அத்தியாயம் – 9
சேனாவின் வார்த்தைகளால், இல்லாத தலைவலி இப்போது வந்து ஒட்டிக் கொண்டதை உணர்ந்த போது, தலையில் கை வைத்து அமர்ந்திருந்தாள்.
சுமித்திரை தன் பேத்திக்கு சூடான பால் கொண்டு வந்து கொடுத்து, மாத்திரை ஒன்றைக் கொடுத்து “போட்டுக் கோடி...!” என,
அவள் போட்டுவிட்டு பாட்டியின் தோளில் சாய்ந்து அமர்ந்தாள்.
அந்த நேரம் வந்த விதுபாரதி, “எல்லாரும் கோவிலுக்குப் போலாமா?” என்று கேட்டுக் கொண்டே பார்க்க,
தியா, தன் அம்மாவின் தோளில் சாய்ந்து படுத்துக் இருப்பதைக் கண்டதும், மகளின் அருகே வந்து நெற்றியில் கைவைத்து “என்ன ஆச்சு குட்டி? உடம்பு ஏதும் சரியில்லையா...?”
“லைட்டா தலைவலி மா...! இப்போது சரியாயிடுச்சு! கோவிலுக்குப் போகலாம்.” என்றதும்,
விதுபாரதி தனது தம்பியை அழைத்து, "கால்டாக்சி புக் பண்ணிட்டியாடா?"
சுமித்திரையோ, "எதுக்கு இந்த நேரத்தில் கால் டாக்சி? பக்கத்தில் இருக்கும் சேனா தம்பியை கூப்பிடட்டுமா...?"
தியாழினி கோபமாய், “பாட்டி அவங்க பக்கத்து வீட்டுக்காரங்க மட்டும் தான்! எதுக்கு எடுத்தாலும் அவங்ககிட்ட போய் நிற்க வேண்டாம். எதற்கும் அவங்களையே கூப்பிட்டா, அவங்களுக்கு தொல்லையாத் தெரிவோம். இத்தனை நாள் நம்ம யாரையும் நம்பி இல்லை, பாட்டி. அவங்களை தூரமாய் வச்சுக்கலாம். டாக்சியில் போலாம்.” என்று நிற்காமல் பேசும் பேத்தியைப் பார்த்தவர்,
கொஞ்ச நேரத்திற்கு முன் அவங்க வீட்டுக்குப் போயிட்டு வந்தப்ப இருந்து, இவள் முகமே சரியில்லையே...! சரி அப்புறம் பேசிக்கலாம் என்று முடிவு பண்ணினர்.
விதுபாரதி தன் மகளின் அருகே வந்து அவளின் தலையில் செல்ல முத்தம் வைத்து, “இப்பதான் நீ என் பொண்ணு. நம்ம எப்பவும் யாரையும் சார்ந்திருக்கக் கூடாது...!”
அந்த நேரம் அங்கே வந்த தேவகி, “உள்ளே வரலாமா...?”
சுமித்திரை மனதிற்குள் ‘தியா பேசினது ஏதும் கேட்டு இருப்பாரோ’ என்று கலக்கத்துடன், “உள்ளே வாம்மா!” என்றார்.
“நீங்க எங்கயோ கிளம்பிட்டீங்க...! இந்த நேரத்தில் நான் வந்து தொந்தரவு ஏதும் செய்து விட்டேனா...?”
சுமித்திரை வேகமாய் “அதெல்லாம் ஒன்னும் இல்லை. வாங்க வந்து உட்காருங்க.” என்றார்.
தேவகி சுமித்திரையின் அருகே வந்து, “அம்மா, தியா பேசினதைக் கேட்டேன். நீங்க எந்த நேரம் வேண்டு மானாலும் கூப்பிடலாம். எங்களுக்கு தொல்லையாய் இருக்காது. நானும் என் மகனும் உங்களின் உறவை வேண்டுமென்று தான் நினைக்கிறோம். என்னடா பத்து நாளில் பக்கத்து வீட்டுக் காரங்களோடு எப்படின்னு நினைக்கிறீங்களா...?
நானும் என் கணவரும், காதலிச்சு வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணினோம். நல்லா போயிட்டு இருந்த வாழ்க்கையில், எங்க பையன் பிறந்தான். அவ்வளவு சந்தோஷம். என் குடும்பத்தில் என் அப்பாவும் அண்ணனும் ஊரெல்லாம் எங்களைத் தேடிக்கொண்டே இருந்தவர்கள், ஒருநாள் எங்களைத் தேடி கண்டு பிடிச்சுட்டார். என் கணவர் அவரின் நண்பரின் வீட்டில் என்னையும், என் மகனையும் விட்டுவிட்டு, அவர்களிடம் சமாதானம் பேசி, சரி பண்ணிய பின் அழைத்துப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனவர்தான், அதற்கப்புறம் பிணமாகத்தான் வந்தார்.
என் கணவர் இறந்த பிறகு, எனக்கு வாழ்க்கையே வாழப் பிடிக்கல. ஆனால், சேனாவிற்காகத் தான் வாழவே ஆரம்பித்தேன். அந்த நிமிஷத்துல இருந்து, என் ரத்த உறவுகள் அக்கம் பக்கம் அனைத்தையும் விட்டுவிட்டு தனியாய்த்தான் இருக்கேன்.
நானும் என் மகனும் மட்டும்தான். உறவுன்னு எங்களுக்குன்னு யாருமே இல்லை. என் கணவரின் பென்ஷன் பணம் வருது. அதை வைத்து மகனைப் படிக்க வச்சிட்டேன். என் கணவரின் நண்பரின் உதவியால், அவரோட காலேஜிலேயே சீட் கிடைக்க, அங்கேயே படித்து, அங்கேயே வேலையும் வாங்கியாச்சு.
இத்தனைநாள் தனிமையிலே ஓட்டிட்டேன். சுமித்திரை அம்மாவைப் பார்க்கும் போது, எனக்கு ஒரு அம்மா கிடைத்த மகிழ்ச்சி. அதனாலதான் உங்க கூட உறவாய் இருக்க நான் விரும்புறேன்.
உங்களுக்கு எந்த நேரத்தில், என்ன வேணும்னாலும் என்னையும் என் மகனையும் இங்கு தாராளமாய் கூப்பிடலாம். ஏனோ உங்களை சந்தித்த பின்னாடி தான், எங்களுக்கும் ஒரு உறவு கிடைத்த மகிழ்ச்சி.”
பின் தியாழினியைப் பார்த்து, “இளம் வயதிலே எனக்கு புருஷன் இல்லாததால், அடுத்தவரின் பார்வை என்மேல் தப்பாய் விழுந்தது. அதையெல்லாம் தவிர்ப்பதற்காக, நான் யார் கூடவும் பேச்சு வார்த்தையே வச்சுக்க மாட்டேன். ஆனால், உங்க வீட்டில் தான் என்னை போல சுமித்திரை அம்மாவும் இருப்பதால், ஒரு நம்பிக்கையும் பாதுகாப்பும் கிடைத்தது. எனக்கும் இப்போ வயசு ஆயிடுச்சு இல்லையா...?
அவனும் காலையில் காலேஜ் போனால், சாயந்திரம் தான் வருவான். இடைப்பட்ட நேரம் தனிமையில் கிடந்து தவிக்கிறேன். பேச்சுத் துணைக்கு கூட ஆள் இல்லாமல் மனநோய் வந்திடுமோன்னு பயமா இருக்கு. அதனால தான் நான் இங்கே வந்தேன். உங்களுக்குப் பிடிக்கலன்னா இனி மேல் வரமாட்டேன்.”
“சாரி ஆன்ட்டி. நான் நீங்க வரவேண்டாமுன்னு சொல்லல. நீங்க எங்க வீட்டுக்கு வரலாம்.” என்றாள்.
சுமித்திரை வேகமாய் அவரின் கையைப் பிடித்து, “தேவகி எனக்கு ஏற்கனவே 4 பொண்ணுங்க. ஒரு பையன். அதுல புதுசா ஆறாவது நீயுமுன்னு நினைச்சுக்கிறேன்.”
தியாவோ “பாட்டி, வயசானா பெற்ற பிள்ளைங்க எத்தனைன்னு கூடவா மறந்திடும். உங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. ஒரு பையன்.” என்று நினைவுப் படுத்தவும், சுமித்திரை, விது, வினோ மூவரும் ஓருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அப்போதுதான் ‘தன்னையும் மீறி உளறிவிட்டோமே...! இனி கவனமாய் இருக்கனும்’ என்று யோசித்து பேத்தியைப் பார்க்க, அவள் சாதாரணமாய் இருக்கவும் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டார்.
தேவகி சுமித்ராவின் முகத்தையே பார்த்தார். அவர் முகம் போகும் போக்கை வைத்து, அவர் ஏதோ ஒரு ரகசியத்தை தியாவிடம் மறைத்திருக்கிறார் போலும்.
அவரைப் போலவே அவரின் மகள்களின் முகத்திலும் ஒரு பதட்டம் இருந்ததை உணர்ந்தவர், பேச்சை மாற்ற எண்ணி, “ஓகே, இனிமே நம்ம எப்போதும் உறவாய் இருக்கலாமா?” என்றார்.
விதுபாரதிக்கும் ஒரு விதவையாய் ஒரு பெண் படும் துன்பமும் தனிமையின் உணர்வும் புரிந்ததால், தேவகியின் கை பிடித்து,
“நீங்கள் எங்களுக்கு உறவாய் கிடைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி தான். எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி இருக்கோம். கால் டாக்ஸி புக் பண்ணி இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும். நீங்களும் வாங்க போயிட்டு வரலாம்.”
சுமித்திரை, “தேவகி நீயும் வரணும். எல்லோரும் சேர்ந்து போய் வரலாம்.” என்றார்.
“இந்த நேரத்தில் வயசுப் பெண்ணை வச்சுட்டு, எதுக்கு கால் டாக்ஸி? நான் சேனாவை வரச் சொல்றேன்.”
தேவகியும் அவனும் கிளம்பி வந்தனர்.
ஓட்டுனர் இருக்கையில் சேனா. அவன் பக்கத்தில் இருந்த இருக்கையில் சுமித்திரையும், தேவகியும் அமர்ந்து கொள்ள, பின்னிருக்கையில் அம்மாவும் சித்தியும் அமர்ந்து கொள்ள, கடைசியாக தியாழினி அமர்ந்தாள்.
அனைவரும் பத்து வருடப் பழக்கம் போல பேசிக் கொள்ள, பெண்ணவள் அதில் கலந்து கொள்ளாமல் சாலைகளில் கவனம் பதித்தாள். ஆனாலும், மனம் எதிலும் நிலை கொள்ளாமல் அவன் பேசிய வார்த்தைகளை அசை போட்டு வதம் செய்தது. பின் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
கண்ணாடி வழியே, அவளது செய்கைகளை கவனித்துக் கொண்டே தான் வந்தான். அவள் தன்னை ஒரு முறை கூட பார்க்கவில்லை என்று மனம் வருந்தியது. ‘அவளை அருகே வரவேண்டாம் என்று சொல்லும் மனம்தான், அவளையே தேடுது.’ என்று தன்னைத் தானே நினைத்து, நொந்து கொண்டான்.
தேவகி எதையோ சொல்வதற்காக, “தியா” என்ற போது, அவள் அமைதியாய் கண்மூடிப் படுத்திருக்க, சுமித்திரை தான் “அவளுக்கு மாலையிலிருந்து ஒரே தலைவலி. மாத்திரை போட்டிருக்கிறாள். அதனால் தூங்கி விட்டாள் போலும்.”
பெசண்ட் நகர் வந்ததும், “குட்டிமா இறங்கு.” என்று பெற்றவள் எழுப்பும் போது கண் விழித்தாள். கண்ணெல்லாம் சிவந்திருந்தது. காரை விட்டு இறங்கும் போது தான், அவனைப் பார்த்தாள்.
கோவிலுக்கு செல்வதற்காக வேஷ்டி சட்டையில். இவ்வளவு நேரம் மான ரோசம் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மனம், சட்டென்று அவன் காலடியில் விழத் தயாராக நின்றது. அதையும் மீறி ரோசம் அவளைக் கட்டுப்படுத்த, அவன் பக்கமே செல்லும் மனதையும் கண்களையும் அடக்கிக் கொண்டு பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
தேவகி அலைகடலின் சத்தம் கேட்டு, அப்படியே சிலாகித்து நின்றார். சுமித்திரை அவரிடம் “இந்த அலையின் சத்தம் உன் காதுக்கு எப்படி கேட்கிறது?”
"ஓம்" என்று கேட்பது போல இருக்கு.
“ஆமாம். நானும் சிறுவயதில் இருந்து இந்த கோவிலுக்கு வந்து இருக்கேன். ஓயாது ஒலிக்கும் இந்தச் சத்தம் ஓம் என்ற மந்திரத்தை உச்சரிப்பது போலவே எனக்குத் தோன்றும்.” என்று சொல்லவும்,
தேவகி தன் காதுகளைக் கூர்ந்து, “ஆமாம். எனக்கும் அப்படித் தான் தோணுது.” என்று இருவரும் பேசிக் கொண்டே ஆலயத்தினுள் புகுந்தனர்.
அவர்களின் பேச்சில் சிரித்த தியாழினி, தன் பாட்டியிடம் “அலை வந்து பொத்து பொத்துன்னு அடிச்சிட்டு இருக்கு. உனக்கு மட்டும் ஓம்முன்னு கேட்குதா...? உன் காதை மருத்துவரிடம் காட்டிச் செக் பண்ணனும்.”
அனைவரும் கோவிலுக்குச் சென்று அஷ்ட லக்ஷ்மியில் அடங்கும் எட்டு லட்சுமிகளையும் வணங்கி விட்டு, தெய்வங்களான நாராயணன் தன் தேவியான திருமகள் நாச்சியாரோடு அருள்பாலிக்க, கடவுளிடம் மனமார வேண்டிக் கொண்டிருந்தனர்.
சுமித்திரை, விதுபாரதி, வினோதினி மூவரின் வேண்டுதல்களும் தியாவின் வாழ்க்கை நல்லபடியாய் இருக்கனும். கணவன் நல்ல மனுசனாய் வரவேண்டும். போன ஜென்மத்தில் செய்த பாவம், இப்போ வரை துரத்துகிறது. அவள் நல்லா வாழனுமென்று வேண்டினர். தேவகியின் வேண்டுதல் தன் மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணை கிடைத்து, நல்லா வாழணும் என்று. ஆனால், சம்பந்தப்பட்ட இருவரும் ஊரில் இருக்கும் அனைவரும் நல்லா இருக்கணும் என்ற வேண்டுதலை மட்டும் கடவுளிடம் வைத்தனர்.
சாமி கும்பிட்டு குங்குமம் கொடுக்க, சுமித்திரை தியா நெற்றியில் வைக்க, தேவகி சேனா நெற்றியில் வைத்துவிட்டு, மகனை முன்னிறுத்தி, “கடவுளிடம் வேண்டிக் கொள். நல்லபடியாய் திருமணம் நடக்கனுமென்று.” என்றார்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த குருக்கள், ‘குடும்பத்துடன் வரவும் திருமணத்திற்காகத் தான் வந்திருக்கிறார்கள் போலும். வேட்டி சட்டையில் இருப்பவன் மணமகன். தாவணியில் இருப்பவள் மணப்பெண்’ என்று நினைத்தவர், சுமித்திரையிடம், “வேட்டி சட்டையில் இருக்கும் இவர் யார்?”
“என் மகன்.” என்றார்.
“அந்தப்பெண் யார்?” என்றதும் விது பாரதியோ “என் பொண்ணு” என்றார்.
“நீ முன்னாடி வாம்மா” என்றதும், தியா வந்து முன்னே நிற்க, குருக்கள் மாலைகளால் நிரம்பி வழியும் கடவுள் விஷ்ணுவின் கழுத்தில் இருக்கும் மாலைகளில் ஒன்றை எடுத்து சேனாவின் கழுத்தில் போட்டார். பின் மகாலட்சுமியின் கழுத்தில் இருக்கும் மாலைகளில் ஒன்றை எடுத்து தியாழினியின் கழுத்தில் போட்டார்.
“ரெண்டு பேரின் ஜோடிப்பொருத்தம் நல்லா இருக்கு. அந்த விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் பார்த்தது போல இருக்கு. நல்லா வாழணும். திருமணம் நல்லபடியாக நடக்கட்டும்.” என்று கடவுளின் பாதத்தில் இருக்கும் பூக்களை எடுத்து, இருவரின் தலையிலும் போட்டு ஆசி வழங்கினார்.
தியாழியும் சேனாவும் நிமிர்ந்து ஓருவரை ஒருவர் பார்க்க, ‘சற்று நேரத்துக்கு முன்பு வேண்டாமென்று சொன்னானே’ என்று நினைக்க, சொன்னவனோ அப்படியே நின்றான்.
இந்தச் செயலால் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். கூட்டம் வரவும், குருக்கள் தள்ளிப் போங்க என்றதும் சுமித்திரை தேவகியைப் பார்த்தார். அவரின் முகத்தில் கூட மகிழ்ச்சி தான் இருந்தது.
அனைவரின் மனதிலும் ஒரு மகிழ்ச்சி இருந்தாலும் பெற்றவரின் மனதில் பயம். அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அனைவரின் மனதிலும் பல்வேறு சிந்தனைகள்.
முகத்திற்கும் மனதிற்கும் திரை போட்டு மறைத்து சாமி கும்பிட்டு முடித்து, அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.
இரவில் தியாழினி உறக்கத்தைத் தொலைத்தாள். தன் மனம் ஒன்றை நாடுது. அதையே கடவுளும் ஆதரிக்கிறார் என்றால், ஒருவேளை இவர் தான் என் வாழ்க்கையா...? என்ற பெண்ணவளும்,
“வேண்டாம் என்றாலும் சூழ்நிலை இணைக்குதே...! இவள் தான் என் வாழ்க்கையா?’ என்று ஆடவனும் யோசிக்கத் தொடங்கி இருந்தனர்.
விடிந்தது இருவரும் கல்லூரி சென்று, பின் தேவகி தன் வீட்டில் இருக்கும் கணவனின் புகைப்படத்தின் முன் வேண்டிவிட்டு, சுமித்திரையின் வீட்டிற்கு வந்தார்.
பின் சுமித்திரையிடம் “நேற்று கோவிலில் கடவுளிடம் என் மகனுக்கு நல்ல பொண்ணு அமையனுமென்று வேண்டினேன். அந்த நேரம் கடவுள் தியாவைக் காட்டுகிறார். இருவரையும் சாமியே இணைத்து வைப்பதை, தற்செயலாய் நடந்ததா அல்லது கடவுளின் விருப்பமா என்று தெரியலையே...! உங்களுக்கு அப்படி தோணுச்சா?”
அவரும் “நானும் கடவுளிடம் என் பேத்திக்கு நல்ல வாழ்க்கை அமையணும்னு தான் வேண்டினேன். சேனாவைக் காட்டிய போது மனதிற்குள் சந்தோசம் தான், ஆனால்…” என்று இழுத்து விதுவைப் பார்த்தார்.
விதுபாரதி தேவகியிடம், “நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள். எங்கள் குடும்பங்களில் சொல்லப்படாத பல ரகசியங்கள் இருக்கு. தியா படித்து முடிக்க இன்னும் நாலு வருஷம் இருக்கு. நாலு வருஷத்துக்குள் எத்தனையோ நடந்து முடியலாம். மனித வாழ்வில் நாளை என்பதே நிச்சயம் இல்லாத ஒன்று. நாலு வருஷம் கழிச்சு, நம்ம எல்லோரும் உயிரோடு இருந்தால், இது பற்றி பேசலாம். இதற்கு முன்னாடியே உங்க பையனுக்கு நல்ல பொண்ணு கிடைத்தால், திருமணத்தை முடித்து விடுங்கள் என்று சொல்லி பேச்சை முடித்து விட்டார்.
……………….
அன்று கல்லூரி முடிந்து, ஐஸ்வர்யாவும் தியாவும் வந்து கொண்டிருக்கும் பொழுது, ஆத்விக் தனது காரை கொண்டு வந்து சாலையை மறித்து இடையில் நிறுத்தி, வழிமறித்தான். சொன்னால் திருந்துகிற ஜென்மம் இல்லை என்பதால்,
“ஐஸ்வர்யா! நீ வண்டிய ஓட்டு.” என்றதும்,
அவளோ அவன் காரை சுற்றி வளைத்துக்கொண்டு வாகனத்தை ஓட்ட, கோபம் வந்த ஆத்விக் பின்னாடியே துரத்திக் கொண்டு வரவும், ஐஸ்வர்யா வேகமாய் வண்டியை ஓட்டி வந்து தியாவின் வீட்டில் நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் வந்தனர்.
வீட்டிற்குள் பதட்டமாய் வரும் தியாவையும் அவளது தோழியையும் கண்ட விதுபாரதி, “என்னாச்சு குட்டி?” என்று சொல்லிக் கொண்டே வாசலுக்கு வந்தார். அதற்குள் பின்னாடியே ஆத்விக் வந்துவிட்டான்.
தியா பதட்டமாய் “அம்மா... அம்மா இவன் டார்ச்சர் பண்றான்.” என்றதும்,
முன்னே வந்த விதுபாரதி, அவனின் கன்னத்தில் பளார் என்று அறைந்து, “ஒரு பொண்ணு வேண்டாமுன்னு சொல்றாளே? பிடிகக்லை என்று தெரிந்தும், எதுக்குடா டார்ச்சர் பண்றீங்க...?”
“எனக்கு தியா வேணும். நான் அவளை லவ் பண்றேன். எனக்கு அவளை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.”
“என் பொண்ணை நீ விரும்புறது உன் வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் தெரியுமா...?”
“என் அம்மாவிற்குத் தெரியும்.”
“சரி, உன் அம்மா நம்பர் கொடு!”
அந்த செல்போன் மூலம் அவரின் அம்மா எண்ணிற்கு அழைத்து, அவரை வரவழைக்க, அவர் அடுத்த அரை மணி நேரத்தில் பதட்டமாய் வந்தாள்.
வந்தவர் கைகூப்பி வணக்கம் சொல்லி, வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்த்தார்.
ஆத்விக்கின் அம்மாவின் பார்வையில் புரிந்தது. இவர்கள் நமக்கு சமமானவர்களா என்று வீட்டை சரி பார்க்கிறார் என்று.
உடனே விதுபாரதி, “நான் ஒரு பரதநாட்டியக் கலைஞர். அமெரிக்காவில் பலபேருக்கு நடனம் பயிற்றுவிக்கும் சாதாரண ஆசிரியர். மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்கும் சாதரண ஆசிரியர். கணவர் இல்லை. மிடில் கிளாஸ் குடும்பம். என் பொண்ணுக்கு, உங்க பையனை பிடிக்கவில்லை. அது அவனுக்குப் புரிய மாட்டேங்குது.”
“மன்னிச்சிடுங்க. இனிமேல் என் பையன் உங்க பொண்ணை தொந்தரவு பண்ண மாட்டான்.” என்று சொல்லிவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு சென்றார்.
காருக்குள் ஏறி அமர்ந்ததும் தன் மகனிடம் “பொண்ணு அழகாத்தான் இருக்காள். ஆனால் அதை வைத்து ஒன்னும் பண்ண முடியாது. உன் அப்பாவிடம் வேலை பார்க்கும் ஆட்களின் வீடு அளவுக்குத்தான் இந்த வீடு இருக்கு.
உன் அப்பாவிற்கு இது சுத்தமாப் பிடிக்காது, ஆத்விக். புரிஞ்சதா...? உன் அப்பாவின் பி.ஏ சம்பளமே ரெண்டு லட்சம்.
அதையும் மீறி அவள் உன்னைக் காதலித்தால் கூட, ஏதாவது ஒண்ணு செய்யலாம். அவளுக்குத் தான் உன்னைப் பிடிக்கவே இல்லையே. கண்ணா...! பிடிக்காத பெண்ணை வற்புறுத்துதல் தவறுடா...! இனிமேல் அவள் பின்னாடி சுத்தக் கூடாது.” என்று அவன் கையை எடுத்து தன் தலைமேல் வைத்து, “இது, அம்மா மேல சத்தியம்.” என்றார்.
வீட்டிற்கு வந்த அவனுக்கு, ஏனோ மனம் முழுவதும் வலியாக இருந்தது. பெரிய பணக்கார பிடித்திருக்கிறது நினைத்ததெல்லாம் நொடிப்பொழுதில் கிடைத்து, இன்று ஒரு பொருள் இருக்கும் இடத்தில் ஒரு பெண். விரும்பிய பொருள் உடனே கிடைத்தது போல், தியாவும் வேண்டுமென்று மனம் அடம் பிடித்தது. கிடைக்காத அவளின் மீது வெறுப்பும், தன் காதலின் வலியும் கோபம் என்னென்னமோ எண்ணங்கள் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
இரண்டு நாளாய் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கும் மகன், வெளியே எங்கேயும் போகவில்லை. ஏதாவது செய்து கொள்வானோ என்ற பயத்தில், இளவரசி அவனையே பார்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கணவனிடம் மறைப்பது தவறு என்று புரிந்து, அவருக்கு அழைத்தார்.
வந்தவர், நடந்த அனைத்தையும் கேட்டுவிட்டு மனைவியை இரண்டு முறையும், மகனை பலமுறையும் அடித்தார்.
மகனிடம் “நீ யாரு...? எவ்ளோ பெரிய ஆளு! நாளை இந்த நாட்டின் முதலமைச்சர். போயும் போயும் ஒரு சாதாரண பொண்ணு வேண்டுமா...? உனக்கு ஏற்கனவே நான் பொண்ணு பார்த்துட்டேன். பொண்ணு வேற யாரும் இல்லை. என் நண்பன் மணிச்சந்திரன் பொண்ணு, அம்ரிதா தான் உனக்கானவள். அவளை நீ படிக்கும் கல்லூரிக்கு மாற்றச் சொல்றேன். அவளைக் கூட்டிக் கொண்டு போறது முதல், மீண்டும் அழைத்து வருவது உன் வேலை. புரியுதா...!
நாளையிலிருந்து ஒழுக்கமாய் படிக்கப் போறதாய் இருந்தால் கல்லூரிக்குப் போ. மீறிக் காதல் கீதல் என்று வந்தால், அந்த பொண்ணை குடும்பத்தோடு எரித்து விடுவேன்.” என்று திட்டிவிட்டு,
மனைவியை முறைத்து, “இவனைப் பார்ப்பதை விட அப்படி என்ன வேலை உனக்கு...?” கோபமாய் போனவருக்கு, பிறந்ததிலிருந்து அடிக்காத மகனை முதல் முறை அடித்துவிட்டதால் மனம் வாடியது. மீண்டும் திரும்பி வந்தவர், அவனின் கன்னத்தைத் தொட்டுப் பார்த்து,
“சாரிடா. நீ என் உயிர். இந்த உயிருக்கு இந்த உலகத்தில் இருக்கும் சிறப்பானதை மட்டும் தான், நான் கொடுப்பேன்.
அம்ரிதா, உன் அம்மா மாதிரி குணமானவள்டா. அப்படியே, உன் அம்மா உன்னை எப்படி பார்த்துக் கொள்வாளோ, அதைவிட பத்து மடங்கு பார்த்துப்பா.
இன்னொன்னு, நீ மட்டும் மணிச்சந்திரனின் மகளைக் கட்டிக்கிட்டால், அவனிடம் இருக்கும் அத்தனை சொத்தும் உனக்குத்தான்.
அம்ரிதாவின் தாய் மாமன், அதான் அவளின் அம்மா மலர்விழியின் அண்ணன், வாமனன், கோடீஸ்வரனுக்கே கோடீஸ்வரன். உன் கல்லூரியில் மேஜர் முதலீடு அவனோடது. அவன் கைகாட்டும் ஆட்களுக்குத்தான் கட்சியில் இடம். இந்த உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் அவனுக்கு சொத்து இருக்கு. அவன் இனிமேலும் சம்பாதிக்கும் அத்தனை சொத்தும் அம்ரிதாவிற்கே...!
வாமனனைப் பகைத்து விட்டால், நம் அரசியல் வாழ்க்கையே ஆட்டம் கண்டு விடும். அவனுக்கும் மணிச்சந்திரனுக்கும் பண பலமும் ஆள் பலமும் என்னை விட பலமடங்கு அதிகம். அப்பேர்ப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீ வாரிசு ஆகனும். ஆகிவிட்டால், நீ இந்த நாட்டுக்கே ராஜாவாகி விடுவாய். புரியுதா...!
இன்னொன்னு, அம்ரிதா மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் வடித்தால், அந்த கண்ணீருக்கு காரணமான அவர்களை, மணிச்சந்திரன் சும்மாவே விடமாட்டான்.
அம்ரிதா உன்னை விரும்புறாள். பார்த்துக்கோ...!”
ஆத்விக், “இனிமேல் அவளே வந்தாலும், அவளை நான் ஏற்றுக்க மாட்டேன்பா. ஆனால் என்னை வேணாம்னு சொன்னவளுக்கு, நான் ஒரு சின்ன பனிஷ்மென்ட்டாவது கொடுப்பேன். அதுக்கு மட்டும், நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணனும்.”
“இங்க பாரு ஆத்விக், உன்னைக் கடிச்சிருச்சுன்னு இந்த மாதிரி கொசுவையெல்லாம் போயி, உன் கையால் அடிக்கணும் என்று நினைத்தால், அது உன் முட்டாள் தனம். உன் பெயர் எந்த சூழ்நிலையிலும், தவறானதாய் யாருக்கும் தெரியக்கூடாது.” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.
‘யார் என்ன சொன்னாலும், அவளுக்கு ஒரு பாடம் நடத்தியே தீருவேன்.’ என்று ஆக்விக் மனதிற்குள் குறித்துக் கொண்டான்.
கதை மாந்தர்களின் பெயர் குழப்பம் நீக்க,
சுமித்திரை
வித்யாபாரதி
விதுபாரதி
விசித்ரா
வினோதினி
விபின்சிவராஜ்
தியாழினி
ஐஸ்வர்யா
கிரண்
சசிரேகா
ரிஷி
தேவகி - ஸ்ரீதர்சேனா
மணிச்சந்திரன்- மலர்விழி-அம்ரிதா
இளவரசன்- இளவரசி- ஆத்விக்
வாமனன்- வானதி
பாண்டித்துரை-மகிமா, மதுரா
சுடும்...
Coment pls
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com