கற்காலத்தில் சிக்கிமுக்கி கற்களை உரசி தான் நம் மூதாதையர்கள் நெருப்பைக் கண்டுபிடித்தார்கள் என்று சமூக அறிவியல் பாடத்திட்டத்தில் நாம் படித்திருப்போம்.
அச்சம்பவத்திற்கு பிறகு, பெரிதாக கற்களைப் பற்றி யோசித்திராத நம்மவர்களை பரபரப்பாக அதைப்பற்றி பேச வைத்த மகான், மதுரையின் பிரபல ஊழல் மன்னன் கேஆர்பி தான். அதுவும் சாதாரண கற்களைப் பற்றி அல்ல. வழவழப்பான கிரானைட் கற்களைப் பற்றி.
நீங்கள் படையப்பா படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் வரும் ஒரு பாடலில் ரஜினி 'வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா.. தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா' என்று மலையை மடுவாக்கி, ஒரே பாடலில் ஓஹோவென்று வருவாரே! அது இந்த கிரானைட் மலையின் புண்ணியத்தால் தான்.
மார்பிளைப் போல கிரானைட்டும் இயற்கையாக உருவாவது தான். ஆனால், மார்பிளைக் காட்டிலும் கூடுதல் ஆழத்திலும் அழுத்தத்திலும் உருவாவதால், மார்பிளுடன் ஒப்பிடும்போது எளிதில் துளை போடமுடியாது கிரானைட்டில்.
மேலும், இயற்கை கல், குளிர்ச்சியானது, பல வண்ணங்களில் கிடைக்கிறது, மிகுந்த பளபள தன்மையும், வழவழ தன்மையும் உடையது என்பது போன்ற பல ப்ளஸ் பாயிண்டுகள் இருப்பதால் மார்க்கெட்டில் இதன் மவுசு தனி.
சரி, கேஆர்பிக்கும் கிரானைட்டுக்கும் என்ன சம்பந்தம்? இல்லை கேஆர்பிக்கும் இந்தக்கதைக்கும் என்ன சம்பந்தம்? முதலில் இந்த கேஆர்பி யார்? என்று நமக்குள் சில கேள்விகள் எழலாம்.
அவரைப்பற்றி தெரிந்து கொள்ள நாம் ஒரு முப்பத்திரண்டு ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூறுகளில் பொதுப்பணித்துறையில் ஒரு சிறிய காண்டிராக்டராக இருந்து, வைகை ஆற்றை தூறுவாறும் வேலையில் எல்லை மீறி மோசடி செய்து, 'காண்டிராக்டர்' என்ற உரிமமே ரத்து செய்யப்பட்ட யோக்கியவான் தான் இந்த கேஆர்பி.
தன் மாமா ஒருவரின் கிரானைட் தொழிற்சாலையை கைக்குள் போட்டு, ஆட்கள் பத்துபேரையும் சேர்த்துக்கொண்டு அடிக்கடி சுற்று வட்டாரத்தில் இருக்கும் கத்தோலிக்க கல்லறைகளின் விலையுயர்ந்த கிரானைட்டுகளை எல்லாம் திருடிக்கொண்டு வரச்சொல்லி, மறுபாலீஷ் செய்து புதிதுபோல் விற்று செம லாபம் பார்த்துக்கொண்டிருந்தார் இந்த கனவான்.
களவாடலும் கலவி போல் தான். முதல்முறை பயமாக இருக்கும். குற்றவுணர்வு இருக்கும். மாட்டிக்கொள்வோமோ என்று பல சூதானம் இருக்கும். ஆனால், ஒருமுறை சுகம் கண்டுவிட்டால் அடிக்கடி தப்பு செய்ய மனம் இஷ்டப்படும்.
சிறுவயதிலேயே பொய்யும் புனைசுருட்டும் கவசகுண்டலமாய் வாய்க்கப் பெற்றிருந்த கேஆர்பியிடம் நாம் மனசாட்சியை எதிர்பார்த்தால் முட்டாள்களே. நாட்கள் செல்ல செல்ல அவரின் அட்டூழியம் அதிகமானதே தவிர குறையவில்லை. சாம்பல் கிரானைட்டை பாலீஷ் போடும் போது சிவப்பு நிறம் கலந்து, சிவப்பு கிரானைட் என்று சொல்லி அதிக விலைக்கு தலையில் கட்டுவது, கருப்பு ஆயில் பூசி கிரானைட்டுகள் ஆழ்ந்த கறுப்பில் பளபளவென்று இருப்பதாகக் காட்டி ஏமாற்றுவது, பாலீஷ் போடும்போது விரிசல் விழும் கற்களை நேக்காக மெழுகு பூசி விற்பது என்று ராஜாவாக வாழ்ந்துக் கொண்டிருந்தார்.
எதிர்த்து கேள்வி எழுப்புபவர்களை எல்லாம் தாட்சண்யமின்றி தன் அடியாட்கள் மூலம் எமனிடம் அனுப்பிக் கொண்டிருந்தார்.
அவரது அடியாட்களில் இருவர் எப்போதும் அவரது அண்டைக்குள்ளேயே இருந்தார்கள். வலதுகை இடதுகை ஒத்தாசையைக் கூட தலையில் ஏற்று செய்ய தயாராக இருந்தார்கள். அவர்களே பின்னாளில் எதிரெதிர் துருவங்களாக மாறிப்போன விஜயாதித்தனும் ராஜ மாணிக்கமும்.
கேஆர்பி பால் என்றால் நெய்யாக நின்றார்கள் சேவகர்கள் இருவரும்.
அவர்களின் ஒத்துழைப்பில் தான் தனது அழிச்சாட்டியங்களை எல்லாம் மாவட்டம் முழுவதும் கிளைபரப்பி விரித்து செய்ய ஆரம்பித்தார் கேஆர்பி.
இதன்படி, குவாரி வெட்டி கிரானைட் எடுப்பதற்காக படையப்பா பட சித்தப்பாவைப் போல் பாமர விவசாயிகளுடைய நிலங்களை எல்லாம் ஏமாற்றி வாங்க முயற்சிப்பது, தரமான கிரானைட் உள்ள நிலத்தை யாரேனும் தர மறுத்தால் சிங்கம் பட மயில்வாகனத்தைப்போல மிரட்டியோ, தாக்கியோ பறிப்பது என்று செயல்பட்டு வந்தார்.
இதன் நீட்சியாக அரசு அதிகாரிகள் சிலரையும் கையில் போட்டுக்கொண்டு, பொது நிலங்கள், கண்மாய்கள், குளங்கள், மலைகள் என்று அரசிடமிருந்து குத்தகையாக வாங்கி கொள்ளையடித்தார்.
இந்த வழியில் மக்களுக்குச் சொந்தமான எழுபது கண்மாய்கள், ஐம்பது ஊருணிகள், எண்ணற்ற சாலைகள், புறம்போக்கு நிலங்கள் என பலவும் உருமாறியிருந்தது.
கேஆர்பிக்கு உதவியாக கிரானைட் கொள்ளைக்கு மதுரை மாவட்டத்தைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட கூலிப்படை தலைவர்கள் இருந்தாலும் விஜயாதித்தனும், ராஜ மாணிக்கமும் தான் மிக நெருக்கமானவர்களாக அறியப்பட்டார்கள்.
பின்னால் ஒரு விதைக்குள் இரண்டு செடிகள் முளைக்காது என்பது போல் முன்னாள் நண்பர்களிடையே விரிசல் உண்டாக ஆரம்பித்தது.
நம் இருவரில் யார் கேஆர்பி அண்ணனுக்கு நெருக்கம் என்று அடிக்கடி சர்ச்சை எழுந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சண்டை பெரிதாக இருவருமே பிரிந்தார்கள்.
இன்றுவரை இருவருமே வேலை பார்ப்பதென்னவோ கேஆர்பிக்கு தான். ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் பகை பாராட்டிக்கொண்டு கிடக்கிறார்கள்.
இவ்விஷயத்தில் கேஆர்பி வெளியே காட்டிக்கொள்ளவில்லையானாலும் உள்ளுக்குள் ராஜ மாணிக்கமும் விஜயாதித்தனும் அடித்துக்கொள்வதை பார்த்து ரசித்தார்.
சண்டைக்கென்றே வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் தினவு கொண்டால் உரிமையாளனுக்கு கொண்டாட்டம் தானே!
இன்னொரு சமாச்சாரம், கேஆர்பி அடிக்கடி அரசியல்வாதிகளுக்கு மஹாலெட்சுமியாகவும், திருப்பதி வெங்கடாஜலபதியாகவும் அவதாரம் எடுப்பதால் நெருங்கிய நட்பு உண்டு அவர்களுடன். அவர் மூலம் தான் மேலூர் தொகுதி எம்எல்ஏவின் பினாமி ஆனார் விஜயாதித்தன். ராஜ மாணிக்கம் மதுரை மேயரின் பினாமி ஆனது.
ஒருமுறை தேர்தல் சமயத்தின் போது, கேஆர்பி பணப்பட்டுவாடா வேலையை விஜயாதித்தனிடம் கொடுத்துவிட, ராஜ மாணிக்கம் கொந்தளித்துவிட்டார். அப்போது நிகழ்ந்த பெரும் கலவரத்தின்போது கேஆர்பி பல்குத்திக்கொண்டே, 'எத்தனை தலைகள் உருண்டன?' என்று கேட்டாரே பார்க்கலாம். இப்படி புண் ஆறப்போகும் சமயமெல்லாம் போர்க் வைத்து கிண்டிக்கொண்டு கிடந்தார் அந்த காட்பாதர்.
ஒரு ஒற்றுமை தற்போது மகாவும் ராஜ மாணிக்கத்தை காட்பாதராக வரித்துக்கொண்டு தான் வீசியுடன் குரோதம் பாராட்டிக்கொண்டிருக்கிறான். ஆம், வரலாறு திரும்புகிறது கதை தான்.
வித்யாவை தேடிச்செல்லும் பயணத்தில் வீசி தன்னருகில் உட்கார்ந்திருக்கிறான் என்பதற்காகவே தன் ஆங்காரத்தை எல்லாம் ஸ்டியரிங்கில் காண்பித்துக் கொண்டிருந்தான் மகா.
வீசி பின்னாலிருந்தவர்களிடம், "சிவா வித்யாவை எங்க வச்சி தூக்கினான்?" என்று விசாரித்தான்.
"கீரைத்துரை சுடுகாட்டுப்பாதையில ஆள் நடமாட்டம் இல்லாத இடமா பார்த்து தூக்கியிருக்கான்.." என்று நிர்மலமானப் பார்வையுடன் பதிலளித்தான் மகா.
"நம்மாளுங்க ஸ்கார்ப்பியோல எத்தனை பேர் இருந்தாங்க?"
மீண்டும் மகாவே "ரெண்டு பேர்" என்றான்.
வீசி அடுத்தக்கேள்வியை நேரடியாகவே மகாவைப் பார்த்துக் கேட்டான். "சிவா ரெண்டு பேரையுமே அடிச்சிட்டானா?"
"ரெண்டுபேருமே இப்போ சாகக்கிடக்காங்க.."
வீசி புருவம் உயர்த்தி யோசனையாக, "ஓஹ்" என்றான்.
"அவன்கிட்ட பிஸ்டல், மயக்க மருந்துன்னு எல்லாம் இருந்திருக்கு.. அவன் பிஎம்டபிள்யூல வில்லாபுரம் பக்கம் போனதா ஃபர்ஸ்ட் எனக்கு தான் நம்ம பசங்க போன் பண்ணி சொன்னாங்க.. உடனே அவனியாபுரம் செக்போஸ்ட்ல நுழையுற அத்தனை பிஎம்டபிள்யூவையும் செக் பண்ண சொல்லி ஆட்களை ஏற்பாடு பண்ணினேன்.. இப்போ அவனியாபுரம் செக்போஸ்ட்க்கு தான் நாமப்போறோம்.." என்றான் முன்னால் சென்ற ஸ்கார்பியோவை முந்தியபடியே.
"ம்ம்" என்றபடியே வெளியே பார்த்துக்கொண்டே வந்தான் வீசி.
அவனியாபுரம் செக்போஸ்ட்டை அடைந்த போது சந்தேகப்படும் வகையில் எந்த பிஎம்டபிள்யூவும் கிராஸ் பண்ணவில்லை என்றார்கள் அந்த கைக்கூலிகள்.
"எப்படியும் அவன் இந்தப்பாதை தானே வந்திருக்கணும்.. இங்கேயும் வரலைன்னா?.. அந்தப்பக்கமும் போக முடியாது, மெயின் பசாருக்கு போகும் ரோடு.. இந்த இடைப்பட்ட ஏரியாவுல அவன் எப்படிடா தப்பிச்சிருக்க முடியும்?" என்று வண்டியின் பேனட்டை போட்டுத் தட்டினான் மகா.
வீசி எந்தப் பதட்டமுமின்றி நிதானமாக சொன்னான். "இந்த வட்டாரத்தைத் தாண்டி அவன் எங்கேயும் போகலை.. ஸோ, நம்ம வேலை ஈஸி.."
'எப்படி இப்படி எல்லா விஷயங்களிலும் நேர்மறையாகவே சிந்திக்க முடிகிறது இவனால். அதான் மாணிக்கண்ணேனுக்கு இவனை ரொம்பப் பிடிச்சிருக்கு' மகா தலையாட்டிக்கொண்டான்.
தொடர்ந்து, "வில்லாபுரத்தையே நம்ம ஆளுங்களை அலச சொன்னா, இருபத்தினாலு மணிநேரத்துல வேலை சுலபம்.." என்றான் வீசி.
ஆளாளுக்கு போன் பேசத் தொடங்கினார்கள்.
ஒரு கூட்டம் இப்படி தன்னை வலைவீசி தேடிக்கொண்டிருக்க, மாப்பாளையத்துக்குள் உள்ள ஒரு தோப்புக்குள் தோளில் கோணிமூட்டையோடு நடந்துக் கொண்டிருந்தான் சிவனேஸ்வரன்.
ஆம், வித்யாவை கடத்திக்கொண்டு வந்த சிவனேஸ்வரன் வில்லாபுரம் செல்லும் சாலையில் திடீரென பாதை மாற்றி காரைத் திருப்பினான். சாலையிலிருந்து விவசாய நிலத்திற்குள் காரை இறக்கி குலுங்க குலுங்க ஓட்டிக்கொண்டுப் போனான்.
அப்படியே ஐந்து கிலோமீட்டர் சென்றவன், நாணல்கள் மறைக்கும்படியான இடத்தில் காரை நிறுத்தி, பின், அங்கிருந்து காருக்குள்ளேயே வித்யாவை ஒரு கோணிப்பைக்குள் போட்டு மூட்டையாகக் கட்டி தன் தோளில் தூக்கிச்சென்றான்.
வெகுநாட்களாகவே யாரும் பயன்படுத்திராத பகுதி என்பதால் காரை கண்டுபிடிப்பது அத்தனை லகுவில்லை. எல்லாம் திட்டம்போட்டு தான் செய்திருந்தான் சிவனேஸ்வரன்.
பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை அது அவர்களுக்குச் சொந்தமான நிலமாகத் தான் இருந்தது. அப்போதெல்லாம் ஆள் வைத்து விவசாயம் பார்த்துக் கொண்டிருந்தார் காசிராஜன். வார இறுதியில் மகன்களை அழைத்துக்கொண்டு வந்து தோட்டத்தை சுற்றிக் காண்பிப்பார். சிறுவனான சிவனேஸ்வரன் தன் அண்ணனுடன் சந்தோசமாக அங்குமிங்குமாக சுற்றித்திரிவான். பின்பு, துபாய்காரர் ஒருவர் பேக்டரி கட்டப்போவதாக நல்ல விலை கேட்டதால் விற்றுவிட்டார்.
இந்தப்பகுதியை கடக்கும் போதெல்லாம் சிவனேஸ்வரன் கேட்பான் அந்த துபாய்காரார் பேக்டரி கட்டவில்லையா அப்பா என்று. அவர் தன் மகன்களோடு வாடிப்பட்டி பக்கம் சென்றுவிட்டதாகவும், கோடிக்கணக்கில் பணம் புரண்டு கொண்டிருப்பவருக்கு இந்த நிலத்தை வாங்கியதுகூட ஞாபகம் இருக்காது என்றும் பதில் சொல்லுவார் காசிராஜன்.
அந்தத் தைரியத்தில் தான் தற்போது காரை இந்தப்பக்கம் உள்ளுக்குள் செலுத்தியிருந்தான் சிவனேஸ்வரன்.
இன்று காலையில் நண்பன் ஒருவனை சந்திக்க அனுப்பானடி வரை வந்திருந்தவன், எதேச்சையாக வித்யாவை பிரபல அனிதா அழகு நிலையத்திற்கு வெளியேப் பார்த்தான். அதுவும் ஆடம்பரமான பட்டுப்புடவையில்.
உடனே அவனுக்கு தலைமை செயலகத்தில் பல்ப் எரிந்தது. நடக்கப்போகும் விபரீதத்தை உள்ளுணர்வு உணர்த்தியது. உடனே கணக்குப்போட்டவன், தனது தோழியிடம் பேசிவிட்டு அலங்காரம் செய்து கொள்வதற்காக விரித்துவிட்ட கார்குழலுடன் பார்லரினுள் சென்ற வித்யாவைப் பார்த்து வில்லங்கமாக சிரித்தபடியே பைக்கை எண்பதில் பாய்ச்சி வீட்டிற்கு வந்தான்.
தனது உடைகளை ஒரு வாரத்திற்கு தேவையானபடி பேக் செய்தவன், தனது தந்தை அறைக்குள் சென்று அவர் மறைத்து வைத்திருந்த பிஸ்டலில் தோட்டாக்களை நிரப்பி தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் திணித்துக்கொண்டான். பிறகு, ஃபிரிட்ஜை திறந்து விரைவில் கெட்டுப்போகாத பதார்த்தங்களாகப் பார்த்து இன்னொரு பேக்கிற்குள் எடுத்துப்போட்டான்.
தன்னை மிரட்சியுடன் பார்த்த வேலைக்காரியிடம், 'நான் என் ப்ரெண்ட் கூட ஒரு வாரம் குற்றாலம் டூர் போயிருக்கேன்னு அம்மா அப்பாக்கிட்ட சொல்லு.. இந்தா என் போன், இங்க வீட்டுலயே மறந்து போட்டுட்டு போயிட்டேன்னு சொல்லு.. என்ன சொல்லுவியா?.." எனவும் அவளும் சரியென்று தலையாட்டினாள்.
வெளியே வந்தவன் பைக்கை விட்டு தனது அப்பாவின் பிஎம்டபிள்யூவை இயக்கினான். செல்லும் வழியில் தனக்குத் தேவையான இன்னபிற பொருட்களையும் வாங்கிக்கொண்டான். பிறகு, அனிதா அழகு நிலையத்திற்கு வெளியிலேயே அவளுக்காக காரில் காத்திருந்தான்.
தான் முதல்முறை இது போன்ற கடத்தல் தொழில்களில் எல்லாம் ஈடுபடுவதால் காட்டன் சட்டையில் ரொம்பவே வியர்த்து கசகசத்துப் போயிருந்தான் சிவனேஸ்வரன். பதட்டத்தில் விரல்களால் ஸ்டியரிங்கில் டைப்படித்தான்.
அவள் வெளியே வந்த போது மணப்பெண்ணாய் அலங்கரிக்கப்பட்டிருப்பதை பார்த்ததுமே அவன் சந்தேகம் ஊர்ஜிதமானது. காரில் அடியாட்கள் இருவர் இருப்பதை கவனித்தான். குள்ளமாய் தோழி ஒருத்தியும் உடன் இருந்தாள்.
காரில் அவர்களை பின் தொடர்ந்துகொண்டே வந்தவன், மின்தகன மையத்தை நெருங்கியதுமே அவர்கள் வண்டியை ஓவர்டேக் செய்து வண்டியை நிற்பாட்டி பிஸ்டலைக்காட்டி மிரட்டினான். இறங்கிய அடியாட்களை எங்கு அடிக்கிறோம் என்று புத்தியில பதியாத அளவிற்கு கன்னா பின்னாவென்று தாக்கினான்.
அவனுக்குள்ளான பதட்டமும் அவசரமும் எதையும் யோசிக்கவிடவில்லை அவனை.
இருவரையும் கணநேரத்தில் தரையில் சாய்த்துவிட்டு பிஸ்டலைக்காட்டியே வித்யாவை தனது காரில் ஏறச்சொன்னவன், என்ன நினைத்தானோ கீழே விழுந்து கிடந்தவர்களைப் பார்த்து, "என் பேரு சிவனேஸ்வரன்.. விஜயாதித்தன் என் தாய் மாமா.. நான் என் ஷ்ரதாவுக்காகத் தான் இவளை கடத்திட்டுப் போறேன்" என்று அவர்கள் தன்னை பேட்டி எடுப்பது போல் கூறிவிட்டு, மயக்க மருந்து தெளிக்கப்பட்ட கர்ஷீப்பை வித்யாவின் மூக்கில் வைத்து அழுத்தினான்.
உதவி கேட்டு கத்திக் கொண்டிருந்தவள், அவனை எதிர்க்க முடியாமல் மூர்ச்சையானாள். அவளை பின்சீட்டுக்குள் தள்ளியவன் காரை இயக்குவதில் முஸ்தீபானான்.
தோழியானவள், "காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கடத்திட்டுப்போறான்.. கடத்திட்டுப்போறான்" என்று கத்துவது காற்றின் வேகத்தில் பின் தொடர்வது போல் இருந்தது.
இப்படி திட்டமிட்டு கடத்திக்கொண்டு வந்திருந்தவன் நேரே அவளை கிணத்து வீட்டுக்கு தூக்கிச்சென்றான்.
அங்கு கோணியிலிருந்து அவளை வெளியேற்றி குடிசையின் நிலைக் கம்பில் சாய்த்து வைத்து, கைகளை பின்புறமாக சேர்த்து கட்டிவைத்தான்.
பிறகு, ஒரு மலையையே நகட்டி வைத்தாற்போல சோர்வாக ஓரத்து கயிற்றுக்கட்டிலில் போய் விழுந்துவிட்டான்.
மாலை ஆறு மணியளவில் டபடபவென சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தவனுக்கு அது மழையின் கும்மாளம் என புரியவும் ஆசுவாசம் உண்டானது. பிஸ்டலின் மேல் வைத்தக்கையை எடுத்தான்.
மயக்கத்தில் கிடந்தவள், "ஹ்ம்ம்..ஹ்ம்ம்" என்று முனகிக்கொண்டிருந்தாள். கூரையின் இடைவெளியில் இருந்து மழைத்துளி அவள்மேல் விழுந்து கொண்டிருந்ததால் சிவனேஸ்வரன் கணக்கிட்ட நேரத்திற்கு முன்னமே முழிப்பு தட்டியிருந்தது.
அப்போதுதான் அவளை நிதானமாக கவனித்தான் சிவனேஸ்வரன்.
கவர்ச்சியான முகம், நீளமான கண்கள், அடர்த்தியான கண்ணிமைகள், கோபக்காரி என்பதற்கேற்ப கூர்நாசி, அதிக சதைப்பற்றில்லா இதழ்கள், மாசுமருவில்லா கன்னங்கள் என்று இயற்கையின் கொடைபோக,
அழகுநிலையப்பெண்களின் கை வண்ணத்தில் அழகியாகத்தான் பரிமளித்தாள் வித்யா. அதிலும் மழைத்துளி அவள் மேல் தெரித்திருந்தது சற்றுமுன் தீட்டிய ஓவியம் போல் பேரழகியாகக் காட்டியது அவளை.
ஆனால், ஷ்ரதா பித்தனான சிவனேஸ்வரன் அவளை ஷ்ரதாவுடன் ஒப்பிட்டான். அப்படிப் பார்த்தால் வித்யா நிறமும் வனப்பும் கம்மி தான்.
'அவள் நிறம் எப்பேர்ப்பட்டது. பன்னீர் ரோஜாவை போலல்லவா முக அசைவுகள் இருக்கும்!' வில்லன் ஷ்ரதாவை மனக்கண்ணில் கொண்டுவந்தான்.
வித்யா கண்களை திறக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.
சிவனேஸ்வரன் அவளை பார்ப்பதை தவிர்த்தான். சிறிதுநேரம் சாளரத்தின் வழியே மழையையே வெறித்துக் கொண்டிருந்தான்.
முயன்று கண்களைத் திறந்த வித்யா, கயிற்றுக்கட்டிலில் கால் மேல் கால்போட்டுப் படுத்திருந்த சிவனேஸ்வரனைப் பார்த்ததும், ஆத்திரத்தில் கத்தினாள். கெட்ட கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தாள். அவனிடம் எந்தவித எதிர்வினையும் இல்லை.
அவள் கைக்கட்டை அவிழ்க்க முயன்ற போது சுத்தமாக முடியவில்லை.
****************
'என்ன உங்களுக்கு அறுபதாம் கல்யாணமா?!' உச்சபட்ச அதிர்ச்சியிலிருந்தாள் ஷ்ரதா. இந்த திருப்பத்தை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நிச்சயம் இது கனவு தான் என்றே முடிவுகட்டிவிட்டாள். தூரத்தில் கேட்ட கோவில் மணியோசைகூட அவள் நம்பிக்கையைப் பெறவில்லை.
"ம்ம், ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆனாரு.. இப்போ இதெல்லாம் தேவையான்னு கேட்டேன்.. கண்டிப்பா நடந்தே ஆகணும்னு சொல்லிட்டாரு.."
"ஹாஸ்பிடல்ல இருந்தா? என்னம்மா சொல்றீங்க?"
"அப்போ அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது உனக்குத் தெரியாதா ஷ்ரதா?.. வீசித்தம்பி உன்கிட்ட சொல்லலையா?.."
"அய்யோ! சொல்லலையேம்மா.."
"அப்போ ரொம்ப பயமாகிடுச்சு அவருக்கு.. தம்பிக்கிட்ட என் பொண்ணை நீ தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு மரணப்படுக்கையில கிடந்தவர் மாதிரி கேட்டாரு ஷ்ரதா.. தம்பியும் ஒத்துக்கிட்டாரு.. திடீருன்னு நேத்து சாயங்காலம் இன்னைக்கு எங்க கல்யாணத்தோடயே அவங்க நிச்சயத்தையும் வச்சிக்கலாம்னு சொன்னப்போ, தம்பியும் மறுத்துப் பேசல.." எனும்போதே, ராஜ மாணிக்கம் பதட்டமாக வந்து, "கமலா, வித்யாவை விஜயாதித்தனோட தங்கச்சிப் பையன் கடத்திட்டானாம்.. மகாவும் வீசியும் தேடிப்போயிருக்காங்க.." என்றார்.
கமலா பதறிப்போனவராக, "என்னங்க சொல்றீங்க?" என்றார்.
உடன், "ஷ்ரதாவும் என்ன அன்க்கிள் சொல்றீங்க?" என்றாள்.
"இப்போதான் பசங்க போன் பண்ணினாங்க கமலா.. சொந்தக்காரங்களை எல்லாம் கிளம்பச் சொல்லு.. விசேஷத்தை இன்னொரு நாள் வச்சிக்கலாம்னு நான் சொல்லிட்டதா சொல்லு.." எனவும் அவரும் கண்களை துடைத்தபடியே தங்கள் உறவினர்களை நோக்கிச் சென்றார்.
அவர் சென்றதும் ஷ்ரதா ராஜ மாணிக்கத்திடம் நம்பிக்கையின்றி சொன்னாள், "இல்ல, நீங்க பொய் சொல்றீங்க.. ஷிவா அத்தான் அப்படியெல்லாம் பண்ணக்கூடியவர் கிடையாது" என்று.
அவருக்கு அது கடுப்பை வரவழைத்ததோ என்னவோ ஆவேசமாகக் கத்தினார். "அவன் தான் கடத்தியிருக்கான்.. கடத்திட்டு என் பேரு சிவனேஸ்வரன்.. என் ஷ்ரதாவுக்காக தான் இவளை கடத்திட்டுப் போறேன்னு வாக்குமூலம் கொடுத்திருக்கான்.. உன்னால தான் என் பொண்ணு காணாமப்போனா.." என்றார்.
"என்னாலயா?.. ம்ம் இருக்கலாம்.. என் வயித்தெரிச்சலும் கண்ணீரும் சும்மா விடுமா உங்கப்பொண்ணை?.. என்னப்பார்க்குறீங்க? ஷிவா அத்தான் பண்ணினது தப்புன்னா, நீங்க பண்ண இருந்தது மகா தப்பு.. ஞாபகம் இருக்கா உங்களுக்கு?.. நீங்க என்னை அன்னைக்கு உங்கப் பொண்ணு மாதிரின்னு சொன்னீங்க.. உங்கப்பொண்ணு வாழ்க்கையை நீங்களே சீரழிப்பீங்களா?" வார்த்தைகளின் முடிவில் ஒரு சொட்டு கண்ணிலிருந்து இறங்கிவிட்டது.
ராஜ மாணிக்கம் சபையில் குழந்தையை அழ வைத்தவர் போல அசௌகரியமாக உணர்ந்தார்.
"அவருக்கு உங்க மேல நன்றிக்கடன் அதிகம். நீங்க அதை வச்சி அவரை மிரட்டுறது சரியில்ல.."
அவளது பேச்சை அவரால் உதாசீனப்படுத்திவிட்டு செல்லமுடியவில்லை. குரலை தாழ்த்தி சொன்னார். "என் பொண்ணு ஆசைப்பட்டுட்டாளேம்மா.."
"உங்கப்பொண்ணு ஆசைப்பட்டது தோட்டத்துப் பூவை இல்ல; என் வீட்டு செடியில நான் எனக்கே எனக்குன்னு பொத்திப் பொத்தி பாதுகாத்து வளர்க்கிற ரோஜா மொட்டை.. ஒரு அப்பாவா நீங்க தானே அவங்களுக்கு நல்லது கெட்டது எடுத்து சொல்லனும்.. எனக்கென்னமோ இது உங்கப் பொண்ணு ஆசையா மட்டும் படலை.." என்று ஊடுருவும் பார்வையோடு சொன்னாள்.
உண்மைதான் என்பது போல் ஆமோதிப்பாக மௌனமாக நின்றார் ராஜமாணிக்கம்.
"கோவிலுக்குள்ள சாமியை தவிர்த்து வேற யாரைப் பார்த்தும் கையெடுத்துக் கும்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க.. நான் உங்களை நான் கும்பிடுற சாமியா நினைச்சி கும்பிட்டு கேட்கிறேன்.. அவரை எனக்கு மட்டுமே சொந்தமா என்கிட்ட கொடுத்திருங்க.." என்று தன் துப்பட்டாவை விரித்து யாசகம் கேட்பது போல் கேட்டாள்.
ராஜ மாணிக்கம் தொண்டையில் முள் சிக்கியவரைப் போல எதுவும் பேசா முடியாமல் அவ்விடம் விட்டு நகர்ந்து சென்றார்.
ஷ்ரதா தனது இந்த முயற்சியும் தோல்வியடைந்த விரக்தியில் பொடிநடையாக தனது வீடு நோக்கிப் புறப்பட்டாள்.
அறைக்குச் சென்றதும் முதல்வேலையாக போனை கண்டுபிடித்து எடுத்து, சிவனேஸ்வரன் வித்யாவை கடத்தியதைக் குறித்து தன் தந்தையிடம் தெரிவித்தாள். விரைவில் வித்யாவை கண்டுபிடித்து அவள் அப்பாவிடம் ஒப்படைக்கும்படியும் கேட்டுக்கொண்டாள்.
ஆனால், இவ்விஷயத்தை முன்பே அறிந்திருந்த விஜயாதித்தன் சாமர்த்தியமாக வேறொரு திட்டத்துடன், ராஜ மாணிக்கத்திற்கு முன்பே வித்யாவை கண்டுபிடிக்கும்படி தன் ஆட்களை ஏவியிருந்தார்.
பாபம்! ஷ்ரதா இதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.
காதல் கணம் கூடும்...
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.
கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க
கருத்துத்திரி,
இதுக்குப்பேர் தான் ஹார்ட் டச்சிங் கமெண்ட்