விக்கித்து நின்றிருந்த ஷ்ரதாவின் கையைத் தட்டிய வீசி, "என்ன கனவு கண்டுக்கிட்டு இருக்கியா?.. வா உள்ளப்போகலாம்!" என்றான்.
அவளுக்கு அப்படியே வெளியே ஓடிவிடலாம் போல இருந்தது. கால்கள் இரண்டும் வேர் முளைத்து பூமியினுள் புதைந்து போனவள் போலவே நகர முடியாமல் நகர விரும்பாமல் நின்றாள்.
"என்னாச்சு? வா!" என்று வம்படியாக இழுத்துச் சென்றான் வீசி.
வித்யாவின் வீட்டில் பார்த்த அதே அடியாட்கள் இன்று 'ஒட்டிக்கோ கட்டிக்கோ' விளம்பர உடையில், நெற்றியில் திருநீறோடு நின்றிருந்தார்கள். வீசியைப் பார்த்ததும் தங்கள் சட்டைக்காலரை பிடித்து தலையசைத்து வணக்கம் வைத்தார்கள்.
'இல்லை.. இல்லை.. வேண்டாம்.. அப்படி எதுவுமே நடக்க வேண்டாம் முருகா' என்று வேண்டிக்கொண்டே வந்தாள் ஷ்ரதா.
'பாலைவனத்தில் நான் மணலை பார்க்கவேக்கூடாது முருகா' என்பது போல் தான் ஷ்ரதாவின் வேண்டுதலும் இருந்தது.
காளியம்மன் சன்னதியில் இவர்களைப் பார்த்ததும், பேசிக்கொண்டிருந்த தர்மகர்த்தாவை வெயிட்டிங் லிஸ்டில் போட்டுவிட்டு வீசியின் அருகில் வந்தார் ராஜ மாணிக்கம். அன்றைக்குப் பார்த்ததற்கு இன்று மனிதர் ரொம்பவே மெலிந்து காணப்பட்டார். கழுத்தில் கொழுத்தப்பூனையும் மிஸ்ஸிங். ஆனால், நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் சௌக்கியமாக இருந்தது.
ஷ்ரதாவை தலையசைப்பிலேயே வரவேற்ற ராஜ மாணிக்கம் "கமலா, மாப்பிள்ளை வீட்டுல வந்தாச்சுப் பாரு" என்றார்.
கணவரின் கடுத்த குரலைக் கேட்டதும் கமலா குத்துவிளக்கிற்கு பூ சுற்றிக் கொண்டிருந்தவர் வள்ளுவனின் வாசுகி போல் வேலையை அப்படியே விட்டுவிட்டு ஓடிவந்தார். "வித்யா பியூட்டி பார்லர்ல இருந்து புறப்பட்டுட்டாளாங்க.. அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தான் கீரைத்துரை செக்போஸ்ட்டை தாண்டிட்டதா சொன்னா.." என்றார்.
இத்தனைக்கும் ராஜ மாணிக்கம் கண்ணைக்கூட அசைக்கவில்லை. ஆனால், கேட்காத கேள்விக்கு மனைவி பதிலளித்துக் கொண்டிருந்தார். அவரும் இதற்காகத்தான் உன்னை அழைத்தேன் என்பது போலவே செவிமடுத்துக் கொண்டிருந்தார்.
வீசி இயல்பாக, "எதுவும் பிரச்சினையில்லையே" என்றான்.
"இல்ல வீசி, கோவிலைச் சுத்தி ஃபுல்லா நம்ம ஆளுங்க தான்.. நமக்கு தெரியாம யாரும் உள்ளேயும் வரமுடியாது.. வெளியேயும் போகமுடியாது.. கிட்டத்தட்ட ஜெயில் மாதிரி தான்" என்று சிரித்தார், சிறந்த நகைச்சுவை ஒன்றை தான் சொல்லிவிட்டதை போல.
ஷ்ரதா அவர்கள் பேசுவதை கவனியாமல் கமலா வந்த திசையையே வெறித்துக் கொண்டிருந்தாள். அங்கு முகூர்த்த மனையும் ஹோம குண்டமும் அமைத்திருந்தார்கள். ஐயர் தீனிப்போட்டு அக்னி வளர்த்துக்கொண்டிருந்தார்.
ஜமுக்காளம் எல்லாம் விரிக்கப்பட்டு, வரிசையாக தட்டுகளில் பொன் மஞ்சள் தாலி, மாலை, பூச்செண்டு, பழ வகைகள் என்று அடுக்கி வைத்திருந்தார்கள். பார்த்ததும் வயிறு கலங்கி ஒரு அடைமழைக்கு துவக்கமாக ஷ்ரதாவின் உதடுகள் துடித்தது.
திருமணத்திற்கு சாட்சியாக ராஜ மாணிக்கத்தின் குடும்ப வகையிலிருந்து வேறு ஐம்பது பேர் எண்ணிக்கையில் கூடியிருந்தார்கள்.
துக்கம் நெஞ்சை அடைத்து மூச்சிவிட சிரமப்பட்டவள் மனதிற்குள்ளேயே கசறினாள். 'நேற்று இரவு தானே சொன்னார்; ரகசிய கல்யாணம் பண்ணிக்கக் கூட தயங்க மாட்டேன் என்று.. அதுக்குள்ளேயும் இப்படி ஒரு திட்டமா?.. தடபுடல் ஏற்பாடா?.. எப்போதும் என் கஷ்டங்களை முறையிட இங்கு வருவேன்.. ஆனால், இங்கேயே எனக்கு ஒரு கஷ்டம் நிகழும் போது?.. முருகா உன் பனிரெண்டு கண்களும் இந்தக்கொடுமைகளை பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றனவா?.. அடியே ஷ்ரதா! அவர் திடுதிப்பென்று கோவிலுக்கு என்றால் உனக்கெங்கே போனது புத்தி?.. அவர் டைனிங் டேபிளில் நல்ல நேரம் தாண்டுவதற்குள்ளே என்றாரே அப்போதே உனக்குள் எச்சரிக்கை மணி ஒலித்திருக்க வேண்டாம்?.. மக்கு! மக்கு! எல்லாம் முடிந்தது.. போ! போய் ஏதாவது நல்ல தூணாகப் பார்த்து முட்டிக்கொள்..' அவள் துச்சாதனன் கையில் துகில் சிக்கிய திரௌபதியைப் போல சுற்றி யாராவது காப்பாற்ற வரமாட்டார்களா என்று பார்த்தாள்.
சிங்கத்தின் வயிற்றுக்குள் போன இரையை யார் மீட்கக்கூடும்? இல்லை முடியும்?
ராஜ மாணிக்கம் திருமண ஏற்பாடுகளைப் பற்றி பேசியவர், "நீ வேணும்னா போய் சாமி கும்பிட்டு வா வீசி" என்றார்.
அவனும், "சரிங்க மாணிக்ஜி" என்று சுற்றுப் பிரகாரத்தை நோக்கி நடந்தான். இன்னும் அலங்கார வேலைகள் எல்லாம் முழுமையாக நிறைவடைந்திராதபடியால் ஆங்காங்கு ஆட்கள் ஜோடிப்பதில் மும்முரமாக இருந்தார்கள்.
முதலில் போய் விநாயகரை தரிசித்தான் வீசி. கண்மூடி கும்பிட்டுக் கொண்டிருந்தவனை உலக அதிசயங்களில் ஒன்றை காண்பவள் போலவே பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா. அர்ச்சகர் விபூதி தந்தபோது கூட மறுக்காமல் பூசிக்கொண்டான் வீசி.
அவளுள்ளான குரல், 'இதுவே கடைசி வாய்ப்பு.. தவறவிட்டுவிடாதே ஷ்ரதா' என்று உசுப்பிவிட்டது.
அவன் அந்த பிள்ளையார் கூடாரத்தை சுற்றத் துவங்கியதும் அவனுக்குப் பின்னாடியே சென்றவள், கைகளை கூப்பியபடியே அவனுக்கு கேட்கும்படியாகவே முணுமுணுத்துக்கொண்டு வந்தாள்.
"நேத்து அத்தையும் மாமாவும் அவ்வளவு சொல்லியும், இன்னைக்கு நீங்க இப்படி செய்றது சரியில்லைங்க.. சட்டப்படி இது தப்புங்க.."
அவன் நிற்காமல் சென்று கொண்டிருந்தான். அவள் கூறியதை காதில் வாங்கியது போலவே தெரியவில்லை.
"நீங்க நம்புற அந்த ராஜ மாணிக்கம் அவ்வளவு நல்லவர் கிடையாதுங்க.. அவர்மேல ஏகப்பட்ட கொலைகேஸு இருக்கு; அப்பா சொல்லியிருக்காரு"
"ம்ம், புத்தர் பொண்ணு சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும்.. ஒரு விஷயம் ஞாபகம் வச்சிக்கோ ஷ்ரதா.. இவங்களைப் பத்தின உன் குற்றச்சாட்டு எந்தளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை உன் அப்பாவும் ஒரு அக்மார்க் அயோக்கியங்கிறது.. உன் அப்பா பண்ற அடிதடி தொழிலையே அவருக்குப் போட்டியா இன்னொருத்தரும் பண்ணினா அவரு கெட்டவரு, உன் அப்பா ரொம்ப நல்லவரா? பிரமாதம்!"
கோபமாய் கேட்டுக்கொண்டே பிள்ளையார் கூடாரத்தை சுற்றி முடித்தவன் அடுத்து சிவன் சன்னதிக்குச் சென்றான்.
"என்மேல என்ன தப்புங்க? நான் என்ன தப்பு செஞ்சேன்?.. எனக்கு ஏன் இப்படி ஒரு நரக வேதனையைக் கொடுக்குறீங்க?.."
"பிரசாதம் வாங்கிக்கோங்கோ!" என்ற அர்ச்சகர் வில்வஇலை தீர்த்தத்தை அவன் உள்ளங்கையில் விட, பாதி பருகி மீதியை தலையில் தடவியவன், அடுத்து தட்சிணா மூர்த்தி, நாகம்மை, துர்கையம்மன் என்று வரிசையாக கும்பிடு போட்டான். அவள் தன் கேள்விக்கான பதில்வேண்டி அவனை நெருங்கி அடிவைத்துக் கொண்டிருந்தாள்.
துர்கை சன்னதி அர்ச்சகர் குங்குமம் கொடுத்தபோது வாங்கிவிட்டு திரும்பியவனிடம் தன் தாலியைக்காட்டி குங்குமம் வைக்கச்சொன்னாள் ஷ்ரதா.
அவன் குறுநகையிலும் கன்னத்தில் குழி விழுந்தது. "என்ன? என்னை இந்த தாலி சென்டிமெண்ட்ல லாக் பண்ணலாம்னு பார்க்குறியா?.."
ஷ்ரதா தயக்கமேயின்றி அந்தப் பொதுவெளியில் அவன் காலில் விழுந்தாள். வீசி அக்கம் பக்கம் பார்த்து, "ஹே! என்ன பண்ற?.. எழுந்திரு!" என்றான்.
அவள் கண்ணீர் கப்பிய கண்களுடன் மனதிலிருந்து பேசினாள். "நான் என்ன தப்பு செஞ்சேன் தெரியலைங்க.. நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சுப் பார்க்குறேன்.. ஆனா, எதுவுமே எனக்கு ஞாபகம் வர மாட்டேங்குது.." என்று மூக்குறிஞ்சினாள்.
"ஷ்ரதா, போற வர்றவங்க எல்லாம் பார்க்கிறாங்க மரியாதையா எழுந்திரு.."
"இல்லைங்க, அத்தையும் மாமாவும் உங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்காங்க.. என்னையும் என் குடும்பத்தையும் பழிவாங்கறதா நினைச்சி நீங்க அவங்க நம்பிக்கையை இழக்க வேண்டாம் ப்ளீஸ்.."
"ஷ்ரதா இடியட்! எழுந்திரிச்சித்தொலை.. எல்லாம் ஒரு மார்க்கமா பார்க்குறாங்க.."
"என்னை ஏன் இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கிறீங்க?.. என்னால முடியலைங்க.."
"ஷ்ரதா, நீயென்ன அந்த ஆண்டவனே வந்தாலும் இப்போ இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது.." என்று ஆணவமாய் சொல்லிவிட்டு அவ்விடம்விட்டு நகர்ந்தான் வீசி.
அப்போது அந்தக் கணத்தில் தான் கடவுளின் ஈகோ தூண்டப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். வீசிக்கு எதிராய் ஒரு சம்பவத்தை நிகழ்த்தி முடித்திருந்தார்.
ஷ்ரதா அவன் உறுதியில் முற்றிலுமாய் உடைந்துபோனாள். இனியும் அவனிடம் கெஞ்சுவது வீண் என்று புரிந்து கொண்டாள்.
முருகன் சன்னதி வந்ததும் அவள் கூடுதலாக கும்பிடு போடுவாள், கவசம் முணுமுணுப்பாள் என்று வீசி நினைத்துக் கொண்டிருக்க, முதல்முறை முருகன் சன்னதி வந்து விக்கிரகம் பார்க்காமல் கீழே தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.
அவனுக்கு அவளது செய்கை தன்னை பலவீனப்படுத்துவது போல் இருந்தது. வித்யாவை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற தனது முடிவிலிருந்து தன்னை இவள் பின்வாங்க வைத்துவிடுவாளோ என்று கூட பயந்தான்.
அவன் மனசாட்சி அவளைவிடவும் மோசமாக புலம்பியது. 'முன்பு சரியென்று சொல்லிவிட்டு இப்போது முடியாது மாணிக்ஜி என்றால் சபையில் வைத்து அவரை மூக்கறுத்தது போலாகும்.. பின்னால் அவர் முகம் மட்டுமின்றி என் முகத்தையே என்னால் கண்ணாடியில் ஏறெடுத்துப் பார்க்க முடியாது.. ஜென்மத்துக்கும் குற்றவுணர்வில் வெந்து செத்துப்போவேன்.. இவளுடன் இனி தனித்திருப்பது பேராபத்து' என்று வேகமாய் ராஜ மாணிக்கத்தைத் தேடி நடந்தான்.
பின்னால் ஷ்ரதாவை யாரோ நிறுத்திப் பேசுவது கேட்டது. திரும்பிப் பார்த்தான். கமலா தான் அவளைப் பிடித்து வைத்திருந்தார். மானசீகமாய் அவருக்கு ஒரு கும்பிடுபோட்டுவிட்டு ராஜ மாணிக்கத்தை நோக்கிச் சென்றான் வீசி.
அங்கு அவர் தன் அடியாட்கள் அனைவரையும் சுற்றி நிற்கவைத்து எதையோ தீவிரமாக சொல்லிக் கொண்டிருந்தார். வார்த்தைகள் அனைத்தும் கொப்பறை இட்லிகளாய் சூடாய் வந்து விழுந்தது.
வீசிக்கு தூரத்தில் எதுவும் கேட்கவில்லை.
அருகில் நெருங்கிய போது ராஜ மாணிக்கத்தின் வலதுகை மகா என்கிற மதி காமராசு பேசுவது மட்டும் கணீரென ஒலித்தது. "இல்ல மாணிக்கண்ணே, பாப்பாவை அந்த விஜயாதித்தன் தான் கடத்தி இருப்பான்.. அந்த சிவனேஸ்வரன் விஜயாதித்தனோட தங்கச்சி மகன் தான்.. மாமனார் தூண்டுதல்ல மருமகன் கடத்தியிருக்கான்.."
ராஜ மாணிக்கம் மகாவின் பேச்சை மறுத்தார். "இல்ல மகா, பிளான் விஜயாதித்தனோடதா இருந்திருந்தா நமக்கு தகவல் வந்திருக்கும்.. இந்தப்பய சிவனேஸ்வரன் ஏதோ வேற ஒரு வன்மத்துல கடத்தியிருக்கான்" என்றார்.
இவ்விடத்தில், "ஆமா, மாணிக்ஜி சொல்றது தான் சரி" என்று குறுக்கிட்டான் வீசி.
வீசியின் குரலைக்கேட்டதும் மகாவின் கோபம் உச்சத்தைத் தொட்டது. "என்ன சரி?.. ஓஹோ இவரும் அந்த விஜயாதித்தனோட மருமகன் இல்ல.. அதான் மாமனாரை விட்டுக்கொடுக்காம பேசுறாரு.. யாருக்குத் தெரியும் பாப்பாவைக் கடத்த இவரேக்கூட ரூட் போட்டுக் கொடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல" என்று எகிறினான்.
வீசி கண்கள் சிவப்பாகி பதிலுரைக்கும் முன், ராஜ மாணிக்கம் மகாவின் செவிள் பிய்யும் அளவிற்கு ஒரு அறைவிட்டிருந்தார். "யாருக்கிட்ட குரலை உசத்திப் பேசுற மகா?.. அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை.. மொத அவர்கிட்ட மன்னிப்புக்கேளு" என்றார்.
வீசி கோபத்துடன், "வேண்டாம் மாணிக்ஜி" என்று கை உயர்த்தினான்.
மகா கன்னத்தைத் தடவிக்கொண்டு இன்னும் வீசியை முறைத்தபடியே நின்றான். அவனுக்கு வீசியை முன்பிருந்தே பிடிக்கவில்லை. அதுவும் ராஜ மாணிக்கம் வீசியை மாப்பிள்ளை என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட ஆரம்பித்ததிலிருந்து சுத்தமாக பிடிக்கவில்லை.
"இவ்வளவு நாள் வேலை பார்த்த நம்மளை விட மாணிக்கண்ணே அவனை பெரிய ஆளா உசத்தி பேசுறது பிடிக்கலைடா.. ஒரே சமயத்துல பத்துபேரை அடிச்சிட்டா அவன் பெரிய இவனாடா?.." என்று எத்தனையோ தடவை சிந்தாமணி மதுக்கடையில் குடித்துவிட்டு புலம்பி இருக்கிறான். ஆனால், போதையில் மட்டுமே அவ்வார்த்தைகள் வீரியத்தோடு வெளிவரும். போதை தெளிந்தபின், "டேய்! மாணிக்கண்ணே சொல்றதுக்கு எவனாவது எதிர்ப்பு சொன்னீங்க குடலை உருவி மாலைப் போட்டுக்குவேன்" என்று படம் காட்டுவான்.
பின்னொரு சமயம், "பதினஞ்சு வயசுலயிருந்தே கூட இருக்கேன்டா நானு.. இப்போ ஏழு வருசமாத்தான்டா இவன்.. பதினஞ்சு பெருசா? ஏழு பெருசா?" என்று ரகளை செய்வான். எல்லாம் வயிற்றில் கிளம்பிய வாந்தியுடனே வெளியேவந்து விழுந்துவிடும் அவ்வளவு தான்.
சிலநேரம் அடங்கி நடப்பவனை உடன் இருப்பவர்கள் வேறு, "என்ன மகாண்ணே! நீ தான் அடுத்த மாணிக்கண்ணேன்னு நினைச்சோம்.. அண்ணே புதுசா யாரையோ சொல்றாரு.." என்று ஆழ்ந்த அனுதாபங்களை சொல்லி அவன் அடிமன ஆசைகளை கிளறிவிட்டுப்போவார்கள்.
இடையில் வீசி ஷ்ரதாவை திருமணம் செய்துகொண்டபோது விஜயாதித்தனை விட மகாவே ரொம்ப சந்தோசப்பட்டான். ஏனென்றால் விஜயாதித்தனை போலவே இனி வீசியை மாணிக்கம் வெறுப்பார் என்று நினைத்தான்.
ஆனால், அவர்கள் இருவரின் ஆசையிலும் மண்ணள்ளிப்போடும் வகையில், இப்போது தன் மகளை இரண்டாவது கல்யாணம் செய்து கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டார் ராஜ மாணிக்கம்.
அந்தக் கோபத்தில் ஒரு பகுதியை தான் இப்போது வீசிக்கு எதிரான பேச்சில் விட்டிருந்தான் மகா.
ராஜ மாணிக்கம் சுற்றி நின்றிருந்த தன் ஆட்களைப் பார்த்து அனல் பறக்கக் கட்டளையிட்டார். "நான் சொன்னது எல்லாம் புரிஞ்சது இல்ல.. இன்னும் இருபத்து நாலு மணி நேரத்துல என் பொண்ணு என் வீட்டுல இருக்கணும்!.. இல்ல?..ம்ம்ம்" என்று உறுமி எச்சரித்தார்.
அவர்கள் வேகமாக கலைந்து சென்றார்கள். வீசி, ராஜ மாணிக்கம் சொல்ல சொல்ல கேட்காமல் ஷ்ரதாவை மறந்துவிட்டு அடியாட்களுடனே வித்யாவை தேடிச்சென்றான்.
**************
துர்கையம்மன் சன்னதியில் ஷ்ரதா வீசியின் காலில் விழுவதைப் பார்த்தபோதே, 'இந்தப்பொண்ணு என்ன காலுலயெல்லாம் விழுது!' என்று கமலா முதலில் பதறிப்போனார்.
பின், வீசி முகத்தில் கருணை அறவேயின்றி பேசிக்கொண்டிருப்பதை பார்த்ததும், பிரச்சினை எதுவென்று அவரே ஊகித்துக்கொண்டார்.
அவன் நகர்ந்துபோனதும் அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தவளின் தோளில் கை வைத்தவர், "ஷ்ரதா" என்று அழைக்க, அவள் அவர் முகத்தை நிமிர்ந்து பார்க்க விரும்பாதவள் போல் கீழேயே பார்த்துக்கொண்டிருந்தாள். விழிநீர் வீசிக்காக அதுபாட்டுக்க அர்ப்பணமாகிக் கொண்டிருந்தது.
அவர் அவள் நாடியில் கைவைத்து முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தார். அவள் பரிதாபமாக அவரிடம் கேட்டாள். "உங்கப்பொண்ணு என் நிலைமைல இருந்தா நீங்க இப்போ என்னம்மா செய்வீங்க?" என்று.
அவர் பதறி, "ஷ்ரதா, நீயும் என் பொண்ணு மாதிரி தாம்மா" என்றார்.
"உங்கக் கணவரை இன்னொரு பொண்ணுக்கு உங்களால விட்டுக் கொடுக்க முடியுமாம்மா?" என்றவள் கேட்டபோது அவர் பதில் பேச முடியாமல் தலை குனிந்தார்.
"இன்னைக்கு இந்தக் கல்யாணம் மட்டும் நடந்தது என்னை நீங்க உயிரோடவே பார்க்க முடியாதும்மா.." என்றுவிட்டு துப்பட்டாவால் வாயை மூடியபடியே நகரப்போனவளை, "நானும் என் வீட்டுக்காரரும் அறுபதாவது கல்யாணம் பண்ணிக்கிறதுல உனக்கு விருப்பமில்லையா ஷ்ரதா?" என்றவர் கூறிய கடைசி வார்த்தை பிடித்து நிறுத்தியது.
காதல் கணம் கூடும்…
கதையின் போக்கில் புதுப்புது பாத்திரங்களாக அறிமுகப்படுத்திக்கொண்டு வருகிறேன் ப்ரெண்ட்ஸ். அவர்களை செகண்டரி மெமரியில் அல்லாமல் பிரைமரி மெமரியிலேயே சேமித்துவைத்துக் கொள்ளுங்கள்.
1. அறிவழகன் (கான்ஸ்டபிள்)
2.தாரிணி சந்து (ஷ்ரதாவின் தோழி)
3.மாதேஷ் (வீசியின் கேரளா நண்பன்)
4.ஆதீஸ்வரன் (சிவனேஸ்வரனின் பாரீன் அண்ணன்)
5.மகா (ராஜமாணிக்கத்தின் வலதுகை)
கருத்துத்திரி,
எபி 22-க்கான டீஸர்