அத்தியாயம் - 7
இங்கு மருத்துவமனையில் படுத்திருந்த சிவராஜின் செல்ஃபோன் விடாது ஒலிக்க, எடுத்து காதில் வைக்கவும், தனது அக்கா விதுபாரதி.
“என்னாச்சுடா? ரெண்டு நாளாய் உனக்குக் கூப்பிடுறேன். நீ ஃபோன் எடுக்கவே இல்லை.”
“அக்கா, நான் பைக்கில் இருந்து கீழே விழுந்து விட்டேன். சின்ன ஆக்சிடன்ட். நீ சொன்னால் பயந்திடுவ. அதான் உனக்குப் பேசலை. இப்ப நான் நல்லா இருக்கேன்.”
‘விபத்தா...?’ தன் தம்பிக்கு என்றதும் பயந்தவர், சிறிது நேரம் திட்டிவிட்டு, இன்னும் ரெண்டு நாளில் நான் இந்தியா வந்து விடுவேன் என்று சொல்லி விட்டு, அழைப்பைத் துண்டித்தார்.
மீண்டும் தன் அக்காவிற்கு அழைத்து, “நீ ஏன் அவ்வளவு தூரம் வரணும்? நான் நல்லா இருக்கேன்.”
“நீ என்ன சமாதானப் படுத்தினாலும், உன்னை பார்க்காமல், என்னால் இங்கு ஒரு வேலையிலும் ஈடுபட முடியாது. நான் வந்து பார்த்துட்டு வர்றேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
……..
மிதுனா மும்பை வந்ததும் ரிஷிகேஷ், “மேடம் நம்ம டேட் கொடுத்த படத்தின் இயக்குனருக்கு உடல்நிலை சரியில்லாததால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப் பட்டிருக்கு.”
“ஹோ! அப்போ இந்தவாரம் முழுதும் ஃப்ரி தானா?”
“அது நம்ம வீரேந்தர்ஜீ எடுக்கும் புதுப்படத்தில், கேரளாவில் காட்டுக்குள் வில்லனோடு ஒரு நடனம் கேட்டாங்களே…”
“ஓகே! அப்ப புக் பண்ணிடு.”
“மேடம்…” என்று இழுக்க...
“என்ன ஆச்சு ரிஷி? ஏதும் ப்ராப்ளமா?”
“பாடலுக்கான சூட்டிங் கேரளாவிலும், கொஞ்சம் தமிழ் நாட்டிலும் நடக்குமாம்.”
“தமிழ்நாடா…!” என்று யோசித்தவள்,
“ஓகே! பரவாயில்லை. கால்சீட் கொடுத்து விடு.” என்று சொல்லி விட்டு,
“எப்போ கிளம்பனும்?”
“நாளைக்கு மாலை ஃப்ளைட்டில், மேடம்?”
…………………
இங்கே சென்னையில், கல்லூரிக்குத் தயாராகி வந்த தியாழினியின் முகம் எல்லாம் பளிச்சென்று இருந்தது.
அவளின் முகத்தில் இருந்த பூரிப்பைக் கண்ட சேனா,
“என்ன மேடம், ரொம்ப குஷியா இருக்கீங்க...?”
“நாளைக்கு என் அம்மா வர்றாங்க.”
“வாவ் சூப்பர்.”
“அம்மா பார்த்து ரெண்டு வருஷமாச்சு. நாளைக்கு தான் பார்க்கப் போறேன். அதான் ஹேப்பி.”
அன்றும் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி இறக்கி விடவும், நடந்து சென்றவள் போகும் வழியில் ஐஸ்வர்யாவைப் பார்த்ததும், அவளுடன் ஏறிக் கொண்டாள்.
இரண்டு பேரும் போகும் போது இடைவெளியில் கைநீட்டி மறித்து நின்ற ஆத்விக்கைக் கண்ட தியாழினி, கோபத்துடன் இறங்கி நின்றாள்.
அவனோ தனது செல்போனை அவள் முன் நீட்டி, நடனமாடிய புகைப்படத்தைக் காட்டி, “யாரைக் கேட்டு நீ டான்ஸ் ஆடுன?”
அவன் கேள்வியில் புரியாதவளாய், “யாரைக் கேட்கணும்?”
“என்னைக் கேட்கணும்!”
“நீங்க யாரு? நான் ஏன் உங்களைக் கேட்கணும்?” என்றதும்,
அவனோ கோபமாய், “தியா...! ஸ்கூலில் எல்லாம் நான் சொல்றது தானே நீ கேட்ப…”
“நான் எப்பவுமே, என் வீட்டில் சொல்றதை மட்டும் தான் கேட்பேன். பள்ளியில், என்னிடம் மோசமாய் வம்பிழுக்கும் பசங்களை, என் பக்கம் நெருங்க விடாமல் பார்த்துக்கிட்டதால், உங்களின் மேல எனக்கு ஒரு மரியாதை உண்டு. அவ்வளவுதான்! உங்களுக்கும் எனக்கும் இருக்கும் ரிலேஷன்.”
“தியா, நான் உன்னை லவ் பண்றேன்.”
“இந்த உலகத்தில், ஒரு பையனுக்கு ஒரு பொண்ணு கிட்ட லவ்வ தவிர்த்து பேசுறதுக்கு, வேற ஒண்ணுமே இல்லையா...? ஏற்கனவே, நீங்க என் மாமாவை அடித்து ஆக்சிடெண்ட் பண்ணியதால் கோபம் இருந்தது. இப்போ…”
“அதற்குத்தான், என் டாடி பணத்தை மொத்தமாய் செட்டில் பண்ணிட்டாரே...!”
“அப்போ, எங்க மாமா ஒரு மாசம் அனுபவிக்கும் வலியை நீங்க வாங்கிப்பீங்களா...? விபத்தை நடத்தி விட்டு, ஒரு சாரி கூட கேட்காமல், பணம் கொடுத்தேன் என்று அசால்ட்டாய் சொல்றீங்க...?
இப்போ, உங்களைப் பார்க்கும் போது, வெறுப்பே வந்து விட்டது. இனிமேல் சீனியர் என்று சொல்லிக் கொண்டு என்னிடம் பேச வேண்டாம்.” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள்.
இரண்டு பேரும் பேசிக் கொள்வதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீதர் சேனா, தன் முன்னே பட்டாசு போல் பொறிந்து செல்லும் பெண்ணான தியாழினியைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றான்.
மிகவும் கோபமாய் வந்த தியாழினியை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் அவளுடன் வந்த ஐஸ்வர்யா, ‘இவளை எப்படி சமாதானப்படுத்துவது’ என்று யோசித்துக் கொண்டே வந்தாள்.
அந்த நேரம், சேனா யாரோ ஒரு பெண்ணிடம் பேசவும், இருவரும் அப்படியே நின்று விட்டனர்.
சேனா தன் வகுப்பின் முன் நின்று கொண்டு இருக்கும் போது, இரண்டாம் வருடம் படிக்கும் மாணவி தனக்கு பிறந்தநாளென்று வந்து, அவன் முன் விலை உயர்ந்த சாக்லேட்டை நீட்டினாள்.
“எனக்கு எதுக்கு இவ்ளோ பெருசு? சின்னது கொடும்மா” என்றதும்,
அவளும் “சார், நீங்க எனக்கு ஸ்பெஷல். கூடப் பிறக்காத அண்ணன் மாதிரி. இது உங்களுக்காக” என்று சொல்லிக் கொடுக்க, ஆடவன் வாழ்த்தவும், நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினாள்.
அந்த சாக்லேட்டைப் பார்த்ததும், ஐஸ்வர்யாவின் நாக்கில் எச்சில் ஊறியது.
“தியாகுட்டி, என் செல்லமே...! நீ போய் சார்கிட்ட அந்த சாக்லேட்டைக் கேளு, உடனே தந்திடுவார்.”
அவள் முறைக்கவும், ஐஸ்வர்யா, அப்போதுதான் கவனித்தாள். சேனாவும் தியாவும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்திருப்பதை. வேகமாய், “சேனா சார்” என்றதும் திரும்பியவன்,
இருவரையும் பார்த்து “என்ன?”
குட் மார்னிங்.
“ஹ்ம். குட்மார்னிங் ஐஸ்வர்யா!”
“சார், தியா உங்ககிட்ட ஏதோ கேட்கணுமாம்.” என்றதும்,
“என்னது நானா?” தலையை மறுத்து ஆட்டியவள் அவளை ஒரு இடி இடித்து விட்டு, “சார், நான் எதுவும் கேட்கலை.”
அவனோ சுவாரஸ்யமாய், “ஏன் தியாவுக்கு வாய் இல்லையா...?”
“அது இருக்கு ஒன்ற முழத்திற்கு…” என்று ஐஸ்வர்யா கையை நீட்டிச் சொல்லவும், சேனா சத்தமாய்ச் சிரித்தான்.
அவன் சிரிக்கும் போது, பெண்ணவள் அப்படியே நின்றாள். அவன் சிரிப்பு அவளை அவன் பக்கம் ஈர்க்க, அவள் விழிகள் நகர மறுத்து, அவனைப் பருக ஆரம்பித்தது.
அலை அலையாய் கேசம், அடிக்கும் காற்றில் அலைபாய, ஆடவன் இடக்கையால் அதை சரிசெய்யும் போது, தன் மனமோ அவன் புறம் சாயத் தொடங்கியதை உணர்ந்தாள். அப்போது தான், அவனை உற்றுப் பார்த்தாள்.
இடது கையில் கருப்பு வார் அணிந்த கைக்கடிகாரம். அகண்ட பெரிய கண்கள். அடர்ந்த புருவங்கள், அழகான நெற்றி, அதில் திருநீறு, கூர் மூக்கு, அடர்ந்த மீசை. அழுத்தமான உதடு. அப்பப்பா..! ஆளை மயக்கும் சிரிப்பு. வெள்ளை சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட். கொஞ்சம் கொஞ்சமாய் அவனை தலை முதல் கால்வரைப் பார்த்தாள்.
அவளின் பார்வை ஆடவனை அசைக்க, சற்று நேரம் நின்றாலும் மனம் தடுமாறி விடும் என்று பயந்தவன், அவள் முன் விரல் நீட்டி சொடக்குப் போடும் போதுதான், தன் நிலைக்கு வந்தாள்.
அவனோ புருவம் உயர்த்தி, “தியா மேடம், என்னாச்சு?” என்றதும்,
பெண்ணவளின் முகமெல்லாம் குப்பென வியர்த்துவிட்டது. மனதில் மறைத்தாலும், தன் கண் பார்க்காததைப் பார்ப்பது போல் பார்த்து காட்டிகொடுத்து விட்டதே... தன்னைத்தானே திட்டிக்கொண்டு, “நோ சார்!”
ஐஸ்வர்யா “ஹேய்! இதுக்கு முன்னாடி நீ சாரைப் பார்த்ததே இல்லையா...? இப்படிப் பார்க்கிற?”
“ஐயோ! இவ வேற நேரங்கெட்ட நேரத்தில் மானத்தை வாங்குகிறாளே!” என்று அவளின் காலில் மிதிக்க,
“ஆ ஆ, ஏண்டி மிதிச்ச?”
“ஒண்னுமில்லை. வாடி போலாம்!”
இருவரும் திரும்பவும்,
சேனா, “எதுக்கு என்னை கூப்பிட்டீங்க...?”
ஐஸ்வர்யா, “சாரி சார். இவளால் நான் வந்த விஷயத்தையே மறந்து விட்டேனே! நீங்க ரெண்டு பேரும் ஒரே நிறத்தில் ஆடை உடுத்தி இருக்கிறீர்கள். சேம் சேம் ஸ்வீட். அதுக்கு நீங்க ஸ்வீட் கொடுக்கனும்.”
“அதை சம்பந்தப்பட்டவள் தானே கேட்கணும். நீ கேட்கிற?”
‘ஐயோ ஐஸ், ஒத்த சாக்லேட்டுக்கு எவ்வளவு பொய் எல்லாம் சொல்ல வேண்டியது இருக்கு.’ என்று நினைத்தவள், “சார், அவள் தான் என்னை கேட்கச் சொன்னாள்?”
பெண்ணவளோ “நான் இல்லை சார்.” என்று விழியால் மறுக்க, சேனா தன் கையிலிருக்கும் சாக்லெட்டை எடுத்து தியாவின் முன்னால் நீட்டினான்.
தியா தயங்க, “வாங்குடி!” என்று ஐஸ்வர்யா இரண்டு இடி இடிக்கவும், பெண்ணவள் தயங்கி தயங்கி, கையை நீட்டி வாங்கிவிட்டு, “தேங்க்ஸ் சார்!” என்று சொல்லி இருவரும் நகர்ந்தனர்.
இங்கு நடக்கும் கூத்தை பின்னாலிருந்து பார்த்த மகிமாவிற்கு, ஏதோ போலாகி விட்டது.
திரும்பிய சேனா, அங்கே கனல் பார்வை பார்க்கும் மகிமாவைப் பார்த்து, எதுவும் நடக்காதது போல உள்ளே செல்ல,
அவளோ அவனை இடைமறித்து, “இங்க என்ன நடக்குது? ஒரு ஸ்டாப் ஸ்டுடென்ட் கிட்ட இப்படித்தான் பிகேவ் பண்ணுவாங்களா...?”
“அதையே தான் மேடம், நானும் உங்களிடம் கேட்கிறேன்? ஒரு ஸ்டாப் எப்படி பிஹேவ் பண்ணனுமென்று உங்களுக்குத் தெரியாதா...?” என்று சொல்லி விட்டு அவன் சென்று விட்டான்!
தியாழினி மற்றும் ஐஸ்வர்யாவின் மேல் கொலை வெறி வந்தது. ‘தனது முதல் வகுப்பு இன்று அவர்களுக்குத் தானே. வச்சுக்கிறேன்.’ என்று தனது புக்ஸை எடுத்துக்கொண்டு வேகவேகமாய் வந்தாள்.
உள்ளே வந்ததும் அனைவரும், “குட் மார்னிங் மேடம்.” என்றதும், குட்மார்னிங் என்று சொல்லும்போது அவளின் கோபமான முகம் அனைவரையும் பய முறுத்தியது.
மதுராவோ ‘என்னாச்சு அக்காவுக்கு?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
ஐஸ்வர்யா தியாவின் காதில், “மேடம், ரொம்ப சூடா இருக்காங்கடி. சிக்குறவங்களை அப்பளம் மாதிரி பொரித்தெடுக்கப் போறாங்க!” என்றாள்!
வழக்கம் போல வருகைப் பதிவை எடுத்துவிட்டு வகுப்பு எடுக்கும் போது, அடிக்கொரு முறை ஐஸ்வர்யா மற்றும் தியாழினியை கவனித்துக் கொண்டே வந்தாள்.
மகிமா போர்டில் எதையோ எழுதிக் கொண்டு இருக்கும் போது, ஐஸ்வரியா,
“நம்ம ரெண்டு பேரும் இன்னைக்கு ரொம்ப அழகா வந்திருக்குமோ...?”
“ஏண்டி அப்படி கேட்கிற...?”
“இல்லை, இந்தம்மா வந்தப்போ இருந்து நம்ம ரெண்டு பேரையுமே மாற்றி மாற்றிப் பார்க்குது! அதான்...!”
அதைக் கவனித்த மகிமா, தன் கையிலிருக்கும் சாக்பீஸில் துண்டை ஐஸ்வர்யாவின் முகத்தில் விட்டு எரிந்து, “ஸ்டுபிட், உனக்கு கிளாஸ் கவனிக்க விருப்பம் இல்லைனா, நீ எல்லாம் எதுக்கு காலேஜுக்கு வர்ற? ரெண்டு பேரும் கோ அவுட்?”
ஏனோ அந்தச் செயலில், ஐஸ்வர்யாவிற்கு மனமெல்லாம் ஒரு மாதிரி ஆனது. அத்தனை பேர் முன்னாடி, முகத்தில் சாக்பீஸ் போட்டுத் திட்டவும், கண்கலங்கியவள் எழுந்து நிற்கும் போது, அருகே வந்த மகிமா, அப்போதுதான் கவனித்தாள் ஐஸ்வர்யாவின் மேஜை மீது இருந்த சாக்லேட்.
அது தனக்கானது. தன்னிடமிருந்து பறித்துக் கொண்டது போல், வேகமாய் அதை எடுக்கப் போனாள்.
தியா பட்டென்று அதை எடுத்து கையில் வைக்க, மகிமா அவளிடம், “இந்த சாக்லேட், உங்களுக்கு அவ்ளோ முக்கியமானதோ...? கொடுத்தவங்க அதை விட முக்கியமானவங்களோ?” என்று நக்கலாய் கேட்டு முறைத்துப் பார்த்தாள். பின் வெடுக்கென்று தியாழினியின் கையிலிருந்து அதைப் பிடுங்கினாள்.
ஏனோ அதுவரை திட்டியது கூட மனதில் இல்லை. அதை பிடுங்கும் போது தியாவிற்கு மனதில் ஒரு வலி உண்டானது. முதல் முறையாக அவன் கொடுத்த இனிப்பு அது.
அவளின் முகம் சுருங்குவதை ரசித்த மகிமா, “ரெண்டு பேரும் வெளியே போங்க!” என்று சொல்லவும், அவர்கள் முன்னே நடக்க பின்னால் வந்தவள், தன் கையில் இருக்கும் சாக்லெட்டை எடுத்துக் கொண்டு போய், வெளியே இருந்த குப்பைத் தொட்டியில் வீசினாள்.
மீண்டும் வந்த மகிமா இருவரையும் பார்த்து, “இங்கே பாருங்க! காலேஜுக்குப் வந்தோமா...! படிச்சோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு, புரபசர் கிட்ட போயி சேம் பின்ச் அடிச்சு விளையாடக் கூடாது!” என்று திட்டிவிட்டு உள்ளே சென்றபின் தான், இருவருக்கும் இந்த மேடம் எதற்காக கோபப்படுகிறார்கள் என்று புரிந்தது.
தியாழினி கோபமாய் ஐஸ்வர்யாவை முறைத்து, “தேவையாடி நமக்கு? எதுக்கு இந்த சாக்லேட் வாங்கணும்...?”
அவளோ “அந்த மேடத்துக்கு பொறாமைடி! சார் கிட்ட நம்ம பேசுறது...! நீ மட்டும் சாரின் பக்கத்து வீட்டுப் பொண்ணு. அப்பப்ப பேசிப்பீங்க. ஒண்ணாய்த் தான் கார்ல வருவீங்க என்ற விஷயம் மட்டும் இந்த அம்மாவுக்கு தெரிஞ்சுச்சு, உன்னை பஸ்பமாக்கிடும்.”
தியாழினி பாவமாய், “ஆத்தி, நமக்கு எதுக்கு வம்பு? இனிமேல் சேனா சாரிடம் பேச வேண்டாம்டி. மார்க் குறைச்சுட்டா...?”
“ஏய் லூசு! இன்டர்னல்ல தான், இவங்க குறைக்க முடியும். செமெஸ்டர்ல இவங்க ஒண்ணும் பண்ண முடியாது.”
“ப்ராக்டிக்கலில் கை வச்சுட்டா என்ன பண்றது...?” என்று கேட்கும் போது, தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்கவும், திரும்பிப் பார்க்க அங்கே சேனா...!
அது மகிமாவின் வகுப்பு, அதில் நாம் தலையிட முடியாது என்பதால் அவன் சென்று விட்டான். அந்த வகுப்பு முடிந்து மகிமா வெளியே கிளம்பியதும், ஐஸ்வர்யா சோகமாய் உள்ளே சென்றாள். தியாழினி அக்கம் பக்கம் நோட்டம் விட்டுவிட்டு, யாரும் இல்லை என்றபின் வேகமாய் போய் குப்பைத் தொட்டிக்குள் கை விட்டு எட்டி அந்த சாக்லேட்டை எடுக்கும் போது,
“குப்பைத் தொட்டியில் என்ன பண்ற?” என்ற சேனாவின் குரல் கேட்டு நிமிர்ந்தவள், சட்டென்று தன் கையிலிருக்கும் சாக்லெட்டை மறைத்து, தன் பின்னால் வைத்துக் கொண்டாள்.
“என்னத்தை மறைக்கிற, தியா.” என்ற போது கூட, அவள் வாய் திறவாமல் இருக்க, அவன் எட்டிப் பார்க்க, அங்கு அவள் கைகளில் தான் கொடுத்த சாக்லேட்.
ஒரு நிமிடம், அவன் மனதிற்குள் சாரல் அடித்தது. பின், “இதற்காகத்தான் நீங்க ரெண்டு பேரும் வெளியே நின்று இருந்தீங்களா?”
அவளோ மௌனம் காக்கவும், தன் கூட நின்றவளைக் காணோமே என்று வெளியே வந்த ஐஸ்வர்யா, அங்கு சேனா சார் நிற்கவும் வேகமாய் வந்தாள்.
வந்தவள் அவளிடம், “இனிமேல் நம்ம சேனா சாரிடம் பேசக்கூடாது. பேசினால் அந்த மேடம் மார்க் குறைச்சிடுவாங்கன்னு சொன்ன. இப்ப நீ மட்டும் பேசற. இது போங்கு!” என்றாள்.
தியா, “உன்னை வச்சுக்கிட்டு ஒரு ஆணியும் புடுங்க முடியாதுடி. லூசாடி நீ...! கொஞ்சம் அமைதியா இரு.”
அவன் தியாவை முறைத்து, “இனி நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட பேச மாட்டீங்க. ஆல்ரைட். ஓகே. அவங்க உங்க கிட்ட அப்படி நடந்ததற்கு, நான் மன்னிப்பு கேட்கிறேன்.”
“சார், நீங்க எதுக்கு?” என்ற தியாவைப் பார்த்து,
“என்னால் தானே, நீங்க ரெண்டு பேரும் ஒன்னவர் வெளியே நின்னீங்க. அதுக்கு தான்.” என்று சொல்லி விட்டு அவன் சென்றுவிட்டான்.
அவன் கோபமாய் போவதாய் பெண்ணவள் உணர்ந்தாள். அவன் கோபம் தன்னைத் தாக்க, ஐஸ்வர்யா வேகமாய் அவளின் கையில் இருக்கும் சாக்லேட்டை பிடுங்கி, கவரைப் பிய்த்து சாக்லேட்டைப் பாதியைப் பிய்த்து சாப்பிட்டு விட்டு, மீதியை அவள் வாயில் வைத்துவிட, அவன் கொடுத்ததால் துப்பவும் மனமில்லாமல் விழுங்கவும் மனமில்லாமல் சுவைத்தாள். அவள் கவரை குப்பையில் போடப் போக, அவள் கையிலிருந்து பிடுங்கி, அதைப் பத்திரப்படுத்தி தனது புத்தகத்தில் வைத்தாள்.
இருவரும் உள்ளே சென்று அவர்கள் இருப்பிடத்தில் அமரும் போதுதான், தியாவின் இதழின் ஓரத்திலிருந்த சாக்லேட்டைப் பார்த்தான்.
‘ஏன் இப்படி பார்க்கிறார்?’ என்று நினைத்தவள், பாடத்தில் கவனம் செலுத்தினாள்.
வகுப்பு முடிந்து போகும் போது, “சாக்லேட் வாயின் ஓரமாக ஒட்டி இருக்கு. துடைச்சுக்கோ!” என்று சொல்லி விட்டுப் போனான்.
அதில், ஒரு கோபம் மறைந்து இருந்ததை பெண்ணவள் உணர்ந்தாள்.
மாலையில் வழக்கம் போல ஐஸ்வர்யாவை வீட்டில் விடச் சொல்லி, வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
………………..
விது பாரதி, அமெரிக்காவிலிருந்து மும்பை வந்து விட்டாள். மும்பை விமான நிலையம் மிகவும் பரபரப்பாய் இருந்தது. தன் தாய்மொழி தவிர, பல மொழிகள் அங்கே காதில் விழுந்தது. ஏனோ, அந்தத் தாய் மொழியை காதில் கேட்க, மனம் எல்லாம் பரபரத்தது. தான் வந்த நேரத்திற்கு, மாலை 5 மணியளவில், மும்பையில் இருந்து கோயம்புத்தூருக்குத்தான் பிளைட் இருந்தது என்பதால், டிக்கெட் வாங்கியவர் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்குப் போய்க் கொள்ளலாமென்று நினைத்தவர், விமானதிற்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
…………
அந்த நேரம், மிதுனா மும்பை விமான நிலையத்திற்குள் வந்து ரிஷியிடம், “அனைத்தும் செக் பண்ணியாச்சா?” என்று கேட்டதும்,
“ஆச்சு மேடம்.”
“ஓகே.”
“மேடம், ஃப்ளைட் வர ஒரு டென் மினிட்ஸ் ஆகும்.” என்றதும், தலையாட்டி விட்டு தனது செல்ஃபோனை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள்.
சரியாய் 10 நிமிடம் கழித்து, தங்களுக்கான ஃப்ளைட் வரவும் உள்ளே சென்று, மிதுனா ரிஷியுடன் தனக்கான இருக்கையில் அமரும் போது, “எக்ஸ்க்யூஸ் மீ” என்று சத்தம் கேட்டு நிமிர்ந்தபோது,
விமான பணிப்பெண் “மேடம், ஒரு லேடிக்கு அவங்க பக்கத்தில் ஜென்ஸ் இருப்பதால், வேற சீட் மாறனுமென்று சொல்றாங்க. உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால், இங்கே மாற்றிக் கொள்ளலாமா...?”
அவள் ரிஷியைப் பார்க்க, அவன் “தாரளமாய்” என்றான்.
மிதுனா தலையாட்டி விட்டு, ஜன்னல் பக்கம் பார்வையைச் செலுத்தினாள்.
பணிப்பெண் “மேடம் நீங்க அந்த இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம்.” என்றதும், நன்றியை தெரிவித்து விட்டு, அவள் கைகாட்டிய இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
விது பாரதி தனது இருக்கையில் அமர்ந்து பெல்ட் எல்லாம் மாட்டிவிட்டு, பின் ஜன்னல் பக்கம் திரும்பி இருந்தவளிடம் நன்றி சொல்வதற்காக, “எக்ஸ்கியூஸ் மீ, ரொம்ப தேங்க்ஸ்.” என்ற போது திரும்பினாள்.
இருவரின் கண்களும் ஒரு சேரக் கலங்கியது. 17 வருடம் கழித்துப் பார்க்கும் உடன்பிறப்புகள். இருவருக்கும் பேச்சு வரவில்லை. அழுகை தான் வந்தது.
“மிதுனா” என்ற வித்யா பாரதி,
தனது தங்கையைப் பார்த்து “நல்லா இருக்கியா...?”
கண் கலங்கியவள், "நம்ம 17 வருஷத்துக்கு முன்னாடி, என்ன சத்தியம் பண்ணினோம்?"
வழியும் கண்ணீரை அடக்கிக் கொண்டு, "இனிமேல் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று!"
“அப்படி சொல்லித்தானே விட்டுட்டு போன அக்கா. அப்புறம் ஏன் இப்ப பேசுற? அதேபோல் இரு.” என்று சொல்லியவள், தலையை வேறு புறம் திருப்பிக் கொண்டாள்.
தான் சொன்ன வார்த்தைதான். அன்று தனக்கு வலிக்காத வார்த்தை. இன்று அவள் வாயில், அதேமாதிரி திருப்பிக் கேட்கும் போது, மனம் அப்படி வலித்தது.
“நான் அப்படி சொன்னா, நீ என்னை விட்டுட்டு போயிடுவியாடி...?”
“உங்களை மாதிரி தனியாய் இருந்தால் எதையும் யோசிக்க வேண்டாம், அக்கா.
குடும்பம்னு வரும் போது எல்லாம் யோசிக்கணும் இல்லையா...? என் பொண்ணுக்கு 17 வயசு. அவள் படிச்சு முடிச்சதும், அவளுக்கு நாளைக்கு கல்யாணம் எல்லாம் பண்ணனும்...?”
“பொண்ணா...?”
“நீ தான் அந்தக் கொடுமைக்கார புருஷன் வேணாமுன்னு சொல்லிட்டயே...!”
முகம் சுருங்கியவர், “புருஷன் வேண்டாமுன்னு சொன்னேன். வயிற்றில் வளரும் குழந்தையை வேண்டாமுன்னு சொல்ல முடியல.”
“போதும் அக்கா. வேற எதுவும் பேசவேண்டாம்.”
“சரி, இதுக்கு மட்டும் பதில் சொல்லு. அப்புறம் பேச மாட்டேன். அம்மா, விசித்ரா, வினோ, சிவா எல்லாம் எப்படி இருக்காங்க...? வினோ குட்டிக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க. அப்புறம் நீ ஒன்னு தெரிஞ்சுக்கோ. அன்று நீ போனதும், அம்மா ரொம்ப அழுதாங்க. நீ செத்துப் போயிட்டதா சொல்லச் சொன்ன. நானும் சொல்லிட்டேன். ஆனாலும் அம்மாவிற்கு நீ உயிரோடு இருக்கிறது தெரியும். உன்னால நம் வீட்டில் யாரும் டீவியே பார்ப்பதில்லை.”
“அக்கா, நம்ம வாழ்க்கை தான் சீரழிஞ்சு போச்சு. என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கணும். நீ எடுத்த தொழிலால், என் வாழ்க்கை நாசமாய் போச்சு. இன்னொருத்தி சொல்லாமல் கூட, எங்கேயோ ஓடி போய் விட்டாள். அதுவும் உன்னால் தான். தங்கச்சி வாழ்க்கையும் கிட்டத்தட்ட மோசம்தான். கடைசியில் எங்களுக்காக என் தம்பி கல்யாணமே பண்ணவில்லை. எங்களின் ஒட்டு மொத்த சந்தோஷமும் என் பொண்ணு நல்லா வாழ்வதில் தான் இருக்கு. தயவு செய்து சொந்தம் கொண்டாடிக் கொண்டு எங்களைத் தேடி சென்னைக்கு வராதே! ப்ளீஸ்...! அது நீ எங்களுக்கு செய்யும் பெரும் உதவி.” என்று சொல்லி விட்டு, வேறு பக்கம் சாய்ந்து கொண்டாள்.
‘வித்யா அக்கா! வித்யா அக்கா! என்று ஆயிரம் முறை சொல்பவள், உறங்கும் போதும் கூட, தன் பக்கத்தில் படுத்துத் தான் உறங்குவேன் என்று அடம் பிடிப்பவள். எனக்கு ஒரு சின்ன அடிபட்டாலும், கண் கலங்கி நிற்பவள். இன்று, நீ வேண்டாம் இன்று ஒரு நொடிப் பொழுதில் சொல்லி விட்டாளே...!’
தன்னையும் மீறி வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
வாழ்க்கையில் தன் தலையெழுத்தை எழுதும்போது மட்டும், கடவுள் மிகவும் கோபமாய் இருந்திருப்பார் போலும்...!
சுடும்...!
கீழே இருக்கும் லிங்கில் உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள் .
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com
.