Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

Status
Not open for further replies.

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான அத்தியாயம் முப்பத்தேழு இதோ...
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 37


எந்த‌ உண்மையைச் சொல்லி‌ விக்கி அனன்யாவிடம் உதய்கிருஷ்ணாவை திருமணம் செய்துகொள்ளச் சொன்னானோ அதே‌ உண்மையை உத்ராவிடமும் சொன்னபோது அவள் சுக்குநூறாய் நொறுங்கிப்போனாள்.

அவனின் மருத்துவ அறிக்கைகளை கேட்டு பிடிவாதம் செய்தவள் அவன் மறைவாய் வைத்திருக்கும் அனைத்தையும் கொண்டு வந்து கொட்டியதும் பரிதாபமாய் பார்த்தாள்.

அவனுக்கோ இவற்றையெல்லாம் ஆராய்வதால் எந்தப்பயனும் கிடைக்கப் போவதில்லை என்ற அலட்சியம்.

உத்ரா சில மருத்துவ வாக்கியங்கள் தனக்கு புரியவில்லையானாலும் கூகுளில் தேடி பொருளறிந்தாள். இறுதியில் கூகுளை நம்புவதற்கு பதிலாக மருத்துவரிடமே சென்று கேட்டுவிடலாம் என்று அவனை மருத்துவமனை அழைத்துச்செல்ல முடிவெடுத்தாள்.

மனம் கேளாமல் அவள் அவனுக்கு புற்றுநோய் இருப்பதை வேணியிடமும் சொல்ல, அவர் பதறியடித்துக்கொண்டு மகனின் அறைக்கு வந்தார்.

உத்ரா அந்த வீட்டிற்குள் நுழைந்தது முதல் அவன் அறைப்பக்கமே செல்லாதிருந்தவர், இன்று அவள் கூறிய துர்செய்தியில் தன் கௌரவம் விட்டு பாய்ந்து சென்றார்.

அவனிடம் உத்ரா கூறியது உண்மையா என வினவியபோது, ஆம் என்ற அலட்சிய பதில் வந்தது.

அவனின் முகத்தைத் தாங்க கைகளை கொண்டுசென்றவரை முகத்தைத் திருப்பி தடுத்தான். அவனின் இந்நடத்தைக்கான காரணம் சுத்தமாக புரியவில்லை உத்ராவுக்கு.

அவனை கட்டிப்பிடித்து அழ முடியாத துக்கத்தை அப்பட்டமாக காட்ட முடியாமல் விலகி கீழேச் சென்றார். தனதறைக்குள் நுழைந்ததும் தேம்பி தேம்பி அழுதவரை அந்நேரம் அவருக்கு லெமன் டீ கொடுக்க வந்த பாக்கியம் தான் சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.

வேணி அவன் வீம்பாக வர வேண்டாம் என்று மறுத்தும் கேளாமல் அவர்களுடன் மருத்துவமனை வந்தார். விக்கியை முழுவதும் பரிசோதித்த மருத்துவர் தன்னை பயத்துடன் பார்த்திருக்கும் பெண்களிடம் நம்பிக்கையாய் பேசினார்.

“வேணி, விக்கிக்கிட்ட நான் ஏற்கனவே சொன்னது தான். இது வாசனுக்கு வந்த மாதிரி ப்ளட்டோட சம்பந்தப்பட்டது இல்ல. தனியா வயித்துல ரெண்டு கட்டிகளா வளந்து கெடக்குது. ஒன்ன ஆபரேசன் பண்ணி எடுத்துரலாம். இன்னொன்னு சிக்கலான எடத்துல இருக்கதால கீமோவால தான் சரி பண்ண முடியும். ஆனா இதுல அவன முழுசா குணப்படுத்த முடியுமாங்கறது அவன் அதிர்ஷ்டத்த பொறுத்தது. நீங்க ஃபர்ஸ்ட் ஆபரேசனுக்கு மட்டும் அவன ஒத்துக்க‌ வைங்க. மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன்” என்று‌ வாக்குறுதி தந்தார்.

விக்கியோ உத்ராவும் வேணியும் வேண்டியபோது முடியவே முடியாது என்று ஒற்றைக்காலில் நின்றான்.

அவனுக்கு இன்னும் சில பரிசோதனைகள் செய்யவேண்டியிருந்ததால் மருத்துவமனை படுக்கையில் தான் தேமேவென்று கிடந்தான். உத்ரா அவனருகில் பதைபதைப்போடு நின்றிருந்தாள். அவனுக்கு இழவு வீட்டில் இருப்பது போல் அவள் சோகமாக நின்றது சுத்தமாகப் பிடிக்கவில்லை. தனது வால்தனத்தை‌ ஆரம்பித்தான்.

தனதருகில் நின்றிருந்த செவிலியரிடம், “நீங்க மலையாளியா?” என்றான்.

அவர், “ஆமா! எப்படி கண்டுபுடிச்சீங்க?” என்று ஆச்சரியப்பட்டார்.

“அதான் தேங்காயோட செழிப்பு தெரியுதேங்க”

“இல்ல புரியல”

“உங்க முடிங்க. நீங்க பின்னி அத கொண்டையா போட்டிருந்தாலும் எவ்ளோ கனம்? அந்த வலையையே பிச்சிக்கிட்டு வெளிய குதிச்சிரும் போல இருக்குங்க.”

தனது அடர்த்தியான கறுத்த தலைமுடியை நினைத்து பெருமை தாளவில்லை அவருக்கு.

உத்ரா அருகில் அவன் வழிசலை கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர் வெளியேற முயன்றபோது, “மென்மேலும் வளர வாழ்த்துகள்ங்க” என்றவன் சத்தமாகச் சொல்ல, அவர் வெட்கமாக புன்னகைத்து விடைபெற்றார்.

செல்பவரை அவன் படுக்கையிலிருந்து எட்டிப் பார்க்க, அவன் தலையில் குட்டி வைத்தாள் உத்ரா.

“ச்சே! மரணப்படுக்கைல கெடந்தும் புத்தி எப்டிப்போகுது பாரு?” என்று துப்பினாள்.

அவனோ அதை கண்டுகொள்வதாய் இல்லை. பாட்டுப்பாடி கடுப்பேற்றினான்.

“வேலி கட்டி வச்சாலும்
வெள்ள சொள்ள பாத்துப்புட்டா
கடக்க துடிக்குதடா காலு.

மங்கியில இருந்து ஒரு
மனுசப்பையன் வந்தாலும்
இன்னும் போகலையே வாலு.

ஏன் உதி நீ ஏன் இந்தப்பாட்டுல வர்ற ரகசியா மாதிரி டூ பீஸ் போட்டு டப்பாங்குத்து ஆடி என்ன சந்தோசப் படுத்தக்கூடாது?”

“ஒழுங்கா வாய மூடிட்டு இரு. இல்ல நெஞ்சுல ஏறி மிதிச்சிருவேன்.”

“ம்க்கும்! என் நெஞ்சப் பத்தி மட்டுமே யோசி. உதி ஒரு கொடுமையப் பாத்தியா? நீ அந்த உதய்கிருஷ்ணா பின்னாடி சுத்தினப்ப அவனுக்கு எயிட்ஸ் டெஸ்டெல்லாம் எடுத்த. ஆனா விதி, கேன்சர்ல பொட்டுனு போகப்போற என்கூட குப்பக் கொட்ற.”

இவ்வளவு நேரம் வம்பு பேசிக்கொண்டிருந்தவளின் முகம் சட்டென்று மாறியது.

“வாய மூடு விக்கி! இதுக்கு மேல ஒரு வார்த்த அபசகுனமா பேசின நானே உன்ன கொன்னு போட்ருவேன்டா.” என்று மிரட்டினாள்.

அவள் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் வெளியே செல்ல, வேணி உள்ளே வந்தார்.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
உத்ராவை வேதனையோடு பார்த்திருந்தவன் முகம் தன் தாயைக் கண்டதும் நிர்சலனமானது.

அழுது அதைத்த முகத்துடன் வந்த வேணி மெதுவாக ஆரம்பித்தார்.

“நீ ஏன் ஆபரேசனுக்கு ஒத்துக்க மாட்டிக்கிறனு எனக்கு தெரியும் விக்கி. என்ன பழி வாங்கத் தான? உன் கொழந்தைய அழிக்க அந்த கங்காவுக்கு நான் உறுதுணையா இருந்தேனு தான என் கொழந்தைய என்கிட்டருந்து பிரிக்கிறது எனக்கு சரியான தண்டனையா இருக்கும்னு முடிவு பண்ணிட்ட?

நீ ஓடியோடி சேத்த சொத்துல ஒரு ரூபாக்கூட எனக்கு இனி பிரயோஜனப்படாதுடினு என் உச்சந்தலைல ஆணி அடிச்சிட்டல்ல? எனக்கு வம்சம்னு ஒன்னு இல்லாதபடி செஞ்சி என்ன அனாதையாக்கப் போறல்ல? சாரி விக்கி. அம்மா உன்கிட்ட தோத்துட்டேன். இந்த அம்மாவ தயவுசெஞ்சு மன்னிச்சி ஆபரேசனுக்கு ஒத்துக்கோடா.

நாளப்பின்ன உன்னோட வாரிசுனு அந்த அனன்யா எதயும் தூக்கிட்டு வந்து உனக்கு பிரச்சன குடுக்கக்கூடாதுனு தான் நான் அந்தப் பாவத்துக்கு தொண போனேன். நான் செஞ்சதெல்லாம் உன் நன்மைக்கு தான் விக்கி. ஆனா, அது எவ்வளவு பெரிய தப்புனு இப்ப எனக்கு உணர்த்திட்ட. இப்ப எனக்கு என் புள்ள தான் முக்கியம், பணமில்ல.

ஒருவேள இன்னும் நான் திருந்திட்டேங்கறத நீ நம்பலனா என் சொத்து பூராவும் அனாத இல்லங்களுக்கே எழுதி வச்சிடுறேன்டா. இத நான் உன் மேல சத்தியம் பண்ணி சொல்றேன். தயவுசெஞ்சு என்ன அனாதையாக்கிட்டுப் போயிராத விக்கி. எனக்கு பெரிய தண்டனையா குடுத்துறாத” என்று அவனின் கரத்தைப் பிடித்துக்கொண்டு கதறினார்.

அவனுக்கும் கண்களிரண்டும் கலங்கின. ஆனால், அவரின் வேண்டுதலுக்கு செவிசாய்க்கவில்லை.

மனம் தளர்ந்துபோய் திரும்பினார் வேணி.

“அப்பா சாகறதுக்கு முன்னாடி நீங்க இப்படி பண்ணத நெனச்சு ரொம்ப ஃபீல் பண்ணாரு மாம். அவரால நீங்க செஞ்சத ஜீரணிக்கவே முடியல.” என்று வேதனையாக கண்களை மூடினான்.

அவர் நடைபிணமாக வெளியேறினார்.

வாசலில் நின்ற உத்ராவின் காதில் அவர்கள் பேசியதனைத்துமே விழுந்தது. ஆனால், சமயோஜிதமாக முகத்தை இயல்பாக்கி உள்ளே நுழைந்தாள். அவள் கதவை தாழ் போட்டுவிட்டு விக்கியின் அருகில் சென்று உட்கார, புதிராய் பார்த்தான்.

அவன் அணிந்திருந்த மருத்துவமனை உடைக்குள் கைவிட்டு மெதுவாக நெஞ்சை நீவிவிட்டவளை, “ஹே உதி! என்ன பண்ற? அதுவும் ஹாஸ்பிடல்ல வச்சு? யாராவது பாத்தா என்ன நெனப்பாங்க? கைய எடு உதி. படிச்சப்பொண்ணு தான நீ? உதி உன்னத்தான். சொல்ல சொல்ல கேக்க மாட்டியா?” என்று பதறவும்,

“விக்கி உன் வாய் தான் வேணாம் வேணாம் சொல்லுது. ஆனா உன் ரெண்டு கையும் அதுபாட்டுக்க எனக்கு ஒத்துழைப்பு குடுக்குதுடா” என்று கண்களால் சுட்டி சிரித்தாள்.

அசடு வழிந்தவன் முகத்தை நோக்கி குனிந்தவள், “என் லிப்ஸோட உன் லிப்ஸ் சேர நீ பாக்கியம் செஞ்சிருக்கனும் விக்கி” என்று கிசுகிசுப்பாகக் கூறி தனது இதழை நாவால் ஈரப்படுத்த, அவன் மிரண்டான்.

“என்னது பாக்கியத்த செஞ்சிருக்கனுமா? அவங்க என் அம்மா கூட பிறக்காத சித்தி மாதிரி. அவங்களப்போய்” எனவும், அவன் தோளில் குத்தினாள்.

அதை வாய்ப்பாகக்கொண்டு அவளின் பிடரியில் கைவைத்து இதழை அழுத்தமாகச் சிறைபிடித்தான். இப்போது மட்டும் இத்தாலியில் நடக்கும் உலக முத்தப்போட்டி இங்கு நடக்குமானால் இவர்களே பரிசை வென்றிருப்பார்கள். அவனின் கரங்கள் அவளின் உடலில் ஆவேசமாக மேய்ந்தபோது சட்டென்று அவனிடமிருந்து விலகினாள் உத்ரா.

அவன் கேள்வியாகப் பார்க்க, “உனக்கு எப்ப என்னாகுமோங்கற பயத்தோட என்னால உன்கூட சரசமாட முடியாது விக்கி. எனக்கு உன்கூட நான் என்னையே மறக்கற அளவுக்கு போய்த் தான் கூடனும். இப்படி திகிலோட இல்ல. விக்கி எனக்கிருக்க மாதிரி உனக்கும் என்ன முழுசா ஆள ஆசையில்லையாடா? என்ன ஒன்னும் பண்ணாம இப்படியே நீ செத்துப்போனா உன் ஆத்மா சாந்தி அடையுமா சொல்லு?” என்று தூண்டிலை வீசவும், மீன் சிக்கியது.

அவளை வேகமாக அருகில் இழுத்து செவ்வதரங்களில் ஆழ்ந்தான்.

அவள் வம்படியாய் விலகவும், “என்ன இப்படி மூடேத்திவிட்டுட்டு எதுவுமே தரமாட்டேனு விலகிப்போறது சுத்தப் போங்கு உதி.” என்றான்.

அவள், “ச்சே! என்ன பண்ற விக்கி? அதுவும் ஹாஸ்பிடல்ல வச்சு? யாராவது பாத்தா என்ன நெனப்பாங்க? படிச்சப்பையன் தான நீ?” என்றாள் அவன் முன்பு சொன்ன பாவனையிலேயே.

விக்கி பரிதாபமாய் கெஞ்சினான்.

“உதி ப்ளீஸ்டி! என்ன புரிஞ்சிக்கோடி. செவனேனு இருந்தவன உசுப்பிவிட்டுட்டு இப்படி செக் வைக்கிறது அநியாயம்டி.”

“நோ விக்கி. நீ ஆபரேசனுக்கு ஒத்துக்கிட்டா தான் உன்ன நான் எல்லாத்துக்கும் அலோவ் பண்ணுவேன்.”

“ஆமா அலோவ் பண்ணி கிழிச்ச. உன்ன நம்பி ஆபரேசன் செஞ்சுக்கறதெல்லாம் வேஸ்ட் உதி”

“டே! டே! மனசு மாறிடாதடா. சத்தியமா நெக்ஸ்ட் டைம் நீ சொல்றபடியெல்லாம் கேப்பேன். எம்மேல சத்தியம்.”

“என்ன சொன்னாலும் கேப்பியா?”

“என்ன சொன்னாலும்”

“அப்பறம் மனசு மாறி ஏன்டா இவன ஆபரேசன் பண்ண சொன்னோம்னு ஃபீல் பண்ணக்கூடாது?”

“சத்தியமா மாட்டேன். இந்த உதி சொன்னா சொன்னது தான்”

“அப்போ நான்‌ ஆபரேசனுக்கு ஒத்துக்குறேன்.”

“விக்கி உண்மையாவா சொல்ற?”

அவனும் அவளைப்போலவே சொன்னான்.

“இந்த விக்கி சொன்னா சொன்னது தான்”

அடுத்த ஒரு வாரத்திலேயே விக்கிக்கு அறுவைசிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

அந்த அவரச சிகிச்சை அறைக்குள் ஸ்ட்ரக்சரில் செல்லும் முன் உத்ராவிடம் மீண்டும் ஒருமுறை தங்கள் ஒப்பந்தத்தை ஞாபகப்படுத்திவிட்டே சென்றான் விக்கி. அனைவரும் கடவுளை வேண்டியபடியே வெளியே காத்திருந்தார்கள்.


கலைடாஸ்கோப் திரும்பும்…​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
இன்னும் இரண்டு அத்தியாயங்களில் கதை நிறைவுபெறவிருக்கிறது ப்ரெண்ட்ஸ். இக்கதை உங்களுக்கு பிடித்திருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள் ப்ரெண்ட்ஸ்.
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
உங்களுக்கான அத்தியாயம் முப்பத்தெட்டு இதோ...
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம்

எழுதியவர்: ஷிவானி செல்வம்

அத்தியாயம் 38


மருத்துவமனை சகவாசம் முடிந்து விக்கியும் உத்ராவும் வீட்டிற்கு திரும்பிய ஒரு மாதம் சென்று, அமிகா அவர்களைப் பார்க்க அடம்பிடித்ததால் அவளுக்குப் பிடித்த இனிப்புவகைகளை வாங்கிக்கொண்டு கிருஷ்ணாபுரம்காலணி அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தார்கள் தம்பதியர் இருவரும்.

பானுமதி தம் மக்களுடன் ஏற்கனவே விக்கியை மருத்துவமனையிலும், வீட்டிலும் பார்த்து நலம் விசாரித்திருந்தாலும் வீட்டில் பார்த்ததும் கண்கலங்கிவிட்டார்.

எப்போதும் தன்னை உடல்நலம் எப்படியுள்ளதென்று விசாரிப்பவனை இன்று தான் விசாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது பெரும் சோகத்தை உண்டாக்கியது அவருக்கு. பிறகு, உத்ரா தான் அவரை சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.

எப்போதும் விக்கியுடன் வம்பு வளர்க்கும் கவிலயா‌வோ அவனை பாவமாக பார்த்து வைக்க, வெறுத்து விட்டான்.

“உதி நான் எப்பவும் என் கவலைகள மறந்து சந்தோசமா உலாவுற ஒரே எடம் உன் வீடு மட்டும் தான். இவங்களும் என்ன இன்னைக்கு ஏதோ ஏலியன பாத்த மாதிரி ட்ரீட் பண்றது அன்கம்ஃபர்டபிளா இருக்கு.” எனவும், அவனின் உணர்வுகளை புரிந்து கொண்ட உத்ரா சமாதானம் சொன்னாள்.

“அவங்களுக்கு கொஞ்சம் டைம் குடு விக்கி. உன் பழைய‌‌ பேச்சையும், அடாவடி நடவடிக்கையையும் பாத்துட்டாங்கன்னா அவங்களே மாறிடுவாங்க.”

“அது இருக்கட்டும்! நீ எப்ப நம்ம கச்சேரிய ஆரம்பிக்கலாம்னு சொல்லு?” என்றான் ஆர்வமாக.

“அது ஒரு ஒன் மன்த் ஆகட்டும் விக்கி. அப்பறம் பாக்கலாம்” என்றவள் மேம்போக்காகச் சொல்ல,

“ஒன் மன்த்தா? ம், வெயிட் பண்றேன். பட், ஞாபகம் வச்சிக்கோ. நான் என்ன பண்ண சொன்னாலும் நீ தட்டாம பண்ணனும்.”

“அதெல்லாம் ஞாபகம் இருக்கு. ஓவரா மெரட்டாதடா!”

அவள்‌ வாய் தெம்பாக சொல்லிவிட்டாலும் மனம் மட்டும் அவன் என்ன‌‌ செய்யப் போகிறானோ என்று பீதியடைந்தது.

அவன் ‘இவ்வளவு தைரியமா உனக்கு?’ என்று அவளை பார்வையால் கேட்டுக்கொண்டிருந்தபோது, பூஜையறையிலிருந்து ஒரு திருமண பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு வந்தார் பானுமதி.

அது அனன்யா - உதய்கிருஷ்ணாவினுடையது. ரஞ்சனி‌ தன் விரோதிகளை வயிறெரியச் செய்ய இவ்வாறு அனுப்பியிருந்தாள்.

அதைப் பார்த்த உத்ராவும் விக்கியும் மகிழ்ச்சியில் முகம் மலர, பானுமதி, “நாளைக்கு காலைல அழகர்கோயில்ல கல்யாணமாம் உதி. இன்னைக்கு நைட் பரிசம். ரஞ்சனி நேர்ல வந்து பத்திரிக்கை வைக்கலனாலும் நான் இதுக்கு போகலாம்னு இருக்கேம்மா. அந்தத்தம்பி உதய்கிருஷ்ணாவ நான் ரொம்ப சங்கடப்படுத்திட்டேனோனு இருக்கு” என்று வருத்தப்படவும்,

“நாங்களும் வரோம் ஆன்ட்டி” என்றான் விக்கி.

ப்ரவுனி செய்து கொண்டிருந்த கவிலயாவும், திருமண பத்திரிக்கையை வாசித்துக் கொண்டிருந்த உத்ராவும் ஒருசேர அவனை ‘உனக்கென்ன பைத்தியமா?’ என்பது போல் முறைத்தார்கள்.

அவன் தனது முடிவில் உறுதியாய் இருந்தான்.

அன்றைய இரவு நிச்சய மேடையில் உதட்டில் ஒட்ட வைத்த சிரிப்புடன் நின்றிருந்தாள் அனன்யா. செவ்வரளியின் நிறத்திலான கனத்த லெஹங்காவை அவளுடல் தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருந்தது. அவளுக்கு நிகரான அழகுடன் கறுப்பு நிற கோட்சூட்டில் கம்பீரமாக நின்றிருந்தான் உதய்கிருஷ்ணா.

உண்மையில் அன்று அவர்களின் ஜோடிபொருத்தத்தை வியக்காத ஆளில்லை.

நந்தகோபன் திடீரென உள்ளே நுழைந்த உத்ராவையும், விக்கியையும் கண்டு குழம்பினார்.

ரஞ்சனியோ, “ரோசங்கெட்டதுக” என்று முகத்தை நொடித்தாள்.

அனன்யா விக்கியைக் கண்டதும் ஒருநொடி கலக்கமடைந்தாள் என்றால் உதய்கிருஷ்ணா உத்ராவைக் கண்டதும் பதற்றமடைந்தான்.

அவர்கள் கையில் பரிசுபொருளோடு மேடையேறி இருவரையும் வாழ்த்தி விடைபெற, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் நிம்மதி.

இணையர்‌ இருவரும் புகைப்பட நிபுணரின் பக்கம் பார்வையை திருப்பியபோது விக்கி‌யும் உத்ராவும் ஓரமாக நின்று அவர்களின் ஜோடி பொருத்தத்தை மெச்சினார்கள்.

ரஞ்சனி அவர்களை நோட்டம்விட்டுக் கொண்டிருந்தபோது அவள் கழுத்தில் போலி நகைகளை அணிந்திருப்பதைக் கண்ட உறவினர் ஒருவர், “என்ன ரஞ்சனி உன் நக எதயும் போட்டுக்காம கவுரிங்க அள்ளிப் போட்டிருக்க? உன் பொண்ணுக்கும் ஒரு மோதிரம் கூட தங்கத்துல இல்ல. அவளுக்கு கல்யாண வயசு வந்துட்டத மறந்துட்டியா நீ? கொஞ்சமாச்சும் தங்கம் போட்டுவிட்டா தான பொண்ணுக்கேட்டு வருவாங்க. ஆமா உன் பொண்ணுக்கு எவ்ளோ நக போடலாம்னு இருக்க ரஞ்சனி? எனக்கு தெரிஞ்ச எடத்துல பொண்ணு இருந்தா சொல்லச் சொல்றாங்க. மேகாவப் பத்தி சொல்லவா?” எனவும், தனது பெருமை பீற்றலை ஆரம்பித்தாள்.

“என்ன பாத்தா உங்களுக்கென்ன பிச்சக்காரி மாதிரி தெரியுதா சித்தி? ட்ரெஸுக்கு மேட்ச்சா இருக்கட்டுமேனு ஐயாயிரம் ரூபா வாடக குடுத்து இந்த செட்ட எடுத்துருக்கேன். எனக்கிருக்கதோ ஒரேப்பொண்ணு. அவள நான்‌ நட்டாத்துல விட்ருவேனு நெனைக்கிறீங்களா? நான் விட்டாலும் என் தம்பி அவள கைவிட மாட்டான். அவன் பொண்டாட்டி நகைகள போட்டாவது என்‌ பொண்ண கல்யாணம் பண்ணி குடுத்துருவான்” என்று மார்‌‌ தட்டி சொல்ல, பின்னால் நின்றிருந்த நந்தகோபன்‌‌ அவ‌ள் பேசியதையெல்லாம்‌ கேட்டுவிட்டார்.

அவருக்கு அவளின் திட்டம் நன்றாக புரிந்துபோனது. பையனுக்காகப் பார்த்து அனன்யாவை அவர்கள் குடும்பத்தில் கட்டிக்கொடுத்தால் அவளை ஓட்டாண்டி ஆக்காமல் விடமாட்டார்கள் என்பதை உணர்ந்தவர் ரஞ்சனியை இப்போதே மிரட்டி வைக்க‌‌‌ எத்தனித்தார்.

இருவரும் மாறிமாறிப் பேச வாக்குவாதம் முற்றியது. அனன்யா நந்தகோபனையும், உதய்கிருஷ்ணா ரஞ்சனியையும் அடக்க முயன்று தோற்றுப்‌போனார்கள்.

உதய்கிருஷ்ணா தனது முதலாளி வீட்டினர் வந்திருக்கும் சமயத்தில் இவ்வாறு ரகளை நடக்கிறதேயென்று பிரச்சனையை முடிக்க வேறுவழியின்றி அந்த வாக்குறுதியைத் தந்தான்.

“அனன்யாவோட நக, பணம், சொத்துனு எதயும் நான் விக்கவோ, அடகு வைக்கவோ மாட்டேன். இது நான் இங்க நிக்கிற‌ உங்க எல்லார் முன்னாடியும் அவளுக்கு செஞ்சு குடுக்குற சத்தியம்.” என்றதும், கைத்தட்டினான் விக்கி.

அனைவரும் அவனை திரும்பிப் பார்க்க, அவன்‌ காலை மிதித்தாள் உத்ரா. கைத்தட்டுவதை நிறுத்திக்கொண்டான்.

நந்தகோபன் தனக்கு தேவையான வாக்குறுதி கிடைத்ததும், “போம்மா! மேடைல போய் நில்லு!” என்று அனன்யாவை அனுப்பி வைத்தார்.

அவள் தனது கனத்த பாவாடையை தூக்கிக்கொண்டு நடக்க, கீழே‌ விழுந்து புரளும் அவளின் துப்பட்டாவை ஏந்திக்கொண்டு பின்னால் சென்றான் உதய்கிருஷ்ணா.

ரஞ்சனிக்கு அதைப் பார்த்ததும் ரத்தக்கொதிப்பு அதிகமானது. அனைத்தையும் தன்னைக்கேட்டே முடிவெடுக்கும் தம்பி இன்று சுயமாக எடுத்த முடிவை அவளால் சகிக்க முடியவில்லை. தனது கையாலாகாத்தனத்தை நினைத்து கண்கள் கலங்கினாள்.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
அது மற்றவர்கள் கண்ணில் பட்டு கேலிப்பொருள் ஆகவேண்டாமென மணமகன் அறைக்குச் சென்று தன்‌ மகளிடம் புலம்பித் தீர்த்தாள்.

பக்கத்தில் நின்றிருந்த அகிலனோ தன்னால் தான் தன் மனைவி இப்படி மற்றவர்கள் முன் அவமானப்பட நேர்ந்தது என்று குற்றவுணர்வில் குறுகினான். அவனால் அவளை சமாதானப்படுத்தக்கூட‌ முடியவில்லை.

தனது மகளை‌ தான் இனி எவ்வாறு கரை சேர்ப்போம் என்ற ‌கவலை‌யில் மீண்டும் ரஞ்சனிக்கு அழுகை முட்டிக்கொண்டு வர, மகள் மேகா அவளை தேற்றினாள்.

“ம்மா ப்ளீஸ்மா, அழாதம்மா. யாராவது பாத்தா தப்பா நெனைக்கப் போறாங்க. மாமாவுக்கு இப்ப கல்யாணம் நடக்கனுமா வேணாமா? மாமா இனி அது லைஃப்ப அது பாத்துக்கட்டும்மா. நாம அத கஷ்டப்படுத்த வேணாம்.” என்றதும், அவளின் பக்குவமான பேச்சில் உருக்குலைந்து போனாள் ரஞ்சனி.

“என்னங்க இனிமே நாம இங்க இருக்க வேணாங்க. உதய்க்கு நம்ம உதவி இனிமே தேவப்படாது. நாளைக்கு நாத்தனார் முடிச்சையும் அவனே‌ போட்டுக்கட்டும்.” என்று இருக்கையிலிருந்து எழ,‌ கதவருகில் பானுமதியும் உத்ராவும் நின்றிருந்தார்கள்.

அவர்களைப்‌ பார்த்ததும் முகம் கவிழ்ந்தபடி ரஞ்சனி வெளியேற முயல, கரம் நீட்டித் தடுத்தார் பானுமதி.

நின்றவளின் கண்கள் ஏன் என்று கேள்வியெழுப்பின.

“ரஞ்சனி நீ எடுத்துருக்க முடிவு ரொம்பத் தப்புமா. உன் தம்பிக்கு அம்மா அப்பா ரெண்டு பேருமே நீதான? உன் ஆசீர்வாதம் இல்லனா‌ அந்த ரெண்டு‌ ஜீவனும் எப்படி நல்லா வாழும் சொல்லு? உன் தம்பி மேல உள்ள மனவருத்தத்த காமிக்க இது நேரம் இல்லம்மா.” எனவும், ரஞ்சனி உடைந்துவிட்டாள்.

“இல்ல பானுமதிம்மா, இப்ப நான் அவனுக்கு தேவையில்ல. என் பொண்ணுக்கு அவ தாய்மாமன் இருக்கான்னே நெஞ்ச நிமித்திட்டு அலைஞ்சிட்டேன். அது எவ்வளவு பெரிய தப்புனு இப்ப அவன் எனக்கு புரிய வச்சிட்டான். அவன் இப்பயே பொண்டாட்டி முந்தானைய பிடிச்சி நடக்க ஆரம்பிச்சிட்டான். நல்லாருக்கட்டும்! இப்ப எனக்கு கவலையெல்லாம் என் பொண்ணப் பத்தி தான். எப்படி ஒரு நல்லவன் கையில அவள பிடிச்சிக் குடுக்கப்போறேனு தான் தெரியல” எனவும், பானுமதிக்கு ரஞ்சனியை நினைத்து துக்கம் பொங்கியது.

அவள் உதய்கிருஷ்ணாவை தன் மகன் போல் வளர்த்ததை அவரும் உடனிருந்து பார்த்தவர் தானே! அவளின் கண்ணீரை துடைக்க தனது வலக்கரத்தை உயர்த்தினார்.

“ரஞ்சனி உனக்கு நான் பேசுறது பிடிக்குமோ இல்லையோ தெரியல. உனக்கு என் குடும்பத்தப் பத்தி நல்லாத் தெரியும். உனக்கு சம்மதம்னா என் பையன் கவினுக்கு உன் பொண்ணு மேகாவ குடுக்குறியாம்மா? அவன் இப்ப முன்ன மாதிரி இல்ல. முப்பதாயிரம் சம்பளத்துல பெரிய லாப்டாப் கம்பெனில வொர்க் பண்றான். கொஞ்சம் வெளையாட்டுத்தனம், மத்தபடி ரொம்ப வெள்ளந்தி. நீ நாலுபேர்க்கிட்ட விசாரிச்சுட்டுக்கூட முடிவ சொல்லும்மா” எனவும், தனது அன்னையின் முடிவை மனதார ஏற்றவளாய் உத்ரா அவரின் தோளைப்‌பற்றினாள்.

“இன்னொருப் பொண்ணு இருக்காளே; அவள கட்டிக்குடுக்கற பொறுப்பு வேற கவின் தலைல விழுமோனு நெனைக்க வேணாங்க. அவள கட்டிக் குடுக்கற முழுப்பொறுப்பையும் நான் ஏத்துக்குறேன்.” என்றாள்.

பானுமதி மனம் நிறைவாக அவளைப் பார்த்து சிரித்தார்.

ரஞ்சனி அதிர்ச்சியில் உறைந்துப் போயிருந்தவள், “அட! நீயென்ன உத்ரா, கூடப்பொறந்தவளுக்கு ஒதவாம என் மாப்பிள வேற யாருக்கு ஒதவப் போறாரு? எனக்கு இந்த சம்மந்தத்துல பரிபூரண சம்மதம்மா. மத்த விசயத்தெல்லாம் எங்க வீட்ல வச்சி பேசிக்கலாம். மேகாம்மா அத்த காலுல விழும்மா” என்றதும், நடப்பதை புரியாமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த மேகா பானுமதியின் காலில் விழச் சென்றாள்.

அவளை விழவிடாமல் தடுத்தவர், நாடியைப் பிடித்து கொஞ்சினார். மகள் வெட்கப்படுவதை முகம் பூரிக்கப் பார்த்தாள் ரஞ்சனி.

அகிலன் அங்கு தானொருவன் இருப்பது போலவே காட்டிக்கொள்ளாமல் சம்பந்தம் பேசி முடிப்பவர்களை இயலாமையாகப் பார்த்தான். ஒரு மனிதன் வாழ்க்கையில் எடுக்கும் சில தவறான முடிவுகள் அவனை எந்தளவுக்கு வீட்டில் மிக்சர் சாப்பிடுபவனாக மாற்றிவிடுகின்றன என்பதை காலம் கடந்து உணர்ந்தான்.

அவன் பெருமூச்சு விட்டுக்கொண்டு நிற்பதைக்கண்டு ரஞ்சனி அவசரப்படுத்தினாள்.

“என்னங்க! மசமசன்னு நின்னுக்கிட்டு இருக்காம போய் பந்தியக் கவனிங்க. நம்ம சம்மந்திவீட்டுக்காரங்கள சாப்ட வைக்க வேணாமா? பானுமதியம்மா வாங்க சாப்ட போகலாம். உத்ரா நீயும் வாம்மா.” என்று அவர் பந்தி நடக்கும் இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல, அங்கு அவர்களுக்கு முன்பாகவே நன்றாக மொக்கிக் கொண்டிருந்தான் விக்கி.

தலையிலடித்துக்கொண்ட உத்ரா அவனருகில் சென்று துப்பினாள்.

“வெக்கமாவே இல்லைல? இது உன் எக்ஸ் மேரேஜ்டா?”

“அடேங்கப்பா! நீ மட்டும் என்ன இப்ப சாப்டாமப் போகப்போறியா? உனக்கும் இது எக்ஸ் மேரேஜ் தான். ஞாபகம் வச்சிக்கோ.”

பானுமதி அவர்களின் சம்பாஷனையில்‌ தன் காதில் அரைகுறையாக விழுந்ததை வைத்து, “அது என்னம்மா எக்ஸ்?” என்றார்.

மகள் திருதிருத்தபடியே, “அதுவந்து… நாளைக்கு இவருக்கு எக்ஸ்-ரே எடுக்கப்போகனும்மா. அதான் சொல்லிட்டிருக்காரு” என்று வாய்க்கு வந்ததை உளறினாள்.

ரஞ்சனி தங்களை விழுந்து விழுந்து கவனிப்பதைக் கண்டு விக்கி காரணம் கேட்க, மணமகன் அறைக்குள் நடந்த‌ அனைத்தையும் அவன் காதில் போட்டுவைத்தாள் உத்ரா.

கவினுக்கு இப்படியொரு அதிருஷ்டமா என்று தனது மகிழ்ச்சியை‌ வெளிப்படுத்தினான் விக்கி.

அப்போது உதய்கிருஷ்ணாவின் நண்பன் பிரகாஷ் எதிர்பாராத விதமாக அவர்களுக்கு எதிரில் இருந்த வரிசையில் சென்று அமர்ந்தான். அவனின் அருகில் அமர்ந்திருந்த பெண்ணுடன் அவன் சிரித்துப்பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு உத்ரா விக்கியின் தோளை இடிக்க, அவனும் ஆர்வமாக அவர்களை கவனித்தான்.

அந்தப்பெண் தனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் இருவர் தங்களை வைத்தக்கண் வாங்காமல் பார்ப்பதைக் கண்டு பிரகாஷின் காதைக் கடித்தாள்.

நிமிர்ந்து பார்த்தவன் சனிபகவானை நேரில் பார்த்தவன் போல பதற்றமாக அவளின் கரம்பிடித்து இழுத்துச் சென்றான்.

அவள், “சாப்ட்டு போலாங்க” என அடம்பிடிக்க,

அவன், “வெளிய ஹோட்டல்ல வாங்கித் தரேன்டி” என்றது காற்றில் அவர்கள் காதில் வந்து சேர்ந்தது.

அது அவனின் மனைவி என்று புரிந்துகொண்ட உத்ரா, “இவன் என்னடா என்ன மௌனம் பேசியதே சூர்யா லெவலுக்கு ஃபீல் பண்ணி இழுத்துட்டு போறான்?” என்று விசனப்படவும், புரையேறும் அளவிற்கு சிரித்தான் விக்கி.

அவள்‌ அவன் இலையில் முருங்கைக்காய் துண்டுகளாக பரவிக்கிடப்பதைக் கண்டு அதை தன் இலைக்கு மாற்ற, உக்கிரமாக கண்டித்தான் விக்கி. உத்ரா அசரவில்லை.

“நீ ஏன் இப்ப டென்சனாகுற? இந்த மாதிரி நேரத்துல இந்த முருங்கைக்காய் சமச்சாரமெல்லாம் வச்சிக்கக்கூடாது விக்கி. அப்பறம் எக்கு தப்பா நடந்து எல்லார் முன்னாடியும் அடிவாங்கிருவ” என்று எச்சரித்தாள்.

“இருடி மகளே! ஒரு மாசம் தான். உன்ன நான் என்ன பண்றேனு மட்டும் பாரு” என்று புலி வரும் கதையைச் சொன்னான்.

“வெவ்வெவ்வே!” என்று ஒழுங்கு காட்டியவள் அவன் வகுத்திருக்கும் காதல் வியூகங்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை.


கலைடாஸ்கோப் திரும்பும்..

 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
845
Reaction score
1,132
Points
93
Status
Not open for further replies.

Latest Episodes

Latest posts

New Threads

Top Bottom