- Messages
- 676
- Reaction score
- 1,079
- Points
- 93
காதல் கணம் 5
டம்பிள் செட், புல்லப் பார், ஸ்டேஷனரி பைசைக்கிள், ரோவிங் மிஷின், பார்பெல் செட் என சுற்றி எங்கிலும் உலோகங்களின் முரட்டு சாம்ராஜ்ஜியம்.
அவள் நுழைந்த சமயம் பார்த்து அந்தப்பக்கமாய் திரும்பி நின்று ட்ரெட் மில்லில் ஓடிக்கொண்டிருந்தான் வீசி.
பயந்து பயந்து வந்தவள் வியர்வை சொட்ட ஓடிக்கொண்டிருப்பவனை "அத்தா.. ச்ச்.. என்னங்க" என்றழைத்தாள்.
ட்ரெட் மில்லை நிறுத்தி திரும்பியவன், பூந்துவாலை ஒன்றால் வழிந்த வியர்வையை ஒற்றி எடுத்துக்கொண்டே அவளை அலட்சியப்பார்வை பார்த்தான்.
பின், கைநீட்டி காபியை வாங்கி குடித்துக்கொண்டே, "என்ன சாப்பிட்டு சாப்பிட்டு வீட்டுலயே தூங்கி எந்திரிக்கலாம்னு நினைப்பா?.." என்றான்.
அவளுக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை. பேந்த பேந்த முழித்தபடி நின்றாள்.
"என்ன முழிக்கிற?.. பி.இ சிவில் படிச்சிருக்க.. ஞாபகம் இருக்குதில்ல?.. என் பிசினஸ் பார்ட்னர் ஒருத்தர் ஷாப்பிங் மால் கட்டிக்கிட்டு இருக்காரு.. மாலோட சீஃப் இன்ஜினியர் நமக்குத் தெரிஞ்சவர் தான்.. இன்னைக்கு அவர்கிட்ட உனக்கு ஒரு இன்டெர்வீவ் இருக்கு.. ரெடியா இரு.."
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பேசியவனைப் பார்த்து, "இல்ல.." என்றவள் ஆரம்பிக்க, "ம்ம் சத்தமாப் பேசு" என்றவன் அருகில் வரவும், "இல்ல.. ஒண்ணுமில்ல" என்று தலையாட்டியவள் அவன் காபி கப்பை திருப்பித் தரவும், வாங்கிக்கொண்டு விட்டால் போதும் என்று கீழே ஓடிவிட்டாள்.
படிகளில் மூச்சு வாங்க ஓடிவந்தவளை கையில் பெட்டியுடன் எதிர்கொண்ட மதுபாலா, "ஹேய்! ஹேய்! பாத்து!.." என்றாள்.
அவளும் பிள்ளைகளும் எங்கோ செல்வது போல் புறப்பட்டு நிற்பதைப் பார்த்து, "என்ன அண்ணி எங்க கிளம்பி நிற்கிறீங்க?.." என்று அனுசரணையாக விசாரித்தாள் ஷ்ரதா.
"ம்ம்? எங்க வீட்டுக்குத்தான்.. பின்னே இங்கேயேவா இருந்திட முடியும்.. உங்க அண்ணாவால பசங்களை பார்க்காம இருக்க முடியலையாம்.." என்று அவளுக்கு பதிலளித்தாள் மதுபாலா.
"அருண்மொழியண்ணா தூத்துக்குடிலயிருந்து வீட்டுக்கு வந்துட்டாங்களா அண்ணி?.. நேத்து போன்ல பேசினப்போ அம்மா சொல்லவே இல்லயே?.. சரியா முகூர்த்தத்துக்கு ஒருமணி நேரத்துக்கு முன்னாடி சரக்கு வந்த கப்பல் கவுந்திருச்சின்னு போன் வந்தது.. அண்ணாவும் வேகமா கிளம்பிப் போயிட்டாங்க.." என்று சோகமாக சொன்னவளைப் பார்த்து, 'பேதைப்பெண்ணே! உன் அண்ணன் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு காரணம் கப்பல் கவிழ்ந்தது மட்டும் அல்ல.. என் தம்பி வீசியிட்ட நிபந்தனையும் தான்.. அவர் மட்டும் கிளம்பாமல் இருந்திருந்தால் உன் கழுத்தில் தாலியே ஏறியிருக்காது' என்று நாடகபாணியில் நினைத்தவள், வெளியே, "சொல்ல மறந்திருப்பாங்க" என்று மட்டும் சொல்லிவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தாள்.
பிள்ளைகளும் உற்சாகமாகக் கிளம்பி சமத்தாக அமர்ந்திருந்தனர்.
அருண்மொழி ஒன்பது மணிக்கு வருவேன் என்று கூறியிருந்ததால் மதுபாலா நேரத்தை கடத்திக்கொண்டே உட்கார்ந்திருந்த போது வாசலில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
அருண்மொழி காரிலிருந்து இறங்கி உள்ளே நுழைய.. வீசியும் அப்போது தான் மாடிப்படிகளிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான்.
இருவரின் கண்களும் சந்தித்தபோது கூர் வாள்கள் இரண்டு மோதிக்கொண்டது போல் கிளிங் என்ற சப்தம் இல்லாமலேயே ஒரு பளிச்.
மாடிப்படிகளின் முடிவில் இருந்த பூச்செடியை வேண்டுமென்றே காலால் எட்டி உதைத்த வீசி, "ஷ்ரதா!!!" என்று அதிர்ந்த குரலில் அழைத்தான்.
ஓடிவந்தவள் அங்கப்பிரதட்சணம் செய்துகொண்டிருந்த பூச்செடியைக் கண்டதும் தனது வேகத்தை குறைத்து நின்றாள். உடன் தனது அண்ணனையும் அப்போது தான் கவனித்தாள்.
பரவசத்தில் அவனை நோக்கிச் சென்றவளை, "ஷ்ரதா!" என்று அழுத்தி அழைத்து நிறுத்தினான் வீசி.
அவள் அப்படியே அந்த இடத்திலேயே நிற்க, அருகில் வந்தவன், "மார்னிங் கிஸ் கொடுக்கும்போது சொன்னதை மறந்துட்டியா டார்லிங்?.. பாரு லேட்டாகிடுச்சு.. வா போலாம்.." என அவளை தன்னுடனேயே கிட்டத்தட்ட இழுத்துச் சென்றான்.
தன் அண்ணனை கடக்கும்போது பாவமாய் அவனை பார்த்தபடியே சென்றாள் ஷ்ரதா.
வீசி ஷ்ரதாவுடன் சென்றவுடன் மதுபாலாவை சமீபித்த அருண்மொழி, "நான் இந்த வீட்டு மாப்பிள்ளை, கொஞ்சமாவது உன் தம்பி எனக்கு மரியாதை கொடுக்கிறானா பாரு.." என்று எரிந்து விழுந்தான்.
மதுபாலா அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே பதிலளித்தாள். "இப்போ அவன் உங்க வீட்டு மாப்பிள்ளையும் கூட.. மறந்துறாதீங்க.. அதான் இப்படி பண்றான்.. உட்காருங்க காபி கொண்டு வர்றேன்.. இல்ல வேணாம், இது உங்க ப்ரேக்பாஸ்ட் டைம் இல்ல?.. டைனிங் டேபிளுக்கு வாங்க டிபன் பரிமாறுறேன்.." என்றாள்.
"ஒண்ணும் வேணாம்.. உன் தம்பியோட பாசமான பார்வையே பூஸ்ட் குடிச்ச தெம்பைக் கொடுக்குது.. கிளம்பு போகலாம்.." என்று அவசரப்படுத்தினான் அருண்மொழி.
"இருங்க அம்மாக்கிட்ட சொல்ல வேணாமா?.." என்றபடியே, "ம்மா" என்று சமையலறையில் இருந்த அபிராமியை கூவி அழைத்தாள் மதுபாலா.
வந்தவர் அருண்மொழியைப் பார்த்ததும், கைகளை முந்தானையில் துடைத்தபடியே, "வாங்க! வாங்க மாப்பிள்ளை! என்னடி நிற்க வச்சி பேசிக்கிட்டு இருக்க.. மாப்பிள்ளையை உட்காரச் சொல்லு.. இருங்க மாப்பிள்ளை காபி கொண்டு வரேன்.." என்று திடீர் தேனியாய் சுறுசுறுப்பானார்.
அருண்மொழி, "இல்ல அத்தை, வெளிய எனக்கு முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு.. சீக்கிரம் இவங்களை வீட்டுல விட்டுட்டுப் போகணும்.. இன்னொரு நாள் பொறுமையா வந்து விருந்தே சாப்பிடுறேன்" என்றுவிட்டு தன் மனைவியையும் குழந்தைகளையும் காரில் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான்.
மூன்று தடவை கேட்டும் பதிலில்லை என்றாலும் ஷ்ரதா தன் முயற்சியை கைவிடுவதாய் இல்லை. கார் மீண்டும் சிக்னலில் நிற்கும் போதும் கேட்டாள். "என்னங்க, நான் என் ஃபைல் எதுவும் எடுக்கலையே?.. ட்ரெஸ் கூட சல்வார்.. இப்படியேவா இன்டெர்வீவ்க்கு போவாங்க?.."
எல்லாம் சரியாய் இருந்தாலும் ஷ்ரதா இப்படி அனல் மேல் இட்ட புழுவாய் தான் நெளிந்துக் கொண்டிருப்பாள் என்பது வேறு கதை.
"என்னங்க.." மீண்டும் அதே கெஞ்சல் குரல்.
"எல்லாம் நான் எடுத்துட்டேன்.." அவன் விழிகள் சாலையிலேயே இருந்தது.
தவிப்புடனேயே அமர்ந்திருந்தாள் அவள்.
நேரே ஒரு துணிக்கடை பொட்டிக்கில் கொண்டு வண்டியை நிறுத்தியவன், "ம்ம் இறங்கு" என்று உத்தரவிட்டு உள்ளே சென்றான்.
நேரே அங்கிருந்த பணிப்பெண்ணிடம் சென்று ஷ்ரதாவின் உயரம் முதல் உள்ளாடை வரை என்ன அளவு என்று சொல்லிக் கொண்டிருந்தான்.
ஷ்ரதா புதிதாய் பள்ளிக்கூடம் சேர வந்த குழந்தையைப் போல் அலங்க மலங்க விழித்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"வாங்க மேடம்" என்று அவளை தனியே ட்ரையல் ரூம் அழைத்துச் சென்ற பெண், தான் கையில் கொண்டு வந்திருந்த உடைகளைக் கொடுத்து "சேன்ஜ் பண்ணிட்டு வாங்க மேடம்" என்றாள்.
பதினைந்து நிமிடத்திலேயே சல்வார் களைந்து கோட் சூட்டுடன் வெளியே வந்தாள் ஷ்ரதா.
பணிப்பெண் அவளைப் பார்த்து வியந்தாள். "மேடம், சார் சொன்ன அளவு உங்களுக்கு கச்சிதமா இருக்கு மேடம்.. நாங்களே மெசர் பண்ணியிருந்தாலும் இவ்வளவு பெர்பெக்ட்டா அளவெடுத்திருப்போமா தெரியாது.. ரொம்ப ஃபிட்டா இருக்கு மேடம்.." என்றாள்.
சமாளிப்பாய் புன்னகைத்தபடியே வெளியே வந்தாள் ஷ்ரதா.
அடுத்தபடியாய் அவளை பியூட்டி பார்லரில் கொண்டு விட்டான் வீசி. அங்கு அவளின் முடியை வளை கொண்டையிட்டு, முகத்திற்கு டச்சப் செய்து விட்டார்கள். பின், சாலையில் ஒரு ஏசியிட்ட செருப்பு கடைக்கு வெளியே வண்டியை நிறுத்தி, அவளுக்கு பொருத்தமான ஹீல் உள்ள கட்ஷூ ஒன்றும் வாங்கிக் கொடுத்தான்.
ஷ்ரதாவின் மனம் முழுவதும் 'இவ்வளவு பார்த்து பார்த்து செய்கிறாரே ஒருவேளை இன்டெர்வீவில் செலெக்ட் ஆகவில்லை என்றால் நம்மை என்ன செய்வார்?' எனும் கேள்வியே தடக்தடக் ரயில் வண்டியாய் ஓடிக்கொண்டிருந்தது.
யோசித்துக்கொண்டே காரின் கண்ணாடியைப் பார்த்தபோது அவளுருவமே அவளுக்கு வித்தியாசமாய் தெரிந்தது.
விரைவாக காரை செலுத்தியவன் குபீரென்று உயர்ந்து நின்ற அந்த பத்துமாடி கண்ணாடிச்சுவர் கட்டத்திற்கு வெளியே காரை நிறுத்தி அவளை இறக்கிவிட்டான். தந்தித் தகவலாய், "தேர்ட் ஃப்ளோர்" என்று சொல்லிவிட்டு ஃபைலை அவள் கையில் திணித்தான்.
அவளும் பயத்தில் அவனை திரும்பிப் பார்த்தபடியே சென்றாள்.
நேரம் கொல்லைத் தின்ற குதிரைப் போல் வேகமாய் ஓட, அரைமணி நேரத்தில் வெளியே வந்து காரினுள் குனிந்தவள், "இன்டெர்வீவ்ல நல்லா ஆன்சர் பண்ணி இருக்கேங்க.." என்றாள்.
"ம்ம்.. ஆனா வேலை கிடைக்காது, வா" என்று சொல்லிவிட்டு காரின் மறுபக்கக் கதவை திறந்துவிட்டான் வீசி.
உள்ளே இருக்கையில் வந்து அமர்ந்தவள் அவனை கேள்வியாய் நெற்றிச் சுருக்கி பார்க்க, "உன் பாசமலர் அண்ணன் சிவாஜி கணேசன் இன்னைக்கு வந்தாரு இல்ல?.. நீ அவர்கிட்ட எதுவும் கொஞ்சி குலாவக்கூடாதுன்னு தான் உன்னை வெளியக் கூட்டிட்டு வந்தேன்.. இந்த இன்டெர்வீவ் எல்லாம் ஃபுல் செட்டப்" என்றதும் அவளுக்கு தன்னிரக்கத்தில் அழுகை வந்தது.
இது என்ன மாதிரியான சித்ரவதை என்றும் தோன்றியது.
இல்லை என்னால் இதற்கு மேலும் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியாதென முதல் முறையாய் தைரியம் வந்து அவனிடம் அந்தக் கேள்வியை கேட்டாள் ஷ்ரதா.
"ஏன்? ஏன் இப்படி பண்றீங்க?.."
அவன் புருவம் ஏளனமாய் ஏறி இறங்கி அவளிடம் கேட்டது. 'அட! நீ என்னை கேள்வி கேட்கும் அளவிற்கு வந்துவிட்டாயா?'
"சொல்லுங்க உங்களுக்கு எப்படி எனக்கு மல்லிகைப்பூ பிடிக்காதுன்னு தெரியும்?.. எப்படி எனக்கு பால் பிடிக்காதுன்னு தெரியும்?.."
நேரம் கெட்ட நேரத்தில் அவன் கன்னத்தில் அவள் ரசித்துப் பார்க்கும் கன்னக்குழி ஒன்று உருவாகியிருந்தது.
"சிரிக்காதீங்க.. சொல்லுங்க! எப்படி எனக்கு உரைப்பு ஒத்துக்காதுன்னு உங்களுக்குத் தெரியும்?.. எப்படி என்.. என்.. ப்ரேசியர் சைஸ் முதற்கொண்டு உங்களுக்குத் தெரியும்?" என்று மூச்சி வாங்கக் கேட்டாள்.
அவளின் கடைசி கேள்வியும் மூச்சு வாங்கலும் பார்க்கக்கூடாது என முயன்று தடுத்தாலும் அவனது விழிகளை வேறொரு பக்கமே இழுத்துச் சென்றன.
சற்றே பார்த்தும் பார்க்காததும் போல் பாவனை செய்தவன், "சபாஷ்" என்று தன் கைகளைத் தட்டி சிரிப்பில் மீசைத் துடிக்க, "கேள்விப் படலம் முடிஞ்சதா மேடம்?.. காது ரொம்ப வலிக்குது.. கிளம்பலாமா?" என்று காதைக் குடைந்து காண்பித்தான்.
அவளால் இந்த பரிகாசப் பதிலை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. குப்பென்று முகம் சிவந்து தேம்பித் தேம்பி அழுதாள்.
அவளிடம் தன் கைக்குட்டையை நீட்டியவன், அவள் வாங்கவில்லை எனவும் கோபத்தில் ஸ்டியரிங்கைப் பிடித்து சுழற்றினான்.
ஆற்றாமையில் இருக்கையில் கண்மூடி சாய்ந்துக் கொண்டாள் ஷ்ரதா. அவளுக்கு பேசாமல் காரின் கதவைத் திறந்து குதித்து விடலாமா என்றுகூட ஒரு நொடி தோன்றியது. ஆனால், பாழாய் போன மனதில் தைரியமில்லை.
கார் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தபோதே சாலையின் ஓரமாக காரை நிறுத்தினான் வீசி.
திடுக்கிட்டு விழித்தவள் என்னவென்று அவனைப் பார்க்க, காரிலிருந்து இறங்கியவன் அங்கு ஓரமாக தள்ளுவண்டிக்கடையில் பஞ்சுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்த முதியவரை அணுகி, பஞ்சுமிட்டாய் பாக்கெட் இரண்டை வாங்கிக்கொண்டு வந்தான்.
அசுவாரசியமாய் அதனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஷ்ரதா.
காரிற்குள் ஏறியவன் ஷ்ரதாவிடம் ஒரு பஞ்சுமிட்டாய் பாக்கெட்டை நீட்டி, "இந்தா.. பஞ்சுமிட்டாய்னா உனக்கு ரொம்பப் பிடிக்கும்ல, சாப்பிடு!" என்றான்.
ஷ்ரதா சோர்ந்து போனவள் போல் மீண்டும் பின்புறமாக சீட்டில் தலையை சாய்த்தாள்.
அவன் அவளை வெறுப்பேற்றவென்றே "அழுகை வரலை?" என்றான்.
"ம்ஹீம்" என்று கண்மூடியபடியே தலையசைத்தாள் ஷ்ரதா.
"ப்ச், நிறைய எதிர்பார்த்தேனே.. சரி விடு நாளைக்கு வர வச்சிரலாம்.." என்றான் வீசி.
பாவம், இவ்வாக்கியத்தை ஷ்ரதா சரியாக புரிந்து கொள்ளவில்லை.
நாளையென்றால் அவன் அகராதிப்படி நாளின் துவக்கமான இரவு பன்னிரண்டு மணிக்கே தன்னை அவன் படுக்கையில் அழ வைப்பான் என்று அவள் என்ன கனவா கண்டாள்?
காதல் கணம் கூடும்...
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்.
கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க
கருத்துத்திரி,
எங்க தைரியமிருந்தா என்னைத் தொடுங்க பார்க்கலாம்
Last edited: