Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நிழல் நிலவு - Story

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 21

மிருதுளா தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் புது அறைக்குள் நுழைந்தாள். அதை வெறும் அறை என்று சொல்லிவிட முடியாது. அனைத்து வசதிகளுடன் கூடிய ஸூட் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும். அந்த அறையின் ஆடம்பரமே அவளை அச்சுறுத்தியது. பலி ஆட்டுக்கு செய்யப்படும் மாலை மரியாதையை இந்த அறையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. அமைதியாக உள்ளே வந்து அங்கே கிடந்த கோச் நுனியில் அமர்ந்தாள்.

அங்கு வந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கழிகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை ஊகிக்க முடியாத மர்மம் அவளை கலவரப்படுத்தியது.

‘அம்மா நம்மை தேட முயற்சி செய்கிறார்களா? அம்மாவின் அலைபேசி ஏன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது?’ என்கிற கேள்விகள் அவளை குடைந்தது.

‘எப்படி இருந்தாலும் போனை ஆன் செய்யும் போது நம்முடைய மிஸ்ட் கால் தெரியும். அது எந்த ஊரிலிருந்து வந்த அழைப்பு என்பதையும் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம். நாம் காணாமல் போன நாள்.. அதே நாளில் அனந்த்பூரில் நடந்த கொலை.. அந்த இடத்தில் தடயமாக கிடைத்த நம்முடைய பொருட்கள்..’ என்று யோசித்துக் கொண்டே வந்தவளின் சிந்தனை சங்கிலி, ‘கிடைத்திருக்குமா?’ என்கிற கேள்வியில் தடைபட்டு பிறகு, ‘எப்படியும் கிடைத்திருக்கும்.. தவறிப்போக வாய்ப்பே இல்லை..’ என்று அறிவு எடுத்துக் கூறிய பிறகு தடையைக் கடந்து தொடர்ந்தது.

‘ஆக மொத்தம், அனைத்தையும் கூட்டி குறைத்து கணக்கிட்டுப் பார்த்தால் நாம் இங்கு சிக்கிக் கொண்டிருப்பதை போலீசார் கணித்துவிட மாட்டார்களா? நம்மை காப்பாற்ற வந்துவிட மாட்டார்களா?’ - அவலாசையில் அடித்துக் கொண்டது உள்ளம்.

மெல்ல எழுந்து அந்த அறையை ஆராய்ந்தாள். லிவிங் ஏரியா, கனெக்ஷன் பெட்ரூம், குளியலறை, பால்கனி, கிளோஸெட் அனைத்து இடங்களிலும் தேவையான ஃபர்னிச்சர்ஸ்.. சமையலறை மட்டும் இருந்தால் இது ஒரு மினி அப்பார்ட்மெண்ட் என்று தோன்றியது அவளுக்கு.

‘இவ்வளவு பெரிய அறையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கேமிரா இருக்கலாம்.. வாய்ஸ் ரெக்கார்டர் இருக்கலாம்.. அதனால்தான் நம்மை இந்த இடத்திற்கு மாற்றியிருக்க வேண்டும்..’ - திரில்லர் படங்களில் வரும் காட்சியை கற்பனை செய்துக் கொண்டு யோசித்தாள்.

பிள்ளைப்பூச்சியை பிடித்து வைத்துக் கொண்டு பெருச்சாளி என்று கூறும் இந்த கூட்டத்தைப் பார்த்து, ‘மூடர் கூட்டமே!’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

இரவு பத்து மணியிருக்கும், மயான அமைதி என்பார்களே அப்படி ஒரு நிசப்தத்தில் மூழ்கியிருந்தது அவளுடைய அறை. தரைத்தளத்தில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். ஆனால் இங்கே - மேல் தளத்தில் அவளை தவிர வேறு யாரும் இருப்பதாகத் தோன்றவில்லை. உறங்கவும் முடியாமல், விழித்திருக்கவும் முடியாமல் தவித்தபடி அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பழகிக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான், காற்றில் தவழ்ந்து வந்து அவள் செவியை தீண்டியது அந்த ஓசை.. நேரடியாக இதயத்தை தொட்டுத் தீண்டும் இனிய இசை. சட்டென்று தடைபட்டது மிருதுளாவின் நடை. ‘எங்கிருந்து ஒலிக்கிறது!’ - அவள் செவிப்புலன் கூர்மையானது. கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள். இடது பக்கம் அர்ஜுன் ஹோத்ராவின் அறை. வலது பக்க அறையிலிருந்துதான் ஓசை வந்தது.

ஆர்வத்துடன் முன்னோக்கி நடந்தாள். லேசாக கை வைத்ததுமே உள் நோக்கி நகர்ந்தது கதவு. நன்றாக திறந்துக் கொண்டு உள்ளே பார்வையை வீசியவள் திகைத்தாள்.

முதல் பார்வையிலேயே அது ஒரு லைப்ரரி என்று தெரிந்தது. அங்கே நடுநாயமாக இருந்த அந்த வெண்ணிற பியானோவை, பட்டாம்பூச்சி மலரை தீண்டும் மென்மையுடன் தொட்டுத்தொட்டு விளையாடிக் கொண்டிருந்தன அர்ஜுன் ஹோத்ராவின் விரல்கள். அவனுடைய ஸ்பரிசத்தில் இனிமையாய் சிணுங்கி அவளை அழைத்தது அந்த இசைப்பெட்டகம்.

கண்களை மூடி அவன் வாசிப்பில் லயித்து வாயிலிலேயே நின்றாள் மிருதுளா. வேறு ஏதோ உலகத்தில் சஞ்சரித்திருப்பது போல் தோன்றியது அவளுக்கு. பாடல் முடிந்த பிறகும் கூட அதன் அதிர்வுகள் அவள் செவியில் எதிரொளித்துக் கொண்டே இருக்க அசைவற்று நின்றாள்.

“யு லைக் இட்?” - அவன் குரல் கூட ஒரு இசை போலத்தான் அவளை வந்து எட்டியது.

வியப்புடன் அவன் முகத்தை ஏறிட்டாள். அவளால் நம்ப முடியவில்லை. அவன் ஒரு ‘கேங்ஸ்டர்’ என்று தலையில் அடித்து சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள். அவ்வளவு மென்மையும் அமைதியும் இருந்தது அந்த முகத்தில்.

“உள்ள வா” - அழைத்தான். மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் உள்ளே சென்றாள் மிருதுளா.

“உட்காரு” - எதிரில் கிடந்த சோபாவை கண்களால் காட்டினான். அமர்ந்தாள்.

அடுத்த பாடலை வாசிக்க துவங்கினான். அது அவள் மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடல். பெற்றோருடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்த காலத்தில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல். அந்த பாடலை எப்போது கேட்டாலும் அந்த நாட்களின் நினைவு அவள் நெஞ்சில் நிறையும். இப்போதும் அப்படித்தான்.. கண்களில் கண்ணீர் கலங்கி நின்றது. அந்த தருணத்தில் தான், அவனுக்குள் ஒரு மென்மையான பக்கமும் இருக்கிறது என்பதை நம்பினாள் மிருதுளா. இசைக்கும் அவனுக்கும் இருந்த அந்த நெருக்கமான உறவு அவளை நம்பவைத்து - பாடல் முடிந்து அறையில் நிசப்தம் சூழ்ந்தது.

மிருதுளாவின் பார்வை அவனை தவிர்த்து அறையை வட்டமடித்து. உள்ளே பொங்கும் உணர்வுகளை கட்டுப்படுத்த சிந்தனையை திசை திருப்ப முயன்றாள்.

“அந்த கண்ணீருக்கு காரணம் நானா?” - அவளுடைய முயற்சியை முறியடித்தது அவன் குரல். மிருதுளா திரும்பவில்லை. ஆனால் அவளுடைய அசைவுகள் முற்றிலும் நின்று போயிருந்தன.

அவன் பதிலுக்காக காத்திருந்தான். நீடித்த மௌனம் அவளுக்கு அதை உணர்த்த, தலையை மெல்ல குறுக்காக அசைத்தாள். பிறகு அவன் புறம் திரும்பி பியானோவை சுட்டிக்காட்டி, “அந்த பாட்டு” என்றாள்.

அவனுடைய புருவம் சுருங்கியது.

“சின்ன வயசு நியாபகம்..” - முணுமுணுத்தாள்.

சற்று நேரம் எதுவும் பேசாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், “ஐம் சாரி” என்றான் மெல்ல.

அவள் புன்னகைக்க முயன்றாள். அவன் அடுத்த பாடலை வாசிக்கத் துவங்கினான். மிருதுளாவின் விழிகள் தன்னிச்சையாய் மூடின. எப்படி சொல்லி வைத்தது போல் அவளுக்கு நெருக்கமான பாடல்களாக வாசிக்கிறான்! - மனதில் படர்ந்த குழப்பத்துடன் கண்களைத் திறந்து அவனைப் பார்த்தாள்.

அவன் கண்கள் மூடி இசையோடு ஒன்றிப் போயிருந்தான். அவள் பார்வை அவன் முகத்திலேயே பதிந்திருந்தது. பெற்றோரின் நினைவில் தளும்பிக் கொண்டிருந்த மனம் தெளிந்து அவனை கிரகிக்கத் துவங்கியது. அவனுக்கும் இந்த பாடல் மிகவும் பிடித்தமானது என்று அவளுக்குத் தோன்றியது. இருவருடைய ரசனையும் ஏதோ ஒரு புள்ளியில் ஒத்துப்போகிறது என்பதை உணர்ந்த போது மனதின் ஒரு மூலையில் சிறு மகிழ்ச்சியை உணர்ந்தாள் மிருதுளா.

மூன்றாவது பாடல் முடிந்து அவன் கண்களை திறந்த போது இருவருடைய பார்வையும் பின்னிக் கொண்டன. நொடிகள் கழிந்து கொண்டிருந்தது. வார்த்தைகளற்ற மோனம் இருவரையும் சூழ்ந்திருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சுடன் கண்களை முடித்த திறந்து தன்னிலைக்கு மீண்டான் அர்ஜுன்.

“மேஜிக்கல்..” - வியப்பில் விரிந்த விழிகளுடன் தன்னை மறந்து அவனை பாராட்டினாள் மிருதுளா.

அவன் இதழ்கடையோராம் லேசாக துடித்தது. கண்கள் சுருங்கின. ‘சிரித்தால்தான் என்ன! தலையா விழுந்துவிடும்!’ - அவள் பார்வை அவன் முகத்திலிருந்து விலகவே இல்லை.

“நீ ப்ளே பண்ணுவியா?” - இயல்பாகக் கேட்டான்.

“ம்ஹும்..” - உதட்டை பிதுக்கினாள்.

“கம்..” - அமர்ந்திருந்த ஸ்டூலிலிருந்து எழுந்தான். அவனுடைய நோக்கம் புரிந்த மிருதுளாவின் கண்களில் ஆர்வம் மின்னியது. ஆனாலும் தயக்கத்துடன், “இல்ல.. எனக்கு வாசிக்க தெரியாது” என்றாள்.

“ஐ நோ.. இப்படி வந்து உட்கார்.. நா கற்று தர்றேன்..” - அவளை ஊக்கப்படுத்தினான். அதற்கு மேல் அவள் தாமதிக்கவில்லை. ஆவலுடன் எழுந்து வந்து அந்த ஸ்டூலில் அமர்ந்தாள்.

ஒவ்வொரு கீயின் நோட்டையும் அவளுக்கு விலக்கிக் கூறி அடிப்படையை கற்றுக் கொடுத்தான். ஏபிசி எழுத்து முறையில் பேஸிக் நோட்ஸ் ஒன்றை பேப்பரில், எழுதி அதை ஸ்டாண்டில் பொருத்தி, “இதை ட்ரை பண்ணு” என்றான்.

மிக மிக இலகுவான நோட்ஸ் தான். அதையும் தப்பும் தவறுமாகத்தான் வாசித்தாள். ஆனாலும் அவளே வாசித்தாள்! - மனதிற்குள் பட்டாம்பூச்சிகள் பறப்பது போலிருந்தது. சந்தோஷத்துடன் அவனை திரும்பிப் பார்த்தாள்.

“குட்” - அவன் முகத்திலிருந்த மெச்சுதல் அவளை உற்சாகப்படுத்தயது.

“இன்னொரு தரம் ட்ரை பண்ணவா?” - ஆசையோடு கேட்டாள்.

“ஸூர்..” - அவளை ஃப்ரீயாக விட்டுவிட்டு முன்பு அவள் அமர்ந்திருந்த சோபாவில் சென்று அமர்ந்தான். சிறு பிள்ளையின் குதூகலத்துடன் அந்த நோட்ஸை மீண்டும் மீண்டும் வாசித்துப் பழகினாள் மிருதுளா. அவள் அலுத்துப் போகும் வரை அமைதியாகக் காத்திருந்தான் அர்ஜுன் ஹோத்ரா.

அவளுக்கு அலுக்கவில்லை.. ஆனால் இடம் பொருள் மறந்து அளவு மீறுகிறோம் என்கிற எண்ணம் தோன்றி சங்கடப்படுத்தியது. சின்ன புன்னகையுடன், “தேங்க் யு..” என்று எழுந்தாள்.

“நீ ரொம்ப சுலபமா கத்துக்கற.. மியூசிக் உன்னோட இரத்தத்திலேயே இருக்கு” என்றான்.

உண்மைதான்.. அவளுடைய அன்னை நன்றாக பாடுவார். தாயின் நினைவில் மிருதுளாவின் முகம் வாடியது.

“ஐ டோன்ட் வாண்ட் டு சி யுவர் ஃபேஸ் லைக் திஸ்..” என்றான் ஆழ்ந்த குரலில். அவள் குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.

இறுகியிருந்த அவன் முகத்தில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை அவளால்.

சற்றுநேர மௌனத்திற்குப் பிறகு, “நீ சந்தோஷமா இருக்கனும்னு நா விரும்பறேன்” என்றான். அவன் சற்று தடுமாறியது போல் தோன்றியது அவளுக்கு.

மிருதுளா முதலில் குழம்பினாள். பிறகு அவள் பார்வையில் சந்தேகத்தின் சாயல் கூடியது.

பெருமூச்சுடன் எழுந்து அவளிடம் நெருங்கினான் அர்ஜுன் ஹோத்ரா.

“எனக்கு புரியுது. உன்னோட பயம்.. சந்தேகம்.. எல்லாமே நியாயம் தான். ஆனா.. ஒரு விஷயத்தை நீ எப்பவும் மறக்கக் கூடாது” என்று கூறி நிறுத்தினான்.

‘என்ன?’ - அவள் கண்கள் கேட்டது.

“என்னால உன்ன காயப்படுத்த முடியாது. என்னை மீறி வேற யாரும் உன்ன நெருங்க முடியாது. ஐ வில் ப்ரொடெக்ட் யு.. ஆல்வேஸ்.”

அவன் குரலில் இருந்த அக்கறை - நெருக்கம் - உறுதி மிருதுளாவை தடுமாறச் செய்தது. அவள் உடல் நடுங்கியது. சிறு பெண்தானே. நிதானிக்க நேரமெடுக்கும் அல்லவா? அவளுடைய நிலையை நன்கு உணர்ந்தான் அர்ஜுன்.

“குட் நைட்” - மெல்லிய குரலில் முணுமுணுத்துவிட்டு, வேரூன்றிவிட்ட கால்களை தரையிலிருந்து பிடுங்கி, வெகு சிரமப்பட்டு அடியெடுத்து வைத்து அங்கிருந்து நகர்ந்தாள் மிருதுளா.

தாடையை தடவியபடி அவள் முதுகை வெறித்த அர்ஜுன் ஹோத்ராவின் உதடுகள் அலட்சிய புன்னகையில் வளைந்தன.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 22

அன்றைய விடியலில் மிருதுளாவின் மனநிலை அமைதியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு நிம்மதியான தூக்கம் அவளை தழுவியது நேற்று இரவுதான். அர்ஜுன் ஹோத்ராவின் வார்த்தைக்கு அவளிடம் பாதிப்பு இருக்கிறது என்பதுதான் இதன் பொருள். இங்கு அவளுக்கு ஆபத்து நேராது என்கிற நம்பிக்கையை அவளுக்குள் விதைத்துவிட்டான்.

‘இங்கிருந்து வெளியேறும் நாள் தொலைவில் இல்லை. சந்தர்ப்பம் பார்த்து பேசிவிட வேண்டும்’ - இதழில் தவழும் மெல்லிய புன்னகையுடன் பால்கனி திரையை விலக்கினாள். தோட்டத்தின் அழகை இங்கிருந்து பார்த்தால் நன்றாக இருக்குமே! - எதிர்பார்ப்புடன் வெளிப்பக்கம் பார்த்தவள் அதிர்ந்து இரண்டடி பின்வாங்கினாள். நொடிப் பொழுதில் அவள் முகத்திலிருந்த புன்னகையை கொன்று குடிகொண்டது மிரட்சி. மனதிலிருந்த அமைதி பறந்து போய்விட பதட்டம் பற்றிக்கொண்டது.

‘ஓ மை காட்! ஓ மை காட்! ஓ மை காட்!’ - உதடுகள் படபடக்க அவசரமாக கண்ணாடி கதவை தள்ளி திறந்துக் கொண்டு பால்கனிக்கு பாய்ந்தாள். இப்போது அந்த மனிதனின் அலறல் ஒலி அவளை உலுக்கியது. ஒரு கையால் அவன் பிடரியை பிடித்துக் கொண்டு மறுகை முஷ்டியை மடக்கி ஆக்ரோஷமாக அவன் முகத்தை தொடர்ந்து தாக்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன் ஹோத்ரா. சிதைந்து போன அவன் முகத்திலிருந்து தெறித்த இரத்தம் இவன் முகத்தை சிவப்பாக்கியிருந்தது.

மிருதுளாவின் மனம் பதை பதைத்தது.. சுற்றி நின்று கொண்டிருந்த அரக்கர்களில் ஒருவனுக்கு கூட சிறிதும் மனிதாபிமானம் இல்லை. ஒரு உயிர் துடிதுடிப்பதைக் கண்டு சற்றும் பதறாமல் கைகளை கட்டிக் கொண்டு சிலை போல் நின்றார்கள்.

தரையில் துவண்டு விழுந்தவன் முடியைப் பிடித்து தரதரவென்று இழுத்துச் சென்று அங்கே கிடந்த ஒரு பெரிய கல்லில் நச்சென்று மோதினான் அந்த அசுரன். அவன் உடல் துள்ளி விழுந்து துடித்து அடங்கியது.

“ஆ!” - கண்களை மூடிக் கொண்டு அலறிவிட்டாள் மிருதுளா. தோட்டத்திலிருந்த அனைவருடைய பார்வையும் சட்டென்று இவள் பக்கம் திரும்பியது.

மிரண்ட முயல் குட்டி போல் கண்களை இறுக மூடி வெடவெடப்புடன் சுவற்றோடு சுவராக ஒட்டிக் கொண்டு நின்றாள். உஸ்-புஸ் என்ற வேக மூச்சுகளுடன் அவளை வெறித்துப் பார்த்த அர்ஜுன் ஹோத்ரா, “உள்ள போ..” என்று பெருங்குரலில் ஆணையிட்டான்.

உடல் தூக்கிப் போட, குரல் வந்த பக்கம் திரும்பியே பார்க்காமல் பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடியவள், நடுக்கத்துடன் கண்ணாடி கதவை தள்ளி மூடிவிட்டு, அவசரமாக திரையை இழுத்து விட்டாள். வெளிப்புறத்தில் நடக்கும் கொடூரத்தை தன்னிடமிருந்து முற்றிலும் மறைத்தாள். இல்லையில்லை.. வெளியே நரபலி கேட்டு தாண்டவமாடும் அசுரனிடமிருந்து தன்னை மறைந்துக் கொண்டாள்.

‘கோரம்.. கொடூரம்..’ - அந்தக் காட்சியின் தாக்கம் அவளை முடக்கிப் போட்டுவிட்டது. கிட்டத்தட்ட அரைநாள் வரை அறையைவிட்டு அவள் வெளியே வரவே இல்லை. மதியத்திற்கு மேல் வயிறு கபகபக்கத் துவங்கிய போதுதான் மூளை பசியை உணர்ந்தது. வெளியே வந்தால் அவன் அறையை கடந்துதான் கீழே செல்ல முடியும். ஒரு வேளை அவனை பார்க்க நேர்ந்துவிட்டால்! நினைக்கும் போதே இரத்தம் தெறித்திருந்த அந்தக் கொடூர முகம் அவள் மனக்கண்ணில் தோன்றி நடுங்கச் செய்தது. பல்லை கடித்துக் கொண்டு உள்ளேயே இருந்தாள். ஆனால் எவ்வளவு நேரம் அப்படியே இருந்துவிட முடியும்.

ஒரு கட்டத்தில் மெல்ல எழுந்து வெளியே வந்தாள். அவன் எதிர்பட்டுவிடக் கூடாது என்று உருப்போட்டது உள்ளம். அவன் முகத்தில் விழிக்கும் நினைவே அவளை அச்சுறுத்தியது. அவன் நிழலை நெருங்கக் கூட அவள் விரும்பவில்லை.

குனிந்த தலை நிமிராமல் ஒரே பாய்ச்சலில் அவன் அறையைக் கடந்து கீழே இறங்கியவள், எதிர்படும் யாரையும் ஏறிட்டு பார்க்காமல் சமையலறைக்கு வந்தாள். கிட்சன் கவுண்டரிலிருந்து சில பழங்களையும், காபி மேக்கரிலிருந்து ஒரு கப் காபியையும் எடுத்துக்கொண்டு மீண்டும் மாடிக்கு வந்து அடைந்து கொண்டாள். அவனை பார்க்கவில்லை என்பதே அவளுக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

இரவு பத்து அல்லது பத்தரை இருக்கும். கனமான போர்வைக்குள் தன்னை புதைத்துக் கொண்டு கண்களை இறுக மூடியிருந்தாள் மிருதுளா. அன்று காலை கண்ட காட்சியை மறந்துவிட்டு உறங்க முயன்றாள். இரத்தம் தெறித்த அந்த முகம் - வெறி பிடித்த கண்கள் - கொடூரன் - கொலைகாரன் – அசுரன் - அர்ஜுன் ஹோத்ரா - மூடிய இமைகளுக்குள் அத்துமீறி நுழைந்து அவளை அச்சுறுத்தினான்.

‘கடவுளே! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஹெல்ப் மீ’ - அழாத குறையாக புலம்பியவள் புரண்டு படுத்தாள். அவளை தாலாட்டுவது போல் காற்றில் தவழ்ந்து வந்து அவள் செவியை தீண்டியது பியானோவின் இசை. வெடுக்கென்று எழுந்து அமர்ந்தாள் மிருதுளா.

‘அவன்! அவனேதான்..’ - உள்ளம் பரபரத்தது. மறுகணமே ஆத்திரத்தில் தொண்டை அடைத்து கண்ணை கரித்தது. காரணம் அவன் வாசித்துக் கொண்டிருந்தது ஏதோ ஒரு பாடல் அல்ல.. நேற்று அவள் வாசித்த பேசிக் நோட்ஸ்.

‘பேசிக் நோட்ஸ் கூட அவனுடைய வாசிப்பில் எத்தனை இனிமையாக இருக்கிறது!’ - மிருதுளாவின் கண்ணீர் முத்துக்கள் விடுதலை பெற்று கன்னத்தில் உருண்டோடின.

அர்ஜுன் தொடர்ந்து திரும்ப திரும்ப அதே நோட்ஸை வாசித்துக் கொண்டிருந்தான். தன்னை எதிர்பார்க்கிறான் என்று அவளுக்கு புரிந்தது. அந்த புரிதல் அவள் வயிற்றுக்குள் புளியை கரைத்தது. கால்களை கட்டிக்கொண்டு குறுகி அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்தாள்.

இசை ஓய்ந்து கனத்த அமைதியில் மூழ்கியது சூழ்நிலை. ‘முடித்துவிட்டானா? அறைக்கு திரும்பப் போகிறானா? நம்முடைய அறையை கடந்துதான் செல்வான்.. காலடி சத்தம் கேட்கிறதா?’ - ஏனோ அவள் கவனம் முழுவதும் செவியில் குவிந்தது.

அவனை பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறாளா! அந்த இரக்கமற்ற இராட்சசனின் பக்கம் சாய்கிறாளா! - ‘நோ.. நோ.. காட்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ’ - அழுகையில் அவள் உடல் குலுங்கியது.

மீண்டும் பியானோ இசைந்தது. இந்த முறை பாடல்.. அவள் உணர்வுகளை சுண்டியிழுக்கும் பாடல். ‘கடவுளே!’ - காதை மூடிக் கொண்டாள். ஆனாலும் செவியை துளைத்துக் கொண்டு அவள் அடி நெஞ்சை தொட்டது அந்த இசை. அவளை உருக்கிவிட்டு, கரைந்த சில நிமிடங்களுக்குப் பிறகு பாடல் முடிந்தது.. அமைதி சூழ்ந்தது.. சற்று இலகுவாய் சுவாசித்தாள்.

‘க்ளட்ச்’ - கதவு திறக்கப்படும் ஓசை. சட்டென்று அவள் உடல் விறைத்தது. நிமிர்ந்து பார்க்கும் துணிவில்லை. அவனை அறிய, பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. அவளால் உணர முடிந்தது.

காலடி சத்தம் அவளை நெருங்கியது. மிருதுளாவின் இதயம் எகிறி குதித்து வெளியேற துடித்தது.

இப்போது காலடியோசை நின்றுவிட்டது. அவன் அருகில் தான் இருக்கிறான் என்பதை பறைசாற்றியது அந்த நறுமணம். அவன் அருகில் இருக்கும் போதெல்லாம் அவள் நாசி நுகர்ந்த நறுமணம்.

அவன் எதுவும் பேசவில்லை. மௌனம் கனமாக சூழ்ந்திருந்தது. நேரம் கழிந்து கொண்டே இருந்தது. அவன் வாயையும் திறக்கவில்லை.. அங்கிருந்து நகரவும் இல்லை.

வேறு வழியில்லை. அவள்தான் இறங்கி வந்தாக வேண்டும். மெல்ல நிமிர்ந்தாள். வெள்ளை பைஜாமா அணிந்திருந்தான். அவன் மார்புக்கு மேல் அவள் பார்வை உயரவில்லை. ஆனால் அவனுடைய பார்வை தன் மீதுதான் இருக்கிறது என்பதை சத்தியம் செய்து சொல்ல முடியும் அவளால்.

முகத்தில் வந்து விழுந்த முடியை காதோரம் ஒதுக்கிவிட்டபடி கட்டிலிலிருந்து எழ எத்தனித்தாள் மிருதுளா.

“சிட்..” - ஒற்றை வார்த்தை தான். அதையும் மென்மையாகத்தான் கூறினான். அதுவே அவளுடைய அசைவுகளை மொத்தமாய் முடக்கிவிட போதுமானதாக இருந்தது. உதட்டை கடித்துக் கொண்டு – ‘ஃப்ரீஸ்-ரிலீஸ்’ விளையாட்டில் உறைவது போல் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.

கட்டிலில், அவளுக்குப் பக்கத்தில் - அவள் முகத்தை பார்த்தபடி அமர்ந்தான் அர்ஜுன் ஹோத்ரா. தடித்திருந்த இமைகளும், சிவந்திருந்த முகமும் எட்டப்பனாய் மாறி அவளுடைய அழுகையை அவனிடம் காட்டிக் கொடுத்தது.

சற்று நேரம் எதுவுமே பேசாமல் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், “ஆர் யு ஓகே?” என்றான் மெல்ல.

பதில் சொல்ல தயங்கி தாமதித்த மிருதுளா பிறகு தலையை மட்டும் மேலும் கீழும் ஆட்டினாள்.

“லுக் அட் மீ” - செவிடன் காதில் ஊதிய சங்கு போல் அவளிடம் எந்த அசைவும் இல்லை.

“மிருதுளா! லுக்.. அட்.. மீ..” - வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டினான். அவள் பார்வை தானாக உயர்ந்தது.

“ஆர் யு ஓகே?” - மீண்டும் கேட்டான். அவள் மீண்டும் தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

“வாயத் திறந்து பதில் சொல்லு.”

“எஸ்.. ஐம் ஓகே” - குரல் கரகரத்தது. எந்த நேரத்திலும் உடைந்துவிடும் அபாயத்தில் இருந்தாள்.

சற்று நேரம் அவளை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். பிறகு, “மிருதுளா, அது என்னோட பிசினெஸ். அதை நா டீல் பண்ணித்தான் ஆகனும்” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க முயன்றான்.

மிருதுளாவின் நாசி விடைத்தது. கண்கள் கண்ணீரில் பளபளத்தன. மனித உயிரை பிசினஸ் என்று எப்படி அலட்சியமாக பேசுகிறான் என்கிற ஆத்திரம் அவளிடமிருந்து வார்த்தையாய் வந்து விழுந்தது.

“அவர்.. அந்த.. மனுஷன்.. உயி..ரோட.. இருக்காரா?” - காற்றடைத்த குரலில் தான் என்றாலும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திவிட்டாள்.

அவன் முகம் இறுகியது. “என்னோட பிசினெஸை நீ கேள்வி கேட்கக்கூடாது. அதை நா விரும்ப மாட்டேன்” - அதிகாரமாகக் கூறினான்.

அறை வாங்கியது போல் சட்டென்று வாடியது அவள் முகம். கீழே குனிந்து கொண்டாள். கண்ணீர் முத்து முத்தாக வடிந்தது. கீழுதட்டை மடித்துக் கடித்தான் அர்ஜுன் ஹோத்ரா.

“ஆல்ரைட்.. ஐம்.. சாரி” - வெகுவாய் இறங்கிவிட்டது அவன் குரல். அவள் நிமிரவே இல்லை.

நடுங்கிக் கொண்டிருந்த அவள் மென்கரத்தை தன் கைகளுக்குள் கொண்டு வந்து மென்மையாய் வருடினான்.

“மிருதுளா.. பேபி.. நா உன்ன ஹர்ட் பண்ணனுன்னு நினைக்கல.. நா.. ஜஸ்ட்.. என்னோட பாயிண்டை சொல்ல ட்ரை பண்ணினேன் அவ்வளவுதான். ஸீ.. நீ அழறது எனக்கு.. ஐ மீன்.. ம்ம்ம்.. டோன்ட் க்ரை ஓகே.. என்னை பாரு.. என்னை பா..ரு.. லுக் அட் மீ. ஐம் சாரி.. ஐம்.. சா..ரி” - அவளை சமாதானம் செய்துவிட துடித்தான்.

மிருதுளா நிமிர்ந்தாள். பார்வைகள் சந்தித்துக் கொண்டன. அவன் கண்கள் அவளிடம் சரணடைந்தது. அவனை இப்படி பார்த்தால்.. அவன் இப்படி பேசினால் உலகமே மறந்துவிடும் போலிருந்தது அவளுக்கு. காலை தோட்டத்தில் பார்த்த கொடூரத்தை மறந்துவிட்டாள். தான் அவனிடம் அடைபட்டிருக்கிறோம் என்கிற நிதர்சனத்தையும் மறந்துவிட்டாள்.

தன்னுடைய முகவாட்டம் அவனை பாதிக்கிறது, மன்னிப்புக் கேட்க வைக்கிறது என்கிற ஒரு எண்ணம் மட்டும் தான் அவள் மனதில் மேலோங்கி நின்றது. அந்த எண்ணம் அவளுக்குள் ஒரு இதமான உணர்வை சுரக்கச் செய்தது.

“அவனை கொன்னுட்டேன். ஏன்னா.. அவன் வாழ தகுதியில்லாதவன்” - திடீரென்று பேசினான் அர்ஜுன். இனிய மயக்கத்திலிருந்து மீண்டு அவன் என்ன சொன்னான் என்பதை புரிந்துக்கொள்ளவே ஓரிரு நிமிடங்கள் ஆனது அவளுக்கு.

ஒருவழியாக அவள் புரிந்துக்கொண்ட போது, பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்தது போல் அவளுடைய இனிமையான உணர்வுகளெல்லாம் அடங்கிப் போய்விட்டன. ஓர் உயிர் போய்விட்டது.. அதுவும் அவன் கையால்.. - கத்திப் பாய்ந்தது போல் உள்ளே வலித்தது.

“நைட் தூக்கம் வருமா?” - கலங்கிய குரலில் கேட்டாள்.

“ரொம்ப வருஷத்துக்குப் பிறகு நேத்துதான் நல்லா தூங்கினேன். அந்த தூக்கத்தை தேடித்தான் உன்கிட்ட வந்தேன். குட் நைட் சொல்லு” - அவன் குரல் அவளிடம் நெருக்கத்தைக் காட்டியது.

அவனுடைய பேச்சின் திசை மிருதுளாவிற்கு புரியாமல் இல்லை. நன்றாகவே புரிந்தது. ஆனால் அவனை மறுத்துப் பேசும் திராணிதான் அவளிடம் இல்லாமல் போய்விட்டது.

“குட் நைட்” - புன்னகைக்க முயன்றாள்.

பிடித்திருந்த அவள் கையில் மென்மையாக இதழ் பதித்து, “குட் நைட்” என்று கூறி எழுந்தான் அர்ஜுன் ஹோத்ரா.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 23

ஈரத்தலையில் துண்டை சுற்றிக் கொண்டு குளியலறையிலிருந்து வெளியேறிய மிருதுளாவை இன்டர்காம் அழைத்தது. எடுத்து பேசினாள். சமையலறையிலிருந்து தான் பேசினார்கள்.

“பிரேக் ஃபாஸ்ட் ரெடி மேம். சார் உங்களுக்காக வெயிட் பண்ணறாங்க.”

“என்ன! யார் வெயிட் பண்ணறாங்க?” - அர்ஜூனாக தான் இருக்கும் என்று மயக்கம் கொண்ட மனம் அரை நொடியில் கணக்கு போட்டுவிட்டாலும், அறிவு கறாராக கடிவாளமிட்டு அவளை கட்டுப்படுத்தியது.

ஆனால், அந்த பக்கத்திலிருந்து வந்த பதில் அவள் அறிவின் ஆளுமையை வலுவிழக்கச் செய்தது.

“அர்ஜுன் சார்தான் மேம் வெயிட் பண்ணறாங்க. நீங்க கீழ வர எவ்வளவு நேரம் ஆகும்?” - மிருதுளா பதில் சொல்ல தயங்கினாள். நேற்றும் பியானோ அறையில் அவளுக்காக காத்திருந்தான். இன்றும் உணவுக்கூடத்தில் காத்திருக்கிறான். இதையெல்லாம் உள்வாங்கிக்கொள்ளவே அவளுக்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது. கனத்த மூச்சுக்காற்றை ஓரிரு முறை உள்ளிழுத்து வெளியேற்றிய பிறகு,

“ஆங்.. பத்து.. இல்ல.. அஞ்சு.. அஞ்சு நிமிஷத்துல.. வரேன்” என்று தடுமாற்றத்துடன் கூறி அழைப்பை துண்டித்தாள்.

இந்த தடுமாற்றம் சரியா தவறா என்று தெரியவில்லை. இந்த உணர்வின் ஆழம் என்ன என்பதும் புரியவில்லை. ஆனால் மனம் மிதக்கிறது.. இதுதான் வயது கோளாறா! - சிந்தனை தொடர்வண்டி ஒரு பக்கம் தன் போக்கில் ஓடிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தலையிலிருந்த துண்டை கழட்டி எறிந்துவிட்டு, தலைவாரி சென்டர் க்ளிப்பை அடித்துக்கொண்டு, நெற்றியில் ஒரு பொட்டை ஒட்டிக் கொண்டு, தடதடவென்று படிக்கட்டில் இறங்கினாள்.

அவன் நமக்காக காத்திருக்கிறானே என்கிற பரபரப்பும், அவசரமும் எந்த அளவுக்கு அவளிடம் இருந்ததோ அதே அளவுக்கு அதை அவனிடம் காட்டி கொள்ளக் கூடாது என்கிற எச்சரிக்கையும் இருந்தது. டைனிங் ஹாலுக்குள் நுழைவதற்கு முன், நின்று - மூச்சை இழுத்துவிட்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.

“ஹாய்” - திடீரென்று பின்னாலிருந்து ஒலித்த அந்த குரலில் திடுக்கிட்டுத் திரும்பினாள்.

‘அர்ஜுன்! இங்க என்ன பண்றான்!’ - கருத்து அடர்ந்த நீளமான இமைமுடிகள் குடை போல் ஒருமுறை மூடி திறக்க, அழகிய அவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

தொழில்முறை சந்திப்பிற்காக வெளியே செல்வது போல் முழுமையாக தயாராகியிருந்தான். ஹேர் ஜெல்லில் படிந்திருந்த சிலும்பலற்ற கேசம் முதல் புத்தம் புதிதாக பளபளக்கும் லெதர் ஷூ வரை, அரை நொடியில் அனைத்தையும் அவள் கண்கள் ஆராய்ந்துவிட்டன. ‘மிஸ்டர் பர்ஃபெக்ட்’ - மனதிற்குள் முணுமுணுத்தவள், அவசரமாக அள்ளி முடிந்து கொண்டு வந்த தன்னுடைய தோற்றம் எப்படி இருக்கிறதோ என்கிற சங்கடத்தில் உதட்டை கடித்துக் கொண்டு தலைகவிழ்ந்தாள்.

அவளை ரசனையுடன் ஆராய்ந்தது அவன் பார்வை. அதை உணர்ந்தவளின் கன்னங்கள் கதகதத்து செர்ரி பழத்தின் நிறத்தை கடன் வாங்கிக் கொண்டன.

“ஹாப்பி மார்னிங் பேபி” - அவனுடைய கம்பீரக்குரலில் கலந்திருந்த சின்ன கிசுகிசுப்பு அவளிடம் நெருக்கமாய் உறவாடியது. கடந்தகாலமும் இல்லை எதிர்காலமும் இல்லை. அந்த க்ஷணம் மட்டுமே அவளுடையதானது. மெல்ல நிமிர்ந்தாள். நாணம் நிறைந்த அவள் கண்கள் ரசனை மிகுந்த அவன் பார்வையை சந்தித்தது. இதழ்களில் பூத்த மெல்லிய புன்னகையுடன், “யு டூ” என்றாள்.

அவள் கை மணிக்கட்டைப் பற்றி, “வா” என்று உள்ளே அழைத்துச் சென்றான் அந்த வசியக்காரன்.

டேபிள் அழகாக செட் செய்யப்பட்டிருந்தது. வழக்கமானதுதான். ஆனால் இன்று அவளுக்கு அதீத அழகாகத் தெரிந்தது. அவனுடைய அருகாமை செய்த மாயம் அது.

நற்பண்பில் சிறந்த மனிதனாக, அவள் அமர்வதற்கு வசதியாக இருக்கையை இழுத்து, அவள் அமர்ந்த பிறகு தனக்கான இருக்கையில் வந்து அமர்ந்தான். அவளுடைய இளம் உள்ளம் பூத்துக்குலுங்கியது.

இதுவரை அவள் அந்த டைனிங் டேபிளில் உணவருந்தியதில்லை. மற்ற ஊழியர்களை போல கிட்சன் கவுண்டரில் அல்லது அறைக்கு எடுத்துச் சென்று உண்பாள். இது அர்ஜுன் ஹோத்ராவிற்கும் அவனுடைய நெருங்கிய சகாக்களுக்குமான பிரத்தியேக உணவு மேஜை. அங்கே அவளுக்கும் ஒரு இடம் இருக்கிறது! அதுவும் ஆளுமையழகனுக்கு அருகில்! - உள்ளும் புறமும் சில்லென்று உணர்ந்தாள் மிருதுளா.

“என்ன சாப்பிடற?” - பதார்த்தங்களை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தவன், அவளுடைய பதிலுக்கு காத்திராமல் இருவருக்குமே பரிமாறினான். அவள் விருப்பத்தை அவன் தேர்வு செய்வதில் கூட அழகை உணர்ந்தாள் மிருதுளா. தன் மீதான அவனுடைய ஆதிக்கம் அவளுக்கு ரசனைக்குரியதாக இருந்தது.

அவனுடைய அருகாமையை அனுபவித்தபடி அவள் உணவை ருசித்துக் கொண்டிருந்த சமயத்தில் இன்னொரு குரல் அவர்களுடைய தனிமையில் இடையிட்டது.

“ஹேய்.. மார்னிங்..” என்றபடி உள்ளே நுழைந்த டேவிட், மிருதுளாவை அங்கே - அர்ஜுன் ஹோத்ராவிற்கு அருகில் பார்த்ததும் அதிர்ந்தான். ஒரு கணம்தான்.. உடனே சுதாரித்துவிட்டான். தன் உணர்வுகள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இயல்பாக உள்ளே வந்தான்.

“மார்னிங் மேன்” - உற்சாகமாக நண்பனை வரவேற்றான் அர்ஜுன்.

“ஹே.. மிருதுளா! நைஸ் டு சி யு” - முயன்று புன்னகைத்தான். அவனுடைய தடுமாற்றம் மிருதுளாவின் கவனத்தில் பதியவில்லை. அவள் இயல்பாக பதில் புன்னகை புரிந்தாள்.

“பார்க்கவே முடியிலேயே.. எங்க போயிட்ட?”

“எங்கேயும் போகல. ரூமை மாடிக்கு மாத்தியிருக்கேன். அவ்வளவுதான். மாலிக் எங்க?” - குறுக்கிட்டு பதில் கூறிய அர்ஜுன் அடுத்த டாபிக்கிற்கு தாவினான்.

அவனுடைய குரலில் மாற்றத்தை உணர்ந்து அவன் பக்கம் திரும்பினாள் மிருதுளா. இல்லை.. அது ஏதோ அவளுடைய கற்பனை.. சாதாரணமாகத்தான் இருந்தான்.

“சுஜித் கூட ஜிம்ல இருக்கான். இரண்டு பேரும் சேர்ந்துதான் பயிற்சி செய்யறாங்க.”

“ஓ!” - அவனுக்கு செவி கொடுத்தபடி மிருதுளாவின் தட்டில் குருமாவை பரிமாறினான்.

டேவிட்டின் முகம் இறுகியது. அங்கே நிற்க முடியாமல் காபி மேக்கரின் பக்கம் சென்றான்.

“டேவிட்.. கமான் மேன்.. எங்க போற?” - உண்மையான அக்கறையோடுதான் நண்பனை அழைத்தான் அர்ஜுன்.

“நா காபி எடுக்கத்தான் வந்தேன். ஒரு சின்ன வேலை இருக்கு. முடிச்சுட்டு வந்து ஜாயின் பண்ணிக்கிறேன். நீங்க சாப்பிட்டுக்கிட்டே இருங்க” - கண்களை எட்டாத புன்னகையுடன் அவன் அழைப்பை மறுத்துவிட்டு விலகிச் சென்றான் டேவிட்.

அவன் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜுன் ஹோத்ராவை அலைபேசி அழைத்தது. யார் என்று கூட பார்க்காமல் அழைப்பை ரிஜெக்ட் செய்துவிட்டு மிருதுளாவின் பக்கம் கவனத்தை திருப்பினான்.

“ம்ம்ம்.. சாப்பிடு.. இன்னும் கொஞ்சம் போட்டுக்கோ” - மீண்டும் அலைபேசி ஒலித்தது. ரிஜெக்ட் செய்துவிட்டு உணவை தொடர்ந்தான்.

இரண்டு மூன்று முறை நிராகரித்த பிறகும் தொடர்ந்து அழைப்பு வந்துக் கொண்டே இருந்ததில் எரிச்சலடைந்தவன் சட்டென்று அழைப்பை ஏற்று, “கட் பண்ணினா பிஸியா இருக்கேன்னு அர்த்தம். இன்னொருதரம் என்னுடைய நம்பரை டயல் பண்ண துணியாத. மீறினா விளைவுகளையும் சந்திக்க தயாரா இரு” - அமைதியாக ஒலித்த அந்தக் குரலில் பேரழிவின் அபாயமிருந்தது. ஒரு நொடியில் அவனிடம் தெரிந்த உட்சபட்ச மாற்றத்தைக் கண்டு திகைத்தாள் மிருதுளா. அதுவரை சாந்தமாக இருந்த அந்த முகத்தில் திடீரென்று அதீத கோபம் கொப்பளித்தது. வெகு நேரமாக மறைத்து வைத்திருந்த உணர்வு கட்டுப்பாடிழந்து வெளிப்பட்டுவிட்டது போல் தோன்றியது அவளுக்கு.

அச்சம் மேலோங்க கலவரத்துடன் அவனைப் பார்த்தாள் மிருதுளா. அவள் பக்கம் திரும்பாமல் இறுகிப்போய் அமர்ந்திருந்தவன், ஓரிரு நொடிகளில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “ஐம் சாரி.. சாப்பிடு” என்றான் மென்மையாக.

இப்போது அவனுடைய பழைய இனிய முகம் திரும்பிவிட்டது என்றாலும் மிருதுளாவின் பதட்டம் குறையவில்லை.

கண்ணாடி குவளையில் சற்று முன் அர்ஜுன் ஊற்றி வைத்த நீரை எடுத்து அருந்தினாள். சில்லென்ற திரவம் உள்ளே இறங்கி அவளை சற்று ஆசுவாசப்படுத்தியது. ஆனாலும் உணவு தொண்டைக்குழிக்குள் இறங்க மறுத்தது.

உணவை வீணாக்குவது அவனுக்கு பிடிக்காத செயல் என்பதை அவள் அறிந்திருந்தாள். மூச்சு முட்ட முட்ட.. விழி பிதுங்க பிதுங்க.. தட்டில் இருந்ததை முயன்று விழுங்கிவிட்டு எழுந்தாள். சுண்டுவிரலை கூட அசைக்காமல் தன்னுடைய தாளத்திற்கு அவளை ஆட வைத்துவிட்ட திருப்தியுடன் அவனும் எழுந்தான்.

******************

மிருதுளாவை முதல் முதலாக பார்த்த நிமிடத்திலேயே அவளுடைய ஆர்ப்பாட்டமில்லாத அழகில் ஈர்க்கப்பட்டான் டேவிட். ஆனால் அவள் கோர்த்தாவின் எதிரியாக இருக்கக் கூடுமோ என்கிற சந்தேகம் அவனை அவளிடமிருந்து தள்ளி நிறுத்தியிருந்தது. அதன் பிறகு ஒரு நாள் அவள் தப்பிக்க முயன்று மாட்டிக் கொண்டாள்.

அன்று அவளுக்கு எந்த தீங்கும் நேர்ந்துவிடக் கூடாதே என்று அவன் மனம் எத்தனை பதைபதைத்து. சுஜித்திடம் அவளை தனியாக விட்டுச் செல்ல பயந்து அத்தியாவசிய தேவைகளுக்கு கூட அவன் பேஸ்மெண்டை விட்டு வெளியே வரவில்லை.

அன்று அர்ஜுன் அவளிடம் கடுமையாக நடந்து கொண்ட போதும், அவள் தன்னை நிரபராதி என்று கூறி கண்ணீர்விட்ட போதும் அவன் மனம் அவள் பக்கம்தான் நின்றது. ஆனால் சூழ்நிலையும் சாட்சிகளும் அவளுக்கு எதிராக இருந்ததால் அவன் கைகள் கட்டப்பட்டுவிட்டன.

கோர்த்தாவின் மீது அவன் கொண்டிருக்கும் விசுவாசம் இன்றுவரை அவனை அவளிடமிருந்து தள்ளி நிறுத்தியிருந்தது. அவள் கோர்த்தாவிற்கு எதிரானவள் அல்ல என்று பூரணமாக நிரூபிக்கப்படும் வரையில் அவனால் அவளிடம் நெருங்க முடியாது. ஆனால் அர்ஜுன் நெருங்கிவிட்டான்.

இன்று காலை அவளை அவனோடு ஒன்றாக - சந்தோஷமாக பார்த்த போது உள்ளே ஏதோ கூர்மையாய் பாய்வது போல் வலித்தது. எதையோ இழந்துவிட்டது போல்.. தோற்றுவிட்டது போல்.. ஏதேதோ.. அவனால் அர்ஜுனிடம் இயல்பாக பேசவே முடியவில்லை. சாப்பிட சென்றவன் காபியை மட்டும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டான்.

அவளுடைய அறையை மாடிக்கு மாற்றிவிட்டானாம்! சுத்தம் செய்வதற்கு கூட மேலே யாரையும் அனுமதிக்க மாட்டான். ஆனால் அவளுக்கு அங்கு அறையே ஒதுக்கியிருக்கிறான்! அவன், அவளை தன்னுடையவள் என்று பிரகடனப்படுத்திவிட்டான் என்பதை புரிந்துக்கொள்ள இந்த ஒரு விஷயமே போதும் – ‘ஓ அர்ஜுன்!’ - அவன் கலங்கினான். காரை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். மாளிகையிலிருந்து வெகுதூரம் வந்து, ஆள் அரவரமற்ற தனிமையான இடத்தில் காரை பார்க் செய்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

மிருதுளாவின் சோகமான முகம் அவன் கண்ணெதிரில் தோன்றியது. அந்த முகம்தான் அவன் மனதில் ஆழப்பதிந்த முகம். இன்று அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள். அந்த சிரிப்பை அர்ஜுன் கொடுத்திருக்கிறான் - உண்மை சுடும்தான். சுட்டாலும் அதை எண்ணிப்பார்த்தது அவன் உள்ளம்.

ஏற்றுக்கொள்ள சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் மிருதுளாவிற்கு தன்னைவிட அர்ஜுன்தான் தகுதியானவன் என்பதை அவனால் மறுக்க முடியவில்லை. கசப்பான உண்மையை மென்று விழுங்கிவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான். அப்போதுதான் அவனை நோக்கிப் பாய்ந்து வந்தது அந்த தோட்டா.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 24

டேவிட் திறமைசாலிதான். ஆனால் நிச்சயமாக அர்ஜுன் ஹோத்ராவின் கண்ணை தட்டும் அளவிற்கு திறமைசாலி இல்லை. மிருதுளாவை அர்ஜுனுக்கு நெருக்கமாக உணவு கூடத்தில் கண்டபோது அவன் முகத்தில் தோன்றி மறைந்த அதிர்வையும், அதிருப்தியையும் அர்ஜுன் ஹோத்ராவின் கண்கள் அதிநுட்பமாக ஸ்கேன் செய்தது. அவனுடைய பார்வை ஏக்கத்துடன் அவள் மீது படிந்த போது அவனுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

‘இவள் என்ன பெரிய பொக்கிஷமா..’ - எரிச்சலை மறைத்துக் கொண்டு, நண்பன் அவளிடம் கேட்ட கேள்விக்கு குறுக்கிட்டு பதில் கூறினான். அதோடு மாலிக்கை பற்றி விசாரித்து பேச்சின் போக்கையும் மாற்ற முயன்றான்.

ஆனால் அவனோ ஏதோ இழக்கக் கூடாததை இழந்துவிட்டது போல் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு டிஃபனை கூட சாப்பிடாமல் போய்விட்டான். அப்படியென்ன மயக்கம்..? மடத்தனமான மயக்கம்..? - கடுப்புடன் அவன் முதுகை வெறித்துக் கொண்டிருந்த போதுதான் அலைபேசியின் இடைவிடாத அழைப்பு அவனை இன்னும் சோதித்தது. கட்டுப்பாடிழந்து வெடித்துவிட்டான். எல்லாம் டேவிட் இடியட்டால் வந்த வினை.

அவன் மட்டும் சாதாரணமாக இருந்திருந்தால் அவனுக்கு இத்தனை கோபமும் வந்திருக்காது, அவளிடம் தன்னை உத்தமனாகக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் இந்த சறுக்கலும் ஏற்பட்டிருக்காது.

நொடிப்பொழுதில் அவள் முகத்தில் எத்தனை கலவரம்! பயந்துவிட்டாள்.. அதை ஒருவாறு அவன் மேக்கப் செய்துவிட்டான் என்றாலும், அவளுடைய ஆழமான நம்பிக்கையை பெற இன்னும் அவன் வேலை செய்தாக வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தவன் அலைபேசியை எடுத்து பூஜாவுக்கு அழைத்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் பூஜா அர்ஜுன் ஹோத்ராவின் அலுவலக அறையில் இருந்தாள்.

அன்று அவளுடைய வேலை திட்டங்கள் என்னவென்று கேட்டு தெரிந்துக் கொண்டு மிருதுளாவை ஷாப்பிங் அழைத்துச் செல்லுமாறு அர்ஜுன் கூறியதும், “ஷாப்பிங்கா!” என்று வியந்தாள்.

“எஸ்.. ஷாப்பிங்கித்தான்.. மிருதுளா இங்க வந்ததுலேயிருந்து சர்வன்ட்ஸ் யூனிஃபார்ம்லேயே இருக்கா. அவளுக்கு நல்ல ட்ரெஸ்ஸஸ், ஷூஸ் இன்னும் என்னென்ன தேவையோ எல்லாம் வாங்கனும். நீதான் அவகூட போய் ஹெல்ப் பண்ணனும்” என்றான்.

இது அவளுடைய வேலை இல்லை. மருத்துவமனையில் பேஷண்ட்ஸை விட்டுவிட்டு மிருதுளாவோடு ஷாப்பிங் செல்ல அவளுக்கு துளியும் விருப்பம் இல்லை. அர்ஜுன் ஹோத்ராவை மறுத்து பேச முடியாமல் சரி என்று தலையாட்டிவிட்டு திரும்பினாள். அடுத்து அவள் மிருதுளாவை தேடித்தான் செல்வாள் என்பதை ஊகித்து, “மிருதுளா மாடில தங்கியிருக்கா.. இன்டெர்காம் நம்பர் 15.. கால் பண்ணினா கீழ வந்து உன்ன மீட் பண்ணுவா” என்றான்.

சட்டென்று அவன் பக்கம் திரும்பினாள் பூஜா. அடிவாங்கியது போல் சிறுத்துப்போய்விட்டது அவள் முகம்.

பூஜாவுக்கு கோர்த்தாவில் நல்ல பெயரும் மதிப்பும் உள்ளது. நேரடி தலைமைக்கு கீழே வேலை செய்யும் வாய்ப்பு பலமுறை அவள் கதவை தட்டியது. ஆனால் அவள் மறுத்துவிட்டாள். காரணம் அர்ஜுன் ஹோத்ரா.

அவனை அவளுக்குப் பிடிக்கும். பிடிக்கும் என்றால் சாதாரணமாக அல்ல. அவனுடைய ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்து ரசிக்கும் அளவுக்கு தீவிரமாகப் பிடிக்கும். உடனே அதை காதல் என்றெல்லாம் எண்ணிவிட வேண்டாம்.

கோர்த்தாவில் அவனுடைய உயரம் என்ன என்பது அவள் அறிந்ததுதான். கிட்டத்தட்ட தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கிறான். அவனை காதலித்து கைப்பிடிக்கும் பேராசையெல்லாம் அவளுக்கு இல்லை.

வானத்தில் இருக்கும் நட்சத்திரத்தை தூரத்திலிருந்து ரசிப்பது போல் - திரையில் ரகளை செய்யும் ஷாரூக்கானை எட்டியிருந்தது ரசிப்பது போல் - கிரௌண்டில் சிக்ஸராக அடித்து தூள் செய்யும் தோனியை தள்ளியிருந்து ரசிப்பது போல் அர்ஜுன் ஹோத்ராவின் மீது அவளுக்கு ஒரு நட்சத்திர மதிப்பு இருந்தது.. இருக்கிறது.

அப்படிப்பட்ட அர்ஜுன் ஹோத்ரா, ஏணியென்ன.. லிஃப்டே வைத்தாலும் தன்னுடைய உயரத்தை எட்ட முடியாத ஒரு சாதாரண.. மிகச் சாதாரண பெண்ணை தனக்கு இணையாக தேர்ந்தெடுத்துவிட்டான் என்கிற ஊகம் அவளை பெரும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் ஆளாக்கிவிட்டது.

அவனுடைய தகுதிக்கு ஏற்றார் போல் ஒரு பெண்ணை கொண்டு வந்து நிறுத்தியிருந்தான் என்றால் அவள் மனம் ஆறுதலடைந்திருக்கும். ஆனால் இதை எப்படி அவளால் ஜீரணிக்க முடியும்.

தன்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பூஜாவை வியப்புடன் நோக்கி, “வா..ட்?” என்று இழுத்தான்.

“அர்ஜுன்! ஆர் யு சீரியஸ்?”

“புரியல..” - அவன் புருவம் சுருங்கியது.

“நீ மிருதுளாவை கேர் பண்ற.. அவ ரூமை கூட மாடிக்கு.. இதெல்லாம்.. எனக்கு புரியல.. ஆர் யு சீரியஸ் அபௌட் ஹர்?”

“நன் ஆஃப் யுவர் பிசினஸ்” - முகத்தில் அடித்தது போல் கூறினான். அவள் முகம் கருத்துவிட்டது. ஆனாலும் சமாளித்துக் கொண்டு பேசினாள்.

“எஸ் ஐ நோ.. இது எனக்கு சம்மந்தம் இல்லாத விஷயம் தான். ஆனா எனக்கு உண்மை தெரியிலன்னா தலை வெடிச்சிடும் அர்ஜுன்.. ப்ளீஸ்.”

“பூஜா! இன்னைக்கு எனக்கு ஆரம்பிச்சதே ரொம்ப கடினமான நாள். அதை இன்னும் நீ கடினமாக்காத. லீவ் நௌ.”

“ஆனா அர்ஜுன்..” – “நௌ..” - மீறவே முடியாத குரல். இறுகிய முகத்தோடு அந்த அறையிலிருந்து வெளியேறினாள் பூஜா.

*********************

அன்றைய காலை உணவு வேளையை மறக்க முடியாத பொக்கிஷ பொழுதாக மிருதுளாவிற்கு மாற்றிக் கொடுத்திருந்தான் அர்ஜுன் ஹோத்ரா. அவளுக்காக காத்திருந்தான், உணவு பரிமாறினான், அவளோடு சேர்ந்து உணவருந்தினான், இனிமையாக பேசினான், சிரித்தான் இடையில் ஒருமுறை அவனுடைய கோப முகத்தையும் பார்க்க நேர்ந்ததுதான்.. ஆனால் அந்த கோபமும் அவனில் ஒரு பகுதிதானே! - புன்னகை மலர்ந்த முகத்துடன் லைப்ரரிக்குள் நுழைந்தாள் மிருதுளா. ஆம், அவளுக்கு புத்தகம் படிக்கும் வழக்கமிருந்தால் அவனுடைய லைப்ரரியை பயன்படுத்திக் கொள்ளும்படி கூறியிருந்தான் அர்ஜுன்.

அந்த அறைக்குள் நுழைந்ததுமே பியானோவில் அவன் அமர்ந்திருப்பது போன்ற மாயத் தோற்றம் அவளை ஆச்சரியப்படுத்தியது. அவனுடைய மென்மையான தீண்டலில் இழையும் இசை இப்போதும் அவள் செவிகளில் எதிரொலித்தது. அதில் மெய்மறந்து அவள் கண்கள் தானாக மூடின.

“ஹேய்..” - அவன் குரல்.. அருகில் இருந்து அழைப்பது போலவே கேட்டது. எத்தனை ஆழமாக ஊடுருவிவிட்டான்! – “மிருதுளா..” - மீண்டும் அவளுக்கு மிக அருகில் ஒலித்தது அந்தக் குரல்.

குழப்பத்துடன் விழி திறந்தாள். “ஆர் யு ஆல்ரைட்?” - ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாக அவள் எதிரில் நின்றான்.

“ஓ காட்!” - மிருதுளா கண்களை மூடி மூடித் திறந்தாள். தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் உருவம் மாயையா அல்லது நிஜமா என்கிற குழப்பம் தீர ஓரிரு நிமிடங்கள் பிடித்தது அவளுக்கு.

“ரூம்ல இருப்பேன்னு நெனச்சேன்” - மென்மையாகக் கூறினான். பூஜாவின் இன்டெர்காம் அழைப்பிற்கு அவளிடமிருந்து எந்த பதிலும் வராததையடுத்து, அவள் அர்ஜுனிடம் முறையிட அவன் நேரடியாகவே அவளை தேடி வந்துவிட்டான்.

“புக்ஸ் ஏதாவது படிக்கலாமேன்னு வந்தேன்.”

“ம்ம்ம்.. அப்புறம் படிச்சுக்கலாம். இப்போ நீ பூஜாகூட ஷாப்பிங் போய்ட்டுவா.”

‘என்ன!’ - மிருதுளாவின் விழிகள் பெரிதாக விரிந்தன. இந்த இரும்புக் கோட்டையிலிருந்து அவளை வெளியே அனுப்புகிறானா! அதுவும் பூஜாவோடு! தப்பிக்கமாட்டாள் என்று எண்ணுகிறானா! அவள் மீது நம்பிக்கை வந்துவிட்டதா! - உள்ளம் துள்ளியது. மறுநொடியே சங்கடத்தில் துவண்டது.

அவள் மீது அவன் கொண்டிருக்கும் நம்பிக்கை மகிழ்ச்சிதான். ஆனால் அந்த நம்பிக்கைக்கு அவள் தகுதியானவள் தானா! பெயரை தவிர அவனிடம் அவள் கூறிய அனைத்தும் பொய். - நிமிர்ந்து அவன் முகத்தை ஏறிட்டாள். உண்மை தெரிந்தால் இந்த அன்பொழுகும் முகம் எப்படி பயங்கரமாக மாறும் என்பதை எண்ணிப் பார்க்கையிலேயே குளிர்பிறந்தது. ஆனாலும் உண்மையை உடைத்துவிடவே நினைத்தாள்.

“அது.. நா.. வந்து..” - உண்மையை சொல்லிவிட வேண்டும் என்பதுதான் அவள் விருப்பம். ஆனால் வார்த்தை வரவில்லை. பயத்தில் தொண்டைதான் உலர்ந்தது.

“என்ன மிருதுளா?” - கனிந்த குரலில் கேட்டான் அர்ஜுன்.

“அன்னைக்கு.. நா..” - அவள் பேச முயன்று கொண்டிருக்கும் போது அவனுடைய அலைபேசி ஒலித்தது.

“ஓரு நிமிஷம்” என்று கையை உயர்த்தி அவளை தடுத்துவிட்டு, அழைப்பை ஏற்றவன் சட்டென்று பதட்டமானான்.

“டோன்ட்.. டோன்ட் கெட் பேனிக்.. ஆளுங்க வந்துகிட்டே இருக்காங்க.. ஜஸ்ட் காம் டௌன் அண்ட் ஹாண்டில் தி சிச்சுவேஷன்” என்றபடி அங்கிருந்து வெளியேறியவன், சட்டென்று நின்று அவள் பக்கம் திரும்பி, “பூஜா வெயிட் பண்ணிட்டிருக்கா” என்று அவளையும் அறிவுறுத்திவிட்டு தடதடவென்று படிக்கட்டில் இறங்கினான்.

***********************

டேவிட்டை நோக்கி பாய்ந்து வந்த தோட்டா கார் கண்ணாடியில் மோதி தெறித்துப் பின்னால் விழுந்தது. புல்லெட் ப்ரூஃப் கண்ணாடி. ஷோரூமிலிருந்து காரை இறக்கியதும் முதல் வேலையாக அதன் அனைத்து கண்ணாடிகளையும் கழட்டிவிட்டு தோட்டா துளைக்காத கண்ணாடியை மாட்டி அதன் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டுதான் பயன்படுத்துவார்கள். கோர்த்தாவில் முக்கிய பொறுப்பிலிருக்கும் அனைவருமே பின்பற்றும் வழக்கம் இது. அந்த வழக்கம் எத்தனை பெரிய ஆபத்திலிருந்து அவனை இன்று காப்பாற்றிவிட்டது.

தோட்டா கண்ணாடியில் வந்து மோதிய கணமே சட்டென்று சீட்டுக்கு அடியில் பதுங்கிய டேவிட் அனிச்சையாய் இடுப்பிலிருந்த துப்பாக்கியை உருவினான். அடுத்த குண்டு மீண்டும் பாய்ந்து வந்து கண்ணாடியில் மோதியது. இந்த முறை தோட்டா எந்த திசையிலிருந்து வருகிறது என்பதை கணக்கிட்டு கொண்டு மெல்ல தலையை உயர்த்தினான்.

மறைத்துக்கொள்ள ஏதுவாக அங்கே என்ன இருக்கிறது என்பதை பார்த்தன். ஒரு சிறு பாறை.. அதிகபட்சம் ஐந்து பேர் அங்கே மறைந்துகொள்ளலாம் என்று கணக்கிட்டான்.

மொத்தமாக வந்து தாக்கினால் சமாளிப்பது கடினம். நாம் தனி ஆள் என்பதையும் காட்டிக்கொள்ளக் கூடாது. தோட்டாவையும் வீணாக்கக் கூடாது. முடிந்த அளவு நேரத்தை கடத்த வேண்டும். சந்தர்ப்பம் கிடைக்கும் போது முறையாக தாக்கிவிட வேண்டும். - சரியாக திட்டமிட்டுக் கொண்டு உதவிக்கு ஆட்களை அழைக்க முடிவெடுத்தான்.

அலைபேசியை எடுத்து அர்ஜுனுக்கு அழைத்து சுருக்கமாக விபரத்தைக் கூறினான். “வெஸ்ட் வுட் லேக்.. தனியா இருக்கேன்.. எவனோ அட்டாக் பண்றான். குரூப்பா இருக்க வாய்ப்பு இருக்கு.. ஹெல்புக்கு ஆள் வேணும். மேக் இட் ஃபாஸ்ட்” - அழைப்பை துண்டித்தான்.

மறு நொடியே இன்னொரு குண்டு அவன் காரை பதம் பார்த்தது. ஆனால் அது வேறு ஒரு திசையிலிருந்து பாய்ந்து வந்தது. டேவிட் பதட்டமானான். இப்போது அவனுடைய பார்வை அந்த திசையை நோக்கியது. மரங்கள் அடர்ந்த பகுதி.. எத்தனை பேர் வேண்டுமானாலும் மறையலாம்.

‘ஹெல்.. ஹெல்.. ஹெல்..’ - அவனுடைய பதட்டம் அதிகமானது. பதட்டப்பட்டால் காரியம் கெட்டுவிடும். தன்னைத்தானே நிதானப்படுத்திக் கொண்டான்.

ஒரே துப்பாக்கி.. ஆறு தோட்டாக்கள்.. தனி ஆள்.. சமாளிப்பது இயலாத காரியம். சூழ்நிலையின் தீவிரம் அவனுக்கு புரிந்தது. இப்போது எதிர்த்து போர் புரிவதைவிட தப்பிச் செல்லும் மார்க்கத்தை தான் பார்க்க வேண்டும்.

தோட்டா துளைக்காத கார் தான்.. தாங்கும்.. அடித்து ஓட்டிவிடலாம் என்று எண்ணி ட்ரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தான். அடுத்த நொடியே, தடதடவென்று தொடர்ச்சியாய் வந்து பாய்ந்தது குண்டு மழை. முன்பக்க கண்ணாடியின் விசிபிலிட்டி சுத்தமாக போய்விட்டது. இன்னும் எத்தனை நேரத்திற்கு அந்த கண்ணாடியும் தாங்கும் என்பது தெரியாது.

வேறு வழியே இல்லை.. இப்போது அவன் போர் புரிந்துதான் ஆக வேண்டும். மீண்டும் சீட்டுக்கு அடியில் பதுங்கினான். கார் கதவை லேசாக திறந்து, கையை மட்டும் சற்று வெளியே கொண்டுச் சென்று அலைபேசி கேமிராவை ஆன் செய்து, டார்கெட்டை ஃபோக்கஸ் செய்து மணலில் ஊன்றி வைத்தான்.

இவனை சுட வேண்டும் என்றால் பாறைக்கு வெளியே சற்றாவது எட்டிப் பார்த்தால் தான் குறி வைக்க முடியும். அந்த சந்தர்ப்பத்தைத்தான் இவன் பயன்படுத்த வேண்டும். இவனுடைய குறிபார்க்கும் திறன் இன்று தெரிந்துவிடும். கண்ணிவைத்துவிட்டு காத்திருக்கும் வேட்டைக்காரன் போல் காத்திருந்தான்.

அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் குண்டுமழை அவன் காரை துவம்சம் செய்தது. இவன் சீட்டுக்கு கீழே பதுங்கியிருந்ததால் தப்பித்தான். ஆனால் அந்த பக்கத்தில் கலஷ்னிக்கோவ் 47-ஐ கையில் பிடித்திருந்தவன் பொட்டில் அடிபட்டு கீழே விழுந்தான். ஒரே புல்லெட் தான், ஆள் காலி. அடுத்த சற்று நேரத்திற்கு எந்த சத்தமும் இல்லை.

ஐந்து நிமிடம் தான், அடுத்த தாக்குதல் ஆரம்பமானது. இந்த முறை காட்டுப்பகுதியிலிருந்து.. இந்த பக்கம் குறிபார்ப்பது சிரமம். எந்த மரத்தில் ஒளிந்திருக்கிறான் என்பதை கணிப்பது சிரமம். அப்படியே கணித்து குறி வைத்தாலும், அதே நேரத்தில் வேறு ஒரு மரத்திற்கு பின்னாலிருந்து வேறு யாராவது இவனை தாக்கும் வாய்ப்பும் உள்ளது. அது ஆபத்து.. ஐந்து தோட்டாக்கள்.. பார்த்து செலவு செய்ய வேண்டும். பொறுமைகாத்தான் டேவிட்.

ஆனால் தொடர்ந்து சீறிக்கொண்டிருந்த தோட்டாக்கள் அவனை பொறுமையாக இருக்க விடவில்லை. பழையபடியே அலைபேசி கேமிராவின் உதவியுடன் ஆள் ஒளிந்திருக்கும் இடத்தையும், வெளியே வரும் சமயத்தையும் கவனித்தான். தாக்க முயன்றான். ஆனால் இந்த முறை வெற்றிக்கனி அவன் பக்கம் விழவில்லை. தோளில் குண்டடிபட்டு சரிந்தான். தாங்கமுடியாத வலி. வேதனையுடன் முனகியவன், சட்டையை கழட்டி பொங்கிப் பெருகும் ரத்தத்தில் வைத்து அழுத்தினான். ‘ஓ! ஷி..ட்!’ - பல்லை கடித்து வலியை சகித்தான். அர்ஜுனின் மீது ஆத்திரம் வந்தது.

அலைபேசியை எடுத்து, “வாட் த ஹெல் ஆர் யு டூயிங் மேன்.. ஐம் டையிங் ஹியர்” என்று கத்தினான்.

“டேவிட்.. லிசன் டு மீ. டேவிட் கேட்குதா.. டோன்ட் லூஸ் யுவர் ஹோப். ஆளுங்க கிளம்பிட்டாங்க. எனிடைம் அங்க இருப்பாங்க. ஓகே.. ஸ்டே ஸ்டராங்.. கொஞ்ச நேரம். ஜஸ்ட் கொஞ்ச நேரம் சமாளி” - அவன் பேசி கொண்டிருக்கும் போதே சரசரவென்று கோர்த்தாவின் மூன்று கார்கள் அங்கே வரிசைக்கட்டி வந்து நின்றன. அடுத்த சில நிமிடங்கள் அங்கே இடி இடிப்பது போல் ஒரே துப்பாக்கி சத்தம் முழங்கி ஓய்ந்தது. டேவிட்டை தாக்கிய மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அதீத இரத்தப்போக்கால் நினைவிழந்த டேவிட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 25

கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் பொறுப்புணர்ச்சியுடன், தன் போக்கிற்கு ஆடை அணிமணிகளை தேர்வு செய்துக்கொண்டிருந்தாள் பூஜா. அவள் தேர்வு செய்யும் ஒவ்வொரு ஆடையின் விலையும் கிட்டத்தட்ட தன்னுடைய ஒரு மாத சம்பளத்திற்கு இணையாக இருப்பதைக் கண்டு திகைத்த மிருதுளா தன்னுடைய மறுப்பை பலமுறை அவளிடம் வெளிப்படுத்தினாள்.

“உனக்கு இதெல்லாம் உண்மையாவே வேண்டாம்னா நீ அர்ஜூன்கிட்டயே சொல்லியிருக்கனும்” என்று முகத்தில் அறைவது போல் கூறி அவள் வாயை அடைத்துவிட்டாள் பூஜா.

அவள் கண்களில் நட்பையும் அன்பையும் மட்டுமே பார்த்துப் பழகியிருந்த மிருதுளா அவள் காட்டிய இந்த திடீர் கடுமையில் முகம் வாடிப்போனாள். தன் மீது ஏன் அவளுக்கு இத்தனை கோபம் என்று புரியவில்லை அவளுக்கு. அதன் பிறகு அவளிடம் பேசவே தயக்கமாக இருந்தது. ஆனால் அவள் அள்ளி குவித்துக் கொண்டிருக்கும் பொருட்களை பார்த்துக் கொண்டு அமைதியாகவும் இருக்க முடியவில்லை. அவள் வாரியிறைத்துக் கொண்டிருக்கும் அத்தனை பணமும் இரத்தம் தோய்ந்த பணம். அந்த பாவத்தின் சுமையை தன் தோள்மீது சுமக்க மிருதுளா தயாராக இல்லை. எனவே,

“இந்த மாதிரி ட்ரெஸ்ஸெல்லாம் நான் யூஸ் பண்ண மாட்டேன். தேவையில்லாம வாங்காதீங்க. ஒரு செட் ஜீன்சும் ஒரு நைட் ட்ரெஸ்ஸும் மட்டும் போதும்” என்று உறுதியாக கூறிவிட்டு தன்னுடைய விருப்பத்திற்கு தேர்வு செய்துக் கொண்டாள். இதற்கான பணத்தை கூட எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்று தோன்றியது.

அவளை ஓரிரு நிமிடங்கள் வெறுமையாக பார்த்த பூஜா வேறு எதுவும் சொல்லாமல் பணம் செலுத்துமிடத்தை நோக்கிச் சென்றாள். வரிசை நீளமாக இருந்தது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த மிருதுளா, “ரெஸ்ட்ரூம் போயிட்டு வந்துடறேன்” என்றாள் பூஜாவிடம் அடக்கமாக. அவளும் விகல்பமில்லாமல் சரி என்று தலையை அசைத்தாள்.

கடந்த முறை அர்ஜுனோடு மருத்துவமனைக்கு வந்திருந்த போது செய்தது போலவே இன்றும் கழிவறைக்கு செல்லும் சாக்கில் ஒளிந்து மறைந்து ஓசி போனை கடன் வாங்கி தாயின் அலைபேசிக்கு தொடர்பு கொள்ள முயன்றாள். அன்று போலவே இன்றும் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. கவலை தோய்ந்த முகத்துடன் வெளியே வந்தாள் மிருதுளா.

பூஜா பில் கவுண்டரிலிருந்து வெளியே வந்து இவளுக்காக காத்துக் கொண்டிருந்தாள். கையில் இரண்டு பிளாஸ்டிக் பைகளை பிடித்திருந்தாள். கைக்கடிகாரத்தை அடிக்கடி பார்ப்பதும், மிருதுளா எங்காவது தென்படுகிறாளா என்று கூட்டத்திற்குள் பார்வையால் துழாவுவதுமாக சற்று பரபரப்புடன் காணப்பட்டாள்.

அவசரமாக அவளிடம் ஓடிச் சென்ற மிருதுளா, “சாரி, லேட் பண்ணிட்டேனா?” என்றாள் சங்கடத்துடன்.

“நா உடனே ஹாஸ்பிட்டல் போயாகனும். சீக்கிரம் வா” என்று அவள் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு வந்து காரில் ஏறிய பூஜா, உடனடியாக இஞ்சினை ஸ்டார்ட் செய்து இலாவகமாக டிராபிக்கில் புகுந்து பாய்ந்தாள்.

“என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?” - அக்கறையுடன் கேட்டாள் மிருதுளா.

“ஒரு சென்சிட்டிவ் கேஸ்.. சின்ன பொண்ணு.. நான் தான் பார்த்துக்கிட்டிருக்கேன். திடீர்ன்னு அக்ரஸிவா ஆயிட்டாளாம். டியூட்டி டாக்டருக்கு ஹாண்டில் பண்ண முடியல. நா அங்க இருந்திருக்கனும். அதுதான் என்னோட முதல் பிரையாரிட்டி.”

“ஐம் சாரி. என்னாலதான் உங்களால ஹாஸ்பிட்டல்ல இருக்க முடியாம ஆயிடிச்சு” - வருத்தப்பட்டாள் மிருதுளா.

பூஜாவின் முகம் இறுகியது. எவ்வாவு முயன்றும் அவளால் உள்ளே பொங்கும் உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை.

“நா அர்ஜுனுக்காகத்தான் வந்தேன்” என்றாள் பட்டென்று.

இப்படி சட்டென்று முகத்தை முறித்துப் பேசும் பேசும் பெண் அல்ல பூஜா. குறைந்தபட்சம் மிருதுளாவிற்கு தெரிந்தவரை. ஆனால் இன்று ஏன் இப்படி நடந்துக்கொள்கிறாள்! - மிருதுளாவின் பார்வை அவள் முகத்தை படிக்க முயன்றது. ஆனால் பலனில்லை. சாலையை வெறித்தபடி இறுகியிருக்கும் முகத்தில் அவளால் எதை படித்துவிட முடியும்?

****************

அந்த பெண்ணுக்கு அதிகபட்சம் பதினேழு பதினெட்டு வயதுதான் இருக்கும். வெறி பிடித்தவள் போல் கையில் கிடைத்ததையெல்லாம் தூக்கியெறிந்து ரகளை செய்துக் கொண்டிருந்தாள். அந்த அறை முழுவதும் உடைந்த பொருட்களும் காகிதங்களும் சிதறிக்கிடந்தன. யாரும் அவளிடம் நெருங்க முடியவில்லை. அவள் உடலில் நிறைய காயங்கள் தெரிந்தன. அவள் கண்களில் கரைபுரண்டோடும் கண்ணீரை கண்டு மிருதுளாவின் மனம் கசிந்தது. ஏதோ பாதிப்பில் அவள் மனம் புரண்டிருப்பதை அவளால் உணர முடிந்தது.

அந்த பெண்ணை பூஜா மிக அழகாக கையாண்டாள். பேச்சு கொடுத்துக் கொண்டே அவளிடம் நெருங்கினாள்.

“வராத.. கிட்ட வராத” என்று அலறியபடி கையில் கிடைப்பதையெல்லாம் தூக்கியெறிந்தபடி விலகிச் செல்லும் அந்த பெண்ணிடம், கனிந்த பார்வையோடும் இதமான வார்த்தைகளோடும் நெருங்கினாள் பூஜா.

அதுவரை கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருந்த அந்த பெண், பூஜாவின் அரவணைப்பில் மெல்ல மெல்ல அமைதியானாள். மூத்த சகோதரியின் - நெருங்கிய தோழியின் தோளில் சாய்வது போல் பூஜாவின் தோளில் சாய்ந்து விம்மி வெடித்து அழுதாள். அவள் முதுகை வருடி, தலையை கோதி ஆறுதல் மொழி பேசினாள் பூஜா.

விலகி நின்று நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா, “என்ன ஆச்சு அந்த பொண்ணுக்கு?” என்றாள் அருகில் நின்ற செவிலியரிடம்.

ஓரிரு நொடிகள் அமைதியாக நின்ற செவிலியரின் வாயிலிருந்து மெல்ல கசிந்தன அந்த வார்த்தைகள்.

“எங்க கிராமத்து பொண்ணுதான். ஏழை குடும்பம்.. வேலைக்கு போயிட்டு ராத்திரி தனியா வரும் போது..” பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் தொண்டை அடைத்தது.

“வரும் போது?” - மிருதுளாவின் அடிவயிற்றிற்குள் ஏதோ ஒரு விசித்திர உணர்வு - பயமும் பரிதவிப்பும் கலந்த பயங்கர உணர்வு. ‘அப்படி எதுவும் இருக்கக் கூடாது கடவுளே’ என்று அவள் மானசீகமாக மன்றாடிக் கொண்டிருக்கும் போதே அவளுடைய பயத்தை உறுதி செய்தாள் செவிலிய சகோதரி.

“மனுஷ மிருகத்துக்கிட்ட மாட்டிக்கிட்டாம்மா..” - இதுவாகத்தான் இருக்கும் என்று ஊகித்துவிட்டாலும், தன் ஊகம் பொய்த்துப்போய்விட வேண்டும் என்றே அவள் மனம் விரும்பியது. ஆனால் இங்கே பொய்த்துப்போனது அவளுடைய விருப்பம்தான்.

விட்டுவிட்டு தோன்றும் விம்மலுடன் பூஜாவின் தோளில் சாய்ந்து கிடந்த அந்த சிறு பெண்ணை ஏறிட்டாள் மிருதுளா. கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

“போலீஸ் ஏதாவது ஆக்ஷன் எடுத்தாங்களா?” - வலுவற்ற குரலில் கேட்டாள்.

“கோர்த்தா ஆளுங்க மேல லோக்கல் போலீஸ் கை வைக்க மாட்டாங்கம்மா” - அமிலம் பாய்ந்தது அவள் செவிகளில். விருட்டென்று அவள் பக்கம் திரும்பினாள்.

“என்ன! கோ..கோர்த்தா ஆளா!” - இதயம் தாறுமாறாக துடித்தது. ஏனென்று புரியாத கோபம்.. ஆத்திரம்.. அவளை முழுமையாக ஆட்கொண்டது.

கோர்த்தா கொலைகார கூட்டம் என்று தெரியும். ஆனால் பெண்களை நாசம் செய்யும் நாசக்காரக் கூட்டமாகவும் இருக்கும் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் காட்டுமிராண்டிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? ஒரு மனிதன் துள்ளத்துடிக்க இந்த கொடூரர்களின் கையால் கொல்லப்பட்டதை கண்ணால் கண்ட பிறகும் இவர்களிடம் நற்பண்பை எப்படி எதிர்பார்த்தாள்! ஐயோ! கடவுளே! - அவள் மனம் தவித்தது. அந்த பெண்ணிற்காக.. அந்த கொடூரன் கோர்த்தாவின் ஆள் என்பதற்காக.. அவனுக்கு அர்ஜுன் அடைக்கலம் கொடுத்திருக்கிறான் என்பதற்காக.. நடந்த அனைத்திற்கும் தானே காரணம் என்பது போல் குன்றினாள். அவள் மனதில் அர்ஜுன் ஹோத்ராவின் மீது துளிர்விட்டிருந்த அன்பு அப்படி அவளை குன்றச்செய்தது.

அவளுடைய அதிர்ந்த முகத்தைப் பார்த்துவிட்டு நர்ஸ் ஏதோ விளக்கம் கூற எத்தனிக்கையில், பூஜா அவளை உள்ளே அழைத்தாள். இவளுடைய உதவி அவளுக்கு தேவைப்பட்டது. உள்ளே சென்ற செவிலியர், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் இரத்த அழுத்தத்தை சோதிப்பதையும், ஏதோ மருந்தை சிரிஞ்சில் ஏற்றி பூஜாவின் கையில் கொடுப்பதையும் பார்த்தபடி அசையாமல் நின்றாள் மிருதுளா.

அடுத்த நொடியே சிரிஞ்சில் இருந்த மருந்து அந்த பெண்ணின் உடலில் பாய்ந்தது. அதற்கடுத்த சில நிமிடங்களில் அவள் நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

வந்த வேலை முடிந்ததும் மிருதுளாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த போது, “அர்ஜுன்!” என்று முணுமுணுத்தாள் பூஜா.

‘அர்ஜுனா!’ - சட்டென்று மிருதுளாவின் பார்வை பூஜாவின் பார்வையை பின்தொடர்ந்து. அங்கே பார்க்கிங்கில் அர்ஜுனின் கார் நின்றது.. உள்ளே அவனும் அமர்ந்திருந்தான். மிருதுளாவின் உடல் வெடவெடத்தது. பயத்தில் அல்ல.. கோபத்தில் - வெறுப்பில். கால்கள் பின்னிக்கொள்ள நடக்கமுடியாமல் பூஜாவை பின் தொடர்ந்தாள்.

“அர்ஜுன்! என்ன இங்க?” - அருகில் சென்று விசாரித்தாள் பூஜா.

“டேவிட் மேல ஒரு அட்டாக் ஆயிடிச்சு.. ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கான். பார்க்க வந்தேன்.”

“அட்டாக்கா! என்ன ஆச்சு? பயப்பட ஒன்னும் இல்லையே? இங்கேயா அட்மிட் பண்ணியிருக்கீங்க?” - பூஜா பதட்டத்துடன் வரிசையாக கேள்விகளை அடுக்க, மிருதுளாவோ இறுகி நின்றாள்.

அவளுடைய பார்வை தன் பக்கம் திரும்பவே இல்லை என்பதை கவனித்தபடியே, “இல்லல்ல.. இங்க இல்ல.. வெஸ்ட் வுட்ல தனியா போய் மாட்டிக்கிட்டான். அங்கேயே ஒரு ஹாஸ்ப்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கோம். கொஞ்சம் ப்ளட் லாஸ் ஆயிருக்கு. மத்தபடி பெருசா பிரச்சனை ஒன்னும் இல்ல. நல்லா இருக்கான்” என்றான்.

“தேங்க் காட்! யாரு அட்டாக் பண்ணினது?”

“சீக்கிரம் தெரிஞ்சிடும்” - மிருதுளாவை துளைத்து அவன் பார்வை.

“ம்ம்ம்.. எனக்கு இங்க ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்துடுச்சு. அதான்..” - அவள் முடிப்பதற்குள், அனைத்தும் தெரிந்தவனாக, “ஐ நோ” என்றான்.

அவனுடைய குறிப்புப் பேச்சு மிருதுளாவின் கவனத்தில் பதியவில்லை. ஆனால் கண்காணிக்கப்பட்டிருக்கிறோம் என்பது பூஜாவிற்கு நன்றாகவே புரிந்தது.

“நீ போய் உன்னோட வேலையை கவனி. நா மிருதுளாவை கூட்டிட்டு போயிக்கிறேன்” என்று பூஜாவிடம் கூறிவிட்டு மிருதுளாவை பார்த்தான். அவள் உடல் மேலும் இறுகியது. முகத்தில் கடுமை கூடியது.

“கெட் இன் மிருதுளா” - இயல்பாக அழைத்தான்.

துஷ்டனை கண்டால் தூர விலகு என்பார்கள். ஆனால் அவளுடைய துரதிஷ்டம், விலகிச் செல்ல முடியாத அளவிற்கு துஷ்டன் அவளை துரத்திக் கொண்டே இருக்கிறான்.

அவனிடம் வாதம் செய்யவோ வழக்காடவோ அவள் விரும்பவில்லை. எனவே வெறுப்பை விழுங்கிக் கொண்டு, பூஜாவிடம் தலையசைத்துவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள்.

வெகு நேரம் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கார் நகரத்தை கடந்து காட்டு வழியில் புகுந்து எஸ்டேட்டை நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், “என்ன விஷயம்?” என்றான் அர்ஜுன்.

மிருதுளா பதில் சொல்லவில்லை. ஜன்னல் பக்கம் பார்வையை பதித்திருந்தவள் அவன் பேசியதே கேட்காதது போல் அமர்ந்திருந்தாள்.

“மிருதுளா” - அழுத்தமாக அழைத்தான். இந்த முறை அவளால் கேட்காதது போல் பாசாங்கு செய்ய முடியவில்லை. தலையை மட்டும் அவன் பக்கம் திருப்பினாள். ஆனால் பார்வை உயரவில்லை. அவன் முகத்தை ஏறிட்டு பார்க்கவே பிடிக்கவில்லை அவளுக்கு.

“என்ன ஆச்சு?” - இணக்கமாகக் கேட்டான்.

அந்த குரலும்.. பேச்சும்.. பற்றிக்கொண்டு வந்தது. இப்படி பேசிப் பேசியே அவள் மதியை மழுங்கடித்துவிட்டானே! ஆத்திரம் பொங்கியது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, “நத்திங்” என்று கூறிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

அந்த பெண்ணின் நிலையை எண்ணி மனம் தவித்தது. தன்னுடைய முட்டாள்தனத்தை எண்ணி கண்ணை கரித்தது. உதட்டை அழுந்த மூடிக்கொண்டு ஆத்திரத்தை விழுங்கினாள்.

அவளுடைய உடல்மொழியும் கலங்கிய முகமும் ஏதோ சரியில்லை என்று உணர்த்த அர்ஜுன் காரை ஓரம்கட்டி நிறுத்தினான்.

அதுவரை இல்லாத பயம் சட்டென்று தொற்றிக்கொள்ள உடனே அவன் பக்கம் திரும்பினாள் மிருதுளா.

‘ஆள் நடமாட்டமில்லாத சாலை.. எதற்கு காரை நிறுத்தினான்.. என்ன செய்ய போகிறான்..’ - அவன் மீதே சந்தேகம் எழுந்தது. பெண்ணை சீரழித்தவனுக்கு அடைக்கலம் கொடுத்தவனை உத்தமன் என்றா எண்ணத் தோன்றும். கோபத்தை மிஞ்சிய பயம்.. பயத்தை மிஞ்சிய கோபம் என்று இரு உணர்வுகளும் சரிக்கு சரியாய் போட்டிப்போட்டுக் கொண்டு மேலெழுந்தன.

அவளுடைய விசித்திர முகபாவம் அவனை குழப்பியது. இதற்கு முன் அவளை இப்படி ஒரு நிலையில் அவன் பார்த்ததே இல்லை.

“மிருதுளா. நீ ஏதோ பிரச்சனையில இருக்கேன்னு தெரியுது. என்னன்னு சொன்னாத்தானே என்னால ஏதாவது செய்ய முடியும். ப்ளீஸ் ஸ்பீக் அவுட்” - ஆதரவாக அவள் கையைப் பற்றினான்.

அவ்வளவுதான்.. அதுவரை உள்ளே பொங்கிக் கொண்டிருந்தது வெடித்துக் கொண்டு வெளியேறியது.

“ஏ விடு என்னைய..” என்று வெடுக்கென்று அவன் கையை உதறிவிட்டு தனக்குள் ஒடுங்கினாள்.

சட்டென்று அவள் தன்னை ஒருமையில் விளித்ததை உணர்ந்து, “எக்ஸ்கியூஸ் மீ” என்றான் கனத்த குரலில். நொடியில் அவன் முகமே மாறிவிட்டது.

நொடிப் பொழுதில் எழுந்த கோபத்தில் வார்த்தை வெடித்துச் சிதறிவிட்டதே ஒழிய இப்படிப்பட்ட இடத்தில் அவனுடைய கோபத்தை தூண்டிவிட்டு அந்தக் கோபத்திற்கு அதற்கு இரையாகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வும் அவளுக்கு இருக்கத்தான் செய்தது. எனவே, “ப்ளீஸ்.. காரை எடுங்க” என்றாள் உடனே குரலை தணித்து. அதை சொல்லும் பொழுது அவள் குரல் நடுங்கியது. கண்களில் கண்ணீர் குளம் கட்டிவிட்டது.

“என்ன சொன்ன இப்போ?”

“கா..காரை ஸ்டார்ட்” - “அதுக்கு முன்னாடி” - அவளை இடைவெட்டி அழுத்தம் திருத்தமாகக் கேட்டான்.

“அது.. ஐம்.. ஐம் ஜஸ்ட்..” - எதுவும் சொல்ல முடியாமல் தவித்தாள். கண்ணீர் கரை புரண்டது.

“என்ன நெனச்ச என்னை பத்தி.. தேர்ட் ரேட் பொறுக்கின்னா? ம்ம்ம்?” - குரலை உயர்த்தி அதட்டினான். கோபத்தில் தகித்தது முகம்.

‘தேர்ட் ரேட் பொறுக்கியோட கூட்டாளி.. ரேப்பிஸ்டுக்கு ஹெல்ப் பண்ணின லோஃபர்’ - மனதில் நினைப்பதை வெளிப்படுத்த முடியாமல் மெளனமாக அமர்ந்திருந்தாள்.

“உன்கிட்ட தப்பா நடக்கனும்னு நெனச்சிருந்தா நா இவ்வளவெல்லாம் சிரமப்படனும்ன்னா நினைக்கிற? நீ இன்னமும் என் வீட்ல என் கண்ட்ரோல்ல தான் இருக்க. நியாபகம் இருக்குல்ல?” - இந்த குரல் முதல் நாள் அவளை மிரட்டிய குரல். பேஸ்மெண்டில் அவளை அச்சுறுத்திய குரல்.

மிருதுளாவின் இதயம் தறிகெட்டு துடித்தது. சுவாசம் சீரற்று ஏறி இறங்கியது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் பல்கலைக் கடித்தான்.

‘ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி முழிக்கறத பாரு’ - கடுமையான கோபமிருந்தாலும், மிரண்ட மான்குட்டி போல் திருதிருவென்று விழிப்பவளை மேலும் கலவரப்படுத்த முடியாமல் காரை எடுத்தான். ஸ்டியரிங் வீலை பற்றியிருந்த விதமும், ஆக்சிலேட்டரில் கொடுத்த அழுத்தமும் அவனுடைய கோபத்தின் அளவை படம் போட்டுக்காட்ட செய்து வைத்த சிலை போல் அசையாமல் அமர்ந்திருந்தாள் மிருதுளா. அடுத்து வந்த பத்து நிமிட பயணமும் அமைதியாகவே கழிந்தது.

***********************

மிருதுளா கண்விழிக்கும் போது மாலை ஐந்து மணியிருக்கும். அந்த பெண்ணை பற்றி சிந்தித்துக் கொண்டே படுத்திருந்தவள் அப்படியே உறங்கிவிட்டாள். உறங்கி எழுந்ததாலோ என்னவோ மனம் சற்று அமைதியடைந்திருந்தது. எழுந்து குளியலறைக்குச் சென்று ஒரு குட்டி குளியல் போட்டுவிட்டு வெளியே வந்தாள். அர்ஜுன் ஹோத்ரா என்னும் அரக்கனின் தயவில் வாங்கிய புது ஆடையை தொட்டுப் பார்க்கவே பிடிக்கவில்லை. பழைய ஆடையிலேயே ஒன்றை எடுத்து உடுத்திக்கொண்டாள். இதுவும் அவனுடைய இரத்தம் தோய்ந்த பணத்தின் பாவம் தான். ஆனால் வேறு வழியேயில்லை. இங்கிருந்து வெளியேறும்வரை.. அல்லது அந்த முயற்சியில் உயிர்போகும் வரை.. இதை சகித்துத்தான் ஆக வேண்டும். தலைவாரி நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை எடுத்து ஒட்டினாள். காபி குடிக்க வேண்டும் போல் இருந்தது. ‘இங்கே இருப்பது காப்பியா.. அல்லது அப்பாவிகளின் இரத்தமா!’ - மனசாட்சி கேள்வி கேட்டது. ‘கடவுளே!’ - தலையை உலுக்கினாள். பூட்டிய அறைக்குள் மூச்சுவிடவே சிரமமாக இருப்பது போல் தோன்றியது. கீழே இறங்கி தோட்டத்திற்கு வந்தாள்.

“மிருது” - மகிழ்ச்சி பொங்க அவளை எதிர்கொண்டாள் சுமன்.

அவள் மீது மிருதுளாவிற்கு கோபம் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அவள் இப்படி அன்போடு அழைக்கும் போது அவளால் முகத்தை திருப்பிக்கொள்ள முடியவில்லை. அதோடு முதலில் இருந்த கோபமும் இப்போது வெகுவாய் குறைந்துவிட்டதால் அவளும் தோழியைப் பார்த்து இயல்பாக புன்னகைத்தாள்.

இருவரும் பழைய நட்புடன் பேசிக் கொண்டிருந்தார்கள். சுஜித்தின் தற்போதைய ஆக்ரோஷ மனநிலையையும், அதனால் அவனுக்கும் தனக்கும் அவ்வப்போது ஏற்படுகின்ற மனக்கசப்பையும் கூறி வருத்தப்பட்டாள் சுமன்.

ஏற்கனவே அவள் மனம் அர்ஜுனையும் அவனுடைய கூட்டத்தையும் எண்ணி எரிந்துக் கொண்டிருந்தது. அந்த தீயில் எண்ணையை ஊற்றுவது போல் இவள் சுஜித்திற்காக உருகியதும் கடுங்கோபத்துடன் பொங்கிவிட்டாள் மிருதுளா.

“சுஜித்.. சுஜித்.. சுஜித்.. இதை தவிர வேற எதுவுமே உனக்கு தெரியாதா? கண்ணு இருந்தும் ஏன் இப்படி குருடா இருக்க சுமன்? இங்க இருக்க யாரும் மனுஷங்களே இல்ல.. அனிமல்ஸ்.. புரியுதா உனக்கு?” - குபீரென்று சிவந்துவிட்ட முகத்துடன் கண்களை உருட்டி ஆக்ரோஷமாக சீறும் தோழியைக் கண்டு திகைத்த சுமன்,

“என்ன..? என்ன ஆச்சு?” என்றாள் எதுவும் புரியாமல் விழித்தபடி.

“ஒரு சின்ன பொண்ணு.. பதினெட்டு வயசுகூட ஆகாத சி..ன்..ன பொண்ணு.. இதே கோர்த்தா க்ரூப்ல இருக்க ஒருத்தன் அவளை என்ன பண்ணி வச்சிருக்கான் தெரியுமா உனக்கு? அவனை இந்த கேங், சட்டத்திலிருந்து பத்திரமா சேவ் பண்ணியிருக்கு தெரியுமா உனக்கு? இப்படி ஒரு மட்டரகமான கேங்ல இருக்க ஒருத்தனுக்காக நீ.. ச்சே.. ப்ளீஸ்.. யோசி.. முழிச்சுக்க.. இந்த சகதியிலேருந்து வெளியேற ட்ரை பண்ணு. ஜஸ்ட் ட்ரை டு கெட் அவுட் ஆஃப் திஸ் ஹெல் டாமிட்” - வார்த்தைகள் வெறுப்புடன் வெளியே வந்து விழுந்தன.

“நோ.. நீ தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்க மிருது.”

“தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கேனா! சீரியஸ்லி! எவ்வளவு கூலா பேசுற நீ! ஒரு பொண்ணு பலியாயிருக்கா.. ரேப்பிஸ்ட் ஒரு கோர்த்தா மேன்.. போலீஸ் அவன் மேல ஆக்ஷன் எடுக்கல.. காரணம் கோர்த்தா ஹெட்.. இதெல்லாம் இல்லைன்னு சொல்றியா நீ? ஹாங்..?”

“இல்ல.. நா அப்படி சொல்லல..”

“வேற? வேற எப்படி சொல்ற? உன்னோட நியாயம் எனக்கு புரியவே இல்ல. ஒரு பொண்ணா இருந்துகிட்டு இதை எப்படி நீ நியாயப்படுத்துவ? ஹொவ் குட் யு?” - கொந்தளித்தாள்.

“போலீஸ்கிட்ட மாட்டினா பெருசா என்ன ஆயிடும்னு நினைக்கிற நீ? ஆறு மாசமோ ஒரு வருஷமோ.. திரும்ப வெளியில வந்து அதையேதான் செய்வான். ஆனா இங்க அப்படியெல்லாம் இல்ல. இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணிட்டா அவ்வளவுதான்.. முடிஞ்சுது கதை” - அவள் என்ன சொல்கிறாள் என்று மிருதுளாவிற்கு புரிந்தது. ஆனால் நம்ப முடியவில்லை.

“நோ.. நா உன்ன நம்ப மாட்டேன். நீ கோர்த்தாவுக்கு பரிஞ்சு பேசுற. கண்மூடித்தனமான சப்போர்ட் பண்ற. இது கொலைகார கூட்டம். இதுங்களுக்கு பிரின்சிபல்ஸ் எல்லாம் இருக்கவே முடியாது. எதையும் செய்ற மிருகங்கள். லிமிட்ஸே இல்லாத மான்ஸ்டர்ஸ்..” - வெறுப்புடன் முகத்தை சுளித்தாள்.

“இங்க ரொம்ப ஸ்ட்ராங்கான பிரின்சிபல்ஸ் இருக்கு மிருதுளா. ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸ் இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒரு லிமிட் இருக்கு. அதை தாண்டி ஒரு இம்மி நகர்ந்தாலும் தண்டனை ரொம்ப பெருசா இருக்கும்” - அழுத்தமாகக் கூறினாள் சுமன்.

“ஓஹோ! அப்படி என்ன பெரிய தண்டனையை அந்த ராட்சசனுக்கு கொடுத்துட்டீங்க?” - நக்கலாகக் கேட்டாள்.

“சாவு.. கோரமான சாவு..”

“வாட்!”

“எஸ்.. அவன் இப்போ உயிரோட இல்ல..”

மிருதுளாவிற்கு பேச்சு வரவில்லை. தோழியின் முகத்தை பார்த்தபடியே திகைத்து நின்றாள்.

“நேத்து காலையில தோட்டத்துல ஒரு சம்பவம் நடந்தது. பார்த்தியா நீ?”

மிருதுளாவின் புருவம் சுருங்கியது. ‘ஆம்’ என்பது போல் தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

“அவன்தான்!”

“கடவுளே!” - கண்களை இறுக்கமாக மூடினாள். “ஹி இஸ் நாட் எ ப்ளடி டீனேஜர். அவ அப்பா வயசு இருக்கும் அவனுக்கு. அவன் எப்படி!” - மிருதுளாவின் மனம் கொதித்தது.. கண்களில் கண்ணீர் கசிந்தது.

“இனி கோர்த்தால இருக்க யாருமே இப்படி ஒரு தப்பை செய்ய துணியமாட்டாங்க. அதனாலதான் அவனை பேஸ்மெண்டுக்கு கொண்டு போகாம பப்ளிக்கா.. எல்லாருக்கும் முன்னாடி வச்சு முடிச்சாங்க. அது அவனுக்கு தண்டனை! மத்தவங்களுக்கு எச்சரிக்கை!”

‘அவன் வாழ தகுதியில்லாதவன்’ - அர்ஜுன் ஹோத்ராவின் குரல் அவள் செவியில் எதிரொலித்தது. அவளுடைய கொதிப்பு படிப்படியாய் அடங்கி உள்ளே ஒருவித திருப்தி படர்ந்தது. “அப்படி ஒரு சாவு அவனுக்கு தேவைதான்.. ஹி டிஸர்வ்ஸ் இட்..” - முதல் முறையாக ஒரு மனிதனின் கொடூர மரணம் அவளை மகிழ்வித்தது. இது குரூரமா! அரக்க குணமா! தெரியவில்லை. ஆனால் அவள் மனம் மகிழ்ந்தது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 26

பியானோ இசை கேட்குமா என்கிற எதிர்பார்ப்போடு அன்று இரவு வெகு நேரம் தன்னுடைய அறையில் காத்திருந்த மிருதுளா இறுதியில் ஏமாற்றத்துடன் படுக்கையில் சாய்ந்தாள். உறக்கம் வரவில்லை.

ஆக்ரோஷமாக மருத்துவமனையை ரகளை செய்து கொண்டிருந்த அந்த பெண், இரத்தம் ஒழுக ஒழுக அர்ஜுன் கையால் வதைபட்ட அந்த மலை மனிதன், ‘தேர்ட் ரேட் பொறுக்கியா நா?’ - சீற்றத்துடன் பாய்ந்த அர்ஜுன் ஹோத்ரா.. அனைத்து சம்பவங்களும் மாறி மாறி அவள் சிந்தனையை ஆக்கிரமித்தன.

புரண்டு படுத்து கண்களை இறுக்கமாக மூடி உறங்க முயன்றாள். அப்போதுதான் அவளை தாலாட்டுவது போல் பியானோ இழைந்து. சட்டென்று உற்சாகத்துடன் எழுந்து அமர்ந்தாள் மிருதுளா. நேரம் பதினொன்று என்றது சுவர் கடிகாரம்.

நேரமாகிவிட்டதே என்று புத்தி அறிவுறுத்தியது. மனமோ அவன் விழித்துத்தானே இருக்கிறான் என்று உந்தியது. பின்னோக்கி இழுக்கும் தயக்கத்தை விஞ்சியது பக்கத்து அறையிலிருந்து வந்த ஈர்ப்பு. மெல்ல எழுந்து பியானோ அறைக்குச் சென்றவள் வாயிலில் தயங்கி நின்றாள். அவள் வந்தது தெரிந்தும் அவன் பார்வை மற்றும் கவனம் இரண்டும் இசைப் பெட்டியிலிருந்து விலகவில்லை.

ஓரிரு நிமிடங்கள் அவனுடைய அங்கீகரிப்பை எதிர்பார்த்து தயங்கி நின்ற மிருதுளா பிறகு தானாகவே உள்ளே சென்றாள். பியானோவிற்கு எதிரில் கிடக்கும் சோபாவில் அமர்ந்தாள். அடுத்தடுத்து தொடர்ந்து அவன் வாசித்த மூன்று பாடல்களில் மூழ்கி லயித்தாள்.

பியானோ பெட்டியில் அவன் விரல்கள் ஆடும் நடனம், ஏறி இறங்கும் புருவத்தின் தாளம், கூடிக் குறையும் உதடுகளின் அழுத்தம், கற்றையாய் நெற்றியில் சரியும் கேசம், ஒற்றை தலை சிலுப்பலில் அதை அவன் மேலே ஏற்றும் பாங்கு என்று அவனுடைய அசைவுகள் ஒவ்வொன்றும் அவளுக்குள் ஆழமாகப் பதிவாகின.

மூன்றாவது பாடல் முடிந்த பிறகு அறையில் நிசப்தம் சூழ்ந்தது. பார்வைகள் இரண்டும் மௌனமாய் மொழியாடிக் கொண்டன.

“ஐம்.. சாரி..” - சற்று நேரம் கழித்து மிருதுளா வாய் திறந்தாள்.

“சாரி! எதுக்கு?”

“அவனை ப்ரொடெக்ட் பண்றீங்கன்னு நெனச்சேன்.”

அவன் புருவம் சுருங்கியது. மிருதுளா பூஜாவோடு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறாள் என்கிற வரைதான் அவனுடைய செவிக்கு வந்திருந்தது. அதற்கு மேல் அவள் யாருடைய அறைக்குச் சென்றாள்.. உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் அவளை தொடர்ந்துக் கொண்டிருந்த நிழல் உருவத்தால் அறிந்துகொள்ள முடியவில்லை. காரணம், பாதிக்கப்பட்ட அந்த பெண் தங்கியிருந்த அறையை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அந்த நியூஸ் வெளியே தெரிவதை கோர்த்தா விரும்பவில்லை என்பதே அத்தகைய பாதுகாப்புக்கு காரணம்.

ஆகவே அவனுக்கு கிடைத்த குறைந்தபட்ச தகவலைக் கொண்டு, அவளுடைய இந்த மொட்டையான பேச்சை அவனால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எனவே, “யாரை ப்ரொடெக்ட் பண்றேன்னு நெனச்ச?” என்றான் குழப்பத்துடன்.

“அந்த பொண்ண ஹராஸ் பண்ணினவனை.”

“ஓ!” - இப்போது அவனுக்கு அனைத்தும் தெளிவாக விளங்கிவிட்டது.

“யார் உன்கிட்ட இதெல்லாம் சொன்னது? பூஜாவா?”

“அது மேட்டர் இல்ல.”

“ஓ ரியலி! வேற எது மேட்டர்?” - நக்கலும் கோபமுமாகக் கேட்டான்.

“யு பனிஷ்ட் ஹிம். அதுதான் மேட்டர்” - அவள் குரலில் நிறைவு இருந்தது. முகத்தில் மகிழ்ச்சியிருந்தது. கண்களில் பெருமிதமிருந்தது.

சட்டென்று அவன் முகத்தில் ஒரு தீவிரம் வந்தது. “என்னைய அப்படி பார்க்காத ஐம் நாட் எ ஹீரோ.. என்னோட தொழிலை தாண்டி ஒரு துரும்பையும் நா அசைக்க மாட்டேன். அவனால கோர்த்தாவுக்கு பிரச்சனை. பிரச்சனைகள் எதையும் நாங்க உள்ள வச்சுக்கறது இல்ல. முடிச்சிடுவோம்.. அவனையும் முடிச்சிட்டோம். அவ்வளவுதான்” என்றான் அலட்சியமாக.

அவளிடம் தன்னை ஹீரோவாக நிலை நிறுத்த வேண்டும், அவளை தன் பொறியில் சிக்கவைக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய எண்ணம். ஆனால் தன்னுடைய எண்ணத்திற்கே எதிராக ஒரு கூற்றை வெளியிட்டான். எந்த உந்துதல் தன்னை அப்படி பேச வைத்தது என்று அவனுக்கே புரியவில்லை.

மிருதுளாவின் முகம் சுருங்கியது. அவளுடைய புருவங்கள் முடிச்சிட்டன. அப்போதுதான் அவனுக்கு தன் தவறு புரிந்தது. அடுத்த நொடியே அவனுடைய முகமும் குரலும் மாறியது. கபடன் தலை தூக்கினான்.

“நீ ரொம்ப அப்பாவி மிருதுளா.. கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும். குறிப்பா இந்த மாதிரி இடத்துல. ஈஸியா யாரையும் நம்பக் கூடாது. புரியுதா?” - அக்கறையோடு கூறினான்.

அவன் நம்பக் கூடாது என்று அறிவுரை கூறும் போதுதான் அவனை முழுமையாக நம்பவேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. முகத்தில் மலர்ச்சியும் மீண்டது.

“வா.. இப்படி வந்து உட்காரு” அவளை பியானோ ஸ்டூலில் அமரச் செய்து சுலபமான நோட்ஸை கற்றுக்கொடுத்தான். அப்படி அவன் கற்றுக்கொடுக்கும் போது இசைப்பெட்டியின் விசைகளில் அவனுடைய விரல்களின் நளினமான அசைவையும் மென்மையான தீண்டலையும் கண்கொட்டாமல் கண்ட மிருதுளா, ‘இதே கை கொலையும் செய்யுமா!’ என்று எண்ணினாள்.

“விருப்பம் வேற கடமை வேற” என்றான் அர்ஜுன்.

சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் மிருதுளா. மனதில் நினைப்பதாக எண்ணி வாய்விட்டு உளறியிருக்கிறோம் என்பதை உணரவே அவளுக்கு சில நொடிகள் பிடித்தது. அதன் பிறகுதான் அவனுடைய கூற்றின் பொருள் என்ன என்பதை பற்றி யோசித்தாள். அவளை அதிக நேரம் யோசிக்கவிடாமல் அவனே விளக்கமும் கூறினான்.

“மியூசிக் என்னோட விருப்பம்.. துப்பாக்கி என்னோட கடமை.. என்னோட கடமையை உன்னோட இடத்திலிருந்து மதிப்பிடாத. கணக்கு தப்பா போகும். டோன்ட் ஜட்ஜ் மீ, ஓகே” என்று கூறிவிட்டு லேசாக புன்னகைத்தான். அந்த புன்னகை அவ்வளவு அழகாக இருந்தது - மிருதுளாவின் பார்வைக்கு.

“யாராலயும் உங்கள ஜட்ஜ் பண்ண முடியாது. நீங்க ரொம்ப வித்தியாசமானவர்” என்று கூறிவிட்டு அவன் சொல்லி கொடுத்த நோட்ஸை வாசித்துப் பழகினாள். அவனோடும் இசையோடும் தனித்திருக்கும் அந்த பொழுதை அவள் மிகவும் ரசித்தாள்.

அன்றைய செஷனை முடித்துக் கொண்டு இறுதியாக அவள் கிளம்பிய போது அர்ஜுன் அவளுக்கு ஒரு பரிசு கொடுத்தான்.

‘அலைபேசி!’ - மிருதுளாவின் கண்கள் விரிந்தன. ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.

“வாழ்ந்த ஊர்லேயிருந்து திடீர்ன்னு ரொம்ப தூரம் வந்துட்ட. அங்க உனக்கு ஃபிரண்ட்ஸ் இருக்கலாம்.. அவங்ககிட்ட பேசனும்னு தோணலாம்.. தேவைப்படலாம்.. வச்சுக்க” என்றான்.

மிருதுளா பூரித்துப்போனாள். அவனுடைய அக்கறையும் கவனிப்பும் அவளை மெய்சிலிர்க்கச் செய்தது. அதுமட்டுமல்ல, அவள் மீது அவனுக்கு எத்தனை ஆழமான நம்பிக்கை! அலைபேசியையே கையில் கொடுத்துவிட்டானே! - குற்றஉணர்ச்சிக் கூட தோன்றியது. ஆம்! அவனுடைய நம்பிக்கைக்கு தகுதியாக அவள் நடந்துகொள்ளவில்லையே! அவளிடம் ரகசியம் இருக்கிறதல்லவா. அந்த குற்றஉணர்ச்சி.

ஷாப்பிங் மால் கழிவறையில் போனை கடன்வாங்கி திருட்டுத்தனமாக தாய்க்கு தொடர்புகொள்ள முயன்றதை அறிந்து, தன்னை இன்னும் சுலபமாக வேவு பார்க்கத்தான் இந்த அலைபேசியை அன்பளிப்பாக கொடுக்கிறானோ என்கிற சந்தேகம் எள்ளளவு கூட அவளுக்குத் தோன்றவில்லை. அவனை முற்றும் முழுதாக நம்பினாள். அந்த நம்பிக்கை தன்னை எவ்வளவு பெரிய ஆபத்திற்கு ஆளாக்கப் போகிறது என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.

**********************

அந்த அலைபேசியை கையில் எடுக்கும் பொழுதெல்லாம் அவளுக்குள் ஒருவித குறுகுறுப்பு இருந்துக்கொண்டே இருந்தது. தவறு செய்வது போன்ற உணர்வு அவளை சங்கடப்படுத்தியது. தன்னைப் பற்றிய உண்மையை சொல்லிவிட வேண்டும் என்றுதான் விரும்பினாள். ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு அவளை தடுத்துக் கொண்டே இருந்தது. அதோடு தாயின் நினைவுகளும் அவளை உறங்கவிடாமல் செய்தது. அவர்களுக்கு என்னவாயிற்று என்கிற கவலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேயிருந்தது.

பகல் முழுக்க இருவரும் அவரவர் உலகத்தில் மூழ்கியிருந்தாலும் இரவு உறங்கச் செல்வதற்கு முன் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருவரும் சந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். இசையோடு இணைந்திருக்கும் அந்த நேரத்தை இருவருமே தனிச் சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்தார்கள். அந்த நேரத்தை விரும்பினார்கள் - ரசித்தார்கள் - அந்த நேரத்திற்காக கார்த்திருக்கவும் செய்தார்கள். இருவருக்கும் இடையே ஓர் அழகான உணர்வு பரிமாற்றம் நடந்துக் கொண்டிருந்தது. பெயரிட முடியாத ஆரம்பநிலை அது. பாலின ஈர்ப்பிற்கும் நட்பிற்கும் இடையில் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்திருந்தார்கள். அல்லது அப்படி இணைந்திருப்பதாக மிருதுளா நம்பினாள்.

*********************

நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஊருக்கு வெளியே பராமரிப்பற்று கிடந்த அந்தக் கட்டிடத்தில் மின்விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. கோர்த்தா ஆட்களின் நடமாட்டமும் அதிகமாக இருந்தது. இருள் மறைவில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்களை கவனித்தால் உள்ளே பெரிய தலைகள் இருப்பதை கூட அறிந்துக்கொள்ளலாம்.

“இதுவரைக்கும் யார் லீடிங்னு தெரியல” - காவலுக்காக வெளியே சுற்றிக் கொண்டிருந்தவர்களின் ஒருவன் சொன்னான்.

“இங்கதான் இவ்வளவு பேர் இருக்கோமே. நீ வேணுன்னா கொஞ்ச நேரம் உள்ள போய் பார்த்துட்டு வா” - மற்றவன் பதில் சொன்னான்.

முந்தையவனுக்கு உற்சாகம் பிரவாகமெடுத்தது. “சீக்கிரம் வந்துடறேன்” என்று கூறிவிட்டு உள்ளே ஓடினான். சிங்கங்கள் இரண்டு ஆக்ரோஷத்துடன் மோதிக்கொள்ளும் காட்சியை நேரடியாக பார்க்க வேண்டும் என்கிற ஆவல் அவனை துரத்தியது.

பாக்சிங் ரிங் போன்று பாதுகாப்பு அம்சங்களோடு ரப்பர் கயிற்றால் கட்டப்பட்ட ரிங் அல்ல அது. பத்து அடி உயர இரும்பு கம்பி வலையை கூண்டு போல சுற்றி அடைத்து வைத்திருந்தார்கள். ‘கேஜ் ஃபைட்டிங்’ என்றழைக்கப்படும் கோரமான சண்டை போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளும் சிங்கங்கள் இரண்டும் உள்ளே ஒன்றை ஒன்று பார்த்து உறுமிக் கொண்டிருந்தன.

இவருடைய உடம்பிலும் இரத்தக் காயம் அதிகமிருந்தது. கடுமையான பயிற்சியால் உடம்பில் கச்சிதமாய் தேங்கியிருந்த சதைக்கட்டுகள் வியர்வையில் குளித்திருந்தது. சுஜித்திற்கு கண்ணோரம் காயம். மாலிக்கிற்கு நாசியில் வெட்டுப்பட்டிருந்தது. பசித்த புலியின் கொலைவெறியோடு இருவரும் ஒருவரையொருவர் வேட்டையாட தயாராக நின்றார்கள். ‘டிங்’ என்று ஒற்றை மணியடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் பாய்ந்தார்கள். யாரோ ஒருவரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, காரணமே இல்லாமல் காட்டுத்தனமாக தாக்கிக் கொண்டார்கள். சுஜித்தின் வேகமும் ஆக்ரோஷமும் மாலிக்கைவிட இருமடங்கு அதிகமாக இருந்தது. அசுரத்தனமாகத் தாக்கி அவனை நிலைகுலைய வைத்தான்.

கம்பி வளையத்திற்கு வெளியே குழுமி நின்ற வீரர்கள், அந்த கோரக்காட்சியைக் கண்டு ரசித்து உற்சாகக் கூச்சலிட்டார்கள். மேல்தளத்தில் அமர்ந்தபடி கீழே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள் பெரிய தலைகள்.

“மாலிக் தேவையில்லாம ரிஸ்க் எடுத்துட்டான்” – “ஜெயிப்போம்னு தெரிஞ்சுதான் சுஜித் ரிங்ல இறங்க சேலன்ஞ் பண்ணியிருக்கான்” – “அவனுக்கு அவனோட பவர் தெரிஞ்சிருக்கு” - அர்ஜுனோடு அமர்ந்திருந்த கோர்த்தாவின் மற்ற தளபதிகள், வெல்லப்போவது சுஜித் தான் என்கிற எதிர்பார்ப்போடு தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அவனோட பவர் என்னனு மட்டும்தான் அவனுக்கு தெரியும். வீக்னஸ் தெரியாது” - அவர்களை மறுத்துப் பேசினான் அர்ஜுன். அந்த நொடியில் மாலிக்கின் எதிர்பாராத வஜ்ர தாக்குதலுக்கு ஆளாகி தரையில் சரிந்தான் சுஜித் சிங்.

மாலிக்கிற்கு ஆதரவானவர்கள் கூச்சலிட்டு அவனை ஊக்கப்படுத்தினர். “கில் ஹிம்.. கில் ஹிம்” என்று கத்தி அவனுடைய வெற்றியை உறுதி செய்து கொள்ள தூண்டினார்கள்.

ஆனால் மாலிக் அதை செய்யவில்லை. நிற்க முடியாமல் தள்ளாடிய நிலைமையிலும், மீண்டும் சுஜித் எழுந்தால் தன்னை வீழ்த்தும் வாய்ப்பிருக்கிறது என்கிற நிலையிலும், அவன் மீண்டும் எழுந்து தன்னை தாக்க முற்படுவான் என்கிற எச்சரிக்கையோடு பார்த்துக் கொண்டிருந்தானே தவிர கீழே கிடப்பவனை மேலும் தாக்கி தன்னுடைய வெற்றியை உறுதி செய்து கொள்ளவில்லை.

அனைவரும் அவனை வியப்புடனும் எதிர்பார்ப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுஜித் மீண்டும் எழப்போகிறான், மாலிக்கை நிலைகுலைய வைக்கப்போகிறான் என்றுதான் அனைவரும் நம்பினார்கள். ஆனால் குறிப்பிட்ட நேரம் கடந்தும் அவனிடம் எந்த அசைவும் தெரியவில்லை. மூன்று முறை மணியோசை ஒலித்த பிறகு மாலிக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதை கொண்டாடுவதை தவிர்த்து, நண்பனிடம் விரைந்தான் மாலிக்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 27

உயிரை கையில் பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள் சுமன். சுஜித் இன்று கேஜ் ரிங் என்று அழைக்கப்படும் கம்பி கூண்டுக்குள் இறங்கி சண்டையிடப் போகிறான். போட்டியின் முடிவில் ஒன்று எதிரியை வேட்டையாட வேண்டும் அல்லது அவனுக்கு இரையாக வேண்டும். இரண்டுமே அவள் மனதிற்கு ஒப்பாத காரியங்கள் என்றாலும் காதல் கொண்ட மனம் அவன் பத்திரமாக திரும்ப வேண்டும் என்றே இறைவனை வேண்டியது.

“ஒன்னும் ஆகாது. தைரியமா இரு” - உற்ற தோழியாக அவளுக்கு தோள் கொடுத்தாள் மிருதுளா.

“ஆப்பொனென்ட் யாருன்னு தெரியல. சுஜித்தைவிட ஸ்ட்ராங்கான ஆளா கூட இருக்கலாம்..” - கலங்கினாள் சுமன்.

“நெகட்டிவா எதையும் யோசிக்காத சுமன். கொஞ்சம் அமைதியா இரு” - தோழிகள் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது மேஜையில் இருந்த அலைபேசி பீப் ஒலியை எழுப்பியது.

சுமன் பதட்டமானாள். அவள் முகத்தில் கலவரம் தெரிந்தது. போட்டிக் களத்திலிருந்து வரும் செய்திக்காக காத்திருந்தவளுக்கு, அதை தெரிந்துகொள்ளும் நேரம் வந்த போது கலக்கம் அதிகமானது. அவளுடைய நிலையை உணர்ந்து மிருதுளாவே அலைபேசியை எடுத்து குறுஞ்செய்தியை வாசித்தாள்.

‘ஹி இஸ் அலைவ்’ - சட்டென்று அவள் முகம் பிரகாசமானது. மகிழ்ச்சியோடு தோழியை ஏறிட்டாள். அவளுடைய முகபாவம் செய்தியை உணர்த்திவிட்டாலும் அதை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமாக, “சுஜித்துக்கு ஒண்ணும் இல்லைல?” என்றாள்.

மிருதுளா மேலும் கீழும் தலையசைத்துவிட்டு, “எஸ்.. ஹி இஸ் ஆல்ரைட்” என்றாள் உற்சாகத்துடன். சட்டென்று பாய்ந்து வந்து அவளை கட்டிக்கொண்டு தேம்பினாள் சுமன். கோடிமுறை கடவுளுக்கு நன்றி கூறி ஓய்ந்தாள். சற்று நிதானமடைந்த பிறகு, “இன்னொரு பிளேயர் யாருன்னு தெரிஞ்சதா?” என்றாள் சற்று தயக்கத்துடன்.

மிருதுளா குறுக்காக தலையசைத்தாள். உதட்டை கடித்துக் கொண்டு தலை கவிழ்ந்தாள் சுமன். தன் காதலன் பத்திரமாக இருக்கிறான் என்றால் இன்னொருவன் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்கிற எண்ணம் அவள் மனதை குத்தியது. மிருதுளாவின் கையிலிருந்து அலைபேசியை வாங்கி, குறுஞ்செய்தி அனுப்பி உதவிய கோர்த்தா ஆளை தொடர்பு கொண்டாள். அவன் கூறிய விபரங்களை கேட்க கேட்க அவள் முகம் இருண்டது.

அலைபேசி கையிலிருந்து நழுவ தளர்ந்து போய் கட்டிலில் அமரும் தோழியை தாங்கிப்பிடித்த மிருதுளா ‘என்ன ஆயிற்று’ என்று விபரம் கேட்டாள்.

மிரண்ட சிறுமி போல் தோழியை ஏறிட்ட சுமன், “சுஜித் ஜெயிக்கல..” என்றாள். அவள் கண்களில் அதீத பயம் தெரிந்தது. முகத்தில் இரத்த பசையில்லை.. உதடுகள் காய்ந்துப் போய்விட்டன. மிருதுளா திகைத்தாள். அவள் கூறியதை கிரகித்து எதிர்வினையாற்ற ஓரிரு நிமிடங்கள் பிடித்தது அவளுக்கு.

“இட்ஸ் ஓகே.. இட்ஸ் ஓகே..” என்று தோழியை அணைத்துக் கொண்டாள். “ஹி இஸ் அலைவ்.. உயிருக்கு ஆபத்து இல்ல. தைரியமா இரு” என்று ஆறுதல் கூறினாள். எதுவும் அவள் செவியை எட்டியதாக தெரியவில்லை.

“சுயநினைவு இல்லையாம். எது வேணா நடக்கலாம். எனக்கு பயமா இருக்கு. ரொம்ப பயமா இருக்கு” என்று புலம்பினாள். கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது. அவளை பார்க்கவே பாவமாக இருந்தது மிருதுளாவிற்கு. அவளுக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்று புரியாமல் தடுமாறினாள்.

“நா சுஜித்தை பார்க்கனும்.. இப்பவே பார்க்கனும்..” - விருட்டென்று எழுந்தாள்.

“சுமன்! எங்க போற!” - பதட்டத்துடன் அவளை தடுத்தாள் மிருதுளா.

“ஹாஸ்பிட்டலுக்கு.. ஹாஸ்பிட்டலுக்கு போறேன். ஐ நீட் டு ஸீ ஹிம்.. நௌ..” - அடிவயிற்றிலிருந்து எழுந்த கேவல் பெரிதாக வெடித்து கதறலாக வெளிப்பட்டது. அவளை தேற்ற முயன்று தோற்றுப்போனாள் மிருதுளா.

நேரம் அதிகாலை இரண்டரையானது. இன்னும் சற்று நேரம் காத்திருந்தாள் விடிந்துவிடும். வெளியே செல்ல பயமேதும் இல்லை. ஆனால் அதுவரை இவளால் நிலைகொள்ள முடியாது போலிருந்தது. வேறு வழியில்லாமல் வீட்டில் பாதுகாப்புப்பணியில் இருந்த கார்ட் ஒருவனிடம் உதவி கேட்டாள்.

அவன் முடியவே முடியாது என்று அறுதியாக மறுத்தான். வேலை நேரத்தில் வெளியே செல்வது தவறு.. அதிலும் இரண்டு பெண்களை அழைத்துக் கொண்டு வெளியே சென்றால் - காரணம் எதுவாக இருந்தாலும் பிரச்சனை வரும். எதற்கு வம்பு என்று ஒதுங்கிக்கொள்ள நினைத்தான். ஆனால் சுமன் நேரில் வந்து கேட்ட போது அவனால் பட்டுக்கத்தரித்தது போல் பேச முடியவில்லை.

கோர்த்தாவில் சுஜித் முக்கியமான ஆள். நாளைக்கே அவன் உயிர் பிழைத்து பழையபடி அதிகாரத்திற்கு திரும்ப வந்தால், சுமனுக்கு உதவி செய்ய மறுத்ததற்காக தன்னை தவறாக நினைப்பானே என்கிற எண்ணம் அவனை சங்கடப்படுத்தியது. இருதலை கொல்லி எறும்பாக இருபக்கமும் செல்ல முடியாமல் தடுமாறினான். அவனுடைய தடுமாற்றத்தை முடிவுக்கு கொண்டு வந்தது சுமனின் கண்ணீருடன் கூறிய வற்புறுத்தல்.

அவர்களுடைய கார் மெயின் கேட்டைவிட்டு வெளியேறிய பத்து பதினைந்து நிமிடத்தில் அவனுக்கு ஒரு போன் வந்தது. எடுத்து “ஹலோ” என்றவன் அந்த பக்கத்திலிருந்து சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு, “என்ன!” என்றான் சிறு அதிர்ச்சியுடன். பிறகு ஒருவித அழுத்தமான மௌனத்துடன் செய்தியை கேட்டுக் கொண்டிருந்தவன் இறுதியாக, “ஓகே” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான்.

அழைத்தது யார் என்ன என்று எதுவும் தெரியவில்லை என்றாலும் அந்த அழைப்பு வந்த பிறகு அவனிடம் ஒருவித இறுக்கத்தை உணர்ந்தாள் மிருதுளா. பின் இருக்கையில் அமர்ந்திருந்தவளுக்கு அவனுடைய முகத்தை பார்க்க முடியவில்லை என்றாலும் காதோரம் புடைத்த நரம்பும் கழுத்துப்பகுதியில் துளிர்த்து வடிந்த வியர்வையும் அவனுடைய இயல்பற்ற நிலையை எடுத்துக் காட்டியது. மிருதுளா சுமனை திரும்பிப் பார்த்தாள். நடப்பதை அவளும் கவனித்து கொண்டிருப்பதன் அறிகுறியாக அவளுடைய பார்வை ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருப்பவனையே வெறித்துக் கொண்டிருந்தது. அவன் ஏதாவது கூறுவான் என்று சற்றுநேரம் காத்திருந்த சுமன், “என்ன ஆச்சு?” என்று வாய்விட்டே கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.

“சுஜித்.. சுஜித்துக்கு ஒன்னும் இல்லையே! போன்ல யாரு? ஹாஸ்பிட்டல்லேருந்தா?” – பயந்து போய் கேள்விகளை அடுக்கினாள்.

அப்போதும் அவன் வாய் திறக்கவில்லை. ஆனால் வண்டியை ஓரம்கட்டி நிறுத்தினான். சாலையின் இருபுறமும் மரங்கள் அடர்ந்த காடு. நகரத்திற்குள் செல்ல இன்னும் அரை மணி நேரமாவது பயணம் செய்ய வேண்டும். ஏன் இங்கு நிறுத்துகிறான்! - பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவன் ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கிவந்து பின்பக்க கதவை திறந்தான்.

“என்ன ஆச்சு?” - குழப்பத்துடன் கேட்டாள் மிருதுளா.

“இறங்கு..” - இயந்திர மனிதன் போல் உத்தரவிட்டான்.

“வாட்!” - மிரண்டு போனாள் மிருதுளா. கண்களில் கலவரத்துடன் அவனை பார்த்தாள். அவனுடைய முகமும் குரலும் முற்றிலும் மாறியிருந்தது. சற்று நேரத்திற்கு முன் மாளிகையில் பார்த்த ஒரு சாதாரண மனிதன் இல்லை இவன். மிருதுளா பயத்துடன் சுமனுடைய கையைப் பிடித்தாள். தோழியை இறுக்கமாக பற்றிக் கொண்ட சுமன், “என்ன பண்ற திலக்?” என்று சீறினாள்.

அவளுடைய சீற்றம் இவனை எட்டவே இல்லை. மிருதுளாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், “கீழ இறங்கு” என்று அடி குரலில் உறுமினான்.

மிருதுளாவின் இதயம் தாறுமாறாக துடித்தது. “நோ.. நோ.. நோ..” - உடல் வெடவெடக்க படபடத்தாள். “ப்ளீஸ்.. லீவ் மீ..” பதறி அழுதாள்.

“திலக்.. இவ்வளவு சீப்பானவனா நீ! போன வாரம் தானே ஒருத்தன் செத்தான். அறிவில்ல உனக்கு?” - அதட்டினாள் சுமன்.

அது வரை ராட்சஸ தனமாக இருந்த அவன் முகத்தில் சட்டென்று மனிதம் தோன்றி நொடியில் மறைந்தது.

“பாபி.. ஐம் நாட் ஸச் எ சீப் பர்சன். நா என்னோட ட்யூட்டியைத்தான் செய்றேன். நீங்க இதுல தலையிடாதீங்க.”

“என்னது! ட்யூட்டியா! என்ன ட்யூட்டி?” - அவனுடைய உத்தேசம் புரிந்து பதறினாள்.

அவளுடைய பதற்றத்தை பொருட்படுத்த அவனுக்கு நேரமில்லை. எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக வேலையை முடித்துவிட்டு கிளம்ப வேண்டும். காருக்குள் வைத்தே முடித்துவிடலாம். பிறகு சுத்தம் செய்வது பெரிய தலைவலி.. காட்டுக்குள் வைத்து முடித்தால் பிணத்தை டிக்கியில் தூக்கிப் போட்டுக் கொண்டு போய்விடலாம்.

“கமான்.. கெட் டௌன்” - மிருதுளாவின் கையைப் பிடித்து வெளியே இழுத்தான்.

“ஐயோ! விடு.. விடு என்னை. விட்டுடு” - கத்தியபடி அவன் பிடியிலிருந்து விடுபட திமிறி தோற்றாள் மிருதுளா. இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை கையில் எடுத்து அவளை குறிபார்த்த திலக், “நட” - அவளை காட்டுக்குள் வழிநடத்த முயன்றான். மிருதுளா வெலவெலத்துப் போனாள்.

“திலக்.. ப்ளீஸ்.. விட்டுடு.. டோன்ட் டூ திஸ் டு ஹர்.. திலக்” - சுமனும் கீழே இறங்கி தோழிக்காக போராடினாள். கெஞ்சி கதறி அவனுடைய எண்ணத்தை மாற்ற முயன்றாள். ஆனால் துளியளவும் அவனை அசைக்க முடியவில்லை.

குறிபார்த்திருக்கும் துப்பாக்கி எந்த நேரத்திலும் தன் உடலை துளைத்துவிடும் என்கிற அச்சத்துடன் அவனுடைய மிரட்டலுக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல், “விட்டுடு.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..” என்று அழுது கொண்டே காட்டை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தாள் மிருதுளா.

ஆபத்தின் விளிம்பிலிருக்கும் தோழியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமே என்கிற தவிப்புடன், “திலக்.. திலக்..” என்று யாசித்தபடி அவர்களை பின்தொடர்ந்துக் கொண்டிருந்தாள் சுமன்.

************************

கோர்த்தாவில் ‘இது’ நடந்தால் ‘இதை’ செய்ய வேண்டும் என்கிற சிஸ்டம் முறைமைப் படுத்தப்பட்டிருந்தது. எனவே ஆட்களுக்கு அடிபடும் பொழுதெல்லாம் மருத்துவமனைக்கு சென்று அனுதாபம் காட்ட வேண்டும் என்கிற அவசியம் தலைமைக்கு இல்லை. நடக்க வேண்டியது அனைத்தும் தானாகவே நடக்கும். அதோடு இது ஆபத்தான இடம் என்பதையும் எச்சரிக்கையோடு வேலை செய்ய வேண்டும் என்பதையும் வீரர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பது கோர்த்தாவின் கொள்கை. அந்த கொள்கைக்கு விதிவிலக்காக வேலை செய்யும் தளபதிகளில் முக்கியமானவன் அர்ஜுன் ஹோத்ரா.

தனக்கு கீழே வேலை செய்யும் ஆட்களில் யார் பாதிக்கப்பட்டாலும் உடனே நேரில் சென்று பார்ப்பான். அவர்களுடைய உடல் நலனையும் மனோதிடத்தையும் வலுபடுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டுவான். அப்படித்தான் இன்றும் சுஜித்திற்கான முதற்கட்ட சிகிச்சை முடியும் வரையில் மருத்துவமனையில் இருந்துவிட்டு, மாலிக்கைச் சென்று பார்த்து வாழ்த்திவிட்டு அவனுடைய காயங்களை பற்றி விசாரித்துவிட்டு மாளிகைக்குத் திரும்பினான்.

நகரத்தைக் கடந்து காட்டுப் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த போது சற்று தூரத்தில், பரிச்சயமான ஒரு கார் நின்றுக் கொண்டிருப்பதை கவனித்தான். உடனே தன்னுடைய காரில் வேகத்தை வெகுவாய் குறைத்துவிட்டு, நிற்பது யாருடைய கார் என்று யோசித்தான். அதிக நேரம் எடுக்காமல் உடனேயே தெரிந்துவிட்டது அது, தனக்கு கீழ் வேலை செய்யும் திலக்குடைய வாகனம் என்று.

‘அது ஏன் இங்கு நிற்கிறது! அதுவும் இந்த நேரத்தில்!’ - நொடிப் பொழுதில் எச்சரிக்கையானான். ஒரே மாதிரியான காரை பயன்படுத்தி தனக்கு யாரேனும் பொறி வைத்திருக்கக் கூடும் என்கிற எண்ணத்தில் காரின் வேகத்தை அதிகப்படுத்தி அந்த வாகனத்தை கடந்தான். அப்படி கடக்கும் போது காருக்குள் யாரேனும் இருக்கிறார்களா என்பதை நோட்டம்விட்டவன், அதில் ஒருவரும் இல்லை என்றதும் சற்று தூரத்தில் தன்னுடைய காரை நிறுத்தினான். கீழே இறங்குவது உசிதமல்ல. தோட்டா எந்த திசையிலிருந்து வேண்டுமானாலும் பாயலாம். எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் காரை ரிவர்ஸ் எடுத்து, சூழலை கூர்மையாக கவனித்தான். காட்டுக்குள் தூரத்தில் ஏதோ ஒளிர்வது தெரிந்தது.

‘பகலில் புகையும் இரவில் ஒளியும் காட்டில் உன்னை வெளிக்காட்டும்’ என்கிற பொருளில் ஆங்கிலத்தில் ஒரு வாய்மொழி உண்டு. அது வெறும் வாய் மொழியல்ல. உண்மை. இரவு நேரத்தில் காட்டுக்குள் ஒளிரும் சிறு ஒளி வெகு தொலைவில் இருந்தாலும் பார்வைக்குப் புலப்படும். அப்படி ஒரு ஒளிதான் இப்போது அர்ஜுன் ஹோத்ராவின் கவனத்தை ஈர்த்தது.

‘என்னவாக இருக்கும்!’ - லேசாக ஒரு நூல் இழையளவு கண்ணாடியை இறக்கி ஏதேனும் சத்தம் கேட்கிறதா என்று கவனித்தான்.

காடு மிகவும் விசித்திரமானது. இரைச்சலுக்கு மத்தியில் வாழும் நகரத்துவாசிகள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு, காட்டில் காதுக்குள் முணுமுணுக்கும் சின்ன கிசுகிசுப்பு வெகு தூரம் பயணம் செய்யும். ஒரு குழந்தையின் அழுகுரல் இடி முழக்கம் போல் பல மைல்கள் கடக்கக் கூடியதாக இருக்கும். அப்படியிருக்கும் போது மிருதுளாவின் அழுகுரலை அவன் அடையாளம் கண்டு கொண்டான் என்பதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

தலைதூக்கியிருந்த எச்சரிக்கை உணர்வு அவள் குரலை கேட்ட மாத்திரத்தில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. நொடி கூட தாமதிக்காமல் உடனடியாக காரிலிருந்து இறங்கி காட்டுக்குள் ஓடினான். இன்னொரு பெண்ணின் குரலும் கேட்டது. ‘திலக்.. திலக்..’ என்று அழுகுரலில் புலம்பிக் கொண்டிருந்தாள். ஆம்! அது திலக்குடைய கார் தான். அவன் என்ன செய்கிறான் இங்கு.. மிருதுளாவை ஏன் இங்கு கொண்டு வந்தான். தீயை பற்ற வைத்தது போல் நெஞ்சு எரிந்தது. கையில் துப்பாக்கியை பிடித்தபடி ஒளி தெரியும் திசையை குறிவைத்து ஓடினான்.

“வேண்டாம்.. ப்ளீஸ்..” - மிருதுளா அழுகிறாள்.

“திரும்பு.. டர்ன் அரௌண்ட்” - திலக் அதட்டுகிறான்.

“விட்டுடு திலக்.. உன்ன கெஞ்சி கேட்கறேன் ப்ளீஸ்..” - மூன்றாவது குரல்.. சுமன்.. சுமனுடைய குரல்தான் அது. அவள் கெஞ்சுகிறாள். அர்ஜுன் ஹோத்ராவின் வேகம் காற்றை கிழித்தது. தரையில் கொட்டிக் கிடைக்கும் சருகுகளின் சத்தம் சரசரத்தது.

சட்டென்று சுதாரித்தான் திலக். கையிலிருந்த அலைபேசி டார்ச்சை சுற்றும் முற்றும் சுழற்றினான். அதற்குள் மரத்தின் பின்னால் பதுங்கிய அர்ஜுன் அவனோடு வேறு யாரேனும் இருக்கிறார்களா என்று கவனித்தான். இல்லை.. அவனைத் தவிர வேறு யாரும் அங்கே இல்லை.

“யாரு? யார் அது?” - அதட்டினான் திலக். அவனுடைய துப்பாக்கி இன்னமும் மிருதுளாவை குறிவைத்தபடியே இருந்தது.

மரத்திற்கு பின்னாலிருந்து வெளிப்பட்ட அர்ஜுனின் துப்பாக்கி திலக்கை குறி பார்த்திருந்தது.

“அர்ஜுன்!” - ரட்சகனைக் கண்டுவிட்டது போல் அலறினாள் மிருதுளா. அவன் பார்வை அணுவளவும் திலக்கை விட்டு அகலவில்லை.

“டிராப் யுவர் கன்” - கொடிய குரலில் எச்சரித்தான். திலக் துப்பாக்கியை இறக்கவில்லை.

“அர்ஜுன் பாய். ஐ வில் எக்ஸ்ப்ளைன்..” - அடுத்த நொடி அர்ஜுன் ஹோத்ராவின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு அவன் கையை துளைத்துக் கொண்டு வெளியேறியதில் அவன் பிடித்திருந்த துப்பாக்கி ரத்தத்தில் குளித்து கீழே விழுந்தது.

“ஆ.. அர்ஜு..ன் பா..ய்.. என்னை.. பேச.. விடுங்க..” - வலியுடன் கூடிய கோபத்தில் பெருங்குரலில் கத்தினான்.

“நீல் டௌன்” - காலனின் குரல் அது.

“பாய்” - அடுத்த நொடி காலில் பட்ட குண்டு அவனை மண்டியிட வைத்தது.

“பாய் ப்ளீஸ்.. நான் எதுவும் பண்ணல” - துப்பாக்கியின் பின்பகுதியால் அவனுடைய பின்னந்தலையை பலமாக தாக்கியவன், “உன்கிட்ட கேட்கும் போது மட்டும் பேசு” என்றான்.

அது கட்டளை. மீறினால் தண்டனை என்பதை திலக் நன்றாகவே அறிந்திருந்தான். எனவே வாயை இறுக்கமாக மூடிக் கொண்டான். உயிர் பயம் நெஞ்சை அடைத்தது.

அர்ஜுன் மிருதுளாவை பார்த்தான். “என்ன நடந்தது?” என்றான் அதே கொடுங்குரலில்.

அதீத அதிர்ச்சியில் திகைத்துப் போய் நின்ற மிருதுளாவிற்கு பேச்சு வரவில்லை. சுமன் சுருக்கமாக படபடத்தாள்.

“சுஜித்தை பார்க்க கிளம்பினோம். திலக் தான் கூட்டிட்டு வந்தான். திடீர்ன்னு ஒரு போன் வந்தது. மிருதுளாவை.. மிருதுளாவை.. கொலை.. கொலை.. செய்ய..” - இருளில் ஒளிரும் புலியின் கண்களை போல் பளபளக்கும் கண்களுடன் திலக் பக்கம் திரும்பினான்.

“யார் அது?”

“பெரியவர்.. சுக்லா.. சுக்லா ஜீ. அவர் தான்.. அவர்தான் மிருதுளாவை முடிக்க சொன்னாரு.. பாய் ப்ளீஸ்.. எனக்கு மிருதுளாகிட்ட பர்சனலா எந்த பிரச்சனையும் இல்ல.. நா.. நா எனக்கு கொடுத்த வேலையை தான் செஞ்சேன். பாய்.. நம்புங்க” - அவனுடைய வெறித்த பார்வையை கண்டு பதறினான் திலக்.

“போனை கொடு” - அவனுடைய அலைபேசியை பறித்து சமீபத்திய அழைப்புக்களை சோதனை செய்தான். உண்மைதான்.. ராகேஷ் சுக்லாவின் உதவியாளரிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது.

“சோ.. என்கிட்ட இருந்துகிட்டு சுக்லாஜிக்கு வேலை பார்க்கற! இல்ல?” - பெரிய தவறில் சிக்கிக் கொண்டவன் சிறிய தவறை மறந்துவிட்டான். ஆனால் பெரிதும் சிறுதும் அவன் முடிவு செய்வதில்லையே!

“இங்கிருந்து எல்லா நியூஸையும் பாஸ் பண்ணிக்கிட்டு இருக்க!”

“பாய்..” - பீதி தெரிந்தது அவன் குரலில்.

“எவ்வளவு நாளா நடக்குது இது?”

“ஒரு.. இல்ல.. இரண்டு வருஷமா..”

“ஓ..ஹோ!”

“பாய்.. ஐம்.. ஐம் சாரி” - தவிப்புடன் மன்னிப்பை கோரினான்.

அவனை வெறித்துப் பார்த்த அர்ஜுன், “நீ என்ன பேசுறன்னு எனக்கு புரியல திலக். ரெஸ்ட் இன் பீஸ்” என்று இலகுவாக கூறிவிட்டு ட்ரிகரை அழுத்தினான். துப்பாக்கி வெடிக்கும் ஒலியில் உடல் தூக்கிப்போட மிருதுளா கண்களை மூடிக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

நெற்றியில் குண்டடிபட்டு தடாரென்று தரையில் சாயும் மனிதனை சலனமில்லாமல் பார்த்த சுமன், ஓவென்று வீறிட்டு அழும் தோழியிடம் பாய்ந்து அவளை அணைத்துக் கொண்டாள். அவள் உடல் வெடவெடவென்று நடுங்கியது.

அர்ஜுன் அவள் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை. கர்மமே சிரத்தையாக அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்து ஏதோ பேசியவன் இறுதியாக, “சீக்கிரம் வந்து இதை கிளீன் பண்ணு” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான். பிறகு திலக்கின் அலைபேசியையும், கைத்துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு அவனுடைய பாக்கெட்டை சோதனை செய்து பர்ஸையும் கைபற்றிக் கொண்டு, “ஃபாலோ மீ” என்று கட்டளையிட்டபடி முன்னோக்கி நடந்தான்.

அவர்கள் சாலையை வந்தடைந்த போது அர்ஜுன் அழைத்த கோர்த்தா ஆட்கள் வந்து சேர்ந்துவிட்டார்கள். பொழுதும் பளபளவென்று விடிய துவங்கிவிட்டது.

“கெட் இன்” - வண்டியில் ஏறும்படி பெண்கள் இருவருக்கும் பொதுவாக கூறியவன், அவர்கள் தன்னுடைய காரில் ஏறும் வரை அமைதியாக இருந்துவிட்டு பிறகு ஆட்களிடம் திரும்பி, “உங்களுக்கு நேரம் அதிகம் இல்ல. வெளிச்சம் வர்றதுக்கு முன்னாடி பாடியை க்ளீயர் பண்ணிடுங்க. பப்ளிக் கண்ணுல எதுவும் பட வேண்டாம். மூணு தரம் சுட்டேன். இரண்டு புல்லெட் பாடியில இருக்கும். ஒரு புல்லெட் கைல பட்டு வெளியே வந்திருக்கும். மூணு புல்லெட் கேஸ், ஃபயர் ஆன புல்லெட் ஒன்னு.. நாலுமே எனக்கு வேணும். எவிடென்ஸ் எதுவும் மிஸ் ஆகக்கூடாது. அவனோட கார் சாவி கார்ல இருக்கான்னு பாருங்க. இல்லைன்னா அதுவும் இங்கதான் எங்கேயாவது கிடக்கும். தேடிப் பார்த்து காரையும் இங்கிருந்து கிளியர் பண்ணிடுங்க. டேக் கேர்” - அறிவுறுத்தல்களை கொடுத்துவிட்டு தன்னுடைய காரில் வந்து ஏறினான்.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 28

உயிரோடு இருக்கிறோம் என்பதையே சிரமப்பட்டு நினைவிற்கு கொண்டுவர வேண்டியிருந்தது மிருதுளாவிற்கு. சாவின் விளிம்பை தொட்டுவிட்டு மீண்டிருக்கிறாள். அவன் மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் இந்நேரம் பிணமாகியிருப்பாள். நினைக்கும் போதே உடல் சில்லிட்டது. சுமனோடு மேலும் ஒண்டி கொண்டபடி கண்ணாடியின் வழியே அர்ஜுனை ஏறிட்டாள். சிவந்திருந்த கண்களை மட்டும் தான் காண முடிந்தது அந்த கண்ணாடியில். அதுவே அவனுடைய மனநிலையை ஊகிக்க போதுமானதாக இருந்தது. ஆயாசத்துடன் கண்களை மூடினாள். சற்று நேரத்திலேயே மாளிகை வளாகத்திற்குள் வந்து நின்றது வாகனம்.

“சுஜித் எப்படி இருக்கான்?” - கீழே இறங்குவதற்கு முன் தயக்கத்துடன் கேட்டாள் சுமன்.

“ஆபத்து எதுவும் இல்ல. ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடு. ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக ஆள் வர சொல்றேன்” - கரகரத்த குரலில் கூறிவிட்டு கீழே இறங்கி விறுவிறுவென்று மாளிகைக்குள் நுழைந்தான். அவன் தன்னை ஒருமுறை கூட ஏறிட்டு பார்க்கவில்லை என்கிற உறுத்தலுடன் அவனை பின்தொடர்ந்தாள் மிருதுளா.

தளபதி - இது வெறும் பட்டம் அல்ல. பொறுப்பு.. லட்சத்தில் ஒருவன் மட்டுமே தேர்ந்தெடுக்கும் தொழிலை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். ஒருமுறை விட்டு மறுமுறை பிடிக்க இது ஒன்றும் பணத்தை பணயம் வைக்கும் தொழிலல்ல. உயிரை பணயம் வைக்கும் தொழில். போனால் வராது. கரணம் தப்பினால் மரணம். அவ்வளவுதான். இதில் துணிவும் துரிதமும் எந்த அளவு முக்கியமோ அதே அளவு நிதானமும் எச்சரிக்கையும் முக்கியம்.

இன்று அவனுடைய எச்சரிக்கை எங்கு போனது? நிதானம் எங்கு போனது? அனைத்தும் மிருதுளாவின் அலறலோடு காற்றில் கரைந்து போய்விட்டது. அவள் குரலை கேட்டதும் எத்தனை துரிதமாக எதிர்வினையாற்றினான்! எப்படி வந்தது இந்த பலவீனம் அவனுக்குள்! - கைகள் இரண்டையும் சுவற்றில் ஊன்றி, ஷவருக்கு கீழே நின்று ஊற்றாக பீறிடும் குளிர்ந்த நீரை மொத்தமாய் உச்சந்தலையில் வாங்கியும் அவனுடைய உஷ்ணம் குறையவில்லை.

திலக்கின் நியாயத்தை காது கொடுத்து கேட்கவே அவன் தயாராக இல்லை. அவனை கொலை செய்ததற்காக வருந்தவில்லை. ஆனால் கட்டுப்பாடற்று - நிதானமிழந்து - மிருதுளாவிற்காக கொலை செய்ததைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனால். தொற்றுக்கு கிருமி போல் அவனுக்குள் ஊடுருவிவிட்டாள். உடனடியாக சிகிச்சை செய்தாக வேண்டும். இல்லையென்றால் அழிவு அவனுக்குத்தான் - ஷவரை அணைத்தான்.

ஈரத்தலையை துவட்டியபடி அவன் குளியலறையிலிருந்து வெளியே வந்த போது அறைக்கதவு தட்டப்படும் மெல்லிய ஓசை அவன் செவியை எட்டியது. உத்தரவில்லாமல் வேலைக்காரர்கள் கூட மேல்தளத்திற்கு வர முடியாத நிலையில், வந்திருப்பது மிருதுளாவாகத்தான் இருக்க முடியும் என்பதை தர்க்கரீதியாக மூளை அறிவுறுத்துவதற்கு முன், அவன் உள்ளம் அவள் வரவை உணர்ந்தது. உடல் விறைத்து நிமிர கதவையே வெறித்துப் பார்த்தான். தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள் மிருதுளா.

வெகு நேரம் சுய அலசல் செய்து திடப்பட்டிருந்தவன் அவளை கண்டதும் நீர்த்துப்போனான். சுவாசத்தின் வேகம் சீரற்று போனது. இதயத்துடிப்பு அதிகரித்தது. உள்ளம் தடுமாறியது. அதை வெளிக்காட்டாமல் இருக்க முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டான்.

அவளும் குளித்திருந்தாள். ஈரம் காயாத கேசம் பளபளத்தது. முகத்தில் குழப்பம் சூழ்ந்திருந்தது.

“இந்நேரம் செத்துப்போயிருப்பேன்” - முணுமுணுத்தாள்.

அவனுக்குள் சுருக்கென்று தைத்தது அந்த வார்த்தை. அவன் தடித்த உதடுகள் அழுந்த மூடின.

“நீங்க.. காப்பாத்தீட்டிங்க..” - நடந்த சம்பவத்தின் தாக்கம் இன்னமும் அவளுக்குள் இருப்பதன் அடையாளமாக உடல் வெளிப்படையாக நடுங்கியது. உயிர் பயம் பொல்லாதது. அது அவ்வளவு விரைவாக விட்டுப்போய்விடுமா என்ன? கைகளை குறுக்காகக் கட்டிக் கொண்டு, “தேங்க் யூ” என்றவளின் குரலும் உணர்ச்சிவசத்தில் கரகரத்தது.

அர்ஜுன் ஹோத்ராவின் கட்டுப்பாட்டில் கீறல் விழுந்தது. மரத்துப்போயிருந்த மனதில் உணர்வுகள் ஊற்றெடுக்கத் துவங்கின. அவளுடைய கலக்கமும் பயமும் அவனை கரைத்தது.

“ரிலாக்ஸ்.. அதெல்லாம் முடிஞ்சிடிச்சு ஓகே. யு ஆர் ஆல்ரைட் நௌ.. யு ஆர் ஆல்ரைட்” - அவளிடம் நெருங்கி அவளுடைய கலக்கத்தை களைய முனைந்தான்.

“சுக்லாஜீன்னா யாரு? அவரு ஏன் என்னை கொலை செய்ய சொன்னாரு?” - அப்படி கேட்கும் போது அவன் கண்களுக்கு அவள் சிறு குழந்தை போல் தோன்றினாள். அவன் மனம் உருகியது.

“ராகேஷ் சுக்லா கோர்த்தாவோட தலைவர். என்னோட பாஸ்.”

மிருதுளாவின் கண்கள் பெரிதாக விரிந்தன. மிரட்சியில் முகம் வெளிறியது. அவர்! அந்த மனிதர்! இந்த மாளிகையில் ஒரு முறை அவரை பார்த்திருக்கிறாள். பெரிய மீசையும்.. உருட்டிய விழிகளும்.. அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று அவர் அவளை பார்த்த பார்வை! ஓ காட்! அந்த பார்வைக்கான பொருள் இதுதானா! அன்றே அவளை கொலை செய்ய முடிவெடுத்துவிட்டாரா! கடவுளே! – “நா.. நா என்ன பண்ணினேன்? என்னை ஏன்?” - கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

அவளுடைய கண்ணீர் அவனை நிலையிழக்கச் செய்தது. சட்டென்று அவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான். “நோ.. நீ எதுவும் செய்யல.. அது ஒரு மிஸ்டேக்.. பிலீவ் மீ. இனி அப்படி நடக்காது.. நா இருக்கேன்ல. காம் டௌன்..” - அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

இதையெல்லாம் அவன் திட்டமிட்டோ, விரும்பியோ செய்யவில்லை. அந்த ஒரு நொடியில் மனதில் தோன்றிய உணர்வுகளின் வெளிப்பாடு அது. அவனை மீறி நடந்துவிட்டது. மிருதுளாவின் உடல் அழுகையில் குலுங்கிய போது அவனால் அவளிடமிருந்து விலக முடியவில்லை. மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“ஹி லுக்ஸ் வெரி டேஞ்சரஸ். எனக்கு பயமா இருக்கு” - உறுதியான மரத்தை சுற்றிப்படரும் கொடி போல் அவளுடைய கரங்களும் அவன் முதுகில் படர்ந்தன.

“ஷ்ஷ்.. ஒரு பயமும் இல்ல.. ரி..லா..க்ஸ்” - அவளை தேற்றினான்.

“என்னை.. கண்டிப்பா.. கொன்..னு..டுவாங்க” - தேம்பியழுதபடி பயந்த முயல்குட்டி புதருக்குள் பதுங்குவது போல் அவனுக்குள் பதுங்கிக்கொள்ள முயன்றாள்.

“ப்ச்.. மிருதுளா.. என்னை பாரு.. லுக் அட் மீ. நா யாரு.. ம்ம்ம்? ஹூ ஆம் ஐ?” - முகத்தை மட்டும் விலக்கி அவளை பார்த்துக் கேட்டான். அவனுடைய கேள்வியின் உள்ளர்த்தம் புரியாமல் விழித்தாள் மிருதுளா. புருவம் உயர்த்தி பதில் சொல்ல உந்தினான் அர்ஜுன்.

“அர்..ஜு..ன் ஹோ..த்..ரா.. கோர்த்..தா மே..ன்” - நலிந்த குரலில் தேம்பியபடி முணுமுணுத்தாள்.

“அது மத்தவங்களுக்கு. உனக்கு யாரு?” - அவனுடைய கேள்வியில் தீவிரம் கூடியது. நெருக்கம் அதிகரித்தது. அப்போதுதான் மிருதுளா தன்னிலைக்கு வந்தாள். அவள் இதயம் ட்ரம்ஸ் வாசிக்க துவங்கியது. காது மடல் சூடாகி சிவந்தது. எச்சிலை கூட்டி விழுங்கினாள். வறண்டுபோன இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டாள். தொண்டை குழிக்குள் காற்றுப்பந்து அடைத்துக் கொண்டது போல் தோன்றியது. பேச முடியவில்லை.

அவளுடைய தடுமாற்றத்தை உணர்ந்து பிடியை தளர்த்தியவன், அவளை கட்டிலில் அமரச் செய்து, அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து அவள் கைகளை பிடித்தபடி கண்களை கூர்ந்து நோக்கினான். அவனுடைய கேள்விக்கு பதிலை அவனிடமே எதிர்பார்ப்பது போல் அவளும் அவன் முகத்தை ஏறிட்டாள்.

“ஐம் யுவர் புல்லெட் கேட்சர்” என்றான்.

அவளுடைய புருவங்கள் சுருங்கின. அவளுக்கு புரியவில்லை.

“உன்னோட ஆபத்தை என்னோடதா ஏத்துக்கறவன். உன்னோட உயிரை எடுக்கனும்னா அதுக்கு முன்னாடி என்னோட உயிரை எடுத்திருக்கனும். காட் இட்?” - அவனுடைய வார்த்தையில் தீவிரம் இருந்தது. கண்களில் உண்மை இருந்தது. அவள் தடுமாறினாள்.

“ஏன்.. ஏன் அப்படி?” - வெகு சிரமப்பட்டு அந்த வார்த்தை வெளிப்பட்டது அவளிடமிருந்து.

அவளுடைய கேள்விக்கு அவன் உடனே பதில் சொல்லவில்லை. ஓரிரு நொடிகள் அவள் முகத்தை பார்த்தபடி அமைதியாக இருந்தான். பிறகு இடதுபுற நெஞ்சில் கைவைத்து, “ஐ ஃபீல்.. யு ஆர் இம்பார்டென்ட் டு மீ.. நீ எனக்கு முக்கியமானவள்” என்றான். அவன் குரல் இழைந்து.

மிருதுளாவின் உள்ளம் கரைந்தது. இதயத்திற்குள் ஆழமாய் ஓர் இனிய உணர்வு ஊடுருவியது. அந்த இன்பத்தை அவளால் முழுமையாக அங்கீகரித்து அனுபவிக்க முடியவில்லை. அவன் சொல்வதெல்லாம் உண்மையா என்கிற சந்தேகம்.. அவளுடைய புரிதல் சரிதானா என்கிற குழப்பம்.. இது நிலைக்குமா என்கிற பயம்.. அவனுடைய தொழில் மீதான அதிருப்தி.. பலவிதமான எண்ணங்கள் அவள் மனதை புகை மூட்டம் போல் சூழ்ந்துக் கொண்டன.

அவளுடைய கலங்கிய முகத்தைப் கவனித்தவன், அவள் நெற்றியோடு நெற்றி வைத்து, “ரிலாக்ஸ்” என்றான். அவள் மனதில் மூட்டம் போட்டிருந்த அனைத்து எண்ணங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மகிழ்ச்சியை மேலெழச் செய்தது அவனுடைய செய்கை.

***********************

அர்ஜுன் ஹோத்ராவின் மாளிகைக்கு பின்னால் உள்ள திடலில் தரையிறங்கிய ஒரு தனியார் ஹெலிகாப்டரிலிருந்து கீழே இறங்கினார் ராகேஷ் சுக்லா. தான் வரப்போகும் செய்தியை முன்கூட்டியே அர்ஜுனுக்கு தகவல் அனுப்பிவிட்டார். வரட்டும் என்று தான் அவனும் காத்துக் கொண்டிருந்தான். இதோ அவனுடைய அலுவலக அறையில் இருவரும் எதிரும் புதிருமாக நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

“அவன் என்னோட ஆள். எனக்காக வேலை செஞ்சவன். அவன் மேல எப்படி நீ கைவச்ச?” - கடுங்கோபத்தில் கர்ஜித்தார் ராகேஷ் சுக்லா.

ஓரிரு நிமிடங்கள் அவரை வெறித்துப்பார்த்த அர்ஜுன், “இங்க எல்லாருமே உங்க ஆளுங்கதான். எல்லாரும் உங்களுக்காகத்தான் வேலை பார்க்கறோம்” என்றான் இறுகிய குரலில்.

அவன் வார்த்தையில் இருந்த உண்மை குத்த அவர் முகத்தில் ஒரு சின்ன அதிர்வு வந்து போனது. இமைக்காமல் அர்ஜுன் ஹோத்ராவை பார்த்தவர், “திலக் அந்த ஹைரார்கில வரமாட்டான். அது உனக்கும் தெரியும்” என்றார்.

“எக்ஸ்கியூஸ் மீ.. என்ன சொன்னீங்க!” - அவன் குரலிலும் முகத்திலும் கோபம் தெறித்தது.

அவர் அலட்சியமாக தோளை குலுக்கினார். “உங்க ஒவ்வொருத்தரையும் நா ஃபாலோ பண்ணிதான் ஆகனும். என்னோட வேலையில அதுவும் ஒரு பகுதி” என்றார்.

“ஓ ரியலி! என்னை ஸ்பை பண்ண வேண்டிய அவசியம் இல்லைன்னு சொன்னீங்களே!”

“அன்னைக்கு நான் சொன்னது உண்மை இல்லைன்னு உனக்கு தெரியும். உனக்கு தெரியும்ங்கறது எனக்கும் தெரியும். அதனால வார்த்தை ஜாலம் செய்யிறதையெல்லாம் விட்டுட்டு நேர்பட பேசு” என்று அதட்டினார்.

“ஃபைன். என்ன தெரியனும் உங்களுக்கு?”

“திலக்கை ஏன் கொன்ன?”

“அவன் எனக்கு உண்மையா இல்ல. என்னோட சோர்ஸை அழிக்கப்பார்த்தான். அதை நான் செஞ்சே ஆக வேண்டிய சூழ்நிலை.”

“ஏன் அப்படி பண்ணினான்னு விசாரிச்சிருக்கலாமே?”

“கைல துப்பாக்கியோட நின்னுகிட்டு இருக்கான். அப்பவும் நா விசாரணைதான் செஞ்சிருக்கனுமா? அதுதான் கோர்த்தாவோட நடைமுறையா?” - எள்ளலாகக் கேட்டான்.

“நீ எப்பவும் கோர்த்தாவோட நடைமுறையை தான் ஃபாலோ பண்றியா?” - அவரும் பதிலுக்கு ஒரு எள்ளல் கேள்வியை வீசினார்.

‘இல்லை’ என்கிற உண்மையை சொல்ல முடியாமல், “ஐ ஹேட் திஸ் இன்ட்ராகேஷன். ஷூட் பண்ணறதுக்கு முன்னாடி அந்த இடியட் உண்மையை சொல்லியிருந்தான்னா எனக்கு இந்த தொல்லையே இருந்திருக்காது” என்று முணுமுணுத்தான்.

“நீ அவனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தியா?”

“நிச்சயமா கொடுத்தேன். ஆனா அவன் துப்பாக்கியை இறக்கவே இல்ல. என்கிட்ட பேசவும் முயற்சி பண்ணல” - அடித்துப் பேசினான். அவன் முகத்திலிருந்த தீவிரம் அவரை அவனுக்கு சாதகமாக யோசிக்க வைத்தது.

மூச்சுக்காற்றை ஆழமாக உள்ளிழுத்து வெளியேற்றி மனநிலையை சமன்படுத்த முயன்ற சுக்லா, “சில நேரங்கள்ல ஃபிரண்ட்லி ஃபயரை தடுக்க முடியாம போயிடுது” என்றார் முணுமுணுப்பாக.

எதிரி என்று நினைத்து சொந்த படைவீரனை தவறுதலாக சுட்டுவிடுவதையே ஃபிரண்ட்லி ஃபயர் என்பார்கள். அர்ஜுன் திலக்கை சுட்டது கூட தவறுதலாக நடந்த ஃபிரண்ட்லி ஃபயர் என்று நம்பினார்.. இல்லை.. நம்ப வைக்கப்பட்டார் ராகேஷ் சுக்லா.

“திலக்கிற்கு நா கொடுத்த வாய்ப்பை நீங்க எனக்கு கொடுத்திருந்தீங்கன்னா இந்த முறை நடந்த ஃபிரண்ட்லி ஃபயரை நிச்சயமா தடுத்திருக்கலாம்” - சிறிதும் தாட்சண்யமின்றி அவரை நேரடியாக குற்றம்சாட்டினான். அதில் ஒரு நொடி திகைத்துத் தடுமாறிய சுக்லா, “என்ன சொல்ற?” என்றார்.

“மிருதுளாவை ஷூட் பண்ணறதுக்கு ஆள் அனுப்பறதுக்கு முன்னாடி நீங்க என்னை கூப்பிட்டு பேசியிருக்கனும்.”

“இங்க யார் பாஸ். நீ எனக்கு வேலை செய்றியா.. இல்ல நா உனக்கு வேலை செய்றேனா?” - கடுப்படித்தார்.

“நிச்சயமா நான் தான் உங்களுக்கு வேலை செய்றேன். ஆனா நா செய்யிற வேலையில உங்களோட குறுக்கீடு அதிகமாயிருக்கு.”

“அப்படியா?” - புருவம் உயர்த்தினார்.

“நிச்சயமா. மிருதுளா என்னோட கஸ்டடில இருக்கா. அவளை வச்சு எனக்கு சில பிளான்ஸ் இருக்கு. அதுல நீங்க குறுக்கிட நினைக்கிறீங்க. எனக்கு தெரியாம என்னோட இடத்துல இயங்க நினைக்கிறீங்க. ஏன்?” - கத்தி போல் பாய்ந்தது அவன் கேள்வி.

“ஏன்னா அந்த மிருதுளா விஷயத்துல நா உன்ன நம்பலை. அவளோட வலையில நீ விழுந்துட்ட. உன்னால அவளை எதுவும் செய்ய முடியாது. புரியுதா?”

அர்ஜுன் அவருடைய குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லாமல் சிரித்தான். அந்த சிரிப்பு அவரை மேலும் ஆத்திரப்படுத்தியது.

“அர்ஜுன், எனக்கு வயசாயிருக்கலாம். ஆனா நானும் ஆம்பளைதான். என்னால உன்ன ஜட்ஜ் பண்ண முடியும்.”

“அப்படினா என்னோட நடிப்புத்திறமையை நீங்க பாராட்டியிருக்கணுமே! ஏன் கோவப்படுறீங்க?”

இருவரும் பேசிக் கொண்டிருந்த போது கதவிற்கு அருகில் ஏதோ அரவாரம் தெரிந்தது. அர்ஜுன் பேச்சை நிறுத்திவிட்டு கவனித்தான். சற்று நேரத்தில் உள்ளே நுழைந்த டேவிட், சுக்லாவை கண்டு வியந்தான். பிறகு உடனே தலையை தாழ்த்தி அவருக்கு மரியாதை செய்தான்.

“ஐம் சாரி.. நீங்க இருக்கறது தெரியாம வந்துட்டேன்” என்றான் வருத்தத்துடன்.

“தட்ஸ் ஓகே.. நீ உன்னோட ரூம்ல வெயிட் பண்ணு. கொஞ்ச நேரத்துல நானே வர்றேன்” என்று நண்பனுக்கு பதில் கூறி அவனை அனுப்பிவிட்டு சுக்லாவிடம் திரும்பினான் அர்ஜுன்.

“என்னை முட்டாளாக்க நினைக்காத. உன்னால முடியாது” - கோபத்துடன் கூறினார் சுக்லா.

“அங்கிள், இதுதான் என்னோட ஸ்டைல் ஆஃப் ஒர்க். நம்பிக்கை இருந்தா என் விருப்பப்படி என்னை வேலை செய்ய விடுங்க. இல்லைன்னா நீங்க சொல்றபடி வேலை செய்ற யாரையாவது என்னோட இடத்துக்கு கொண்டு வாங்க. நா விலகிக்கறேன்” - கராறாகப் பேசினான்.

அவனை எரித்துவிடுவது போல் முறைத்துப் பார்த்தார் சுக்லா.

“விலகிக்கிறதுக்குத்தான் உன்ன வளர்த்துவிட்டேனா?” - பற்களைக் கடித்தார்.

“எனக்கு வேற வழியில்லை. ஐ நீட் மை ஸ்பேஸ்.”

:என்னோட டெல்லி பயணத்தை பற்றி எதிரிகளுக்கு ஏதாவது க்ளூ கொடுத்துட்டான்னா என்னோட உயிருக்கே ஆபத்து. அதுகூட புரியலையா உனக்கு?” - எரிந்து விழுந்தார்.

“இங்க எனக்குத் தெரியாம ஒரு அணுவும் அசையாது. திலக்கோட மரணம் கூட அதை உங்களுக்கு உணர்த்தலையா?” - இலகுவாக பதில் கேள்வி கேட்டான்.

“விதண்டாவாதம் பண்ற. அதை கூட அவளுக்காகத்தான் பண்ணுறியோன்னு நினைக்க தோணுது.”

“சந்தேகத்துக்கு மருந்து நம்பிக்கை. ஒன்னு எம்மேல நம்பிக்கை வைங்க.. இல்ல..” என்று ஓரிரு நிமிடங்கள் தாமதித்தவன், தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து அவர் கையில் கொடுத்து, “மேல தான் இருக்கா. இப்பவே போய் ஷூட் பண்ணுங்க. எனக்கு எந்த அக்கறையும் இல்ல. ஆனா அதுக்குப் பிறகு நாயக் ஃபேமிலியை ட்ரேஸ் பண்ணி ஃபினிஷ் பண்ற வேலையையும் நீங்களே பார்த்துக்கோங்க” என்றான்.

“அவளுக்காகத்தானே இப்படி பேசுற?” - அவனை துளைப்பது போல் பார்த்தார்.

“ம்ஹும்.. என்னோட எபிலிட்டியை ப்ரூஃப் பண்றதுக்காக” - நீண்ட பெருமூச்சுடன் வழுக்கை விழுந்த தன் தலையை அழுந்த தடவினார் சுக்லா.

அனுபவம் தந்த நுண்ணறிவு எச்சரித்தாலும் அர்ஜுன் மீது கொண்டிருக்கும் அபிமானமும் நம்பிக்கையும் அவரை அமைதிப்படுத்தியது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 28

உயிரோடு இருக்கிறோம் என்பதையே சிரமப்பட்டு நினைவிற்கு கொண்டுவர வேண்டியிருந்தது மிருதுளாவிற்கு. சாவின் விளிம்பை தொட்டுவிட்டு மீண்டிருக்கிறாள். அவன் மட்டும் சரியான நேரத்திற்கு வரவில்லை என்றால் இந்நேரம் பிணமாகியிருப்பாள். நினைக்கும் போதே உடல் சில்லிட்டது. சுமனோடு மேலும் ஒண்டி கொண்டபடி கண்ணாடியின் வழியே அர்ஜுனை ஏறிட்டாள். சிவந்திருந்த கண்களை மட்டும் தான் காண முடிந்தது அந்த கண்ணாடியில். அதுவே அவனுடைய மனநிலையை ஊகிக்க போதுமானதாக இருந்தது. ஆயாசத்துடன் கண்களை மூடினாள். சற்று நேரத்திலேயே மாளிகை வளாகத்திற்குள் வந்து நின்றது வாகனம்.

“சுஜித் எப்படி இருக்கான்?” - கீழே இறங்குவதற்கு முன் தயக்கத்துடன் கேட்டாள் சுமன்.

“ஆபத்து எதுவும் இல்ல. ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடு. ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போக ஆள் வர சொல்றேன்” - கரகரத்த குரலில் கூறிவிட்டு கீழே இறங்கி விறுவிறுவென்று மாளிகைக்குள் நுழைந்தான். அவன் தன்னை ஒருமுறை கூட ஏறிட்டு பார்க்கவில்லை என்கிற உறுத்தலுடன் அவனை பின்தொடர்ந்தாள் மிருதுளா.

தளபதி - இது வெறும் பட்டம் அல்ல. பொறுப்பு.. லட்சத்தில் ஒருவன் மட்டுமே தேர்ந்தெடுக்கும் தொழிலை அவன் தேர்ந்தெடுத்திருக்கிறான். ஒருமுறை விட்டு மறுமுறை பிடிக்க இது ஒன்றும் பணத்தை பணயம் வைக்கும் தொழிலல்ல. உயிரை பணயம் வைக்கும் தொழில். போனால் வராது. கரணம் தப்பினால் மரணம். அவ்வளவுதான். இதில் துணிவும் துரிதமும் எந்த அளவு முக்கியமோ அதே அளவு நிதானமும் எச்சரிக்கையும் முக்கியம்.

இன்று அவனுடைய எச்சரிக்கை எங்கு போனது? நிதானம் எங்கு போனது? அனைத்தும் மிருதுளாவின் அலறலோடு காற்றில் கரைந்து போய்விட்டது. அவள் குரலை கேட்டதும் எத்தனை துரிதமாக எதிர்வினையாற்றினான்! எப்படி வந்தது இந்த பலவீனம் அவனுக்குள்! - கைகள் இரண்டையும் சுவற்றில் ஊன்றி, ஷவருக்கு கீழே நின்று ஊற்றாக பீறிடும் குளிர்ந்த நீரை மொத்தமாய் உச்சந்தலையில் வாங்கியும் அவனுடைய உஷ்ணம் குறையவில்லை.

திலக்கின் நியாயத்தை காது கொடுத்து கேட்கவே அவன் தயாராக இல்லை. அவனை கொலை செய்ததற்காக வருந்தவில்லை. ஆனால் கட்டுப்பாடற்று - நிதானமிழந்து - மிருதுளாவிற்காக கொலை செய்ததைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனால். தொற்றுக்கு கிருமி போல் அவனுக்குள் ஊடுருவிவிட்டாள். உடனடியாக சிகிச்சை செய்தாக வேண்டும். இல்லையென்றால் அழிவு அவனுக்குத்தான் - ஷவரை அணைத்தான்.

ஈரத்தலையை துவட்டியபடி அவன் குளியலறையிலிருந்து வெளியே வந்த போது அறைக்கதவு தட்டப்படும் மெல்லிய ஓசை அவன் செவியை எட்டியது. உத்தரவில்லாமல் வேலைக்காரர்கள் கூட மேல்தளத்திற்கு வர முடியாத நிலையில், வந்திருப்பது மிருதுளாவாகத்தான் இருக்க முடியும் என்பதை தர்க்கரீதியாக மூளை அறிவுறுத்துவதற்கு முன், அவன் உள்ளம் அவள் வரவை உணர்ந்தது. உடல் விறைத்து நிமிர கதவையே வெறித்துப் பார்த்தான். தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள் மிருதுளா.

வெகு நேரம் சுய அலசல் செய்து திடப்பட்டிருந்தவன் அவளை கண்டதும் நீர்த்துப்போனான். சுவாசத்தின் வேகம் சீரற்று போனது. இதயத்துடிப்பு அதிகரித்தது. உள்ளம் தடுமாறியது. அதை வெளிக்காட்டாமல் இருக்க முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டான்.

அவளும் குளித்திருந்தாள். ஈரம் காயாத கேசம் பளபளத்தது. முகத்தில் குழப்பம் சூழ்ந்திருந்தது.

“இந்நேரம் செத்துப்போயிருப்பேன்” - முணுமுணுத்தாள்.

அவனுக்குள் சுருக்கென்று தைத்தது அந்த வார்த்தை. அவன் தடித்த உதடுகள் அழுந்த மூடின.

“நீங்க.. காப்பாத்தீட்டிங்க..” - நடந்த சம்பவத்தின் தாக்கம் இன்னமும் அவளுக்குள் இருப்பதன் அடையாளமாக உடல் வெளிப்படையாக நடுங்கியது. உயிர் பயம் பொல்லாதது. அது அவ்வளவு விரைவாக விட்டுப்போய்விடுமா என்ன? கைகளை குறுக்காகக் கட்டிக் கொண்டு, “தேங்க் யூ” என்றவளின் குரலும் உணர்ச்சிவசத்தில் கரகரத்தது.

அர்ஜுன் ஹோத்ராவின் கட்டுப்பாட்டில் கீறல் விழுந்தது. மரத்துப்போயிருந்த மனதில் உணர்வுகள் ஊற்றெடுக்கத் துவங்கின. அவளுடைய கலக்கமும் பயமும் அவனை கரைத்தது.

“ரிலாக்ஸ்.. அதெல்லாம் முடிஞ்சிடிச்சு ஓகே. யு ஆர் ஆல்ரைட் நௌ.. யு ஆர் ஆல்ரைட்” - அவளிடம் நெருங்கி அவளுடைய கலக்கத்தை களைய முனைந்தான்.

“சுக்லாஜீன்னா யாரு? அவரு ஏன் என்னை கொலை செய்ய சொன்னாரு?” - அப்படி கேட்கும் போது அவன் கண்களுக்கு அவள் சிறு குழந்தை போல் தோன்றினாள். அவன் மனம் உருகியது.

“ராகேஷ் சுக்லா கோர்த்தாவோட தலைவர். என்னோட பாஸ்.”

மிருதுளாவின் கண்கள் பெரிதாக விரிந்தன. மிரட்சியில் முகம் வெளிறியது. அவர்! அந்த மனிதர்! இந்த மாளிகையில் ஒரு முறை அவரை பார்த்திருக்கிறாள். பெரிய மீசையும்.. உருட்டிய விழிகளும்.. அவளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று அவர் அவளை பார்த்த பார்வை! ஓ காட்! அந்த பார்வைக்கான பொருள் இதுதானா! அன்றே அவளை கொலை செய்ய முடிவெடுத்துவிட்டாரா! கடவுளே! – “நா.. நா என்ன பண்ணினேன்? என்னை ஏன்?” - கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

அவளுடைய கண்ணீர் அவனை நிலையிழக்கச் செய்தது. சட்டென்று அவளை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான். “நோ.. நீ எதுவும் செய்யல.. அது ஒரு மிஸ்டேக்.. பிலீவ் மீ. இனி அப்படி நடக்காது.. நா இருக்கேன்ல. காம் டௌன்..” - அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

இதையெல்லாம் அவன் திட்டமிட்டோ, விரும்பியோ செய்யவில்லை. அந்த ஒரு நொடியில் மனதில் தோன்றிய உணர்வுகளின் வெளிப்பாடு அது. அவனை மீறி நடந்துவிட்டது. மிருதுளாவின் உடல் அழுகையில் குலுங்கிய போது அவனால் அவளிடமிருந்து விலக முடியவில்லை. மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

“ஹி லுக்ஸ் வெரி டேஞ்சரஸ். எனக்கு பயமா இருக்கு” - உறுதியான மரத்தை சுற்றிப்படரும் கொடி போல் அவளுடைய கரங்களும் அவன் முதுகில் படர்ந்தன.

“ஷ்ஷ்.. ஒரு பயமும் இல்ல.. ரி..லா..க்ஸ்” - அவளை தேற்றினான்.

“என்னை.. கண்டிப்பா.. கொன்..னு..டுவாங்க” - தேம்பியழுதபடி பயந்த முயல்குட்டி புதருக்குள் பதுங்குவது போல் அவனுக்குள் பதுங்கிக்கொள்ள முயன்றாள்.

“ப்ச்.. மிருதுளா.. என்னை பாரு.. லுக் அட் மீ. நா யாரு.. ம்ம்ம்? ஹூ ஆம் ஐ?” - முகத்தை மட்டும் விலக்கி அவளை பார்த்துக் கேட்டான். அவனுடைய கேள்வியின் உள்ளர்த்தம் புரியாமல் விழித்தாள் மிருதுளா. புருவம் உயர்த்தி பதில் சொல்ல உந்தினான் அர்ஜுன்.

“அர்..ஜு..ன் ஹோ..த்..ரா.. கோர்த்..தா மே..ன்” - நலிந்த குரலில் தேம்பியபடி முணுமுணுத்தாள்.

“அது மத்தவங்களுக்கு. உனக்கு யாரு?” - அவனுடைய கேள்வியில் தீவிரம் கூடியது. நெருக்கம் அதிகரித்தது. அப்போதுதான் மிருதுளா தன்னிலைக்கு வந்தாள். அவள் இதயம் ட்ரம்ஸ் வாசிக்க துவங்கியது. காது மடல் சூடாகி சிவந்தது. எச்சிலை கூட்டி விழுங்கினாள். வறண்டுபோன இதழ்களை ஈரப்படுத்திக் கொண்டாள். தொண்டை குழிக்குள் காற்றுப்பந்து அடைத்துக் கொண்டது போல் தோன்றியது. பேச முடியவில்லை.

அவளுடைய தடுமாற்றத்தை உணர்ந்து பிடியை தளர்த்தியவன், அவளை கட்டிலில் அமரச் செய்து, அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்து அவள் கைகளை பிடித்தபடி கண்களை கூர்ந்து நோக்கினான். அவனுடைய கேள்விக்கு பதிலை அவனிடமே எதிர்பார்ப்பது போல் அவளும் அவன் முகத்தை ஏறிட்டாள்.

“ஐம் யுவர் புல்லெட் கேட்சர்” என்றான்.

அவளுடைய புருவங்கள் சுருங்கின. அவளுக்கு புரியவில்லை.

“உன்னோட ஆபத்தை என்னோடதா ஏத்துக்கறவன். உன்னோட உயிரை எடுக்கனும்னா அதுக்கு முன்னாடி என்னோட உயிரை எடுத்திருக்கனும். காட் இட்?” - அவனுடைய வார்த்தையில் தீவிரம் இருந்தது. கண்களில் உண்மை இருந்தது. அவள் தடுமாறினாள்.

“ஏன்.. ஏன் அப்படி?” - வெகு சிரமப்பட்டு அந்த வார்த்தை வெளிப்பட்டது அவளிடமிருந்து.

அவளுடைய கேள்விக்கு அவன் உடனே பதில் சொல்லவில்லை. ஓரிரு நொடிகள் அவள் முகத்தை பார்த்தபடி அமைதியாக இருந்தான். பிறகு இடதுபுற நெஞ்சில் கைவைத்து, “ஐ ஃபீல்.. யு ஆர் இம்பார்டென்ட் டு மீ.. நீ எனக்கு முக்கியமானவள்” என்றான். அவன் குரல் இழைந்து.

மிருதுளாவின் உள்ளம் கரைந்தது. இதயத்திற்குள் ஆழமாய் ஓர் இனிய உணர்வு ஊடுருவியது. அந்த இன்பத்தை அவளால் முழுமையாக அங்கீகரித்து அனுபவிக்க முடியவில்லை. அவன் சொல்வதெல்லாம் உண்மையா என்கிற சந்தேகம்.. அவளுடைய புரிதல் சரிதானா என்கிற குழப்பம்.. இது நிலைக்குமா என்கிற பயம்.. அவனுடைய தொழில் மீதான அதிருப்தி.. பலவிதமான எண்ணங்கள் அவள் மனதை புகை மூட்டம் போல் சூழ்ந்துக் கொண்டன.

அவளுடைய கலங்கிய முகத்தைப் கவனித்தவன், அவள் நெற்றியோடு நெற்றி வைத்து, “ரிலாக்ஸ்” என்றான். அவள் மனதில் மூட்டம் போட்டிருந்த அனைத்து எண்ணங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மகிழ்ச்சியை மேலெழச் செய்தது அவனுடைய செய்கை.

***********************

அர்ஜுன் ஹோத்ராவின் மாளிகைக்கு பின்னால் உள்ள திடலில் தரையிறங்கிய ஒரு தனியார் ஹெலிகாப்டரிலிருந்து கீழே இறங்கினார் ராகேஷ் சுக்லா. தான் வரப்போகும் செய்தியை முன்கூட்டியே அர்ஜுனுக்கு தகவல் அனுப்பிவிட்டார். வரட்டும் என்று தான் அவனும் காத்துக் கொண்டிருந்தான். இதோ அவனுடைய அலுவலக அறையில் இருவரும் எதிரும் புதிருமாக நின்றுக் கொண்டிருக்கிறார்கள்.

“அவன் என்னோட ஆள். எனக்காக வேலை செஞ்சவன். அவன் மேல எப்படி நீ கைவச்ச?” - கடுங்கோபத்தில் கர்ஜித்தார் ராகேஷ் சுக்லா.

ஓரிரு நிமிடங்கள் அவரை வெறித்துப்பார்த்த அர்ஜுன், “இங்க எல்லாருமே உங்க ஆளுங்கதான். எல்லாரும் உங்களுக்காகத்தான் வேலை பார்க்கறோம்” என்றான் இறுகிய குரலில்.

அவன் வார்த்தையில் இருந்த உண்மை குத்த அவர் முகத்தில் ஒரு சின்ன அதிர்வு வந்து போனது. இமைக்காமல் அர்ஜுன் ஹோத்ராவை பார்த்தவர், “திலக் அந்த ஹைரார்கில வரமாட்டான். அது உனக்கும் தெரியும்” என்றார்.

“எக்ஸ்கியூஸ் மீ.. என்ன சொன்னீங்க!” - அவன் குரலிலும் முகத்திலும் கோபம் தெறித்தது.

அவர் அலட்சியமாக தோளை குலுக்கினார். “உங்க ஒவ்வொருத்தரையும் நா ஃபாலோ பண்ணிதான் ஆகனும். என்னோட வேலையில அதுவும் ஒரு பகுதி” என்றார்.

“ஓ ரியலி! என்னை ஸ்பை பண்ண வேண்டிய அவசியம் இல்லைன்னு சொன்னீங்களே!”

“அன்னைக்கு நான் சொன்னது உண்மை இல்லைன்னு உனக்கு தெரியும். உனக்கு தெரியும்ங்கறது எனக்கும் தெரியும். அதனால வார்த்தை ஜாலம் செய்யிறதையெல்லாம் விட்டுட்டு நேர்பட பேசு” என்று அதட்டினார்.

“ஃபைன். என்ன தெரியனும் உங்களுக்கு?”

“திலக்கை ஏன் கொன்ன?”

“அவன் எனக்கு உண்மையா இல்ல. என்னோட சோர்ஸை அழிக்கப்பார்த்தான். அதை நான் செஞ்சே ஆக வேண்டிய சூழ்நிலை.”

“ஏன் அப்படி பண்ணினான்னு விசாரிச்சிருக்கலாமே?”

“கைல துப்பாக்கியோட நின்னுகிட்டு இருக்கான். அப்பவும் நா விசாரணைதான் செஞ்சிருக்கனுமா? அதுதான் கோர்த்தாவோட நடைமுறையா?” - எள்ளலாகக் கேட்டான்.

“நீ எப்பவும் கோர்த்தாவோட நடைமுறையை தான் ஃபாலோ பண்றியா?” - அவரும் பதிலுக்கு ஒரு எள்ளல் கேள்வியை வீசினார்.

‘இல்லை’ என்கிற உண்மையை சொல்ல முடியாமல், “ஐ ஹேட் திஸ் இன்ட்ராகேஷன். ஷூட் பண்ணறதுக்கு முன்னாடி அந்த இடியட் உண்மையை சொல்லியிருந்தான்னா எனக்கு இந்த தொல்லையே இருந்திருக்காது” என்று முணுமுணுத்தான்.

“நீ அவனுக்கு அந்த வாய்ப்பை கொடுத்தியா?”

“நிச்சயமா கொடுத்தேன். ஆனா அவன் துப்பாக்கியை இறக்கவே இல்ல. என்கிட்ட பேசவும் முயற்சி பண்ணல” - அடித்துப் பேசினான். அவன் முகத்திலிருந்த தீவிரம் அவரை அவனுக்கு சாதகமாக யோசிக்க வைத்தது.

மூச்சுக்காற்றை ஆழமாக உள்ளிழுத்து வெளியேற்றி மனநிலையை சமன்படுத்த முயன்ற சுக்லா, “சில நேரங்கள்ல ஃபிரண்ட்லி ஃபயரை தடுக்க முடியாம போயிடுது” என்றார் முணுமுணுப்பாக.

எதிரி என்று நினைத்து சொந்த படைவீரனை தவறுதலாக சுட்டுவிடுவதையே ஃபிரண்ட்லி ஃபயர் என்பார்கள். அர்ஜுன் திலக்கை சுட்டது கூட தவறுதலாக நடந்த ஃபிரண்ட்லி ஃபயர் என்று நம்பினார்.. இல்லை.. நம்ப வைக்கப்பட்டார் ராகேஷ் சுக்லா.

“திலக்கிற்கு நா கொடுத்த வாய்ப்பை நீங்க எனக்கு கொடுத்திருந்தீங்கன்னா இந்த முறை நடந்த ஃபிரண்ட்லி ஃபயரை நிச்சயமா தடுத்திருக்கலாம்” - சிறிதும் தாட்சண்யமின்றி அவரை நேரடியாக குற்றம்சாட்டினான். அதில் ஒரு நொடி திகைத்துத் தடுமாறிய சுக்லா, “என்ன சொல்ற?” என்றார்.

“மிருதுளாவை ஷூட் பண்ணறதுக்கு ஆள் அனுப்பறதுக்கு முன்னாடி நீங்க என்னை கூப்பிட்டு பேசியிருக்கனும்.”

“இங்க யார் பாஸ். நீ எனக்கு வேலை செய்றியா.. இல்ல நா உனக்கு வேலை செய்றேனா?” - கடுப்படித்தார்.

“நிச்சயமா நான் தான் உங்களுக்கு வேலை செய்றேன். ஆனா நா செய்யிற வேலையில உங்களோட குறுக்கீடு அதிகமாயிருக்கு.”

“அப்படியா?” - புருவம் உயர்த்தினார்.

“நிச்சயமா. மிருதுளா என்னோட கஸ்டடில இருக்கா. அவளை வச்சு எனக்கு சில பிளான்ஸ் இருக்கு. அதுல நீங்க குறுக்கிட நினைக்கிறீங்க. எனக்கு தெரியாம என்னோட இடத்துல இயங்க நினைக்கிறீங்க. ஏன்?” - கத்தி போல் பாய்ந்தது அவன் கேள்வி.

“ஏன்னா அந்த மிருதுளா விஷயத்துல நா உன்ன நம்பலை. அவளோட வலையில நீ விழுந்துட்ட. உன்னால அவளை எதுவும் செய்ய முடியாது. புரியுதா?”

அர்ஜுன் அவருடைய குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லாமல் சிரித்தான். அந்த சிரிப்பு அவரை மேலும் ஆத்திரப்படுத்தியது.

“அர்ஜுன், எனக்கு வயசாயிருக்கலாம். ஆனா நானும் ஆம்பளைதான். என்னால உன்ன ஜட்ஜ் பண்ண முடியும்.”

“அப்படினா என்னோட நடிப்புத்திறமையை நீங்க பாராட்டியிருக்கணுமே! ஏன் கோவப்படுறீங்க?”

இருவரும் பேசிக் கொண்டிருந்த போது கதவிற்கு அருகில் ஏதோ அரவாரம் தெரிந்தது. அர்ஜுன் பேச்சை நிறுத்திவிட்டு கவனித்தான். சற்று நேரத்தில் உள்ளே நுழைந்த டேவிட், சுக்லாவை கண்டு வியந்தான். பிறகு உடனே தலையை தாழ்த்தி அவருக்கு மரியாதை செய்தான்.

“ஐம் சாரி.. நீங்க இருக்கறது தெரியாம வந்துட்டேன்” என்றான் வருத்தத்துடன்.

“தட்ஸ் ஓகே.. நீ உன்னோட ரூம்ல வெயிட் பண்ணு. கொஞ்ச நேரத்துல நானே வர்றேன்” என்று நண்பனுக்கு பதில் கூறி அவனை அனுப்பிவிட்டு சுக்லாவிடம் திரும்பினான் அர்ஜுன்.

“என்னை முட்டாளாக்க நினைக்காத. உன்னால முடியாது” - கோபத்துடன் கூறினார் சுக்லா.

“அங்கிள், இதுதான் என்னோட ஸ்டைல் ஆஃப் ஒர்க். நம்பிக்கை இருந்தா என் விருப்பப்படி என்னை வேலை செய்ய விடுங்க. இல்லைன்னா நீங்க சொல்றபடி வேலை செய்ற யாரையாவது என்னோட இடத்துக்கு கொண்டு வாங்க. நா விலகிக்கறேன்” - கராறாகப் பேசினான்.

அவனை எரித்துவிடுவது போல் முறைத்துப் பார்த்தார் சுக்லா.

“விலகிக்கிறதுக்குத்தான் உன்ன வளர்த்துவிட்டேனா?” - பற்களைக் கடித்தார்.

“எனக்கு வேற வழியில்லை. ஐ நீட் மை ஸ்பேஸ்.”

:என்னோட டெல்லி பயணத்தை பற்றி எதிரிகளுக்கு ஏதாவது க்ளூ கொடுத்துட்டான்னா என்னோட உயிருக்கே ஆபத்து. அதுகூட புரியலையா உனக்கு?” - எரிந்து விழுந்தார்.

“இங்க எனக்குத் தெரியாம ஒரு அணுவும் அசையாது. திலக்கோட மரணம் கூட அதை உங்களுக்கு உணர்த்தலையா?” - இலகுவாக பதில் கேள்வி கேட்டான்.

“விதண்டாவாதம் பண்ற. அதை கூட அவளுக்காகத்தான் பண்ணுறியோன்னு நினைக்க தோணுது.”

“சந்தேகத்துக்கு மருந்து நம்பிக்கை. ஒன்னு எம்மேல நம்பிக்கை வைங்க.. இல்ல..” என்று ஓரிரு நிமிடங்கள் தாமதித்தவன், தன்னுடைய கைத்துப்பாக்கியை எடுத்து அவர் கையில் கொடுத்து, “மேல தான் இருக்கா. இப்பவே போய் ஷூட் பண்ணுங்க. எனக்கு எந்த அக்கறையும் இல்ல. ஆனா அதுக்குப் பிறகு நாயக் ஃபேமிலியை ட்ரேஸ் பண்ணி ஃபினிஷ் பண்ற வேலையையும் நீங்களே பார்த்துக்கோங்க” என்றான்.

“அவளுக்காகத்தானே இப்படி பேசுற?” - அவனை துளைப்பது போல் பார்த்தார்.

“ம்ஹும்.. என்னோட எபிலிட்டியை ப்ரூஃப் பண்றதுக்காக” - நீண்ட பெருமூச்சுடன் வழுக்கை விழுந்த தன் தலையை அழுந்த தடவினார் சுக்லா.

அனுபவம் தந்த நுண்ணறிவு எச்சரித்தாலும் அர்ஜுன் மீது கொண்டிருக்கும் அபிமானமும் நம்பிக்கையும் அவரை அமைதிப்படுத்தியது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
அத்தியாயம் 29

“ஹேய்.. எப்படி இருக்க? பீலிங் பெட்டர்?” - ஜன்னல் பக்கம் நின்று வெளிப்புறத்தை வெறித்துக் கொண்டிருந்த டேவிட், நண்பனின் குரல் கேட்டு திரும்பினான்.

உற்சாகமாக உள்ளே வந்த அர்ஜுன், டேவிட்டின் முகத்திலிருந்த இயல்பற்ற தன்மை உறுத்த, “ஆர் யு ஆல்ரைட்?” என்றான்.

நெரிந்த புருவங்களுடன் தோழனை உறுத்து விழித்த டேவிட், “வாட் த ஹெல் இஸ் கோயிங் ஆன் இன் யுவர் ப்ளடி மைண்ட் மேன்?” என்று பற்ற வைத்த சரவெடி போல் தடித்த வார்த்தைகளை படபடவென்று வீசினான்.

சட்டென்று துடைத்துவிட்டது போல், முகத்திலிருந்த சினேக உணர்வு மொத்தமும் மறைந்து போனது அர்ஜுன் ஹோத்ராவிற்கு. தாடை இறுகி கண்களில் கடுமை கூடியது.

“வார்த்தையை கவனமா சூஸ் பண்ணு டேவிட்” - ஆணியடித்து போல் அழுத்தம் திருத்தமாக கூறினான்.

அவனுடைய முகமாற்றம் குரல் அழுத்தம் எதுவும் டேவிட்டின் சிந்தையை எட்டவில்லை. ‘மிருதுளா விஷயத்துல நா உன்ன நம்பல. அவளோட வலையில நீ விழுந்துட்ட. உன்னால அவளை எதுவும் செய்ய முடியாது’ - ராகேஷ் சுக்லா. ‘என்னோட நடிப்புத்திறமையை நீங்க பாராட்டியிருக்கணுமே! ஏன் கோவப்படுறீங்க?’ - அர்ஜுன் ஹோத்ரா. இவருடைய குரலும் செவியில் மாறிமாறி எதிரொலிக்க, தீப்பற்ற வைத்தது போல் அவன் உள்ளம் எரிந்தது.

“மிருதுளாகிட்ட நடிக்கிறியா? அவ எமோஷன்ஸோட விளையாடறியா நீ?” - பொங்கும் ஆத்திரத்தை உள்ளுக்குள் அடக்கி வைக்க முடியாமல், சிவந்த விழிகளுடன் சீறினான்.

அர்ஜுன் ஹோத்ராவின் புருவம் சுருங்கியது. குண்டடி பட்டு ஓய்வில் இருந்துவிட்டு இன்றுதான் பணிக்கு திரும்புகிறான். முதல் நாளே மிருதுளாவின் விஷயத்தில் தலையிடுகிறான். அதுவும் வெகு தீவிரமாக.

பற்கள் நறநறக்க, “உனக்கு சம்மந்தம் இல்லாத விஷயம்” என்றான் எச்சரிக்கும் தொனியில்.

“மிருதுளா மேல எனக்கு அக்கறை இருக்கு.. அவளுக்காக நா கேட்பேன்” - நாசியை விடைத்துக் கொண்டு நண்பனிடம் நெருங்கினான் டேவிட்.

நாண் அறுந்த வில்லை போல விறைத்து நிமிர்ந்தது அர்ஜுன் ஹோத்ராவின் உடல். பாறை போல் இறுகிய கை முஷ்டிகள், அடுத்து ஒரு வார்த்தை பேசினாலும் அவன் முகத்தை சிதைத்துவிட தயாராகிவிட்டன. ஏதோ நல்ல நேரம்.. அவன் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.. முறைத்த பார்வையோடு நிறுத்திக் கொண்டான்.

“ஹூ ஆர் யு? அவ மேல அக்கறை காட்ட நீ யாரு? உன்னோட அக்கறை எந்த விதத்துல அவளுக்கு உதவும்.. ம்ம்ம்? டெல் மீ” - கத்தினான்.

பதில் பேச முடியாமல் திகைத்தான் டேவிட்.

“அவ என்னோட கண்ட்ரோல்ல இருக்கா. நா என்ன வேணுன்னாலும் செய்வேன். யாரும் கேட்க முடியாது. முக்கியமா நீ” - வெறுப்பில் தோய்ந்த வார்த்தைகளை உமிழ்ந்தான்.

“அர்ஜுன்!”

“ஷட்.. ஷ..ட்..அப்..” - அறையே அதிர்ந்தது அவனுடைய அகங்காரமான அதட்டலில்.

அதற்கெல்லாம் டேவிட் அசைந்து கொடுக்கவில்லை. எப்படியாவது மிருதுளாவை இந்தக் குழப்பத்திலிருந்து காப்பாற்றிவிட வேண்டும் என்கிற உந்துதல் அவனை அடுத்த நிலைக்கு தள்ளியது.

“ப்ளீஸ் அர்ஜுன்.. ப்ளீஸ்.. இந்த அணுகுமுறையை விட்டுடு. அவ மனசு உன் பக்கம் சாய ஆரம்பிச்சிடுச்சு. இதை என்கரேஜ் பண்ணாத. அவ அப்பாவி. உன்னோட உண்மையான நோக்கம் தெரிஞ்சா உடைஞ்சு போயிடுவா” - வெளிப்படையாக கெஞ்சினான். அர்ஜுனின் ஆத்திரம் அதிகமானது.

“ஓ ரியலி! அப்போ அதுதான் எனக்கு வேணும். ஐ லவ் டு பிரேக் மை எனிமீஸ்” என்றான் குரோதத்துடன்.

“அவ உன்னோட எனிமி இல்ல அர்ஜுன்.”

“ஹா.. உனக்கு ரொம்ப நல்லா தெரியுமோ!” - பார்வையாலேயே உதாசீனப்படுத்தினான்.

“அர்ஜுன்.. ப்ளீஸ் லீவ் ஹர் அலோன். அவளை விட்டுடு.”

“ஏன்? உனக்கு ஏதும் ஐடியா இருக்கா?” - வெகு நேரமாக மனதை நெருஞ்சி முள்ளாக உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை எள்ளல் தொனியில் கேட்டுவிட்டான்.

“ஓ மேன்! ஏன் இப்படி திங்க் பண்ற? ஐ ஜஸ்ட் ஃபீல் சாரி ஃபார் ஹர். வேற எதுவும் இல்ல” - சிறு பதட்டத்துடன் கூறினான் டேவிட். மிருதுளாவின் மீதான நாட்டம் அவனை பதட்டப்பட வைத்தது. அவனுடைய அசைவுகளை துல்லியமாக கவனித்த அர்ஜுன், அவனுடைய வார்த்தையை துளியும் நம்பவில்லை. மிருதுளாவின் மீதான விருப்பம், ஆசை, நாட்டம் அனைத்தும் அப்பட்டமாக அவன் கண்களில் தெரிந்தது.

அடிநெஞ்சிலிருந்து கோபம் தாறுமாறாக பொங்கியது. அதை மூர்க்கத்தனமாக வெளிப்படுத்துவதில் பயனில்லை. சில சமயங்களில் எதிரிலிருப்பவர்களின் பலத்தை பலவீனமாக மாற்ற வேண்டும். அவர்களுடைய பலவீனத்தை தன்னுடைய பலமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இப்போது டேவிட்டை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமானது. ஆனாலும் எச்சரிக்கையும் முக்கியமல்லவா. எனவே, “உன் வார்த்தையை நா நம்பறேன்” என்றான் கபடமாக.

டேவிட்டின் புருவம் சுருங்கியது. “என்ன! என்ன வார்த்தை” என்றான் புரிந்தும் புரியாத குழப்பத்துடன்.

“உனக்கு மிருதுளா மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லைன்னு நீ சொன்னதை நா நம்பறேன்” என்றான் தெள்ளத்தெளிவாக.

டேவிட் திகைப்புடன் நண்பனை பார்த்தான். வாய் வார்த்தையாக சொன்னதை வாக்குறுதி கொடுத்ததாக அறிவித்துவிட்டான் அர்ஜுன். அதை ஆமோதிக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திணறிப்போனான். ‘வார்த்தையை கவனமா சூஸ் பண்ணு டேவிட்’ - அர்ஜுனின் குரல் அவன் செவியில் எதிரொலித்தது.

எச்சிலைக் கூட்டி விழுங்கி நெஞ்சுக்குள் பொங்கும் உணர்வுகளுக்கு சமாதி கட்டிவிட்டு, “என்னோட அடுத்த அசைன்மென்ட் என்ன?” என்றான். தன்னுடைய ரூட் க்ளீயர் ஆகிவிட்டது என்கிற திருப்தியில் அர்ஜுனின் முகம் பளபளத்தது.

***********************

அன்று மிருதுளாவை கீழே இறங்கக் கூடாது என்று கண்டித்துக் கூறிவிட்டான் அர்ஜுன். உணவு கூட வேலைக்காரர்கள் மூலம் மாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவளுக்கு காரணம் புரியவில்லை. ஆனால் அவனுடைய செயல்கள், அவளுடைய நலனை கருத்தில் கொண்டதாகவே இருக்கும் என்று முழுமையாக நம்பினாள். அந்த நம்பிக்கையில் அமைதியாக கட்டிலில் சாய்ந்தாள். இரவெல்லாம் உறங்காத களைப்பில் கண்கள் செருகின.

ஆழ்ந்த உறக்கத்தில் தோன்றிய அவள் கனவை அவன் மட்டுமே ஆக்கிரமித்திருந்தான். சில மணி நேரங்களை அவனோடு கனவில் கழித்துவிட்டு விழித்தால் நினைவுகளையும் அவனே ஆக்கிரமித்தான். பழகிக்கழித்த நிமிடங்களை அசைபோட்டபடி நேரத்தை நெட்டித்தள்ளியவள் அவனை அடுத்து சந்திக்கும் தருணத்திற்காக காத்திருந்தாள். காத்திருப்பு நிமிடத்தை நீட்டித்தது.

இரவு பியானோ அறைக்கு வந்தாள். வழக்கமாக அவன்தான் அவளுக்காக அங்கே காத்திருப்பான். இன்று அவள் முறை.. இசைப்பெட்டகத்தை தீண்டினாள். விசைகளை மென்மையாய் அழுத்தி இசைத்தாள். கடந்த சில நாட்களில் அவன் அறிந்த வித்தையில் ஒரு பகுதியை அவளுக்கும் கடத்தியிருந்தான். அதன் பலனாக அவள் விரல்கள் இன்று, இழையும் இனிய ஓசையை காற்றில் எழுப்பிக் கொண்டிருந்தன.

மூன்று பாடல்கள் முடியும் வரை இமைமூடி இசையோடு லயித்திருந்தவள் நான்காவது பாடலின் துவக்கத்தில் அவன் அருகாமையை உணர்ந்தாள். அவனை தீண்டிய காற்று அவளிடம் தூது வந்தது. அவன் பூசும் நறுமண திரவியம் அவள் நாசியோடு கூடிப் பேசியது. அவன் மூச்சுவிடும் ஓசை அவள் மீட்டும் இசையையும் தாண்டி அவள் செவியை தீண்டியது. ஆஜானுபாகுவான அவன் உருவம் மறைத்த மின்விளக்கின் ஒளி நிழலாய் மாறி அவள் மேனியில் படர்ந்தது. உள்ளம் சிலிர்க்க பரவசத்துடன் விழி திறந்தாள் மிருதுளா. அகலா பார்வையுடன் அவள் முகத்தில் ஆழ்ந்திருந்தான் அர்ஜுன்.

இவள் இசைத்தாள்.. அவன் ரசித்தான்.. பாடல் முடிந்தது.. அவர்களுடைய மோனம் கலையவில்லை. ஆழியில் மூழ்குவது போல் இருவரும் ஒருவருக்குள் ஒருவர் மூழ்கிப்போனார்கள். மேகக்கூட்டத்தில் தொலைந்து போன மழைத்துளி போல் எங்கோ தொலைந்து போனார்கள். நேரம் நகர்ந்து கொண்டிருந்தது.. காலம் கழிந்து கொண்டிருந்தது. ஏசி அறையில் குளுகுளு காற்றில் உறைந்து போன சிலை போல் விழி பேசும் மொழியில் புதைந்து போனவர்களை மீட்டெடுக்கவே ஒலித்தது அந்த அலைபேசி.

அவள் முகத்தோடு ஒட்டிக் கொண்ட பார்வையை பிய்த்து எடுத்து அலைபேசியின் திரையை நோக்கினான். அழைத்தது டேவிட் தான். அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தான்.

“ஆல் செட்” – ‘அனைத்தும் தயாராகிவிட்டது’ என்றான் அடுத்த முனையிலிருந்து. அர்ஜுனின் பார்வை சுவர் கடிகாரத்துக்கு பாய்ந்தது. நேரம் இரவு பதினோரு மணியானது. “சரி” என்று பதிலளித்துவிட்டு அழைப்பை துண்டித்தவன் மிருதுளாவின் பக்கம் திரும்பினான்.

“ஒரு வாரம் வெளியே தங்கனும். இங்கிருந்து ஏதாவது தேவைன்னா பேக் பண்ணிக்க” என்றான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எங்கே? எதற்கு? என்று பல கேள்விகள் மனதில் எழுந்தாலும் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, “என்னைக்கு கிளம்பனும்?” என்றாள்.

“இப்போ” - அவன் கூறிய துரிதத்தில் மலைத்தாலும் மறுப்பேதும் இல்லாமல் தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

அவர்கள் புறப்பட்டு கிட்டத்தட்ட ஒன்று அல்லது ஒன்றரை மணிநேரம் இருக்கும். ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த டேவிட் கவனமாக காரை செலுத்திக் கொண்டிருந்தான். பின் இருக்கையில் அர்ஜுனுக்கு அருகில் அமர்ந்திருந்த மிருதுளா, சுழட்டியடித்த தூக்கத்தில் இருமுறை கதவில் மோதி நிமிர்ந்து மூன்றாம் முறை அருகிலிருந்தவனின் தோளில் சாய்ந்தாள்.

சட்டென்று சுவாசத்தை இழுத்துப் பிடித்தான் அர்ஜுன். மூச்சுவிடும் அசைவில் விழித்து விலகிவிடுவாளோ என்கிற எச்சரிக்கையில் விழைந்த அனிச்சை செயல் அது. மெல்ல குனிந்து அவள் முகத்தை பார்த்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இன்னும் வசதியை நாடி அவனோடு ஒண்டினாள். ‘தலையணை என்று நினைத்திருப்பாளோ!’ - சிதறும் மழை முத்துக்கள் மொத்தமாய் வந்து மேனியை முத்தமிட்டது போல் சிலிர்த்துப்போனான். மெலிதாய்.. மிக மெலிதாய் மூச்சுக்காற்றை வெளியேற்றி அவள் உறக்கத்தை பாதுகாத்தான். அப்படியே அடுத்த அரை மணி நேரம் கழிந்தது.

அவர்களுடைய பயணம் புறநகரை எட்டியது. புழக்கமற்ற பகுதி.. கரடுமுரடாக சாலை.. கார் குலுங்கியது. மிருதுளாவின் உறக்கம் கலைந்தது. ஏதோ பெரிய - வசதியான கரடி பொம்மையை கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்திருப்பது போல் தோன்றியது. ஆனால், கரடி பொம்மை ஏன் பஞ்சு போல் பொசுபொசுவென்று இல்லாமல் கற்களை போட்டு கட்டிவைத்த மூட்டை போல் கரடுமுரடாக இருக்கிறது! - எங்கிருக்கிறோம் என்கிற குழப்பம் தீர மெல்ல கண்விழித்தாள். அரை நொடி பொழுதிலேயே மூளை மொத்தமாக விழித்துக் கொண்டது. பளிச்சென்று அனைத்தும் விளங்கிவிட்டது.

‘ஈஸ்வரா!’ - அந்த ஈசனைதான் உதவிக்கு நாட வேண்டும். எத்தனை வாகாக அவன் மார்பில் தலையை சாய்த்திருக்கிறாள்! அதுமட்டுமா, அவள் கை கொடி போல் அவன் வயிற்றை வளைத்திருக்கிறதே! பார்த்தால் என்ன நினைப்பான்!

‘வெயிட்.. வெயிட்.. இது யாருடைய கை!’ - தன் முதுகை சுற்றி படர்ந்திருந்த மலை பாம்பை மெல்ல திரும்பிப் பார்த்தாள். ‘அவ..னு..ம்! கடவுளே!’ - சங்கடத்துடன் கண்களை இறுக்கமாக மூடி உதட்டை கடித்தாள். சட்டென்று விலகிவிட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அப்படி செய்தால் அவன் விழித்துவிடுவான். எச்சரிக்கையுடன் மெல்ல விலக முயன்றாள். உடனே அவன் அணைப்பில் அழுத்தம் கூடியது. பகீரென்றது அவளுக்கு. ‘முழிச்சிட்டானா!’ - சட்டென்று அசைவுகளை முடக்கி உறைந்தாள். இதயம் மட்டும் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.

“இன்னும் டைம் இருக்கு.. தூங்கு” - கரகரத்த குரலில் இயல்பாக கூறினான்.

‘வாட்! முழிச்சுதான் இருக்கானா!’ - பிடிபட்ட பறவையின் இறகு போல் படபடத்தது அவள் உள்ளம்.

மெல்ல தலையை நிமிர்த்தி கள்ளத்தனமாக அவன் முகத்தை பார்த்தாள். உறங்கும் பாவனையில் கண்களை மூடியிருந்தான். ஆனால் அவன் புலன்கள் அனைத்தும் விழித்திருப்பதை அவள் நன்றாக உணர்ந்தாள்.

‘இது நாகரீகம் அல்ல. மரியாதையாக விலகிவிடு’ என்று மூளை அறிவுறுத்தியது. அதை செயல்படுத்துவதற்கு முன், “தூங்குன்னு சொல்றேன்ல” என்று அவள் தலையில் கை வைத்து தன் நெஞ்சோடு அழுத்தினான் அர்ஜுன்.

இப்போது அவன் இதயத்திற்கும் அவள் செவிக்கும் இடையே நெஞ்சுக்கூடு மட்டுமே தடையாய் இருந்தது. அந்த தடையை தாண்டி அவன் இதயம் அவள் செவியிடம் ஏதோ கிசுகிசுத்தது. அவர்களுடைய ரகசிய பேச்சை ஒட்டுக் கேட்பதில் மும்மரமாக இருந்த மூளை அவளுக்கு நாகரீகத்தை நினைவூட்ட மறந்துவிட்டது. அனிச்சையாய் செயல்படும் உணர்வுகளும் அவனை அந்நியனாக அவளுக்கு எடுத்துக் காட்டவில்லை. அதற்கு மேல் அவள் என்ன செய்வாள்.. அவன் மார்போடு அடங்கிப்போனாள். அவன் இதழ்கடையோராம் தோன்றிய பெருமித புன்னகையை ரியர்வியூ கண்ணாடியில் கண்ட டேவிட்டின் உள்ளம் வெந்து தணிந்தது.

அதன் பிறகு கழிந்த மௌன பயணம் கடற்கரையோரத்தில் வந்து முடிந்தது. காரை ஓரம்கட்டி நிறுத்திவிட்டு மூவரும் கீழே இறங்கி நடந்தார்கள். எங்கிருந்தோ ஓடிவந்த ஒருவன் அவர்களை எதிர்கொண்டு வணங்கினான். அவனிடம் கார் சாவியை ஒப்படைத்துவிட்டு காத்திருந்த எந்திரப்படகில் ஏறினார்கள். படகோட்டி இஞ்சினை ஸ்டார்ட் செய்தான்.

“ரொம்ப நேரம் ட்ரைவ் பண்ணியிருக்க.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” - டேவிட்டிடம் கூறிவிட்டு மிருதுளாவின் பக்கம் திரும்பிய அர்ஜுன், “தூக்கம் வருதா?” என்றான்.

“ம்ஹும்” - தலையை குறுக்காக அசைத்தாள்.

“சரி வா” - அவளை படகின் முன்புறத்திற்கு அழைத்துச் சென்றான். எதிர்க்க முடியா இயலாமையுடன் அவன் முதுகை வெறித்துப்பார்த்த டேவிட் பெருமூச்சுடன் உள்ளே சென்று படுத்தான்.

படகின் முன்புறம் - பாதுகாப்பு கம்பிகளுடன், ஆங்கில எழுத்து ‘V’ வடிவிலான வராண்டா போலிருந்தது. குளிர்ந்த கடல்காற்று சில்லென்று முகத்தில் வந்து மோதியது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்நீர் பறந்து கிடந்தது. கீழ்வானம் கடலோடு கூடும் முனையில், கடல் நீரில் முளைக்கும் தங்க புற்கள் போல் பகலவனின் கதிர் முனைகள் முளைவிட்டன. கவிழ்ந்திருந்த கருமை மெல்ல கரைந்துக் கொண்டிருந்தது. இருளோடும் பகலோடும் சேராத அந்த இனிய பொழுதில் லயித்திருந்த மிருதுளாவிடம் நெருங்கி வந்தான் அர்ஜுன். அவள் பார்வை அவன் பக்கம் திரும்பியது. இவருடைய பார்வையும் பின்னிக்கொண்டன.

அர்ஜுன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறு பெட்டியை எடுத்தான். நகைப்பெட்டி போல் இருந்தது. எதிர்பார்ப்பில் படபடக்கத் துவங்கியது அவள் இதயம். சிரமப்பட்டு இயல்பாக இருப்பது போல் பாசாங்கு செய்தாள்.

“இது உனக்காகத்தான் வாங்கினேன். ரொம்ப நாளா என் பாக்கெட்லேயே இருக்கு. அக்செப்ட் பண்ணிக்குவியா?” - பண்போடு கேட்டபடி பெட்டியை திறந்து அவளிடம் நீட்டினான். அழகிய லாக்கெட்டுடன் கூடிய மெல்லிய சங்கிலி அது.

படபடத்துக் கொண்டிருந்த அவள் இதயம் இப்போது ட்ரம்ஸ் வாசிக்க துவங்கியது.

‘ப்ரப்போஸ் செய்கிறானா! அல்லது சாதாரண பரிசுதானா! இதை எப்படி எடுத்துக்கொள்வது? இந்த பெட்டிக்குள் பரிசோடு சேர்த்து எதை வைத்து அவளிடம் நீட்டுகிறான்? நட்பையா - காதலையா?’ - பதட்டமானாள் மிருதுளா.

“ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ் ஓகே.. ரிலாக்ஸ்” - முகமாற்றத்திலேயே அவளுடைய மனநிலையை துல்லியமாக கண்டு கொண்டான்.

“மிருதுளா, ஒரு முக்கியமான வேலைக்காக நா வெளியே கிளம்பறேன். போறதுக்கு முன்னாடி இதை உன்கிட்ட கொடுத்துடனும்னு தோணிச்சு. நீ அக்சப்ட் பண்ணிக்கிட்டா நிம்மதியா கிளம்புவேன். இல்லைனாலும் பரவால்ல.. நா உன்ன புஷ் பண்ண மாட்டேன்” - அவன் குரலிலிருந்த வாட்டம் மிருதுளாவின் இதயத்தை துளைத்தது.

வறண்டு போன உதட்டை ஈரப்படுத்திக் கொண்டாள். வெறும் கையை பிசைந்தாள். பேசுவதற்கு வார்த்தை கிடைக்காமல், யோசிக்க முடியாமல் திணறி தடுமாறி அவன் கண்களை சந்திக்க முடியாமல் பார்வையை அங்கும் இங்கும் அலையவிட்டாள்.

“என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷன்?” - இணக்கமாகக் கேட்டான்.

“இல்ல.. அது.. ம்ம்.. வந்து.. என்ன திடீர்ன்னு?”

“இதை உன்கிட்ட கொடுக்க இன்னொரு வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல.. அதான்..” - சட்டென்று நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தாள் மிருதுளா.

‘ஏன் இப்படி சொல்கிறான்!’ - அவனுடைய வார்த்தை அவளை உறுத்தியது.

“எங்க போறீங்க? என்ன வேலையா போறீங்க?” - கலவரத்துடன் கேட்டாள்.

அர்ஜுன் அவளை கனிவுடன் பார்த்தான். “எனக்காக கவலைப்படறியா?” என்றான்.

மிருதுளா பதில் சொல்லவில்லை. ஆனால் தன்னுடைய கேள்விக்கு அவன் பதில் சொல்ல வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு அவனை பார்த்துக் கொண்டே இருந்தாள். அவளுடைய பிடிவாதத்தையும், செல்ல திமிரையும் கண்டு அவன் கண்கள் சுருங்கியது. இதழ்கடையோராம் வளைந்தது.

“யு ஆர் சோ பியூட்டிஃபுல்” - தேனுண்ட வண்டின் ரீங்காரம் போல் கிசுகிசுத்து அவன் குரல்.

மிருதுளாவின் கண்கள் விரிந்தன. வாய் பிளந்து கொண்டது.

அர்ஜுன் கீழுதட்டை மடித்துக் கடித்து புன்னகையை அடக்கினான். மிருதுளா தன்னிலைக்கு மீள சில நிமிடங்கள் பிடித்தது.

“ஆர் யு ஓகே?”

“ஹாங்.. ஐம்.. க்ஹும்.. ஐம்.. ஆல்ரைட்”

"ஐ நோ.. உனக்கு என்னை பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். அந்த நம்பிக்கையில..” என்று கூறியபடி, அந்த சங்கிலியை அவள் கழுத்தில் அணிவித்தான்.

அதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியும் திகைப்பும் ஆக்கிரமிக்க உறைந்து போனாள். அவனை தடுக்கவோ அவன் வார்த்தைக்கு மறுப்பு கூறவோ அவளிடம் திராணியில்லை என்பது ஒருபுறமிருக்க அதை அவள் மனம் விரும்பவும் இல்லை என்பதும் உண்மை.

“இந்த செயின் உன் கழுத்துல இருக்கறது நானே உன் பக்கத்துல இருக்க மாதிரி. சரியா?” - அவள் தாடையை நிமிர்த்தி கண்களை பார்த்தான். கண்ணீர் பளபளத்தது.

அவள் முகத்தை கைகளில் ஏந்தி நெற்றியில் இதழ் பதித்து, “பயப்படாத.. குழப்பிக்காத.. உனக்கு விருப்பம் இல்லைன்னா எப்போ வேணுன்னாலும் நீ இதை கழட்டிடலாம்” என்றான். மிருதுளாவின் பார்வை தாழ்ந்தது. கண்ணீர் மணிகள் உதிர்ந்தன. அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அர்ஜுன்.

“எப்போ திரும்பி வருவீங்க?” - கனகனத்த குரலில் மூக்கை உறிஞ்சியபடி கேட்டாள்.

அவளை விளக்கி நிறுத்தி சில நொடிகள் நிலைத்து முகம் பார்த்தவன், “மிருதுளா, நீ ஸ்ட்ராங்கா.. தைரியமா இருக்கனும்னு நா விரும்பறேன். இருப்பியா?” என்றான் கத்தி போன்ற கூர்மையான பார்வையுடன்.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் தலையை மேலும் கீழும் ஆட்டினாள் மிருதுளா. அவனுடைய வார்த்தைக்கு அவளிடம் மறுப்பேது?

“குட்.. உன்னோட போன் எங்க?”

“பேக்ல..”

“அது எப்பவும் உன் கைல.. ஆக்டிவா இருக்கனும். சரியா?”

“ம்ம்ம்”

“நா திரும்பி வர ஒரு வாரம் ஆகும். இந்த ஒரு வாரமும் உன்ன டேவிட் பாதுகாப்பான். உனக்கு இங்க எந்த ஆபத்தும் வராது” என்று கூறியவன் சற்று தயங்கி, “ஒரு வேளை.. ஒருவேளை நா வரலைன்னா, உன்னோட போனுக்கு ஒரு கால் வரும்” என்றான். மிருதுளாவின் முகத்தில் கலவர ரேகை படர்ந்தது. அதை கவனித்தபடியே தொடர்ந்தான் அர்ஜுன்.

“உனக்கு கால் பண்ணறவர் தன்னை ப்ளூ ஸ்டார்ன்னு அறிமுகப்படுத்திக்குவார். நீ இங்கிருந்து பாதுகாப்பா தப்பிக்கிறதுக்கு அவர் ஹெல்ப் பண்ணுவார். அவரை நீ முழுசா நம்பனும். அவர் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்யனும். ப்ளூ ஸ்டார் பத்தி டேவிட்டுக்கு எதுவும் தெரியக் கூடாது” என்றான்.

“ப்ளூ ஸ்டாரா! இங்கிருந்து தப்பிக்கிறதா! எனக்கு எதுவும் புரியல. நீங்க ஏன் திரும்பி வரமாட்டீங்க? எங்க போறீங்க?” - பதறினாள்.

“மிருதுளா.. ஹனி.. தெரிஞ்சோ தெரியாமலோ நீ கோர்த்தா கோட்டைக்குள்ள வந்துட்ட. இங்க, நா இருக்கற வரைக்கும்தான் உனக்கு பாதுகாப்பு. நா இல்லைன்னு ஆயிட்டா எதுவும் நடக்கலாம்” - மிருதுளாவின் முகம் வெளிறியது. ‘நா இல்லைன்னு ஆயிட்டா’ - அவள் மூளை அந்த இடத்திலேயே மரத்துப்போய்விட்டது. ‘இல்லை என்று ஆகிவிடுவானா.. அர்ஜுன் இல்லை என்று ஆக முடியுமா!’ - தவித்தது அவள் உள்ளம்.

“நோ.. நீ பயப்படாத.. உனக்கு எதுவும் ஆக நா விடமாட்டேன். மகல்பாட்னால இருந்து உன்ன வெளியே கொண்டு வர்றது கஷ்டம். அதனாலதான் இப்பவே கூட்டிட்டு வந்துட்டேன். இங்கிருந்து நீ ஈஸியா தப்பிச்சிடலாம். பாதுகாப்பான இடத்துக்கு போயிடலாம். சரியா?” - அவளுக்கு தைரியம் கொடுப்பதாக நினைத்து தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். ஆனால் ‘அவன் இல்லாமல் போய்விடுவான்’ என்கிற எண்ணமே அவள் தைரியத்தை நொறுக்கிவிட்டது.

“நீங்க ஏன் இந்த மாதிரி ஆபத்தான கேங்ல இருக்கீங்க? ஏன் இவங்களோடல்லாம் சேர்ந்தீங்க?” - கபடமில்லாமல் கேட்டவளின் கண்களில் கண்ணீர் கசிந்தது.

“இப்படி ஒரு அழகான பொண்ணு இங்க வந்து மாட்டிக்க போறா.. அவளை போய் காப்பாத்துடான்னு பட்சி சொல்லிச்சு. அதான் ஓடி வந்து கோர்த்தால சேர்ந்துட்டேன்” என்று புன்னகைத்தபடி அவள் நுனிமூக்கை பிடித்து ஆட்டினான்.

அவனுடைய உல்லாசம் அவளை எட்டவில்லை. மனதை பிழியும் வருத்தத்துடன் பார்வையை அவனிடமிருந்து பிரித்தாள். கரை கண்ணுக்கு எட்டியது.

இன்னும் எவ்வளவு நேரம் அவனோடு இருக்க முடியும் என்று தெரியவில்லை. மீண்டும் பார்க்க முடியுமா என்பதும் தெரியவில்லை.

“அர்ஜுன்” - மெல்ல அழைத்தாள்.

“ம்ம்ம்” - அவள் பக்கம் திரும்பினான்.

“ஆனந்த்பூர்ல உங்க ஆளுங்க செஞ்ச ஒரு கொலைக்கு நா விட்னஸ். அவங்ககிட்டேருந்து தப்பிக்கும் போதுதான் உங்க கார்ல ஏறிட்டேன். நா அனாதை இல்ல. எனக்கு அப்பா அம்மா இருக்காங்க. நா ஹாஸ்பிட்டல்ல ஒர்க் பண்ணல. யூனிவர்சிட்டில ஸ்டுடன்ட்” - பல நாள் மூடி மறைத்து வைத்திருந்த உண்மையை ஒரு நொடியில் பட்டென்று போட்டு உடைத்தாள்.
 
Top Bottom