Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான அத்தியாயம் இருபத்தொன்பது இதோ...
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 29


விக்கியின் கடந்தகாலத்தை பொறுமையாய் கேட்டுக் கொண்டிருந்த உத்ரா திடீரென அவனை நிறுத்தினாள்.

“ஒரு நிமிஷம்! உண்மையாவே நீங்க ரெண்டுபேரும் லவ் பண்ணீங்களா இல்லையாடா? கேவலமா இருக்கு உன் கடந்தகாலம். இந்த காதல் கதைக்கு தான் சார் தாடி வளத்து வண்டி வண்டியா குடிச்சீங்களோ? தெளிவா ஒருப்பொண்ண டூர் கூட்டிட்டுப் போய் மேட்டர முடிச்சிருக்க. அதுல அவ கன்சீவாகி அவ அம்மா குறுக்க வந்ததும் இதான் சாக்குனு அவள நீயே கழட்டி விட்டிருக்க. உண்மைய சொல்லு இதான நடந்தது?” எனவும்,

“இப்ப புரியுதா இவ்வளவு நாள் நான் ஏன்‌ என் கடந்தகாலத்த உன்கிட்ட சொல்லலனு? நான் என் அப்பா சொன்னதுமே அவள தல மொழுக நெனச்சிருந்தா அவ வீட்டுக்குப்போய் கெஞ்சியிருக்க மாட்டேன். அப்ப அவ அம்மா ஒரு புழுவப் பாக்கற மாதிரி பாத்தாங்க. நான் அவ கர்ப்பமா இருக்குறத சொல்லிக்கூட அவங்க மனசு எறங்கல.

சிம்ப்ளா அதுனால என்ன? ஜெயகாந்தனோட அக்னிப்பரீட்சை படிச்சதில்ல? நெட்பிளிக்ஸ்ல கௌதம்மேனன் எடுத்த வான்மகள் ஷார்ட்ஃபிலிம் இருக்கும், போய்ப்பாரு. எம்பொண்ண எப்படி சுத்தப்படுத்தனும்னு எனக்கு தெரியும். நீ இப்ப மரியாதையா என் வீட்ட விட்டு வெளியப் போயிருன்னு அசிங்கப் படுத்திட்டாங்க. அதுக்கூட பரவாயில்ல. அவ சொன்னத தான் என்னால தாங்கவே முடியல உதி. ஏன் இன்னும் ஒடம்புக்கு காத்துருக்க பொணந்திண்ணி கழுகு மாதிரி என் பின்னாடியே சுத்துறீங்க? நீங்க‌ என் முன்னாடி நிக்கிற ஒவ்வொரு நிமிசமும் கழிவ அள்ளி அப்புன மாதிரி அருவருப்பா இருக்குனு சொல்லிட்டா. அதுலயே செத்துட்டேன் நான்.”

“அப்போ கொழந்தைய கலைச்சிட்டாளா அவ?”

“ஆமா” ஆறியதாக நினைத்த காயத்தில் யாரோ கத்தியைக் கொண்டு கீறுவது போல் வலித்தது அவனுக்கு.

“அவ அம்மாவுக்காக சட்டுன்னு உன்ன பிரிஞ்சுப்போனத தான் உன்னால தாங்கிக்கவே முடியல இல்ல?”

“அப்ப என் ஆஃபிஸ்ல இருந்த ஒவ்வொருத்தரும் என்ன பாத்த பார்வ இருக்கே? உன்ன மாதிரி தான் அவங்களும் நான் அவள கைக்கழுவிட்டதா நெனச்சாங்க. உனக்குக் கீழ வேலைப் பாக்கறவங்களுக்கு உம்மேல உள்ள மரியாத கொறயும்போது வர்ற ஃபீல் இருக்கே? கொடும உதி!

அப்ப அப்பாவுக்கும் ஒடம்பு சீரியஸானதால என்னால வேலைல சரியா ஃபோகஸ் பண்ண முடியல. என் கேர்லெஸ்னெஸ்ல கம்பெனிக்கு வர வேண்டிய ரெண்டு பெரிய ப்ராஜெக்ட்ஸ் கைநழுவிப் போயிடுச்சு. அதுக்கப்பறம் அந்த கில்டினஸ்லயே எனக்கு ஆஃபிஸ் போகவும் புடிக்கல. எல்லாத்தையும் மகேஷ்கிட்ட ஒப்படைச்சிட்டு எதுக்கு பொறந்தோம், எதுக்கு வாழ்றோம்னு பைத்தியக்காரன் மாதிரி திரிய ஆரம்பிச்சிட்டேன்.”

“நீ ஆசை ஆசையா உருவாக்கின கம்பெனிய ஒரு சின்ன சறுக்கல் வந்ததும் இன்னொருத்தர் தலைல தூக்கிவச்சிட்டு வந்தது கெட்டிக்காரத்தனம் கெடையாது விக்கி. அப்பறம் இப்ப தான் அனன்யாவோட அம்மா இல்லயே, இப்ப அவள நீ ஏத்துக்கறதுல என்ன ப்ராபளம் உனக்கு?”

“என்ன இன்னும் உன் அறிவு வெளியப் பொங்கி வழியலையேனு நெனச்சேன். வழிஞ்சிருச்சி. ஒரு தடவ அந்த பாம்புக்கிட்ட கொத்து வாங்குனதே போதும்னு இருக்கு. ஆளவிடு!”

“உன் கதைய தாட் பிராஸஸ் பண்ண எனக்கு கொஞ்சம் டைம் வேணும் விக்கி. ஆமா அனன்யாவோட அம்மா எப்படி எறந்தாங்க?”

எப்போதும் தன் மேல் நம்பிக்கையின்றி பேசுபவளைக் கண்டு அவனுக்கு சலிப்பாயிருந்தது.

“நீ டிடெக்டிவ் தான? கண்டுபுடி.” என்றான் சவாலாக.

“நீ‌ சொன்னதும் தான் ஞாபகம் வருது விக்கி. நம்ம டிடெக்டிவ் ஏஜென்சி இப்ப என்ன கன்டிஷன்லடா இருக்கு?”

“வேலையெல்லாம் இன்னும் டூ டேஸ்ல முடிஞ்சிரும். நாறிப்போன பேரக் காப்பாத்த யாராவது பெரிய செலப்ரிட்டியா கூட்டிட்டு வந்து இனாக்ரேட் பண்ண வேண்டியது தான். உனக்கு ஏதாவது ஐடியா இருந்தா சொல்லு? அப்பறம் சொல்ல மறந்துட்டனே. என் வீட்ல உனக்கு ஒரு முக்கியமான ஆள இப்ப இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கப்போறேன்” என்று எழுந்து வெளியே சென்றவன் உள்ளே வரும்போது ஒரு நாயோடு வந்தான்.

அதன் பெயர் ஜான்சீனாவாம். அதைப் பார்த்ததும் முகத்தை சுளித்தாள் உத்ரா.

“எனக்கு டாக்ஸே புடிக்காதுடா” என்று பதறி மெத்தை மேல் ஏறினாள்.

அதுவோ அவளை விடாமல் துரத்தியது. அதட்டி அதனை தன் பக்கம் நிறுத்தியவன் ஏமாற்றமாக வெளியே‌ கொண்டுபோய் கட்டி வைத்துவிட்டு வந்தான்.

மதியம் கீழே சாப்பிட வருமாறு வேலைக்காரப் பெண்மணி பாக்கியம் வந்து அழைத்துவிட்டுச் செல்ல, உத்ராவின் அலைபேசி கிணுகிணுத்தது. கவிலயா தான் அழைத்திருந்தாள். உத்ராவை நினைத்து கலங்கும் தங்கள் அன்னைக்கு அழைப்பு விடுத்துப் பேசுமாறு அவள் கூற, உத்ரா விக்கியின் கடந்த காலத்தை மனம் பொறுக்காமல் அவளிடம் கொட்டினாள்.

கவிலயா தான் பெரிய கண்டத்திலிருந்து தப்பித்த உணர்விலிருந்தாள்.

உத்ரா, “என்ன சத்தத்தையே காணோம்?” என்றிட, அவளுக்கு புகழாரம் சூட்டினாள்.

“சின்ன வயசுலயிருந்து எனக்கு எவ்வளவோ நல்லது பண்ணிருக்கக்கா. ஆனா, இப்ப நீ எனக்கு பண்ணிருக்க நல்லது இருக்கே.. ஜஸ்ட் மிஸ்ல நா விழ வேண்டிய குழிக்குள்ள நீ விழுந்துருக்கக்கா. இந்த நன்றிகடன நான் எப்படி அடைக்கப்போறேனு தான் தெரியல. அப்பறம் அன்னைக்கு நான் சொன்னனே தியாகத்தலைவி பட்டம் எனக்கு தான்னு? தப்பு! ரொம்பத் தப்பு! நான் சொன்ன அந்த வார்த்தைய நானே வாபஸ் வாங்கிக்கறேன். அந்த பட்டம் என்னைக்குமே உனக்கு தான் க்கா.” என்றவளை,

“செருப்பு பிஞ்சு போகும் உனக்கு. தியாகத்தலைவி பட்டமா குடுக்குற? மொதல்ல அம்மாக்கிட்ட பேசிட்டு வந்து உன்ன வச்சிக்கிறேன்டி.” என்று அழைப்பை துண்டித்துவிட்டு தன் அன்னைக்கு அழைத்தாள்.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
பானுமதி தன் மகள் அவளின் புகுந்த வீட்டிலிருந்து பேசுகிறாள் என்றதும், “வேணியம்மா என்ன சொன்னாங்க உதி? உன்ன எதுவும் திட்டிரலயே? மாப்பிளையும் அவங்களும் ரொம்ப சண்டப் போட்டுக்கிட்டாங்களா?” என்று படபடத்தார்.

“ம்மா கழுதைக்கு வாக்கப்பட்டாச்சி. ஒத வாங்க‌ப் பயப்பட்டா எப்படி? அந்தம்மா வழக்கம் போல ரெண்டு ஒத விட்டுட்டுப் போயிட்டாங்க.”

“உதி என்னயிது? கழுதை, அந்தம்மா இந்தம்மான்னுக்கிட்டு? அழகா அத்தனு கூப்ட்டு பழகு அவங்கள.”

“ஓஹோ! சம்பந்திக்கு வக்காலத்தா? நீங்க நடத்துங்க.”

“நீ நல்ல விதமா நடந்துக்கிறத வச்சி தான் நாங்க அந்த வீட்டுக்கு வந்துபோறது இருக்கு உதி. இன்னும் வெவரமில்லாமயே நடந்துக்காத”

“ஷப்பா! போதும்மா உங்க லெக்ச்சர். சாப்ட வேண்டிய மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்ட்டீங்களா?”

“அச்சோ! உன்னப் பத்தியே யோசிச்சிட்டு இருந்ததுல மாத்திர போடவே மறந்துட்டேன் உதி. இப்பவே போய் போடுறேன். ஆமா நீ லஞ்ச் சாப்ட்டியா? நேரம் தாண்டப்போகுதே?” என கவலைகொள்ளவும்,

“இதோ சாப்டப் போறேன். உங்களுக்கு ஒரு கால் பண்ணிட்டு போலாமேனு தான் வெயிட் பண்ணேன்.‌ சரிம்மா, நான் அப்பறம் பேசறேன்” என்றவள் தனது அலைபேசியோடு கீழே வர, சாப்பாட்டு மேசையில் தனது அன்னை ஒரு மூலையில் அமர்ந்திருக்க தானொரு மூலையில்‌ அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான் விக்கி.

“சோத்துமூட்ட! எனக்காக வெயிட் பண்றானா பாரேன்?”

உத்ரா முணுமுணுத்துக்கொண்டே அவன் அருகில் சாப்பிட அமர, “புருசன் சாப்ட்டதுக்கப்பறம் தான் பொண்டாட்டி சாப்டனும்.” என்றார் வேணி.

அவர் யாரிடமோ பேசிக்கொண்டிருப்பது போல் தட்டை திருப்பி வைத்து சாதத்தை தனக்கு பரிமாறிக்கொண்டாள் உத்ரா.

“டேய் விக்கி! நான் உங்கக்கிட்ட‌ தான்டா பேசிட்டிருக்கேன். அவள நாம சாப்ட்டதுக்கப்பறம் சாப்ட சொல்லு”

‘கொய்யால சொல்லிருவியா நீ?’ என்பது போல் பார்த்தாள் உத்ரா.

இருவரிடமும் மாட்டிக்கொண்டு விழித்தான் விக்கி.

“மாம் நான் வேணும்னா இனிமே அவளுக்கு‌ பசிக்கறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே சாப்ட்டுடுறேன். இன்னைக்கு ஒருநாள் விட்ருங்க ப்ளீஸ்” என்று இறைஞ்சினான்.

“என்னடா விட்டா நீயே அவளுக்கு ஊட்டி விட்ருவ போல? இந்தப் பம்மு பம்முற?” எனவும்,

“விக்கி நான் என் நகத்துல நெயில்பாலீஸ் போட்டிருக்கேன். நீ‌யே எனக்கு ஊட்டிவிடுறியா ப்ளீஸ்?” என்று கொஞ்சினாள்.

“எங்க நீ தான் நெயில்பாலீஸே போடலையே?” என்றவன்‌ அவள் கைவிரல் நகங்களை ஆராய, கீழே அவன்‌ கால்விரல் மிதி வாங்கியது.

“நான் என் நெயில் கலர்லயே பாலீஸ் போட்டிருக்கதால உனக்கு தெரியல விக்கி.” என அவள் சிணுங்கிக்கொண்டே சொல்லவும், சாதத்தைப் பிசைந்து மேலும் கீழும் சிந்தியபடியே ஊட்டிவிட்டான்.

இடையிடையே வேண்டுமென்றே சாதத்தை அவள் முகத்திலும் அப்பிவிட்டான். அவர்களின் விளையாட்டில் பாதி சாப்பாட்டிலேயே அவ்விடத்தை‌விட்டு எழுந்து சென்றார் வேணி.

‘என்ன எழுப்ப நெனச்சீங்க. கடைசில உங்களையே போக வச்சிட்டேன். ஹாஹாஹா’ என்று வெற்றிக்களிப்பில் மிதந்தாள்.

அவர் விலகியதும், “போதும்டா! போதும்டா!” என்றவளின் பேச்சை கேளாமல் மேலும் மேலும் சாப்பாட்டை அவள் வாய்க்குள் திணித்து கதறவிட்டான் விக்கி.

பழைய சிரிப்பு அவன் முகத்தில் தவழ்வதை சமையலறை வாயிலில் ஒளிந்து நின்று பார்த்தார் பணிப்பெண் பாக்கியம்.

அன்றிரவு அலைபேசியில்‌ வெப்சீரிஸ் பார்த்துக்‌‌ கொண்டிருந்த ‌விக்கி அவள் தூங்க வருவதைக் கண்டதும் படுக்கையில் அவளுக்கு இடம்விட்டு‌ நகர்ந்து‌ படுத்தான்.

அவளும் தனது‌ அலைபேசியை நோண்டியபடியே மறுபுறம் வந்து படுத்தாள். கைகளும் கண்களும் அலைபேசியில் இருந்தாலும் நினைப்பு மட்டும் அனன்யாவைச் சுற்றி‌யே வந்தது. அவளிடம் விக்கி அவளுக்குத் தான் என்றுவிட்டு இன்று சட்டப்படி அவனுக்கு மனைவியாக ஒரே அறையில் படுத்துக்கிடப்பது அவளுக்குள்ளேயே குற்றவுணர்ச்சியை‌ உண்டாக்கியது.

ஒருவேளை அந்த தலைமையாசிரியர் தவறானவராக இருந்து அவரிடமிருந்து தன் அன்னையை காப்பாற்றவே அனன்யா‌ இப்படி நாடகமாடியிருந்தால்? அந்த தலைமையாசிரியரிடமிருந்து அவள் அன்னை விலகுவதாக சொன்னபோது அவன் கோபப்பட்டு அவரை கொலை செய்திருந்தால்? இப்போது யாருமற்ற அனாதையாக அவள் மீண்டும் விக்கியை சேர நினைத்திருந்தால்? என்று பல கேள்விகள் அவளுள் பிறந்த வ‌ண்ணமிருந்தன.

இது மட்டும் அவள் அருகில் படுத்திருப்பவனுக்குத் தெரிந்ததோ அவளை உண்டுயில்லை என்றாக்கியிருப்பான். நல்லவேளை தப்பித்தாள்.

இறுதியில் எது எப்படியாகினும் விரைவிலேயே அனன்யாவை சந்தித்து‌ தன் குழப்பங்களை தெளிவுபடுத்திவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள்.



கலைடாஸ்கோப் திரும்பும்…​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான அத்தியாயம் முப்பது இதோ...
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 30


உத்ரா அனன்யாவை பிடிக்கும் முன் உதய்கிருஷ்ணா அவளைப் பிடித்திருந்தான்.

தனக்கு முன் அழகுப்பதுமையாக உட்கார்ந்திருப்பவளிடமிருந்து கண்களை விலக்க முடியவில்லை அவனால்.

என்னவொரு அற்புதமான அழகு! வெள்ளைப்பூக்களிட்ட கத்தரிப்பூ வண்ண சிக்கன்காரி பருத்தி சுடிதார் அணிந்து, சிறிய பணப்பையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளின் பட்டுமுடிக்‌கற்றைகளோ காற்றில் முகத்தில் விழுந்த வண்ணமிருந்தன.

“சொல்லுங்க எதுக்காக என்ன நேர்ல பாக்கனும்னு சொன்னீங்க?”

“அதுவந்து.. உங்கப் பெரியப்பா எங்க வீட்டுல வந்து பேசுனதெல்லாம் உங்கக்கிட்ட சொல்லியிருப்பாரேங்க?”

“சொன்னாரு, சொன்னாரு” கீழேப் பார்த்து முணுமுணுத்தாள்.

“மறுபடியும் இந்த விசயத்த சிக்கலாக்கிக்க நான் விரும்பலங்க. அதான் உங்கக்கிட்ட நேர்லயே பேசிரலாம்னு வரச்சொன்னேன்.”

அவன் என்ன சொல்லப்போகிறான் என்கிற எதிர்பார்ப்பு தென்பட்டது அவள் முகத்தில்.

“நான் என் அக்கா விருப்பத்துக்கு மாறா எதுவும் செய்றதில்ல. என் விசயத்துல அவ கணிப்பு என்னைக்கும் தப்பாவும் போனதில்ல. இப்ப அவளோட எனக்கான சாய்ஸ் நீங்க. எனக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதங்க. உங்கப் பக்கம் எப்படி?” எனவும், இமைகளை வேகமாகத் தட்டினாள்.

“நீங்க என்ன சொல்றீங்க? உங்களுக்கு ஏற்கனவே உத்ரா கூட எங்கேஜ்மெண்ட் நடந்தது தான? எப்படி அவங்கள விட்டுட்டு உடனே என் பக்கம் சாய முடியுது உங்களால? இப்ப நான் சம்மதிச்சு மறுபடியும் நம்ம கல்யாணத்துல ஒரு பிரச்சன வந்ததுனா வேற ஒருப்பொண்ணத் தேடி போயிருவீங்களா? எப்படி ஆன் ஆஃப் பண்ற மாதிரி டக்கு டக்குனு உங்க மனச மாத்திக்க முடியுது உங்களால?”

அவளின் எதிர்வினையில் திகைத்து நின்றவன், “உத்ராவ முன்னாடியே தெரியுமாங்க உங்களுக்கு?”என்றான்.

“தெரியும். என் பெரியப்பாவும் நானும் சேர்ந்து தான் அவங்கக்கிட்ட கேரக்டர் ரிபோர்ட் கேட்டுப் போயிருந்தோம். அன்னைக்கு தெப்பக்குளத்துல கூட நீங்க ரெண்டுபேரும் ஜோடியா நடந்து வந்தீங்கல்ல? என்னப் பாத்ததும் கோபமா விறுவிறுனு கிராஸ் பண்ணிட்டீங்க. இப்ப உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையா? இந்த கேரக்டர் ரிபோர்ட் மேட்டர வச்சு? ஒருவேள அதுதான் பிரச்சனைனா நீங்க அவங்கள விட்டுப் பிரியுறது ரொம்பத் தப்பு.” என்றாள்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததோ என்னவோ உத்ராவிற்காய் பரிந்துகொண்டு வந்தாள்.

“இல்லங்க, இப்ப அது இல்ல பிரச்சன. நீங்க இப்ப எதுக்காக அவங்கக்கிட்டப் போனீங்க? நான் எப்படி? என் பழக்கவழக்கம் எப்படினு தெரிஞ்சிக்கத் தான? இங்க உத்ராவோட பழக்க வழக்கமே தலைகீழா இருக்குதுங்க. கல்யாணத்துக்கு முன்னாடி ஒருப்பொண்ணு அந்நிய ஆம்பளையோட ஒரே ரூம்ல தங்குறது தப்பில்லையாங்க?”

மெதுவாக அவளின் இதயத்தில் ஆணி இறங்கியது. அவள் கண்களின் நீட்சியில் எதையும் அறிய முடியவில்லை அவனால்.

சிரமப்பட்டு தன்னை சமாளித்துக்கொண்டவள், “உங்களுக்கு எப்பயிருந்து உத்ரா பழக்கம்? நீங்க ரெண்டுபேரும் எப்படி கல்யாணம் வர போனீங்க? அவங்க இப்படினு எப்படி உங்களுக்கு தெரிய வந்துச்சி? அப்படி உங்கக்கிட்ட சொன்னவங்க தப்பாக்கூட சொல்லிருக்கலாம் இல்லையா?” என்று அடுக்கடுக்காய் கேள்விக்கணைகளைத்‌ தொடுத்தாள்.

“உத்ராவுக்காக நீங்க இப்படிப் பரிஞ்சு பேசுறதுலயே உங்க நல்லகுணம் தெரியுதுங்க. ஆனா அவ அதுக்கு தகுதியானவ கெடையாது. அவளப் பத்தி வேற யார் சொல்லியிருந்தாலும் நான் கொஞ்சம் யோசிச்சிருப்பேன். ஆனா அவ இப்படி பண்ணானு சொன்னது அவ அம்மாங்க. எங்க ஏரியால பழைய ஆளுங்கக்கிட்ட கேட்டா சொல்வாங்க பானுமதினா எப்படினு. மொதல்ல அவங்க எங்க ஃபேமலி ஃப்ரெண்டுங்க. உத்ராவப் பத்தி தெரியலைனாலும் அவங்களப் பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும். அவங்க பொய் சொல்ற டைப் கெடையாது. இதுக்கு மேல ஆதாரம் வேணுமாங்க?”

“உத்ரா அப்படி யார் கூட ஒரே ரூம்ல தங்கினாங்களாம்?”

அது விக்கியாக இருக்கக்கூடாது என்கிற தவிப்பு அவளிடம்.

“வேற யாரு? எப்பப் பாத்தாலும் அவள ஒரசிட்டே சுத்துவானே அந்த விக்கி தான். ஃப்ரெண்டு ஃப்ரெண்டுனு பாய் ஃப்ரெண்ட் வேலையப் பாத்துருக்கான். ஒரு தடவ‌ நான் அவங்க டிடெக்டிவ் ஏஜென்சிக்கு போனப்பக்கூட ரெண்டுபேரும் முத்தம் குடுக்குற மாதிரி ஏதோ பண்ணிட்டு இருந்தாங்க. இப்ப அவங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சு தெரியுமாங்க? உத்ராவோட அம்மா ஒடம்பு முடியாம ஹாஸ்பிடல்ல இருந்தப்போ தான் அந்தக் கூத்து நடந்துருக்கு. பாத்தீங்களா? நீங்களே ஷாக்காயிட்டீங்க. அப்போ எனக்கு எப்படி இருக்கும்னு சொல்லுங்க?”

அனன்யாவுக்கு உடனே‌ உத்ராவை இரண்டு மூன்றாய் கிழித்து வீசும் ஆவேசம் உண்டானது. கோபத்தில் அவள் முகம் கன்றிச்சிவப்பதை கண்டு குழம்பினான் உதய்கிருஷ்ணா.

“என்னங்க எதுவும் சொல்ல மாட்டேங்குறீங்க? இப்படிப்பட்டவளுக்கா சப்போர்ட் பண்ணோம்னு சங்கடமா இருக்கா? ஆனா அவளுக்கு அப்படியெதுவும் இல்லங்க. குற்றவுணர்ச்சியே இல்லாம எங்கூட நிச்சயதார்த்தம் வர வந்துட்டா துரோகி! இதுல உங்க குடும்பத்த வேற நான் தப்பா நெனச்சி, ரொம்ப சாரிங்க. எல்லாம் நல்லதுக்கு தான்னு எடுத்துக்கறத தவர‌ நமக்கு இப்ப சாய்ஸ் இல்லங்க. என்ன‌ நான் சொல்றது?”

“அதுவந்து.. அதுவந்து.. உங்களுக்கு உத்ரா மேல எந்த ஃபீலிங்க்ஸுமே இல்லயா?”

“இருந்தது. இப்ப இல்லாமப் போயிருச்சி.”

“ஒருவேள அவங்க எந்தத் தப்புமே பண்ணலனு தெரிஞ்சா?”

“என்ன சொல்றீங்க நீங்க? அதுக்கு வாய்ப்பே இல்ல. உங்க அளவுக்கு இல்லனாலும் உத்ராவும் ஒரு அழகானப்பொண்ணு தாங்க. விக்கி அவள பக்கத்துல வச்சிட்டு கையக்கட்டி வேடிக்கப் பாப்பானு நான் நம்பல.‌ அதுவும் இப்ப அவங்க புருசன் பொண்டாட்டி வேற.”

அனன்யாவிற்கோ என்ன முடிவிற்கு வருவதென்றே தெரியவில்லை. விக்கியை அவளுக்குத் தெரியும். அழகியப் பெண்களை ரசிப்பானேத் தவிர, அடைய வேண்டும் என்ற நீச்சைப்புத்தி கொண்டவன் அல்ல.

ஆனாலும்… என்று மனசஞ்சலத்தில் உத்ராவிடமே உண்மையை கேட்டு அறிய முடிவு செய்தாள்.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
எதிரிலிருப்பவனோ அவள் மனவோட்டத்தை தவறாகக் கருதினான்.

“புரியுதுங்க. இனி அவங்களப் பத்தியெல்லாம் நாம எதுக்கு பேசனும்னு நெனைக்கிறீங்க. ரைட்? நம்ம நம்ம ஃப்யூச்சரப் பத்தி பேசுவோங்க. உங்களுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதமாங்க?” எனவும்,

“நான் இப்படி சொல்றதுக்கு ரொம்ப சாரிங்க. என் பெரியப்பாக்கிட்டயும் நான் இதே பதிலத் தான் சொன்னேன். எனக்கு கொஞ்சம் யோசிக்க டைம் வேணுங்க. ப்ளீஸ்” என்று புரிந்துகொள்ளும்படி கெஞ்சினாள்.

தயக்கமாக சரியென்றவன் சற்று ஏமாற்றத்தோடு அங்கிருந்து கிளம்பியபோது, தான் சத்யம் டிடெக்டிவ் ஏஜென்சியை நோக்கிப் புறப்பட்டாள்.

ஆனால், அங்கு வண்ணப்பூச்சு செய்யும் வேலை நடந்துக்கொண்டிருந்தது. அச்சமயம் எல்லாம் சரியாக நடக்கிறதா என்று மேற்பார்வை செய்ய வேணியே அங்கு நின்றிருந்தார். அவரைக் கண்டதும் ஏமாற்றத்தோடு வீட்டிற்கு திரும்பினாள். வேணி அவளை அவளறியாமல் பார்த்தவர் அவளை கண்காணிக்க ஆட்கள் இருவரை ஏவினார்.

அனன்யா சோர்வாக நடந்து பக்கத்து தெருவிற்கு வந்தவள் தனது அலைபேசிக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பொன்று வரவும் ஏற்று, “ஹலோ” என்றாள்.

மறுபுறம் பேசியது உத்ரா. உடனே தன்னை நேரில் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தவளிடம் இருவருக்கும் பொதுவானதொரு இடத்தைக் கூறி வரச்சொன்னாள் அனன்யா.

திட்டமிட்டது போல் இருவரும் அந்த உணவு விடுதியின் குளிரூட்டப்பட்ட அறையில் எதிரெதிர் நாற்காலியில் உட்கார்ந்திருந்தபோது இயல்பாகவே ஒருவரையொருவர் அளந்தார்கள்.

உத்ரா வெள்ளையில் கறுப்பு புள்ளிகளிட்ட க்ராப் டாப், வெளீர்நீலத்தில் ஜீன்ஸ் பேண்ட், இறுக்கமான குதிரைவால் என்று நிமிர்வான ரோஜாப்பூவாயிருந்தாள் என்றால், அனன்யா நேர் உச்சியெடுத்து நீளப்பின்னல், கத்தரிப்பூவுடன் முல்லையைக் கட்டியதுபோல்‌ காட்டன் சுடிதார் என்று பாந்தமான தாமரையாய் இருந்தாள்.

இருவருமே ஆபரணங்களில், அலங்காரங்களில் அதிக அக்கறை கொள்ளாதவர்கள் என்பதால் அபரிமிதமான இயற்கையின் கொடையே அதை சரிகட்டுவதாய் இருந்தது.

இதுவரை தன் அழகைக் குறித்த தாழ்வுணர்ச்சி எதுவும் எழுந்ததில்லை உத்ராவுக்கு. இன்றோ சற்று அதிகமாய் கூச்சப்பட்டாள். அவளின் புருவங்கள் வடிவாய் செதுக்கப்பட்டிருந்தாலும் அனன்யாவின் புருவங்கள் போல் நீண்டு அடர்த்தியாய் இல்லாததற்கு வருந்தினாள். கன்னங்கள் கூட தனக்கு சற்று சதைப்பற்றுடன் இருந்தது உறுத்தியது. தனது அன்னை பாலில் குங்குமப்பூ‌ போட்டு குடிக்காமல் போனதற்கும் முதல்முறை கோபம் கொண்டாள்.

அனன்யாவின் எண்ணவோட்டமோ அவளுக்கு நேர்மாறாய் இருந்தது. எபிலேட்டர் வாங்கி தன் முகத்திலுள்ள பூனைமுடிகளை நீக்கிவிட்டு வந்திருக்கலாமோ? தானோ சரியான‌ நோஞ்சான் போல் உள்ளோம். அவளோ காலண்டர் அட்டையில் வரும் குழந்தை கிருஷ்ணர் போல் கொழுக்மொழுக்கென்று கவர்ச்சியாய் இருக்கிறாள். இப்படியிருந்தால் ஆண்மகனுக்கு அவளைத் தானே முதலில் பிடிக்கும்? என்று பலவிதமான யோசனை அவளுள்.

“அனன்யா நான் எதுக்கு உங்கள இப்ப கூப்ட்டேனா?” எ‌ன்று ஆரம்பித்தவளிடம்,

“என் விக்கிய என்கிட்டருந்து பிரிச்சதுக்காக.” என்று காட்டமாய்‌ சொன்னாள் அனன்யா.

பொறுமையாய் பேசவேண்டுமென்று வந்த உத்ராவோ தன்‌ நிதானத்தை இழந்தாள். பன்மையிலிருந்து ஒருமைக்குத் தாவினாள்.

“ஆமா இதுக்கு முன்னாடி அன்பே ஆருயிரேனு பாட்டுப்பாடி டான்ஸாடிக்கிட்டிருந்த உங்கள நான் பிரிச்சிட்டேன். நீயே மொத உன் அம்மாப் பேச்சக் கேட்டு அவன தூக்கிப்போட்டுட்டு போனவ தான? பாவம் பாக்காம ஒரு சிசுவ‌ வேற அபார்ட் பண்ணவளுக்கு இன்னைக்கு என்ன காதல் பொங்குது?”

“அப்போ அப்போ எல்லாத்தையும் சொல்லிட்டாரா விபூ?”

“ஆமா, நீ விபூ விபூன்னு விபூதி அடிச்சக் கத எல்லாத்தையும் சொல்லிட்டான். இப்ப என்ன பண்ணப்போற?”

அனன்யாவும் மரியாதையை காற்றில் பறக்கவிட்டாள்.

“என்கிட்ட எங்க ரெண்டுபேரையும் சேர்த்து வைக்கிறதா வாக்குறுதி குடுத்துட்டு நீ‌ அவர வளச்சுப் போட்டிருக்கியே வெக்கமாயில்ல உனக்கு?”

“அன்னைக்கு அவன தூக்கிப்போட்டுட்டு இப்ப நீதான் வேணும்னு பின்னால சுத்துறியே உனக்கு எங்கப் போச்சு வெக்கம்?”

“ஆமா நான் என் அம்மாவுக்காக விபூவ தூக்கிப் போட்டேன் தான். மேடம் யாருக்காக அவர கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க? மொதல்ல உங்கக் கல்யாணம் எங்க நடந்தது டிடெக்டிவ் மேடம்? பெரிய கோவில்லயா? இல்ல பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்துலயா?”

அவளின் கேள்வியில் விக்கித்துப்போனாள் உத்ரா. பின்னே அவள் கேட்பதனைத்தும் உண்மை தானே?

“நீ விபூவ உன் வலைல விழ வச்சிட்டு தான் என்னயும் அவரயும் சேர்த்து வைக்கிறதா வாக்குறுதி தந்தியா லயர்? நானாவது காதலன்னு நம்பி தான் என்ன முழுசா அவர்கிட்ட ஒப்படைச்சேன். ஆனா நீ ஒரு ரூம் கெடச்சா போதும்னு அவர் பணத்துக்காக அவர்கூட ஒன்னா இருந்துருக்க. இப்படிப்பட்ட உனக்கு என் கேரக்டர கொற சொல்ல எந்தத் தகுதியும் கெடையாது.”

“ஏய்! ச்சீ வாய மூடு! விக்கி எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட் மட்டும் தான். இது வர தப்பான எண்ணத்துல அவன் சுண்டு விரல் கூட என் மேல பட்டுருக்காது. என்ன பேசுறோம்னு யோசிச்சுப் பேசு!”

“ஆஹாஹா! இத என்ன நம்ப சொல்றியா? ஒருவேள அது உண்மையாயிருந்தா நீ பொண்ணா இல்லாம இருக்கனும். இல்ல விபூ மனசுல இன்னும் நான் இருக்கனும். விபூ உன்ன தொடலங்கிறது பெருமையான விசயம் கெடையாது. உன்ன நீயே அசிங்கப்படுத்திக்கற விசயம்.” என்றவளை கொன்றுவிடும் நோக்கில் பார்த்தாள் உத்ரா.

எவ்வளவு ஆர்வமாக உண்மை அனைத்தையும் அவளிடம் கேட்க வந்தாள்? இப்படி திருப்பி பேச முடியாத அளவுக்கு அவளையே பேச்சில் மடக்கிவிட்டாளே என்று ஆத்திரமாக வந்தது உத்ராவுக்கு.

“ஒருவேள ஒருவேள நீ சொல்றதெல்லாம் உண்மையாயிருந்தா ஏற்கனவே நீ சொன்ன மாதிரி நீதான் எங்கள சேர்த்து வைக்கனும். என்ன பாக்குற? எனக்காக இல்ல. என்ன மறக்க முடியாம தவிக்கற விபூக்காக. சாரி உன் விக்கிக்காக” என்று மிடுக்காக கூறிவிட்டு தன் துப்பட்டாவை காற்றில் தூக்கிப்போட்டபடி எழுபவளை உணர்ச்சியற்றுப் பார்த்தாள்.

திடீரென ஞாபகம் வந்தவளாய் அவளை நிறுத்தினாள்.

“ஒரு நிமிசம்! இத கேக்கறதுக்கு சாரி. உங்க அம்மா எப்படி எறந்துபோனாங்கனு மட்டும் சொல்லிட்டுப்போ.”

“ஓ! எல்லாத்தையும் சொன்ன விபூ இத மட்டும் சொல்லலையாக்கும்? இதுலயே தெரியுது உங்க நெருக்கம்.” என்று கேலியாகக் கூறியவள்,

“இதக்கூட கண்டுபிடிக்க முடியாம நீ என்ன டிடெக்டிவ்?” என்று எகத்தாளமாய் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள்.

உத்ராவுக்கோ கத்த வேண்டும் போல் இருந்தது.


கலைடாஸ்கோப் திரும்பும்…
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான அடுத்த அத்தியாயம் இதோ....
 
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom