அத்தியாயம் 4
நாம் முதன்முறை சந்தித்தது போலவே ஒருவர் கடைசிவரை நம்மிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்!
அதை நான் பின்பு தான் உணர்ந்தேன். மகளிர் டாட் காம் உரிமையாளர் மீது முதன்முறை நான் கொண்டிருந்த அபிப்பிராயம் வேறு, இப்போதிருப்பது வேறு.
முன்பு அவர், இந்த குடும்ப நாவல்களில் வருகிற நாயகர்கள் ஏன் தங்கள் மனைவிகளை கையருகில் வைத்துக்கொண்டு காயடிக்கப்பட்டவர்கள் போல் விலகியிருந்து வேடிக்கைப் பார்க்கிறார்கள்? என்றபோது அதிலொரு நியாயம் இருப்பதாகத் தோன்றியது.
ஆனால், இப்போதெல்லாம் அவர் எது சொன்னாலும் அதில் ஒரு சுயநலம் குடிக்கொண்டிருப்பதாகவேத் தோன்றுகிறது. ஒருவேளை நான் நினைப்பது தவறாகவும் இருக்கலாம். ஆனால், எனது எண்ணங்களை மெய்ப்பிப்பது போலவே சில வேலைகள் அரங்கேறிக் கொண்டிருந்தன.
அந்த அதிர்ச்சி தரும் அறிவிப்பை மகளிர் டாட் காம் ஃபேஸ்புக் குழுவில் தான் நான் முதன்முதலில் பார்த்தேன்.
"வாசக நெஞ்சங்களே! நாவல் உலகின் முடிசூடா மன்னன், காதல் கதைகளின் கண்ணன், திரு.பல்லவி மனோ நமது மகளிர் டாட் காமில் காதல் ரசம் சொட்டச்சொட்ட ஒரு புதிய கதை எழுதவிருக்கிறார். அவருக்கு உங்கள் கருத்துக்களையும், லைக்குகளையும் கஞ்சத்தனமில்லாமல் வாரி வழங்குங்கள்"
பல்லவி மனோவா? மீண்டும் நன்றாகப் பெயரை உற்றுப்பார்த்தேன். சந்தேகமேயில்லை! அவர் தான். பல்லவி மனோவின் கதைகளை மட்டும் நான் வாசித்திராவிட்டால் இன்னும் கட்டிப்பிடித்தாலே குழந்தை பிறந்துவிடும் என்று தான் நம்பிக் கொண்டிருந்திருப்பேன். பள்ளியில் பயோலஜி க்ரூப் எடுக்காத - நண்பர்கள் முதற்கொண்டு யாரிடமும் கலவி பற்றி பேச விரும்பாத - பார்ன் வீடியோ பார்க்க முயலாத - என்னைப் போன்ற ஒரு சாமியாரிணிக்கு அவரின் புத்தகங்கள் எல்லாம் ஒரு வரப்பிரசாதம் என்று ஆதியில் நான் எண்ணியதுண்டு.
அவர் இங்கு மகளிர் டாட் காமில் என்றால் என்னால் நம்பவே முடியவில்லை. பரபரப்புடனே வாட்ஸப் குழு சென்று பார்த்தேன். என்னைப்போலவே பலரும் அதற்கு அதிர்ச்சி தெரிவித்திருந்தார்கள். ஆனால், மாதாஜி அதற்கு அளித்த பதில் தான் என்னால் ஜீரணிக்க முடியாததாக இருந்தது. மீண்டும் என் கண்கள் அந்த பதிலையே வெறித்துக் கொண்டிருந்தன.
"ஆள் ரொம்ப கட்டுப்பெட்டிப்பா. நீங்க கேட்கிற அமௌண்ட் எல்லாம் தர முடியாது, இவ்ளோ தான் முடியும்னு அடிச்சிப்பேசி நம்ம வெப்சைட்டுக்கு கூப்ட்டுட்டு வந்துட்டேன். புதுக்கதை போடப்போகுது சிங்கம், என்ஜாய்"
இப்போது இதற்கு அவசியம் தான் என்ன? யாராவது கேட்கிறார்களா பார்! ஆஹா! ஜில்லு டைப்பிங் என்று வருகிறது.
"மாதாஜி, ரொமான்ஸ் ரொம்ப தூக்கலா இருக்கணும்னு சொல்லிருங்க. ஹிஹி"
"மொத நம்ம சிங்கம் எழுத ஆரம்பிக்கட்டும். பின்னாடி பேசி மடக்கி நமக்கு வேணுங்கிறதை வாங்கிறலாம்"
"மாதாஜி, ஆள் பாக்க எப்படி?"
"ஜில்லு, இன்னும் நானே ஆளைப் பாக்கல. போன்ல மட்டும் தான் பேசி பேங்க் அக்கவுண்ட் நம்பர் வாங்கியிருக்கேன்"
"எப்படியாவது போட்டோ வாங்குங்க மாதாஜி. பிரேம் பண்ணி என் வீட்டு பூஜை ரூம்ல மாட்டனும்"
"வாங்கிரலாம். வாங்கிரலாம்"
ச்சை! இப்பவும் எனக்கு தோன்றுவது ஏன் மற்றவர்களுக்கு தோன்ற மாட்டேங்கிறது? வெளியிலிருந்து ஒரு எழுத்தாளரை இப்போது காசு கொடுத்து அழைத்து வரும் அவசியம் தான் என்ன?
இறுதியாக ஒரு எழுத்தாளர் சொன்னார்: "மாதாஜி, இனி நம்ம சைட்ல தான் ரீடர்ஸ் பலாப்பழத்துல ஈ மொய்க்கிற மாதிரி மொய்க்கப் போறாங்க"
எனக்கும் அது உண்மை என்றேத் தோன்றியது.
***********************
பல்லவி மனோ வந்ததிலிருந்தே அவர் புராணம் தான் வாட்ஸப் குழுவில்.
யாராவது ஒருவர், "பல்லவி மனோ இன்னைக்கு எபிசோட்ல ரொமான்ஸ் சும்மா பின்னி எடுத்துட்டாரு, மாதாஜி" என்றால் போதும், உடனே அதற்கே காத்திருந்தாற்போல, "சும்மாவா, இதுக்கு மட்டும் ஆயிரம் ரூபா அனுப்பியிருக்கேன்." என்று தான் ரூபாய் அனுப்பிய ஸ்க்ரீன்ஷாட்டோடு வந்துவிடுவார் மாதாஜி.
அவரது தள விளம்பரத்திற்காக அவர் செலவு செய்கிறார். அதற்காக நாங்கள் வாயைப் பிளக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறாரா என்ன? அதிலும் அந்த ஸ்க்ரீன்ஷாட் உரையாடல்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கும். நேற்றுக்கூட ஒரு ஸ்க்ரீன்ஷாட் பார்த்தேனே, எப்படி?
"நேற்றைக்கும் இன்றைக்கும் சேர்த்து ரெண்டாயிரத்து நூறு ரூபாய் அனுப்பிவிட்டேன் சார். காதல் காட்சிகள் கொஞ்சம் அதிகமாக வேண்டுமென்று வாசகர்கள் கேட்கிறார்கள்."
அது சரி, வாசகர்கள் கோரிக்கையா அது?
அதற்கு ஸ்மைலியுடன், "அடுத்த அத்தியாயத்தில்" என்றிருந்தார், அந்தக் காதல் இளவரசர்.
மானக்கேடு! இன்றைய ஸ்க்ரீன்ஷாட் இன்னும் மோசம்.
"இன்றைய அத்தியாயம் படித்து பித்துப்பிடித்து அலைகிறார்கள் எங்கள் வாட்ஸப் குழு உறுப்பினர்கள். ஹாஹாஹா, அத்தியாயம் பெரிது? ஆயிரத்து முந்நூறு ரூபாய் அனுப்பிவிடுகிறேன்."
இதுவரை இதுபோல் ஐந்து ஸ்க்ரீன்ஷாட்டுகள் பகிரப்பட்டுள்ளன. எனக்கு வெறுப்பெல்லாம், நானும் பல்லவி மனோவும் ஒரே இடத்தில் எழுதுகிறோம். இருவரின் கதைக்கும் ஒரே அளவில் தான் பார்வைகள் வருகின்றன. ஆனால், அவர் பணம் வாங்கிக்கொண்டு எழுதுகிறார். நான் வாங்காமல் எழுதுகிறேன்.
இதற்குக் காரணம், அவர் கட்டிலறைக் காட்சிகளை தத்ரூபமாக கண் முன் கொண்டுவருவதென்றால்... ச்சை! பாழாய்ப்போன என் கைக்கு ஏன் உச்சியில் திராட்சை வைத்த இரு பனிக்கூழ் கிண்ணங்கள், முக்கோணப் பெட்டகம், பெட்டகத்தை திறக்கும் மந்திரக்கோல் என்றெல்லாம் எழுத வரமாட்டேங்கிறது? இல்லை, நான் இப்படி நிலையின்றி தவிப்பது முறையில்லை. மகளிர் டாட் காமிடம் பணத்தை எதிர்பார்த்து நான் சேரவில்லை. அப்போது நான் இப்படி புலம்புவதும் நியாயமில்லை. ஆனால், மற்றவர்களைப் போல் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லையே. இப்போது என் பிரார்த்தனையெல்லாம் நான் துரோகியாக எதையும் உளறிவிடக்கூடாது என்பது தான்.
**************
இன்று திடீரென்று ஒரு மாற்றம். இதுநாள் வரை அந்த ஃபேஸ்புக் குழுவில் நாங்கள் எல்லோரும் தான் புழங்கிக் கொண்டிருந்தோம். மொத்தம் பனிரெண்டாயிரம் பேர் அந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறோம்.
மகளிர் டாட் காமில் அத்தியாயம் பதிவிட்ட உடனேயே நான் அங்கு வந்து இத்தனையாவது அத்தியாயம் பதிவிட்டாயிற்றென்று டமாரமடித்து விடுவேன்.
ஆனால், இன்று குழுவின் தலைப்பான 'மகளிர் டாட் காம்'மை மாற்றிவிட்டு 'மாதாஜி நாவல்ஸ்' என்று வைத்திருக்கிறார் குழுவின் அட்மின்.
எப்போதும் போல யாரும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஒருவேளை பல்லவி மனோ வந்த மகிழ்ச்சி கூட அதற்கு காரணமாக இருக்கலாம். ஆமாம், அடுத்து அந்தக் குழுவில் இணையப்போகும் அப்பாவிகளுக்குத் தெரியுமா? அது மாதாஜியின் நாவல்களுக்காக சேர்ந்த கூட்டமல்ல, மகளிர் டாட் காம் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த உழைப்பில் சேர்ந்த கூட்டமென்று. முதலில் நான் இவ்வாறு ஒரு துரோகியைப் போல் யோசிப்பதை நிறுத்த வேண்டும்.
************
இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று புதிதாக ஒரு பிரச்சனை. இல்லையில்லை நானே அதை என் தலையில் எடுத்துப் போட்டுக்கொண்டேன். மாதாஜியின் நாவலை அந்த வாசகர் எப்படி விமர்சித்தால் எனக்கென்ன என்று தான் நானும் மற்ற பாவனை அப்புராணி எழுத்தாளர்களைப் போல் இருந்திருக்க வேண்டும். ஆனால், ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். உங்களுக்கு அவர் நாவலை வாசிக்கப் பிடிக்கவில்லையென்றால் நிறுத்திவிடுங்கள்; அதை விட்டுவிட்டு இப்படித்தான் வயதில் பெரியவர்களை மரியாதையில்லாமல் பேசுவீர்களா? என்று எகிறிவிட்டேன்.
அந்தப்பெண் மீம் கிரியேட்டர் போலிருக்கிறது. முதலில் மாதாஜியை மட்டுமே கிண்டல் செய்து கொண்டிருந்தவள், பிறகு, என்னையும் சேர்த்து குதற ஆரம்பித்துவிட்டாள்.
இந்தப் பிரச்சனையின் சுழி என்னவென்பது ஆரம்பத்தில் எனக்கு விளங்கவில்லை. மாதாஜி ஸ்க்ரீன்ஷாட் அனுப்பியபோது தான் கொஞ்சம் புரிந்தது. அந்தப்பெண் யாரோ புது வாசகர் போலிருக்கிறது. மாதாஜியின் ப்ரொஃபைலில் எழுத்தாளர், பதிப்பாளர் என்றிருப்பதை பார்த்ததும் உள்பெட்டி வந்து, "உங்கள் நாவலை வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன். லிங்க் தருகிறீர்களா?" என்று கேட்டிருக்கிறாள்.
சில புத்திசாலிகள் இப்படித்தான்! எழுத்தாளரின் டைம்லைனில் இரண்டு பதிவுகளை நகர்த்தினாலோ, கூகுளை தட்டினாலோ கிடைத்துவிடும் சமாச்சாரத்திற்கு எழுத்தாளரை வந்து குடைந்துக் கொண்டிருப்பார்கள்.
மாதாஜியும் பின்விளைவை அறியாமல் உற்சாகமாக லிங்க் அனுப்பியிருக்கிறார். வெறும் மூன்றே மூன்று அத்தியாயங்களை மட்டும் வாசித்தவள் கடந்த நான்கு நாட்களாக இடைவெளியேயின்றி கதையையும், மாதாஜியையும் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறாள்.
என்ன தான் நான் ஒரு எழுத்தாளராக மாதாஜியின் பக்கம் நின்றாலும் ஸ்க்ரீன்ஷாட்டைப் பார்த்தபோது முதலில் வார்த்தை மீறியிருப்பது மாதாஜியே என்று அப்பட்டமாகத் தெரிந்தது.
அந்தப்பெண் அப்படி என்ன சொல்லிவிட்டாள்? குடும்ப நாவலென்று நினைத்து தான் உங்கள் நாவலை வாசித்தேன். ஆனால், உள்ளே இப்படி பச்சை பச்சையாக எழுதி இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. குறைந்தபட்சம் முதல் பக்கத்தில் 'இது பதினெட்டு வயதுக்கு மேற்பட்டோருக்கானது' என்றிருந்தால் கூட நான் கொஞ்சம் சுதாரித்திருப்பேன் என்றிருக்கிறாள்.
அதற்கு மாதாஜி எடுத்த எடுப்பிலேயே, மரியாதையின்றி பேசியிருக்கிறார்.
"நீ எந்த வெப்சைட்காரிடி? எவடி உன்னை என்கிட்ட சண்டையிழுக்க அனுப்பினா? என் வெப்சைட்ல நான் என்ன வேணும்னாலும் எழுதுவேன்! எப்படி வேணும்னாலும் தலைப்பு வைப்பேன். அதை கேட்க நீ யாருடி? உன்னை அனுப்பினவக்கிட்ட உன் பருப்பு என்கிட்ட வேகலைன்னு சொல்லுடி"
"ஏங்க, என்னங்க மரியாதையில்லாம பேசுறீங்க? அது சரி, சுத்தி விசாரிக்காமக் கொள்ளாம உங்கக் கதையை வாசிச்சது என் தப்பு தாங்க. யாரும் என்னைத் தூண்டிவிட்டு நான் அப்படி சொல்லல. உங்கக்கதையோட லட்சணம் தான் என்னை அப்படி சொல்ல வச்சது" என்றுவிட, மாதாஜிக்கு கோபம் எல்லைமீறி விட்டது.
"ஏய், ஏவல் நாயே! எவளோட ஃபேக் ஐடி டி நீ? நானே, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன். ஏன்டி உங்க அரிப்புக்கு என்கிட்ட வர்றீங்க?" என்று சகட்டுமேனிக்கு திட்டியிருந்தார்.
பிடித்தது சனி, அந்தப்பெண் இப்போதுவரை அவள் வாசித்த அந்த மூன்று அத்தியாயங்களையுமே அக்குவேராய் ஆணிவேராய் பிரித்து மீம் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறாள்.
முதல் மீமின் போது இந்த உள்பெட்டிப்போர் எங்களுக்கு தெரியாதென்பதால் எங்களில் பலரும் அவளின் பதிவிற்கு லைக் போட்டு சிரித்து வைத்திருந்தோம். அவள் மாதாஜியின் தீவிர வாசகி என்றே நாங்கள் நினைத்தோம். பிறகு, மாதாஜி சொன்னபோது தான் எங்களுக்கு விஷயமே தெரிந்தது. உண்மையில் நாங்கள் சிரித்து வைத்த மீமைப் பார்க்கும் யார்க்கும் அது மாதாஜியை கேலி செய்யும் மீம் என்றேத் தெரியாது.
இந்தக் கொடுமையில் அந்தப் பெண்ணுக்கு எதிராக கட்டுரை ஒன்றை வேறு எழுதினேன் நான். எல்லாம் மாதாஜியின் மேலுள்ள விசுவாசம். ஃபேஸ்புக்கில் போடும் முன்பாக வாட்ஸப் குழுவிற்கு அனுப்பி எப்படி இருக்கிறதென்று விசாரித்தேன். மாதாஜி வாசித்துப் பார்த்துவிட்டு என் மீது அன்புமாரி பொழிந்தார்.
"ஷிவானிம்மா, நீ புதுசுடா. நீ இதுலயெல்லாம் தலையிடாத. அப்புறம் நாய்க உன் மேல பாய்ஞ்சிடும். இப்போ தான் தெரிஞ்சது, அந்த தமிழரசி டாட் காம்மோட ஏவல் நாய் தான் இவ. நானே இவளுங்களை போஸ்ட் போட்டு சமாளிச்சிக்கிறேன்டா" என்றார்.
இதுவும் நல்லதுக்குத்தான்! "சரிங்க மேம்"
ஆனால், அவர்களை எதிர்த்து மாதாஜிப் போட்ட பதிவுகள் எல்லாம் மூன்று தர வசவுகள். "அமேசான் கிண்டில்ல கறவை நின்னு போன மாடுக, தொடர்ந்து எழுத முடியாம மேல் மாடியில சரக்கு காலியான நாய்க, பொ**ரிப்புல என் பக்கம் வர்றீங்களாடி! உங்க ஐடி மேல எல்லாம் போலீஸ் கம்ப்ளைன்ட் குடுத்துருக்கேன்டி. ஸ்டேஷனுக்குப்போக ரெடியா இருங்க" என்று ஏகபோகமாக திட்டியிருந்தார்.
இதில் 'பொ**ரிப்பு' என்கிற வார்த்தைப் பிரயோகத்தை பார்த்ததும் எனக்கு பக்கென்று இருந்தது. மாதாஜி இப்படியெல்லாம் பேசி ஏன் அவருடைய மாண்பை அவரே குலைத்துக்கொள்கிறார்? எனவும் கோபமாக வந்தது. இதை அவரும் உணர்ந்திருந்தாரோ என்னவோ, மறுநாளே ஒரு ஃபேஸ்புக் பதிவில் என்னையும், இன்னும் நான்கு புதிய எழுத்தாளர்களையும் டேக் செய்து, "என்னிடம் பயன் பெற்றவர்கள் அனைவரும் என்னைப்பற்றி போஸ்ட் போடுங்கப்பா" என்றார்.
ஓ! தனது இறங்கிப்போன பிம்பத்தை மேலேற்றிக்கொள்ளப் பார்க்கிறார். இது ஒரு அநாகரீகமான கோரிக்கையாகவே எனக்குத் தோன்றினாலும், அவர் அப்படி, இப்படி, தன் தளத்தில் நான் கேட்டதும் எழுத சம்மதித்த தங்கத்தாரகை, பிழை திருத்திய பிதாமகள், இன்னும் மானே தேனே என்றெல்லாம் போட்டு அவரை மகிழ்வித்தேன்.
ஆனால், அதிலும் ஒரு சங்கடம் நேர்ந்தது. எனது வகுப்புத்தோழி ஒருத்தி அந்தப்பதிவை பார்த்துவிட்டு, "ஷிவானி, நீ சொன்ன அந்த ரைட்டர் ஸ்டோரிய வாசிச்சிருக்கியா?" என்றாள்.
நான் வாசித்திருந்தாலும் கள்ளத்தனமாக பதிலளித்தேன்.
"இல்ல, வாசிச்சதில்ல. ஏன் கேட்கிற?"
"இல்லப்பா, நீ உன் ஸ்டோரி லிங்க் அனுப்புனியா? அப்போ தான் வெப்சைட்டுக்குள்ளப் போய் மத்த ஸ்டோரீஸ் படிக்க ட்ரை பண்ணினேன். யாரோ பல்லவி மனோவாம், ரொமான்ஸ் ஸீன் எல்லாம் ரொம்ப டீப்பா எழுதியிருந்தாங்க. நான் சொல்றது புரியுதா? டீப்பான்னா டீ...ப்பா. பட், உன் ஸ்டோரில எல்லாம் கம்மி தான். நான் தான் வாசிச்சிருக்கேனே! ஆக்சுவலி, உன் ஸ்டோரிய என் ஸ்கூல் ஃப்ரெண்டுக்கு அனுப்பி வாசிக்க சொல்லலாம்னு நினைச்சேன். பட், பல்லவி மனோ ஸ்டோரி இப்படியிருக்கவும், அவ என்னை தப்பா நினைச்சிருவாளோன்னு அனுப்பல. ஆமா, உனக்கெப்படி இந்த வெப்சைட் ஓவ்னர் கூட பழக்கமாச்சு?"
இதைத் தெரிந்துகொண்டு இந்த சண்டாளி என்ன செய்யப்போகிறாள்? எப்படி சிரித்துக்கொண்டே என் தலையில் பீக்கூடையை கவிழ்த்த முடிகிறது இவளால்? இனி இவளுடன் பேசவேக்கூடாது. பார்க்கிறாள்! பார்க்கிறாள்!
"என் ஃப்ரெண்ட் ஒருத்தவங்க மூலமாத் தெரியும்"
கடைசிவரை நான் தான் எனக்குத் தோழி என்பதை மட்டும் இவளிடம் சொல்லவேக்கூடாது.
_________________
கருத்துமழைப் பொழிந்து தேவர்களாக விரும்புகிறவர்கள் கீழே உள்ள சொர்க்கத்தை அணுகவும்
கருத்துத்திரி,
சொர்க்கம்