சிதம்பரத்தின் மனம் இன்னும் நம்ப மறுத்தது. சடசடவென அடித்து ஊத்திய மழை கூட கனவாய் தெரிந்தது. தான் தூக்கத்திலிருந்து விழித்துவிடக் கூடாதென கடவுளிடம் வேண்டிக்கொண்டார்.
உண்மையில் இந்தக் கல் தானா இந்த அற்புதத்தை நிகழ்த்தியது என்று வியந்து பார்த்தார் சிதம்பரம். இறுதியில் வாய்விட்டே கேட்டார்.
"ப்ரோடோஸ் தம்பி என்னயிது?.. இந்தக் கல்லுல இருந்து வெளிச்சமா வருது?.. இப்போ மழை பெய்யுததுக்குக் காரணமும் இது தானே?"
"ஆமா, நம்மக் கைய விட்டு போயிட்டாலே இம்வாலா இப்படி அது இஷ்டத்துக்கு பண்ணும். இன்னைக்கு வேற பௌர்ணமி பாருங்க. அதான் இப்படி.."
"தம்பி எனக்கு இப்போ உங்களைப் பார்த்தாலே பயமா இருக்கு.."
"என்ன?"
மழையின் இரைச்சலில் அவர் பேசியது கேட்கவில்லை அவனுக்கு.
"பயமா இருக்கு தம்பி"
"இல்ல என்னாலயோ இம்வாலாவாலயோ உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது.. இம்வாலா மண்ணுல புதைபடும் போது அதோட மொத்த சக்தியையும் மண்ணு உறிஞ்சிக்கும். நீங்க பயப்பட வேணாம்.. உங்க வீட்டுக்குப் போனதும் இதை மண்ணுல புதைச்சி வச்சிடலாம்.. உங்க வீட்டுல இப்போ யாரும் இருக்க மாட்டாங்க தானே?"
"இல்ல தம்பி, இப்போ என் வீட்டுல என் பொண்டாட்டி இருப்பா. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வரை எங்கப் பையன் சத்யமூர்த்தியும் எங்கக்கூட தான் இருந்தான். இப்போ தான் பஞ்சத்தால கோயமுத்தூர்ல என் கொழுந்தியா வீட்டுல தங்கிப்படிக்கான். முழுப்பரீட்சை லீவுல கூட நாங்க தான் அங்கப்போவோம். பிள்ளை இங்க வரமாட்டான். உம் பட்டறை தான் அவனும். உனக்கு ஒரு பதினஞ்சு வயசு இருக்குமா தம்பி?"
"ம்ம் இருக்கும் இருக்கும்.."
"சரியான பொட்டக்காடு தம்பி இந்தப்பய ஊரு. ஒரு சொட்டு தண்ணீ கிடையாது. இப்பம் நீ வந்துதான் பூமி குளுந்து கெடக்கு.. ம்ம் வா வா தம்பி.. அது என்னது இவளா? அவளா? பத்திரமா பிடிச்சிக்கோ.. காலைல பஞ்சாயத்து தலைவர் கிட்ட இதையும் சொல்லனும்.. உனக்கு வேணும்னா அவரைப் பிடிக்காம இருக்கலாம். ஆனா, எங்களுக்கு அவரு தான் எல்லாம். அப்போ நீ வேற பூமி என்ன தம்பி?"
"ம்ம் அப்படித்தான்.."
"ஆமா உங்க அப்பா ஏன் மெனக்கெட்டு இங்க வந்தாரு?.."
"எங்க கிரகம் மாதிரியே வேற கிரகம் இருக்கான்னு பார்க்கத்தான். கூடவே உங்கக்கூட நாங்க நல்ல நட்புறவு வச்சுக்க முடியுமான்னு தெரிஞ்சிக்கவும் தான் வந்தாரு. நான் இங்க வந்து இறங்கின மாதிரி என் அப்பாவும் வேற ஒரு இடத்துல வந்து இறங்கியிருக்கலாம்.."
"ரொம்ப ஆச்சரியமா இருக்கு.. எங்க ஊர்ல இப்படியெல்லாம் சொன்னா யாரும் நம்பமாட்டாங்க.."
இப்படி பேசிக்கொண்டே, அவனை தனது வீடுவரை அழைத்துச் சென்றார் சிதம்பரம்.
வழியில் மூக்குத்தி என்பவன், "ஏப்போ யாரு இது?.. துண்டக்கட்டி கூட்டி வருதா?" எனக் கேட்கவும்,
"பக்கத்தூர்ல இருக்க என் அண்ணன் மவன்பா" என்று சமாளித்தார் சிதம்பரம்.
"பாக்க மைதா மாவு பொம்மை மாதிரிலா இருக்கான். அண்ணன் மவங்குதியரு?"
பிரச்சனையை தீர்க்க ப்ரோடோஸ்க்கு தோல்வியாதி என்று கூறிவிட்டார் சிதம்பரம்.
அதி நவீன தொழில்நுட்பத்தோடு வாழ்ந்து வரும் ப்ரோடோஸுக்கு அவரது இல்லம் ரொம்ப வித்தியாசமாகப்பட்டது.
அவர்கள் கிரகத்தில் ஒவ்வொருத்தருக்கென்று தனித்தனி வீடு உண்டு. இதுபோல் கணவன் மனைவி சேர்ந்து ஒரே வீட்டில் தங்குவதை எல்லாம் அங்குப் பார்க்க முடியாது. பத்து வயதிலேயே குழந்தைகளுக்கும் தனிவீடு போகும் உரிமை வந்துவிடும்.
அங்கு யாரும் ஒருவரை சார்ந்து ஒருவர் கிடையாது. ஆனால் உடன் இருப்பவருக்கு ஒரு பிரச்சனை என்றால் கூட்டாக வந்துவிடுவார்கள். கிட்டத்தட்ட நம்மூர் ஜீவராசிகள் மாதிரி.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் மண்ணெண்ணெய் விளக்கை எரியூட்டிய சிதம்பரம், 'ஏட்டி' என்று குரல் கொடுக்கவும், பின்புறம் மழைநீரை மண்பாண்டங்களில் நிரப்பிக் கொண்டிருந்த தங்கப்பழம் உள்ளே வந்து பார்த்து, "ஏங்க யாரு இந்தப்பையன்?" என்று கேட்டார். பொறுமையாய் முழுக்கதையையும் எடுத்துரைத்தார் சிதம்பரம்.
"ஏ யம்மோவ்! இசக்கில்லா தம்பி உருவுல வந்திருக்கு.. எங்கூருக்கு மழை கொண்டு வந்திருக்கு.. பெரிய பிளேனுல வந்து தம்பி இறங்குச்சோ?"
"ச்சை சும்மா இருட்டி.. இசக்கி அதுஇதுன்னுட்டு"
"தம்பி ரொம்ப பெரிய இடம் போல இருக்கு.. உங்க விருப்பம் போல இன்னைக்கு தம்பியை நம்ம வீட்டுலயே தங்க வச்சிக்கலாம்.."
"சாப்ட என்ன இருக்குட்டி?"
"வேற என்ன கருக்கா அரிசிச்சோறு தான்.. தம்பி சாப்பிடுமோ தெரியலயே.."
"இல்ல இல்ல என்கிட்ட புட் டேப்லெட்ஸ் இருக்கு.. இதெல்லாம் தேவையில்ல.."
புரியாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, அவன் வீட்டின் பின்புறம் சென்று இம்வாலாவை மண்ணில் பாதியளவில் புதைத்து விட்டு வந்தான். பின், சிதம்பரம் தனக்கென்று ஒதுக்கிய இடத்தில் போய் படுத்துக் கொண்டான்.
மறுநாள் காலையில் அவனை தனது மகனது உடையை அணியவைத்து பஞ்சாயத்து தலைவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் சிதம்பரம்.
வழியில் வைத்தியர் வீடு தென்பட்டபோது அவனுக்கு நேற்று பாம்பு கடித்தது ஞாபகம் வந்து அவனை உள்ளே கூட்டிக்கொண்டு போனார் சிதம்பரம்.
அப்போது, அந்த ஊரிலேயே மந்திரமும் மருத்துவமும் தெரிந்தவரான முனியாண்டி, தன்னிடம் வந்த பால்வினை நோயாளி ஒருவனுக்கு மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரிடம், "இவருக்கு என்ன?" என்று கேட்ட ப்ரோடோஸ், முனியாண்டி அவனை சிதம்பரத்தின் மகன் என்று நினைத்துக்கொண்டு அந்த நோயினைப் பற்றி விளக்கவும், அந்த நோயாளியின் வைத்தியத்திற்காக கொண்டு வரப்பட்ட மூலிகையில் இரண்டை எடுத்து, திரும்பி நின்று உற்றுப் பார்த்தான். அவன் கண்ணிலிருந்து ஏதோ ஒளி போல் வந்து அந்த மூலிகையின் மீது விழுந்தது.
தன் உடம்பில் இம்வாலாவின் மூலம் தான் சேமித்து வைத்திருந்த மொத்த சக்தியையும் அதற்காக பிரயோகித்தான் ப்ரோடோஸ்.
சிதம்பரம் மட்டும் அவன் செய்வதையெல்லாம் பிரமிப்பாய் பார்த்திருக்க, திரும்பி வைத்தியரிடம் அந்த மூலிகையை கொடுத்தவன், "இதை அரைச்சு மூணு நாளைக்கு மூணு வேளை அவரை குடிக்க சொல்லுங்க. எல்லாம் சரியாகிடும்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, கையிலிருந்த இம்வாலாவுடன் மயக்கம் போட்டு கீழே விழுந்தான்.
காரணம், பஞ்சாயத்து தலைவரின் கையாள் மூக்குத்தி அவனை கட்டையால் தலையில் பலமாக தாக்கியிருந்தான்.
அவனை தோளில் சுமந்துகொண்டே மூக்குத்தி முன் செல்ல, இம்வாலாவை தூக்கிக்கொண்டு பின்னேயே சென்றார் சிதம்பரம்.
பஞ்சாயத்துத் தலைவரின் வீட்டு வாசலில் கிட்டத்தட்ட பஞ்சாயத்துப் போல் ஊரே ஒன்றுகூடி இருந்தது.
ஊரிற்கு நடுவே கிடத்தப்பட்டான் ப்ரோடோஸ். பஞ்சாயத்தில் குற்றவாளி போல் நின்றிருந்தார் சிதம்பரம்.
"சொல்லுடே சிதம்பரம், இந்தப்பயலை எங்க புடிச்சா?.. உன் பொண்டாட்டி தங்கப்பழம் மூலமா எங்க எல்லாருக்கும் எல்லா உண்மையும் தெரிஞ்சிட்டு. நீ எங்கக்கிட்ட எந்த உண்மையையும் மறைக்க முடியாதுடே கேட்டியா?.. இவனை வச்சு நீ தான் மழை வர வச்சியாமேடே?.. ஹாஹாஹா என்னமா கதை விட்டிருக்கா.. எங்க இப்போ வரவச்சிக் காமிடே பாப்போம்!" என மிரட்டவும், பயத்தில் அனைத்து உண்மையையும் உளறினார் சிதம்பரம்.
சுற்றியிருந்தவர்கள் அனைவரும் ஏதோ கதை கேட்பதை போல சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
அது கொஞ்சம் பகுத்தறிவாளர்கள் படையெடுத்த காலமென்பதால் சிதம்பரத்தின் கதையைக்கேட்டு சிலர் சிரித்தனர்.
மழை தண்ணி இல்லாமல் பயிர் போல் வாடிக்கிடந்த மக்களுக்கு புதியவனைப் பற்றிய புனைக்கதை புத்துணர்ச்சியைக் கொடுத்தது.
ஆனால், பஞ்சாயத்துத் தலைவருக்கு அந்தக்கதை பிடிக்கவில்லை. காட்டமாய் வந்தது அவர் குரல். "ஏடேய் சிதம்பரம்! பஞ்சம் பெதடிய கவ்வுதுன்னு கல்லு அது இதுன்னு பொய்யச்சொல்லி சம்பாதிக்க ஆசப்படுதியோ.."
"ஐயா, அப்படிலாம் இல்லயா.. இப்போக்கூட என் நிலத்துக்கு வந்தியன்னா இந்தத்தம்பி வந்த வண்டியக் காட்டுதேன்யா.."
ஏற்கனவே மழை பெய்த கடுப்பில் இருந்த பஞ்சாயத்துத் தலைவர், சிதம்பரம் மேல் எரிந்து விழுந்தார். "நாங்க எங்கயும் வர மாதிரி இல்லடே.. ஏற்கனவே நேத்து பத்திரத்துல கையெழுத்து போட ஒத்துக்கிட்டவனுவ யாரும் இப்போ போடமாட்டேங்குதானுவ.. நான் எதுக்குடேய் இனி உங்க நிலத்துப் பக்கம் வரணும்?.."
"நீ உம் பொண்டாட்டிக்கிட்ட சொன்ன பொய் தாம்டேய் இப்போ இங்க நிக்குதா.. ஏதோ உன் கையில இருக்க கல்லு மழை பெய்ய வைக்கும்னு சொன்னியாமே.. எல்லாம் இனி விவசாயம் பாக்க இந்தக் கல்லு போதும் என்னடே?.. ஹாஹாஹா எங்க இப்போ இந்தக்கல்ல மழை பெய்ய வையிடே பாப்போம்"
"ஐயா மண்ணுல புதைச்சு வச்சி எடுத்ததால இதுக்கிட்ட இப்போ சக்தி இல்லயா"
"ஏய்! நிறுத்துடே உன் பேச்சை.. அதோ அவனை எழுப்புலேய்!.." எனவும், ஓடிப்போய் அவனை உலுக்கினார் சிதம்பரம்.
பேச்சு மூச்சில்லாமல் கிடந்தான் ப்ரோடோஸ்.
முனியாண்டி வந்து சோதித்து பார்த்தவர், "ஐயா அடி வசமா பட்டுட்டுப் போல.. உசுரு இல்ல.."
எனவும்,
"அய்யோ தம்பி எழும்புடே" என்று அவனை மடியில் போட்டுக் கதறினார் சிதம்பரம்.
அச்சமயம் பஞ்சாயத்துத் தலைவர் கண்ணசைவில் அம்மங்கொண்டாடி ஒருவர் சாமி வந்தது போல் சன்னதம் ஆடினார். ஊரில் பலர் வயிறு ஒட்டிக்கிடக்க, அவர் வயிறு மட்டும் ஆறுமாத கர்ப்பம் போல எம்பி எம்பி குதித்தது.
சாமியாடியவர், அனைவரும் கையெடுத்து கும்பிடவும், "என்னலேய்! எல்லாரும் என்னை மறந்துட்டியலா?.. உங்க ஊருக்கு இனி இந்த இசக்கியம்ம தாம்லேய் எல்லாம்!.." என்று நாக்கைக் கடித்தார்.
அனைவரும் அவரை தரையில் விழுந்து கும்பிட்டனர்.
"அந்தப்பய இந்த ஊருக்கு ஆகாதவன்.. எங்க கெடச்சானோ அங்கயே அவனையும் அந்தக் கல்லையும் போட்டு புதைச்சிடுங்கலேய். இந்த ஆத்தா உங்களுக்கு துணையிருப்பேன்.. இன்னைலயிருந்து மூணாம் வெள்ளி எனக்கு கொடையெடுங்க, முப்பவன் வெளைய வைக்குதேன்.." என்று வித்தியாசமாய் ஒலியெழுப்பிப் பின், கீழே சுருண்டு விழுந்தார்.
பஞ்சாயத்து தலைவரின் மனைவி உள்ளிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவரது முகத்தில் தெளித்தாள்.
இப்போது பஞ்சாயத்துத் தலைவர், "என்னலேய்! இசக்கியம்மை சொன்னதைக் கேட்டியல்ல?.. அப்புறம் மூக்குத்தி அடிச்சதுக்காக ஒண்ணும் இவம் சாகல.. சிதம்பரம் சொன்னானே பாம்பு கடிச்சதுனு.. பாம்புவிஷம் சும்மா விடுமா என்ன?.. அதான் வேலையக் காட்டிருக்கு.. சரி இசக்கியம்மை புண்ணியத்துல மழை பெஞ்சிருக்கு.. எல்லாம் நல்லா விதப்பாடு போட்டு எனக்கு குடுக்கவேண்டிய காசைக் குடுங்கடே.." எனவும், சரியென்ற கூட்டமும் கலைந்து சென்றது.
சிதம்பரத்திற்கு எங்கே மறுத்துப் பேசினால் தன்னை பஞ்சாயத்துத் தலைவர் எதுவும் செய்துவிடுவாரோ என்று பயமாக இருந்ததால், தன் துண்டை வாயில் வைத்தபடியே அழுது கொண்டிருந்தார்.
மூக்குத்தி முன்புபோலவே ப்ரோடோஸை தன் தோளில் சுமந்து சென்றான். அழுதபடியே சிதம்பரமும் தங்கப்பழமும் அவனின் பின்னேயே சென்றனர்.
நேற்றிரவு சிதம்பரம் அங்கு மறைத்து வைத்திருந்த வண்டியை தேடினால் இப்போது காணவில்லை. திறமையாய் திட்டம்போட்டு அனைத்தையும் மூடி மறைத்திருந்தார் பஞ்சாயத்துத் தலைவர்.
பஞ்சாயத்துத் தலைவரின் உத்தரவு படி, சிதம்பரத்தின் நிலத்திலேயே அவன் உடல் புதைக்கப்பட்டது. உடன் இம்வாலாவும் புதைக்கப்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு வாரம் ப்ரோடோஸின் நினைவிலேயே உழன்று கொண்டிருந்தார் சிதம்பரம்.
பின், தங்கப்பழத்தின் அனத்தலால் தான் வேறுவழியின்றி அவரது இரண்டு காதணிகளையும் விற்று விவசாயம் பார்க்க நிலத்திற்குச் சென்றார்.
சரியாக மூன்றாம் வாரம் பௌர்ணமி அன்று மீண்டும் செங்குளத்தில் மழைபெய்தது. ஆனால், இம்முறை சரியாக சிதம்பரத்தின் நிலத்தில் மட்டும் மழை பெய்திருந்தது.
ஊர்மக்கள் அனைவரும் அதனை ஆச்சரியமாய் பார்க்க, சிதம்பரம் சிரித்தார். மறுமாதமும் அதுபோலவே மழை பொழிய விழுந்து விழுந்து சிரித்தார். சிலர் அவரை பைத்தியம் என்று கூறினர்.
அவர் நிலத்தில் புதைக்கப்பட்ட சிறுவன் தான் பேயாய் மாறி இதுபோல் சித்து விளையாட்டு காட்டுகிறான் என்றும் சிலர் விமர்சித்தனர்.
உயிர் பயத்தால் சிதம்பரத்தின் வயல்வழியே செல்வதையே சிலர் தவிர்த்து வந்தனர்.
மாதம் மும்மாரி போல் மாதம் ஒருமாரி பொழிய, அதற்கு தகுந்தாற்போல் விவசாயம் செய்து மண்ணை பொண்ணாக்கினார் சிதம்பரம். அதற்கு பின்பு உண்மையிலேயே சிதம்பரத்தின் காட்டில் மழைதான். வீட்டில் செழிப்பு தான்.
அவரின் அசுர வளர்ச்சியைக் கண்டு பஞ்சாயத்துத் தலைவர் தொடங்கி பலருக்கும் அவரின் மீது சந்தேகம் வந்தது.
ஒரு நாள் பௌர்ணமியன்று மறைவாய் நின்று அவரை நோட்டமிட்டனர்.
நேரே ப்ரோடோஸ் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்ற சிதம்பரம், மண்ணைத் தோண்டி இம்வாலாவை வெளியே எடுத்தார். பின், அதை தடவிக்கொடுத்து ஏதோ பேசி கீழே நிலத்தில் வைத்தார். குஷியாய் நிலவின் ஒளியை உறிஞ்சியது இம்வாலா.
சிதம்பரம் ஏதோ பில்லி, சூனியம் செய்வது போல் மறைவாய் நின்றவர்கள் அவரை பயந்து பார்த்திருந்தினர். எப்படியாவது இம்வாலாவை கைப்பற்ற வேண்டும் என்றும் திட்டம் தீட்டினர்.
அதை எப்படியோ தெரிந்து கொண்ட சிதம்பரம் போலி இம்வாலா ஒன்றை உருவாக்கி, உண்மையான இம்வாலாவை யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் போய் மறைத்து வைத்து விட்டார். அதன்பின் இம்வாலாவை அவர் வெளியே எடுக்கவே இல்லை.
பஞ்சாயத்துத்தலைவர் போலி இம்வாலாவைத் திருட முற்பட, அவருக்கு தண்ணி காட்டிவிட்டு மூக்குத்தி அதை எடுத்துக்கொண்டு ஊரைவிட்டே ஓடிவிட்டான்.
மக்களும் காலப்போக்கில் ப்ரோடோஸையும் இம்வாலாவையும் மறந்துவிட்டனர்.
ஆனால், சிதம்பரம் மட்டும் மறக்கவில்லை. ப்ரோடோஸை தன் மூத்தப்பிள்ளையாய் நினைத்து அவனைப் புதைத்த இடத்தில் கல்லறை எழுப்பினார். தன் குலதெய்வம் என்று அவனை பூஜித்தும் வந்தார்.
பள்ளிப்படிப்பு முடிந்த உடனேயே கல்லூரியில் சேர்ந்துவிட்ட சத்யமூர்த்திக்கு இந்தக்கதை எதுவும் தெரியாது. சிதம்பரமும் தங்கப்பழமும் அவனிடம் சொல்லத் துணியவில்லை.
கொடுக்கலும் வாங்கலும் தொடரும்