Akka chance ae illai..unga writing ..arumaiyana frnds pugal n vidhya...frnds kills sry thanks rendum illain17yrs aa..rishi semaya confuse aaytar ...sasi vandhachu...amma appa vai edhrthu vandhu namma aasaikalai adaiyanumnu illai.avanga permission oda avanga support oda avanga aasai pattadhum niraivetrikollalam...adhuve nalladhum kooda.mithuna Chennai porale ennana nadakka pogudho...enaku oru doubt diya vidhu oda ponnuna....3mth baby a irkumbodhu visham vatchukollapaarthingannu sonnalae vidhya andha 3mth vayithukulla irundha baby engaaahaaaa..sema excited a irke ees ka..supera kondu poringa..interesting.. nice ud.waiting for nxt ud
மிதுனா, ஊட்டியில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தின் நடுவில், ஹீரோவுடன் பாடலுக்கு நடனமாடி முடித்துவிட்டு, கால்கள் எல்லாம் வலி எடுக்க, மாலை வேளையில் தனது ஹோட்டல் அறையில் படுத்திருந்தாள். மனமெல்லாம் தன் தங்கை பேசிய வார்த்தைகளே காதுக்குள் ரிங்காரமிட்டது.
ஒரே இடத்தில் படுத்திருந்தால் மனம் இப்படித்தான் வேதனைப்படும் என்பதால், மெல்ல எழுந்து ரிஷிக்கு கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு, அருகிலிருக்கும் தேயிலைத் தோட்டத்திற்குள் நடக்க ஆரம்பித்தாள்.
அந்த நேரம், ஒரு புதருக்குள் ஒரு பெண், “என்னை விட்டுவிடு. நான் வீட்டுக்குப் போகனும். ப்ளீஸ்…” என்று கத்தி கத்தி அழும் சத்தம் கேட்கவும், மிதுனா நின்றாள்.
மெல்ல புதரை விலக்கிவிட்டு, யாருன்னு வந்து எட்டிப் பார்க்க இருபத்தி ஐந்து மதிக்கத்தக்க ஓருவன், 17 வயது நிரம்பிய சிறுபெண்ணைப் போட்டு, கன்னத்தில் பளார் பளாரென்று அறைந்து கொண்டிருந்தான். இதைக் கண்டதும் மிதுனாவிற்கு கோபம் பொங்கியது. தானும் சிறுவயதில் அடிவாங்கிய ஞாபகம் வரவும், வேகமாய் அங்கே சென்று, அவன் கையைப் பிடித்து திருப்பி மொத்து மொத்தென்று அடித்து உதைத்து, “எதுக்குடா சின்னப் பெண்ணைப் போட்டு அடிக்கிற?”
அவனோ தனது பாக்கெட்டில் வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து, மிதுனாவை நோக்கிச் சுடப்போக லாவகமாய் குனிந்து, சினிமா தொழிலில் வேலை செய்யும் போது தன்னை தற்காத்துக் கொள்ள கற்றுக்கொண்ட கலைகளால், அவனை அடித்து நின்றிருந்தவளின் துப்பட்டாவால், அவனின் கைகளை கட்டிப்போட்டு, அவன் கத்தாமல் இருக்க வாயிற்குள் துணியை வைத்து அடைத்தார்.
அந்தப் பெண்ணின் கன்னத்தில் பளாரென்று அறைந்து, “இந்த வயசில் இப்படி ஒருத்தனை நம்பி தனியாய் புதருக்குள் வந்திருக்கிற. அறிவில்லையா...?”
“நான் சசிரேகா. சென்னைதான் என் ஊர். கல்லூரியின் முதலாம் வருடம் இப்போத்தான் சேர்ந்து இருக்கேன். இவனால ரெண்டு வாரமாய் காலேஜ்க்குப் போகல.
எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமாவில் நடிக்கனுமென்பது ஆசை. அதனால் திரையுலகத்தில் நுழைவதற்கு வாய்ப்புக்காக யாரைப் பார்ப்பது என்று கூகுளில் தேடிக் கொண்டிக்கும் போதுதான், இவனைப்பற்றி முகநூலில் பார்த்தேன்.
இவனும் சென்னையில் தான் வசிக்கிறான். பெயர் மூகேஷ். இவனின் முகநூல் பக்கத்தில், தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலருடன் எடுத்துக் கொண்ட படத்தைத் பகிர்வான். நான் இவனைப் பின்தொடர்ந்து தினமும் பார்த்துக் கொண்டே வந்தேன். இவன் எல்லா நடிகர் நடிகைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து, நானே தான் அவனிடம் பேச ஆரம்பித்தேன்.
அவனும் தமிழ் திரையுலகில் உள்ள பலநடிகர்கள், இயக்குநர்களுடன் எனக்கு மிகவும் நெருக்கம் இருப்பதாய்ச் சொன்னான். தினமும் பேச ஆரம்பித்தோம். பேசும் போது சினிமா திரையுலகில் நான் மிகவும் செல்வாக்கு மிக்க ஆள் என்றான். அவனின் முகநூல் பதிவில் இருந்த நடிகர்கள் எல்லாம், பெரிய பெரிய ஆட்கள்.
அவனின் பேச்சுக்களை நம்பி, நான் அவனிடம் எனக்கு சினிமாவில் நடிக்க ஆசையிருக்கிறது. படங்களில் வாய்ப்பு வாங்கித்தர முடியுமான்னு கேட்டேன். கண்டிப்பாய், நான் உனக்கு பட வாய்ப்புகள் வாங்கித் தர்றேன் என்று சொன்னான்.
தினமும் பேசப்பேச, அவன் என்னைக் காதலிப்பதாய்ச் சொன்னான். அவ்வப்போது அவன் வீட்டுக்குப் போவேன். ஒரு நாள் கூட என்னிடம் தப்பாய் நடந்ததே இல்லை.
இந்த நேரத்தில், வீட்டில் என் காதல் விவகாரம் தெரிய வந்தது. அம்மா என்னை அடித்து விட்டார்கள். சினிமாவில் நடிக்கப் போறேன் என்று சொன்னதும், அப்பாவும் அம்மாவும் என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பவே இல்லை. எனக்கு பெரிய நடிகையாக வேண்டும் என்பது என் கனவு. முகேஷ் அதை நிறைவேற்றுகிறேன் என்று சொன்னான்.
ஒருநாள் போட்டோ ஷூட் எடுத்தால்தான் நீ பிரபலமாக முடியும் என்றான். நான் கோவையில் இருக்கேன். இங்கே பிரபலமான இயக்குனரின் பெயரைச் சொல்லி, அவர் இங்கு தான் புதுமுகத்திற்கான போட்டோ ஷூட் நடத்துகிறார். நீயும் வா என்றான்.
அவனை காதலிப்பதாலும், அவன் தன்னிடம் ஒரு நாள் கூட தவறாக நடந்து கொள்ளாததாலும், அவன் பேச்சை நம்பி வீட்டில் சொல்லாமல் ஓடி வந்தேன். கோயமுத்தூரில் அவனின் நண்பன் வீட்டுக்குக் கூட்டிப் போனான். அவனுடன் பேசிட்டிருந்தேன். சாப்பாடு வாங்கிக் கொடுத்தான். சாப்பிட்டேன். அவ்வளவுதான் தெரியும். என்ன நடந்தது என்ன பண்ணினான் ஒண்ணுமே தெரியல.
நேற்று காலையில் ஒரு ஃபோட்டோ ஷூட்டுக்காக ஊட்டி போகனும்னு சொல்லவும், நானும் வந்தேன். இங்கே நேற்று மாலை வந்தோம். இவன் இயக்குனரோடு படுக்கையைப் பகிர்ந்து கொண்டால் தான் பெரிய வாய்ப்புகள் தருவார் என்று மிரட்டுறான்.
நான் மாட்டேன் என்று சொன்னதும், அவன் மொபைல் போனை எடுத்து நீட்டினான். அதில் முந்தின நாள் இரவு, நான் சுய நினைவின்றிக் கிடந்தேன். என்னிடம் அசிங்கமாய் நடந்து, அதையே படம் எடுத்திருக்கான். எடுத்த படத்தை இணையத்தில் விட்டு விடுவேன் என்று மிரட்டினான். நான் இவன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்தேன். துரத்தி வந்தவன் என்னை கொலை பண்ண முயற்சிக்கிறான். ப்ளீஸ் மேடம் என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில், அந்த இயக்குனர் இந்த ஹோட்டலுக்கு வந்து விடுவான். ப்ளீஸ் மேடம் என்று காலில் விழுந்து கெஞ்ச, மிதுனா, அவளை அள்ளி அணைத்துக் கொண்டாள்.
மிதுனாவின் கண்ணிலிருந்து வழியும் கண்ணீரின் காரணம், அவளுக்கு மட்டுமே தெரியும். ஒரு பெண் தன் அப்பா, சகோதரனுக்கு அடுத்து அதிகமாய் நம்புவது காதலன். ஆனால், அந்தக் காதலுக்கு தகுதி இல்லாதவர்கள் இவனைப் போன்றவர்கள். உண்மையாக நேசிக்கும் பெண்களுக்கு மட்டும் தகுதியே இல்லாத காதலர்கள் கிடைப்பது பெண்ணின் துரதிருஷ்டமே...!
தனது செல்போனில் ரிஷிக்கு அழைத்து விட்டு, அவளிடம், “நீ சாப்பிட்டாயா...?”
அவளோ “இல்லை மேடம். பசிக்குது.” என்றதும், மிதுனாவின் கண்ணில் வலியும் வருத்தமும்.
ரிஷி வந்ததும், அவனைப் பற்றிச் சொல்ல, அவனை நாலு மிதி மிதிக்கவும், அவன் மயக்க நிலைக்குச் சென்று விட்டான்.
மிதுனா, “இந்தப் பெண்ணின் பெயர் பேப்பரில் எதிலும் வந்து விடக்கூடாது ரிஷி. என்ன பண்ணலாம்...?”
பின் அவளின் நினைவில் வந்தது புகழ்பெற்ற நடிகர் புகழேந்தி. ‘பெண்னவளின் ஆருயிர் நண்பன். சொந்த ஊர் கோயம்புத்தூர். ஆனால், இப்போ எங்க இருக்கான்னு தெரியலையே?’ என்ற சிந்தனையில் தன் நண்பனுக்கு அழைத்தாள்.
“ஹாய் மேடம். உங்களுக்கு என் ஞாபகம் எல்லாம் இருக்கா...?”
“நம்மைப் பற்றி அப்புறம் பேசிக்கலாம். ஒரு முக்கியமான விசயமென்று நடந்ததைச் சொன்னாள். நான் இப்போ கோயம்புத்தூரில் தான் இருக்கேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே வர்றேன்.” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
மிதுனா ரிஷியிடம் “நீ கொஞ்சநேரம் இந்த புதருக்குள் இவனைப் பார்த்துக்கோ. மயக்கம் தெளிந்தால் மீண்டும் மிதி. அடிச்சு மொகரையை டேமேஜ் பண்ணு. புகழ் வந்த பின் நானும் வர்றேன்.”
அவளை அழைத்துக் கொண்டு போய், ஹோட்டலில் அமர்த்தி, சாப்பாடு வரவைத்து அவளுக்குக் கொடுத்தாள். அவள் சாப்பிட்டு முடித்ததும் தனதறைக்கு, கூட்டிக் கொண்டு போனாள்.
பின் அவளிடம் “ஒரு பெண் பெற்றோர்களுக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வருவது தப்பில்லையா...? இப்படி வந்தால், எவன் உன்னை சும்மா விடுவான்? பெற்றோர் கூட இருக்கும் நடிகைகளுக்கே, அத்தனை கஷ்டம். இதில் தனியாய் வந்து சிக்கியிருக்க?”
அவளின் கண்ணில் கண்ணீர். “நான் பெரிய தப்பு பண்ணிட்டேன், மேடம்.”
“உன் வீட்டில் பணக்கஷ்டமா...? சாப்பிடுவதற்கு எல்லாம் பணம் இல்லையா...?”
“அப்பா வங்கியில் வேலை பார்க்கிறார். பணத்திற்கு எல்லாம் எங்கள் வீட்டில் பிரச்சனையே இல்லை மேடம். சொல்லப் போனால், நான் வீட்டிற்கு ஒரே பெண் மேடம். எனக்கு சின்ன வயசுல இருந்து, பெரிய சினிமா நட்சத்திரம் ஆகனும் என்பது என் கனவு.நீங்கள் எல்லாம் இன்று பெரிய நட்சத்திரமாக இருப்பது போல, நானும் ஒரு நாள் ஆக வேண்டாமா...?”
“ஹா... ஹா…. பேருக்குத்தான் நான் பெரிய நட்சத்திரம்.”
சசியோ, “மிதுனா என்றால் தெரியாதவர்களே கிடையாது. புகழின் உச்சியில் இருக்கிறீங்க. வாழ்வில் அனைத்தும் கிடைத்து வெற்றியின் உச்சத்தில் நீங்க.”
மிதுனா " புகழ் இருக்கு. பணம் வேண்டாம் வேண்டாமென்று சொல்ற அளவுக்கு இருக்கு. ஆனால் மனநிறைவோ, மன நிம்மதியோ கொஞ்சம் கூட இல்லை. அதீத மன அழுத்தம். பல நாள் நான் தூங்கினதே இல்லை.”
“விருப்பம் இல்லாமல் தான் சினிமாவுக்கு வந்தீங்களா...?”
“ஆமாம். ஏழ்மை துரத்த வந்தேன். நடிப்பு… என் கனவில்லை.”
“உங்க கஷ்டத்திற்காக நடிக்க வந்தீங்களா...?"
“ஆமாம்! நாங்க பணக்காரர்களும் இல்லை. ஏழையும் இல்லை. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். என் வீட்டிற்கு நான் மூத்த பெண். என் அப்பாவுக்கு ஆண் குழந்தை என்றால் அவ்வளவு பிடிக்கும். எங்களையும் ரொம்பப் பிடிக்கும். ஆனால், அவருக்கு என்னமோ அந்தச் சென்னையில் இருக்கும் அத்தனை சொத்தும் அவருரோடது போல நினைப்பு. அதை அனுபவிக்க, ஒரு ஆண்பிள்ளை இல்லையே என்ற வருத்தம் போல..” என்று நக்கலாய் சொல்லியவள்,
“நான்கு பெண் குழந்தைகளுக்கு அப்புறம் பையன்.
ஆண் குழந்தை வேண்டி, கோவில் கோவிலாய் விரதமிருப்பார்கள். என் அம்மாவின் வேண்டுதல் கடவுளுக்குக் கேட்டது போல. கடைசியாகப் பிறந்தவன் தான் என் தம்பி.”
“ஏன் மேடம், உங்களுக்கு ஆம்பளப் பையன் பிடிக்காதா...?”
"என் அப்பா, பையன் பையன்னு சொன்னதால் பிடிக்காமல் இருந்துச்சு. ஆனால், என் தம்பியை என் கையில் தூக்கின நொடியிலிருந்து, நான் அவனுக்கு இன்னொரு அம்மா. அவனை அவ்வளவு பிடிக்கும்.
அப்பா தனியார் கம்பெனியில் கணக்காளராய் வேலை பார்த்தார். பணத்திற்குப் பிரச்சனை இல்லை. ஆனால், சேமிப்பு ஓண்ணுமில்லை. இருக்க சொந்த வீடு. நல்லாத்தான் போச்சு. அம்மா பரதநாட்டியக் கலைஞர். சின்ன வயதிலிருந்தே பரதம் கத்துகிட்டேன். நான் பள்ளி ஆண்டு விழாவில் பரதம் ஆடினேன். விழாவிற்கு பள்ளிக்கு வந்த இயக்குனர் ஓருவர், என் நடனம் பார்த்து பிடித்துப் போக, என் வீட்டிற்கு வந்து அப்பாவிடம் என்னை அவரின் படத்தில் நடிப்பதற்காகக் கேட்டார். என் அப்பா மறுத்துவிட்டார்.
ஒருநாள், என் பதினான்கு வயதில் தூக்கத்திலே அப்பா இறந்து விட்டார். அப்பத்தான் ஒரு அப்பாவின் பங்கு என்னன்னு தெரிஞ்சது. அம்மா நிலைகுலைந்து போனாங்க. அடுத்த மாசம் சாப்பாட்டிற்கே வலியில்லை. என் தங்கச்சி அனைவரும் குழந்தைங்க. யாரை நம்பியும் குழந்தைகளான பிள்ளைகளை வீட்டில் தனியாய் விட்டுவிட்டுப் போகமுடியாது.
ஒரு ரெண்டுமாதம் சாப்பாட்டிற்கு பயங்கர கஷ்டம். தினமும் விதவிதமாய் சாப்பிட்டு விட்டு, திடீரென்று பட்டினி கிடந்தால் எப்படியிருக்கும்?
அந்த நேரம், என்னை படத்தில் நடிக்கக் கேட்ட இயக்குனர், எங்கள் தெருவில் குடி வந்தார். அவரின் படத்திற்கு இன்னும் நாயகி கிடைக்காததால் தேடிக் கொண்டிருந்தார். எங்கள் வீட்டின் சூழ்நிலை புரிய, என் அம்மாவிடம் வந்து மீண்டும் கேட்ட போது, இரவில் சாப்பிடவே பற்றாக்குறை. விடிந்தால் மீண்டும் சாப்பிடணும். அதற்குப் பணம் வேண்டுமே...!
அம்மா தலையாட்டினார். நான் படத்திற்கு நடிக்க வந்தேன். அப்போ வந்தது, இந்த சினிமா வாழ்க்கைக்கு.
ஓரு நடிகை என்பவள் ரசிகர்களை மகிழ்விப்பவள். ஆனால், என் அகத்திற்குள் சொல்ல முடியாத பல கஷ்டங்கள். ஊரார் அறியாத கண்ணீரும், சோகமும் மறைந்திருக்கு.
சினிமாவில் மிதுனா என்பவள் ஆடி, பாடி, சிரித்து, மகிழ்ந்து வாழ்பவள். அவளுக்கென்ன குறை? மிகவும் சந்தோஷமானவன்னு காட்டிக் கொண்டு நடிக்கிறேன். சினிமா வாழ்க்கையில், நான் எதிர்கொண்ட பிரச்னைகள் ஏராளம்.
உனக்கு ஒரு கஷ்டமெனில் உன்னைக் கையில் வைத்துத் தாங்க, அம்மாவும் அப்பாவும் இருக்காங்க. நல்ல எதிர்காலம் இருக்கும் போது எதற்காக சவக் குழியில் விழனுமென்று ஆசைப்படுற?
நீ பார்த்த சினிமா, வெறும் மூன்று மணி நேரம். அதில் அழுகை, சிரிப்பு, சந்தோஷம் எல்லாம் கலந்து வரும். கதையின் நாயகிக்கு ஒரு கஷ்டம் வந்தால், கதாநாயகன் வந்து காப்பாற்றுவான். ஆனால், நிஜவாழ்க்கை அதற்கு நேர்மாறானது.
வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் பார்த்து வந்த மனிதர்களைப் போல, சினிமாவிற்குள் நுழைந்ததும், நமக்கு யாரைப் பார்த்தாலும் ஒரு ஒட்டுதல் உண்டாகும். அந்த மாதிரி நடிப்புத் தொழிலிலும் நாம் ஓருவனை நம்புவோம். அவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யக் காத்திருப்போம். பெயர் புகழ் அத்தனையும் இழப்போம். யாரை கதாநாயகன் என்று நினைக் கின்றோமோ, அவன் தான் நம்மைக் கொண்டு போய் குழிக்குள் தள்ளுவான்.
உனக்கு சினிமாவில் நடிக்கனுமென்று ஆசை இருந்தால், போய் நல்லா படித்து முடித்து விட்டு, உன் பெற்றோரின் துணையுடன், பாதுகாப்பாய் படதில் நடி. சரியா...?
இப்போ, நீ கொஞ்ச நேரம் தூங்குறதுன்னா, தூங்கு.”
அவளோ “எனக்கு தூக்கமே வராது மேடம். எனக்கு எங்க அம்மாவைப் பாக்கணும் போல இருக்கு.”
சிறுது நேரத்தில் புகழேந்தி வந்ததும், அலை பேசியில் தகவல் கொடுக்க, இரு பெண்களும் கிளம்பி, அந்த தேயிலைத் தோட்டத்திற்குள் வந்தனர்.
சசி, அங்கிருந்த புகழேந்தியைக் கண்டதும், “சார் நீங்களா...?”
“நானே தான்!” என்றதும் சசி வாய் பிளந்தாள்.
தமிழ்நாட்டின் புகழ் பெற்ற ஹீரோ. ஒரு ஆட்டோகிராப் வாங்கனும் என்றால், காலையிலும் இரவிலும் வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள். இவனைப் பார்ப்பது என்றால் அவ்வளவு கஷ்டம். ஆனால், ‘இந்த மேடம் கூப்பிட்டதும் ஒரு நிமிடத்தில் வந்திருக்கிறார் என்றால், அவர்களுக்குள் அப்படி என்ன உறவு...?’
புகழேந்தி வரும் போதே ஊட்டியில் இருக்கும் தனது நண்பன் மற்றும் காவல் அதிகாரிக்கு அழைத்து விசயத்தை சொல்லி இருந்தான். காவல் அதிகாரிகளும் அந்த ஹோட்டலின் உரிமையாளரை அழைத்து விஷயத்தைச் சொல்லியதும், அவர் தங்கள் ஹோட்டலின் ஊழியர்களை வைத்து, முகேஷ் தங்கியிருந்த அறையையும், பக்கத்தில் தங்கியிருக்கும் இயக்குனரின் அறையையும் சோதனை போட்டதில், அங்கே, ஒரு இளம் பெண் மயக்க நிலையில் கிடந்தாள்.
அவளை மீட்டு எடுத்து விட்டு, காவல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். பின் ஹோட்டலின் உரிமையாளர், அந்த இருவரின் பெயரிலும் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்க, காவல் அதிகாரி வாங்கிக் கொண்டார்.
மயக்க நிலையில் இருந்த பெண் தெளிந்ததும், போலீஸ் அவளிடம் விசாரித்ததில், “புது முகத்திற்கான போட்டோ ஷூட் எடுக்கிறோம் என்று சொல்லி முகேஷ் வர வழைத்தான். ஆனால் என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறான்.”
“நீங்க இவர்களின் பெயரில் புகார் கொடுக்கிறீர்களா...?”
“கண்டிப்பாய் கொடுக்கிறேன். ஏனெனில் எனது வீட்டில் சொல்லி விட்டுத்தான் போட்டோ சூட்டுக்கு வந்தேன். புகார் கொடுத்தால் தான், இவனை மாதிரி உள்ளவர்களை நம்பி, எந்தப் பொண்ணும் வர மாட்டாங்க!” என்றதும், இருவரின் பெயர்களிலும் புகார் வாங்கி, இருவரையும் அழைத்துக் கொண்டு காவலர் சென்று விட்டனர்.
புகார் கொடுத்தவள் அப்படியே சிலை போல் அமர்ந்திருக்க, மிதுனா அவளிடம் “ஏம்மா, டல்லா இருக்க...? ஏன்மா?”
“மேடம், எனக்கு சினிமா என்பது கனவு. தமிழ் தெரியும். நடனம் தெரியும். நாடக கம்பெனியில் பல நாள் பயிற்சி பெற்றிருக்கிறேன். ஆனால், இவனை மாதிரி ஆட்களால் பிடித்த துறைக்குள் கால் வைக்க முடியாதே...! இனிமேல், வீட்டில் யாரையும் நம்பி அனுப்ப மாட்டார்கள். அது தான் பயம்.”
மிதுனா புகழேந்தி இடம், “இந்தப் பெண் மாலினிக்கு ஒரு வாய்ப்பு வாங்கித் தர முடியுமா...?”
புகழேந்திக்கும் ரிஷிக்கும் ஆச்சர்யமே...! புகழேந்தி விழி விரித்தான். பின் “நீ கஷ்டப்பட்ட போது கூட யாரிடமும் கையேந்தி நிற்கல. ஆனால், இன்று ஒரு பெண்ணிற்காக சிபாரிசு பண்றயே...!”
“ஆமாம். சசிக்கு சினிமா ஆர்வம் இருக்கு. அது தவிர அதற்காக எதையும் படிக்கவில்லை. ஆனால், இந்தப் பெண்ணோ சினிமாவிற்காக தன்னை தயார்படுத்தி இருக்கிறாள்.”
புகழேந்தி “ஹாய் மாலினி! மிதுனாவினால் கண்டிப்பாய் உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு உண்டு. நான் எனது புதுப் படத்தில் உன்னை அறிமுகப் படுத்துகிறேன். ஆனால், அதற்கப்புறம் உன் திறமையால் வளரனும். உன்னை நீயே பாதுகாத்துக் கொள்ளனும். சரியா...!”
மாலினி மிதுனாவைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட, அவளின் கையை தட்டிவிட்டு, “கடவுளைத் தவிர யாரையும் கும்பிடாதே! நீ எந்த ஊர் மா...?”
"தஞ்சாவூர்."
புகழேந்தி தனது பெர்சனல் நம்பர் மற்றும் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, “இன்னும் மூன்று நாளில் உனது குடும்பத்தாருடன் சென்னையில் வந்து என்னை மீட் பண்ணு.” என்று சொல்லி நம்பிக்கையான கால் டாக்ஸியில், அவளை அனுப்பி வைத்தனர்.
பின் சசிக்கு ஒரு கால் டாக்சி புக் பண்ண, சசி ஓடி வந்து மிதுனாவைக் கட்டிக்கொண்டு, “நான் யாரை நம்பியும் போக மாட்டேன். தனியாப் போக பயமா இருக்கு. அம்மா அப்பா வீட்டுக்குள் சேர்த்துக்க மாட்டாங்க...!”
மிதுனா கண்ணை மூடி ஒரு நிமிடம் யோசித்தவள், “ஓகே ரிஷி! நம்ம இப்பவே சென்னை கிளம்பலாம். டாக்சி புக் பண்ணு.”
புகழேந்தி “மேடம், நீங்கள் என் காரிலேயே வரலாம். அடியேன் பாக்கியம் செய்தவனாவேன்.”
ரிஷி, “மேடம், இவர் நமக்கு எவ்வளவு உதவி செய்திருக்கிறார். நீங்க ஒரு நன்றி கூட சொல்லலையே...!”
புகழேந்தி புன்னகையோடு, “நல்ல நண்பர்களுக்குள் நன்றியும் மன்னிப்பும் கிடையாது, ரிஷி. 17 வருஷத்தில் ஒரு முறை கூட சொல்லிக் கொண்டது இல்லை.”
மிதுனா “நான் உன் காரில் வர்றேன். ஆனால், நான் வரும் விசயத்தை யாருக்கும் சொல்லக் கூடாது.”
அவனோ திரும்பி முறைத்து, “வித்யா, என்னிடம் பல்லாயிரம் முறை உன்னைப் பற்றிக் கேட்டும், நான் இப்ப வரை வாய் திறக்கவில்லை. நினைவில் வைத்துக்கொள்.” என்று சொல்லி முன்னே செல்ல,
ரிஷியும் அவளிடம், “மேடம், உங்க பேரு மிதுனா தானே...!”
"ஆமாம்! அதற்கு என்ன?"
“அது வந்து, புகழ் சார், உங்களை வித்யான்னு சொன்னார்!”
“வித்யா தான் எனது பெயர். சினிமாவிற்காக மிதுனா.”
இதுவரை புரியாத புதிராக இருந்த மிதுனாவைப் பற்றி, ரிஷிக்கு இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் புரிய வந்தது. பரதநாட்டியம் ஆடும் பெண்ணவள், பெயர் வித்யா. அவள் கூப்பிட்டால் ஓடி வந்து உதவி செய்யும் பல பிரபலங்கள். ஏனோ, பெண்ணவளின் மீது, நாளுக்கு நாள் மதிப்பு கூடிக் கொண்டே இருந்தது.
ஆனால், ‘இவள் சென்னை செல்லும் விசயத்தை சென்னையில் யாருக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறாள்’ என்ற யோசனையே அவன் மனதைக் குழப்பியது.
சுடும்...!
வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...www.sahaptham.com
.