வெகுநேரம் அபிமன்யுவிடம் அசைவில்லை. அவனால் அந்த ஃபைலை பிரித்து படிக்க முடியவில்லை. பதட்டம்… தயக்கம்… எடுத்து ட்ராயருக்குள் வைத்து பூட்டிவிட்டான்.
நீண்ட நெடு ஐந்து ஆண்டு காலம்! ஆள் மட்டும் அல்ல... அவள் குணத்திலும் மாற்றங்கள் தெரிகிறது. வாழ்க்கையில் கூட வேறு யாரையும் அனுமதித்திருப்பாளோ! - நினைத்த மாத்திரத்திலேயே உடம்பெல்லாம் நடுங்கியது அவனுக்கு.
சட்டென்று அமர்ந்திருந்த சேரிலிருந்து எழுந்து பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான். உள் நெஞ்சு வறண்டு நுரையீரல் சுருங்கி மூச்சு முட்ட, பேராவலுடன் ஆக்சிஜனை உள்ளிழுத்து வெளியேற்றினான். கைகள் தானாக பேண்ட் மற்றும் சட்டை பேக்கெட்டை சிகரெட்டுக்காக துழாவின. எதுவும் கிடைக்கவில்லை. எப்படி கிடைக்கும்? அவன் தான் தன்னை அடிமைப்படுத்தும் எதையும் அலுவலகத்திற்குள் அனுமதிப்பதில்லையே! அவனுடைய முக்கியமான அடிக்ஷனே அவள் தான்! அவள் இருக்கும் இடத்தில் மற்றவைகளுக்கு என்ன வேலை!
ஆனால் இன்றைய மனநிலை அவனை தடுமாற செய்துவிட்டது. அதை டைவர்ட் செய்ய டோபோமின் ஸ்டுமிலேஷன் வேண்டும். அதற்கு நிகோடின் தேவைப்பட்டது. கிடைக்கவில்லை என்றதும் உள்ளே ஓர் மிருகம் உறும துவங்கியது. அவன் அதை அடக்க போராடிக் கொண்டிருந்த போது, அவனுடைய அறையில் அரவம் கேட்டது. திரும்பி பார்த்தான். நரேன்!!!
***********
அன்று மித்ரா அலுவலகத்திற்குள் நுழையும் போதே ஜாலி மூட் ஜூலியட்டாகத்தான் நுழைந்தாள். காரணம் ரோமியோ பால்கனியில் நின்று கொண்டிருந்தான். அவளுக்கு முதுகு காட்டித்தான் நின்றான். முகத்தை பார்க்க முடியவில்லை... ஆனாலும் மனதிற்குள் ஜில் ஜில்... காரணம் அன்று அவனும் அவளும் மேச்சிங்... மேட்சிங்... ப்ளூ அண்ட் ப்ளூ...! ஹே ஹேய்!! மனம் துள்ள, 'ஐலசா ஐலசா… ஐஸ் கட்டி கொட்டிச்சா' என்று ரேண்டமாக ஒரு பாடலை முணுமுணுத்தபடி சந்தோஷ குவியலாக அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
"குட் மார்னிங் அசீம் சார்" - லாபியில் எதிர்ப்பட்ட செக்யூரிட்டி ஹெட்டுக்கு தன்னுடைய கன்டேஜியஸ் சிரிப்பை கடத்திவிட்டு, லிப்ட் கதவு திறப்பதை கண்டு குடுகுடுவென்று ஓடினாள். அது மூடிக்கொள்வதற்குள் இவள் நுழைந்துகொள்ள வேண்டுமே! ஐந்து நிமிடம் தாமதமாக போனால் ஒன்றும் தலை முழுகிவிடாது. ஆனால் ரோமியோவை பார்க்கும் ஆர்வம்!
லிஃப்ட் மேல் தளத்திற்கு வந்ததும் முதல் ஆளாக வெளியேறி, தன்னுடைய கேபினுக்குள் நுழைந்து கைப்பையை அதன் இடத்தில் தூக்கி கடாசிவிட்டு, நேராக ரெஸ்ட்ரூம் சென்று கண்ணாடியில் தன் ஆடை அணிமனைகளை சரிபார்த்துக் கொண்டு வெளியே வந்து, அந்த பறந்து விரிந்த காரிடாரில் நின்றாள். வலது பக்கம் சென்றால் நரேனுடைய அறை... இடது பக்கம் சென்றால் அபிமன்யுவின் அறை... நேராக சென்றால் மிருதுளா வேலை செய்யும் கான்பிரன்ஸ் அறை.
அவளுக்கு மிருதுளாவும் வேண்டாம்... நரேனும் வேண்டாம்... ஓடிச் சென்று ரோமியோவுக்கு சேம்-பின்ச் சொல்ல வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் அது முடியாது... அட்லீஸ்ட் ஒரு குட் மார்னிங்? சொல்லலாம்.. ஆனால் அடுத்து அவன் கேட்க போகும் கேள்வி என்ன என்று அவளுக்கு தெரியும். மிருதுளா செய்து கொண்டிருக்கும் வேலையை பற்றி ஸ்டேட்டஸ் கேட்பான். முதல் நாள் சிடுசிடுக்கும் முகத்தோடு அவள் கொடுத்துவிட்டு சென்ற கோப்பு நினைவிற்கு வந்தது.
'ம்ஹும்... இவனுக்கு ரிப்போர்ட் செய்வதற்கு முன் அவனுக்கு தெரியப்படுத்த வேண்டும்' - இந்த பக்கமும் அந்த பக்கமும் கையை ஆட்டி தனக்குள் பேசிக்கொண்டு, நரேனின் அறை பக்கம் நடையை கட்டினாள்.
*********
மித்ராவை பார்த்து பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அபிமன்யுவின் அஸிஸ்டண்ட்டாக அவளை அனுப்பிய பிறகு ஓரிரு முறை காரிடலில் பார்த்ததோடு சரி. அவளால் அபிமன்யுவிடம் தாக்குப் பிடிக்க முடியாது என்று இவன் எண்ணி இருக்க அவளோ அவனிடம் வேலை செய்யும் விதத்தை அறிந்து கொண்டு நேக்காக காலம் தள்ளியது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
‘அபியையே மேனேஜ் பண்ணிட்டா!’ என்று நரேன் மித்ராவை பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய செகரட்டரியிடம் வந்து அவள் பேசிக் கொண்டிருப்பதை கேமிராவில் பார்த்தான் அவன்.
'அட!' - என்று ஆச்சரியப்பட்டான். அதற்குள் செகரட்டரி இண்டர்காமில் அழைத்து மித்ரா அவனை பார்க்க வந்திருப்பதை சொன்னான். அவளை உள்ளே அனுப்பும்படி நரேன் சொல்ல, மித்ரா அவன் எதிரில் வந்து நின்றாள்.
அவளை அமர சொல்லி என்ன விஷயம் என்று கேட்டான். அவ்வளவு நேரமும் மனதிற்குள் அவளை பற்றி யோசித்து எதையும் குரலிலோ முகத்திலோ சிறிதும் காட்டிக்கொள்ளாமல் வெகு பிரஃபஷனலாக நடந்துகொண்டான்.
"அபிமன்யு சார் கீப்லாக் செக்யூரிட்டி சர்வீசஸ் எம்பலாயி மிஸ்.மிருதுளாகிட்ட நிறைய ரீ-ஒர்க் டிமாண்ட் பண்றாங்க. ஆனா மிருதுளா கோபப்படறாங்க. இதுக்கு மேல அவங்க ஒர்க் திருப்தியா இல்லைன்னா வேற யாரையாவது ஹயர் பண்ணிக்க சொல்றாங்க" என்றாள்.
நரேனின் புருவம் சுருங்கியது. "என்ன பிரச்சனை?" என்றான் யோசனையுடன்.
"எனக்கு சரியா தெரியல. ஆனா ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகல" என்றாள்.
'ஐ ஆம் நாட் சர்ப்ரைஸ்ட்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், "சரி, நான் அபிகிட்ட பேசறேன்" என்றான்.
"தேங்க் யூ" என்று எழுந்தாள் மித்ரா.
அவளிடம் இன்னும் பேச்சை வளர்க்க வேண்டும் போல் தோன்ற, "அபி ஆபீஸ் வந்தாச்சா?" என்றான்.
சட்டென்று அவள் தலைக்கு மேல் பல்ப் எரிந்தது... முகம் பிரகாசமானது... கண்கள் ஒளிர்ந்தது... "எஸ் எஸ்... வந்தாச்சு..." என்றாள் உற்சாகமாக.
'என்ன ஒரு ஆனந்தம்!' - மனம் கூம்பியது. அதை வெளிக் காட்டிக்கொள்ளாமல் எழுந்து அவளோடு சேர்ந்து நடந்தான்.
"எவ்வளவு நாள் ஆகுது இங்க ஜாயின் பண்ணி?" - இயல்பாக கேட்டான்.
"அல்மோஸ்ட் ஆறு மாதம்..." - புருவம் ஏறி இறங்கியது... பற்கள் பளீரிட்டன. குரலில் பெருமை.
எதையும் மறைக்க தெரியாத திறந்த புத்தகம் அவள்! நரேன் அவளை ரசித்தான். "குட்" என்று பாராட்டினான். " வேலை எப்படி போகுது?" என்று விசாரித்தான்.
அவள் சற்று யோசித்தாள். 'ஹெச்-ஆர் அசிஸ்டென்ட்டா ஜாயின் பண்ணின என்னை பர்சனல் அசிஸ்டெண்ட்டா மாத்திட்டு வேலை பிடிச்சிருக்கான்னு வேற கேட்பியாடா பம்பரக்கட்ட மண்டையா?' - மனதிற்குள் நினைத்ததை வெளியே சொல்லாமல், "அமேஸிங்..." என்றாள் மலர்ந்த முகத்தோடு.
'ஓஹோ! அபிக்கிட்ட வேலை செய்றது அமேஸிங்கா! கொஞ்சம் வெயிட் பண்ணு.. அவனுக்கு நல்லா கீ கொடுத்து உன்ன செம்மையா கவனிக்க வைக்கிறேன்' என்று எண்ணிக் கொண்டு அவன் அபிமன்யுவின் அறைக்குள் நுழைய, 'பை-பை' என்று அவன் முதுகுக்கு டாடா காட்டிவிட்டு அவள் தன்னுடைய கேபினுக்குள் நுழைந்தாள்.