அத்தியாயம் - 13
அன்று விடியல், வித்யா பாரதிக்கும் அவளின் குடும்பத்திற்கும் இவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை. பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வாமனன் அவர்களுக்கு திருமணம். மணப்பெண் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சீனிவாசனின் மகள் வானதி.
முதல் முறையாய் நேசித்த ஒருவர் செய்த துரோகத்தில், பெண்ணவள் மயங்கிச் சரிந்தாள். ஆற்றவோ தேற்றவோ ஆளில்லை. ‘யாரின் முகத்தில் மகிழ்ச்சியை மட்டுமே பார்க்கணும் என்று நினைத்தாளோ...! இன்று, அவரே தன் வாழ்க்கையின் அத்தனை சந்தோசத்தையும் பறித்துக் கொள்வார்’ என்று பேதையவள் எதிர் பார்க்கவில்லை.
வயிற்றில் கை வைத்துப் பார்க்க, அவரின் குழந்தை தன் வயிற்றில் இருக்கும்போது, இப்படி ஒரு துரோகமா...?
மகள் நொறுங்கிப் போனதைப் பார்த்து, பெற்றவர் தான், மனம் நொந்து போனார். சம்பாதிக்கும் பணம் எல்லாம், அவன் குடும்பத்திற்கே செலவு செய்தவள். வாழ்க்கையில் அடிபட்ட பின்பு தான், சிலரின் உண்மையான முகத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஏமாற்றியது, தன் உயிருக்கு உயிரான உறவு. இவ்வளவு மோசமானவரா...? மனமானது, நேசம் கொண்டவனின், உண்மை சுய ரூபம் தெரிய வரும் போது தான் அறிகிறது, இவர்களையா உயிருக்கு மேல் நம்பினோம் என்று..!
திருமணம் முடிந்த அன்று, கட்டியவன் சொன்ன வார்த்தை, ‘நீ என்னில் பாதி என்று.’
கேட்டதும், ‘ஆசையாய் அவரின் நெஞ்சத்தில் சாய்ந்தது நிஜமா...?’
வாமனன் மென்மையாய் வெறும் வார்த்தையால் சொல்ல வில்லை. நான் வருந்திய போது துணை நின்றதால், ‘எனக்கு நீ இன்னொரு அம்மா. என் வறுமையைப் போக்கியதால் கடவுள். நீ இல்லாவிட்டால் நான் இல்லை. அன்று பேசிய வார்த்தை ஜாலம் எல்லாம் பொய்யா...? வெறும் உதட்டளவில் மட்டும் சொல்லி இருக்கிறாரா...? காட்டிய அக்கறை எல்லாம் பார்த்து, என்னைப் போல் அவரும் உண்மையாக நேசித்து இருப்பாரென்று நினைத்தேனே...!’
அந்த இரவில், வாமனன் பண்ணிய சத்தியம் கூட, ‘உன்னை தவிர வேறு யாரையும் நான் நேசிக்கமாட்டேன். இது நான் நேசிக்கும் உன் மேல் சத்தியமுன்னு சொன்னாரே...!’ அழுது அழுது ஓய்ந்தவளுக்கு, உணவே இறங்கவில்லை.
மாலை வேளையில், எதுவும் நடவாதது போல, வீட்டிற்கு வந்த வாமனனைக் கண்டதும், குடும்பமே கொலை வெறியோடு பார்த்தது. உள்ளே வந்தவனை சுமித்திரையின் குரல் தடுத்தது.
“எதற்கு எங்க வீட்டுக்குள் வர்ற?”
“நான் வித்யாவிடம் பேசணும்.” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தவன், அங்கே கட்டிலில் சுருண்டு படுத்து இருந்தவளை, இரண்டு நிமிடம் மௌனமாகப் பார்த்தான். வித்யா என்ற அழைப்பைக் கேட்டு எழுந்தவளால் பேசக் கூட முடிய வில்லை. கண்ணெல்லாம் சிவந்து வழிந்த நீரைப் பார்த்து, அருகே வந்தவனை திட்டக் கூட அவளிடம் சக்தியில்லை.
“நான் ஆசைப்பட்டு ஒன்னும் கல்யாணம் பண்ணிக்கலை. கோடிகளில் கடன் வாங்கி இருப்பதால் அவங்க மிரட்டி தாலி கட்டச் சொன்னாங்க. அப்படி, நான் அந்த பொண்ணை திருமணம் செய்யாவிட்டால், நம்ம குடும்பத்துல எல்லோரையும் ஜெயிலுக்கு அனுப்பிடுவேன்னு மிரட்டினார். ஏற்கனவே, ஒரு சாதாரண தயாரிப்பாளர் எதிர்த்ததற்கு ஆறுமாசம் படுக்க வைத்திருந்தார்கள். இவர் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர் என்று உனக்குத் தெரியும் தானே…!
நான் இதை விரும்பி ஏற்கவில்லை. நம்ம குடும்பத்துக்காகத் தான். அதையும் மீறி, நீ எனக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால், நான் ஏற்றுக் கொள்கிறேன்.”
நொந்த பெண்ணவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘பணக்காரர்களிடம் எதிர்த்து நின்றால், அவர்கள் திருப்பி எழவே முடியாதபடி அடிக்கும் போது, ஏழையான தங்களால் எழுந்து நிற்க முடியாது என்பதை உணர்ந்தவள்’, அப்படியே அவரைக் கட்டிக் கொண்டாள். தங்களுக்காகத் தான் இப்படி ஒரு வாழ்க்கையை தனது கணவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் என்று.
பெண்ணவளுக்குத் தெரிய வில்லை. தன் கணவனுக்கு, இன்னொரு மனமொன்று உண்டு. அதில் உலகத்தையே ஆளும் பணக்காரனாய் வாழ வேண்டுமென்று பெரிய ஆசை இருக்கிறது என்று.
அப்பாவியான வித்யாபாரதி, வீட்டிலிருக்கும் அனைவரிடமும், தன் கணவனின் இக்கட்டான சூழ்நிலையைச் சொல்லி, அனைவரையும் சமாதானப் படுத்தினாள்.
வாமனன், ஒரு நாள் இங்கே வித்யாவின் கணவனாகவும், மறுநாள் வானதியின் கணவனாகவும் ரெட்டை வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இப்போது வித்யாவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு, மூன்றாவது மாதம்
அன்று வாமனன் பற்றி செய்தித்தாளில் கிசுகிசு வந்திருந்தது. ‘ஒரு பிரபல இயக்குனர் இன்று பெரிய தயாரிப்பாளரின் மருமகனாய் அரிதாரம் பூசியிருக்கிறார். தயாரிப்பாளர் மகளுடன் ஒருநாளும், சிறந்த நடிகையின் கணவனாய் ஒருநாளும் மாறிமாறி இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்’ என்று செய்தி.
அன்றைய செய்தித்தாளை வாசித்த வானதிக்குப் புரிந்தது. இது தன் கணவரைப் பற்றிய செய்திதான் என்று. வாசித்த நொடியிலிருந்து வீட்டிற்குள் பேயாட்டம் ஆடி விட்டாள். வாமனன் வாய் திறக்கவேயில்லை. ‘தனக்கும் வித்யா பாரதிக்கும் இருக்கும் உறவு, ஊர் உலகத்திற்குத் தெரியும் போது, வானதிக்கு மட்டும் தெரியாமலா இருந்திருக்கும்.’ என்று நினைத்தான்.
ஆனால், கோடீஸ்வரியான அவளுக்கு சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று நினைத்தாள். ஆனால், இன்று தன் வாழ்க்கையில் இன்னொருத்தியா.... என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வீட்டில் இருக்கும் அனைத்தையும் போட்டு உடைத்தாள். அவளை சமாதானப் படுத்தியது சீனிவாசன்.
“யாரோ எதையோ பேப்பரில் பொய்யா எழுதுகிறார்கள். உன் கணவன், இனிமேல் இந்த வீட்டை விட்டு எங்கேயும் போகமாட்டார். அந்த நடிகையின் வீட்டின் மாடியில் தான், உன் மாமனார் மாமியார் வசிக்கிறார்கள். அங்கே அவர்களைப் பார்க்கப் போவதைத்தான், பத்திரிகைக்காரர்கள் தப்பா எழுதி விட்டார்கள்.” என்றதும் பெண் மனம் சற்று சிந்தித்தது.
‘தன் கணவர் அந்த வீட்டில் தான் இத்தனை நாள் இருந்திருக்கிறார். ஏற்கனவே அவரையும் அவளையும் பற்றி கிசுகிசு வந்ததைப் பார்த்திருக்கிறோமே. ஒரு வேளை உண்மையாக இருந்தால் என்ன பண்ணுவது...?’
ரகுராமிற்கு பயங்கரக் கோபம். தன் அப்பா தன்னை விட்டுவிட்டு தன் சினிமா கம்பெனிக்கு வாமனனை வாரிசாக நியமித்திருப்பது.
அந்தக் கோபத்தில் அவன் தன் அக்காவிடம், "அந்த நடிகைக்கும் உன் கணவருக்கும் கனெக்சன் இருக்கு. உன் கணவர் அவளுக்கு தாலி எல்லாம் கட்டி இருக்கிறார்."
அடுத்த நொடியே, கோபம் வந்து தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டாள். தன் வீட்டின் முன்னே, ஒரு பெரிய கார் வந்து நிற்க,
சுமித்திரை, “இவள் எதுக்குடி இங்கே வர்றா?”
அனைவரும் யாரென்று பார்க்க, அதிலிருந்து இறங்கியவளை அனைவருக்குமே அடையாளம் தெரிந்தது. வித்யாவின் மனம் தான் அடித்துக் கொண்டது. இவள் தன் கணவனின் இரண்டாம் மனைவி வானதி என்று.
அவள் நடந்து வரும்போது, அவள் ஆத்திரத்திலும் கோபத்திலும் வருகிறாள் என்பது சுமித்திரைக்குப் புரிந்தது.
உள்ளே வந்தவள் அங்கே அமர்ந்திருந்த வித்யா பாரதியின் முடியை பிடித்து கன்னத்தில் பளாரென்று அறைந்து, “உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால், என் கணவரை மயக்கி உன் வீட்டுக்கு வர வைத்திருப்பாய்?”
வித்யா பாரதிக்கு அதுவே பேரதிர்ச்சி. 'தன் கணவர் இவளிடம் தன்னைப் பற்றி எதுவும் சொல்ல வில்லையா...?' என்று நினைக்கும் போதே, அவள் அசிங்கமாய்ப் பேசித் திட்டியவள்,
“என் கணவரை நீ தேடியோ... பார்க்கவோ வரக் கூடாது. எங்காவது வந்தால், உயிரோடு எரித்து விடுவேன்.” என்று திட்டி விட்டு வெளியே வந்தவள், என்ன நினைத்தாலோ, பட்டென்று மேலே மாடிக்குப் போனாள்.
அங்கு “நீங்கள் எல்லாம் என் கணவரின் அப்பா அம்மா தானே...! தினமும் உங்களைப் பார்க்க வருவதால் தானே, அவருக்கு ஒரு நடிகையைப் பார்க்க வருகிறார் என்று கெட்ட பெயர். என்னிடம் நிறைய பங்களாக்கள் இருக்குது. நீங்கள் ஏன் பிச்சைக்காரர்கள் போல் இவளின் வீட்டிலிருக்கிறீர்கள். இப்பவே கிளம்புங்கள்!” என்று அனைவரையும் கையோடு அழைத்து சென்றாள்.
செம்மறியாட்டுக் கூட்டம் போல அவர்களும் எதுவும் சொல்லாமல் அவள் பின்னே செல்வதைக் கண்ட போது தான், வாமனன் மட்டுமல்ல அவன் குடும்பமே சுயநலம் பிடித்தவர்கள் என்று அறிந்து கொண்டனர்.
விதுபாரதி தன் அக்காவிடம், “எவ்வளவு இந்தக் குடும்பத்துக்கு நீ செய்திருப்ப. ஒரு நன்றி கூட இவர்களுக்கு இல்லை பாரேன்.”
அன்றிரவு தன் கணவன் வருவான் என்று வித்யா எதிர் பார்த்தாள். வரவில்லை.
இன்று, வீடெங்கும் நிசப்தம்.
“அன்று அவரின் குடும்பம் எங்கள் வீட்டைவிட்டு வெளியேறியதும், அவர் வருவாரென்று நம்பிக்கையில் காத்திருந்தேன். வரவே இல்லை. எனது ஒட்டுமொத்த உலகமும் சுக்கு நூறாகி விட்டதைப் போல், நான் உடைந்து போனது அன்றுதான்.
அந்த வாரம் முழுவதும் எதிர் பார்த்தேன். வர வில்லை. நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மட்டுமே அவரின் நினைவுகளாய் எஞ்சியிருக்க, எனது வயிற்றில் குழந்தையுடன் தவித்துப்போய் நின்றேன்.”
……………………………….
அன்று,
என் முதல் படத்தில் நடித்த புகழேந்தி என் நல்ல நண்பன். எங்கேனும் பார்த்தால் நலம் விசாரிக்கும் அளவிற்கு பழக்கம். அன்று என்னைத் தேடி வீட்டிற்கு வந்தான். தெரிந்தவர்கள் மூலம் என் நிலையைக் கேட்டறிந்தவன், என் நிலை கண்டு பதறியவன்,
“அவர்கள் எல்லாம் சேர்ந்து உன்னை ஏமாற்றி விட்டார்கள். உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா...?”
“கட்டிய கணவனே ஏமாற்றியபின், நான் யாரையும் நம்பத் தயாராக இல்லை. தயவு செய்து வெளியே போய்விடு.”
“நீ இருக்கும் நிலையில் யாரைப் பார்த்தாலும் வெறுப்பாய்த்தான் தோன்றும். உனக்கு எதாவது உதவி வேண்டுமானால், இந்த நம்பருக்குக் கூப்பிடு. நண்பனாய் நான் வருவேன்.” என்று சொல்லி, தனது பத்து இலக்க செல்லிடைப் பேசியின் எண்களைக் கொடுத்து விட்டுப் போனான்.
ஒருநாள் மனம் தாளாமல், சீனிவாசனை நேரில் சந்தித்து, “எப்படி சார் அவரால் என்னை ஏமாற்ற முடியும். உங்களுக்குத் தெரியாதா, எனக்கும் அவருக்கும் திருமணம் முடிந்தது. இப்போ என் வயிற்றில் மூணு மாசம் குழந்தை. சட்டப்படி நான் தான் முதல் மனைவி. போலீஸ் நிலையம் போய் புகார் கொடுக்கட்டுமா...? இதற்கு யார் பதில் சொல்வார்கள்.” என்று கண்ணீரோடு கேட்டவளையே பார்த்தவர்,
“இன்று எங்கள் வீட்டிற்கு வாம்மா...! இதற்கு நான் ஒரு தீர்வு சொல்கிறேன்.”
வீட்டிற்கு வந்த சீனிவாசன் தலையில் கை வைத்து அமர்ந்தவர், ஒரு முடிவு செய்தார். பின் இறுதியாக தன் மகளிடம் வித்யாபாரதியை வரச் சொல்லியிருக்கேன். இன்று வீட்டுக்கு வருகிறாள். அவளிடம் நீ நல்ல விதமாகப் பேசு. அவள் சின்னப்பெண். நீ அவளின் வீட்டுக்குப் போய் மிரட்டியதால், அவள் போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கொடுப்பேன்னு சொல்லி இருக்கிறாள். அப்படி பண்ணினால், உன் கணவரின் பெயர், நம் சினிமா கம்பெனியின் பெயர், எல்லாம் தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கையில் வந்து, நம் குடும்ப மானம் காற்றில் பறந்து விடும்.”
“இதற்குத் தீர்வுதான் என்னப்பா...?
"இருக்கிறது ஒரு வழி. நான் சொல்கிற மாதிரி, நீ செய்தால் தீர்வு கிடைத்துவிடும்."
“என்னப்பா செய்யணும்...?”
“அந்தப் பொண்ண வீட்டுக்கு வரவழைத்து, அன்பாகப் பேசுவது போலப் பேசு. அது அன்பிற்கு மயங்கும். கொஞ்சம் மெல்ல மெல்லப் பேசி, உன் கணவரை விட்டு அவளை விட்டு விடச் சொல்லலாம். அதிரடி எதற்கும் தீர்வாகாது. அன்பாய் பேசினால் வென்று விடலாம்.” என்று மகளை சமாதானப் படுத்தினார்.
தன் மகளை அங்கு அனுப்ப, சுமித்திரைக்கு விருப்பமில்லை. அவர் “வேண்டாம்” என்று மறுக்க,
வித்யா “நான் போய் பேசனும்மா. என் குழந்தைக்கு வழி.”
விதுபாரதி தன் அக்காவைப் பார்த்து, “நான் உன் பின்னால் ஆட்டோவில் வர்றேன். நான் வெளியே நிற்கிறேன். உனக்கு அவர்களால் ஏதும் பிரச்சனை வந்தால், நான் உன்னைக் காப்பாற்றனும்.” என்றதும்,
“சரி.” என்றாள்.
விதுபாரதியின் உதவிக்கு புகழேந்தியின் எண்களை, தன் அக்காவின் செல்ஃபோனில் குறித்துக் கொண்டவள், கையில் அதை எடுத்துக்கொண்டாள்.
அன்று சீனீவாசன் வீட்டிற்கு வந்த வித்யா பாரதிக்கு தடபுடலான விருந்து. கேவலமாய் திட்டிய வானதியின் வாயிலிருந்து அன்பான பேச்சு மட்டுமே...!
விதுபாரதி தன் அக்காவிற்காக வெளியே ஆட்டோவில் காத்திருந்தாள். கொஞ்ச நேரத்தில், அந்த வீட்டில் இருந்து ஒரு கார் வெளியே வந்ததும், அன்று தன் வீட்டிற்கு வந்து திட்டிய வானதி, இன்று தன் அக்காவின் கையைப் பிடித்து அன்பாய் பேசுவதைக் கண்டு விதுபாரதிக்கு தன் கண்களைத் தன்னாலேயே நம்ப முடியவில்லை.
தன் அக்காவின் வண்டி முன்னே செல்ல, பின் தொடர்ந்து ஆட்டோவில் விதுபாரதி. வித்யாவின் வண்டி சென்ற கொஞ்ச தூரத்திலேயே பயங்கர விபத்து.
விபத்தைக் கண்டு பெண்ணவள் பதைபதைத்துப் போனாள். ‘நினைத்தது போலவே துரோகம் செய்து விட்டார்களே...!’
விது, ஆட்டோக்காரரின் உதவியுடன் வித்யா பாரதியைத் தூக்கி ஆட்டோவில் ஏற்றிய நிமிடம், கார் சுக்கு நூறாய் வெடித்துச் சிதறியது.
விது, ஆட்டோ ஓட்டுனரிடம், “அண்ணா, சீக்கிரம் இந்த இடத்தை விட்டுக் கிளம்புங்கள்!” என்று சொன்னதும், அவசரமாய் வாகனத்தை ஓட்டினார்.
…………………..
“விது வரும் வழியில் புகழேந்திக்கு அழைத்து விஷயம் சொல்ல, அவன் அன்று கொஞ்சம் பெரிய நடிகர். அவன் நண்பனின் மருத்துவமனையில் என்னைச் சேர்த்தனர். பிரபல தனியார் மருத்துவமனை என்பதால், எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை.
எனக்கான அத்தனை செலவையும் புகழேந்தி பார்த்துக் கொண்டான். நான் ஆறு மாதம் கோமாவில். முழித்துப் பார்க்கும் போது முகம் கோரமாய் இருந்தது. நான் செத்துவிடலாம் என்று வெளியே வர, விது இரண்டு கொலைகளைச் செய்து விட்டு மயங்கிக் கிடந்தாள்.
என் முகம் எனக்கு அடையாளம் தெரிய வில்லை. விபத்தில் முகம் முழுவதும் காயத் தழும்புகள். ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கலாம் என்று புகழ் சொன்னான். விது பாரதியை சீனிவாசனிடமிருந்து காப்பாற்ற பணம் வேண்டும். தெரிந்த தொழில் நடிப்பு. ப்ளாஸ்டிக் சர்ஜெரி செய்த பின், மீண்டும் சினிமாவில் கால் பதித்தேன். புகழேந்தியின் உதவியால், நான் இங்கிருந்து மும்பை சென்று விட்டேன். வித்யா புது அவதாரம் எடுத்து, மிதுனாவாய் அறிமுகமானேன்.”
……………………..
தியாழினிக்கு தலையே சுற்றியது. ‘தன் அம்மா இரண்டு கொலை செய்திருக்கிறாரா என்று ...?’
வித்யா தன் தங்கையிடம் வந்து, "நீ எதுக்குடி 2 கொலை செய்த?"
விது பாரதி கண் கலங்கி சுவற்றில் சாய்ந்து அமர்ந்ததும்,
விசித்திரா “விது அக்கா கொலை செய்தது உண்மை தான். ஆனால், அது வித்யா அக்காவைக் காப்பாற்றத் தான்.
அன்று பெரிய விபத்து நடந்தது. கார் தலைகீழாய் புரண்டதில், நீ வாந்தி எடுத்திருந்தாய். அப்படி எடுத்ததால், உனக்கு உணவில் கொடுத்த விஷம் வயிற்றில் இறங்கவில்லை. கடவுள் புண்ணியத்தில் குழந்தைக்கு ஒண்ணுமில்லை என்று சொல்லிவிட்டனர். முகமெல்லாம் அடிபட்டு, கண்ணாடி சில்லுகளால் கிழிக்கப்பட்டு இருந்தது. முகமே பார்க்கக் கோரமாக இருந்தது. அதே நேரத்தில், தலையில் அடிபட்டதால் கோமா நிலைக்குச் சென்று விட்டாய்.
குழந்தை என்றதும் தான், பெண் அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது. “அப்போ, வயிற்றில் என் குழந்தை இறக்க வில்லையா...?”
விசித்திரா தலையாட்டி, “உன் குழந்தை உயிரோடு நன்றாயிருக்கு. ஆனாலும், உன் குழந்தை யார் என்று அம்மா தான் சொல்லணும். அதற்கு முன்னாடி நான் நடந்ததை எல்லாம் சொல்லி முடித்து விடுகிறேன்.
நீ செத்து விட்டதாய், ஊர் உலகத்தில் அனைவருக்கும் செய்தி பரவியது. ஆனால், சீனிவாசன் மறைமுகமாய் உன்னைத் தேடிக் கொண்டிருந்தார்.
உன்னையே முழு நேரமாய் கவனித்துக் கொண்டு இருக்கும் போது தான், விதுபாரதி அக்காவிற்கு வயிற்றில் அடிக்கொருதரம் வலி. என்னவென்று மருத்துவ மனையில் பரிசோதிக்கும் போது தான் தெரிந்தது. விது அக்கா வயிற்றில் 5 மாதக் குழந்தை என்று.
14 வயசு தான் விது அக்காவுக்கு. அது என்னன்னு தெரியாமல் விது அக்கா பயந்துவிட்டாள். விது தப்பான பொண்ணு இல்லை என்பது அம்மாவிற்குத் தெரியும். ஆனால் குழந்தை எப்படி? அக்காவோ, தெரியாது மா என்றதும், அம்மா, பயந்து நல்லா யோசித்து சொல்லுடி. எங்காவது பிரெண்ட்ஸ் வீட்டுக்குப் போனியா...? என்று கேட்டார்கள்.
நல்லா யோசித்துப் பார்க்கும் போது தான், ஒரு நாள் வாமனன் தம்பி பாலா, அவன் புதிதாய் ஒரு ஸ்டுடியோ வைத்திருப்பதாகவும், உனக்குக் காட்டுறேன் என்று அழைத்துச் சென்றான். அது மட்டும் தான் அம்மா எனக்கு நினைவில் இருக்கு. இதெல்லாம் தெரியல என்று அழுதாள்.
மருத்துவரின் காலில் விழுந்து, இது யாருக்கும் தெரிய வேண்டாம் குழந்தையை கலைத்து விடுங்கள் என்ற போது தான், கருவுக்கு 5 மாதம் ஆகி விட்டது. இனி கலைத்தால், அவர் உயிருக்கு ஆபத்து என்றார்கள்.
வாமனன் குடும்பம் மொத்தமும், தன் மகள்களுக்கு துரோகம் செய்து இருப்பதைத் தாங்க முடியாத சுமித்திரை, வாமனனை தேடிச் சென்று சாபமிட்டார்.
…………….
“என் மகளை வீட்டுக்கு வரச்சொல்லி விசம் வச்சீங்களே! பாவிங்களா...! இரண்டாவது மகளை உன் தம்பி நாசம் பண்ணிட்டானே...! ஏண்டா, இப்படி பண்றிங்க? நாங்க உங்களுக்கு நல்லதுதானே செஞ்சோம். நீங்க ஏன்டா எங்களை சித்ரவதைப் படுத்துறீங்க...?” என்று அழுதார்.
வாமனன் மூளை மரத்துப் போயிருந்தது.
“கார் ஆக்சிடெண்ட் பண்ணச் சொல்லி, என் பொண்ணோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டியே பாவி!” என்று அவன் சட்டையைப் பிடித்த போது தான், அப்படி ஒரு விஷயம் நடந்தது அவனுக்குத் தெரியும்.
படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுவிட்டு வந்து ஒருநாள் தான். காலையில் தான் வித்யா பாரதியின் இறப்பைக் கேட்டு, குற்ற உணர்ச்சியில் துடித்துக் கொண்டிருந்தான். ஆனால், ‘கொலை செய்து இருக்கிறார்களா...?’
சீனிவாசன் தன் மருமகனின் முகமாற்றத்தை கவனித்து, 'ஐயோ! இந்த விசயம் இவனுக்குத் தெரிந்து விட்டதே...! என்ன பண்ணுவானோ...!" என்று நினைத்தவர்.
பின் கோபமாய் சுமித்திரையிடம், “உன் மகள் உடல் கிடைத்ததா...? நாங்க விஷம் கொடுத்ததை, நீ பார்த்தியா?” என்று அவரின் கேள்விகள் வரவும்,
சீனீவாசன் கேள்வியில் சுதாரித்த சுமித்திரை, ‘வித்யா உயிரோடு இருப்பதை மறைத்தார். தன் மகள் ஊராரின் பார்வையில் செத்தது செத்ததாகவே இருக்கட்டும்.’ என்று நினைத்தவர்,
“வித்யா உடல்தான் காரோடு எரிந்துவிட்டதே!” என்றார்.
பின் சீனீவாசனைப் பார்த்து நிமிர்வாக, “கண்டிப்பாக நீங்கதான் கொன்னு இருக்கனும். உன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்த அன்றைக்கு நைட்டே செத்துப் போயிட்டாள் என்றால், என்ன அர்த்தம்?”
வாமனனுக்கு விஷயம் புரிந்தது. கண் கலங்கியது. வானதி, நீங்க அவளைப் பார்க்கக் கூடாது. பேசக் கூடாது. என்று பல கட்டளைகள் போட்டிருந்தார்.
‘தான் வாழ்க்கையின் உயரத்திற்குப் போவதற்காக, அத்தனையும் பொறுத்துக் கொண்டவர், இன்று அவளை இந்த உலகத்தை விட்டே அனுப்பி விட்டார்களே...! என்ற போது தன்னைக் காதலித்த பாவத்தைத் தவிர, அந்தப் பேதை, ஒன்றுமே செய்ய வில்லையே! இப்போது ஆழ் மனம், அவரை குடைந்து எடுத்தது. புழுவாய் துடிக்க வைத்தது. குற்றவுணர்ச்சி கொல்லாமல் கொன்றது.’
“வித்யாவைத்தான் நான் இழந்துட்டேன். ஆனால், விதுவையாவது வாழ வைக்கிறேன். என் கூட வாங்க!” என்று சுமித்திரையைக் காரில் ஏற்றி அழைத்துச் சென்றார்.
சுடும் ...
Comment pls
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏, வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை...
www.sahaptham.com